ஆழி சூழ்ந்த உலகிலே...2

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலை தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும் கனவு நீ...


அந்த ஏசி ஹாலின் ஒரு மேடையில் பாடல் குழுவினர் அழகாக பாடிக்கொண்டு இருந்தனர். மற்றொரு மேடையில் நடுநாயகமாக சக்தி மற்றும் சிவரஞ்சனி நின்றுகொண்டு இருக்க சிவரஞ்சனியின் அருகில் அப்பொழுது தான் வந்த அர்ஜூன் நின்று கொண்டு இருந்தான். அவனுக்கு அருகில் சிவா மற்றும் சக்தியின் அண்ணன் ஸ்ரீதர் கதை அளந்து கொண்டு இருந்தான்.

அர்ஜூன் மற்றும் ஸ்ரீதர் பள்ளி தோழர்கள் ஆதலால் அவனிடம் அர்ஜூன் சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்க சிவரஞ்சனி அவன் என்ன செய்ய இருக்கிறானோ என்று பயந்துகொண்டு இருந்தாள்.

சிவரஞ்சனியின் தந்தை லிங்கம் மற்றும் சக்தி வந்தவர்களை அழைத்தபடி இருக்க, ஸ்ரீதரின் மனைவி சுசி உணவு சமைப்பதை மேற்பார்வை இட்டபடி இருக்க, அவளின் ஒன்றரை வயது மகன் சித்தார்த் அர்ச்சனாவின் மடிமீது அமர்ந்து தன் மழலை மொழியில் கதை அளந்து கொண்டு இருந்தான். அர்ஜூனின் பெற்றோர் அர்ச்சானாவுடன் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர்.

சற்றுமுன் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்க வந்த கல்வித்துறை அமைச்சரின் மனைவி பேசியதை சக்தியால் மறக்க முடியவில்லை...

"உன் அப்பாட்ட நாங்க படிச்சு படிச்சு சொன்னோம் என் பையனுக்கு உங்க பொண்ண குடுங்கன்னு... கேட்டாதான... எவனோ மாச சம்பளம் வாங்குறவனுக்கு கட்டி கொடுத்துட்டாரே... நாலு வருஷத்துக்கு ஒரு முறை வர பிறந்தநாளை கூட கிராண்டா கொண்டாட முடியாத அளவுக்கு ஒரு வெறும் பயனுக்கு உன்னை கொடுத்துட்டாரே... எல்லாம் உன் நேரம்..." என அவர் மேடையில் நின்று அனைவரின் வாழ்த்தையும் பரிசு பொருட்களையும் வாங்கி கொண்டு இருந்த சிவா மற்றும் சக்தியிடம் கூற சிவாவிற்கு கடுப்பாக இருந்தது.

'நான் என்ன கிராண்டா கொண்டாடனும்னா ஆசை படரேன்... ஒரு விஷ் பன்னாலே போதுமே...' என்று அலுத்துக்கொள்ள சக்தி தான் வெகுண்டு எழுந்துவிட்டான். யார் என்னவென்றால் அவன் எப்போதும் பார்த்தது கிடையாது. தன் சகோதரிக்கு ஒன்று என்றால் அவனால் எப்போழுதும் அமைதியாக இருக்க முடியாது....

"ஆன்டி... இது நான் சுயமா ஹாஸ்பிடல்ல இரவும் பகலும் டியூட்டி பார்த்து சம்பாதிச்சதுல கொண்டாடர பார்ட்டி.,. இந்த பார்ட்டியோட நோக்கமே ஃபண்ட் கலக்ட் செய்து ஆசிரமத்துக்கும் கேன்சர் ஃபேஷன்ஸ்க்கும் கொடுக்க தான். காச கரியாக்க இல்ல. இதுவே ரொம்ப அதிகம்னு சிவா சொல்லிட்டு இருக்கா... நீங்க வேற..." என பதிலுக்கு சட்டென்று பேசியவன் இது இவர்களுக்கு சுத்தமாக போதாது என நினைத்தவனாக மேலே பேசினான்.

"இன்னும் இரண்டு மாசத்துல உங்க ஆட்சியே கவிழ போகுது. ஏன்னா நீங்க பன்ன கோல்மால் அப்படி... எப்படி எங்க வீட்டு பொண்ண உங்க வீட்டுல கொடுப்போம்னு நினச்சீங்க... சரி அது கூட விடுங்க உங்க பையனே ஒரு தறுதல, உதவாக்கரை... சரியான கருவாப்பய... கிளிய பிடிச்சு குரங்கு கையில் கொடுக்க நாங்க என்ன அறிவு இல்லாதவங்களா... சொல்லுங்க... அங்க பாருங்க எங்க மாமா வராரு... அவர இதுக்கு முன்னாடி நீங்க பார்த்தது இல்லல்ல... நல்லா பார்த்துக்கோங்க. ஹிந்தி பட ஹீரோ மாதிரி இருக்காரு பாருங்க... உங்க பையன் ப்ளஸ்டூ ஃபெயில் ஆகிட்ட பிறகு கஷ்டப்பட்டு பாஸ் பன்ன வச்சீங்க இல்ல. காலேஜ்ல கூட ஆள் மாறாட்டம் செய்ததா கேள்விபட்டேன்... ஆனா எங்க மாமா பப்ளிக் எக்ஸாம்ல ஸ்டேட் பஸ்ட்... எம்.ஜ.டி ல கோல்ட் மெடல் வாங்கினவரு... லண்டன்ல பெரிய வேலையில இருந்தவரு... இன்னும் சொல்லிட்டே போகலாம்... சிவாக்கு ஏத்த மாப்பிள்ளை இவரை விட‌ வேற யாரு இருக்க‌ முடியும் சொல்லுங்க..." என்று சக்தி கேட்க அர்ஜூனை பார்த்த அவருக்கு அவன் கூறியதை மறுக்க முடியவில்லை. சிடு சிடு முகத்துடன் அங்கிருந்து விடைபெற்றார்.

' இவன் வேற நிலமை தெரியாம... பார்க்க நல்லா இருந்தா மட்டும் போதுமா... நல்லா படிச்சு இருந்தா போதுமா... கோல்ட் மெடலாம் கோல்ட் மெடல்... குணத்துல தங்கமா இருக்க வேண்டாமா... என் தப்பு தான்... எல்லாம் என் தப்பு தான்... அவன சொல்லி குத்தமில்லை...' என்று நினைத்தவளின் கண்கள் லேசாக கலங்க அதை இமை தட்டி சரி செய்தவள் புன்னகை முகமாகவே நின்றிருந்தாள்.

" மாமா... ஏன் இவ்வளவு லேட். உங்களுக்காக தான் நாங்க கேக் கட் பன்னாம வெயிட் பன்னரோம்..." என்று அர்ஜூனிடம் கூறியவாறு அவனை எதிர்கொண்ட சக்திக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலளித்தவன் தன் கையோடு கொண்டு வந்த உயர்ரக கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தான்.

"வாவ்... தேங்க்ஸ் மாமா... சிவாக்கு ஒன்னும் இல்லையா..." என்று கேட்ட சக்திக்கு சிவாவே முந்திக்கொண்டு பதிலலித்தாள்.

"காலையிலேயே கொடுத்துட்டாருடா... அது சீக்ரெட். நீ எவ்வளவு கேட்டாலும் சொல்லவே மாட்டேன்..." என்று புன்னகையுடன் கூறிய சகோதரியின் புன்னகையில் மகிழ்ந்தவன் ஹாஹான்... என்று இழுக்க சிவா மகிழ்ச்சியுடன் அவன் முதுகில் இரண்டு அடி வைத்தாள்.

சிவா மற்றும் சக்தி இருவரும் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்தனர். சக்தி சிவரஞ்சனிக்கு ஊட்டி விட சிவரஞ்சனியும் சக்திக்கு ஊட்ட முனையும் போது அதை மறுத்தவன் அர்ஜூனுக்கு முதலில் கொடுக்க கூற 'கொடுத்தாலும் அவ்வளவு தைரியமா என்று திட்டுவான் கொடுக்காவிட்டாலும் அவமான படுத்துகிறாயா என கடிந்துகொள்ளுவான்... என்ன செய்வது...' என்று நினைத்தவள் 'சீவலா... செதறலா... செதறலயே சமாளிப்போம்...' என்று முடிவெடுத்தவளாக அவனின் வாய்க்கு அருகில் கேக்கை கொண்டு செல்ல அவளை ஒரு முறை முறைத்தவன் அவளின் கெஞ்சும் விழியில் என்ன நினைத்தானோ சட்டென்று வாங்கிக்கொண்டான். சிவரஞ்சனிக்கு அப்பாடா... என்று இருந்தது.

அதன் பிறகு இரவு உணவு பப்ஃபே முறையில் ‌வழங்கப்பட சக்தி சிவாவிற்கு பிடித்த உணவாக கொண்டு வந்து கொடுத்தான். அவனின் அன்பின் என்றும் போல் மகிழ்ந்தவள் இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் குடும்பத்தை பிரிந்து புகுத்தவீடு செல்ல வேண்டும் என நினைத்தவளுக்கு ஆயாசமாக இருந்தது. இனி எப்போழுது சந்திப்பது என்ற ஏக்கம் வேறு...

இனிமேல் அதே தனிமை... அதே முகத்திருப்பல்... அதே சுடுசொல்... அதே மௌனம்... பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினாள். அங்கு சென்றதும் மூச்சு முட்ட போகிறது என நினைத்தாள்.
அவள் நினைத்தது போல் அன்று அவன் ஒன்றும் திட்டவில்லை. பிறந்தநாள் என்று விட்டுவிட்டினோ என்னவோ... அவளுக்கு தெரியவில்லை.

தன் குடும்பத்தாருடன் அழுகாச்சி நிகழ்ச்சியை முடித்தவள் அர்ஜூன் மற்றும் அவன் குடும்பத்தாருடன் கிளம்ப சக்தி தன் குடும்பத்தாரை விமானம் ஏற்றி கோவைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர்களின் கடற்கரை வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

"ம்ச்... சக்தி உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லடா... பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்க்கிற மாதிரி அவள பார்த்து வைக்கிற... இது மட்டும் அவ வீட்டுக்கு தெரிஞ்சுது அப்புறம் பெரிய பிராப்ளம் ஆகிடும். ஒழுங்கா படிக்கிற வேலைய கவனி..." கண்ணாடியை பார்த்து தனக்கு தானே அறிவுரை கூறிக்கொண்ட சக்திக்கு அவளின் பளீரென்று சிரித்த முகத்தை மறக்க முடியவில்லை.

காலை எழுந்ததில் இருந்து சமையல் அறையில் உதவி செய்ய வெளியே கூட செல்லாமல் அலுவலகம் கிளம்பும் அர்ஜூனையே பார்த்துக் கொண்டே இருந்தாள் சிவரஞ்சனி. இன்று கொஞ்சம் நல்ல மனநிலையில் தான் இருக்கிறான் என நினைத்தாள். அவள் அவ்வாறு நினைத்ததற்கும் காரணம் உண்டு. கோபமாக இருந்தால் டிரட் மில்லில் வெறிபிடித்தவன் போல் ஓடி இருப்பான். இன்று பொறுமையாக ஓடியதால் அவளாக நினைத்து கொண்டு தன் பேச்சை தொடங்கினாள்.

" அர்... ஏங்க..." அர்ஜுன் என்று பெயர் சொல்லி அழைக்க வந்தவள் மாற்றிக்கொண்டாள். ஏற்கனவே அவள் வாங்கிய திட்டு அவனை அப்படி அழைக்க வைத்தது.

"நான் என்ன உனக்காக ஏங்கனுமா..." கோபமாக வந்தது அவனது குரல்.

அதன் பிறகு அவள் ஒன்றும் பேசவில்லை. ஏங்கன்னு கூப்பிட்டது தப்பா...? தனக்குள் உழன்று கொண்டு இருந்தாள். அவனும் என்ன என்று கேட்காமல் கிளம்பி விட்டான். வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிய பிறகு தனித்து விடப்பட்டவள் சற்று நேரம் வெளியே வந்து அந்த அப்பார்ட்மெண்டின் புல்வெளி, தோட்டம், நீச்சல் குளம் என சுற்றியவள் சிறிது நேரத்தில் எல்லாம் வெயில் வர வீட்டினுள் அடைந்தாள்.

வேலையாட்கள் இருவர் காலையிலேயே வந்து செல்வதால் வீட்டிலும் ஒன்றும் வேலை இல்லை. மேல்தட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு என்பதால் அக்கம் பக்கத்தில் யாரும் போச்சு கொடுப்பது இல்லை. டீவி, தொலைபேசி என நேரத்தை போக்கியவள் 'என்ன நடந்தாலும் சரி... இன்றே அர்ஜூனிடம் வேலைக்கு செல்ல சம்மதம் வாங்க வேண்டும்' என முடிவு செய்தாள். இரவு அவனும் வீடு திரும்ப வெற்றிகரமாக கேட்டு முடித்துவிட்டு பதிலுக்காக காத்திருந்த சமயம் அவளின் இதயம் அநியாயத்துக்கு துடித்தது. ஏதாவது திட்டிவிடுவானோ என்று.
"சீவி சிங்காரிச்சிகிட்டு வேலைக்கு போரேன் பேர்வழின்னு அங்க போய் ஆடிட்டு வரவா... ஒன்னும் வேணாம்..." அவன் கூறும்போதே கண்களில் நீர் வர ஆரம்பிக்க இருந்தாலும் மேலே பேசினாள்.

"ப்ளீஸ்... ரொம்ப லேன்லியா ஃபீல் பன்னரேன். மூச்சு முட்டி செத்துடுவேன் போல இருக்கு..."

"செத்து தொலைடி... நானாவது நிம்மதியா இருப்பேன்... வேதாளம் மாதிரி என் கழுத்தை பிடிச்சு தொங்கிட்டு என்ன சாவடிக்கர... உன்னுடைய முகத்தை பார்க்க கூட அருவருப்ப இருக்கு... ச்சே... " யார்மீதோ காட்ட வேண்டிய கோபத்தை அவள் மீது காட்டியவன் கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்தான்.

திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவனின் முகத்திருப்பலையும் தீச்சொற்கலையும் பொறுத்து கொண்டவளால் அவன் நிம்மதி பறிபோனதாய் கூறியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் அவளை சாகக் கூறியது கூட பின்னுக்கு தள்ளப்பட்டது. அவனின் நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைத்தவலுக்கு கண்ணீர் கரைபுரண்டு ஓட அதை துடைக்க கூட மனமில்லாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

அவன் வாழ்க்கையை கொடுக்க போகிறோம் என்று தெரிந்து தானே இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாய் என்று அவளின் மனசாட்சி அவளை கேலி செய்தது. ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்ய கூடாது என்று நினைப்பவள் இன்று ஒருவனின் வாய்வழியாகவே அவனின் நிம்மதி பறிபோனதாய் அவன் கூறியதை கேட்க மனம் உடைந்து போனாள்... இப்படி கூறுவதை கேட்கத்தான் இத்தனை நாளாக அவனின் பேச்சை சகித்துக் கொண்டாயா... என்று நினைத்தவளின் உதட்டில் விரக்தி புன்னகை படிந்தது.

இவனை திருமணம் செய்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டாய் சிவா... என தனக்குத்தானே முதல்முறை வருத்தம் தெரிவித்து கொண்டாள்.

சக்தியின் வாழ்க்கையா அல்லது அர்ஜுனின் வாழ்க்கையா...? என தனக்குத்தானே கேள்வி எழ எந்தவித வாதமும் செய்யாமல் சக்தியின் புறமே அவளின் மனம் சாய்ந்தது... இதனால் தன்னுடைய வாழ்கையும் கெட போகிறது என்று அவள் நினைக்கவில்லை. நினைக்கவில்லை என்பதை விட எப்பொழுதும் நினைத்து பார்த்ததே இல்லை என்பது தான் சரியான வார்த்தைகள்.

அவள் என்றுமே தனக்காக யோசித்தது இல்லை. அதுவும் சக்தி விஷயத்தில் அவள் சிறிதும் யோசிக்க மாட்டாள். அவனுக்காக உயிரை கூட கொடுப்பாள். சக்தியும் அவளின் மொத்த அன்பிற்கும் ஏற்றவன் தான். இருவரும் அடித்து பிடித்து சண்டை போட்டு கொண்டாலும் அவர்களின் பாசம் கடுகளவும் குறைந்தது கிடையாது...

எவ்வளவு நேரம் தனக்குள் உழன்று கொண்டு இருந்தாலோ தெரியவில்லை. பறவைகளின் சத்தம் கேட்க எழுந்தவள் தன்னை சுத்தம் செய்து கொண்டு வேலையாட்கள் வருவதற்குள் பாதி வேலையை முடித்து இருந்தாள். வீட்டில் கேட்டவர்களிடம் சும்மாதானே இருக்கிறேன்... செய்கிறேன்... என்று கூறிவிட்டாள். அர்ஜூன் கிளம்பி அலுவலகம் செல்லும் வரை அவள் சமையல் அறையை விட்டு வெளியேறவில்லை.

இரவு அவன் வந்த பிறகும் அவள் அந்த அறைக்கு வருவதில்லை. அர்ச்சனா பன்னிரெண்டாம் வகுப்பு பயில்வதால் அவளுக்கு சொல்லி கொடுக்கிறேன் என்று அவளின் அறையிலேயே இருப்பவள் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தான் உறங்க வருவாள். அவள் வரும் சமயம் அர்ஜூன் நல்ல நித்திரையில் இருப்பான்....

அவளின் ஒருவார காலமாக தொடர்ந்த கண்ணாமூச்சி ஆட்டத்தால் விளைந்த ஒரே நன்மை அர்ச்சனாவின் நட்பை பெற்றது மட்டுமே... அர்ஜூன் அவளை சிறிதும் தேடவில்லை... அர்ச்சனா சிவா சொல்லி தருவதை முதலில் கேட்க மறுத்தாலும் பிறகு லேசாக கவனிக்க ஆரம்பித்தவள் அவளின் கற்பிக்கும் திறமையில் மெய்மறந்து போய் அவளுடன் நட்பாக பழக ஆரம்பித்தாள். அர்ச்சனாவிற்கு சிவாவின் மேல் கோபம் தான். தன் அண்ணனின் வாழ்க்கை கெட்டுவிட்டதே என்று. ஆனால் திருமணம் முடிந்தாயிற்று... இனி‌ கோபப்பட்டு என்ன ஆக போகிறது என்று நினைத்து கொண்டு சிவாவிடம் நட்புக்கரம் நீட்டினாள்.

அர்ஜூன் முகத்தில் விழிக்காமல் சுற்றிக்கொண்டு இருந்த சிவாவின் கண்ணாமூச்சி ஆட்டம் நாளையே முடிவுக்கு வர போகிறது என்று சிவரஞ்சனி அறியவில்லை.
 

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே...2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN