சாதி மல்லிப் பூச்சரமே!!! 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 9


எல்லா சடங்கும் நல்லபடியாக முடிய, தென்றலைப் பச்சை ஓலை மறைவில் அமர வைத்தார்கள். பட்டணத்தில் வளர்ந்த தென்றலுக்கு இதை பழக கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது. அந்த வீடு முன்வாசல், முற்றம், ரேழி என்று கட்டியிருக்கும். ரேழியைச் சுற்றியிருந்த பல அறைகளில் ஒன்றில் தான் தென்றலைத் தங்க வைத்திருந்தார்கள். அது ஒருவர் மட்டுமே புழங்கக் கூடிய சின்ன அறை. அந்த அறையை ஒட்டியே இரு பக்கமும் அறைகள். அந்த இரண்டு அறைகளைப் புழங்க இந்த அறை தான் வழி. பின்புறம் புழக்கடைக்குப் போகவும் இந்த அறையில் இருந்து பாதை உண்டு.


தென்றல் படுக்க பாய், தலையணை, போர்வை முதற்கொண்டு எடுத்துக் கொடுத்த தாமரை அண்ணன் மகள் தூங்கும் வரை சற்றுத் தள்ளி அமர்ந்து அவளிடம் பேசிக் கொண்டிருக்க,


அங்கு வந்த மாறன் “தாயி! காலைலலிருந்து ஸ்கூல்ல கத்திட்டு வாரவ. இப்போம் வேற ஒனக்கு நெறைய சோலி கெடக்கு. அதேன் நீ செத்த தூங்கு. நான் எம் மவ கிட்ட பேசிட்டு இருக்குதேன்” என்றவர் தாமரையை அனுப்ப


அதற்கு சம்மதித்து “பக்கத்து அறையிலதேன் இருக்கேன். எதுனா இருந்தா கூப்டுணே!” என்ற சொல்லுடன் விலகிச் சென்றார் அவர், இதற்கு மேல் மகள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தாயாய் தற்போது இருக்கும் மாறன் அறிவுரை சொல்ல, அதை கேட்டவள் சிறிது நேரத்திற்கு எல்லாம் தூங்கியே போனாள் தென்றல். மகளுக்கு வேண்டிய மின்விசிறிகளை அவள சுற்றி அணையாக வைத்தவர் பின் தானும் தூங்கப் போனார் அந்த பாசமிகு தந்தை.


தென்றலுக்கு இருந்த மன உளைச்சலாலும் உடல் அசதியாலும் கொஞ்ச நேரம் தான் அவளால் தூங்க முடிந்தது. பின் பழக்கம் இல்லாத இடத்தில் தனியே படுத்திருக்கும் பயத்தில் தூங்க முடியாமல் எழுந்து அமர்ந்திருந்தவளை அங்கு வந்த வேந்தன் பார்த்தவன், “என்ன பாப்பு உறக்கம் வரலையா?” என்க


அவன் குரலைக் கேட்டும், தன் நிலையிலிருந்து நிமிராமல் இவள் காலிலேயே முகம் புதைத்திருக்க, தன்னவளை அப்படி பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ? அவளை நெருங்கி தோளில் கை வைத்து “என்ன டா…” என்க


கண்ணீர் முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன யாரும் தொடக் கூடாதாம். நீ ஏன் இங்க வந்த? போ… அங்க இருக்க சேர்ல உட்காரு. எல்லோரும் அப்படி தான செய்றாங்க? சாப்பாட்டு தட்ட கூட அப்பத்தா யாருக்கோ வைக்கிற மாதிரி வச்சிட்டு போகுது தெரியுமா?” என்றவளுக்கு இன்னும் கண்ணீர் முட்டியது


அவள் பக்கத்தில் அமர்ந்து அவளைத் தன் தோள் சாய்த்தவன் “இங்கன இதுதேன் டா பாப்பு வழக்கம்” என்று அவன் நிதர்சனத்தைச் சொல்லி சமாதானம் செய்ய


அவளுக்கு கோபம் வர, “நீ மட்டும் ஏன் என்ன தொடுற? போ...” என்று கண்ணீர் குரலில் திமிர


தன்னவளை அடக்கி மடியில் படுக்கவைத்தவன் “அவிங்களும் நானும் ஒண்ணா?” என்று கேட்டவன் “இங்கன மட்டுமில்ல, எல்லா எடத்திலும் இதே பழக்கம்தேன் டா” என்று ஏதோ இவனுக்கு நாளும் தெரியும் என்ற தோரணையில் பெரியவனாய் அவளை மறுபடியும் சமாதானப் படுத்த


“அப்படி எல்லாம் இல்ல. என் பிரண்ட் வீட்டில் இப்படி எல்லாம் ஒதுக்கலனு அவ சொன்னா. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? என்னைப் பற்றி யோசிக்கவே மாட்டேங்கிறாங்க. இன்னும் ஏழு நாளைக்கு நான் இங்க தான் இருக்கணுமாம். அப்பா சொல்லிட்டுப் போறார். நான் ஊருக்குப் போறேன் மாமா. என்ன அனுப்பச் சொல்லு” என்று இவள் குரலில் பிடிவாதத்துடன் மறுபடியும் தேம்ப,


அவளை மடியில் படுக்க வைத்து தலை கோதியவன், “ஏழு நாள் எல்லாம் இல்லட்டி. நான் மாமாட்ட பேசுதேன். இன்னைக்கி நாளைக்கு ரெண்டு நாள் பொறுத்துக்கோ. மூணாம் நாள் சடங்கு வெக்கச் சொல்லுதேன், சரியா? இப்போம் அழாதமா” இவன் சமாதானத்திற்கு என்றில்லாமல் உண்மையாய் நடத்துவேன் என்ற உறுதியில் சொல்ல


“ம்ம்ம்....” என்றவள் சற்று நேரம் அமைதியாக இருந்தாள் தென்றல்,


பின் அவள் உடல் மொழியில் எதையோ உணர்ந்தவன் “பாப்பு! ஒடம்பு சொகமில்லயோ? இல்ல, என்ட்ட எதாச்சும் சொல்லணுமா?” என்று அக்கறையாய் கேட்க


அவளோ ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாய் இருக்க, அதைப் பார்த்தவன், “என்ன டா?” என்று அவன் குரல் உருகியது


அந்த குரல் அவளை என்ன செய்ததோ? “பாத்ரூம் போகணும் மாமா. ரொம்ப நேரமா இருக்கேன்... அத்தையைக் கூப்பிடவும் முடியல. பின்னாடி தனியா போகவும் ஒரு மாதிரி இருக்கு...” இவள் தயங்கித் தயங்கிச் சொல்ல


“என்ட்ட ஒனக்கு என்ன தயக்கம் பாப்பு?” என்று அன்பாய் கடிந்து கொண்டவன் அவளை அழைத்துச் சென்று திரும்பி வரும் வரை காத்திருந்து அழைத்து வந்தவன், அவள் நெற்றியில் பொட்டு இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவன் வைத்துக் கொடுத்த சீர்வரிசைத் தட்டு அங்கிருக்க, அதிலிருந்து சாந்தை எடுத்து தன்னவளின் நெற்றியில் பொட்டாய் வைத்து விட்டவன் “வீட்ல இருக்குத சமயம் சாந்து வெச்சுக்க பாப்பு. அதே வெளிய எங்கிட்டாச்சும் போகும்போது ஒட்டு பொட்டு வெச்சிக்க. பாரு, எம்புட்டு அழகா இருக்கறவ!” என்றவன் தட்டிலிருந்த கண்ணாடியை எடுத்து அவள் முகத்துக்குக் காட்ட


அவளோ எதுவும் சொல்லாமல் படுக்கப் போக, பிடிவாதமாக அவளைத் தன் மடியிலேயே படுக்க வைத்துக் கொண்டான் அந்த காதலன். எத்தனை உறவுகள் அவளைத் தாங்கினாலும் இப்படி மடி தாங்கி தலை கோதி என்ன என்று கேட்டது இவன் மட்டும் தானே? அதனாலேயே என்னவோ மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் சொல்லி விட்டாள் அவள். அதன் பிறகே தான் அவனிடம் அழுதது புரிய, பிறகு அவளிடம் அவன் எவ்வளவு பேசியும் தென்றலிடம் மவுனம்.... மவுனம்.... மவுனம் மட்டுமே!


அவனுடைய வாலிப இந்த வயதிலே… அவளிடம் முழுமையாக தன் காதலை வெளியிடாத இந்த நிலையிலும் தன்னவளுக்காக அவளின் சுகத்திற்காக எதையும் பார்த்து பார்த்து செய்ய வைத்தது அவன் காதல் கொண்ட மனம். மறுநாள் தன் தாயிடம் வேந்தன் என்ன சொன்னானோ? அன்று இரவு படுக்கும் போது தென்றல் அறையிலே ஒரு பக்கம் பாய் விரித்து படுத்துக் கொண்டார் தாமரை. அதே போல் மூன்றாம் நாளே அவளை வீட்டுக்கு அழைத்துக் கொள்வது என்று முடிவானது. இப்படி எல்லாம் எல்லோரையும் செய்ய வைத்து அப்போதே தன் மனைவியைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான் அன்றைய பத்தொன்பது வயது வேந்தன்.


மூன்றாம் நாள் சடங்கின் போது தென்றலின் சித்தி சித்தப்பா வந்து விட, விசேஷம் சிறப்பாகவே முடிந்தது. எல்லாம் முடியவும் அன்றே மகளை மட்டுமில்லாமல் வேந்தனையும் அழைத்துக் கொண்டு மாறன் கோவிலுக்குச் செல்ல, வழியில் “என்னவே மாறா! மவளையும் மருமவனையும் கூட்டிட்டு வெளிய கெளம்பிட்டீரு போல” என்று சிலரும் “நல்ல சோடிதேன்” என்று ஒரு சிலரும் “ஒனக்கு என்னலே மவள கெட்டிக் குடுத்து கூடவே வெச்சிக்கப் போகுத” என்று பலரும் வாய் ஓய்ந்து போக, மாறனுக்குப் பெருமையாகவும் வேந்தனுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.


ஆனால் இப்படி ஊரார் சொல்வதைக் கேட்ட தென்றலுக்கு மனதிற்குள் சுணக்கம் இருந்தாலும் அதைப் பெரியதாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ராஜாத்தி அம்மாள் மாறனின் பாட்டி சும்மா இல்லாமல் “எய்யா மாறா! தோ, ஒன் பொண்ணு ஒக்காந்துட்டா. வாய்க்கு வாய் மாப்ளனு நீ கூப்பிடுத என் கொள்ளுப் பேரனும் தோ இருக்குதான். பொறவு என்னடே? நமக்கு இருக்குத சொத்தே போதும்டே. படிப்பு கிடிப்புன்னு இழுத்தடிக்காம இன்னும் ரெண்டு வருசத்துல அதுங்களுக்கு கல்யாணம் பண்ற வழியப் பாருய்யா.


என் கொள்ளுப் பேரன் பேத்திய தூக்கிட்டேன். வெரசா என் எள்ளுப் பேரனையோ இல்ல பேத்தியையோ தூக்குனாதேன் இந்தக் கட்டை மண்ணுல சாயும் நல்லா கேட்டுக்கிடு” என்றவரோ தன் ஆசையை நீட்டி முழக்க


மாறனோ “அதுக்கு என்ன அப்பத்தா? செஞ்சி முடிச்சிருவோம். சீக்ரமே முடிக்குதேன்.. நீங்க கவலையே விடுங்க..” அப்பத்தாவுக்கு சமாதனமாய் இவர் வாக்கும் கொடுக்க


தந்தை சொன்னதைக் கேட்டு மட்டுமில்லாமல் மதிவேந்தனும் எதுவும் மறுத்து வாயே திறக்காததால், கூடவே வீட்டில் உள்ள மற்ற சொந்தங்களும் எப்போதடா அந்த வைபவம் என்ற எண்ணத்தில் ஆர்ப்பரிக்க தென்றல் மனதிற்குள் அன்று ரயில் வண்டியே ஓடியது. அவளுடைய சின்ன வயதிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்பது அவளுக்கு சகஜம் தான்.


அப்போது எல்லாம் அவளுடைய பாட்டியோ “நீ வேணாம் என்று ஆணித்தரமா மறுத்து சொன்னா இது நடக்காது லிஸ்மிதா” என்று அன்று சொன்ன போதனையை நம்பி இருந்தவளுக்கு இன்று உள்ளுக்குள் ஆட்டம் கண்டது. ‘என்னது பதினைந்து வயசுல கல்யாணமா? அதுவும் படிப்பை நிறுத்திட்டு! முடியவே முடியாது… அதற்கு நான் இனி இங்கு வந்தா தான திருமணம் நடக்கும்? தென்றல் எக்காரணம் கொண்டும் இந்த பக்கம் வந்திடாதே டி’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், இத்தனை நாள் வேந்தனிடம் காட்டிய நெருக்கத்தைக் கை விட்டு அவனைக் கண்டாலே முன்பு போல் மனதால் வெறுத்து ஓடி ஒளிந்தாள் அவள்.


பொதுவாக கிராமத்தில் பாட்டிகள் இப்படித் தான் பேசுவார்கள் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அதற்கு சும்மா என்று அவருக்கு பதில் கொடுக்க தன் தந்தை கொடுத்த பதில் தான் இப்படி என்பதையும் அவள் உணரவில்லை. பதிமூன்று வயது பாலகியான அவளுக்கு உறவுகள் பற்றி அவள் பாட்டி மூட்டி விட்டதில் விரோதத்தை மறந்து இந்த முறை வந்த போது அவள் பேசியதே அதிகம். இதில் அந்த வயதில் மதிவேந்தன் மேல் எங்கிருந்து அவளுக்கு காதல் வரும்? காதல் வரக் கூடிய வயதா அது?


தென்றல் ஒதுங்குவதைப் பார்த்தவன், இப்போது அவளுக்கு இருக்கும் மன உளைச்சல் காரணமாக இப்படி நடந்து கொள்கிறாள் என்று நினைத்த வேந்தன் அவளிடம் பழைய மாதிரி சீண்டாமல் இருக்க முடிந்தவனால், அவள் ஊருக்கு கிளம்பும் அன்றைக்கு அதே நிலையில் அவனால் இருக்க முடியவில்லை. அதிலும் அவளைக் கன்னம் குழிய சிரித்துப் பேசி பார்த்தவனால் அவளுக்குத் தன் கையால் நலங்கு வைத்துப் பொட்டிட்டு கழுத்தில் அட்டிகை பூட்டியவனால் அந்த பத்தொன்பது வயது மீசை முளைக்காத ஆண் மகனுக்கு தனக்கு என்ன நடந்தது என்று புரியாமல் திரிந்தவனுக்கு, அந்த நிலையில் அவள் ஊருக்குப் போவதற்குள் அவளுக்கு எதையோ உணர்த்த நினைத்தானோ இல்லை தன்னைத் தானே எதையோ உணர நினைத்தானோ? எதுவோ அவனை அப்படி ஒரு செயலைச் செய்ய வைத்தது... ஆனால் அச்செயலால் தென்றல் அவனிடமிருந்து மனதால் விலகிச் சென்று விடுவாள் என்று அவனுக்கு தெரியவில்லை.


விடிந்தால் அந்த காலை நேரத்திலேயே தென்றல் ஊருக்கு கிளம்பி விடுவாள். இவனோ இன்று தூத்துக்குடி வரை சென்று விட்டு இரவு தான் வீடு வந்தான். அதற்குள் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கி இருக்க. தென்றலும் அவள் அறையில் தூக்கத்தில் இருந்தால்… காலையில் இருந்து தன்னவளின் முகம் காணாமல் போனது… இரண்டோர் வார்த்தை பேச முடியாமல் போனது… நாளையும் வீட்டினர் முன் பேச வாய்ப்பு இருக்காமல் போக இருப்பதால்… அவளுக்குப் பிடிக்குமே என்று மக்ரூன் (முந்திரி மைதாவால் செய்த தூத்துக்குடி ஸ்பெஷல் இனிப்பு) வாங்கி வந்தவன், அதை இப்போதே தன்னவளிடம் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் வர...


வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அந்த பாக்கெட்டைப் பல்லால் கடித்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் தன் சொந்த வீட்டிலேயே திருடன் போல் தென்றலின் அறைக்கு பால்கனி பக்க பைப்பில் இதோ ஏறி விட்டான் நம் நாயகன். இல்லை இல்லை பூந்தென்றலின் காதலன்!


அவள் அறைக்குள் வந்தவனுக்கு அவன் வயதிற்கே உள்ள பயத்தில் கைகள் சில்லிடத் தான் செய்தது. ஆனால் அவனுடைய அடாவடி குணம் அதைப் போக்க, அங்கே கட்டிலில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன், ‘நான் இங்கன கோட்டி புடிச்சி சுத்திட்டு கெடக்குதேன்... இவ நிம்மதியா தூங்குறத பார்லா’ என்று உள்ளுக்குள் நொடித்தவன்


கட்டிலில் அமர்ந்து அவள் காலைத் தன் மடியில் வைத்து அடி பாதத்தைச் பதமாய் சுரண்ட, ம்ஹும்! இதற்கு எல்லாம் அவன் தேவதையான கும்பகர்ணி அசைந்தால் தானே? ஒருவர் தூங்கும்போது நாம் அவர் உடலில் எங்கு தட்டி எழுப்பினாலும், மூளைக்கு உடனே தகவல் சென்று அதனுடைய பதிலில் தூங்குபவர்கள் அதிர்ச்சியில் விழிப்பார்களாம். அதே அவர்களுடைய அடி பாதத்தில் கை பதித்து எழுப்பினால் நிதானமாக விழிப்பு தட்டும் என்பதை எப்போதோ வேந்தன் படித்திருக்கிறான். அதனால் தான் தன் தேவதையை நிதானமாக எழுப்ப அவன் முயற்சி செய்ய, அவளோ அவனின் மூன்றாவது சீண்டலுக்குத் தான் கண் விழித்தாள் தென்றல்.


அவனைப் பார்த்ததும் அடித்துப் பிடித்து எழுந்தவள், “ஏய்! நீ எப்படி என் அறையில? அதுவும் இந்த நேரத்துல.. எப்படி வந்த?” இவள் அலற, ஏனென்றால் அவள் அறை உள் பக்கம் தாழ் போட்டிருந்தது.


“பாப்பு! பாப்பு! ப்ளீசு ப்ளீசு! கத்தாதட்டி. நான் ஒன்ட்ட பேசறதுக்காண்டி வந்தேன் புள்ள” இவன் அவசரமாய் அவளிடம் சமாதானம் பேச


அவனை முறைத்தவள், “நீ முதல்ல வெளியே போ. பேசுற நேரத்த பார்! நமக்குள்ள பேச என்ன இருக்கு?” முன்பை விட இவள் இன்னும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய


எட்டி பிடித்து அவளை சுவற்றில் சாய்த்து தன் கையால் அவள் வாயைப் பொத்தியவன், “இங்க பார்லா… நான் பேசத்தேன் வந்தேன். இப்போம் நீ கத்துனா எனக்கு ஒண்ணுமில்ல. வீட்ல இருக்கவைய்ங்க எழுந்து வந்து பாப்பாக. ஒடனே இந்த நிமிஷமே நம்ம ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் செஞ்சி வெச்சிடுவாக. போன மாசந்தேன் என் சேக்காளி ஒருவன் அவன் ஆளப் பாக்க இப்டி செய்ய, அந்த நிமிசமே.. அவனுக்கு கல்யாணம் நடந்து போட்டுதாம்! என்ன சொல்றவ? நாமும் கல்யாணம் பண்ணிக்கிடுவோமா?” கொஞ்சம் கூட அசராமல் இவன் இடக்காய் தன்னவளிடம் கேட்க


எந்த திருமண என்ற பேச்சுக்கு அவள் பயந்தாளோ அதையே அவன் சொல்ல, விழி பிதுங்க உடல் நடுங்க அப்படியே பொம்மை என நின்றாள் தென்றல். தன் கை விலகியுமே ஆர்ப்பாட்டம் செய்யாமல் நின்ற பாட்டிலே அவள் இருப்பதைப் பார்த்தவன், அவளைத் தொடாமல் தள்ளி நின்று, “எனக்கு நீ போறது கஷ்டமா இருக்கு பாப்பு. ரொம்ப... ரொம்ப... கஷ்டமா இருக்குடி. நான் நானா இல்ல… என்னனு தெரியல… இந்த வார்த்தைய நான் சொல்லிட்டா நான் நானா மாறிருவனோ?” என்று கேள்வி கேட்டவன் அடுத்த நொடியே உடனே பதிலாக அவள் முகத்தைத் தன் கையில் ஏந்தி, “ஐ லவ் யூ டி பொஞ்சாதி! ஐ லவ் யூ டி!” ஆத்மார்த்தமாக உணர்ந்து முதன் முதலாய் சொன்னவன், அவள் இரண்டு கன்னத்திலும் முத்தமிட, பெண்களுக்கே உள்ள பாதுகாப்பு உணர்வாய் அவள் அவனை விலக்க


அதை உணர்ந்தவனாக “தப்புதேன்…”என்று அவளை விட்டு விலகியவனோ, “ஆச்சி சொல்லுத மாதிரி ரெண்டு வருசம் கழிச்சி கல்யாணம் எதுக்குட்டி? இந்த நிமிஷமே கல்யாணம் பண்ணி ஒன்னைய என் கண்ணுக்குள்ள வெச்சிக்க நெனைக்குதேன்...” அவனுடைய காதல் கொண்ட மனது இந்த நிமிடம் இப்படி தான் ஏங்கியது “ஆனா அதுக்கான வயசு நம்ம ரெண்டு பேத்துக்குமே இல்ல. அதுவுங்கூடி நீ படிக்கணும், நெறைய சாதிக்கணும். நம்ம பிள்ளைகள அப்பதேன் மெரட்ட முடியும். முச்சூடும் அம்மையும் பிள்ளைகளும் இங்கிலீஸ்ல பேசிக்கிடணும். நான் அதப் பாத்து அதுக்கு வெளக்கம் தெரியாம முழிக்கணும்” ஒரு நிமிடம் கண்ணை மூடி தங்களின் எதிர்காலத்தைப் பற்றி உணர்ந்து அவளுடனான தன் கனவைச் சொன்னவன்,


“இது அம்புட்டும் நடக்கும். ஒன் மாமன் நடத்திக் காட்டுதேன்” உறுதிபட சொன்னவன் அவன் எடுத்து வந்த மக்ரூன் பாக்கெட்டை அவள் கையில் திணித்து விட்டு அவளிடம் பேசிவிட்ட சந்தோஷத்தில் அவளின் மனநிலை தெரியாமல் வந்த வழியே அவன் சென்று மறைய.


சிலையென சில வினாடிகள் அப்படியே நின்றாள் தென்றல். பின் உணர்வு வரப் பெற்றவளுக்கு கண்ணில் நீர் வழிய தன் கையில் அவன் திணித்துச் சென்றதை தூக்கி விசிறி எறிந்தாள். அவன் சொன்ன காதலையும் கூடத் தான்! அவளே குழந்தையும் இல்லாத குமரியும் இல்லாத இடையில் இருக்கும் பதிமூன்று வயது பாலகி! தன் மாமனிடம் அவள் குழந்தை என்று பரிந்து பேசியவனுக்கு… இந்த வினாடி அவள் மேல் உள்ள அதீத காதலால் அதை மறந்து போனான்…. இந்த வயதில் திருமணம் செய்யக் கூடாது என்று தெரிந்த வேந்தனுக்கு காதல் பற்றி அவளிடம் பேசவும் இது உரிய வயது இல்லை என்பதை அவன் உணரவில்லை. இது படிக்கும் வயது. அதற்கு உரியதை மட்டும் தான் ஆணோ பெண்ணோ நினைக்க வேண்டும் மற்றதில் எந்த வயதிலுமே சலனப் படக் கூடாது என்பதில் தென்றல் தெளிவாய் இருந்தாள்.


அவன் சொன்ன காதலாலும், திருமணம் என்ற பேச்சு, அவன் கொடுத்த முத்தம் என்று இப்படி எல்லாம் சேர்ந்து தென்றலை இந்த ஊர் பக்கம் அதிலும் இவன் இருக்கும் பக்கம் இனி வரவே கூடாது என்ற முடிவை எடுக்க வைத்தது. மறுநாள் காலை அவள் சென்ற பிறகு அவளின் நினைவாக வேந்தன் அவளின் அறையை வந்து பார்க்க, அவன் கொடுத்த மக்ரூன் தரையில் சிதறி எறும்புக்கு உணவாகிக் கொண்டிருந்தது.
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 9
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN