துளி 1

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
துளி 1

தன் பயணப்பொதியில் தன் பொருட்களை அடுக்கி முடித்த தேவ் ஒருமுறை தன் அறையை கண்களால் ஆராய்ந்தான். அறையில் தனது பொருட்கள் எதுவுமில்லையென உறுதிசெய்தவன் மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டான். குளித்து முடித்து தயாராகி வந்தவன் ஏதோ நியாபகம் வந்தவனாய் அந்த அறையிலிருந்த கட்டிலின் மெத்தையை தூக்கியவன் அதனடியே இருந்த சிவப்புநிற இதயம் பதிக்கப்பட்ட அந்த கனமான டையரியை எடுத்தவன் மீண்டும் படுக்கையை ஒழுங்கு செய்துவிட்டு அந்த டையரியோடு கட்டிலில் அமர்ந்தான்...
அதனை கையில் எடுத்தவனுக்கு பல நியாபகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக படையெடுக்க அதன் தாக்கத்தில் கட்டுண்டவன் கஷ்டப்பட்டு தன் மனதை சமனப்படுத்தி தன்னிலை மீண்டான்...
ஆனால் கூட அந்த டையரியை அவனது அனுமதியின்றியே அவனது கைகள் திறக்க முதல் பக்கத்தில்
“Hi Appu❤️❤️” என்றிருக்க அடியில் “With love Chooti (Shraa baby)” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது...
எப்போதும் போல் அவனது கை அதனை தடவிக்கொடுக்க இதழ்களில் விரக்தி புன்னகை படர்ந்தது..
இந்த டையரியை கொடுத்தவளின் நினைவுகள் கடந்த நான்கு வருடங்களாய் அவனை ஆட்டிப்படைத்ததே ஒழிய அவனின் மனப்பெட்டகத்துள் பஸ்மமாக்கப்படவில்லை. என்றோ ஒரு நாள் அவள் கொடுத்த டையரியை இன்றுவரை புதையல் காத்த பூதமாய் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கின்றான் என்பதே அவள் மீதான அவனது காதல் இன்னும் மறையவில்லை என்பதற்கான சாட்சி...
எப்போதெல்லாம் அவளின் நினைவுகள் அவனை வதைக்கின்றதோ அப்போதெல்லாம் அவனது வேதனையின் வடிகால் அந்த டையரியே... அவனது வேதனைகளையும் எண்ணக்குமுறல்களை எழுக்காளாய் அதில் கொட்டிவிடுவான்... அதில் அவன் எழுதும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளை எட்டிவிடுவதாய் அவனிடம் ஒரு எண்ணம்... அவனது எழுத்துமூல உள்ளக்குமுறல்கள் என்றுமே பதில் கிடைக்காத புலம்பல்கள் என்று மூளைக்கு புரிந்தபோதும் மனமோ தன் ரணத்திற்கு இதை வலி நிவாரணியாக உபயோகித்துக்கொண்டது...
அந்த டையரியை எடுத்து தனது ஹேண்ட் லாகேஜில் பத்திரப்படுத்தியவன் அறையை காலி செய்து கொண்டு கிளம்பத்தயாரானான்..
டாக்சி வந்துவிட்டது என்று ஊபர் ஆப்பின் மூலம் அறிந்தவன் அறையை பூட்டிவிட்டு தன் பயணப்பொதிதளுடன் அந்த வீட்டு ஓனரை பார்க்கச்சென்றான்...
அந்த வீட்டு பொறுப்பாளர் காந்திமதி அம்மாவிடம் அறையின் திறப்பை கொடுத்தவன்
“ஆண்டி இந்தாங்க ரூம் திறப்பு...” என்று அவரிடம் ஒப்படைக்க அவரோ
“எத்தனை மணிக்கு மகன் ப்ளைட்??”
“10 மணிக்கு ஆண்டி..”
“சரி மகன் பார்த்து பத்திரமாக போயிட்டு வாங்கோ... டாக்சி வந்ததா மகன்???”
“ஆமா ஆண்டி , ரொம்ப நன்றி ஆண்டி...உங்களால தான் இத்தனை நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் கனடாவில் இருக்க முடிந்தது... அம்மா அப்பா கூட நீங்க இருக்கிற தைரியத்துல தான் எந்த பயமும் இல்லாமல் இத்தனை நாள் இருந்தாங்க...ரொம்ப நன்றி ஆண்டி... என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க...” என்று கூறி அவர் காலில் விழ அவனை ஆசிர்வதித்தவர்
“நல்லா இருங்கோ மகன்.. அந்த நல்லூர் கந்தன் ஆசி உங்களுக்கு எப்பவும் இருக்கும். உங்களையும் என்ட பிள்ளை நிதர்ஷன் போலத்தான் நானும் அப்பாவும் பார்த்தனாங்க... நம்மட மக்களுக்கு ஒரு உதவியெண்டா நாங்க செய்யாம எப்படி??அடுத்த பயணம் கனடா வரும்போது அம்மா அப்பாவையும் கூட்டி கொண்டு வரணும்... சரியா மகன்???”
“கட்டாயம் கூட்டிட்டு வரேன் ஆண்டி..”
“சரி மகன் நேரம் பிந்துது... சீக்கிரம் கிளம்புங்கோ.. இல்லையண்டா ப்ளைட்டுக்கு நேரமாகிடும்...”
“சரி ஆண்டி நான் கிளம்புறேன்.. அங்கிள் எங்க ஆண்டி??”
“அப்பா காலையிலேயே யாரோ அவரோட ப்ரெண்டை பார்க்க வெளிக்கிட்டார்...நீங்க இன்டைக்கு கிளம்புறனீங்க என்டு சொன்னனான்.. சீக்கிரம் வர்றேன்னென்று தான் சொன்னவர் இன்னும் காணேல்ல... அவரை பார்த்துக்கொண்டு இருந்தா நேரம் போயிடும்... நீங்க கிளம்புங்கோ மகன்..”
“சரி ஆண்டி... அங்கிள்ட சொல்லிருங்க... நான் கிளம்புறேன்...” என்றவன் காந்திமதியிடம் விடைபெற்றுக்கொண்டு டாக்சியில் ஏறினான்...
டாக்சியில் ஏறியவனின் மனம் இரு வேறுபட்ட மனநிலையில் தத்தளித்தது... அதற்கு காரணம் தேட முற்பட்டவனுக்கு நினைவில் வந்தது தன்னவளின் முகம். ஆனால் அது நினைவில் மட்டுமே சாத்தியமென்று உணர்ந்தபோதும் மனமோ நிஜத்திலும் வேண்டுமென்று மன்றாடியது... இவ்வாறு பல சிந்தனைகளுடன் விமானநிலையத்தை வந்தடைந்தவன் பயணத்திற்கான சட்டதிட்டங்களை முடித்துவிட்டு விமானத்தில் தனக்காக பதிவுசெய்யப்பட்டிருந்த ஆசனத்தில் வந்து அமர்ந்துகொண்டான் தேவ்..
அமர்ந்தவனுக்கு மனமோ கணமாய் இருக்க அதை அமைதிப்படுத்துவதற்காக கண்களை மூடியவனது கனவில் படமாய் விரிந்தது தன்னவளை முதன்முதலாய் கண்ட அந்த இனிய நாள்....
அன்று காலை என்றுமில்லாத திருநாளாய் காலை ஆறரை மணிக்கே காலேஜ் செல்ல தயாராகிக்கொண்டிருந்தான் தேவ் என்றழைக்கப்படும் தேவ்ராகவ்...
கண்ணாடி முன்நின்று தலை சீவிக்கொண்டே தன் நண்பனை எழுப்பிக்கொண்டிருந்தான் தேவ்..
“டேய் அபி.. டேய் எழும்புடா...இன்னைக்கு சீக்கிரம் கொலேஜிற்கு கிளம்பனும்...எழும்புடா...” என்று கத்திக்கொண்டிருக்க அபி என்றழைக்கப்படும் அபிநவ்விடமோ எந்தவித அசைவுமில்லை...
அதை கவனித்த தேவ் மேசைமீதிருந்த தண்ணீர் போத்தலை கையில் எடுத்தவன் அதன் மூடியை திறந்து போத்தலை முழுதாய் சரிக்க அதிலிருந்த மொத்த நீரும் அபியை நனைத்ததை உறுதிபடுத்திக்கொண்டு தன் வேலையை தொடர அபியோ அடித்துப்பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு எழுந்தமர்ந்தபடி கைகளை அங்கும் இங்கும் கைகளை அசைத்துக்கொண்டு
“ஐயோ.. சுனாமி... ஐயோ சுனாமி.. சுனாமி என்னை இழுத்துட்டு போகுதே... எனக்கு நீச்சல்கூட தெரியாதே...ஐயோ மீனு வாயை திறந்துக்கிட்டு என்னை முழுங்க வருதே... யாராவது என்னை காப்பாத்துங்களே..” என்று கனவில் புலம்புவதாய் எண்ணி நிஜத்தில் அபி புலம்ப தேவ்வோ
“டேய் நேத்து நீ தான்டா ரெண்டு மீனை முழுசா முழுங்குன.. கண்ண தொறந்து பாருடா என் வெங்கலம்..” என்று சிரித்தபடி தேவ் கூற அப்போது தான் கண்களை மெதுவே திறந்து பார்த்தவன் தன் தலையிலிருந்து நீர் கொட்டுவதை பார்த்து தேவ்வை முறைத்தான்..
“ஏன்டா தண்ணியை ஊத்துன??”
“உன்னை எழுப்பி டையர்ட் ஆகுறதுக்கு இன்னைக்கு எனக்கு டைமும் இல்லை...எனர்ஜியும் இல்லை... அதான் சிம்பிளா இப்படி ஒரு டெக்னிக்...”
“ஏன்டா கூப்பிட்டிருந்தா நானே எழும்பியிருப்பேனே... அதுக்கு ஏன்டா ஒரு போத்தல் தண்ணியை அநியாயமா வீணாக்குன?? இதுக்கு தான் நடுசாமத்துல எழும்பி போய் போத்தலை நிரப்பிட்டு வந்தியா??”
“ஆமா மச்சி... எப்படியும் நீ எழும்பமாட்டனு எனக்கு நூறு பர்சன்ட் நிச்சயம்....அதான் நைட்டே போத்தலை நிரச்சி வச்சிட்டேன்..”
“நல்லா வருவடா டேய்... சரி எதுக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட??”
“டேய் இன்னைக்கு கொலேஜ் பஸ்ட் டே டா..”
“யாருக்கு..??”
“என்ன இப்படி கேட்டுட்ட... நம்ம ஜூனியர்சுக்கு தான்..”
“அதுக்கு சார் என்ன பண்ண போறீங்க??”
“என்னடா இப்படி கேட்டுட்ட?? நாம அவங்களை வெல்கம் பண்ண வேண்டாமா??”
“வேணாம்..”
“டேய்....”
“சரி எப்படி வெல்கம் பண்ண போற??? இந்த ஸ்கூல் பஸ்ட் டே நம்ம சீனியர்ஸ் பூ குடுத்து வெல்கம் பண்ணாங்களே... அப்படியா??”
“டேய் அது ஸ்கூல்ல டா... இது கொலேஜ்.. அதுக்கு தகுந்த மாதிரி மாஸா வெல்கம் பண்ணனும்..”
“எது... இந்த லாஸ்ட் பேட்ஜ் ல அமுல் பேபி ஸ்ரேயாகிட்ட மொக்க வாங்கினியே... அது மாதிரியா??”
“சேசே... அப்படியெல்லாம் இந்த முறை சொதப்பாது.. நீ நம்பி என்கூட வரலாம்..”
“வேணாடா.. இதுங்க நம்ம சுப்பர் ஜூனியர்ஸ்... ஏதும் சொதப்புச்சினா மானமே போயிடும்.. சொன்னா கேளு...அப்புறம் ஒரு பயலும் நம்மளை மதிக்காதுங்க...”
“மச்சி.. இந்த முறை எதுவும் சொதப்பாது. எல்லாம் பக்காவா பிளான் பண்ணிட்டேன்... நம்ம பொடியன்களும் வந்திடுவான்க... நீ சீக்கிரம் ரெடியாகு..” என்று தேவ் அபியை கிளப்புவதில் மும்முரமாயிருக்க அபியோ
“ஓ... மை... காட்.. எதுக்காக என்னை இவன்கூட கோர்த்துவிட்டு இப்படி சோதிக்கிற??? சும்மாவே ஒரு சில்லுவண்டும் மதிக்காது.. இதுல இன்னைக்கு இவன் பண்ணப்போற கூத்துல புதுசா வர்றதுங்களும் நம்மை டம்மியாக்கிடும் போலவே... இவன் கூட சகவாசம் வச்சிக்கிட்டதுக்கு கடைசிவரைக்கும் மொக்க வாங்கி சாகனும்னு நமக்கு விதியிருக்கு போலயிருக்கு” என்று அபி தன்னுள் புலம்பியபடியிருக்கு தேவ்வோ
“டேய் லேட்டாச்சு டா..”
“இரு கிளம்பித்தொலையிறேன்..” என்று கடுகடுத்தபடி குளியலறைக்குள் புகுந்த அபிநவ் சில நிமிடங்களில் தயாராகி வர தேவ்வும் அபியும் தம் அறையை பூட்டிக்கொண்டு காலேஜிற்கு கிளம்பினர்..
தேவ்ராகவ் இருபத்தியிரண்டு வயதை எட்டியிருக்கும் வாலிபன்... ஐந்தடி ஏழு புள்ளி உயரமும் மெலிதான தேகமுமே அவனுக்கான அடையாளம்... ஜிம் அது இதுவென்று ஏதேதோ முயற்சித்தவனுக்கு உடலை தேற்றமுடியவில்லை.... ஆனாலும் எப்படியாவது ஜிம்பாடியை பெற்றுவிடவேண்டுமென்ற வெறியுடன்வெறியுடன தீயாய் வேலை செய்பவனை சோதிக்கவென்றே அவனது உடல் எடையில் எந்த மாற்றமுமில்லை... உடல் எடையை தவிர அவனிடம் அந்த வயதிற்கே உரிய அத்தனை திடகாத்திரமும் இருந்தது.... இயற்கையின் பிறப்பிடமாக வர்ணிக்கப்படும் இலங்கையின் மத்தியமாகாணத்தில் அமையப்பெற்ற நுவரெலியாவில் பிறந்து வளர்ந்தவனுக்கு அத்தனை செழிமையையும் வழங்கியிருந்தாள் இயற்கை அன்னை....
அலையலையாய் படர்ந்திருக்கும் கேசமும், கூர்நாசியும், கவர்ந்திழுக்கும் கண்களும் அந்த மாநிறமான வதனத்தில் அடங்கியிருக்க அந்த கட்டமைப்பின் முடிவிடமாய் அமைந்திருந்தது இரட்டைநாடி... எப்போதும் ஸ்லிம் பிட் சர்ட்டும் , டீசர்ட்டுடனும் வலம் வருபவனது தோளில் எப்போதும் ஒரு புத்தக்கப்பை தொங்கியபடியே இருக்கும்.. அதில் புத்தகத்தை தவிர மற்றைய அனைத்து பொருட்களும் இருக்கும்.... இடக்கையில் சில்வர் நிற வாட் இடம்பிடித்திருக்க வலக்கையை அவனது அன்னை அணிவித்த கறுப்பு நிற நூல் அலங்கரித்திருந்தது...
தேவ்ராகவ், சுமித்திரை – வேதநாயகத்தின் ஒரே புத்திரன். நுவரெலியாவை பிறப்பிடமாகக்கொண்டவன் உயர்கல்விக்காக கொழும்பிற்கு வந்து தன் நண்பனுடன் அவனது அறையை பகிர்ந்துகொண்டு தங்கியிருக்கின்றான்.
தேவ்வின் தந்தை நுவரேலியாவில் டீ எஸ்டேட்டொன்றில் கணக்குப்பிள்ளையாகவும் தாய் தோட்டத்தொழிலாளியாகவும் பணிபுரிகிறார்கள். A/L வரை நுவரெலியாவில் படித்தவன் உயர்கல்விக்காக இலங்கையின் வர்த்தக நகரமான கொழும்பிற்கு வந்து அங்கு புகழ் பெற்ற SLIIT கல்லூரியில் B.Sc Computer science கற்கின்றான். கல்விக்கான வசதிகளை அவனது பெற்றோர் ஒழுங்குப்படுத்திக்கொடுத்துவிட மற்றைய செலவுகளுக்து பகுதிநேர வேலைகளில் கிடைக்கும் தொகையினூடு தன் தேவைகளை நிவர்த்தி செய்துகொண்டான். அதோடு அவனது காலோஜ் சீனியர்களின் உபயத்தால் சில பாடல் தொகுப்புக்களில் பாடி அதிலிருந்தும் கணிசமான தொகையை வருமானமாக பெற்றுக்கொண்டான். இவ்வாறு பணம் அவன் தேவைகளை முடக்காதவாறு பார்த்துக்கொண்டவன் தங்குமிட வசதிகளையும் தன் நண்பன் அபியின் உதவியோடு ஒழுங்கு படுத்தியவனுக்கு கவலையெதுமின்றி நாட்கள் கழிந்தது...
அபியும் தேவ்வும் காலேஜிற்கு சென்றதும் அவர்களது நண்பர் பட்டாளம் அவர்களை சூழ்ந்துகொண்டது.
“டேய் அபிஷேக் எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டியா??” என்று தேவ் கேட்க அந்த பட்டாளத்திலிருந்து அபிஷேக் என்று அழைக்கப்படுபவன்
“மச்சி எல்லாம் உன் பிளான்படி எல்லாம் ரெடி பண்ணிட்டேன். இனி உன்னோட டர்ன்..”
“சூப்பர்டா... அப்போ இன்னைக்கு புல் ஆத்தல் எடுக்கலாம்லா???”
“டேய் தேவ் இன்னைக்கு நீ ஆத்தல் எடுக்கப்போறியா இல்லை எல்லாரும் உன்னை ஆத்திட்டு போகப்போறாங்களானு தெரியலை..” என்று அபி கூற முபாரக் என்றழைக்கப்படும் இன்னொரு நண்பன்
“இவுன்ட தொல்லை தாங்க முடியலை மச்சான்... காலையிலயே மோல் ஆக்குறாண்டா.... டேய் அபி இப்படி பண்ணிட்டிருக்க சுட்டி உன்ன விட்டுருவோனு நினச்சுக்கொள்ளாத சொல்லிட்டன்..”
“அது தான் தெரியுமே.. நான் தானே பலியாடு...வெட்டை வாங்கித்தான் ஆகனும்...”
“என்னடா இவுன் இப்படி பேசுறான்.. ??” என்று முபாரக் தேவ்விடம் அங்கலாய்க்க
“டேய் அவன் காலையில இருந்து இப்படி தான் உளறிட்டு இருக்கான்.. நீ கண்டுக்காத.. கபிலா அந்த லிஸ்ட் எங்க??” என்று கபிலனிடம் ஒரு பெயர் லிஸ்டை வாங்கிய தேவ் அதை அகிலனிடம் கொடுத்தவன்
“எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க... இந்த லிஸ்டில உள்ளவங்கள மட்டும் தான் நாம இன்னைக்கு ராகிங் பண்ணபோறோம்... இந்த லிஸ்டில போட்டோசும் இருக்கு... இந்த லிஸ்டில உள்ள எல்லாரும் ஸ்டேஜ் பபோமர்ஸ் ஆன்ட் நல்லா பாடக்கூடியவங்களும் ஆடக்கூடியவங்களும் இன்ஸ்ருமன்ஸ் வாசிக்கக்கூடியவங்களும்.. அதாவது ராகிங்கிற பெயருல அவங்களை நம்ம இன்டர்வியூ பண்ணி நம்ம பேண்டுல சேர்த்துக்கொள்ள போறோம்... அதனால ராகிங்கில் ஒரு லிமிட் இருக்கனும்... அதோடு நம்ம கெத்தையும் சரியாக மெயிண்டெயின் பண்ணனும்.. புரியிதா.. டேய் கபிலா எல்லாருக்கும் அந்த லிஸ்டை குடுடா..” என்று தேவ் கூற அபியோ
“சரிடா.. எல்லாரும் உங்க வேலையை பாருங்க.. நான் காண்டீனுக்கு போய் என் வயித்தை நிரப்புற வழியை பார்க்கிறேன்..”
“டேய் அபி எங்கடா போற??? நீ தான்டா இந்த க்ரூப்போட இன்போமர்.. அகி கூட போயிட்டு வாசல்ல நின்னு சிக்னல் குடு..” என்று தேவ் அபியை தடுக்க அவனோ
“போடா டேய்.. என்னால இந்த வாட்ச்மேன் வேலையெல்லாம் பார்க்கமுடியாது.. ஆளைவிடுடா சாமி...” என்று நழுவ எத்தனித்தவனை பிடித்துக்கொண்ட அகிலன்
“ மச்சான்.. எங்க ஓடப்பார்க்கிறனீ... அதான் தேவ் சொல்லிட்டானில்லையா??? வா வாசல்ல போய் நிப்பம்..”
“டேய் அகிலா.. நீ ஒருத்தன் தான் இந்த கூட்டத்துல நல்லவனா இருந்தா.... நீயும் ஏன்டா இப்போ அவனுக்கு ஜால்ரா தட்ட ஆரம்பிச்சிட்ட.... அவன் பண்ணுறதே சுத்த கிறுக்குத்தனம்.. இதுக்கு நான் வேற வாட்ச்மேன் வேலை பார்க்கனுமா??? என்னால முடியாது..”
“அபி இதெல்லாம் விசர்தனம் இல்லடா... கொலேஜ் டைமில இதெல்லாம் பண்ணாமல் எப்போ பண்ணப்போறனீ?? அவன் உன்னை சிக்னல் கொடு என்டு மட்டும் தானே சொன்னவன்.. நீயேன் அதற்கு இப்படி சலிச்சுக்கொள்ளுற??”
“டேய் போதும் டா...உன்னோட குப்பி எடுக்கிற திறமையை இங்க காட்டாத.. இப்போ என்ன அவன் சொன்ன வாட்ச்க வேலையை பார்க்கனும்.... அதானே .. வா போலாம்...” என்று அபி அகிலனை இழுத்துக்கொண்டு செல்ல மற்றவர்கள் தத்தமக்கான பணிகளில் இறங்கினர்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN