உறவாக வேண்டுமடி நீயே 15

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 15


இருவரும் ஈகோ என்னும் முகமூடி போட்டு தங்கள் முகங்களை மறைத்தாலும் இருவருடைய இயல்பும் அவர்களையும் மீறி வெளியே வரத் தான் செய்தது. அதுவே வெள்ளைக் காகிதமாய் வெற்றிடமாய் இருக்கும் இருவரின் மனதிலும் ஒருவரின் முகம் மற்றவரில் வரைய உதவுமோ!?

மகன் மருமகளுக்காகப் பார்க்கிறேன் என்று ஒரு வார்த்தை சொன்ன பிறகு மருமகள் எப்போது வருவாள் என்று கனவு கண்டு கொண்டிருந்த மேகலை சும்மா இருப்பாரா இல்லை மற்றவர்களைத் தான் சும்மா இருக்க விடுவாரா? இருவர் ஜாதகத்தையும் ஜோசியரிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்ல, அமோகமான பொருத்தம் என்றார் அவர். கூடவே பிரிந்தவர்கள் சேரவும் மாங்கல்ய பலம் கூடவும் நந்திதாவைச் சுமங்கலி பூஜை செய்து இருபத்தி ஓர் சுமங்கலிக்கு தாம்பூலம் கொடுக்கச் சொல்ல, இதை மேகலை தங்கத்திடம் சொல்ல, அவரோ இது தன்னுடைய வேண்டுதல் என்று சொல்லி ஒரு தாயாய் மகளைச் செய்ய வைப்பதற்குப் பணித்தார் அவர்.

அதற்கான நாளும் வர, காலையிலேயே ஆபீஸ் கிளம்பிய பெரிய மகனிடம், “இன்றைக்கு சாயந்திரம் பூஜை இருக்கு டா, சீக்கிரம் வந்திடு” என்று மேகலை நினைவு படுத்த,

“ம்ம்ம்” என்ற படி உண்டு முடித்தவன் கிளம்பும் போது தாயிடம், “ம்மா, நேற்று அத்தை கிட்ட பேசும்போது வர்றவங்களுக்கு பட்டுப் புடவையோட ஏதாவது பொருள் வைத்தா நல்லதுன்னு சொன்னாங்க. நான் அரை சவரன் கோல்ட் காயின் வைக்கச் சொன்னேன், சரினு சொன்னங்க. இன்னும் வேற ஏதாவது கொடுக்கணும்னு உங்களுக்கு எண்ணம் இருந்தா சொல்லுங்க ம்மா செய்திடறேன்” என்று அக்கறையாக இவன் கேட்க,

“எதுவும் இல்லை, நானும் தங்கமும் முன்பே எல்லாம் பேசிட்டோம். அதனால் பார்த்துக்கலாம் அபிப்பா” என்றவரிடம்,

“ம்ம்ம், நகையையும் புடவையும் எடுத்துட்டு காலையிலேயே யுகா வீட்டுக்கு ஆட்கள வரச் சொல்லிடேன். நீங்களும் கூடயிருந்து பார்த்து வாங்கிடுங்க. பில் என் அக்கௌண்டுக்கு வந்து சேர்ந்திடும்”

“சரி ப்பா” என்றவர் மகனை பெருமையாகப் பார்த்தார். தெய்வத்தையே கும்பிடாதவன் இன்று தனக்காகவும் மாமியார் வீட்டுக்காகவும் பார்த்துப்ச பார்த்து செய்வது சந்தோஷமாக இருந்தது அவருக்கு.

மாலை, இது பெண்களுக்கான பூஜை என்று நினைக்காமல் அபி, துருவன், பபுல் என்று ஆண்களுடனும் களைகட்டியது விழா. அபி பட்டு வேட்டி சட்டையிலும், வேணி பட்டுப் பாவாடை சட்டையிலும் மிளிர, சின்ன கரையிட்ட கோதுமை நிற சில்க் காட்டனில் அழகான நிஜ வீணையென கொலுவீற்றிருந்தாள் நந்திதா. முதல் முறையாக அந்த வீணையை மீட்க ஆசை வந்தது அபி என்ற இந்த பிடிவாதக்கார கலைஞனுக்கு.

இப்பொழுது எல்லாம் காலர் வைத்த ஜாக்கெட் போடாமல் அவன் போட்ட பொன் தாலி சரடோடு அழகான சிறு சிறு முத்து கோர்த்த ஆபரணத்தை கழுத்தை ஒட்டி மனைவி போட்டிருந்தது வேறு அவன் மனதில் போனசாய் இப்படி ஒரு எண்ணம் வர காரணம் ஆனதோ? அது மட்டுமா காரணம்? இந்த விழாவிற்கு என்று தன் வீட்டிற்கும் மாமியார் வீட்டிற்கும் இவனே ஆடைகள் எடுத்துக் கொடுத்தவன் மனைவிக்கும் மகளுக்கு மட்டும் ஸ்பெஷலாக நெய்யச் சொல்லி அதை மாமியார் வீட்டுக்கே எடுத்து வந்து எல்லோரும் இருக்க மனைவியிடம் கொடுத்து இதைத் தான் விசேஷம் அன்று உடுத்தவேண்டும் என்று சொல்ல, அன்றைய தினத்துக்குப் பிறகு வேறு எதற்கும் பேசாமல் இருந்தவர்கள் இன்று கணவன் இப்படி வந்து நிற்கவும், ‘மனுஷனுக்கு தில்ல பாருயா’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் அவளால் அதை மறுக்க முடியவில்லை.

முதல் காரணம் அங்கிருந்த தாய் தங்கம்! எதற்கெடுத்தாலும் மாப்பிள்ளை சாப்பிடுறீங்களா, மாப்பிள்ளை இதை வாங்கணும், மாப்பிள்ளை இப்படி செய்தா நல்லா இருக்கும் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை மாப்பிளையை உரிமை கொண்டாடி தன் உடல் பிணியையும் தூர தள்ளி வைத்து விட்டு சந்தோஷத்துடன் பெறாத மகளுக்காக வளைய வரும் தாய்க்காக அவளால் எதுவும் அன்று பேச முடியவில்லை.

இரண்டவாது காரணம் மகளுக்கும் தனக்கும் என்று இப்படி ஒரே மாதிரி என்று இதுவரை யாரும் செய்ததில்லை என்னும் போது கணவன் கொடுத்ததை அவளால் மறுக்க முடியவில்லை. இதையெல்லாம் விட தனிமையில் புடவையைப் பிரித்துப் பார்த்த போது மனதிற்குள் இனம் புரியாத உணர்வுடன் கண்கள் விரிய, உடுத்தினால் இதைத் தான் உடுத்த வேண்டும் என்று நினைத்தாள் அவன் மனைவி.

முந்தியில் இரண்டு வீணை ஒன்றோடொன்று உரசியிருக்க, அது தாங்கள் இருவரும் என்பது புரிந்தது அவளுக்கு. அந்த வீணையை வட்டமாய் சுற்றி ரோஜா மொட்டு மலர்ந்து இருந்தது வேணி என்பது தெரிந்தது. மற்றும் உடல் முழுக்க அங்கங்கே அந்த வீணையின் நாதமாய் மற்றும் ரோஜா இதழ்கள் பன்னீராய் சிதறியிருந்தது. உடல் முழுக்க அது அவளுக்கு அவர்களின் இனி வரும் வாழ்வை உணர்த்தும் சப்த ஸ்வரமாய் ஒலிப்பது போல் நினைத்தவள் பார்க்கப் பார்க்க, கண்களை அந்த புடவையிலிருந்து எடுக்க முடியவில்லை அவளால். மகளுக்கும் சட்டையில் இரண்டு வீணை ஒட்டியிருக்க, பாவாடை முழுக்க ரோஜா மொட்டுக்கள் இருந்தது. அதையும் பார்த்தவள், “ரசனைக்காரர் தான் டி உன் அபிப்பா” என்று வாய் விட்டே சொல்லிக் கொண்டாள் நந்திதா.

அதை தான் இன்று அவன் மனைவி உடுத்தியிருக்க அபியால் மனைவியிடமிருந்து கண்களை எடுக்க முடியவில்லை. ஒரு சின்ன விஷயத்தைக் கூட பார்த்துப் பார்த்து செய்ய வைத்தார்கள் தங்கமும் மேகலையும். வந்திருந்த சுமங்கலிகள் எல்லாம் எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களாக வசதியில் பின் தங்கியவர்களாகப் பார்த்து தேடி வர வைத்திருந்தார் தங்கம். அவர்களும் வயிறார உண்டு மனதார வாழ்த்த, அதுவே வரம் பெற்றது போல் ஆனது கணவன் மனைவி இருவருக்கும். அதிலும் தாம்பூலம் கொடுக்கும் போது குடும்பம் சகிதமாய் அபி, வேணி, நந்திதா என்று வந்தவர்களை வணங்கி கொடுக்கும் போது எண்ணில் அடங்காத பேரானந்தத்தை அடைந்தார்கள் தங்கமும் மேகலையும்.

மனைவிக்குத் தன் கையால் மாங்கல்யம் மற்றும் நெற்றியிலும் குங்குமம் வைத்தவன் அவனும் மனைவி கையாலேயே விபூதி வாங்க அதன் பிறகு இம்மியும் மனைவியை விட்டுப் பிரியவில்லை. அவள் எங்கு சென்றாலும் அவளை ஒட்டியே இவன் இருக்க, முதலில் நந்திதா அதை உணரவில்லை. பின் உணர்ந்தவளுக்கு, கூச்சமும் கோபமும் ஒருங்கே வர, சூழ இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று இவள் மற்றவர்களைப் பார்க்க, அவர்களோ அவரவர் துணையுடன் ஒன்றிப் போயிருந்தார்கள். இப்படியேவாக எல்லாமே முடிய இரவு உணவு வரை இந்த மகிழ்ச்சி நீடித்தது.

இரவு உணவு அங்கேயே என்பதால் எல்லோரும் அமர்ந்து சாப்பிட வேணி அவள் அப்பா மடியை விட்டு இறங்கவே இல்லை. போட்ட ஆட்டத்தின் அசதியிலும் பசியிலும் தூக்கத்திற்கு என்று இருந்தவள் அபியையும் சாப்பிட விடாமல் நை நை என்றிருக்க, மகள் சாப்பிடாமல் பசியில் தூங்கி விடுவாளோ என்று இவன் மகளை மடியில் அமர்த்தி உணவை அவளுக்கு ஊட்ட வேணி வாங்காமல் மறுத்து அடம் பிடிக்க, அதைப் பார்த்த நந்திதா, “பேபி! அம்மா என்ன சொல்லி இருக்கேன்? உணவை வேண்டாம்னு சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா? என் பேபி சமர்த்து தானே? சாப்பிடு டா” என்று ஒரு தாயாய் மிரட்டலில் ஆரம்பித்து கெஞ்சலில் முடிக்க,

மகளோ “ம்ஹும் “என்று மறுக்க

“நீங்க சாப்பிடுங்க, அவளுக்கு தூக்கம்னு நினைக்கிறேன். நான் கார்டனுக்கு தூக்கிட்டுப் போய் தட்டி தூங்க வைக்கிறேன். நைட் எழுந்தா பால் கொடுத்துக்கலாம் அது வழக்கம் தான்” என்று ஒரு மனைவியாய் நந்திதா கூறிய படி மகளை அவள் வாங்க நினைக்க, அதற்கும் தந்தையை விட்டு இறங்காமல் வேணி ஆர்ப்பாட்டம் செய்ய,

“நீ உட்கார்ந்து சாப்பிடு யுகா! நான் வேணியைத் தூங்க வைக்கிறேன்” என்று சொல்லி அபி எழுந்திருக்க எத்தனிக்க, ரொம்ப நாள் கழித்து சாதாரணமாக இருவரும் பேசிக் கொள்ளவும், இவ்வளவு நேரம் கணவன் மனைவி உரையாடலில் கலந்து கொள்ளாமல் இருந்த மேகலை,

“உன் கிட்ட இருக்கிறதால அவ அமைதியா தான் இருக்கா. நீ உணவு ஊட்டவோ தான் இப்படி செய்றா. அதான் நைட் பால் கொடுத்துக்கலாம்னு சொல்றா இல்ல? நீ இப்படி பாதி சாப்பாட்டில் எழுந்திருக்காத அபிப்பா உட்கார்ந்து சாப்பிடு” என்று ஒரு தாயாய் அவர் சொல்ல, தாய் சொல்லைத் தட்டாத தமையனாய் மறுபேச்சின்றி உணவை உண்டான் அபி.

துருவனோ தனக்குப் பரிமாறிய மனைவியைப் பார்த்தவன், “நீயும் உட்கார்ந்து சாப்பிடு பாரதி” என்று சொல்ல, அதற்கு முகம் சிவந்த படி தலை குனிந்தவள், “நீங்க முதலில் சாப்பிடுங்க. பிறகு உங்க இலையில் நான் சாப்பிடுறேன்” என்று இவள் கிசுகிசுப்பாகச் சொல்ல, மனைவியைக் காதல் பொங்கப் பார்த்தவன்,

“யம்மா! இந்த சுமங்கலி பூஜையை ஒரு நாள் மட்டும்னு யார் மா கண்டு பிடித்தது? வருஷத்துல முன்னூற்று அறுபத்தைந்து நாளும் கொண்டாட முடியாதா பாருங்க ம்மா. எப்போதும் உருட்டுக்கட்டையோட திரியற என் பொண்டாட்டி கூட இப்போ நாணி கோனி நீங்க சாப்பிடற இலையில் சப்பிடுறேங்கனு சொல்லுறா!” என்று துருவன் ராகத்தோடு வம்பிழுக்க, பாரதிக்கோ வெட்கம் பிடிங்கித் தின்றது. இவள் செல்லமாய் கணவனின் தலையில் ஒரு கொட்டு வைக்க,

“கொண்டாடிலாம் மாப்பிளை! அதற்கு அச்சாணியாய் முதலில் உங்க மகளைச் செய்ய சொல்லிடலாம் மாப்பிள்ளை” என்று துருவன் கேட்டதற்கு பாரதி அப்பா பதில் தர,

“மாமா, என் பொண்ணு ஏன் வருஷம் பூரா அப்படி செய்யணும்? என் பொண்ணு ராணி மாமா!” என்று இவன் இன்னும் பிறக்காத பெண்ணுக்குப் பரிந்து பேச,

“நல்லா இருக்கு டா உன் நியாயம்! உன் பொண்ணு உனக்கு ராணி என்றால் அப்போ அவர் பொண்ணு அவருக்கு மகாராணி இல்லையா? உனக்கு வருஷம் பூரா சுமங்கலி பூஜை கேட்குதா? சின்ன மருமகளே, இன்று நீ உன் ஆயுதத்தை எடுக்காததால் தான் என் மகன் இப்படி புலம்பறான். ஆயுத பூஜைக்கு கூட நம்ப குல தொழிலை நாம விட்டுடக் கூடாது. அதனால் இன்று உன் உருட்டுக் கட்டைய எடுமா!” என்று மகனிடம் ஆரம்பித்து விளையாட்டாய் மருமகளிடம் முடித்து மேகலை மகனை வார,

“அம்மா, நீங்க எனக்கு தான் அம்மா!” என்று துருவன் பொய்யாய் மிரட்ட,

“அது அப்போ! இப்போ நான் பாரதிக்கும் அம்மா!” என்று மேகலை சலிக்காமல் பதில் தர, அங்கு சிரிப்பலை பரவியது.

“பல்ப் வாங்கிட்டியா மச்சான்? இதுக்கு தான் லேடீஸ் கூட்டமா இர்க்கிற எடத்துல நாம வாய தொறக்க கூடாதுனு சொல்றது” என்று பபுல் சோகமாய் அவனுக்கு பரிந்து வர,

“சரி தான் டா. அதை வெளிநாட்டிலிருந்து வந்தவன் நீ சொல்ற பாருடா மச்சான், அது தான் டா ஹைலைட்டே!” என்று துருவன் சொல்ல, அங்கிருந்த பெண்கள் பொய்யாய் முறைக்கவும், ஆண்கள் சிரிக்கவும் என்று அந்த இடமே கலகலப்பானது.

இவ்வளவு வாக்கு வாதம் செய்தாலும் முதல் உருண்டையைத் தன் மனைவிக்கு கொடுத்த பிறகே தான் உணவு உண்ண ஆரம்பித்தான் துருவன்.

பப்லுவோ, “ஆனாலும்...” என்று யோசிப்பது போல் நடித்தவன், “என்க்கு ஒரு டவுட் மச்சான். அதென்ன சொல்வாங்க? எஸ்... எள்ளு வேணா எண்ணக்கு காய்லாம். பட் இந்த எலிப்புழுக்க எதுக்கு மச்சான் காய்து?” என்று தன் பக்கத்தில் நின்று கொண்டு தனக்குப் பரிமாறிய போதும்பொண்ணைப் பார்த்து பபுல் கேட்க,

“ஹா... ஹா... ஹா... எலிப்புழுக்க!” என்று வாய் விட்டுச் சிரித்தவன், “என் தங்கச்சிக்கு அவ்வளவு பாசம் மச்சான் உன் மேலே! இதெல்லாம் இன்று ஒரு நாள் தான் கிடைக்கும், பேசாம அனுபவி” என்று துருவன் வார,

“நான் உங்களுக்கு எலியா?” என்று கரண்டியை எடுத்த படி பொண்ணு பபுலை மிரட்ட,

“நீ என் செல்ல கிராமத்து எலிக் குட்டி டி!” என்று அவன் கொஞ்ச, பின் சமாதானம் ஆனாள் அவள். இன்னும் அவர்களுக்குள் திருமணம் நடக்கவில்லை என்றாலும் மனதால் அவன் தான் என்று நினைத்ததால் இன்று அவன் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவதாக சொல்லி காத்திருந்தாள் போதும்பொண்ணு.

இதையெல்லாம் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்த அபிக்கு மனதிற்குள் ஒன்று தோன்ற, மனைவியை நெருங்கியவன், “ஏன் யுகா, அவங்களை மாதிரி பிறகு சாப்பிடணும்னு உனக்கு எதுவும் தோனலையா? உட்காரச் சொன்ன உடனே உட்கார்ந்திட்ட!” என்று குரலைத் தழைத்தியபடி அவன் கேட்க, மற்றவர்கள் செய்த அலப்பரையில் அவனுக்கு அப்படி ஒரு ஆசை வந்தது போலும்! என்ன இருந்தாலும் அவனும் ஆண்மகன் தானே? மனைவி தனக்காக இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் அப்படி ஒரு எண்ணம் வருவதை யாரால் தடுக்க முடியும்?

கணவன் சொன்னதுமே உணவு உண்ண அமர்ந்தவள் இப்போது அவன் இப்படி கேட்டதும் எந்த தயக்கமும் இல்லாமல், “அது காதலித்து கல்யாணம் செய்தவங்களுக்குத் தான் அப்படி எல்லாம் தோணும். வம்படியா தாலி கட்டினா எல்லாம் வராது” இவளும் குரலைத் தாழ்த்தி பதில் கொடுக்க,

அதற்கு கோபப்படாமல் சற்றே யோசனைக்குச் சென்றவன், “ஓ! அப்போ காதலைக் கொடு டா மடையானு சொல்ற. கொடுத்துட்டா போச்சு! அவங்க காதலித்து கல்யாணம் பண்ணாங்க, நாம் கல்யாணம் செய்துகிட்டு காதலிக்கலாம். அதான் கல்யாணம் ஆகிடுச்சே, காதலிக்கலாம்! என்ன சொல்ற?” என்று சர்வசாதாரணமாக கண்சிமிட்டி இவன் கேட்க, மூச்சடைக்க அதிர்ச்சியில் வாயில் இட்லியைக் கொண்டு போனவளின் கை அப்படியே நின்றது.

“ஹா ஹா ஹா… சரி இப்போ சாப்பிடு. ஆனா காதலிக்கிறோம்” என்று வழக்கம் போல அவளிடம் கட்டளையாகச் சொல்லிவிட்டு உணவை உண்டு முடித்தான் அபி.

உணவுக்குப் பிறகு மகளைத் தோள் மேல் போட்ட படி தோட்டத்தில் அபி உலாவிக் கொண்டிருக்க. மேகலையும் தங்கமும் பேசிய படி தனியே ஒதுங்கி விட, மற்ற இரண்டு ஜோடிகளும் அவரவர் உலகத்தில் சஞ்சரிக்க, பாரதியின் தந்தையோ கார் டிரைவர் மற்றும் வாட்ச்மேன் உடன் பேசி கொண்டிருக்க, நந்திதாவுக்கு யாருடன் போய் எங்கு அமர்வது என்றே தெரியவில்லை.

‘சரி நாம் நம் வேலையைப் பார்ப்போம்’ என்று இவள் கொஞ்ச நேரம் லேப்டாப்பில் வேலை செய்து விட்டு மறுபடியும் வந்து மற்றவர்களைப் பார்க்க, அப்போதும் எல்லோரும் அவரவர் இடத்திலேயே இருந்தார்கள்.

“இது என்ன டா வம்பா போச்சு! இப்போ நான் இவர் கிட்ட தான் போய் பேசணுமோ?” என்று முணுமுணுத்துக் கொண்டவள் அபியின் அருகே சென்று, “தூங்கிட்டாளா? பாப்பாவை கொடுங்க, அவளை நான் ரூம்ல படுக்க வைக்கிறேன்” என்று இவள் கேட்க

நின்று மனைவியை ஆழ்ந்து பார்த்தவன், அவள் இடது கை விரல்களோடு தன் வலது கை விரல்களைக் கோர்த்தவன் தோள் உரசிய படி அவளுடன் நடக்க, இந்த திடீர் செய்கையில் சற்றே அதிர்ந்தவள், “எ... ன்... ன...?” என்று திணற,

“சும்மா ஒரு வாக், அவ்வளவு தான் வா” என்றவன் நடையைத் தொடர,

நந்திதாவுக்கு தான் ‘என்ன இன்றைக்கு இவர் பார்வை பேச்சு செய்கை எதுவும் சரியில்லையே!’ என்று பட்டது. உண்மை தான்! இடது தோளில் மகள் தூங்க, வலது கையை மனைவியின் கையுடன் கோர்த்த படி பூக்கள் மலர்ந்து வாசம் வீச வண்டுகளின் ரீங்காரத்துடன் இரவு வேளையில் தோட்டத்தில் நடக்க, இந்த ரம்மியமே அவனுள் எதையோ நிரப்பியது.

நந்திதா கையைப் பிரித்துக் கொண்டு போகவிருந்த நேரம், “ஏதோ ஒரு மாற்றம்! இல்ல.. இன்றைய தினம் எனக்கு ஏதோ சம்திங் ஸ்பெஷல்னு தோணுது யுகா! உனக்கு அப்படி ஏதாவது இருக்கா? பெரிதா எதையும் நான் சாதிக்கல, புதுசா எதிலேயும் நான் கையெழுத்துப் போடல, என்னைப் பாராட்டி இன்று எதுவும் நடக்கல. ஆனா அவ்வளவு சந்தோஷம்! ஏதோ ஒரு நிறைவு! ஆனா அது என்னனு தான் தெரியல” என்றெல்லாம் சொன்னவன் பின் அவனே,

“ம்ம்ம்.... ஒருவேளை நான் முதல் முறையா வாங்கிக் கொடுத்த புடவையை நீ மறுக்காம கட்டிட்டு இருக்கியே அதுவா இல்லை எனக்காக செய்த பூஜையா இல்லை எங்கு யாரிடம் வாயடித்தாலும் விளையாடினாலும் நொடிக்கு ஒரு தடவை என்னை தேடின என் மகளா? இல்ல இல்ல… இதெல்லாம் தான் இருக்கும். இவ்வளவு நாள் இதையெல்லாம் நான் மிஸ் பண்ணியிருக்கேன் இல்ல?” என்று உணர்ந்து சொன்னவன், “ஆமாம், நீ இன்னும் எதுவும் சொல்லலையே?” என்று திடீர் என மனைவிடம் கேட்க,

‘கையை விட்டுட்டுப் பேசினா நல்லா இருக்குமே!’ என்ற எண்ணத்தில் இருந்தவள், “எதைப் பற்றி?” என்று இவள் பதில் கேள்வி கேட்க,

“அதான் காதலிக்கலாமா என்று கேட்டனே!”

அவன் முடிக்கக் கூட இல்லை, “ஒரு பெரிய திருத்தம் மிஸ்டர் அபிரஞ்சன்! நீங்க காதலிக்கலாமானு கேட்கல. காதலிக்கப் போறோம்னு கட்டளை தான் இட்டீங்க. அதிலேயும் அரை கிழவனா உங்க முப்பத்தி ஒரு வயதிலும் கால் கிழவியான என் இருபத்தி ஏழு வயதிலும் கேட்கிறீங்க. எல்லாத்துக்கும் மேலே நமக்கு மூன்று வயதில் குழந்தை இருக்கா. அதனால இப்படி தத்து பித்துன்னு உளறலை நிறுத்துங்க” என்று பதில் கொடுத்தவள் கணவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு நகர,

மறுபடியும் அவள் கையைப் பிடித்தவன், “இன்னும் நீ நான் கொடுத்த புடவை எப்படி இருக்குனு சொல்லவே இல்லையே யுகா?” என்று அழகான ஒரு சிரிப்புடன் கேட்க

‘ஹய்யோ மறுபடியுமா?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், “நல்லா இருக்கு” என்றாள் இவள்.

“இஸ் இட்?” கேட்ட படி அவன் மனைவியின் கையை விட,

“அதாவது வேணியோட டிரஸ் நல்லா இருக்குனு சொன்னேன்” என்றவள் கணவனைத் திரும்பியும் பார்க்காமல் சிரித்தபடி உள்ளே சென்று மறைந்தாள் நந்திதா.

‘பேச்சை மாத்தறா கேடி!’ என்று சிரிப்புடன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் அபி. இவள் வேறு உடை மாற்றிக் கொண்டு கீழே வர, அபி குடும்பத்தார் எல்லோரும் கிளம்ப தயாராகி இருந்தார்கள். மேகலை தங்கத்திடம் கிளம்புவதாக சொல்லவிருந்த நேரம்,

“ம்மா... நான் இனி இங்கேயே தங்கிக் கொள்கிறேன். இப்போதைக்கு துருவன் கிட்ட எனக்கு மாற்றுத் துணி கொடுத்து அனுப்புங்க. காலையில் நான் வந்து என் மற்ற திங்ஸ் எடுத்துக்கிறேன்” என்று தன் கணீர் குரலில் அபி சொல்ல, ஒரு வினாடி அங்கு அமைதி நிலவியது. தங்கத்திற்கு சந்தோஷம் தான்! ‘மகள் மனம் மாறும் வரை மாப்பிளை இங்கு இருக்கட்டுமே’ என்ற எண்ணம் தான். ‘ஆனால் மேகலை என்ன நினைப்பாரோ?’ என்று சங்கடமாகவும் இருந்தது.

ஆனால் மேகலை மகனைப் புரிந்து கொண்டார். ‘அவள் வரலைனா என்ன மா? நான் இங்கேயிருந்து அவளை அழைத்து வரேன்’ என்ற எண்ணத்தில் மகன் எடுத்த முடிவை அறிந்து கொண்ட அவர், “சரி அபிப்பா... நான் கொடுத்து விடுறேன். என் மருமகளுக்கு எப்போ நம்ப வீட்டுக்கு வரணும்னு தோணுதோ அப்போ இரண்டு பேருமா வாங்க” என்று அவர் முழு மனதாய் சம்மதம் தர, நந்திதாவுக்குத் தான் திக் என்றிருந்தது.

பின் எல்லோரும் சந்தோஷமாகவே கிளம்பிச் செல்ல, துருவன் வந்து ஆடையைக் கொடுக்கும் வரை இங்கிருந்தவர்களிடம் அமைதி நிலவியது. அதன் பிறகு எல்லோரும் அவரவர் அறைக்குச் சென்று விட, பபுல் மட்டும் பூனை போல் அபியிடம் வந்தவன் பட்டும் படாமல் அவன் தோள் அணைத்து கூடவே கை பற்றி, “ஆல் தி பெஸ்ட் பாஸ்!” என்று ரகசிய குரலில் குதூகளிக்க, இவனோ “போடா அரட்டை” என்று சிரிப்புடன் வயிற்றில் குத்த, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நந்திதா நண்பனைப் பார்த்து பல்லைக் கடித்த படி முறைக்க,

“இன்னக்கி நைட் நந்திதான்ற பயங்கரமான புயல் அபிரஞ்சன்ற ஐலேண்ட்ட டெஸ்ட்ராய் பண்ணிட்டு மார்னிங் கரை தாண்டி போய்டுச்சின்ற நியூஸ் இங்கே எல்லார்க்கும் சொல்லிக்கிறோம்” என்று பபுல் ரேடியோ ஜாக்கி மாதிரி பேசியவன் அங்கிருந்து நழுவிச் செல்ல, அபியின் முகத்தில் சிரிப்பு விரிந்தது.

கடுப்புடன் வேறு வழியில்லாமால் நந்திதா கணவனிடம் வந்தவள், “வாங்க, உங்களுக்கான அறையக் காட்டுறேன்” என்று தன்மையாக கூப்பிட

“எனக்கு எல்லாம் தனி அறை கொடுத்து நீ கஷ்டப் பட வேணாம். எவ்வளவு சின்ன அறையா இருந்தாலும் உன் அறையிலேயே தங்கிக் கொள்கிறேன்” என்றபடி அபி மேலே ஏற,

“யோவ்! உன்னை இங்கே தங்க விட்டதே அதிகம். இதிலே என் அறை வேணுமா?’ என்று முணுமுணுத்தவள், சத்தம் எழுப்பாமல் அவன் பின்னாலேயே படி ஏறி அறைக்குள் வந்ததும், “நீங்க உங்க மனசுல என்ன நினைத்து இருக்கீங்க?” என்று குரலை உயர்த்திய படி கேட்க

“உஷ்.... உஷ்...ஷ்...” என்று மனைவியின் உதட்டின் மீது விரலை வைத்துக் கண்டித்தவன் தூங்கிக் கொண்டிருந்த மகளைக் கண்களால் காட்டி விட்டு ஒரு கையில் அவனுடைய துணிப் பையுடன் மனைவியை இழுத்துக் கொண்டு அங்கிருந்த டிரெஸ்ஸிங் அறைக்குள் தள்ளி கதவை அடைத்தவன், “என்ன கேட்ட? என் மனசுல என்ன இருக்குனா? நல்லா கேட்டுக்கோ, என் மனைவியும் மகளும் தான் இருக்காங்க, போதுமா?” என்று ஒரு அழுத்தத்துடன் அவன் பதில் தர,

நந்திதா அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றே விட்டாள். பின் அவள் சுதாரித்துப் பேச நினைக்க,

மனைவியைத் தடுத்தவன், “இங்க பார்! சின்னப் புள்ளத் தனமா யோசித்து பேசாத. இல்ல உனக்கு யோசிக்கிற அளவுக்கு மூளையே இல்லையா? படிச்சவ பல தொழில் நிர்வகிக்கிறவ, அதுவுமில்லாமல் ஜமீன் ராணி வேற! கல்யாணம் ஆனா கணவன் மனைவி தனித்தனி அறையில் தான் இருப்பாங்களா டி?” அவன் பொய்யாய் அதட்ட

“என்னது? டி... யா?” என்று இவள் அதிர்ந்து நிற்க

“நாம ஒண்ணா தங்கினா காஞ்சா மாடுகள் கணக்கா ஆகிடுவோம்னு நினைக்கிறியா? உனக்கு எப்படியோ! நடந்த கல்யாணம் உண்மை, நீ தான் என் மனைவி. அதையும் நான் ஊரறிய சொல்லிட்டேன். அதற்காக இப்போ இல்லனாலும் பிறகு நம்ப வாழ்க்கைய ஆரம்பிக்கப் போறது உறுதி. சோ இதற்கு மேல் என்னால் பின் வாங்க முடியாது. உன்னையும் பின் வாங்க விட மாட்டேன். மீறிப் போக நினைத்த...” என்று நிறுத்தியவன் பின் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு,

“வேணிக்கு நான் தான் அப்பா. அது அவ மனசுல பதிந்தாச்சு. மீறி அதில் வேறு ஒரு முகத்தை பதிக்க நினைக்காத. இதற்கு மேலும் உன் பிடிவாதம் தான் உனக்கு முக்கியம்னா இந்த வினாடியே நான் கட்டின தாலியைக் கழற்றி கொடுத்துட்டு போய்கிட்டே இரு. ஆனா வேணி இனி எனக்கு மட்டும் தான் மகள். அதை மனசுல நினைத்துக்கோ” என்று இவன் இவனுக்கே உரிய பாணியில் எச்சரிக்க,

‘என்னது பூஜை செய்த இன்றே தாலியைக் கழட்டணுமா?’ என்று யோசித்தவள், “அதற்காக எல்லாம் ஒரே அறையில் உங்க கூட எல்லாம் தங்க முடியாது. நீங்களும் உங்க மகளும் வேணா இங்கே தங்குங்க நான் வேற அறைக்குப் போகிறேன்” என்று இவள் கெத்தை விடாமல் மிரட்ட

“என் வீட்டை விட்டு என் குடும்பத்தை விட்டு நீ எங்க இருக்கீயோ அங்கே தேடி வந்தவன் இப்போ நீ வேற ஒரு அறைக்குப் போனா விட்டுவிடுவேனா? அங்கேயும் வருவேன், அதுவும் என் மகளோட. கூடவே பஞ்சாயத்துக்கு என் மாமியாரோட வருவேன். இதற்கு எல்லாம் சம்மதம்னா எனக்கும் சம்மதம் மேடம்” என்றவன் “இப்போ வெளியே போறீங்களா நான் டிரஸ் மாற்றணும்” என்று நக்கலுடன் முடித்தவன்,

அவன் சொன்னதற்கு மாறாக சட்டென்று தன்னவளின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவள் நெற்றியில் தன் இதழ் பதித்து உல்லாசமான பார்வை பார்த்தவன், “நாம் காதலிக்கப் போறோம்னு சொன்னேன்ல? அதான் முதல் அடி எடுத்து வைத்துயிருக்கேன்” என்று காதலோடு சொல்ல, கணவன் தந்த திடீர் அச்சாரத்தில் மிரண்டவள் அவனை எதுவும் செய்ய முடியாத நிலையில் கதவைப் படார் என்று சாத்திக் கொண்டு வெளியேறினாள் நந்திதா.

படுக்கும் போதும் அவள் கீழே படுக்க முயற்சி செய்ய, “நானும் என் மகளும் உன் கூட கீழே தான் படுப்போம் பரவாயில்லையா?” என்று அவன் சொல்ல, மறுபேச்சின்றி இவள் கட்டில் மேலே படுக்க, மகளை மறுபுறம் விட்டுவிட்டு இவன் மனைவி பக்கத்தில் படுக்க, “பாப்பாவை நடுவில் போடுங்க விழுந்திடுவா” இவள் குரல் தந்தி அடிக்க,

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ பேசாம தூங்கு டி” என்றவன் மனைவிக்கு முதுகு காட்டியபடி மகளை அணைத்துக் கொண்டு தூங்கினான் அந்த பிடிவாதக்காரன்.

படுத்ததும் அபி தூங்கி விட, நந்திதாவுக்குத் தான் தூங்கவே முடியவில்லை. அபி அவளுக்கு செய்த அநியாயத்துக்கு அவள் காலில் விழுந்து அவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றோ பழி வாங்க வேண்டும் என்றோ இவள் இதுவரை நினைத்தது இல்லை இனியும் இல்லை. தொழிலில் கூட அவன் தவறைச் சுட்டிக் காட்டி திருத்தத் தான் நினைத்தாளே தவிர அழிக்க நினைத்தது இல்லை.

அவளுடைய எண்ணம் உறுதி சபதம் எல்லாம் அபி யாரிடமும் நடந்த திருமணத்தைச் சொல்ல மாட்டேன் என்றவனைக் கட்டின தாலியை ஏற்றுக் கொண்டு தன்னை மனைவி என்று எல்லோர் முன்பும் சொல்ல வைக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள். அதில் அவள் ஜெயித்த பிறகு அவள் விலக நினைக்க, அபியின் இந்த மாற்றங்கள் அவளின் வாழ்வையே புரட்டிப் போட ஆரம்பித்தது. இதோ இன்று வரை புரட்டிப் போட்டு கொண்டு தான் இருக்கிறது.

வேணி விஷயமாக இவள் அபியை ஏற்றுக் கொள்ள நினைத்தாலும் ஏதோ ஒன்று அவளைத் தடுக்க அதனால் இவள் விலக, அப்படி விலகியிருந்தால் அபி மாறுவான் என்று நினைத்த நேரத்தில் தான் கணவன் இப்படி அதிரடியாய் கிளம்பி வந்து தங்க, மாமியாரான மேகலை முகத்தை நந்திதாவால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

அதிலும் அவர் முகம் சுளிக்காமல் இருவரும் சேர்ந்து நம்ப வீட்டுக்கு வாங்க என்று சொன்னது நந்திதாவுக்குள்ளே குற்ற உணர்வையே உருவாக்க, மேற்கொண்டு என்ன செய்வது எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பது என்ற யோசனையைத் தவிர வேறெதுவுமின்றி நிற்க வைத்தது அவளை.

இதே எண்ணங்களுடன் படுக்க வந்ததாலோ என்னவோ நந்திதாவுக்கு சரியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் அவள் துயில, கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் கனவு போல் அவளைச் சுற்றி பேச்சுக் குரல் கேட்டது.

“அப்பிப்பா” என்று வேணி குதூகளிக்க,

“பேபி எழுந்திட்டீங்களா?” என்று தூக்க கலக்கத்துடனே இவன் கேட்க,

“ம்ம்ம்... இனி டெய்லி என் கூட தான் இருப்பீங்களா?” என்று வாண்டு கொஞ்ச,

“ஆமா டா” நன்றாக விழித்து எழுந்து சொன்னான் அபி.

“ஹே! ஜாலி ஜாலி!” மகள் போட்ட கூச்சலில்

“உஷ்.... உஷ்... அம்மா தூங்கறாங்க. சோ சத்தம் போடக் கூடாது” என்று அவன் தாழ்ந்த குரலில் மகளிடம் சொல்ல,

தந்தை போலவே “ஷ்... ஷ்...” என்றவள் “அம்மாவுக்கு ஜுரம்மா?” என்று கேட்டு “அபிப்பா பிச்சி வேணும்” என்று ரகசிய குரலில் ராகம் இழுக்க,

இந்த டைமில் பிச்சி வேணாம் டா. அம்மா பிளாஸ்க்குள்ள பால் வைத்திருக்காங்க. இருங்க நான் எடுத்திட்டு வரேன்” என்றவன் அதன் படியே பால் ஆற்றி தர அதை எந்த சுணக்கமும் இல்லாமல் வாங்கிக் குடித்தவள் பின் தூங்கப் போக, அபி வாயைச் சுத்தம் செய்த பிறகு படுக்கச் சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு நடந்த மகள் பின் தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதை கேட்க அதையும் அவன் சொல்ல, இடை இடையே வேணி சந்தேகம் கேட்க அதற்கும் அபி பொறுமையாக பதில் தர,


இதையெல்லாம் அரை தூக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த நந்திதா, ‘கேடி பய புள்ள! அந்த பாலைக் குடிக்க என்ன ரகளை பண்ணும்? வாயைச் சுத்தம் செய்யச் சொன்னாலும் என்னமா பிடிவாதம் பிடிக்கும்? இப்போ என்னடானா கிளிப் பிள்ளை மாதிரி அவ அப்பா சொல்லுறதை என்னமா கேட்குது!” என்று சிலாகித்தவள் கண்ணைத் திறக்காமலே ஆழ்ந்து தூங்கிப் போனாள் அவள். நந்திதாவுக்கு கண்ணைத் திறக்கக் கூடாது என்ற எண்ணம் இல்லை. அவளையும் மீறி திறக்க முடியாத அளவுக்கு அசதி அவ்வளவு தான். அன்றைய இரவு அவள் எதிர்பார்த்த படி இல்லாமல் சாதாரணமாகவே போனது.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN