😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-6💘😍

Priyamudan Vijay

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
6

மொரிஸியஸ்... ஆப்ரிக்கா கண்டத்திலிருக்கும் ஓர் அழகான தீவு. அங்கிருக்கும் போர்ட் லூயிஸ் என்னும் இடத்தில் மிகப்பெரிய அரண்மனைப் போன்ற வீட்டில் தனியொரு ஆளாக வாழ்ந்து வந்தான். இவனுடைய கல்லூரி கடைசி பருவத்திலையே விமான விபத்தில் இறந்து போக, சொந்த பந்தங்களிடமிருந்து தன்னுடைய சொத்தை பாதுகாத்து வந்தவன், ஒரு மிகப்பெரிய ஆஸ்பித்திரியில் மனத்தத்துவ மருத்துவராக சேர்ந்தான். அப்போது இவனைப் பார்க்க வந்த நோயாளியாக தான் வந்தாள் ஷர்மிளா.
“சொல்லுங்க.. என்ன ப்ராப்ளம்?” என்று அர்ஜூன் கேட்கவும் கதறி கதறி அழுதாள் ஷர்மிளா. அதைக் கண்டு பதறிய அர்ஜூன், “என்ன மேடம் ஆச்சு? எதுனாலும் சொல்லுங்க.” என்று அவன் கேட்கவும்...ஷர்மிளா,
“எனக்கு அம்மா, அப்பா இல்ல. தாய்மாமன் தான். அவன் ஒரு நாசக்காரன் சார். எனக்கு படிக்க ரொம்ப பிடிக்கும். காலேஜ் அனுப்பாம, என்னைய பத்து பேரு முன்னால ஆடுற ஆட்டக்காரியா ஆக்கிட்டான்....” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளுக்கு பேசமுடியாமல் மூச்சடைத்தது அவள் சற்று இளைப்பாறுவதற்கு தண்ணீர் கொடுத்தான் அர்ஜூன். அதனை வாங்கி குடித்துவிட்டு கண்ணீர் துடைத்தவள், தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
“அப்படி ஆடும் போது, என்னைய கேவலமா தான் பார்க்குறானுங்க. அருவறுப்பா இருக்கும் சார். எனக்குனு ஒரு வாழ்க்கை, எனக்குனு ஒரு குடும்பம்-னு சந்தோஷமா வாழ ஆசை சார். ஆனா, அந்த நாசக்காரன் பண்ண வேலை-ல எந்த நல்லவன் என்னைய கட்டிப்பான்னு சொல்லுங்க சார். கடவுள் ஆணையா சொல்லுறேன், நான் நடனம் மட்டும் தான் சார் ஆடுவேன். ஆனா, வர்றவனுக்கு அது தெரியுமா? நான் சுத்தமானவ தான்-னு நம்புவானா? இந்த ஆட்டத்தெல்லாம் விட்டுடு அழகான ஒரு குடும்பம் பிள்ளைங்கனு வாழ ஆசை சார். ஆனா, இதெல்லாம் நடக்குமா? தினமும் இத நினச்சு நினச்சு எனக்கு பைத்தியமே பிடிக்குற மாதிரி இருக்கு சார்...” என்று ஷர்மிளா பேசிக்கொண்டே போக, அவளின் நிலை அர்ஜூனுக்கு கவலை அளித்தது. இறுதியாக அவள்,
“நீங்களே சொல்லுங்க டாக்டர் சார். என்னைய யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க? நல்லவனுக்கு என்னைஅய் கல்யாணம் பண்ணிக்க தோணுமா?” என்று ஷர்மிளா கேட்கவும், அர்ஜூன்..
“தோணும்..” என்று ஷர்மிளாவின் கண்களைப் பார்த்து கூறினான். அதைக்கேட்ட ஷர்மிளாவின் கண்களில் சிரு மின்னல் வெட்டியது. பின், மீண்டும் அந்த அவள் கண்களில் சோகம் குடிகொள்ள,
“நல்லவனுக்கு என்னைய பிடிக்காது சார். என் வாழ்க்கையவே கெடுத்துட்டான் சார் அந்த நாசக்காரன்.” என்று அவள் குமுறி அழ ஆரம்பிக்க..
“நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன். உனக்கு விருப்பமா?” என்று பட்டென தேங்காய் உடைத்தது போல் அர்ஜூன் உடைக்க, அதிர்ந்த ஷர்மிளா,
“எ.. எ.. என்ன சார் சொல்றீங்க? நா.. நான் ஒரு டான்ஸர் சார். நீங்க டாக்டர். இப்போ என் மேல பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிறீங்க. ஆனா, பின் நாட்கள்-ல இந்த ஆட்டக்காரிய பார்த்த கேவலமான, வக்ரமான எண்ணம் கொண்ட ஆம்பளைங்க, உங்க கிட்ட வந்து என்னைய தப்பு தப்பா சொன்னா, நீங்க நிச்சயமா வருத்தப்படுவீங்க. அப்போ மட்டும் நீங்க, ‘இவள ஏன்-டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்? ’ –னு உங்களுக்கு தோணுச்சுனா, நான் உயிர் வாழுறதுக்கே அர்த்தமில்லாம போயிடும் சார். இதெல்லாம் யோசிச்சுட்டு கல்யாணம்-னு பேசுங்க சார். நான் வர்றேன்.” என்று தன் இருக்கையிலிருந்து எழுந்தவளிடம், திடமான குரலில்,
“உன்னைய கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த நொடியில இருந்து நீ என் மனைவி. என் மனைவிய கண்டவனும் வந்து கண்டதும் பேசுனா, அத நம்புற அளவுக்கு நான் கேவலமானவன் இல்ல. நம்பி வந்த பொண்ண காலம் பூரா கண்கலங்காம பார்த்துப்பேன். அப்பறம் உன் இஷ்டம்.” என்று அர்ஜூன் கூறிவிட்டு, தன் வேலைகளில் மூழ்க, அவனை ஒரு தரம் பார்த்துவிட்டு யோசனையுடன் அவ்விடத்தை நகர்ந்தாள் ஷர்மிளா.
தனது பாலிய சினேகிதன் பிரபாகரனின் உதவியோடு, ஷர்மிளாவின் இருப்பிடத்தை கண்டறிந்த அர்ஜூன், அங்கு சென்று ஷர்மிளாவை சந்தித்து பல தடைகள் தாண்டி அவளைத் திருமணம் செய்துக்கொண்டான். திருமணம் முடிந்த பின்னர் ஷர்மிளா-அர்ஜூன் தம்பதியினர் சந்தோஷமாக வாழத் தொடங்கினர். சில மாதங்களிலேயே ஷர்மிளவிற்கு பிள்ளைப்பேறு கிடைக்காததால், கைக்குழந்தையான ப்ரீத்தியை தத்தெடுத்துக்கொண்டனர். ப்ரீத்தியை தங்கள் பிள்ளையைப் போல் ப்ரியத்துடன் வளர்த்தனர். மூவரும் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தனர்.
இவ்வாறு அழகாகச் சென்ற அர்ஜூன்-ஷர்மிளாவின் வாழ்வில் அந்த பேரிடர் நாள் வந்தது. 27-7-2009 திங்கள்கிழமை, 5 மாதக் குழந்தையான ப்ரீத்தியை தூக்கிக்கொண்டு, அர்ஜூனும்-ஷர்மிளாவும் மொரிஸியஸின் பிரபல சுற்றுலா தளமான கேமரால் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். மூவரும் அந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசிப்பதற்காக அந்த மலை உச்சியிலுள்ள பாலத்திற்குச் சென்றனர். அங்கு நின்றுக் கொண்டிருந்த போது அர்ஜூனுக்கும் ஷர்மிளாவிற்கும் மிகவும் கடுமையான வாக்குவாதம் நடக்க... அப்பொழுது பாலத்தின் மறுமுனையிலிருந்து பிரபாகரன், அர்ஜூனை அழைத்தான்.
“டேய், அர்ஜூன்... உன்னைய தேடி ஒரு பேசண்ட் வந்திருக்காங்க டா. உங்கிட்ட தான் சிகிச்சைப் பெற்றாங்களாம். நாளைக்கு ஊருக்கு போகணுமாம். இன்னயோட சிகிச்சை முடியுறதா சொன்னியாம் டா. உன் வீடு தேடி வந்திருக்காங்க. என்னனு கொஞ்சம் பார்த்து சொல்லு டா அவங்களுக்கு. சீக்கிரம் வா.” என்று அவன் எவ்வளவு கத்தியும் அருவியின் சத்தத்தில் அவன் பேசியது அர்ஜூனின் காதில் விழாததால், தன்னுடன் வந்த தன் தம்பி ப்ரனீஷை அர்ஜூனுக்கு இந்த விசயத்தை சொல்லுமாறு கூறி, அவனுக்கு மட்டும் அந்த பாலத்தின் மீது செல்வதற்கான சிறப்பு டிக்கெட்டை எடுத்தனுப்பினான் பிரபாகரன். ஷர்மிளாவிற்கு அருகில் வந்த ப்ரனீஷ், அர்ஜூனிடம், பிரபாகரன் கூறிய செய்தியினை கூற, உடனே அந்த இடத்தைவிட்டு நகர முற்பட்ட அர்ஜூனை தடுத்தாள் ஷர்மிளா..
“இன்னைக்கு தான் எங்களுக்கு-னு இந்த இடத்த சுத்திப் பார்க்க வந்தீங்க. அதுக்குள்ள கிளம்பணுமா? வரமுடியாதுனு சொல்லிடுங்க.” என்று ஷர்மிளா கூறவும்,
“ஏய்.. பேசண்ட் வந்திருக்காங்க ஷர்மி..பேசண்ட்-காக டாக்டர் காத்திருக்கலாம்.. ஒருபோதும், டாக்டர்-காக பேசண்ட் காத்திருக்கக் கூடாது. வழிவிடு. நான் போணும்.” என்று அர்ஜூன் நகர முற்பட்ட போது.. வழிமறித்த ஷர்மிளவிடம்,
“அண்ணி, இன்னைக்கு ஒரு நாள் அர்ஜூன் அண்ணாவ விடுங்க. நாளைக்கு கூட இந்த இடத்துக்கு வந்துக்கோங்க. இந்த மொரிஸியஸ்ல தான காலம் பூரா வாழப்போறீங்க?”, என்று ப்ரனீஷ் ஷர்மிளாவிடம் கூறினான்... அவனிடம் ஆக்ரோஷமாகத் திரும்பிய ஷர்மிளா,
“ஏய்... யாரு நீ? ம்ம்? யாருடா நீ? உன் அண்ணனே எங்க வீட்டுல ஓசிச் சோறு. அவன் கூட பொறந்த நீ ஒரு பொம்பள பொறுக்கி.உனக்கும் உன் அண்ணனுக்கும் வேற வேலையே இல்லையா டா? எப்பப் பாரு.. அர்ஜூன்..அர்ஜூன்-னு எந்நேரமும் இவரு பின்னாடியே சுத்திட்டு.. ச்சே..!! புருஷன் பொண்டாட்டிய சந்தோஷமா இருக்கவிடவே மாட்டீங்களா..? இவன் அண்ணன் ஒரு தண்டச் சோறு... இவன் ஒரு பொம்பள பொறுக்கி.. சீ..!!” என்று வார்த்தைகளை கோபத்தில் கடித்து மென்றுத் துப்பிய ஷர்மிளாவை கோபத்தில், அர்ஜூன் அடிக்க...அவனை ப்ரனீஷ் தடுப்பதற்குள்.. அர்ஜூன் அடித்த வேகத்தில் ஷர்மிளா, பாலத்திலிருந்து கால் தவறி விழுந்தாள். கண்மூடி திறப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. பூமியிலிருந்து ஆயிரம் அடி உயரத்திலிருக்கும் அந்த கேமரால் நீர்வீழ்ச்சி பாலத்திலிருந்து கீழே விழுந்த ஷர்மிளா உயிர் பிழத்திருக்க வாய்ப்பு இல்லை. சற்று நேரம் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தவனாக...கீழே அமர்ந்தான் அர்ஜூன்..அதிர்ச்சியும் மனவலியும் ஒருசேர, தன் இமைகளை மூடாமல் அப்படியே உட்கார்ந்திருந்த அர்ஜூனை உலுக்கினான் ப்ரனீஷ். பேயடைந்ததைப் போல் அமர்ந்திருந்த அர்ஜூனை எழுப்பமுடியாமல் போகவே, பாலத்தின் மறுமுனையில் நின்றுக்கொண்டிருந்த பிரபாகரனை கையசத்து, அங்குவரும்படி ப்ரனீஷ் கூற, தனக்கு ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு ப்ரனீஷ் அருகில் வந்து நின்ற பிரபாகரன்,
“என்னடா ஆச்சு..?” என்றவன் கையில் குழந்தை அழுவது கூட உணராமல் பிரம்மை பிடித்தாற்போல் அமர்ந்திருக்கவும்..
“இவன் என்னடா பிள்ள அழுறது கூட தெரியாம இப்படி உக்கார்ந்திருக்கான்? ஆமா..தங்கச்சி எங்க டா?” என்று பிரபாகரன் ஷர்மிளாவைக் கேட்க.. ப்ரனீஷ் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான். சற்று நேரம் அதிர்ச்ச்கியில் இருந்தவன் அர்ஜூன் கையில் ப்ரீத்தி அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்தான் பிரபாகரன். எதுவும் கூறாமல், அர்ஜூன் –ஐ அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்குச் சென்றனர். போலீஸிடம் சரண்டர் ஆகியே தீருவேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்த அர்ஜூனிடம் ப்ரித்தியை காட்டி அமைதிப்படுத்தினான் பிரபாகரன்.
கேமரால் நீர்வீழ்ச்சி பாலத்தில் வழுக்கி விழுந்துவிட்டதாக கேட்பவர் அனைவரிடமும் கூறி சமாளித்தான் பிரபாகரன். ஷர்மிளாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக வந்த போலீஸிடம் பணம் கொடுத்து அது தற்கொலை என்று மாற்றினான். ஆனால் அர்ஜூனுக்கு அந்த வீட்டில் ஷர்மிளாவின் நினைவுகள் கொன்றுத் திண்றன. எனவே, அவன் மொரிஸியஸ் விட்டே செல்வதாக கூறி, அந்த வீட்டின் மொத்த பொறுப்பையும் பிரபாகரனிடம் கொடுத்துவிட்டு, 6 மாத குழந்தையான ப்ரீத்தியை தூக்கிகொண்டு சென்னை வந்து சேர்ந்தான்.
“அதுக்கு அப்பறம் 10 வருடம் கழித்து, இப்போ தான் மொரிஸியஸ் வந்தான்.” என்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தான் பிரபாகரன். இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ஷண்மதி, நிதானமாக பதில் உறைத்தாள்..
“எனக்கு என்னமோ அர்ஜூன் மேலே தப்பில்லனு தான் தோணுது பிரபா சார்.”
“எப்படி மா சொல்லுற? அர்ஜூனே சொல்லுறானே? அவன் அடிச்சதுனாலத் தான் ஷர்மிளா தங்கச்சி கீழ விழுந்தாங்கனு”
“எனக்கு ஏதோ அவர்னால இல்லனு தோணுது..”
“ஷண்மதி.. நீங்க அர்ஜூன் மேலே இருக்குற காதல்-ல சொல்லுறீங்க. நானும் என்ன சொல்லுறேனா, அர்ஜூன் கொலை பண்ணல. தெரியாம நடந்த சம்பவம். இத நினச்சு அவன் பொலம்பிட்டு இருக்கான். இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்கா இருந்தாலும் அவன் செஞ்ச இந்த தவறுக்கு தனக்கு ஏதாவது ஒரு ரூபத்துல தண்டன கிடைக்கும்னு நம்பிட்டு இருக்கான் அர்ஜூன். அதான் உங்கள் மேலே பிரியம் இருந்தாலும் அத வெளிய காட்டுனா, நீங்க அவன கல்யாணம் பண்ணிக்க நினைப்பீங்க. அப்ப்றம் அவனுக்கு அந்த தண்டன கிடச்சா நீங்க தனியா இருந்துடுவீங்கனு பயப்படுறான். அவனுக்கு அந்த பயம் போனா தான் உங்க மேலே அவனுக்கு இருக்குற லவ் தெரிய வரும்.” என்று கூறி விட்டு தன் தம்பியைப் பார்க்க விரைந்த பிரபாகரனைப் பார்த்துக்கொண்டு நின்றாள் ஷண்மதி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN