என்னடி மாயாவி நீ: 4

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்: 04

ஆதிகாவிற்கும் வர்ஷித்திற்கும் திருமணம் நடந்து முடிந்தது. இருவருக்குமே திருமணத்தில் ஈடுபாடில்லை. குடும்ப சூழ்நிலை வேண்டி இருவரது மனமும் இணைந்தது திருமண பந்தத்தில்... திருமணம் என்றாலே வாழ்வில் மறக்க நேரிடாத ஒரு நிகழ்வு. இதை அழகாக்குவதும் உயிரற்று போகவைப்பதும் புதுமண தம்பதிகளின் கைகளில் தான் உள்ளன. ஆனால், இங்கு இருவரது மூளையிலும் வெவ்வேறு எண்ணங்கள், மனம் முழுவதும் குழப்பங்கள், கண்களில் கரையை தாண்ட துடிக்கும் கண்ணீர் துளிகள்... இவற்றை உள்ளுக்குள் மறைத்து வெளியில் சிரிப்பை உதிர்ப்பதில் மட்டுமே ஒற்றுமை தெரிந்தது இருவரிடத்தில்.

ஆதிகா வீட்டில் பெற்றோர் இருவரும் ஏற்கனவே, வர்ஷித்தை தேர்வு செய்து வைத்திருந்தனர். ஜாதகம் பொருத்தமெல்லாம் நன்றாக அமைந்து போக, மாப்பிள்ளையும் வேலையிலிருந்து நன்றாக சம்பாதிப்பதாலும் தன் மகளை இவருக்கு திருமணம் செய்து கொடுத்தால் கண் கலங்காமல் காலம் கடைசி வரைக்கும் பார்த்து கொள்வார் என நம்பிக்கை பிறந்தது வர்ஷித் மீது. பிறகு, வர்ஷித்தை போட்டோவில் மட்டுமே பார்த்து உறுதி செய்தனர் ஆதிகாவின் பெற்றோர் அவளது காதல் மனம் அறியாமலே.

இவளிடம் சொன்னால் நிராகரித்து விடுவாள் என நினைத்த பெற்றோர், ஆதிகா சொன்னது போல, அவளின் நண்பன் வருகை தரும் பொழுதில், அவனிடம் பேசி, இந்த கல்யாணத்திற்கு ஆதிகாவை சம்மதிக்க வைக்க சொல்லுமாறு கேட்கலாம் என முடிவெடுத்தனர்.

அந்நேரம், எல்லோரின் கனவில் மண்ணை வாரிப்போட்டது போல, அனைவரின் திட்டமும் பொய்த்து நிற்க செய்தது அவனின் இறப்பு. இதற்கு காரணம் விதி என்றே, எல்லாரும் அதையே குற்றம் சாடினார். யாருக்குதெரியும் இது கடவுளின் கணக்கு என்று.

விஷ்ணுவின் நினைப்பிலும் இழப்பிலும் மனம் நொந்து கிடந்த நேரம் அது. மனதை வெளிக்காட்ட முடியாமலும் தன்னை தேற்ற முடியாமலும் கடல் அலையில் சிக்கியது போல அல்லாடிக்கொண்டிருந்தாள் ஆதிகா.

அந்நேரத்தில், அவளின் தலையில் இடியை இறக்கி வைத்தனர் அவளது பெற்றோர் உனக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்று, இவளின் விருப்பத்தினை கேட்காமலே. இனிமேல் தன்னால் யாரையும் சாக்கு போக்கு சொல்லி நிராகரிக்க முடியாது, அப்படி சொல்லுவதுக்கும் பயனில்லை. ஏனென்றால், அவள் சொன்ன பொய்களுக்கு சொந்தமானவனே இப்போ ஆதிகாவிற்கு சொந்தமில்லாமால் போனது தான் பரிதாபம். திருமணத்திற்கு அவள் மறுப்பு சொல்லவும் இல்லை, அதை மனதார ஏற்கவும் இல்லை. திருமணத்திற்கு முன், பெற்றோர் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டியும், நான் அப்புறம் பார்க்கிறேன் என கூறி அவள் அதை பார்க்கவே இல்லை.

ஆதிகாவிற்கு தனது திருமணம் குறித்து பெரிய பெரிய ஆசைகளும் கனவுகளும் இருந்தது. ஆனால், இந்த கனவிற்குரியவனே இல்லை என்று ஆக, கனவும் கனவாகி மட்டுமே போனது. ஆதிகாவும் இந்த திருமணத்தையே மனம் ஒப்பாமல் ஒத்துக்கொண்டதால், இந்த ஆசைகளை பற்றி யோசிக்கக்கூட இல்லை.

வெளிநாட்டிலிருந்து வந்த நாளே வர்ஷித் தனது மாமாவிடம், தனக்கு இரண்டு நாள்தான் விடுமுறை கிடைத்தது, திருமணம் முடித்த மறு நாளே தாங்கள் சென்னை கிளம்பிவிடுவோம், ஒரு வார வேலை அங்கு இருப்பதாகவும் பிறகு, நாங்கள் திருச்சிக்கு வந்து வீடு பார்த்துக்கொள்கிறோம் எனவும், திருமணத்தன்று இரவு பெண் வீட்டிலேயே தங்கி, காலையில் சென்னைக்கு கிளம்புவதாகவும் கூறினான்.

இதற்கு ஏற்றவாறு,அவனது மாமா குமாரசாமியோ ஆதிகா வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி வைத்தார். ஏனென்றால், அவன் இவ்வளவு இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்பதால் இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

திருமணம் முடிந்து அன்றைய நாள் முழுவதுமுள்ள சடங்குகள் எல்லாவற்றையும் கடமைக்கு செய்தனர் இருவரும். எல்லா சடங்கிற்கும் ஏற்பாடு செய்த பெற்றோர் முதலிரவிற்கு ஏற்பாடு செய்யவும் தவறவில்லை.

ஆதிகாவின் துயர் அடைந்த மனதில், இன்று தன் வீட்டிலே இருப்பதால் ஒரு நிம்மதி பரவியது. ஆனால், தனது அறையை யாரோ ஒருவனும் பங்கெடுத்து கொள்வான் என நினைக்கும்போதே திக் என இருந்தது. பிறகு, அந்த யாரோ ஒருவனே தனது கணவன் என்றதும் பதற்றம் அவளை தொற்றிக்கொள்ள, காலையிலிருந்து நடந்த நிகழ்வையெல்லாம் ஒன்று திரட்டி விழிமுன் படம் ஓட்டி கொண்டிருந்தாள். ஒரு சொல்ல முடியாத கஷ்டம், ஆற்ற முடியாத வலி என அனைத்தும் அந்த பெண்ணிடத்தில் புகுந்துகொண்டது.

'ஏய் என்னடி பண்ற இன்னும் கிளம்பாம' என கேள்வி கேட்கும் தாயிடம் வந்த சொற்களில் நினைவிற்கு திரும்பியவள் தனது தாயை கண்டவுடன், "அம்மா" என்று சொல்லும்போதே அவளது கண்களில் கண்ணீர் கவ்வி நின்றது.

அவளின் அருகில் அமர்ந்து அவளை அணைத்து, "நீ இன்னும் சின்ன புள்ள இல்லமா புரிஞ்சுக்கோ, இனிமேல் இப்படி அழக்கூடாது", எனக்கூறி 'இது எல்லா பொண்ணுங்களுக்கும் உள்ளது தான்மா. நான், அப்பா, தம்பி எல்லாரும் இருக்கோம் உன்ன அப்படியே விட்டுறமாட்டோம். நாளைக்கு சென்னை போய்ட்டு கொஞ்ச நாளிலேயே வந்துருவிங்க. அதுக்கு அப்புறம் இங்கதான் இருக்கப்போறிங்க. பக்கத்துல தான் இருக்க போறோம். அடிக்கடி பாத்துக்கலாம், எதையும் போட்டு மனச குழப்பிகாம சந்தோசமா உன் வாழ்க்கையை பாரு என அறிவுரைக்கூறி அவளை மிதமாக அலங்கரித்து, அவளது அறைக்கு அனுப்பி வைத்தார் அவளது அம்மா.
அனுப்பி வைத்தவருக்கும், மனதில் ஒரு விதமான உணர்வு அமர்ந்தது, மாப்பிள்ளை எதிலும் பிடிக்கொடுக்காமல் இருப்பதை நினைத்து. ஆனால், இதை அவள் வெளியிலும் காட்டிக்கொள்ளவில்லை.

அறைக்கு போகும் வழியில் பயத்துடனே நடையை எடுத்து வைத்தாள். இது எப்படி சாத்தியாமாகும் மனதில் ஒருவன் இருக்கையில், தன்னால் எப்படி இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியும் என உள்ளம் வெம்ப துடித்தாள். விருப்பமே இல்லாமல் பெற்றோரின் வார்த்தைக்கு கட்டுண்டு திருமணம் முடிந்தது. அதுபோலவே, முதலிரவு ஏற்பாட்டிலும். அனைவரும் அவரவர் விருப்பத்திற்கு செயல்பட ஆதிகாவின் விருப்பத்திற்கு யாரும் செவி சாய்க்கவில்லை.

எல்லா கோபத்திற்கும் காரணம் இந்த திருமணம் என நினைத்தவள் கோபத்தை தன் கணவன் திசையில் திருப்பியவள் ஒரு நிமிடம் யோசித்தாள், இத்தனை வருடம் பார்த்து பார்த்து வளர்த்த அப்பா அம்மாவுக்கே என்னோட விருப்பம் தெரியல, இன்னைக்கு தாலி கட்டுன அவருக்கு எப்படி தெரியும் என தன் கோபத்தை அடக்கி கொண்டாள்.

பயத்துடனே பால் சொம்போடு உள்ளெ நுழைந்தவுடன், அந்த காட்சியைக் கண்டு அதிர்ந்தாள்.

பூக்குவியல் கொண்டு அலங்கரித்த கட்டிலை விட்டு வர்ஷித், அங்கு ஒரு போர்வையால் கீழே விரித்து படுத்திருந்தான்.

அவனருகில் சென்று, அவனிடம் நீங்க மேல படுங்க என கூற அவனோ அவளிடம் முகம் கூட காட்டாமல், பரவாயில்ல நீ மேல தூங்கு என்றான்.

இதற்கு மேல், அவனிடம் ஆதிகாவால் பேச முடியவில்லை. நகைகளை கழட்டி வைத்து விட்டு, கட்டிலில் படுத்தவளுக்கு இங்கு நடந்தது அவளின் பயந்த மனதுக்கு சிறிது நிம்மதியாகவே இருந்தது. எத்தனை நாள் எதிர்பாத்த கனவு இது. ஆனால், இந்த சூழ்நிலை முற்றிலும் மாறியதை நினைத்து வருத்தமுற்றாள். இந்த வருத்தத்தில், வர்ஷித்தின் நடவடிக்கை பற்றி அவள் யோசிக்க கூட இல்லை.

வர்ஷிதோ தனது மாமாவிடம் எவ்வளவோ சொன்னான் முதலிரவு ஏற்பாடு வேண்டாமென்று. அவரோ, இது சம்பிரதாயம் என கூறி வாயை அடைத்தார்.

தனது பழக்கப்பட்ட இடத்தில் படுத்ததாலோ என்னவோ உடல் முழுதும் களைத்து போயிருக்க, கண்கள் தூக்கத்தை தழுவ, ஆதிகா தூங்கி போனாள்.

ஊரே அமைதி காக்க, வர்ஷித்திற்கு மட்டும் மனம் முழுதும் குழப்பங்கள் சூழ்ந்து, அமைதியை கலைத்து அவனை தூங்கவிடவில்லை. இதையெல்லாம் முறியடித்து உறங்கும் போது கடிகாரம் நள்ளிரவை சுட்டி காட்டியது.

விடியும் புது வாழ்வு இருவருக்கும் எப்படி அமைய போகுது என அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்...

நன்றி!


என்னடி மாயாவி நீ: 3

என்னடி மாயாவி நீ: 5
 
Last edited:

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN