உறவாக வேண்டுமடி நீயே 7

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு – 7

அபி சொன்னது போல் மலைவாழ் ஊர் பகுதியில் நந்திதா நான்கு நாட்கள் கேம்ப் போவது என்னமோ உண்மை தான். அவள் மட்டும் இல்லை நண்பர்களான டாக்டர் டேனியல் பபுல் மற்றும் டாக்டர் கேபிரியாவுடன் தான் அவள் போக இருக்கிறாள்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அந்த நேரத்தில் அவர்கள் எப்படி சுத்தமாகவும் சுகாதாரமாவும் இருக்க வேண்டும், கர்ப்ப வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் அமைப்பைத் தான் நந்திதா செயல்படுத்தி வருகிறாள். நகர்வாழ் மக்களுக்கு சொல்லும்போது அவளுக்கு அதிகம் சிரமம் இல்லை.

ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் என்றால் அதை சிரமம் என்று கூட சொல்லக் கூடாது கஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அவர்களிடம் இதைப் பற்றி பேசினாலே அசிங்கமான கூச்சமான விஷயம் என்று முகத்தைச் சுளித்த படி விலகினார்கள். இத்தனைக்கும் அவர்களிடம் பேசியது வயதில் முதிர்ந்த இந்த துறையில் சிறந்து விளங்கும் பெண் மருத்துவர்கள் தான்.

அதனாலேயே பல ஊர்களில் அவளுக்குச் சரியான ஒத்துழைப்பு இல்லாமல் போனது. நிறைய பேருக்கு அந்த நேரத்தில் மன அழுத்தம் ஏற்படும் என்பது கூடத் தெரியாது. பெண்களே இப்படி என்றால் ஆண்களைச் சொல்லவே வேண்டாம். அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. அந்த நேரத்தில் மனைவிக்கு உடலால் மனதால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது தெரிந்திருந்தால் தானே அவர்கள் புரிந்து கொண்டு நடப்பார்கள்? அப்படி அவர்களை வளர்க்கத் தவறியது அவர்களின் தாய் மார்கள் தானே?

இவர்களே இப்படி என்றால் பழங்குடியினர்களை எந்தவகையிலுமே நெருங்க முடியவில்லை நந்திதாவால். இன்னமும் எந்தனையோ நாடுகளிலும் ஊர்களிலும் இந்த பழங்குடினர், பழக்கம் என்ற முறையில் பெண்கள் பூப்பெய்தால் அவர்களுக்கு சடங்குங்கள் என்ற முறையில் செய்யும் கொடுமைகள் என்ன?... என்ன?... ஆப்ரிக்கா நாட்டின் பிரபல மாடல் அழகி வாரிஸ் டிரிஸ் தன் சுயசரிதையில் அவருடன் சேர்ந்து அங்கிருக்கும் பெண்களுக்கு நடந்த கொடுமையை எழுதியதை (பாலைவனப் பூக்கள் என்ற நூலில் உள்ளது) கண்ணீர் மல்க நெஞ்சு படபடக்க எத்தனை பேர் படித்து இருப்பார்கள்? அதைப் படித்த நந்திதா மட்டும் விதிவிலக்கா என்ன?

அதன்பிறகு தான் தமிழ்நாட்டில் இதுபோன்ற கொடுமையான சடங்குகள் நடத்தப்படும் இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து மாதவிடாய் காலத்தில் இருக்க வேண்டிய நடைமுறைகள், மார்பகப் புற்றுநோய், கர்ப்ப வாய் புற்றுநோய் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வைத் தன்னால் முடிந்தவரை எடுத்துச் சொல்லியும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் இலவசமாக செய்தும் இன்றுவரை மாற்றி வருகிறாள். இதையே இன்னும் விரிவுபடுத்தி மற்ற மாநிலங்களுக்கும் இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அவள் லட்சியம். அவள் எதிர்பார்க்கும் மாற்றம் அத்தனை சீக்கிரத்தில் வருமா? அது யார் கைகளில் இருக்கிறது? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?...

நந்திதா அப்படி கேம்ப் செல்லும்போது எல்லாம் அவள் கம்பெனியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வது கம்பெனி G.M திருமலை தான். திருமலை, உசிலம்பட்டி என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் அப்பொழுதே பி.யூ.சி படித்தவர். வேலை இல்லாமல் அவர் இருந்த நேரம், அவரின் தந்தை ஒரு நாள் ஒரு விபத்திலிருந்து ஜமீன்தார் துரைசிங்கத்தைக் காப்பாற்ற, அதற்கு நன்றிக் கடனாய் திருமலைக்கு வேலை கொடுத்தார் துரைசிங்கம். சாதாரண வேலையில் சேர்ந்தவர் அவருடைய நேர்மையால் இன்று G.M என்ற அளவிற்கு முன்னேறினார். துரை கம்பெனி மீதும் ஜமீந்தார் குடும்பத்து மேலும் இன்றுவரை அதிக விஸ்வாசம் கொண்டவர்.

இன்று காலை நந்திதா கேம்ப் சென்று விட்டதால் இனி அவள் வரும்வரை இவர் தான் அங்கு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்த துறைக்குத் தனித்தனி ஆட்கள் இருந்தாலும் இவரும் கொஞ்சமாவது மேற்பார்வை பார்த்தால் தான் நல்லது என்று நினைப்பவர். ஆனால் இன்று வேலைக்குப் போக முடியவில்லை. மகள் பாரதி தான் தானே பார்த்துக் கொள்ளவதாகச் சொல்லி அவரை வீட்டில் தங்கி முழு ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டுச் சென்றாள். ஆனால் அவருக்கு அந்த ஓய்வு தான் கிடைக்கவில்லை. இன்று மட்டும் இல்லை கொஞ்ச நாளாகவே அவர் மனதிற்கும் மூளைக்கும் ஓய்வே கிடைப்பது இல்லை. அப்படி அதை கிடைக்காமல் பார்த்துக் கொண்டான் அவரின் தங்கை மகன் புகழ்.

இவருக்கு எதிரான கொள்கைகளையும் குணங்களையும் கொண்டவன். ‘இவன் நிஜமாவே நம் தங்கை மகன் தானா இல்லை பிரசவ வார்டில் குழந்தை மாறி விட்டதோ?’ என்று பலமுறை நினைத்திருக்கிறார் திருமலை. சின்ன வயதிலிருந்தே குடி, கூத்து, கள்ளக்கடத்தல் என்றிருந்த புகழுக்கு ஒரு அரசியல்வாதியால் போலீஸ் வேலை கிடைத்துவிட, சந்திரமுகி மாதிரி பகுதி நேர வேலையாய் பொறுக்கித் தனம் செய்து கொண்டிருந்தவன் இன்று முழு நேரமும் பொறுக்கியாய் மாறிப் போனான்.

தாயில்லாத பாரதியைத் தங்கை வளர்த்ததற்காகவே முன்பெல்லாம் அவன் செயலை பொருத்தவரால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை. மனைவி இறந்த பிறகு இன்று தன் உயிரும் உணர்வும் வாழ்வுமாய் இருக்கும் மகளை அல்லவா திருமணம் செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்டுத் தொந்தரவு கொடுக்கிறான் தங்கை மகன் புகழ்!. இவனுக்குப் பயந்தே பெண்ணை விடுதியில் தங்கிப் படிக்க வைத்தார். நந்திதாவிடம் பாரதி வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து அவனுடைய நச்சரிப்பும் பிடிவாதமும் அதிகமானதாகப் பட்டது அவருக்கு. அவருடைய தங்கைக்கு சிலது பலது தெரிந்திருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு மகன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கை அந்த வீணாகிப் போன தாய்க்கு!

அவருக்கு பாரதி மேல் கொள்ளைப் பிரியம் என்பதால் மகனின் இப்படிப் பட்ட குணத்திற்கும் செய்கைகளுக்கும் அண்ணன் மகளை விட்டால் வேறு யாரும் அவனுக்கு மனைவியாக வர முடியாது என்ற எண்ணம் அந்த அத்தைக்கு! இன்றும் மகளின் வாழ்வை நினைத்தபடி அவர் படுத்திருக்க,

“என்ன மாமா உடம்புக்கு என்ன செய்கிறது? படுத்திருக்கிறீர்களே! ரொம்ப முடியவில்லை என்றால் ஹாஸ்பிடல் போகலாமா?” என்று கேட்ட படி உள்ளே நுழைந்தான் புகழ்.

‘இதெல்லாம் வக்கணையாகப் பேசு டா’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவர் “வயசாகுது இல்ல புகழ்? அதனால வருகிற உபாதைகள் தான்.. வேறொண்ணும் இல்ல”

“அதற்குத் தான் உங்களுக்கும் என் அம்மாவுக்கும் உடம்பு நன்றாக இருக்கும்போதே எனக்கும் பாரதிக்கும் திருமணம் செய்து வைத்துவிடுங்க என்று சொல்கிறேன்”

‘வேட்டைக்காரன் மாதிரி எங்கு சுற்றினாலும் இங்கேயே வந்து நிற்ககிறானே!’ என உள்ளுக்குள் நொந்தவர் “நான் சம்மதித்தா மட்டும் போதுமா பா? கட்டிக்கொள்ளப் போகும் பெண் அல்லவா வேண்டாமென்று சொல்கிறாள்! உன்னைப் பாரதி அண்ணனா தான் பார்க்கிறதாம். பிறகு எப்படி கல்யாணம் செய்ய முடியுமென்று கேட்கிறாள்”

“என்ன மாமா நீங்கள்! பாரதி தான் அறிவில்லாமல் பேசுகிறாள் என்றால் நீங்களுமா? யாராவது அத்தை மகனை அண்ணனாக நினைப்பார்களா?” அவனுடைய பேச்சிலும் குரலிலும் சூடு ஏறியிருந்தது.

“அது எப்படிப்பா விருப்பம் இல்லாமல் கட்டாய...”

“என்ன விருப்பம் இல்லை? அதெல்லாம் வரும். நீங்கள் முதலில் எங்களுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்” இவன் குரலில் பிடிவாதமும் கட்டளையும் இருக்கவும்

“அது வந்து புகழ்...” அவர் இழுக்கவும்

“இந்த வந்து போய் என்ற பேச்சுக்கே இடமில்லை மாமா” என்றவன் “அம்மா எனக்குப் பசிக்கிறது, சாப்பாடு எடுத்து வை” என்ற படி விலகி விட

இப்பொழுது திருமலைக்குத் தங்கை மீது கோபம் திரும்பியது. ‘நாங்கள் பேசியதைக் கேட்டும் ஒரு வார்த்தை மகனை அடக்கவில்லையே தங்கை?’ என்ற கோபம்அவருக்கு. இவராக புகழை ஏதாவது சொல்லி விட்டால் உடனே கணவனை இழந்து உன்னிடம் அடைக்கலமாக வந்ததால் தான் இப்படி எல்லாம் பேசுறீங்க என்று மூக்கைச் சிந்த வேண்டியது. அதற்காகவே இப்போது எல்லாம் அவர் எதுவும் பேசுவது இல்லை. மீறிப் பேசினால் மகளுக்கு இவனால் ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் அவருக்கு.

இவனின் குணத்தை நினைத்து இவர் பயப்பட, மகளும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் சொல்ல அவளின் தைரியத்தை நினைத்து அமைதி ஆவார் அந்த தந்தை. ஆனால் அந்த மகளின் தைரியத்தை ஆட்டம் காண வைப்பது போல் புகழ் மகளைக் கட்டம் கட்ட உள்ளான் என்பது பாவம் அவருக்கும் அவர் மகளுக்கும் தெரியவில்லை.

நந்தித்தா கேம்ப் சென்ற இரண்டாவது நாள் அபிக்கு டிடெக்டிவ் ஏஜென்சியிலிருந்து அழைப்பு வர
அவன் எடுத்து “ஹலோ” என்கவும்
“AR சார்! நீங்கள் கேட்ட மாதிரி டீடெய்ல்ஸ் கலெக்ட் செய்துவிட்டேன். திஸ் இஸ் தி ஃபைனல் ரிப்போர்ட். உங்களுக்கு மெயில் அனுப்பி விடவா?”

“யா யா.. டு இட்.. சீக்கிரம்”

அடுத்த நொடியே மெயில் பாக்ஸைத் திறந்தவனுக்கு நந்திதா பற்றி ஆதியிலிருந்து அந்தம் வரை இருந்தது. கூடவே திருவேணி பற்றியும் இருக்கவும் அனைத்தையும் தன் லேசர் கண்களால் வாசித்து மூளைக்குப் பதில் மனதிற்குள் பதிவு செய்தவனின் மனமோ அவனையும் அறியாமல் நந்ததவனத்தின் நறுமணத்தைக் கொடுத்தது. நம்மைச் சுற்றி கமழும் நறுமணத்தைத் தான் ஒருவர் உணர முடியும். ஆனால் அதே மனதிற்குள் இருக்கும் நறுமணத்தை உணர முடியுமா? ஆனால் இப்போது முடிகிறதே! அவன் மூளை ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் அவனோ கண்மூடி சற்று நேரம் அந்த சுகந்தத்தில் திளைத்தான். இப்போது அவன் மனதில் வேணியே ஆக்கிரமிக்க, அடுத்த நொடியே வீட்டுக்குக் கிளம்பினான் அபி.

“அம்மா.... போய் வேணியை அழைத்துக்கொண்டு வாருங்கள்” உள்ளே நுழைந்ததும் மகன் சொன்ன வர்த்தையில் மேகலை வியந்து போய் அவனைப் பார்க்க

“அம்மா.... வேணிக்கு நம்ம ரெக்ஸ் கூட விளையாட வேண்டுமென்று ரொம்ப நாட்களாக ஆசை மா. இன்னைக்கு தான் நான் ஃப்ரீ. சோ போய் கூட்டிக்கொண்டு வாங்க மா” இவன் மறுபடியும் அதே பல்லவியை அழுத்திப் பாட

“பிசினஸ் செய்யும் அளவுக்கு உனக்கு மூளை இருக்கிறதே தவிர இன்னும் குடும்பஸ்தன் ஆகும் அளவுக்கு மூளை வளரவில்லை டா உனக்கு” என்று மேகலை மகனுக்கு பட்டம் தர

“அம்மா!” இவன் பாவமாக முழிக்கவும்

“பின்பு என்ன டா? அடுத்தவர்கள் வீட்டுக் குழந்தையைப் போய் கூட்டிகிட்டு வாங்கனு கூப்பாடு போடுகிறாயே! அவங்க அனுப்புவார்களா?” இவர் நிதர்சனத்தைச் சொல்ல

“அதெல்லாம் அனுப்புவார்கள். நான் அழைத்துக்கொண்டு வரச் சொன்னேன் என்று சொல்லுங்க. டிரைவரை அனுப்பலாம் என்றால் அது சரி வராது. முதல் முறை என்பதால் உங்களைப் போகச் சொல்கிறேன். ப்ளீஸ் மா!” இவன் கெஞ்ச

“போடா கழுதை! இவன் மட்டும் பிடிவாதம் பிடித்தால் அப்படியே நிற்பானே!” என்ற புலம்பலுடன் கிளம்பிச் சென்றார் அவர்.

அவன் சொன்னது போலவே அபி என்ற பெயரைக் கேட்டவுடன் தங்கம் மறுப்பு சொல்லாமல் அனுப்பி தான் வைத்தார். அவருக்கே மனதில் ஒரு ஓரத்தில் சில கேள்விகள் இருந்து கொண்டு தான் இருந்தது. அதற்கெல்லாம் விடை கிடைப்பதற்காகவாது இப்போது வேணியை அனுப்பினார் அவர்.

கார் நின்றவுடன் “அபிப்பா!” என்று அந்த முயல் குட்டி துள்ளி ஓடி வர, “மை பிரின்சஸ்!” என்ற சொல்லுடன் தாவிச் சென்று அவளைத் தூக்கிக் கொண்டான் இவன்.

நந்திதாவுக்கு நாய் வளர்க்கப் பிடிக்காது. ஆனால் அவள் மகளுக்கோ அதனுடன் உருண்டு புரள ஆசை. அதே அபி வீட்டில் ரெக்ஸ் இருக்கவும் அபி, வேணி, ரெக்ஸ் என்று இன்று தங்கள் உலகத்தில் ஐக்கியமாகிப் போனார்கள் மூவரும்.

பிறகு தனக்காகன வேலை வரவும் இவனே வேணியை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றவன் வேணி இறங்கியதும் வாசலில் நின்ற தங்கத்திடம் “ஆன்ட்டி ! இனி வேணியை அழைத்துக் கொண்டு போக டிரைவரை அனுப்புகிறேன். சோ நான் எப்போ வேணியை பார்க்கனும்னு சொன்னாலும் அவருடன் அனுப்பி விடுங்கள்” அனுப்புவீர்களா என்று கேட்கவில்லை. அனுப்புங்கள் என்று கட்டளை தான் இட்டான். தங்கத்தால் மட்டும் என்ன செய்யவோ சொல்லவோ முடியும்? “ம்ம்ம்... சரிப்பா” என்ற பதிலைத் தான் அவரும் தந்தார்.

இவன் காரில் ஏறியதும் “பை அபிப்பா!” அவன் வாங்கிக் கொடுத்த அவள் உயர நாய் பொம்மையை அணைத்த படி வேணி அவனை வழியனுப்ப

“பை மை பிரின்சஸ்!” என்ற படி இவன் ஒரு பறக்கும் முத்தத்தை கொடுக்க, அவ்வார்த்தையில் தன்னை மீறி ஒரு அதிர்வு தன் உடலில் உண்டாவதைக் கண்டார் தங்கம். ‘இதுவர முயல்குட்டி, பேபினு விளிச்சது எங்ஞன மை பிரின்சஸ் ஆயி? அப்போ?....’ நந்திதாவின் தாயாய் அவர் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

நந்தித்தா கேம்ப் சென்ற மூன்றாம் நாள்
பாரதி அதிக ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சாலையில் அவளுடைய ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்க, ஒரு திருப்பத்தில் “டமால்” என்று வண்டி இடித்து “ஐயோ... ம்மாஆஆஆ...” என்ற சத்தத்துடன் அவள் விழுந்து கிடக்க,

“என்னமா தங்காச்சி! வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா?” என்று கூவிய படி தன் ஆட்டோவில் இருந்து இறங்கினாள் அதை ஓட்டி வந்தவள்.

“என்னக்கா நீ ராங்கான ரூட்டுல வந்துட்டு என்ன திட்டுற....” அப்போதும் வலி வேதனையிலும் நியாயம் பேசினாள் பாரதி.

“சரிதாமே.. நான் ஏதோ ஞாபகத்துல உட்டுட்டன் போல! சரி எந்திரி.. ஆஸ்பத்திரி போலாம்”

“நான் எங்க எழுந்திரிக்க? காலு விண்ணு விண்ணுனு வலிக்குது. யாராவது அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போனா கூப்பிடுங்க. உங்களால தனியா என்ன சுமக்க முடியாது”

“ஐய! அந்தளவுக்கா அடி பட்டு இருக்கு? செத்த இரு..” என்ற அந்த ஆட்டோ ஓட்டி வந்த பெண் சற்று தள்ளி இன்னோர் திருப்பத்தில் போய் பார்க்க, அப்பொழுது அந்த வழியாகத் தன் காரில் வந்து கொண்டிருந்த துருவனை நிறுத்தி இவள் உதவி கேட்க, வந்து பார்த்தவன் பாரதியைக் கண்டதும்

“ஹே.... கண்ணம்மா! என்ன ஆச்சுடா?” இவன் தன்னை மீறி பதறிவிட

“பார்த்தா உங்களுக்கு எப்படி தெரிகிறது? வேண்டுதலுக்காக ரோட்டில் உருளுகிறேன் என்று நினைத்தீர்களோ! ஆக்சிடென்ட் பா எழுந்திருக்க முடியவில்லை. கொஞ்சம் கை கொடுங்கள்” இவள் வலியில் முகம் சுளிக்க, அவள் கை தான் கொடுக்கச் சொன்னாள். அவனோ அலேக்காக அவளையே தூக்கினான்.

“ஹேய் ஹேய்! என்ன செய்கிறீர்கள்? விடுங்கள்” இவள் திமிர

“சும்மா இரு. எழுந்திருக்க முடியாமல் இன்னும் எத்தனை பேருக்கு காட்சிப் பொருளாக இருக்கப் போகிறாய்?” இவன் அதட்டியபடி தன் காரில் அவளை அமரவைத்தவன் “வண்டி இங்கேயே இருக்கட்டும். நான் டிரைவரை அனுப்பி எடுக்கச் சொல்கிறேன்” என்றவன் பின் காரில் அமரப் போக,

“தம்பி! தம்பி! ஏதாவது கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போப்பா. அப்போ தான் எனக்குக் கட்டுபடி ஆகும்” என்று அவனிடம் இடித்த ஆட்டோக்கார பெண்மணி சொல்ல

“நீங்கள் கிளம்புங்கள். செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றவனிடம்

“தேங்க்ஸ் தம்பி! ஆனா ஒரு பொட்டப் புள்ளைய இடிச்சிட்டு நான் எப்டி தம்பி நிம்மதியா சவாரி போக முடியும்? அத்தால நானும் வந்து டாக்டர் என்ன சொல்றாங்கன்னு கேட்டுகினா நிம்மதியா இருக்கும். நானும் வரேன் கண்ணு!” என்று அவள் பிடிவாதம் பிடிக்க

“சரி வாங்க.. மெயின் ரோட்டில் ஒரு ஹாஸ்பிடல் இருக்கிறதுல்ல? அங்கே தான் போகிறேன். வந்துடுங்க” என்று சொன்னவன் முன்னே செல்ல ஆட்டோ பின்தொடர்ந்தது.

ஹாஸ்பிடலில் டாக்டர், “தசை பிரண்டிருக்கு. ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தால் போதும்” என்று சொல்லவும் டாக்டர் அவனின் நண்பன் என்பதால் “சரி இங்கேயே வைத்திருந்து நாளைக்கு அனுப்பு டா” என்றான் துருவன்.

இதை பாரதியிடம் சொல்ல, அவளுக்கும் இதுவே சரி என்று பட்டது. எழுந்து நடக்க முடியாத இந்த நேரத்தில் புகழ் உதவி செய்கிறேன் என்று தொட்டால் எப்படி தடுப்பது என்ற பயம் அவளுக்கு.

துருவன் அறையிலிருந்து வெளியே வர, ஆட்டோ காரப் பெண்மணி ஒடி வந்து என்ன ஏது என்று விசாரித்து விட்டு பாரதியின் கைப் பையைக் கொடுத்து விட்டுச் சென்றார். அந்தப் பையைக் கூட பாரதியிடம் கொடுக்காமல் அதன் பிறகு வந்த அவள் தந்தையிடம் தான் கொடுத்தான் அவன்.

அவள் தந்தை இல்லாத சமயத்தில் புகழ் அவளைப் பார்க்க வர, அந்த நேரம் அங்கிருந்த துருவன் மேல் அவன் பார்வை உக்கிரமாகப் பதிவதைப் பார்த்தவள் “துருவன்! எனக்கு ரெஸ்ட் ரூம் போக வேண்டும். கொஞ்சம் கூட்டிக்கொண்டு போகிறீர்களா?” குரலில் வலியுடன் கெஞ்சலாக பாரதி கேட்க

“நான் கூட்டிக்கொண்டு போகிறேன் டார்லிங்!” என்று வழிந்த படி புகழ் முன்வர

“நீங்கள் வேண்டாம் புகழ். அவரென்றால் என்னைத் தூக்கிக்கொண்டு போவார். அதான் உங்களை வேண்டாமென்று சொல்கிறேன்” என்று மிடுக்காக இவள் சொல்ல, அதாவது உனக்கான இடத்தை அறிந்து நீ விலகியே இரு என்பது போல் இவள் சொல்ல கூடவே துருவனுக்கான இடத்தையும் இவள் சொல்லாமல் சொல்லியதை அறிந்தவனின் உள்ளாம் எரிமலையாய் வெடிக்கத் தயாரானது.

அதைப் பார்த்தவள் ‘அப்பாடா! இந்த விபத்தால் ஒரு நன்மை நடக்கப் போகிறது என்றால் அது இந்த போலீஸ்காரன் சீக்கிரம் நம்மை விட்டு விலகிவிடுவான் என்பது தான்’ என்று இவள் மனதிற்குள் சந்தோஷப் பட, பாவம்! அவளுக்குத் தெரியவில்லை இந்த விபத்தால் தனக்கு வேலையே போகப் போகிறது என்று.

நந்திதா கேம்ப் முடிந்து வந்த அன்றே தன் தாயிடம் பேச வேணிக்கு நிறைய இருந்தது. அதிலும் மூச்சுக்கு முன்னூறு தடவை ‘அபிப்பா இது வாங்கித் தந்தார். இங்க கூட்டிப் போனார். நாங்க ஐஸ் கிரீம் சாப்டோம்’ என்று விதவிதமாக அபி புராணம் வாசிக்க, நந்திதாவோ மகளை அதட்டவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை. கூடவே நீங்க ஏன் அபி வீட்டுக்கு அனுப்புனீர்கள் என்று தங்கத்திடம் அவள் கேட்கவுமில்லை. இதையெல்லாம் பார்த்த தங்கத்திற்கு இந்த செயல்கள் எல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ என்ற பயம் தான் ஒரு தாயாய் அவருக்கு வந்தது. ஆனால் மகளிடம் ஒரு வார்த்தை கூட அவர் கேட்கவில்லை. சொல்லக் கூட்டிய விஷயம் என்றால் நிச்சயம் மகள் சொல்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு.

இப்படியே நாட்கள் நகர ஒரு நாள் தங்கள் ஸ்மார்ட் சிட்டி உள்ளே இருக்கும் நீச்சல் குளத்தில் அபி நீந்திக் கொண்டிருக்க அப்பொழுது அங்கு ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த வேணியைப் பார்த்தவன் முகத்தில் சந்தோஷந்த்தின் ரேகை படர ‘வாவ் பிரின்சஸ்! எப்படி அதுவும் ஆண்கள் நீந்துகிற இடத்தில்?!’ என்று முணுமுணூத்தவன் யோசனையுடன் இங்கு எங்கேயாவது நந்திதா சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்று இவன் தேட, அங்கு அப்படி யாரும் இல்லை. ‘குழந்தையை தனியா விட்டுவிட்டு இவள் எங்கே போனாள்?’ என்ற எரிச்சலுடன் மேலே ஏறி பல எட்டுகளால் இவன் வேணியை நெருங்க வேணி அவனுக்கு முன்பு நடந்து கொண்டிருந்தவள் ஓரிடத்தில் நின்று அரைவட்டம் அடித்துத் திரும்பி அபியைப் பார்த்தும் பார்க்காதது போல் அவனை உரசிக்கொண்டு சென்று அவன் பக்கத்தில் நின்றிருந்தவனின் காலைக் கட்டிக் கொண்டு “பப்பு! கேட்ச்” என்று குதூகலிக்க

அதைப் பார்த்த அபியின் முகத்திலிருந்த சந்தோஷம் ஸ்விட்ச் போட்டார் போல் மறைந்தது. எப்பொழுதும் தன்னைப் பார்த்தால் அபிப்பா என்று தன்னிடம் தாவும் வேணி இன்று இப்படி யாரோ ஒருவனின் காலைக் கட்டிக் கொண்டதைப் பார்த்தவனுக்கு சுருக்கென்ற வலி இதயம் முழுக்கவே பரவியது.

அதை ஒரு கசப்பு மருந்தென விழுங்கித் தாங்கிக் கொண்டு “ஹே.... பேபி யூ கேட்ச் மீ யா” என்று குதூகலத்துடன் வாரி அணைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த பப்லுவிடம் நெருங்கியவன் “ஹலோ மிஸ்டர் டானிஷ் பபுல்! How r u?” என்று இவன் கேட்க

“ஹலோ மிஸ்டர் அபிரஞ்சன்! பைன்.. how do u do? நாம டூ டைம்ஸ் தான் பாத்துர்க்கோம். பட் கரெக்டா யூ ரிமைண்ட் மீ!” பபுலுவும் இயல்பாய் விசாரிக்க, அபியின் பார்வையோ அவன் தோள் மேல் உரிமையாய் சாய்ந்திருந்த படி “அபிப்பா! ச்விம்மிங்கா?” என்று கேட்ட வேணியிடமே இருந்தது.

“ஹேய் பேபி.. உன்க்கு அங்கிளை முன்னடியே தெர்யுமா?” பபுல் கேட்க

அதற்கு “அங்கிள் இல்லை, வேணிக்கு நான் அபிப்பா! ஷி இஸ் மை பிரின்சஸ்!” என்று அதிகாரத் தோரணையுடன் அழுத்தமாகப் பதில் அளித்தான் அபி.

இதற்கு முன் இரண்டு முறை அபியும் பப்லுவும் இதே குடியிருப்புக்குள் சந்தித்து இருக்கிறார்கள். முதல் முறை பபுல் கார் ப்ரேக் டவுன் ஆன போது அபி தான் சரி செய்தான். மற்றொருமுறை ஜிம்மில் சந்தித்திருக்கிறார்கள். இதுவரை காட்டாத கடுமையும் விலகலையும் அபி இப்பொழுது காட்டவும், சற்றே புருவம் நெரிய யோசித்தவன் “வாட் அபி ஸ்விம்மிங்கா?” என்று அடுத்த கேள்வியை பபுல் கேட்க

“நோ.. நோ.. இங்கே ஒரு கித்தார் கச்சேரி நடக்கிறதென்று சொன்னார்கள். அதான் கேட்டுவிட்டுப் போகலாமென்று வந்தேன்”. அவனுக்கு அதே கடுமையுடன் பதில் கொடுத்தானே தவிர பார்வை எல்லாம் அவன் பிரின்சஸ் மேல் தான் இருந்தது.

‘பார்த்த உடனே அபிப்பாவென்று கட்டிக்கொள்ளும் குழந்தை இன்றைக்கு ஏன் அப்படி செய்யவில்லை? அப்படியானால் இந்த அபிப்பா வேணிக்கு வேண்டாமா?’ குழந்தைகளின் இயல்பு இதுவென்று தெரியாமால் இவனுடைய கையும் மனதும் குழந்தையை பபுல்யிடமிருந்து பிரித்திழுக்கத் துடித்தது. அதை செய்தும் இருப்பான் தான். அதற்குள் பபுல் போன் அழைக்கவும்

“excuse me..” என்ற சொல்லுடன் எடுத்துப் பேசியவன் “ஹே.... குயீன்! யா... யா... finished. நீயும் ஸ்வீம் பண்ட்டியா? இங்கே தான் வர்யா? வா... வா...” என்றவன் போனை அணைத்து விட்டு “ஓகே அபி! பாய்...” என்ற சொல்லுடன் இவன் விலக, இவன் பாய் அபிப்பா என்ற முத்தை அவனுடைய முயல் குட்டியிடமிருந்து எதிர்பார்க்க, அவளோ அந்த முத்தை மட்டும் சிந்தவேயில்லை.

பபுல் குழந்தையுடன் வாயிலை நெருங்கவிருந்த நேரம் எதிர்பட்டால் நந்தித்தா. பெண்களுக்கென்று தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாக பக்கத்திலிருக்கும் நீச்சல் குளத்தில் தான் இவளும் நீந்தி விட்டு வந்திருப்பாள் போல! ஒரு முழங்காலைத் தாண்டி முக்கால் அளவு டிராக் பாண்ட்டும் தளர்வானன டி ஷர்ட்டும் அணிந்திருந்தாள். அந்த ஆடையிலும் அவள் கண்ணியமாக இருப்பதை அபியின் லேசர் கண்கள் இங்கிருந்து பார்த்து கொண்டு தான் இருந்தன.

நந்திதா மகளைப் பார்த்ததும் முகம் பிரகாசிக்க தன்னுடன் வரச் சொல்லி கை நீட்டி மகளை அழைக்க, அவளோ முடியாது என்ற தலையசைப்புடன் பப்லுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள் அவன் தாடையைப் பிடித்து கன்னத்தின் ஓரம் ஏதோ சொல்ல, அதை பபுல் நந்திதாவின் தாவட்டையைப் பிடித்துக் கொண்டு அவளிடம் மொழி பெயர்க்க, பின் அவளோ கோபத்தில் அவனின் கையைத் தட்டி விட்டு மறுப்பாக ஏதோ சொல்லித் தலையசைக்க, பப்லுவோ அவளின் கன்னத்தில் கை வைத்து கெஞ்சுவது போல் பேசியவன் பின்னர் அவள் முதுகில் தட்டி ஏதோ சமாதானம் செய்வது போல் பேசிவிட்டு மின்னலென வேணியுடன் குளத்தில் குதித்திருந்தான் பப்லு.

இதையெல்லாம் பார்த்து அக்னி குழம்பென நின்று கொண்டிருந்த அபிக்கு அப்பொழுது தான் தெரிந்தது மறுபடியும் ஸ்விம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் தான் வேணி தன்னிடம் வராமல் இருந்திருக்கிறாள் என்று. ஒரு ரவுண்டு முடித்து அவர்கள் இருவரும் மேலே வந்தவர்கள் தங்கள் கெஞ்சல் முகத்துடன் தலையை உலுக்கி நின்றிருந்த நந்தித்தா மேல் நீர் துளிகளைச் சிதற விட அவர்கள் இருவரின் கணிப்பு படியே அந்த செய்கைகள் அவளின் கோபத்தைக் குறைத்து மெல்லிய கீற்றாய் சிரிப்பை வெளிப்படுத்தியது.

அதன் பின் இவள் வேணியை ஒரு துவாலையால் துடைக்க, பப்லுவோ அவன் துடைத்துக் கொண்டிருந்த துவாலையால் நந்திதா மேல் சிந்தியிருந்த நீர் துளிகளைத் துடைத்து விட, இதையெல்லாம் ராஜ்ஜியம் இழந்த மகாராஜனின் மனநிலையுடனும் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் அணுகுண்டு நான் என்ற நிலையுடனும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் அபி.

நந்திதாவுக்குப் போன் வந்து அவள் சற்றே ஒதுங்க பபுல் வேணியுடன் வெளியே சென்று விடவும் அவள் பேசி முடிக்கும் வரை காத்துக்கொண்டிருந்தவன் அவள் பின்னால் நின்று “என்ன புருஷனும் பொண்டாட்டியும் பொதுயிடமென்று கூடப் பார்க்காமல் அப்படிக் கொஞ்சி கெஞ்சி பேசுகிறீர்கள்?” உள்ளே கனன்று கொண்டே அபி பேச, திரும்பிப் பார்க்காமலே அது அபிதான் என்பது நந்திதாவுக்குத் தெரிந்தது.

“புல் ஷிட்! how dare u talking like this? முதலில் ஒரு பெண்ணிடம் எப்படி நாகரீகமாப் பேசவேண்டுமென்று கற்றுக்கொள்ளுங்கள். அவர் என் நண்பர்” இவள் படபடக்க, அவன் நண்பன் தான் என்பது அபிக்குத் தெரியும். இருந்தாலும் அவள் முகம் தொட்டுத் தொட்டுப் பேசுவதற்கும் முதுகில் தட்டி கொடுக்குமளவிற்கும் அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது அவன் யார் என்ற ஆத்திரம் இவனுக்கு. அது தான் வழமையான ஒரு மூன்றாந்தர ஆண்களைப் போல இப்படிக் கேட்க வைத்தது.

“ஓ... நண்பனா? அது அவன் நெற்றியில் எழுதி ஒட்டியில்லையே. உன் நெற்றியிலாவது எழுதி ஒட்டியிருக்கிறதா? கணவன் வெளிநாட்டில் இருக்கிறான், கையில் குழந்தை, இங்கு வந்து கொஞ்ச நாள் தான் ஆகிறது. நண்பனென்று ஒருத்தன் பொது இடத்தில் இத்தனை பேர் பார்க்க தொட்டுத் தொட்டு சிரித்துப் பேசுகிறான். பிறகு பார்க்க எப்படி தெரியும்? இதையெல்லாம் நீ யோசிக்க மாட்டாய். நான் கேட்டால் புல் ஷிட்டா?” அவன் முடிப்பதற்குள் பொறுக்க முடியாதவளாய்

“லுக் மிஸ்டர் அபி! திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ். நான் யாருடன் தொட்டுப் பேசி சிரித்தால் உங்களுக்கென்ன? நான் ஒன்றும் உங்கள் அடிமை இல்லை.. நீங்கள் அதிகாரம் செய்வதற்கு!” என்று கை நீட்டி ஆவேசமாய் பேச, பதிலுக்கு அவனோ அதே ஆவேசத்துடன்

“ஆமாம்! நான் உன்னைக் கேள்வி கேட்பேன் தான்.. நீ எனக்கு அடங்கி பதில் சொல்லித் தான் ஆகவேண்டும். அதற்கென்ன இப்பொழுது? இதே எங்க வீட்டுப் பெண்ணாக இருந்திருந்தா கன்னம் பழுத்திருக்கும் என்று சொல்லி விலகிச் சென்றவன் என்னை யாரேன்று நினைத்த? never.. i am not like that. மறுமுறை இப்படி நடந்தது என்றால் உனக்கு மட்டுமல்ல அவனுக்கும் சேர்த்து கன்னம் பழுக்கும். understand?” என்று கர்ஜித்தவன் அங்கிருந்து ஒரு வேக நடையுடன் விலகிச் சென்றான் அபி.

நந்திதாவோ “என்ன திமிர்! என்ன ஆணவம்!” என்று பல்லைக் கடித்தவளால் இவனிடத்தில் மேற்கொண்டு என்ன பேசுவது செய்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றாள் அவள்.

இந்த சம்பவத்திற்குப் பின் இரண்டாம் நாள் காலை மிகவும் பரபரப்பாக இருந்தார் மணிமேகலை. துருவன் ஒரு முக்கியமான வேலை என்று காலையே கிளம்பிச் சென்று விட, அபியோ அமெரிக்காவில் இருக்கும் ஒரு நண்பனுடன் இரவு முழுக்க பேசி விட்டு தாமதமாகப் படுத்தவன் காலையில் அதே தாமதத்துடன் எழுந்து வந்து மறுபடியும் அதே நண்பனுடன் பேச அமர்ந்து விட

“என்னபா... சாப்பிடுகிறாயா?” தாய் கேட்க

“இருங்கள் மா.. ஒரு வேலை இருக்கிறது” மகன் பேச்சுக்கு சரி என்று அமர்ந்தவர், பின் இரண்டு முறை இப்படியும் அப்படியும் நடந்தபடி திரும்ப மகனிடம் வந்தவர், சற்று நேரம் பொறுத்து

“என்னப்பா... டிபன் வைக்கவா?” மறுபடியும் அவர் கேட்க

“அம்மா... முக்கியமான ஒரு வேலையை என் நண்பனிடம் கொடுத்திருக்கேன். அதனால் அவன் எப்போது வேண்டுமானாலும் மறுபடியும் போன் செய்வான். இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை? சாப்பிடு சாப்பிடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்!” இவன் சலித்தபடி சற்றே குரலை உயர்த்த

“டேய்... நான் எப்போதடா சாப்பிடு என்று சொன்னேன்? டிபன் வைக்கவா என்று தானே கேட்டேன்?” உனக்கு நான் தாய் டா என்ற முறையில் அவரும் குரலை உயர்த்த

“ப்ச்..... இப்போது உங்களுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. முக்கியமான வேலை ஏதாவது இருந்தால் போய் பாருங்கள். நானே உணவை எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்” இவன் சலித்தபடி சொல்ல

“அப்பாடா! பெரிய கழுதை, சந்தோஷம் டா! நீயே பார்த்துக்கொள் டா. நம் தங்கம் ஆன்ட்டி பெண்ணுக்கு உடம்பு சரியில்லையாம் டா....”

அவர் முடிக்கவில்லை “யார்? வேணியின் அம்மா நந்திதாவுக்கா?”

“ஆமாடா.... இது தெரியாமால் நேற்றே வேணி முதற்கொண்டு ஊரில் ஏதோ விசேஷமென்று எல்லோரும் கிளம்பிப் போய்விட்டார்கள் இவர் கூற

“அதுதான்.. அவள் தோஸ்து டாக்டர் எப்பொழுதும் அவள் கூடத் தானே இருப்பான்! அவன் எங்கே போனான்?”

“அந்த வெள்ளைக்காரப் பிள்ளைக்கும் ஏதோ வேலையாம். நைட் தான் வருவானாம். சாதாரணாமாக இருந்த ஜுரம் இப்போது அதிகமாக இருக்காம். டாக்டர் வந்து பார்த்துவிட்டுப் போய் இருக்கிறார். வேலைக்காரப் பெண் பயந்து போய் தங்கத்திடம் சொல்ல, தங்கம் என்னைப் பார்த்துக்கச் சொல்லி கேட்டார்கள். நீ எடுத்து வைத்து சாப்பிட்டுக்கொள் டா.... நான் போகிறேன்” அவசரம் அவசரமாக அவர் மகனிடம் சொல்ல

எந்த சலனமும் இல்லமால் “அம்மா.... என்னை விட அவள் தான் முக்கியமா? இவன் உரிமைப் போராட்டத்தில் இறங்க

“டேய்... டேய்... பெரியவனே! இப்படி எல்லாம் அநியாயம் பண்ணாதே டா. அங்கே உடம்பு முடியாமல் யாருமே இல்லாமால் தனியாக இருக்கிறவளைத் தானே டா பார்க்கப் போகிறேன்! இதில் எங்கே டா நீயா அவளா என்ற போட்டி வருகிறது?” என்று ஆதங்கப் பட்டவர் “கூடப்பிறந்த தம்பியுடன் கூட அனுசரித்துப் போகிறான். ஆனால் எங்கேயோ முகம் தெரியாத பெண்ணிடம் போய் போட்டிக்கு நிற்கிறான்” என்று புலம்பியவர் அவன் தாடையைப் பிடித்துக் கொண்டு, “டேய் தம்பி! எனக்கு நீ தானே டா முக்கியம்? சித்த ஒரு எட்டு போய் விட்டு வருகிறேன் டா” என்று கெஞ்ச

எத்தனையோ முறை வேணி தன்னிடம் கெஞ்சுவது போல் தன் தாயும் தன்னிடம் கெஞ்சுவதைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டவன், “இப்போது நான் போக வேண்டாமென்று சொன்னால் மட்டும் போகாமல் இருப்பீர்களா?” அவன் முடிப்பதற்குள் “டேய்” என்று இவர் முறைக்க


“முழுதாகச் சொல்ல விடுங்கள் மா. எப்படியோ போகத் தான் போகிறீர்கள். அதனால் போய் வாருங்கள் என்று தான் சொல்ல வந்தேன். போய் வாருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று இவன் அனுமதி தர, சிட்டாகப் பறந்து சென்றார் மணிமேகலை.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN