உன்னாலே உனதானேன் 3

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ரேஷ்மியின் பெற்றோர் இறந்து அன்றோடு ஒரு வாரமாகிவிட்டது...
அவர்கள் இறந்த செய்தி கேள்விபட்டதும் ரேஷ்மியின் சித்தப்பாவும் வினயும் பிரேதங்களை வேண்டிய சட்டதிட்டங்களை நிறைவேற்றி வீட்டிற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்..

வினயின் அன்னை வீரலட்சுமி ரேஷ்மியின் சித்தியுடன் தொடர்பு கொண்டு ரேஷ்மியின் தாய்வீட்டினை அதற்குரியபடி ஒழுங்கு செய்தனர்...
ரேஷ்மியின் நிலையறிந்து அவளுக்கு வினயின் தங்கை க்ருதிக்காவை துணையாக இருத்திவிட்டு வந்திருந்தார் வீரலட்சுமி....

விபத்தின் காரணமாக பிரேதங்களை பெற்றுக்கொள்ள ஒரு நாள் எடுத்தது... மறுநாள் வந்த பிரேதங்களை வரவேற்றது ரேஷ்மியின் ஓலக்குரல்....
அவளது கதறல் அங்கிருந்த அனைவரையும் உலுக்கிவிட்டது...
எப்போதும் தன் உணர்வுகளை வெளிப்படுத்துக்கொள்ளாத ரேஷ்மி தன் ஜீவனே பிரிந்த வேதனையில் கதறியது அங்கிருந்த அனைவரின் மனதையும் உலுக்கியது...

அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவன் வினயே.... தன் கண் முன் கண்ட தன்னவளின் அழுகையும் கதறலும் அவனை நிலை கொள்ளாமல் தவிக்கச் செய்தது... பிறப்பும் இறப்பும் மனிதனை மீறிய சக்திகள் என்று உணர்ந்த போதிலும் தன்னவள் துயரம் துடைக்க முடியாத தன் இயலாமையை எண்ணி நொந்தான்.... மூடத்தனம் என்று மூளை அறிந்த போதும் மனம் வருந்துவதை அவனால் தடுக்கமுடியவில்லை.....

ரேஷ்மியின் உறவினர்கள் அனைவரும் அவளைச்சுற்றி இருந்ததால் ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் இருந்தான் ... அவனை அச்சமூட்டிய இன்னொரு விடயம் அவளது உடல்நிலை மற்றும் மனநிலை.... தான் தாய் தந்தையர் இறந்த செய்தி அறிந்ததும் அவள் நடந்து கொண்ட விதமே அவனது பயத்திற்கு காரணம்... அதற்கு இன்னும் வலு சேர்க்கும் முகமாக பிரேதங்களை கொண்டுவரும் போது கதறியவள் அதற்கு பின் அமைதியாகிவிட்டாள்... பிரேதங்களை அடக்கம் செய்ய எடுத்துச்செல்லும் போதும் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை...

ஒருவாரமாக தன் தாய்வீட்டிலே இருந்தவள் ஒரு உணர்வையும் பிரதிபலிக்கவில்லை.... தன் அன்னையின் ஆலோசனைக்கமைய வினயும் அங்கேயே ஒரு வாரமும் தங்கினான்...
மூன்று நாட்களுக்கு பின் உறவினர்கள் அனைவரும் சென்றுவிட ரேஷ்மியின் சித்தப்பா குடும்பம் மட்டும் அங்கு தங்கியிருந்தது...

அங்கிருந்த ஒரு வாரமும் ரேஷ்மி ரோஜாப்பூ மாலை தாங்கி நின்ற தன் பெற்றோர் படத்தின் முன் வீற்றிருந்தாள்.... இரண்டு நாட்கள் இது தொடரவே அவளை சகஜ நிலையடையச்செய்ய அவளது சித்தி வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தினார்... வினயிற்கு உணவு என்று அனைத்தையும் ரேஷ்மியையே செய்ய வைத்தார்... ஆனாலும் வேலைகளை ஒரு இயந்திரக்கதியுடன் செய்து முடிப்பவள் மீண்டும் தன் பெற்றோர் படத்தின் முன் அமர்ந்துவிடுவாள்... அப்படி அமர்பவள் அந்த படத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பாள்... அந்த சந்தர்ப்பத்தில் யார் வந்து அழைத்தாலும் அவளது காதில் விழாது... இரவிலும் கணவனின் தேவைகளை கவனித்துவிட்டு அந்த படத்தை பார்த்துக்கொண்டே தரையில் படுத்துவிடுவாள்... அவளை தேடுக்கொண்டு வரும் வினய் அவளது நிலை கண்டு கலங்கிப்போவான்...

பெற்றோரை இழப்பது எந்தவொரு மனிதனுக்கும் ஒரு பெரிய இழப்புதான்.... அதுவும் ஒருசேர இருவரையும் இழப்பது கொடுமையான தண்டனை.... ஆனால் அதே சோகத்தில் உழன்று தன் நலத்தை கெடுப்பது எவ்விதத்தில் நியாயம்?? இல்லாதவர்களுக்காக வருந்தி இருப்பவர்களை துன்பப்படுத்துவதில் என்ன பயன்??? இதை எவ்வாறு அவளுக்கு புரியவைப்பது??? அவன் புரிய வைக்க முயன்ற சந்தர்ப்பங்களை எண்ணிப்பார்த்தான் வினய்...

அன்று வேலை முடிந்து வந்ததும் தன் பெற்றோர் படத்தின் முன் அமர்ந்திருந்த ரேஷ்மியின் அருகில் சென்றான் வினய்..

“ஷிமி..” என்று வினய் அழைக்க அவளிடம் பதிலில்லாமல் போக அவளது தோளில் கை வைத்தான்...அதில் சிந்தனை கலைந்தவள்

“வாங்க வினய்.... நீங்க ப்ரெஷ் ஆகிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்...” என்றவாறு எழும்பியவளை கைபிடித்து தடுத்தவன்

“ஷிமி நான் உன்கூட பேசனும்... கொஞ்சம் ரூமிற்கு வா...” என்றுவிட்டு முன் செல்ல அவனை பின்தொடர்ந்தாள் ரேஷ்மி...
அறையினுள் சென்றதும் கதவை அடைத்துவிட்டு பேசத்தொடங்கினான் வினய்..

“ஏன் ஷிமி இப்படி இருக்க??? இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இப்படியே இருக்கப்போற??? அத்தை மாமாவோட மறைவு உனக்கு ஆற்ற முடியாத துன்பம் தான்.... ஆனா அதையே நினைத்துக்கொண்டு இருப்பதால் நடந்தது எதுவும் மாறப்போவதில்லை... நீ உன்னை இதில் இருந்து மீட்டு எடுக்கனும் ஷிமி... உனக்காக நான் இருக்கேன்.....எப்பவும் இருப்பேன்... உனக்கு எல்லா விதத்திலும் சப்போர்ட்டா இருப்பேன்.... இதில் இருந்து நீ வெளிய வரனும் ஷிமி... எனக்காக ஷிமி..ப்ளீஸ்...நிதர்சனத்தை புரிந்துக்கொள்..” என்று அவன் கூறிய போதும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை... அவன் பேசிமுடிந்ததும் கதவை திறந்துக்கொண்டு வெளியே சென்று விட்டாள் ரேஷ்மி....

அந்த நிகழ்வை நினைத்தவனுக்கு அவளது நடவடிக்கைகள் ஒரு வித பயத்தை தோற்றுவித்தது... அவளை எவ்வாறு தேற்றுவது என்று தெரியாது தவித்தான்... அந்த சம்பவத்தின் பின் அவளை நெருங்க முடியாத படி அவனை ஒதுக்கினாள் ரேஷ்மி... அதில் இன்னும் நொந்து போனவன் அவளை இங்கிருந்து தம் வீட்டிற்கு அழைத்து சென்றாலே அவளை தேற்ற முடியும் என்று எண்ணி தன் அன்னைக்கு அழைத்து விவரம் கூறினான் வினய்...
அவரும் தான் வந்து அழைத்து செல்வதாக கூறியவர் அந்த வார இறுதியில் ரேஷ்மியின் வீட்டிற்கு வந்தார்... வந்ததும் ரேஷ்மியின் சித்தி மற்றும் சித்தப்பாவிடம் கூறிவிட்டு ரேஷ்மி அழைத்து வருமாறு வினயிடம் கூறினார் வீரலட்சுமி...

வினய் அழைத்ததும் அவனுடன் வர மறுத்துவிட்டாள் ரேஷ்மி...

“இல்லை வினய் நான் வரவில்லை... நீங்க போங்க...நான் இங்கு அம்மா அப்பாவோட இருக்கப்போறேன்.... அவங்க சாகவில்லை.. அவங்க இன்னும் இங்கு தான் இருக்காங்க.... நான் அவங்களோடு தான் இருக்க போறேன்... நான் அவங்களை விட்டுட்டு வந்ததால தான் அவங்களுக்கு ஆக்சிடன்ட ஆனது... மறுபடியும் அவங்க என்னை விட்டு போக விடமாட்டேன்... நான் இங்கு தான் இருக்க போறேன்...என்னை இப்படியே விட்டுருங்க....நான் வரலை...”

”ஷிமி நீ புரிந்துதான் பேசுறியா??? அத்தையும் மாமாவும் நம்மை விட்டுட்டு போயிட்டாங்க... அதை புரிந்துகொள்... அவங்க இங்க நம்ம கூட இல்லைமா... புரிந்துகோ ஷிமி... நாம நம்ம வீட்டுக்கு போகலாம் ஷிமி... வா... “ என்று அவள் கை பற்றி அழைக்க அவனது கையை உதறியவள்

“இல்லை... நான் வரமாட்டேன்.... நான் இங்கே தான் இருப்பேன்... என் அம்மா அப்பா கூட .... அவங்களை விட்டு நான் எங்கேயும் வரமாட்டேன்.... என்னை விட்ருங்க.... நான் வரலை...” என்று சத்தமிட்டவளின் குரல் கேட்டு வீரலட்சுமி, மற்றும் ரேஷ்மியின் சித்தப்பா குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட்டனர்...

அவர்களை கண்டதும் கதறி அழுதவள் அங்கேயே மயங்கிவிட்டாள்... அதில் பதறியவன் அவளை மடிதாங்க ரேஷ்மியின் சித்தி தண்ணீர் எடுத்துவந்தார்...
தண்ணீர் தெளித்தும் ரேஷ்மிக்கு மயக்கம் தெளியாது இருக்க விரைந்து அவளை தன் காரில் ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றான் வினய்.... அவனுடன் துணைக்கு சென்றார் வீரலட்சுமி...
அருகிலிருந்து வைத்தியசாலையில் அவளை அனுமதித்தவர்கள் வைத்தியரின் வார்த்தைகளுக்காக காத்திருந்தனர்....

ரேஷ்மியை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர்

“அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க... அதான் இந்த மயக்கம்... அதோடு பீ.பி யும் ரொம்ப லோவா இருக்கு.... அவங்க ரொம்ப டிப்ரெஷனில் இருப்பது போல் இருக்கு.... கவுன்சிலிங் கொடுப்பது நல்லதுனு தோனுது....குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு... ஒரு டூ டேஸ் அவங்க ஆப்சர்வேஷனில் இருக்கட்டும்.... பிறகு டிஸ்சார்ஜ் பண்ணிரலாம்... அப்புறம் நான் ஒரு சைக்காட்டீஸ்டை ரெகமண்ட் பண்ணுறேன்... அவங்களை போய் பாருங்க... அவங்க உங்க வைப்பின் மென்டல் ஹெல்த்தை அனெலைஸ் பண்ணி ட்ரீட்மண்ட் தருவாங்க....அவங்களுக்கு வேறு எந்த ப்ராப்ளமும் இல்லை...நீங்க இப்போ அவங்களை போய் பாருங்க.....” என்றுவிட்டு வைத்தியர் நகர அவருக்கு நன்றி உரைத்துவிட்டு வினயும் வீரலட்சுமியும் ரேஷ்மியை பார்க்க அறைக்குள் சென்றனர்...

அங்கு அறையினுள் சென்ற வினய் ரேஷ்மியின் அருகில் சென்று அவளது தலையை வருடிக்கொடுக்க மறுபுறம் சென்று நின்றார் வீரலட்சுமி...

தலையை வருடியவன் கைகள் நடுக்கத்தை தத்தெடுத்திருந்தது... அவளது வேதனை அவளை இந்தளவு பலவீனப்படுத்தும் என்று அவன் நினைக்கவில்லை.... இந்த இரு மாதங்களில் அவளது சிரிப்பினை மட்டுமே கண்டவனுக்கு அவளது அழுகையும் அவளது அரற்றல்களும் சொல்லொண்ணா வேதனையை உண்டாக்கியது...

இவற்றைவிட அவனது துயரை அதிகப்படுத்தியது ரேஷ்மி அவள் பெற்றோர் மட்டுமே போதும் என்று கூறி அவனை புறம் தள்ளியது.. அவள் வேதனையின் உச்சகட்டத்தில் கூறிய வார்த்தைகள் என்ற போதும் காதலை தாங்கி நின்ற அவன் உள்ளம் அவளது வார்த்தைகளை எண்ணி நொந்தது....

இந்த இரண்டு மாதங்களில் அவள் தன் காதலை கொஞ்சம் கூடவா உணரவில்லை என்று வருந்தியது.... ஆனால் அவன் உணராத விடயம் இருபத்தியிரண்டு வருட அன்பிற்கு முன் இரண்டு மாத கால வாழ்க்கை ஈடுகொடுக்க முடியாது என்பதே...ஆனால் காதல் கொண்ட நெஞ்சம் எந்த சமாதானத்தையும் ஏற்பதாக இல்லை.. இவ்வாறு அவன் சிந்தனை ஓடிய வண்ணம் இருக்க அதனை கலைத்தது வீரலட்சுமியின் குரல்..

“கவின் அம்மா வீட்டு போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்... நீ ரேஷ்மி சித்தப்பாவிற்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லிரு...நான் கிளம்புறேன்...” என்றுவிட்டு கிளம்பினார் வீரலட்சுமி...

வினய் அவன் அன்னை சென்றதும் ரேஷ்மிக்கு துணையாய் அந்த அறையில் இருந்தான்....
அவளது ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க மறுகையை தன் கைகளில் ஏந்தியவன் அதனை தன் இரு கைகளுக்குள் அடக்கிக்கொண்டான்.....

"இன்று நீ செயலால் செய்வதை ஏன் இவ்வளவு நாட்கள் மனதால் அவளுக்கு புரியவைக்க முயலவில்லை" என்று அவனது மனசாட்சி கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.....
உன் அமைதி அவளை இந்நிலைக்கு உள்ளாக்கியது சரி தானா???
நீ உன் காதலை திருமணத்திற்கு முன்பே அவளுக்கு உணர்த்தியிருந்தால் அவள் தன் பெற்றோர்களின் இழப்பிற்காக பித்து பிடிக்கும் அளவிற்கு தளந்திருக்க மாட்டாளே...???

அவள் தன் துக்கத்தை ஆற்றிக்கொள்வதற்காக கூட உன்னை நாடவில்லையே?? நீ ஆற்ற முயன்றவேளையில் கூட உன்னை அணுகவிட மறுத்தாளே?? ஒரு நண்பனாக கூட அவள் மனதில் உன்னால் இடம்பிடிக்க முடியவில்லையா??? இல்லை இந்த இரண்டு மாத கால அவகாசம் காதலுக்கு வித்திட போதவில்லையா??? இது காதல் தானா??? அவளை திருமணம் செய்ததால் உனக்கு அவள் சொந்தமாகிவிட்டாள் என்று நீ எண்ணியது சரிதானா..?? ஊரார் சூழ உன்னை கணவனாய் ஏற்றுக்கொண்டவள் மனதால் உன்னை ஏற்காமல் விட்டதன் காரணம் என்ன?? அன்றொரு நாள் கூட திருமணத்தில் பெரிதும் விருப்பம் இல்லாதது போல் கூறினாளே..??? அப்படியென்றால் நீ தான் அவள் கனவுகளை அழித்து உன் விருப்பத்திற்காக அவளை மணந்து கொண்டாயா?? உன்னால் அவள் கனவுகள் சிதைந்திருக்க நீ மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பெயர் காதல் தானா??? உன்னை நம்பி வந்தவளுக்கு இந்நாள் வரை என்ன செய்திருக்கிறாய்...??

அவளது இழப்புகளுக்கு மருந்தாக மாறா முடியாத உன் காதல் மெய்யானதா???” என்று அவன் மனசாட்சி கேள்விகளை எழுப்பியவண்ணம் இருக்க திடீரென்று ரேஷ்மி

“அம்மா அப்பா ஏன் நீங்க இரண்டு பேரும் என்னை விட்டுட்டு போனீங்க??? உங்கள் ஆசைப்படி தானே நான் வினயை திருமணம் செய்து கொண்டேன்... அவரோடு நான் சந்தோஷமாக வாழ்வதை பார்க்கமாலேயே போயிட்டீங்களே.. எதுக்கு என்னை மட்டும் விட்டு போனீங்க...?? என்னையும் உங்க கூட கூட்டிட்டு போயிருக்கலாமே..” என்று உளறலாக கூறிவிட்டு மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்...அவளது உளறல் காயப்பட்டிருந்த காதல் நெஞ்சத்தை இன்னும் வருத்தியது....

இரண்டு நாட்கள் கழித்து ரேஷ்மியை டிஸ்சார்ஜ் செய்து வினயும் வீரலட்சுமியும் அவளை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்... இரண்டு நாட்கள் ஆஸ்பிடல் வாசமும் வீரலட்சுமியின் கைப்பக்குவமும் வினயின் கவனிப்பும் அவளை ஓரளவு தேற்றியிருந்தது...

ஆனால் முன் போல் இல்லாமல் ஒரு வித இறுக்கத்துடனேயே இருந்தாள் ரேஷ்மி...
அவளது முகமோ எந்தவித உணர்வையும் வெளிக்காட்டது இறுகிப்போயிருந்தது... அவளுடன் பேச்சு கொடுக்க முயன்ற வினயிற்கு ஒற்றை வார்த்தைகளே பதிலாக கிடைத்தது... வழமையாகவே வீரலட்சுமியுடன் மரியாதையாக பேசுபவள் இப்போதும் அதே மரியாதையுடன் பேசினாள்... ஆனால் எப்போதும் அவளது முகம் வெளிக்காட்டும் உணர்வு அவளிடம் இல்லை...

ரேஷ்மியை வீட்டுற்கு அழைத்து வந்ததும் அவள் ஓய்வெடுக்க வழி செய்து கொடுத்த வீரலட்சுமி வினயை தனியே பேச அழைத்தார்...

“கவின்... ரேஷ்மியுடைய நடவடிக்கைகள் எதுவும் எனக்கு சரியாக படவில்லை... அவள் இன்னும் அந்த இழப்பிலேயே உழன்றுக்கொண்டு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.... அவ முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு வனப்பு இப்போ இல்லை... அவளுடைய உணர்வுகளை கட்டுப்படுத்தி தனக்குள்ளே இறுகிப்போய் இருக்கின்ற மாதிரி இருக்கு... அவள் தன்னுடைய துக்கம் முழுவதையும் வெளியிட்டால் தான் அவளால் அந்த இழப்பிலிருந்து மீண்டெழ முடியும்.. அது உன் கையில் தான் இருக்கு...”

“நான் என்னமா பண்றது??? நானும் சொல்லிப்பார்த்துட்டேன்... ஆனா அவள் அதிலேயே தான் உழன்றுக்கொண்டு இருக்கா... அவளை எப்படி தேற்றுவதென்று எனக்கு புரியவில்லை...”

“இது சொல்லி புரியவைக்கின்ற விடயம் இல்லை... உன்னோட செயலில் புரியவைக்கின்ற விடயம்.... உன்னோட காதலால் புரியவைக்கின்ற விடயம்... அதுக்கு தான் நம்ம பெரியவங்க தாம்பத்தியம்னு பெயர் வைத்திருக்காங்க.... காதல், காமம் அரவணைப்பு, கடமை , பொறுப்பு, கரிசனம் இப்படி எல்லாம் உள்ளடங்கியது தான் தாம்பத்தியம்... எதுக்கு எப்போ தேவை இருக்கோ அதை அப்போ நாம் நம்முடைய துணைக்கு கொடுத்தா தான் தாம்பத்தியம் இனிக்கும்... நாம மட்டும் இல்லாம நம்முடைய துணையையும் சந்தோஷமாக வைத்திருக்கனும்.... அது அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அவங்களை மனதளவிலும் சந்தோஷப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை...
உனக்கு நான் சொல்லுறது புரியும்னு நினைக்கின்றேன்....”

“புரியிது அம்மா...”

“ரேஷ்மியை நீ தான் கவனமாக பார்த்துக்கனும்... உன்னுடைய அன்பும் செயலும் தான் அவளுக்கு மருந்து அதை புரிந்து நடந்துக்கோ... நான் ஜூஸ் போட்டு தரேன்... அவளுக்கு கொண்டு போய் கொடு.... அப்புறம் டாக்டர் சொன்ன அந்த டாக்டரை பார்க்க ஆப்பாயின்ட்மென்ட் போட்டுரு... மறந்துவிடாதே கவின்..” என்றுவிட்டு வீரலட்சுமி ஜூஸ் தயாரிக்க சென்றார்....

மூன்று நாட்களுக்கு பின் சைக்காட்டிஸ்ட் ராதாவர்மனை சந்திக்க சென்றனர் ரேஷ்மியும் வினயும்...
ரேஷ்மியை தனியே பரிசோதிக்க ஒரு மணிநேரம் வேண்டியவர் வினயை காத்திருக்கும் படி கூறினார்.... ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரமாக மாற அப்போது கன்சல்ஷன் அறையிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்... மரியாதை நிமித்தமாக எழுந்த வினயை பார்த்து அமரச்சொல்லி கை அசைத்தவர் வினயிடம் பேசத்தொடங்கினார்...

“மிஸ்டர் கவினயன் ரேஷ்மிகாவை ஆழ்ந்த நித்திரைக்கு கூட்டிட்டு போய் அவங்களோட ஆழ்மனதில் இருப்பவற்றை அனலைஸ் பண்ணப்போ அவங்க ரொம்ப லோன்லியா பீல் பண்ணுறாங்கனு தெரிஞ்சது.... அவங்க அம்மா அப்பாவோட இறப்பு, தான் இந்த உலகத்தில் தனித்து விடப்பட்டுட்டோம் அப்படீங்கிற ஒரு உணர்வை அவங்களுக்குள் தோன்றுவித்திருக்கிறது.... அது தான் அவங்களை அப்படி நடந்து கொள்ள வைத்திருக்கு... தென் உங்கள் இருவருக்கும் திருமணமாகி எத்தனை காலம்??”

“இரண்டரை மாதம்”

“ஓகே... நீங்க லவ் மேரேஜா இல்லை ஆரென்ஜ்ட் மேரேஜா??”

“ஆரென்ஜ்ட் மேரேஜ் தான் டாக்டர்..”

“ஓ.. பட் அவங்க நீங்க ஏதோ அவங்களை விரும்பி மேரேஜ் பண்ணிக்கிட்டதா சொன்னாங்க..”

“ஆமா டாக்டர்.. வன் சைட் லவ்... வீட்டுல பேசி ஓகே பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டேன்..”

“ஓகே... நீங்க உங்க லவ்வை எக்ஸ்போஸ் பண்ணிட்டீங்களா??”

“ரேஷ்மிக்கு நான் அவளை லவ் பண்ணது தெரியும்... அதோடு ஒவ்வொரு நாளும் என்னோட லவ்வை அவளுக்கு புரியவைத்திக்கொண்டு தான் இருந்தேன்... அவளும் கொஞ்ச நாட்களாக என் காதலை உணர்ந்ததற்கான பிரபலிப்பை சில சமயங்களில் வெளிப்படுத்தினாள்... ஆனால் வார்த்தைகளால் அவளது காதலை இன்னும் சொல்லலை டாக்டர்..”

“ஓகே... உங்க ஸ்டேட்மன்ட் கரெக்ட்... அவங்க உங்களை விரும்பத்தொடங்கிட்டாங்க.... ஆனா அவங்க இன்னும் அதை சரியாக உணரவில்லை... அவங்களுக்குள்ள ஒரு கன்பியூசன் இருக்கு... அதனால் தான் அவங்க இப்படி லோன்லினஸ்சை பீல் பண்ணி இருக்காங்க..ஓகே வன் மோர் க்வெஸ்ஷன்... இது கொஞ்சம் வியர்டான க்வெஸ்ஷன் தான்.. பட் எஸ் அ டாக்டரா இதை நான் கேட்டுத்தான் ஆகனும்... நீங்க இரண்டு பேரும் சேர்ந்துட்டீங்களா???”

“டாக்டர் நீங்க கேட்கிறது எனக்கு புரியவில்லை...”

“ஐமீன் ஆர் யூ செக்ஸுவலி ஆக்டிவ்..??”

“டாக்டர்...”

“..மிஸ்டர் கவினயன் இதில் நீங்க சங்கடப்பட எதுவும் இல்லை... எஸ் அ டாக்டரா இதை நான் கேட்கிறேன்... நீங்க அதற்கு பதில் சொன்னா தான் என்னால் சொலூஷன் சொல்ல முடியும்.. சோ பீல் ப்ரீ டு டாக் வித் மீ...சொல்லுங்க..”

“இல்லை டாக்டர்...”

“ஓகே.. ஏன் இன்னும் சேராமல் இருக்கீங்க...”

“எப்படி டாக்டர்...?? அவளோட விருப்பம் இல்லாமல் எப்படி...?”

“அவங்களுக்கு விரும்பம் இல்லைனு உங்ககிட்ட சொன்னாங்களா??”

“அது டாக்டர்...”

“சொல்லுங்க கவினயன்..”

“பெஸ்ட் நைட்டில் டைம் வேணும்னு சொன்னாங்க...”

“அதற்கு பிறகு கேட்டீங்களா???”

“இல்லை டாக்டர்..”

“ஏன் கேட்கவில்லை...??”

“இதை எப்படி டாக்டர் கேட்பது??”

“பையன் நீங்களே தயங்கும் போது பொண்ணு அவங்க எப்படி சொல்லுவாங்க??”

“டாக்டர் நீங்க சொல்வது எனக்கு புரிகிறது... ஆனா.. இது ரொம்ப சென்சிட்டிவ்வான விஷயம் டாக்டர்... மனம் இணையாமல் உடல் இணைவதில் என்ன தாம்பத்தியம் டாக்டர்???”

“சரி... நீங்க அவங்களுக்கு மறுபடியும் பிரோபோஸ் பண்ணிங்களா?? ஐமீன் உங்களுடைய வாய் வார்த்தைகளால் அவங்களுக்கு உங்களுடைய காதலை வெளிப்படுத்தினீங்களா??”

“இல்லை டாக்டர்...”

“அப்போ எப்படி கவினயன் அவங்க தன்னோட லவ்வை உங்களுக்கு சொல்வாங்க... அப்புறம் இன்னொரு விடயம் செக்ஸ் இஸ் அ பார்ட் ஒப் லவ்... லவ் பண்ணுறவங்க தான் செக்ஸ் பண்ணனும்னா நாட்டுல எத்தனை பேர் அப்படி இருக்காங்க?? அதைவிட நிறைய தம்பதிகள் காதல் இல்லாமல் காமத்துடன் மட்டுமேயே வாழ்பவர்களும் இந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள்.. அவங்க வாழவில்லையா??? காமத்துடன் வாழ்க்கையைத் தொடங்கி காதலுடன் வாழ்பவர்களும் இந்த உலகத்தில் இருக்காங்க.... நம்ம சமூகம் திருமணம் என்ற ஒன்றை ஏன் உருவாக்கினார்கள் என்று தெரியுமா?? நம்ம ஒழுக்கத்தை கட்டிக்காக்க தான்... அதே சமூகம் தான் சாந்தி முகூர்த்தம்னு ஒரு ராத்திரியை பலவித அலங்காரங்களுடன் புது மணத்தம்பதிகளுக்கு ஏற்பாடு செய்றாங்க...

இப்போ தான் இந்த லவ் மேரேஜ் ரொம்ப அதிகமாயிடுச்சி... அரேன்ஜ்ட் மேரேஜிற்கு கூட பொண்ணும் பையனும் கலந்து பேசி அவங்களுக்கு ஓகேனா தான் மேரேஜ் பண்ணிக்கிறாங்க... ஆனா அந்த காலத்தில் அப்படி இல்லை.... ஆனா அந்த காலத்தில் காதல் இருக்கவில்லை என்று சொல்லுறீங்களா?? இல்லை கவினயன் எல்லாம் அவரவர் மனதை பொருத்தது... அதுனால அவங்க விருப்பத்தை நீங்க கேட்டு தெரிஞ்சிக்கனும்....

அதோடு இப்ப அவங்களுக்கு தேவை ஒரு துணை... அதை நீங்க உடல் ரீதியான சங்கமத்தின் மூலம் முதலில் உணர்த்துங்க.. அது அவங்களுக்குள் நிச்சயம் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.... இந்த சங்கமம் அவங்களுக்குள் எனக்காக என் கணவர் இருக்கிறார் அப்படீங்கிற வலுவான எண்ணத்தை உண்டு பண்ணும்... அதோடு அவங்களுடைய டிப்ரஷனை குறைக்கவும் இது வழி செய்யும்.......அதுமட்டுமில்லாமல் அவங்களை அவங்களுக்கு பிடித்த விடயங்களில் ஈடுபடுத்துங்க.... அவங்களோடு உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... நண்பன் என்ற வட்டத்தை தாண்டி உனக்காக எப்பவும் நான் இருப்பேன் அப்படீங்கிற எண்ணத்தை அவங்களுக்குள்ள கொண்டு வாங்க... அது தான் அவங்களுக்கு மருந்து.....

இதை நீங்க கண்டினியூ பண்ணீங்கனா அவங்க த்ரீ மன்த்சில் நார்மல் ஆகிடுவாங்க... இன்னொரு முக்கியமான விஷயம் உங்கள் காதலை செயலில் மட்டுமல்லாது வார்த்தையிலும் வெளிப்படுத்துங்கள் ....... சில விஷயங்களை செய்து காட்டுவதிலும் பார்க்க வார்த்தைகளால் வெளிப்படுத்துவது அழகு...”

“ஓகே டாக்டர்... தாங்ஸ் டாக்டர்... இனிமே ரேஷ்மியை நான் நீங்க சொன்ன படி கவனித்துக்கொள்கிறேன்...”

“தாட்ஸ் குட்.... அவங்க தூங்கிட்டு இருக்காங்க... அவங்க எழும்புனதும் நீங்க அவங்களை அழைச்சிட்டு போகலாம்...”

“ஓகே டாக்டர்... தாங்கியூ...சோ மச்...” என்றுவிட்டு ரேஷ்மி இருந்த அறைக்கு சென்றான் வினய்...
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN