எனை மீட்டும் இயலிசையே -9

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
9


கண்ணீரின் தடங்கள்

கன்னத்தில் வடுவாய் !!!

பேசிய வார்த்தைகள்

இதயத்தில் வடுவாய் !!!



வடுக்களும் தான்

மறைந்து போகுமா !!!

உன் காதல் தான்

எண்ணில் நிறைந்து போகுமா !!!




சத்யாவின் வேண்டுகோளை கேட்ட இசை திகைத்து நின்றாள்.... பின் கோவமாக...

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. இது என்ன புது விதமான பிளாக்மெயிலா.. இதுக்கு ஒத்துக்குவேன்னு கனவு கூட கணாதீங்க... "என்று சொல்லிவிட்டு வெளியேறும் பொழுது

"அச்சோ சார்....சார்..... என்ன பண்றீங்க" என்று செவிலி கத்த திரும்பி பார்த்த இசை பதட்டத்துடன் அவன் அருகில் சென்றாள்..

கட்டிலில் இருந்து இறங்க முற்பட்டவனை தடுத்தாள்....

"ஏன் சத்யா இப்படி பண்றீங்க.. இந்த நிலைமையில ஏன் எழுந்திரிக்கறீங்க.. "

"வேண்டாம் விடு... நான் எங்கயாச்சும் போய்க்கறேன்... "

"ஏன் இப்படி உயிரோட விளையாடறீங்க.. உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப் பாடுவாங்க... "

"ம்ஹும்... எங்கம்மா என்கூட கடைசியா பேசுனது எப்ப தெரியுமா... நம்ம கல்யாணத்தப்ப தான்... இப்ப வரைக்கும் எங்கிட்ட பேசல.. எங்கம்மா கையால சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு.. அதனால அவங்களுக்கு பிடிக்காத பையன் நான் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன... என்னை விடு... "என்றவன் அதீத ரத்த போக்கால் மயங்கி விழ பார்க்க...

செவிலி அப்போது முதலுதவி செய்ய வர அந்நிலையிலும் தடுத்தான்...

"மேடம் ப்ளீஸ் ஏதாச்சும் செய்ங்க.. இப்போ டாக்டர் வந்துருவாரு... அப்புறம் என்னதான் திட்டுவாரு.. இவருக்கும் வேற ரொம்ப ஆபத்து ஆகிரும்.... "

சத்யாவின் அருகில் வந்த இசை"நான் நீங்க சொன்னதுக்கு சம்மதிக்கறேன்... உங்க கூட உங்க வீட்டுக்கு வரேன்... "

"எனக்கு.... ச...... சத்தியம்... ப.... பண்ணிக்குடு... "

அவள் கோவத்துடன் "நான் சொன்ன சொல்ல மீற மாட்டேன் நீங்க தைரியமா நம்பலாம்... "என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள்...

அதன் பிறகு சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தந்தான்...

கோபத்துடன் வெளியே வந்த இசை அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தலையை இரு கைகளாலும் தாங்கி பிடித்தாள்.... இந்த மாதிரி பயமுறுத்தலுக்கு அடிபணிவது பிடிக்க வில்லை என்றாலும்.... இசை இப்படி ஒத்துக் கொண்டதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது....

இரண்டு நாள் முன்பு இரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் வெளியே சற்று நேரம் நடந்து விட்டு வரலாம் என்று தன் அறையை விட்டு வெளியே வந்தவள் இனியனின் அறையில் விளக்கு எறிவதை கண்டாள் .....

"அண்ணா இன்னுமா தூங்கலை... சரி கொஞ்ச நேரம் பேசிட்டு வரலாம் என்று இனியனின் அறைக்கு சென்றாள்.

அங்கு சுமித்ரா நாதனின் பேச்சு சத்தமும் கேட்க...." அப்பாவும் அம்மாவும் என்ன இந்த நேரத்துல அண்ணா ரூம்ல" என்று நினைத்து கொண்டே கதவை திறக்க போனவள்... அடுத்து அவர்கள் பேசிக்கொண்டதை கேட்டு உள்ளே கூட போக தோன்றாமல் நின்றுவிட்டாள்....

"அம்மா எத்தனை தடவ தான் சொல்றது... இப்ப நான் கல்யாணம் பண்ணிக்கறதா இல்ல.... நம்ம குட்டிமா இப்படி இருக்கும் போது நான் எப்படிமா கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்க முடியும்.. "

"புரியது இனியா... ஆனால் நிரஞ்சனா பத்தியும் யோசிச்சு பாருடா... உனக்கு நிரூக்கும் பேசி முடிச்சிடலாம்னு குட்டிமா கல்யாணத்தப்பவே பேசினது தானே... குட்டிமா கல்யாண பிரச்சனைனால அவங்களும் இவ்ளோ நாள் பேசாமல் தான இருந்தாங்க... இப்ப சின்னவ சஞ்சுக்கும் வரன் வந்துருக்கும் போலடா....அதான் மாமா நம்ம கிட்ட கேக்குறாங்க.... "

இசையின் சொந்த மாமா பொண்ணு தான் நிரஞ்சனா.... நிரூவிற்கு இனியனை சிறு வயதில் இருந்தே பிடிக்கும்... இனியனிற்கும் பிடிக்கும்... அது காதலா இல்லை உறவு முறையால் வந்த நெசமா என்று தெரிய வில்லை...

"அப்பா நான் சொன்னது சொன்னது தான்... அவங்களால வெயிட் பண்ண முடிலனா வேற பக்கம் பாத்துக்க சொல்லுங்க "

"என்னடா இப்படி சொல்ற... "

வெளியே நின்றிருந்த இசை சத்தம் இல்லாமல் தன் அறைக்கு வந்து விட்டாள்...

"என்னால எல்லார்க்கும் பிரச்சனைதான்.. அண்ணா கல்யாணத்திற்கு நான் தான் தடையா இருக்கேன் "என்று நினைத்து கண்களை நனைத்த கண்ணீர் கன்னத்தையும் நனைத்தது....

அதனால் தான் மனசு சரி இல்லாமல் கோவிலுக்கு வந்தாள்..

இப்போது சத்யா சொன்னதிற்கு ஒப்புக்கொண்டதிற்கு பாதி காரணம் சத்யாவிற்காக என்றாலும் மீதி காரணம் இனியனிற்காக.......



கண்ணின் மணியை

கொஞ்சி மகிழ்ந்திட !!!

கட்டிக் கரும்பை

தொட்டு களித்திட !!!

ஊடல் களைந்து

கூடல் கண்டிட !!!

உள்ளமும் தவித்ததடி

ஆசையும் தான் கொண்டதடி !!!


இனியன் மருத்துவமனைக்கு வர.....புகழும் சந்திரனும் அங்கு வந்தனர்...

"என்னாச்சு இனியா... சத்யா எப்படி இருக்கான்... "

"நானும் இப்ப தான் வந்தேன் மாமா...வாங்க உள்ள போகலாம்.. "

அவர்கள் விசாரித்து விட்டு உள்ளே சென்றனர்...

"இசை எப்படி ஆச்சு... இப்ப சத்யாக்கு எப்படி இருக்கு.... "

"சின்ன ஆக்சிடேன்ட் மாமா... டாக்டர் பாத்திட்டு இருக்காங்க... "

அப்பொழுது டாக்டர் வர அவரிடம் விசாரித்தனர்....

"கைலயும் தலைலயும் அடி பட்டுருக்கு.. பட் நல்ல வேலை ஆழமா படல... ட்ரீட்மென்ட் பண்ண கொஞ்சம் லேட் ஆனதுனால கொஞ்சம் பிளட் லாஸ் ஆகிருக்கு... பிளட் ஏத்தியிருக்கோம்.. ஸ்டிச்சஸ் போட்ருக்கோம்... நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்... " என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்று விட்டார்..

"ப்ச் இவனுக்கு இதே வேலையா போச்சு... எதுலயும் கவனம் இருக்கறதே இல்லை... உனக்கு வேற சிரமம் கொடுத்துட்டான்... சாரி இசை... இனியா இசையை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பு... நாங்க பாத்துக்கறோம்... "

"மாமா....அத்தை வரலையா.. "

"துளசி இவன் மேல கோவத்துல இருக்காம்மா.. உன்னை எப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரான்னோ அப்பதான் பேசுவேன்னு சொல்லிட்டா... அதை விடும்மா... நீ எப்படி இருக்க... அவன் மேல தான கோவம்... எங்கள கூட தள்ளி வச்சுட்டியாமா ... "

"ஆமா அண்ணி.... அண்ணன் பண்ண தப்புக்கு எங்க எல்லாருக்கும் தண்டனை கொடுத்துட்டீங்க... உங்களை பார்த்தா அம்மா ரொம்ப சந்தோச பாடுவாங்க... அம்மாவை கூட்டிட்டு ஒரு நாள் வரலாமா... "

"வேண்டாம் புகழ்... "

"ஆனா அண்ணி..... "

"நான் நாளைக்கு அங்க வரேன் புகழ்.. இனிமேல் நான் அங்க தான் இருக்க போறேன்... நிரந்தரமா... "

மற்ற இருவரும் வாயடைத்து நிற்க... இனியன் மட்டும் மனதில்... "பரவாயில்ல எப்படியோ சாதிச்சுட்டான் போலவே... ஒருவேளை கால்ல விழுந்திருப்பானோ..."என்ற சிந்தனையை தடை செய்தது இசையின் குரல்...

"அண்ணா போலாம் வாங்க "

சரி என்று கிளம்பிய இருவரும் வீட்டை அடைந்தனர்... சுமித்ரா நாதன் இருவரும் இவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்...

"என்னாச்சுப்பா.... இப்ப நல்லா இருக்காரா... "

"நல்லா இருக்கார்ம்மா.... "

"என்னவோப்பா... என்னதான் அவர் மேல கோவம் இருந்தாலும் ஆக்சிடேன்ட்னு சொன்னதும் பயந்துட்டேன்...இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு... "

"அம்மா அப்பா உங்க கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும்.. "

"என்னடா குட்டிமா சொல்லு.. "என்று இருவரும் ஒன்றாக கேட்டனர்..

"நான் .......சத்யா கூட அவங்க வீட்டுக்கு போறேன்ம்மா.. இனி அங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.. என்ன இருந்தாலும் நான் அங்க இருக்கறது தான முறை... "

"என்ன குட்டிமா அவருக்கு அடி பட்டதும் உன் மனசு மாறிட்டுதா... அவரை மன்னிச்சுட்டயா.. "

"இல்லப்பா.. அவருக்கு நான் இன்னொரு வாய்ப்பு தரேன் அவ்வளவு தான்... "

"வேண்......"என்று மறுத்து பேச முயன்ற சுமித்ராவை தடுத்த இனியன்

"அம்மா விடுங்க... இசைக்கு எது சரினு படுதோ அதை செய்யட்டும்... "

"சரி நாங்க ஒத்துக்கறோம்... நீயும் உன் கல்யாணதுக்கு ஒத்துக்கனும்... "

"அம்மா எதோட எதை கூட்டு சேக்கறீங்க.... அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.... "

"சரி இன்னும் ஒரு மாசம் கழிச்சு கண்டிப்பா எல்லா ஏற்பாடும் செய்ய ஆரம்பிச்சிருவோம்.... இதுக்கு மேல நீ மறுப்பு சொல்ல கூடாது...."

"சரி சரி.... ஒத்துக்கறேன்.... "என்று கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டான்..

தன் அறைக்கு வந்து இசை....

"நா எடுத்த முடிவுக்கு உண்மையான பலன் கிடைச்சிருக்கு....ஆனால் நாளையில் இருந்து என் நிலைமை தான்....... ச்ச..... பிளாக் மெயில் பண்ணியா வரவைக்கறீங்க.... ஏன்டா இவள வர சொன்னோம்னு உங்களை அலற விடல என் பேரு இயலிசை இல்ல.....

நம்மை இயல் பார்முக்கு வந்துட்டா போலவே..... தம்பி சத்யா உன் நிலைமை ரொம்பவே குஷ்டமப்பா... ச்சீ ச்சீ ரொம்ப கஷ்டமப்பா......



நினைவே மருந்தே

கவியே கனவே

நேசம் விளைத்து

நெஞ்சில் துளிர்த்த

காதல் தீயை

இதயம் பூட்டி

காத்திருப்பேன் உனக்காக !
!!



காரில் இருந்து இறங்கிய இயல் சத்யாவிற்கு ஆரத்தி எடுத்தார் துளசி... வாசலில் அதை ஊற்றி விட்டு இசையை மட்டும் உள்ளே அழைத்து சென்றவர் மறந்தும் சத்யாவின் புறம் திரும்பவில்லை...

தலையிலும் கையிலும் கட்டோடு இருந்தவனை ஏன் என்று கேட்கவில்லை..

"இசைமா இந்த அத்தையை கூட இத்தனை நாள் வெறுத்து ஒதுக்கிட்டயேமா... "

சோபாவில் துளசியின் அருகில் அமர்ந்திருந்த இசை அவர் கைகளை பிடித்து கொண்டாள்...

"அப்டிலாம் இல்லத்த... கொஞ்சம் மன வருத்தம்...அப்போ இருந்த நிலைமைல உங்க யாரையாச்சும் எதாவது பேசி காயபடுத்திடுவோம்னு தான் பேசல.. அதான் இப்ப வந்துட்டேன்னே... "என்று அவரை கட்டி கொண்டாள்..

"என் தங்கம்.... "

"நாங்கல்லாம் பசில இருக்கோம்..நீங்க ரெண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி கொஞ்சிட்டு இருக்கீங்க.. "

"ஏன்டா தடியா.. கை கால் எல்லாம் நல்லா தான இருக்கு.... நீயே போய் கொட்டிக்கறது... "

"அப்பா அதான் அம்மா சொல்றங்கல்ல.. நாமளே போய் கொட்டிப்போம்... "

"உனக்கு வர வர வாய்க் கொழுப்பு அதிகமா போச்சு.... சரி சரி வாம்மா போய் சப்படலாம்... "

அவள் ஓரக் கண்ணால் சத்யாவை பார்க்க அவனும் புன் சிரிப்புடன் நடந்தவற்றை கவனித்து கொண்டு தான் இருந்தான்...

"பிளாக்மெயில் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு சிரிப்ப பாரு.. " என்று முறைத்தவள் சாப்பாட்ட அமர்ந்தாள்...

இசை புகழ் சந்திரன் அமர துளசி பரிமாறினார்...அவரை தடுத்த இசை

"அத்தை நீங்களும் உக்காருங்க எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்... "

"இல்லம்மா... "

அவரை தன் அருகில் வலுக்கட்டாயமாய் அமர செய்து தானே பரிமாறினாள்... கேரட் அல்வாவை இசைக்கு ஊட்டினார்.... இசையும் பௌவ்லில் இருந்த அல்வாவை அனைவருக்கும் ஸ்பூனில் ஊட்டினாள்... சத்யாவை பார்க்க அவனும் ஏக்கதுடன் அவர்களை பார்த்து கொண்டிருந்தான்..

அது அவள் மனதை பிசைந்தாலும் மூளையோ.... வேணும் நல்லா வேணும் என்று கொண்டாட்டம் போட்டது.... அதே நேரம் சத்யாவை பார்த்த புகழ் தன் துளசியிடம்

"அம்மா சத்யாவையும் கூப்பிடுங்க.. அவனும் காலையில் இருந்து எதும் சாப்பிடல... "

"இதோ பார்ரா... அவங்க அவங்களுக்கு பசிச்சா வந்து சாப்டுக்கலாம்... எல்லா விஷயத்தையும் நான் சொல்லியா பண்ணாங்க...."

"அம்மா அது..... "

"நீ வாய மூடிட்டு சாப்பிட போறயா இல்லையா... "

"அத்தை.... எனக்காக உங்க பையனயே விலக்கி வச்சிருகீங்க... உங்களை மாறி மாமியார் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்... "

"தப்பு யார் பண்ணா என்னடா.. எப்படி இருந்தாலும் அது தப்பு தானே... என் பையன்கரதுக்காக அவன் பண்ணத எப்படி மன்னிக்க முடியும்... "

"மை ஸ்வீட் அத்தை... "

"சூப்பர் மாம்... "

என்று இருவரும் துளசியை கட்டி கொள்ள

"என் பொண்டாட்டிய சாப்பிட விடுங்க ரெண்டு பேரும்...... "

"ஹாஹா.... ரொம்பத்தான் அக்கறை.." என்ற புகழின் தலையில் கொட்டினார் சந்திரன்...

இசை சத்யாவை பார்க்க அவன் தன் அறைக்கு சென்றுகொண்டிருந்தான்...

எல்லாரும் சாப்பிட்டு முடித்தனர்..

"இசைமா..... மேல் ரூம்ல உன் திங்ஸ் எல்லாத்தையும் வச்சிருக்ககேன்... நாங்க போய் மாத்திரை போட்டுட்டு கொஞ்ச நேரம் படுத்திருக்கோம்...நீயும் கொஞ்ச நேரம் போய் ரெஸ்டா எடுமா.... "

"சரிங்கத்தை... "

"அண்ணி நானும் என் பிரண்ட்ச பாக்க போறேன்.. நீங்க கதவை லாக் பண்ணிக்குங்க... "

அனைவரும் சென்ற பின் இசை.... சிலவற்றை எடுத்து கொண்டு மேலே சத்யாவின் அறைக்கு சென்றாள்....

கதவு தாளிடாமல் இருக்கவே... உள்ளே சென்றாள்.... சத்யா கண்களை மூடிக்கொண்டு தலையில் கையை மடக்கி வைத்து படுத்திருந்தான்....

தான் கொண்டு வந்தவற்றை அருகில் இருந்த மேஜை மேல் வைத்தாள்...

"ஹலோ.... "இசையின் அழைப்பில் கண் விழித்தான்....

"என்ன இயல் ஏதாச்சும் வேணுமா.. "

"ம்க்கும்.....என்ன இப்படி சாப்பிடாம வந்து படுத்தா உடனே நாங்க உங்களை பார்த்து இரக்க பட்டு உங்களை சாப்பிட சொல்லி கெஞ்சுவேன்னு நினைச்சீங்களா... இப்படிலாம் சீன் கிரீயேட் பண்றத விட்டு ஒழுங்கா இருக்கற வழிய பாருங்க... " என்று சொல்லிவிட்டு தன் அறையான அடுத்த அறைக்கு சென்று விட்டாள்...

பெரு மூச்சுடன் இயல் செல்வதை பார்த்தவன் எதேச்சையாக மேஜையை பார்த்தவன் இதழில் புன்னகை மலர்ந்தது...

மேஜையில் ஒரு பௌவ்லில் ரச சாதம் ஸ்பூனுடன் இருந்தது.. மேலும் சிறு கிண்ணத்தில் அல்வாவும் கிளாசில் பாலும் இருந்தது...

அதே நேரம் பக்கத்து அறையில்

"அறிவு கெட்டவளே....அறிவு கெட்டவளே... உனக்கு ரோசம் மானம்... சூடு... சுரணை ஏதாச்சும் இருக்கா... அவன் சாப்டா என்ன சாப்டலனா என்ன... திடீர்னு பாசம் பொங்கிருச்சா... அவன் பண்ணதை எல்லாம் மறந்துட்டயா... "என்று தலையில் குட்டி மனசாட்சி கேள்வி கேட்க...

"அதெல்லாம் ஒன்னும் இல்ல... நானாவது மறக்கறதாவது... ஒடம்பு முடியாம இருக்காரேன்னு பாவம் பார்த்தேன்... அவ்வளவு தான்..."என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN