அவன் முகம்

Bharathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அடு்த்தவர் செயலால்
மனதின் காயங்களை
சுமந்து
வற்றிப் போன
குளத்தையொத்த
கண்களுடன்
அமர்ந்திருந்தேன்.

என் பக்கம் நியாமிருந்தும்
எதிராளியிடம்
தர்க்கம் செய்யவியலா சூழல்.

யாருக்கும் என்ன பாவம்
செய்தேன்
எனக்கெதற்கு இப்படியொரு
நிலை?
தேடுதலில் சிந்தையில்
பளிச்சிடுகிறது ஓர்
முகம்.
ஆம் அந்த நான்கு கால் கொண்ட
சாம்பல்
நிற
பெரிய மீசைக்காரனின்
முகம்.
அவன் விஷ்ணு.

அவனுக்கிழைத்த தீங்கின் விளைவா
இத்தருணம்
அவன் என்னை சபித்திருப்பானோ?
மியாவ் மியாவ் தவிர ஒன்றுமே அறியாத அவன் என்னை எப்படி சபித்திருப்பான்.

எங்கள் தெருவின்
அத்தனை வீட்டுக்கும்
ஏகபோகமாய்
உரிமை கொண்டாடுபவன்.
அவன் வளர்ந்த வீடுகளில்
எங்களுடையதும் ஒன்று.

பூனைகளில் அவன் சற்று வித்யாசமானவன்.
அசைவ சமையல் மணக்கும்
வீடுகளை
சுற்றிவருவான்.
அவர்களாகத் தரும் உணவை
தவிர வேறெதையும்
திருடி உண்ண
மாட்டான்.
மீனை சுத்தம்
செய்யும்போது கூட
அம்மா இடையில்
எழுந்து சென்றாலும்
ஒரு மீன் கூட காணாமல்
போயிருக்காது. ஆகையால்
அம்மாவின் செல்லம் அவன்.
தங்கைதான் முதலில் அவனை விஷ்ணுவென்று அழைத்தாள். அவளிறகு பிடித்த சினிமா கதாநாயகன் பெயர் அது.

அந்த ஞாயிற்றுக்கிழமை
நான்
தொலைக்காட்சியை
பார்த்துக்கொண்டே
நாற்காலியில் ஊஞ்சல்
ஆடிக் கொண்டிருந்தேன்.

சாதாரண நாற்காலியில்
அமர்கையில்
பின்னங்கால் இரண்டையும்
என தரையெழுப்பி
ஆடுவது என் சிறுவயது பழக்கம்.

எதிர்பார்க்கவில்லை
விஷ்ணு நாற்காலியின்
பின்னங்காலுக்கு
அருகில் சத்தமெழுப்பாமல்
அமர்ந்திருப்பான் என்றும்
நான் குதித்தாடுகையில்
அதே பின்னங்கால் அவனை அழுத்தியிருக்கும் என்றும்.

நான் உணர்ந்த அளவில்
என் நாற்காலி அவனது
வயிற்றுப்குதியை
அழுத்தியிருக்கும்.

எங்கிருந்து வந்ததோ
அவனுக்கு அத்தனை
கோபம். வலி தாங்க முடியா
கோபத்தில் அத்தனை
வேகத்தில்
என்முன் வந்து
என்னை கீறினான்.

அவனது வலுவான கால்நகங்கள்
என் பாதத்தின் மேல் பகுதியில்
இரததம் வருமளவு குத்திக் கிழித்ததில்
நான் அலற
அதுவரை தொலைக்காட்சியில் ஐக்கியமாயிருந்த குடும்பத்தார் எங்களின் நிலையை அப்போதுதான் உணரந்து திரும்பினர் எங்கள் புறம்.

பாத்திர மாத்திரத்தில் அருகிலிருந்த சப்பாத்தி கட்டை தூக்கிவீசி அவனை விரட்டினார் அப்பா. என்ன ஆச்சி என்ன ஆச்சு என்று கேட்டபடியே தேங்காய் எண்ணெயை எடுத்து வந்தாள் தங்கை.
அதை காயங்களிலிட்டவாறே
"குழந்தையை எப்படி கீறி வச்சிருக்கு பாரு..! இன்னொரு வாட்டி வீட்டுப் பக்கம் வரட்டும். இருக்கு அதுக்கு"வசைபாடினாள் அன்னை.
குடும்பமே சேர்ந்து என் காயமாற்றி சமாதானப்படுத்த மெல்ல கண்களை சுழற்றி வாயிலை நோக்கினேன். எத்தவறும் செய்யாமல் தண்டனை அனுபவித்த மிதமிஞ்சிய சோகத்தில், ஆற்றுவார் தேற்றுவார் யாருமற்ற நிர்கதியான நிலையில் தன் காயம் பட்ட உடலை தானே நீவி்க்கொண்டிருந்த விஷ்ணுவின் முகத்தில் என்ன கண்டேனோ......?அதைத்தான் எனது நிலைக்கண்ணாடி இப்போது பிரதிபலிக்கிறது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN