🌹பாகம் 20🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"பழசு எதும் என் ஞாபகத்தில் இல்லை மாமா. நான் அப்ப சொன்னது தான் நீங்க யாரை வேணும் னாலும் கட்டிக்கலாம். இந்த பால்ய விவாகம் எல்லாம் சட்டப்படி செல்லாது. சின்ன வயசில நடந்த பொம்மை கல்யாணம் மாதிரிதான் மறந்திடுவோம் ''

"அதனாலத்தான் உன் கைல இருந்த பச்சையை கூட நீ அழிச்சிட்டியா? '' ருத்ரனின் கேள்வியில் வலி தெரிந்தது.

மயூரா புன்னகையித்தாள். "வாழ்க்கையே இல்லையாம். இதுல இந்த பச்சை மை மட்டும் எதுக்கு என் கைல பழசை ஞாபகப்படுத்திட்டுயிருக்கணும்? தேவை இல்லனு தானே தூக்கி வீசிட்டு போனீங்க.? அப்போ நான் மட்டும் எதுக்கு இதை வெச்சிக்கிட்டு மறுகணும்? அதான் அழிச்சிட்டேன்'' ரொம்ப கூலாய் பதில் வந்தது.

ருத்ரன் பதில் பேசவில்லை. அப்போதைய அவன் உணர்வுகள் கலவையாய் இருந்தன. தவறு முழுக்க தன்னுடையது.வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழியை தட்டிவிட்டவன் அவன்தானே.குற்றவாளியாய் நிற்பதை தவிர என்ன செய்ய இயலும் அவனால்?.

"கிளம்பலாமா மாமா? வீட்ல நெறைய வேல இருக்கு '' மயூரா கிளம்பினாள். ஜீப்பில் ருத்ரன் எதுவும் பேசவில்லை. மயூராவும் பேசாமல் தான் வந்தாள். தன்னிச்சையாய் அவள் பார்வை அவன் கைகளில் படிந்தது.அவன் விரலில் அவள் அணிவித்த நிச்சய மோதிரம் மின்னிக் கொண்டிருந்தது. அவன் வலது மணிக்கட்டில் அந்த பச்சையும் அப்படியே இருந்தது. இதயம் இரும்பு குண்டாய் கனத்தது.

ஜீப் வீட்டு வாசலை அடைந்தது. எதுவும் பேசாமல் மயூரா இறங்கிக் கொண்டாள். நேரே தன் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள். கண்ணீர் கரகரவென விழித்திரையை மறைத்தது. தன்னிச்சையாய் அவள் வலது கரம் இடது கை மணிக்கட்டை தடவியது. தன் தோல் வண்ணத்தில் இருந்த அந்த பிளாஸ்திரியை பிரித்தாள். இருளுக்கு பின் வரும் ஆதவன் போல அந்த பச்சை பிளாஸ்த்திரி அடியில் அப்படியே இருந்தது. அவனை காயப்படுத்தியதில் அவள் மனம் கொஞ்சம் குரூர சந்தோசத்தை அனுபவித்துக் கொண்டது.

அவள் தனிமை அதிக நேரம் நீடிக்கவில்லை. அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டு மயூரா அவசர அவசரமாய் கண்களைத் துடைத்தாள். கதவை திறந்து பார்க்கையில் அங்கு பூரணி நின்றுக் கொண்டிருந்தாள். அவள் நின்ற கோலமே தன் மீது அவள் கோவமாய் இருப்பது மயூராவிற்கு புரிந்தது. தாவி சென்று பூரணியை அணைத்துக் கொண்டாள்.

"மை டியர் பூவே, எப்படிடி இருக்க நீ, உன்ன பார்த்து வருஷம் ஆச்சு போ.. ஐ மிஸ் யூ சோ மச் டி '' மயூரா பூரணியின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

"இன்னும் சாகமா உயிரோடத்தான் இருக்கேன் மயில் மேடம்'' பூரணி வார்த்தையில் காரம் தெறித்தது.
மயூரா பூரணியை பார்த்தாள். அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று பூரணிக்கு புரிந்தது.

"நீ கூட என்னை புரிஞ்சிக்கலயா பூவே?'' என்பது போல இருந்தது அந்த பார்வை.

பூரணி மயூராவை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். "அந்த மண்டை கனம் புடிச்சவனுக்காக எங்கள ஏன்டி விட்டுட்டு போன? உன்னை தவிர எனக்குன்னு வேற எந்த திக் பிரண்ட் இருக்கா சொல்லு. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பேனு யோசிச்சியா? எருமை எருமை.. எப்பவும் உன்னைப் பத்தி மட்டும் நல்லா யோசிச்சிக்கோ. இப்போ கூட உன்ன பார்க்க நான் வரக்கூடாதுனு தான் இருந்தேன். அந்தரன் வற்புறுத்தி கூப்பிடதான் இங்க வந்தேன் '' பூரணி மயூராவை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

"இனி எப்பவும் எங்கேயும் உன்ன விட்டு போக மாட்டேன் பூவே.என்னை நம்பு , சரியா'' மயூரா வெற்றிகரமாக பூரணியை சரி கட்டி விட்டாள்.

அப்போதான் பூரணி மயூராவை ஏற இறங்கப் பார்த்தாள். "எங்கடி உன் சாமியார் கொண்டையும் தொள தொள குர்த்தியும்? '' ஆளே இப்படி மாறிப் போயிட்டே? இப்போதான் கண்ணுக்கு அழகாய் ரொம்பவே அழகாய் இருக்கடி நீ ''

மயூரா சிரித்தாள்." சில மாற்றங்கள் உடலுக்கும் உடைக்கும் தேவையாய் போயிடுச்சு பேபி, உனக்கு வேணும்னா சொல்லு என் கூந்தலை அள்ளி முடிஞ்சு என் சித்தர் அவதாரத்தை இப்போவே எடுக்குறேன். எப்படி எடுக்கவா? ''

"ஐயோ வேணாம் தாயி. இப்போதான் அழகாய் சைட் அடிக்கற மாதிரியிருக்க. இந்த அவதாரமே இனி நிலைக்கட்டுமே தேவி '' பூரணி கை எடுத்து கும்பிட்டாள். ஐந்து வருட கதைகளை இருவரும் பேசி பேசித் தீர்த்தனர்.

" கல்யாண வேலைகள் நெறைய இருக்குடி . நீ இங்கயே தங்கிடு. அப்பா அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன். சரியா பூவே? '' மயூரா கேட்க அவளும் சம்மதமாய் தலையசைத்தாள்.

மறுநாள் அனைவரும் கல்யாண ஜவுளி வாங்க மதுரைக்கு கிளம்பினர். எவ்வளவு முயன்றும் மயூராவிற்கு அவள் நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள் மறக்க முடியவில்லை. அவள் கேட்ட அனைத்தையும் அன்று அவள் அருகில் இருந்தவன் தட்டாமல் வாங்கிக் கொடுத்தானே. இன்று மதுவும் அந்தரனும் அவ்வாறு இருக்கையில் அந்த நினைவுகள் எட்டிப் பார்க்கத்தான் செய்தது.

ரிசார்ட்டில் வேலை என்று பிறகு வந்து ஷாப்பிங்கில் கலந்து கொள்வதாய் சொன்ன ருத்ரன் அப்போதுதான் அந்த பெரிய ஜவுளிக்கடைக்குள் நுழைந்து க் கொண்டிருந்தான். அவன் கண்கள் மயூராவின் முக வாட்டத்தை மிக துல்லியமாக கண்டுப் பிடித்தது.

நேராக சென்று மயூரா அருகில் சென்று அமர்ந்துக் கொண்டான்.அந்த நேரத்தில் அவளை சீண்ட வேண்டும்னு மனசு சொல்ல அக்கணமே தன் தன் சேட்டையை ஆரம்பித்து விட்டான்.

"ஏய் பொண்டாட்டி, என்ன புடவைகள் கூட போராடிட்டு இருக்க? மாமா செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணடும்மா? '' மெதுவாக அவள் காதருகே கிசுகிசுத்தான்.

மயூராவிற்கு அதை கேட்டதும் ஜிவ்வென்று இருந்தது. திரும்பிப் பார்த்து அவனை முறைத்தாள். "டேய் மாடசாமி யாரு யாருக்கு பொண்டாட்டி? ஒழுங்கா பேசு, இல்லை பல்லை தட்டிடுவேன் '' மயூரா அடிக்குரலில் சீறினாள்.

"நீதாண்டி என் பொண்டாட்டி, சும்மா ஒன்னும் சொல்லல , இரத்தம்லாம் குடுத்து உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன். அதுக்கு சாட்சி தோ இந்த மயிலு பச்சை, அப்புறம் நீ என் கைல அணிவிச்ச மோதிரம் '' ருத்ரன் கூலாய் வலது கையை தூக்கி காட்டினான்.

மயூராவிற்கு பற்றிக் கொண்டு வந்தது."நீதான் என் புருஷன்னு சொல்ற எந்த அடையாளமும் என் கைல இல்லை,சோ லூசு மாதிரி உளறாம ஓடி போய்டு'' பற்களை நற நறவென கடித்தாள்.

அவளுக்கு அசருபவனா நம்ம ருத்ரா? கேலியாக சிரித்தான். " உனக்கு சாரீஸ் எப்பவும் என் சாய்ஸ் மட்டும்தான் பேபி. சோ நான் என்ன வாங்கித் தரேனோ அதைதான் நீ கட்டணும்.''

"அதுக்கு வேற எவளையாச்சும் பாரு. எனக்கு என்ன புடிக்குமோ அதை தான் நான் கட்டுவேன் '' மயூரா அங்கிருந்து எழுந்து சென்றாள் . அவள் மஞ்சள் நிறத்துக்கு எல்லாம் வண்ணமும் பொருந்தும்.

நேரே அந்தரன் மதுவுடன் சேர்ந்து சாரிகளை புரட்டி புரட்டி தேடினாள். இனிப்பு கடையில் விட்ட குட்டிப் பாப்பா போல் பார்க்கும் சேலைகள் எல்லாம் கண்ணைப் பறித்தால் அவள் என்ன தான் செய்வாள் பாவம்.
அருகில் தன் அத்தை , சித்தி , அம்மாவே சாரிகளில் எதை எடுப்பது எதை விடுவது என்று விழித்துக் கொண்டு நிக்க, இவளுக்கு எங்கே அவர்கள் உதவி கிடைக்கப் போகிறது? மயூரா சோர்ந்து விட்டாள். இன்னமும் ருத்ரன் அங்கேயே இருக்க, மதுவிடம் தனக்கு எதையாவது தேர்ந்தெடுக்கச் சொல்லிவிட்டு பூரணியை தேடிக் கொண்டு மேல் தளத்திற்கு விரைந்தாள்.

அதுவரை அமைதியாய் இருந்தவன், மதுவிடம் தான் மயூராவிற்கு புடவை தேர்வு செய்வதாக சொல்ல, மது ஒரு கணம் திகைத்தாள்.

"என்ன பார்க்கற மது, என் பொண்டாட்டிக்கு என்ன புடவை நல்லாயிருக்கும்னு எனக்குத்தானே தெரியும்? '' கேலியாக அவன் கேக்க, மது மனதிற்குள் முனங்கினாள்.

"ஆமா அப்படியே ஆசை தீர வாழ்ந்திட்ட பாரு மாமா, பொண்டாட்டியாம் பொண்டாட்டி ''
மனதில் நினைப்பதை இந்த மண்டகனம் பிடிச்சவன் கிட்ட சொல்லவா முடியும்? சொல்லுற தைரியம்தான் முதலில் அவளுக்கு வருமா என்ன? அவள் மயூரா இல்லையே. நினைத்ததை பட்டுனு சொல்ல. சரி என்பது போல் தலையாட்டி வைத்தாள்.

"நீ எடுத்து குடுத்த மாதிரிதான் சொல்லணும். சரியா மதுக்குட்டி'' ருத்ரன் கண்ணடிக்க மது முறுவலித்தாள்.

மெரூன் வர்ண பட்டில் தங்க சரிகையில் மயில் டிசைன் செய்திருந்திருந்த காஞ்சிபுரத்தை தேர்வு செய்தான். மது ருத்ரன் தேர்வில் அசந்து போய் விட்டாள்.

"எப்படி மாமா இப்படி? பொண்ணுங்க நாங்களே இப்படி திண்டாடறோம். நீங்கள் அவ்வளவு அழகாய் சூஸ் பண்ணிட்டிங்க '' மது கேட்க ருத்ரன் சிரித்தான்.

"உன் அக்காவுக்கு பாவொரோட் மரூன் கலர்னு உனக்கு தெரியாதா? அவளுக்கு இது சூப்பரா இருக்கும்னு மனசு சொல்லுச்சு. சோ செலக்ட் பண்ணிட்டேன்'' ருத்ரன் சொல்லி விட்டு நகர, மது அருகிலிருந்த அந்தரனை முறைத்தாள்.

"என் மாமனை பாரு, அஞ்சு வருஷங்கள் கழிச்சு அக்காவை பார்த்தாலும், அவளுக்கு என்ன சாரி நல்லாயிருக்கும்னு அழகாய் சூஸ் பண்றான். நீயும் இருக்கியே அத்தான். இவ்வளவு நேரம் ஒண்னாச்சும் செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணியா? தத்தி தத்தி ''மது அந்தரன் தலையில் தட்டினாள்.


"ஏய் அடிக்காதேடி, நான் மயிலுக்கு ப்ரண்ட், அவள மாதிரிதானே நானும் இருப்பேன்?என்னிகாச்சும் உன் அக்கா கலர் கலர்ரா சாரி, சால்வார்னு சுத்தியிருக்காளா? உன் மாமனுக்கு ரோஜானு ஒரு மேனா மினுக்கி கூடவே இருக்கா, அதான் இவ்வளவு இரசனையா சூஸ் பண்றான்.என் சேர்க்கை சரியில்ல தங்கம் '' அந்தரன் சீரியஸ்ஸாக சொல்ல மது பழித்துக் கட்டினாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN