மூங்கில் நிலா -7

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதற்கும் மேல் அந்த டைரியை புரட்ட அவளுக்கு மனமில்லை. அது எப்படி அவன் கைக்கு கிடைத்தது என்று கூட வனமோகினி அறியாள். நடந்த அமளியில் அவளுக்கு பசிக்க கூட இல்லை.அதற்குள் இரவாகிவிட்டிருந்தது. மெல்ல மெல்ல குளிர்க் காற்றும் அந்த அறையைஆக்கிரமித்திருந்தது.
எழுந்து சென்று உடையை மாற்றிக் கொண்டவள் அப்படியே கட்டிலில் சுருங்கி படுத்து விட்டாள். காலையில் நடந்த அதிர்ச்சி கல்யாணம், களைப்பு, கூடவே எதுவும் சாப்பிடாமலே வனமோகினி உறங்கிப் போனாள்.

நள்ளிரவில் அழையா விருந்தாளியாய் அந்த கனவு.

"வசி வசி, என்னை விட்டுட் டு போயிடாதே டா, வனிக்கு பயமா இருக்கு வசி, இங்கயே இரு வசி ... வசி.. " வன மோகினி உறக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

அச்சமயம் தண்ணீர் குடிக்க அவள் அறையை கடந்து சென்ற வசியின் காதுகளில் அவள் குரல் தெளிவாகவே விழுந்தது. அவள் அறை கதவும் தாளிடப் படவில்லை. கதவை தள்ளிக் கொண்டு நுழைந்தவன் வன மோகினி உறக்கத்திலே உளறிக் கொண்டு அழுவது கண்டு பதறி விட்டான்.
விக்கி விக்கி வனி அழுவதும், மூச்சிறைப்பதும் அவனை என்னவோ செய்தது.

அவளை வாரி தன்னோடு அணைத்துக் கொண்டவனுக்கு அவளுக்கு ஏன் அந்த நிலை என்று புரியவில்லை.
"வேணி வேணிமா நான் வசி, உன்னோட வசி, உன்னை விட்டு எங்கேயும் நான் போகலடி, உன்கூடதானே இருக்கேன், என்னை பாருடி" வசி அவள் கன்னத்தை தட்டியும் அவள் எழுந்திரிக்க வில்லை. அவன் நெஞ்சில் சாய்ந்தவள் அவனை அணைத்த வண்ணமே உறங்கிப் போனாள்.

வெண்ணெய் குவியலாய் தன் மேல் படர்ந்திருப்பவளை வசி எவ்வளவு நேரம் அப்படி அணைத்திருந்தான் என்று கூட தெரியவில்லை.அதற்கு மேல் தாய் அணைப்பில் உறங்கும் குழந்தை போல வனமோகினி நிம்மதியாய் உறங்கி விட்டாள்.மனதில் பல குழப்ப முடிச்சுகள் அவனுள் விழுந்திருந்தன.

வன மோகினியின் இந்த நிலை அவன் அறியாதது.வெள்ளி காசுகளை இறைத்து விட்டது போல பேசுபவள் எதனால் இப்படி ஆனாள், எதற்கு தன் பெயரை பைத்தியம் போல தூக்கத்தில் உளறிக் கொண்டு அழுகின்றாள், விடை ஏதும் அறியாமல் அவள் ஆழ்ந்து உறங்கும் நிலையை உறுதிப் படுத்தி விட்டே அவ்விடம் விட்டு அகன்றான்.

அதிகாலை சூரியோதயத்தில் வனமோகினி கண் விழித்தாள். வழக்கத்திற்கு மாறாக மனதில் சொல்லெனா நிம்மதி பரவுவதை அவளால் உணரமுடிந்தது. இரவு என்ன நேர்ந்தது என்பது கூட அவளுக்கு நினைவில் இல்லை. பசி வேறு வயிற்றை கிள்ளியது. சுற்றி முற்றி பார்த்தாள். வசி வீடு அவளுக்கு பரிச்சயம்தான். ஆனால் மேல் அறைகள் வரை சென்றதில்லை. விசாலமான பெரிய அறை. ஜன்னலை திறந்தால் குளிர் காற்று அவள் கூர் நாசியை தடவி சென்றது. உடன் அட்டாச் பாத்ரூம் இணைதிருக்க பார்க்கவே அழகாய் இருந்தது. இனி இதுதான் உன் வாசஸ்தலம்னு புத்தி உரைக்க, வனி சுதாகரித்து எழுந்தாள்.

எதுவாய் இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் பசிக்கு எதையாவது அடைத்தால் தேவலை என்பது போல் , விறு விறுவென்று குளித்தாள். ஷவரில் கொட்டும் வெந்நீர் உடம்பிற்கும் மனதிற்கும் இதம் தர, நிதானமாய் குளித்து விட்டு வந்தாள்.
தலை முடியை தளர பின்னலிட்டு, நெற்றிக்கு ஸ்டிக்கர் பொட்டை ஒற்றியவள், கீழே இறங்கினாள்.

வனமோகினி யின் பலம் பலவீனம் வசி மட்டுமே. பிற விஷயங்களில் அவள் பிறவி குணம் மாறவில்லை. வாழும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு பொக்கிஷம் போன்றது. அணு அணுவாய் ரசித்து வாழ கற்றுக் கொண்டவள் இவன் தாலி கட்டி விட்டானென்று மூலையில் முடங்கி கிடக்க முடியுமா? முடியாதது தான்.

சமையலறையில் சமையல்காரம்மா செல்லம்மா சுட சுட காப்பி யும் தோசையும் தொட்டுக்க வாகாய் தேங்காய் சட்னி செய்து வைத்திருந்தார்.
நடந்தது ஓரளவு அவருக்கு தெரியும் என்றாலும் தெளிவான முகத்துடன் வனியை அவர் எதிர்ப் பார்க்கலதான்.
"என்ன ஆயா அப்படி பாக்கறீங்க, வனிமாக்கு பசிக்குது ஆயா, யாருமே எனக்கு நேத்து சாப்பாடு தரல, இந்த தடியன் அதுக் குள்ள என்னை இங்க இழுத்துட்டு வந்திட்டான், ரொம்ப பசிக்குது ஆயா, தோசை ஊத்தி தர்ரீங்களா? குழந்தைப் போல கேட்டவளை செல்லம்மா வாஞ்சையாய் பார்த்தார்.

"தோ கண்ணு ஊத்தறேன்"

"ஆயா நாலு தோசை, நெய் விட்டு நல்ல முறுகலாய், இந்த குளிருக்கு சாப்பிட அப்படி தான் இருக்கும் "
வனமோகினி கண் சிமிட்டினாள்.
ஆயாவுக்கே ஆச்சர்யம் என்றால் , அவளை மாடியிலிருந்து கண்காணித்தவன் அசந்தே போய் விட்டான்.

உருகி நேசித்தவளைத்தான் அவன் கட்டியிருக்கிறான். ஆனால் அவள் சம்மதம் இல்லாமல் தானே அனைத்தும் நடந்தது.
இப்பொழுது எதுவும் நடவாதது போல நடந்து கொள்ளும் வனியின் போக்கு அவனுக்கு ஆச்சர்யமாய் போய் விட்டது. பிறகே கையிலிருக்கும் தட்டை கவனித்தான்.

தலையில் இடியே விழுந்தாலும் வயிற்றுக்கு எதையாவது அடைத்துவிட்டு தான் வனி கவனமெல்லாம் கவலை பக்கம் செல்லும்.
இந்த பக்கி திருந்தவே இல்லையா? தலையில் அடித்துக் கொண்டான். குறைந்த பட்சம் அவள் கண்களில் கண்ணீரைக் கண்டிருந்தாலும் அவன் மனசு ஆறியிருக்கும்.

எதுவுமே நடவாதது போல தோசையை வாய்க்குள் அடைக்கும் வனியை பார்க்கும் பொழுது பள்ளிப் பருவத்தில் அவளைப் பார்ப்பது போலவே இருந்தது. வனி பசி தாங்க மாட்டாள். வகுப்பில் கூட வானதி எதையாவது தின்பதற்கு கொடுத்துக் கொண்டே இருப்பாள். மனதிற்குள் சிரித்துக் கொண்டாலும், வசி முகத்தை அழுத்தமாய் வைத்துக் கொண்டே கீழிறங்கி வந்தான்.

அவனை கண்டதும் காணாதது போல, வனி தோசையை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள். வசியின் அரவம் கேட்டு செல்லமா அவனுக்கும் தோசை பரிமாறினார். அவனுக்கு அவளை வம்பிழுக்க வேண்டும் போல இருந்தது.

"ஆயா அதென்ன அவளுக்கு மட்டும் ஸ்பெஷல் தோசை, எனக்கு மட்டும் சாதா தோசை, எனக்கும் நெய் தோசைதான் வேணும், முறுகலாய்"வனி கூறுவது போல அவனும் கூறினான்.

வனிக்கு பற்றிக் கொண்டு வந்தது."கடன்காரன் கடன்காரன், நிம்மதியா ஒரு தோசையை சாப்பிட விட மாட்டேங்கிறானே, எந்த நேரத்தில் பொறந்து தொலைச்சிதோ, வானரம் நம்ம உயிர வாங்குதே " மனதிற்குள் அவனை அர்ச்சித்தாலும், மகராசி தோசையை விட்டாளில்லை. நமக்கு சோறு தானே முக்கியம்.

அவனை முறைத்தவாறே நான்கு தோசைகளையும் காலி செய்து விட்டு எழுந்தாள். வசிக்கு அவள் மூக்கு சிவப்பதை கண்டே ஆனந்தமாய் இருந்தது. அவனோடு பேசக் கூட வனி விரும்பவில்லை. முறுக்கிக் கொண்டு தன் அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.
வனி பள்ளியிலிருந்து அப்படிதான், வசி சீண்டிவிட்டால், வனி கோவித்துக் கொண்டு தனியாய் சென்று விடுவாள். வசியும் எதுவும் அதற்கு மேல் பேசாமல் தன் பேக்ட்ரிக்கு சென்று விட்டான்.

தனியே வனியால் எவ்வளவு நேரம் அந்த பெரிய பங்களாவில் இருக்க முடியும்? பூவேலிக்கு போனால் மனசு கொஞ்சம் தெளிவு படும்னு தோணிற்று. செல்லம் மாவிடம் சொல்லிக்கொண்டு தன் இடத்திற்கு சென்றாள். அவள் காரையும் அவள் தகப்பனார் கொண்டு வந்து விட்டிருந்தார். பூவேலி இன்று திறக்க வில்லை. திறக்கும் மன நிலையில் வனியும் இல்லை. கால்கள் தானாகவே மூங்கில் தோட்டம் நோக்கி நடந்தது. அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தவள், குளத்தை வெறித்து நோக்கினாள்.

இளங்காலை காற்று மூங்கில் இலைகளை உரசி வினோத ஒலி எழுப்பியது.காற்றில் கலந்து வந்த தைல மர வாசனையும் வனமோகினி நாசியில் இதமாய் ஏறியது.இயற்கையை போல அவளை உணர்ந்தவர்கள் யாரும் இல்லையே. இந்த இயற்கையிடம் தஞ்சம் புக காரணமாய் இருந்தவனையே காலம் முழுக்க தன்னோடு வாழ விதி இணைத்து விட்டதே.வன மோகினிக்கு ஆயாசமாய் இருந்தது.

நடந்ததையோ நடக்கப் போவதையே வனியால் மாற்ற இயலாது. ஆனால் இன்று என்பது அவளுடைய நாள் அல்லவா? அதை அவளுக்கு பிடித்த மாதிரி அமைத்துக் கொள்வது அவள் கையில் தானே இருக்கு. காலம் கற்று கொடுத்த பாடம் அப்படி. எவ்வளவு நேரம்தான் குளத்தை வெறித்து பார்ப்பது . வனி சிந்தனை தெளிவாயிற்று. இன்று கடை திறப்பு இல்லை என்றாலும், நாளைக்கான வேலைகளையும் திட்டமிட்டாள்.

வனிக்கு மூலிகை செடிகளின் வாசம் மிகவும் பிடிக்கும். லாவண்டர், மரிக் கொழுந்து, ரோஸ்மேரினு மூலிகைகளைக் கூட ரோஜா, சாமந்தி பூக்களோடு இணைத்து அழகான பொக்கே செய்து விடுவாள். அதன் நறுமணம் நாசிக்கு இனிமையாகவும், மனதிற்கு உற்சாகம் தரும் வகையிலும் இருக்கும். மதியம் கடையை சாத்தும் பொழுது, தனக்கும் ஒரு மூலிகை பொக்கேவை கட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்றாள். துளி லாவண்டர் ஆயிலை சூடுநீரில் கலந்து குளித்தால் மனசு லேசாகி விடுமே.

தனக்கான வாசனைத் திரவியங்களையும் அள்ளிக் கொண்டாள். அவள் கடையை ஒட்டியே வனியின் சிறு குடிலும் இருப்பதால், வனி தோட்ட வேலைக்கு அப்புறம் அங்கேயே குளித்துக் கொள்வாள். அதனாலே இந்த குளியல் வாசனை திரவியங்களும் அங்கே இருக்கும்.
மதியம் லஞ்ச்சிற்கு வீட்டை அடைந்தவள், தன் அறையை தனக்கேற்றாற் போல மாற்றிக் கொண்டாள்.

பால்கனியோடு கூடிய விஸ்தாரமான அறை அது. தன் பொருட்கள் எல்லாமே தன் தாயிடம் சொல்லி அனுப்பி வைக்க சொல்லியிருந்தாள்.
இல்லாவிட்டால் வனியால் அந்த அறையில் எப்படி உறங்க முடியும்? கொசுறாய் இவன் கனவுகள் வேறு. அறையின் ஒரு மூலையை ஒதுக்கி தன்னோட மெடிடேஷன் இடத்தை உருவாக்கிக் கொண்டாள். கையோடு கொண்டு வந்த மூலிகை மலர்களையும் அழகாய் பூக்குவளையில் அடுக்கி அறையில் இருந்த மேஜையில் வைத்தாள்.

இப்பொழுதுதான் அது தன் அறை போல அவளுக்கு தோன்றியது. அலுப்பு தீர லாவண்டர் கலந்த நீரில் குளித்தவள், செல்லம்மா சமையலையும் ஒரு கை பார்த்து விட்டு உறங்கினாள். மதியம் உணவிற்கு கூட வசி வரவில்லை. அதை பற்றி அவளுக்கென்ன வந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN