சங்கீதம்🎼2🎼

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சங்கீதம் 2


அந்தி மாலையில் கேட்கவேண்டிய
ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்


பாடல் : நீ பாதி நான் பாதி கண்ணே - சக்கரவாகம்


படம் : கேளடி கண்மணி


🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼


வான பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும்
வேடந்தாங்கல்


கான பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த
பருவ பாடல்


மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு
அர்த்தமிருக்கும் உன்னாலே


மெல்ல சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளி
தெளிக்கும் முன்னாலே


மெய்யானது உயிர் மெய்யாகவே தடை யேது


நீ பாதி நான் பாதி கண்ணே


அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


நீ பாதி நான் பாதி கண்ணே


அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே


நீ பாதி நான் பாதி கண்ணா


அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


சங்கீதம் 2


இதயம் படபடவென தாளம் தப்பி அடித்துக்கொண்டிருந்தது. அந்த வீட்டின் மூத்த பெண்மணியான சாரதாவிற்கு,


ஏனோ இன்று எல்லாம் ஏறுக்கு மாறாக நடந்துக் கொண்டிருக்க, வீட்டின் நடுகூடத்தில் கணவரிடமும் இளையமகனிடம் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தார்.


"முடிவா என்னதான் சொல்றான் உன் புள்ள கேட்டு சொல்லு சாரதா"


"அதான் சொல்லிட்டேனே மா.... இன்னும் சொல்லு சொல்லுன்னு சொன்னா? என்ன சொல்லனும்னு எதிர் பாக்குறாரு!?"


"டேய் சர்வேசா, ஏன்டா அவரை கோவப்படுத்துற? ஒரு எட்டு போயிட்டு தான் வாயேன் ராசா... அதுல உனக்கு என்ன ஆயிடப் போகுது நாளைக்கு தானே விசேஷம்"


"அதே தான் நானும் சொல்றேன்... நீங்களோ இல்ல அவரோ போயிட்டு வர்றதுல என்ன ஆயிடப் போகுது அவர் எவ்வளவு பெரிய ஆளு... அவர் நம்ம வீடு தேடி வந்து பத்திரிகை வைச்சிட்டு போன ஒரு மரியாதைக்காகவாது போய்ட்டு வரலாம் ல" என்றான் சர்வேசா என்று எல்லோராலும் அழைக்கப்படும் சர்வேஸ்வரன்.


​

"எங்க யாரை அனுப்பனும் எப்போ அனுப்பனும் யாருக்கு மரியாதை கொடுக்கனும்னு எனக்கு தெரியும் டி... நான் சொல்றதை மட்டும் செய்ய சொல்லு... ஏன் எதுக்குன்னு கேள்விய கேக்க வேண்டான்னு சொல்லி வை" என்றார் இளைய மகன் மேல் கொண்ட கடுப்புடன்.


"அப்போ நீங்களே பாத்துக்கோங்க... என்னால போகவே முடியாது மா... ஒன்னு நீங்க போங்க... இல்லை உங்க மூத்த மகனை அனுப்புங்க... எனக்கு தலைக்குமேல வேலை இருக்கு" என்று திட்டவட்டமாக கூறியவன் தனது சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்ல வண்டி சாவியை எடுத்தான்.


"என் பேச்சையும் மீறி இந்த மளிகை கடையை என்னைக்கு வைச்சானோ அன்னைக்கே தெரியும் டி... இவன் இனி உருப்பட மாட்டான்னு... என்ன எகத்தாளமா பேசிட்டு போறான் பாத்தியா..." என்றார் விஷ்வநாதன் கோவமாக


வண்டி சாவியை எடுத்தவனுக்கு தந்தையின் பேச்சு காதில் விழ "ஆமா நான் மளிகை கடை தான் வைச்சிருக்கேன்... இல்லன்னு எப்போ சொன்னேன்... நான் உங்களோட மதிப்பும் மரியாதையும் போக கூடாதுன்னு தான் பேசுறேன்". என்றான் கொஞ்சம் நக்கலாகவே


"பாத்தியா... பாத்தியா... அவன் எப்படி நக்கலா பேசுறான்னு" என்று கத்திக்கொண்டு இருந்தவருக்கு தண்ணீரை கொண்டு வந்து கொடுத்த சாரதா "அவன் போக மாட்டான்னு தான் தெரியுமே... ஏங்க அவனையே போக சொல்லி கட்டயப்படுத்துறிங்க..."


"பின்ன வேற யாரடி போக சொல்ற அந்த வீட்டுக்கு???" என்று மனைவியிடன் எரிந்து விழுந்தார் விஷ்வநாதன்.


"நீங்க... இல்லன்னா.... நான் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடட்டுமா" என்றார் பயந்துக்கொண்டே, இந்த வார்த்தைக்கு கணவரிடம் நிச்சயம் அறை விழும் என்று தெரிந்தே கூறியிருந்தார் சாரதா.


"அந்த வீட்டுக்கு.... நானும் நீயுமா.. என்னை என்ன டி நினைச்ச" என்று மனைவியை அறைய வந்தவர் மகன் இருப்பது கருத்தில் பட "யார் வீட்டுக்குடி என்னை போக சொல்ற" என்றார் கோபமாக


தந்தையின் கோபத்தையும் செயலையும் விசித்திரமாக பார்த்த சர்வேஸ்வரன் "அவங்க என்ன சிங்கமா?... புலியா... இவரையும் உங்களையும் முழுங்க அவங்களும் மனுஷங்க தானே போயிட்டு வந்தா என்ன கௌரவம் குறைஞ்சி போயிடுமா"... என்று தாயிடம் முனுமுனுக்க


"கொஞ்ச நேரம் பேசாம இருடா... எப்போவும் அவரை கோபப்படுத்திக் கிட்டே இருக்க... நானே சொல்லிட்டு என்ன நடக்குமோன்னு பயந்துக்கிட்டு இருக்கேன்... உங்க அப்பன் கோவம் தெரிந்த கதைதானே... அந்த வீட்டு ஆளுங்கள எப்போ மதிச்சி இருக்கார் இப்போ மதிப்பை கொடுக்க " என்று இளைய மகனை அடக்கிட


"ஏலேய் பெரியவனே... விக்னேஷ்வரா...." என்று விஷ்வநாதன் பெரிய மகனை அழைக்கவும் நிறுவனத்திற்கு கிளம்பி கொண்டிருந்தவன் "என்னப்பா" என்று அவர் முன்னால் வந்து நின்றான்.


"வந்துட்டான் அவர் என்ன சொன்னாலும் சரிப்பா சரிப்பான்னு தலைய ஆட்ட... எப்படிம்மா இந்த ஆள் கூட இத்தனை வருசமா குப்பை கொட்டுன... என்னால ஒரு மணி நேரம் சேர்ந்து இருக்க முடியல... சக மனுஷனை மனுஷனா நடத்த தெரியாதவர்" என்று கடுகடுத்தவன் தாயின் முறைப்பில்


"என்னமோ பண்ணி தொலைங்க... நாளைக்கு யாரவது ஒருத்தவங்க போற வழிய பாருங்க..." என்று தாயிடம் கூறியவன் பைக்கை எடுக்க வெளியே கிளம்பினான்.


தந்தை மகன் வாக்குவாதத்தில் சாப்பிடாமல் போகும் மகனிடம் "சர்வேசா ஒரு வாய் சாப்பிட்டு போப்பா" என்று சாரதா அழைக்க


"ஆல்ரெடி லேட் மா நான் வெளியே பாத்துக்குறேன்" என்று கூறியபடியே வெளியேறியவன் தனது இரு சக்கர வாகனத்தை உயிர்பித்து இருந்தான்.


விஷ்வநாதன் சாரதா தம்பதியருக்கு இரு மகன்கள் முத்தவன் விக்னேஷ்வரன். தந்தையின் தொழிலான பைனான்ஸ் கம்பெனியை நடத்தி வருகிறான். நஞ்சை புஞ்சை என்று அதுவும் ஒரு பக்கம் வருவாயை ஈட்டி தருகிறது.






​

விக்னேஷ்வரன் அப்படியே தந்தையின் குணத்தோடு பிறந்தவன் ரேகாவிற்கும் அவனுக்கும் திருமணமாகி ஒரு வருடம் முடிய ரேகா, தற்போது ஐந்து மாத கர்பவதி.


இளையவன் சர்வேஸ்வரன் சொந்தமாக இரண்டடுக்கு மாடி கொண்ட சூப்பர் மார்ககெட்டை நடத்தி வருகிறான். மளிகை பொருட்களில் இருந்து பரிசு பொருட்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் படி இருக்கும் ஸ்டோர். அதை தான் கோவத்தில் மளிகை கடை என்று திட்டிக்கொண்டு இருந்தார் விஷ்வநாதன்.


தந்தைக்கும் மகனுக்கும் ஏழாம் பொருத்தம் அவர் வடக்கு என்றால் இவன் தெற்கு எதிலும் ஒத்துப் போக மாட்டார்கள்.


தந்தையை போல் அல்லாமல் தாயின் குணத்தை கொண்டு பிறந்தவன் ஒரளவு மனிதரை வைத்து பார்க்கும் பண்பை கொண்டவன். அதனாலேயே அவர் செய்யும் சில வேலைகள் அவனுக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் கொடுக்க சாதரணமாக பேச ஆரம்பித்தாலே அது வாக்குவதத்தில் தான் சென்று முடியும்.


இவர்கள் சம்பாஷனைகள் நாளை நடக்கவிருக்கும் நடராஜன் வீட்டு கிரபிரவேசத்திற்கு யாரை அனுப்புவது என்றுதான் அதற்கு தான் இத்தனை போராட்டாம்.


விஷ்வநாதனுக்கு நடராஜன் குடும்பம் என்றாலே அறவே ஆகாது... ஊரே மெச்சும்படி அவருடைய இருப்பிள்ளைகள் உயர் பதவியில் இருந்தாலும் இவருக்கு அவர்கள் என்றால் கிள்ளுக் கீரையை பார்ப்பது போலத்தான் பார்ப்பார். மனிதரிடம் அத்தனை ஒதுக்கம் இருக்கும்.


இத்தனைக்கும் நடராஜன் விஷ்வநாதன் தாயாருக்கு உடன் பிறந்த தம்பி, தாய் மாமன் முறை இருந்தும் பரம விரோதியை பார்ப்பது போல பார்த்துக்கொண்டு இருக்கிறார்.


அக்காவின் வீடு என்பதால் அவர் இல்லாமல் போனாலும் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை குறைக்கா வண்ணம் தானே நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்திருந்தார் நடராஜன்.


இரண்டு தலைமுறைக்கு முன்னால் நடந்த நடராஜன் திருமணத்தால் ஏற்பட்ட மனகசப்பும் ஒதுக்கமும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது அவர்களிடம். இருந்தும் அதை கண்டு கொள்ளாதவர் தன் முறையை மட்டும் செய்து விட்டு வந்தார்.


"விக்னேஷ்வரா நாளைக்கு உனக்கு முக்கியமான வேலை ஏதாவது இருக்கா" என்றார் விஷ்வநாதன் தன் பெரிய மகனிடம்


"மதியத்துக்கு மேல இருக்குப்பா ஆடிட்டரை கூப்பிட்டு இருக்கேன் கணக்கை பார்க்க" என்றதும்


சிறிது நேரம் யோசித்தவர் "மதியத்துக்கு மேலதான் பாத்துக்கலாம்... காலைல அந்த வீட்டு கிரகபிரவேசத்துக்கு போயிட்டு நம்ம பெயர் இருக்கா மாதிரி மொய் எழுதிட்டு வந்துடு" என்றார் வேண்டா வெறுப்பாக







"​

அப்பா நானா" என்று அதிர்ந்தான் விக்னேஷ்வரன்.


"வேற யாரு போவா.... சின்னவனை கேட்டா கதையா அளந்துட்டு போறான். நீயாவது தலையை மட்டும் காமிச்சிட்டு வந்துடு... இல்ல இந்த சொந்தகாரனுங்க தொல்லை தாங்க முடியாது அவனுங்க இவங்கள பத்தி பேசியே என் பிபிய ஏத்தி விட்டுடுவாங்க" என்றார் யோசனையாக


விக்னேஷின் முகம் பிடித்தமில்லை என்பதை வெளிப்படையாக பிரதிபலிக்க தந்தையின் சொல்லை மீறிட முடியாமல் சரி என்று தலையசைத்து வைத்தான்.


கணவரின் முகமும் விக்னேஷின் முகமும் பார்த்த சாரதாவிற்கு இதுக்கு எதுவுமே செய்யாம விட்டுருக்கலாம் அவ்வளவு பெரியவர் வந்து சொன்னதுக்காவது இவர் போய் இருந்தால் என்ன?


சர்வேசனாவது அவர்களை கண்டால் இன்முகத்துடன் பேசுவான் பழகுவான் இவனோ தந்தையே போலவே முகம் கொடுத்து பேசாது உர்ரென்று இருப்பவன். இப்போவே இப்படி முகத்தை வைச்சிருக்குறான் அங்க போய் இவனை அனுப்புகிறாறே என்று தான் தோன்றியது.


அதே எண்ணத்துடன் நின்றிருந்தவருக்கு "என்னடி மரம் மாதிரி நிக்குற... போ போய் வேலை இருந்தா பார் போ..." என்று அதட்டலாக கணவரின் குரல் கேட்கவும் தன்னிலைக்கு வந்தவர் சட்டென உள் அறைக்குள் நுழைந்தார்.


மாமியரின் முகத்தில் இருந்த சங்கடத்தை பார்த்த ரேகாவிற்கு மனது கேட்காமல் "என்ன அத்தை ஒரு ஃபங்கஷனுக்கு போகவா இவ்வளவு கலேபரம்... சின்னவரு கூட போக மாட்டேன்னு சொல்லிட்டாரு" என்றாள் அங்கு நடப்பது விளங்காமல்


​

"அவன் காரணமா தான் சொன்னான் ரேகா... அப்படியாவது அந்த பெரியவருக்கு மரியாதை கொடுப்பாருன்னு பார்த்தா இப்படி பண்ணிட்டாரு" என்றார் சாரதா மனத்தாங்கலாக


"என்ன அத்த விஷயம் பெருசா இருக்கும் போல?" மாமியரின் கலக்கத்தில் மருமகள் கேட்டுவிட்டாள்.


"விஷயம் பெருசுதான் ரேகா... ஆனா இப்போ இத பெருசாக்குறது உன் மாமனார் தான்... எப்பவோ நடந்து முடிஞ்சதை இன்னும் மனசுல வைச்சிக்கிட்டு அவங்கள ஒதுக்கி வைக்குறது எப்படி சரியாகும்... இந்த காலத்துல போய் இதெல்லாம் பார்த்துக்கிட்டு" என்றார் ஆற்றமையாக


"அத்தை என்ன சொல்றிங்க?" என்றாள் ரேகா புரியாமல்


"இங்க பத்திரிக்கை வைச்சாரே நடராஜன் அய்யா அவரு என் மாமியாரோட சொந்த தம்பி... அவர் சென்னையில் வேலை செய்யும் போது கூட வேலை பார்க்கும் ஒரு தெலுங்குகார பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல வந்தது இந்த பிரச்சனை...


முதல் முதலா இந்த வீட்டுல நடந்த விசேஷம் உங்க கல்யாணம்... அதுக்கு கூட அவருக்கு பத்திரிக்கை வைக்கல உன் மாமனாரு... அத்தனை ஜம்பம்... என்று எரிச்சலாக கூறினார் சாரதா.


"ஓ... என்றவள் அதுல என்னத்தை இருக்கு அந்த காலத்துலேயே காதலிச்சி கல்யாணம் பண்ணி இருக்காங்க பரவாயில்லையே... அதுக்கு ஏன் மாமா கோவப்படுறாரு" என்றாள் மருமகள் நடராஜனின் செயலை மெச்சியபடி


"அப்படி இருந்தாலாவது பரவாயில்லையே ரேகா... இவங்களை கொஞ்சமாச்சும் சமாளிச்சி இருக்கலாம்... நடராஜன் அய்யா ஒரு படி மேலே போயி கல்யாணம் ஆகி கணவனை இழந்த பொண்ணை இல்ல கல்யணாம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்காரு... அதுல என் மாமியாருக்கும் மாமனாருக்கும் ஏக வருத்தம் தம்பியே இல்லன்னு தலை முழுகிட்டாங்க... அவங்க காலத்துலேயே பேச்சு இல்லை ஊருலையும் ஜனக்கட்டு அப்படியே அவங்களை ஒதுக்கிடுச்சி... "


"ஒரு நல்லது கெட்டதுல அவங்களையும் சேத்துக்கல... இவங்களும் கலந்துக்கல... மக்க மனுஷால் இல்லாம போனா என்ன சுத்தி இருக்க நட்பு போதும்னு இருந்துட்டாங்க... எப்படியோ இரண்டு பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி நல்லா தான இருக்காங்க... இப்போ நம்ம சொந்தத்துலயே நிறைய பேரு அவங்க கூட பேச்சு வார்த்தை வச்சி இருக்காங்க..."


"அவங்க பிள்ளை அரவிந்துக்கு உன் மாமனோரோட சித்தப்பா பேத்தியை தான் கல்யாணம் பண்ணி வைச்சி இருக்காங்க ஆனா இவரு மட்டும் தான் பழைசையே கட்டிக்கிட்டு மாறாடிக்ககறாரு" என்றார் கொஞ்சம் கோபமாகவே


"அத்தை, நீங்க பேசி இருக்கிங்களா அவங்கிட்ட" என்றாள் ரேகா ஆர்வமிகுதியால்


இல்ல ரேகா நான் பேசியது இல்லை ஆனா பார்த்து இருக்கேன்... நல்ல அழகா கலரா இருப்பாங்க அவரோட சம்சாரம்.... அவங்க எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகிட்டது இல்ல... ஆனா அவங்க மகன் மருமக வருவாங்க எல்லார்கிட்டயும் நல்ல மாதிரியா தான் பேசுவாங்க" என்றார் சாரதா.


ரேகாவும் சரி என்பதாய் தலை அசைத்து "எப்படியாவது அவங்கள பார்க்கனும்" என்று மனதில் நினைத்துக்கொண்டவள் "எனக்கும் அவங்கள பார்க்க ஆர்வமா இருக்கு" என்றாள் மாமியாரிடம்


"அதுக்கும் நாள் கூடி வரும் ரேகா பார்க்கலாம்" என்றவர் சமையல் வேலையில் ஈடுபட்டார்.


💐💐💐💐💐


சூப்பர் மாக்கெட்டிற்கு சென்றவனுக்கு அதன் பிறகு வேலைகள் வரிசை கட்டி நின்றிருந்தன


கணேசா ஸ்டாக்லாம் எவ்வளவு இருக்கு என்று சூப்பர்வைசரிடம் கேட்டுக்கொண்டு தனது சூப்பர் மார்க்கெட்டை சுற்றி வந்தான் சர்வேஷ்வரன்.


மேல் தளத்தில் 3 நபர்கள் கீழ் தளத்தில் 3 நபர்கள் ஒரு சூப்பர்வைசர் என்று தனித்தனியாக அந்தந்த பகுதிகளுக்கு ஆட்களை நியமித்திருந்தான்.


டேய் என்னடா அடுக்குறிங்க... இங்க பாரு இது எல்லாம் கீழ விழுந்து கிடக்கு..." என்று கூறிக்கொண்டு இருந்தவன் தானே எல்லாவற்றையும் சரிசெய்ய ஆரம்பிக்கவும் கடையில் பணிபுரியும் ஒருவர் வந்து "அண்ணா நான் எடுத்து வைக்கிறேன்" என்று அருகில் வந்து அதனை செய்ய ஆரம்பித்து இருந்தான்.


"நீ இருக்கிற மத்த வேலைய பாரு கணேசா இங்க நான் பாத்துக்குறேன்..." என்று அவன் கூறிட


கடையில் படி செய்யும் வேலை பணியாள் தயங்கி நிற்கவும் "இங்க பில்லை போட்டு பணம் வாங்குறது மட்டும் என் வேலை இல்லை... இதுவும் தான்... நீ போ" என்று கூறி அனுப்பியவன் ஒவ்வொரு பொருளையும் அதனிடத்தில் வைத்து கொண்டு இருந்தான்.


ஊரின் மத்திய பகுதியில் அமைந்த இரண்டு மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தவன் தனது சொந்த முயற்சியில் இந்த எஸ் எஸ் சூப்பர் மார்க்கெடை ஒரு வருடமாக நடத்தி வருகிறான். சொல்லும்படியளவு லாபம் இருக்க இன்னும் கடையை விஸ்தாரமாக ஆக்க சில முயற்சிகளையும் மேற்கொண்டும் இருக்கிறான்.


சிதறி இருந்த பருப்பு வகைகளை ரேக்குகளில் அடுக்கியவன் மேல் தளத்திற்கு செல்ல அவனது செல் போன் தன் இருப்பை அவனுக்கு உணர்த்தியது. எடுத்து பார்க்க நண்பன் முத்து தான் அழைத்து இருந்தான்.


"சொல்லு மாப்ள"


"எங்க இருக்க மச்சி"


"காலங்காத்தால எங்கடா இருப்பேன்... கடையில தான்" அவன் குரலில் அப்பட்டமான எரிச்சல்


"டேய் ஏன்டா காலையிலேயே கடிக்கிற .. எங்க இருக்கன்னு தானே கேட்டேன் அதுக்கு ஏன் வள்ளுன்னு விழற" என்றான் அவனும் நக்கல் கலந்த குரலில்.


"பச் ஒன்னுமில்லடா நீ சொல்லு எதுக்கு கேட்ட"


அது வந்து என்னு தயங்கியவன் திடத்தை வரவழைத்துக் கொண்டு "கீர்த்தி அம்மாவுக்கு கொஞ்சம் முடியல... ஆஸ்பிட்டல சேர்த்து இருக்காங்க... இப்போ நான் மட்டும் தனியா போனா பேச்சி வேற திசைக்கு போகும்... நீ வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்" என்று அவன் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது கடைக்குள் பைரவியும் அவளது தம்பி அர்ஜூனும் நுழைந்திருந்தனர்.


"இங்க இருக்குமா கா"


"அதெல்லாம் இருக்கும் வாடா.. கடையை பாரு a to z கிடைக்கும்னு போட்டு தானே வைச்சி இருக்காங்க" என்றாள் பைரவி


"இங்க எங்க இருக்கும்" என்று பேசிக்கொண்டே இருவரும் ஒவ்வொரு இடமாக கண்களை சுழற்றி தேடினர்.


முத்துவிடம் பேசிக்கொண்டே அவர்களை நோட்டம் விட்ட சர்வேஷ்வரன் சரி ஒரு அரை மணி நேரத்துல வரேன் எந்த ஆஸ்பிட்டல் என்றான் அவர்களை பார்த்துக்கொண்டே.


அதற்குள் இருவரும் அவனை சமிபித்து இருக்க "எக்கீயூஸ் மீ இங்க டாய்ஸ் செக்ஷன் எங்க இருக்கு" என்றனர் இருவரும் ஒன்றாக


இருவரும் ஒரே போல் பேச "டேய் நான் தான் கேக்குறேன் இல்ல.. நீ என்னடா" என்று அவர்களுக்குள் சண்டை நடந்தது.


"பச் உன் கூட ஒரே தொல்லை... போ போ நீயே கேளு" என்ற அர்ஜூன் வேறு சில பொருட்களை பார்வையிட்டு கொண்டு இருந்தான்.


இவர்களின் சண்டையின் நடுவே
"ஒரு நிமிஷம்" என்று போனில் கூறியவன் "மேல இருக்கு" என்று அவர்களுக்கு மேல்தளத்தை காட்டியவனின் கண்கள் அவளை மட்டுமே மொய்த்த வண்ணம் இருக்க இதை கவனியாதவர்கள் மேல்தளத்தை நோக்கி சென்றிருந்தனர்.


இவ எப்போ ஊர்ல இருந்து வந்தா என்று அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தவனுக்கு நண்பன் அழைத்தது செவிகளை தீண்டவே இல்லை


"டேய் ..."


"....."


"டேய் சர்வேசா.... டேய்... டேய் ஈசா" என்று வேறு வேறு விதமாக நண்பனின் பெயரை அழைத்தவன் "டேய் எப்பா நின்னுகிட்டே தூங்கறியா டா" என்றான் முத்து சற்று உரத்த குரலில்.


சட்டென காதிற்கு வெகு அருகில் நண்பனின் காட்டு கத்தலை கேட்டவன் நினைவு வந்தவனாக "என்னடா? எந்த ஆஸ்பிட்டலுக்கு வரனும் டா?" என்றான் ஒன்றும் நடவாததை போல்.


"என்னடா இவ்வளவு நேரம் எந்த லோகத்துல இருந்த?" என்றான் முத்து கேலி நிறைத்த குரலில்.


"ம் நரகத்துல கூட வரியா" என்றவனது பார்வை மீண்டும் அவர்கள் சென்ற திசையை தொட்டு மீண்டது.


தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன் "ஒரு அரை மணி நேரம் வைட் பண்ணுடா... இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்" என்று போனை அனைத்து பாக்கெட்டில் வைத்தவன் தற்காலிகமாக அவள் நினைவுகளை ஒதுக்கி வைத்து நண்பனை காண சென்றான். இருந்தும் அவள் கண்களின் தாக்கம் அவனின் உயிர் வரை இனித்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN