உன்னுள் என்னைக் காண்கிறேன் 26

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் – 26



அன்றைய விடியல் அழகாக விடிந்தது! அது ஆண்கள் பெண்கள் என்று இருபாலரும் படிக்கும் பொறியியல் கல்லூரி. அந்த ஆண்டிற்கான கல்லூரியின் முதல் துவக்கநாள் என்பதால் இத்தனைநாள் பிரிந்திருந்த பிரிவுத்துயரைப் போக்க ஒருவரையொருவர் கட்டித்தழுவி நலம் விசாரிக்கும் நண்பர்கள் கூட்டம் ஓர்பக்கம், இன்றுதான் முதல்நாள் என்பதால் ‘ஐய்யோ… நம்மள ராகிங் செய்வார்களோ?! கல்லூரி வாழ்வு எப்படி இருக்கப்போதோ?!’ என்று பயந்துகொண்டு தன் அடி எடுத்து வைக்கும் மாணவர்கள் ஓர்பக்கம், புதுசா வந்த ஜுனியர்களை சீனியர்கள் ராகிங் செய்ய ஆட்டம்பாட்டம் என்று களைகட்டும் கூட்டம் ஒருபக்கம்,



பட்டாம்பூச்சிகள் போல் வண்ண ஆடையில் வலம்வரும் பெண்களை கண்களாலேயே அளவெடுத்து மார்க்போடும் ரோமியோக்களுக்குப் பட்டபெயர் வைத்து திட்டிவிட்டுச் செல்லும் ஜூலியட்கள் ஒருபக்கம் என்றிருக்க



அந்தநேரம் மஞ்சள்நிற காட்டன் புடவையில் திருத்தப்படாமலே வில்லாய் வளைந்த இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் சின்ன ஸ்டிக்கர் பொட்டு அதன்மேல் ஓர் சந்தனகீற்று காதில் சிறிய அளவே என்றாலும் நேர்த்தியான கம்மல் கழுத்தில் மெல்லிய ஷார்ட்செயின் வலதுகையில் அதே மெல்லிய இரண்டு வளையல் இடதுகை மணிக்கட்டில் கைக்கடிகாரம் யூஷேப்பில் வெட்டப்பட்ட முடியை சற்றே முன்புறம் மட்டும் எடுத்து ஓர் சின்னகிளிப்பில் அடக்கிவிட்டு மீதியை முதுகில் புரளவிட ஸ்டைலான கூலிங்கிளாஸ் ஹெட்செட்டில் பாடலை கேட்டுக்கொண்டே ஒருத்தி நீலநிற ஸ்கூட்டியில் அந்த கல்லுரி வளாகத்தினுள் நுழைய,



அதுவரை அவரவர் பேச்சிலிருந்த அனைவரும் ஓர் வினாடி நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க, ஜூனியர்களை ராகிங் செய்த சீனியர்கள் அவர்களை அதைஎல்லாம் செய்யவேண்டாம் என்று தடுத்து நிறுத்தி தன் நண்பர்களுடன் வேறு கதை பேச, கேட் திறக்கும் வாட்ச்மேன் முதல் வேறு சில ஊழியர்கள் வரை அந்த ஸ்கூட்டியில் வந்தவளிடம் சிநேகமாய் சிரிக்க, இதையெல்லாம் பார்த்த புதிதாக சேர்ந்திருக்கும் மாணவர்களில் ஒருவன் “யாருடா இவங்க, பிரேமம் படத்தில் வர்ற மலர் டீச்சர் மாதிரி இவங்களும் இந்த காலேஜ் மலர் டீச்சரோ?!” என்றுகேட்க,



“அவ மலர்லாம் இல்ல! சரியான சண்டைக்கோழி!” - இறுதியாண்டு மாணவனானதீபக்



“ஓ… அப்ப இந்த காலேஜில் பி.டி டீச்சர் கூட இருக்காங்களா?” – புதிதாய் சேர்ந்த மாணவன் அப்பாவியாகக் கேட்க



“டேய், அதெல்லாம்இல்லடா!” - தீபக்



“அப்ப யாரோ ஒரு ஹெச்.ஓ.டியோட பொண்ணா இருக்கும்!” - புதுமாணவன்



“அதுக்கும் மேலடா! ஹி… ஹி…. இல்லடா மாப்பிள்ளை?!” - ரவி அருகிலிருந்த நண்பனான தீபக்கைச் சீண்ட



“டேய் ரவி சும்மா இருடா!” - தீபக்



“அப்ப இந்த காலேஜ் டீன் – னோட பொண்ணா?” - புதுமாணவன்



“அதுக்கும் மேலடா!” – செல்வா தீபக்கை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொல்ல



“டேய்.. டேய்.. போதும் சும்மா அடங்குகடா! எதுக்குடா என் பியூட்டிய வார்ரீங்க? ஆமாடா... என் பியூட்டி எல்லாத்துக்கும் மேலதான்! டேய் ஃபர்ஸ்ட் இயர் தம்பிங்களா, நல்லா கேட்டுக்கங்க! அவ பெயர் மித்ரஹாசினி. தேர்ட் இயர் ஸ்டூடன்ட். ஷி ஸ் மை பியூட்டி!” - தீபக் சொல்ல



“ஹி… ஹி…. மாப்பிள, இவர் பியூட்டி யான் டா அது!” – செல்வாவும் ரவியும் கோரசாகச் சொல்லி ஹைபை கொடுக்க, அவர்கள் இருவரையும் கொலைவெறியுடன் முறைத்தான் தீபக். இப்படிச் சுற்றி நடப்பது எதையும் அறியாமல் கேட்காமல் காதில் வழிந்த பாட்டைக்கேட்டு ரசித்தபடி மெதுவாக ஸ்கூட்டியில் உள்ளே சென்றுகொண்டிருந்தாள் மித்ரா.



பாட்டை ஹம் செய்துகொண்டே கொன்றை மரத்தின் நிழலில் அங்கு உதிர்ந்திருக்கும் மஞ்சள்நிற பூவில் ஒரு பூவாக வந்து தன் வண்டியை நிறுத்தி சைட்ஸ்டாண்டு போட்டு இவள் நிமிர, “மித்ரா! மித்ரா!” என்று அவளை தூரத்திலிருந்தே கூப்பிட்டுக் கொண்டு ஓடிவந்தான் தீபக்.



வந்தவன் மூச்சிறைக்க ஏதோ சொல்ல, தான் கேட்டுக்கொண்டிருந்த பாட்டை நிறுத்திவிட்டு அவள் அவனைப் பார்க்க “என்ன மித்ரா, நான் அங்கிருந்து கூப்பிட்டுவர்றது உனக்குக் கேட்கலையா?” - தீபக்



உடனே அவள் தன் வலதுகாதில் இருந்த ஹெட்போன் ஒயரை எடுத்து அவனிடம் காட்டியவள் குனிந்து சீட்டின் கீழிருந்த லாங்சைஸ் நோட் மற்றும் பர்சை எடுக்க, அவள் தனக்கு வாயால் பதில் சொல்லாமல் செய்கையிலேயே பதில் சொல்லவும் மனதுக்குள் கடுப்பானாலும் வெளியே அதைக் காட்டாமல் “அப்பறம்மித்ரா..” என்று தீபக் ஏதோ சொல்லவர,



தன் வலதுகையை உயர்த்தி அவனைப் பேசவிடாமல் தடுத்தவள் “இப்ப என்ன கேட்கப்போற? காலைல சாப்டியா? எப்படி இருக்க? ஒழுங்கா வண்டி ஓட்டிகிட்டு வந்தியா? இதெல்லாம் தான! நீயும் ரெண்டு வருஷமா காலைல என்ன பார்க்கும்போது எல்லாம் இதைத்தான் கேட்டுட்டு இருக்க... ஆமாம், இது உனக்கு பைனல் இயர் தான தீபக்? இந்த இயரோட உனக்கு காலேஜ் லைப் முடிஞ்சிடும் இல்ல? தேங்காட்! அடுத்த வருடம் நீ இப்படி தினமும் பாடுற பாட்ட கேட்கமாட்டேன்” என்று குரலில் துள்ளலுடன் சொன்னவள், தன் இரண்டு கையையும் நமஸ்கரிப்பது போல் கோர்த்துக் கண்ணால் வானத்தைக் காட்டிகையை ஏற்றி இறக்கி சின்னதாக ஓர் கும்பிடு போட்டுவிட்டு அவனைப் பார்க்க, உள்ளுக்குள் அதை ரசிக்கவில்லை என்றாலும் வெளியில் சிரித்து மழுப்பியவன் திடீர் என்று “நான் உனக்கு எத்தனை தடவை சொல்றேன், புடவை கட்டாதனு! சொன்னா கேட்க மாட்டியா?” என்று குரலில் ஓர் உரிமையுடன் கேட்க



அவனுக்குப் பதிலாக “ம்சூம்..” என்று உச்சுக் கொட்டியவள், தன் வலதுபுற தோளில் சரிந்திருந்த கூந்தலைத் தன் வலதுகையாலே உதறிப் பின்னுக்குத் தள்ளியவள் அங்கிருந்து நகரப் பார்க்க, அவளுக்கு முன்னே வந்து வழிமறித்து நின்றவனோ “ஸாரில நீ பார்க்க அவ்வளவு அழகா இருக்க மித்ரா! அதுக்காகத் தான் சொல்றேன்” அவள் ஏன் என்று கேட்காமலே மயக்கும் குரலில் இவனே சொல்ல, அவனைச் சுட்டெரிப்பது போல் நிமிர்ந்து பார்த்தவளோ “அத நாளைக்கு என்ன கட்டிக்கப் போறவரு வந்து சொல்லட்டும். அப்ப நான் கேட்டுக்கிறேன்” என்று அமர்த்தலான குரலில் இவள் சொல்ல, அந்தக் குரலோ ‘என்றும் நீ எனக்குத் தூரதான்’ என்று சொல்லாமல் சொல்லியது அவனுக்கு.



பின் அவனைச் சுற்றிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தவள் எதிர்ப்பட்ட வாகனங்களைப் பாதுகாக்கும் வாட்ச்மேனிடம், “என்ன அண்ணா, உங்க மாப்பிள இப்ப எப்படி இருக்கார்? ஒழுங்கா வேலைக்குப் போறாறா? அவர் மறுபடியும் குடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க, திரும்ப ட்ரீட்மெண்ட் கொடுத்து அவரைச் சரி பண்ணிடலாம்” என்று இவள் சொல்ல



“இல்லமேடம்! நீங்க கூட்டிட்டுப் போய் அவர ஓர் இடத்தில காட்டினதுலயிருந்து இப்ப அவரு ஒழுங்காதான் இருக்கார். என் பொண்ணையும் நல்லா பார்த்துக்கறார்” என்று அவர் கனிவுடன் சொல்ல



“உங்களுக்கு எத்தன தடவை சொல்றது அண்ணா? நான் உங்கள விட சின்னவ. என்ன மேடம்னு சொல்லாதிங்கனு!” என்று அவள் சற்று குரலில் அழுத்தத்துடன் சொல்ல



“ஹி… ஹி…. அது பழகிடுச்சிமா” என்று அவர் தலையைச் சொரிய, “என்னமோ போங்க...” என்று பதில் சொல்லிச் சென்றாள் மித்ரா.



அவள் விலகிச் சென்ற பிறகும் அதே இடத்திலேயே நின்று போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த தீபக்கிடம் நெருங்கிய ரவியும் செல்வாவும் “என்ன மாப்பிள, இன்னைக்கும் அவகிட்ட மொக்க வாங்கினியா?” என்று இருவரும் கோரசாகக்கேட்க



‘ஆம்’ என்று தலையாட்டினான் தீபக்



“நான் தான் சொல்றேன் இல்ல? அவ சரியான ராங்கிக்காரி! திமிர்பிடிச்சவ! - செல்வா



“அந்த திமிர் தான்டா எனக்குப் பிடிச்சிருக்கு” - தீபக்



“அதுக்காக ஒவ்வொரு முறையும் கல்லால அடிச்சித் துரத்தாத குறையா உன்ன துரத்திட்டே இருக்கா. இதெல்லாம் அசிங்கமா படலையா உனக்கு?” - ரவி



“காதல் வந்தா எல்லாரும் அப்படிதான்” - தீபக்



“என்ன காதலோ?! உன் காதல அவ புரிஞ்சிக்கவும் இல்ல ஏத்துக்கவும் இல்ல. பிறகு உனக்கு மட்டும் எதுக்கு அவமேல காதல்? எவ்ளோ சொன்னாலும் நீ திருந்தப்போறது இல்ல! உன்கிட்ட சொல்றது டெட்வேஸ்ட்” என்று அலுத்துக் கொண்ட செல்வா “வா மச்சான், நாம போகலாம்” என்று சொல்லி ரவியை அழைத்துக்கொண்டுச் செல்ல, தன் கண்களை மூடித்திறந்து ஓர் பெருமூச்சுடன் அவர்கள் பின்னே சென்றான் தீபக்.



மித்ரா கட்டிடத்தினுள்ளே செல்ல படிக்கட்டில் காலை வைக்கும்போது, “மித்ராபாப்பா! மித்ராபாப்பா!” என்று அழைத்த படி ஓடிவந்தார் அங்கு தோட்டவேலை செய்யும் தங்கம். திரும்பியவள் அவரைநெருங்கி, “என்ன கோல்டு? எதுக்கு இவ்வளவு அவசரமா கூப்டுறிங்க?” என்று கேட்க.



“பாப்பா, என் பொண்ணு படிப்புக்கு யாரோ ஒரு நல்லவங்க உதவி செய்வாங்கனு சொன்னியே! எப்போ பாப்பா அவங்கள போய் பார்க்கலாம்? என்கிட்ட பேச எதாவது நம்பர் இருக்கானு கேட்டஇல்ல? என்மச்சினன்கிட்டபோனுஇருக்கு. அவர் நம்பர கேட்டு வாங்கிட்டுவந்தன். நீஎப்போவேணாகூப்பிடு, அவங்க என்கிட்ட கொடுப்பாங்க நான் பேசறேன்” என்று சொன்னவர் தன் முந்தானையில் முடித்து வைத்திருந்த சின்னதாக சுருட்டியிருந்த காகிதத்தை எடுத்து அவளிடம் கொடுக்க, அதை வாங்கியவள் “சரி கோல்ட், நான் இத சேவ் பண்ணிக்கிறேன். நான் அவங்க கிட்ட பேசிட்டேன், உதவி செய்றனு சொல்லிட்டாங்க. அதனால உங்க பொண்ணு படிப்ப பத்தி கவலைவேண்டாம்! நான் கூட நீங்க அவசரமா கூப்பிடவே, அந்த புரொபசர் தான் மறுபடியும் உங்ககிட்ட வாலாட்டிட்டானோனு நினைச்சிட்டேன்!” என்று மித்ரா சொல்ல,



“யாரு அந்த வழுக்கை தலையனா? நானே புருஷன இழந்துட்டு மூனு பொட்டபுள்ளைங்கள கரசேர்க்க இங்க வந்து தோட்டவேலை செய்றேன். என் அப்பா வயசு இருக்கும் அவனுக்கு, என் நெலமையைப் பார்த்து என்கிட்ட வந்து வம்புவளத்தான். இப்போ என்னக் கண்டாலே தெரிச்சி ஓடறான். ஆனா பாப்பா உனக்கு இருக்கிற தைரியம் யாருக்கும் வராது. அவன் என்கிட்ட அப்படி நடந்தத நான் உன்கிட்ட சொன்ன உடனே, என்ன அவன்கிட்ட பேச வெச்சி நீ சொன்ன இடத்துக்கு என்மூலமாவே வரவெச்சி அவன் என்கிட்ட பேசினது எல்லாம் அவனுக்கே தெரியாம வீடியோ எடுத்து அதை அவன் மனைவிக்கும் இந்த காலேஜ் அதிகாரிக்கும் போட்டுக்காட்டி மிரள வச்சிட்டியே! இதுக்கப்பறம் அந்த ஆள் என்பக்கம் திரும்புவானா என்ன?!” என்று நிம்மதி கலந்த குரலில் மகிழ்ச்சியாக ராகம் பாடி அவர் கூற



பதிலுக்கு மித்ரா மெல்லிய புன்னகையைச் சிந்திவிட்டு விலக, “பாப்பா இன்னைக்கு என்ன விசேஷம், புடவை கட்டி இருக்க?” - தங்கம்



“இன்னைக்கு எங்க அம்மாவுக்கு பிறந்தநாள் கோல்ட். அதான் கோவில் போய்ட்டு வரேன்!” என்று சிரித்தமுகமாக மித்ரா சொல்ல



அதைப் பார்த்தவரோ “ஐய்யோ…. கண்ணு, பார்க்க அப்படியே தங்கசிலை மாதிரி இருக்கியே! உன்ன கட்டிக்கப்போறவன் குடுத்துவச்சவன்! ஆனா எந்த ஊர் ராசானுதான் தெரியலையே?! ” என்று கூறி அவள் முகம் வழித்துநெட்டிமுறிக்க



“ராசா எல்லாம் இல்ல, செப்புதான் வருவாரு” - மித்ரா



“என்ன?….” என்று அவர் முழிக்க



“பின்ன, நான் தங்கம்னா அவர் செப்புதான? தங்கத்தையும் செப்பையும் சேர்த்தாதான நகை செய்யமுடியும்?” என்றுசொல்லி அவள் தன் பல்வரிசை தெரியவாய்விட்டு சிரிக்க



“போ பாப்பா! உனக்கு எப்பவும் தமாஷ்தான். இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. உன் அறிவுக்கும் குணத்துக்கும் நல்ல மனசுக்கும் உன்னவிட எல்லாத்திலும் ஓர் படி மேல உள்ளவனா பெரிய மகராசா கணக்கா வருவான் பாரு!” என்று அவர் பெருமை பொங்க கூற



“பார்ப்போம்! பார்ப்போம்!” என்று அவள் தலையாட்ட அந்த நேரம் பார்த்து முதல் பாடவேளைக்கான மணி அடித்தது. “சரி கோல்ட், நான் அப்பறம் பேசறேன்” என்று கிளம்பிளாள் மித்ரா.



அவள் ஸ்டாஃப் ரூமைத் தாண்டுகையில் லெக்சரர் மாலினி வெளியே வர, “குட்மார்னிங் மேம்! ஹவ் ஆர் யூ? உங்க குழந்தை எப்படி இருக்கா?” என்றுஎவிசாரிக்க “ஐயம்ஃபைன்மித்ரா, குழந்தையும் நல்லா இருக்கா. அன்னைக்கு அவ போனஸ்ஸகூல் ஆட்டோ ஆக்ஸிடன்ட் ஆகும்போது நீ பார்த்ததால அவள ஆஸ்பிட்டல்ல சேர்த்து பிளட் கொடுத்துகாப்பாத்திட்ட. இல்லனா, என் குழந்தைஎயோட நிலைமை?...” என்று அவர் அன்றைய தினத்தை நினைத்து கவலைப்பட



“நான் இல்லாம வேற யார் அங்க இருந்திருந்தாலும் உங்க குழந்தையைக் காப்பாற்றி இருப்பாங்க! டோன்ட் வொர்ரி மேம்!” - மித்ரா



“ம்ம்ம்… ஏன் மித்ரா வீட்டுக்கே வர்றதுஇல்ல? என் அத்தை கூட உன்ன கேட்டாங்க, ஏன் வர்றது இல்லனு! இந்த சன்டே ஃபிரீனா வாயேன். குழந்த கூட உன்ன பார்த்தா சந்தோஷப்படுவா” - மாலினி



“ஃபிரீதான், நிச்சயம் வரேன் மேம். பாய் மேம்” என்று கூறி அவரிடம் விடைபெற்றுத் தன் வகுப்பறைக்குச் செல்ல.



அவள் வகுப்பறையின் உள்ளே காலை வைக்கும் நேரம், அவள் தலைக்கு மேலேயிருந்த பலூன் வெடித்து அதன் உள்ளேயிருந்த பூவும் ஜிகினா தாளும் அவள் மேலே கொட்டியது. “ஏய்….” என்று அங்கிருந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட, அவள் தோழிகளான ரம்யாவும் கௌரியும் மட்டும் அவளைப் பார்த்து “அச்சச்சோ… நீயா?! நாங்க புதுசா வர்ற ஹெச்.ஓ.டினு இல்ல நினைச்சோம்?!” என்று கூறி அவள் காலைவார, “நினைப்பிங்க டி நினைப்பிங்க! நீங்க ரெண்டுபேரும் இதை எனக்காக செய்துட்டு என்கிட்டயிருந்து தப்பிக்க இப்போ இப்படி சொல்றீங்களா?” - மித்ரா



“ஹி…. ஹி…. கண்டுபிடிச்சிட்டியா? நீ அறிவாளிதான் டி!” என்று இருவரும் கோரசாகச் சொல்ல





“இதுக்கு எதுக்குடி அறிவு வேணும்? நீங்கரெண்டுபேரும்எ னக்காக ஃபேன்ஸ்கிளப்பே ஆரம்பிப்பிங்கனு எனக்குத் தெரியாதா?” என்று கேட்டவள் ஓர் இடம்பார்த்து அமர



“ஆமாம்! ஆமாம்! அவ ஆரம்பிக்கிறாளோ இல்லையோ, நிச்சயம் நான்ஆரம்பிப்பேன்பா!” - ரம்யா



“போதும் போதும், நிறுத்து!” என்றவள் எழுந்து நின்று, “ஹாய் ஃபிரண்ட்ஸ்! ரொம்பநாள் கழிச்சி இன்னைக்கு தான் நாம மீட் பண்றோம். அதனால் நாம பேச, ஆடபாடனு நமக்கு நிறைய விஷயம் இருக்கும்! இன்னைய டே முழுக்க நமக்கான டே! ஸோ இன்னைக்கு எந்த பிரொஃபஸர் வந்தாலும் கிளாஸ் எடுக்கவிடாமல் ஏன் அவரை ஒரு இன்ட்ரோ கூட கொடுக்கவிடாமல் ஒரே அராத்தல் வேலை பண்றோம்! இதுல யார்யாருக்கு எல்லாம் சம்மதமோ அவங்கெல்லாம் என் பின்னாடி நில்லுங்க!” என்று இவள் சொல்ல, மொத்த மாணவர்களுமே அவள் சொன்னதற்கு சம்மதமாக “ஓ….” என்று கூச்சலும் டெஸ்கை பட்பட் என கையால் தட்டிவிட்டு அனைவரும் எழுந்து நின்றனர்.



அதன்பிறகு சொல்லவா வேண்டும்? அங்கு யார் வந்தாலும் ஓடஓட விரட்டிவிட்டனர் மித்ராவும் அந்தவாணரக் கூட்டங்களும். அன்றைய வகுப்பு முழுக்க ஆட்டம்பாட்டம் என்று கழிந்தது. மாலை காலேஜ் முடியும் நேரம் மறுபடியும் தீபக் அவளிடம் பேசவர, இம்முறையும் அவனிடம் முகம் கொடுத்துப் பேசாமல் விலகிப் போனாள்மித்ரா.



அதைப் பார்த்த ரம்யா, “ஏன் மித்ரா, தீபக் எப்படி எப்படியோ அவர் காதல உன்கிட்ட சொல்றார். நீயும் அவர் காதலை அவாய்ட் பண்ற. அவரும் விடாம உன்னத் துரத்துறாரு. சரி நான் கேட்கறேன், அவருக்கு என்ன குறைச்சல்? எதுக்கு நீ அவர வேண்டாம்னு சொல்ற? நானும் உன்னக் கேட்டுப் பார்த்துட்டன், இதற்கான பதில நீ சொல்லவே மாட்ற!” என்று அவள் குறைபட



“ஒரு காரணம் இல்ல, ஓராயிரம் காரணம் இருக்கு. முதல்ல எனக்கு தீபக்கப் பார்த்தா அப்படி எல்லாம் தோனமாட்டுது. அதேமாதிரி அவருக்கு ஏதோ ஒருவகையில் என்னப் பிடிச்சிருக்கே தவிர, காதல் இல்ல. ஆனா அவரோ என்மேல இருக்கற சற்று அதிகப்படியான பிடித்தத்தையே காதல்னு நினைச்சிகிட்டு இருக்கார். நாளாக அவரும் சரியாகிடுவாறு. அப்படியே அவர் காதல் உண்மைனாலும், என்னுடைய குடும்பத்திற்கும் அவருடைய குடும்பத்திற்கும் அத்தஸ்துக்கும் ஒத்துவராது. அவர் ஒண்ணும் பெரிய பணக்காரர் இல்லனாலும் கொஞ்சம் அதிகமே வசதியானவர். ஸோ நமக்கு எதுக்கு வம்பு சொல்லு?!” என்று அவள் சாதாரணமாகக் கேட்க அவள் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா.



“இதற்கு எல்லாம் மேல எனக்கு காதல் கல்யாணமே பிடிக்காது. பெரியவங்க பார்த்துவைக்கர கல்யாணம்தான்ஸபிடிக்கும். எனக்கு வர்றவரு, என்ன பொண்ணு பார்க்க வரணும். நான் தலை குனிஞ்சிட்டே காபி கொடுக்கணும். பிறகு என்ன பிடிச்சிருக்குனு சொல்லிட்டுப் போகும்போது என்கிட்ட மட்டும் தலையாட்டிப் போய்ட்டு வரேனு சொல்லணும். கல்யாணம் வரைக்கும் போன்ல பேசணும். ஊர் கூடி பல சொந்தபந்தங்களோட சூப்பரா என் கல்யாணம் நடக்கணும். அந்த கல்யாண சடங்குல வைக்கற ஒவ்வொரு விளையாட்டிலும் நான் ஜெயிக்க, அவரு அசடுவழிய முழிக்கணும்!



காலம் முழுக்க ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு தெரிஞ்சிக்கிட்டு அதன்படி நடந்துக்கணும்! எல்லாத்த விட ரொம்ப ரொம்ப முக்கியமானது, என்னுடைய தாலியை மஞ்சள் கயிறுலதான் போடவிடணும்! தங்கசெயின் இருக்கக்கூடாது. தினமும் அந்தக் கயிற்றுக்கு மஞ்சள் பூசி அந்த மஞ்சள் வாசனையோடு அவர் வாசனையும் என் மேனியில ஒட்டிகிட்டு இருக்கணும்!” என்று கண்ணில் காதல் மிதக்க அவள்சொல்ல



“அடபாவத்த! நீ சொல்றதப் பார்த்தா உனக்கு வர்றவர் மேல காதலோகாதல்னு இருப்ப போல! ஐய்யோ…. நான் ஏன் பொண்ணா பிறந்தனு ஃபீல் பண்ண வச்சிட்டியே! நான் மட்டும்ஆணா இருந்தா, நிச்சயம் உன்ன தான்டி கல்யாணம் பண்ணி இருப்பேன்!” - ரம்யா போதையோடு சொல்ல



“ச்சீ… போடி! உனக்கு வேற வேலையே இல்ல” என்று சிரித்தபடி அங்கிருந்து கிளம்பினாள் மித்ரா. மித்ராவிடம் ஒருமுறையாராவது பேசிவிட்டால் பிறகு அவளை அவர்களுக்குப் பிடித்துவிடும். அது அவளுடைய பேச்சோ, சிரிப்போ, நல்லகுணமோ, குறும்புத்தனமோ, பழகும் தன்மையோ, வாய்அடிப்பதோ, கை நீட்டலோ இல்லை திமிரோ! ஆமாம், திமிர்தான்! அந்த திமிர், யாரிடம் எப்படி எதற்காகக் காட்டணுமோ அங்கே எல்லாம் நிச்சயம் இருக்கவேண்டும் என்று நினைப்பவள். இதை எல்லாம்விட அவளிடம் ஓர் ஆளுமை இருந்தது! அதனால் தான் அந்தக் காலேஜில் மாணவர்சங்க தேர்தலில் பணபலத்துடன் ஆள்பலத்துடன் நின்ற ஆண்களை எல்லாம் தோற்கடித்து ஒரு பெண்ணாக இவள் வெற்றிபெற்று இன்று அவள் மாணவர் சங்க தலைவி!



பொதுவாக மாணவர் சங்கத்துக்கும் காலேஜ் நிர்வாத்திற்கும் ஒத்துவராது. ஆனால் இங்குஅப்படிஇல்லை. இந்த காலேஜ்ஜைப் பற்றி ஒருமுறை ஒரு நாளிதழில் அவதூறாக சிலவற்றைப்போட, ‘எங்கள் காலேஜ் அப்படி இல்லை, எங்களுக்குத் தரமான கல்வியில் இருந்து சகலமும் நல்லமுறையில் கிடைக்கிறது’ என்று சொல்லி மாணவர்களுடன் போராட்டத்தில் இறங்கி அப்படி எழுதின ரிப்போர்ட்டரை மன்னிப்புக்கேட்டு அதே நாளிதழிலும் அதை எழுதச் சொல்ல, அதிலும் மாணவர் சங்கத் தலைவியே மாணவர்களுடன் மேனேஜ்மென்ட்டுக்கு சப்போர்ட்டாக போராட்டம் பண்ணும்போது அந்த பத்திரிக்கையால் என்ன செய்யமுடியும்? அவள் கேட்டபடியே செய்து முடித்தனர் அந்த நாளிதழ் உரிமையாளர்கள். இந்த செயலால் கல்லூரி நிர்வாகத்திற்கும் அவளுக்கும் நல்ல உறவு ஏற்பட்டது. இதுதான் மித்ரா! சரி என்றால் சரி! தப்பு என்றால் தப்பு! அன்பு, பாசம், கோபம், சண்டை, குறும்பு இப்படி எது இருந்தாலும் அவளுக்கு நிகர் அவளே! கல்லூரி அரட்டை, அவள் தோழிகள், அவள் தனி சாம்ராஜ்யம் என்று வாழ்க்கை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தெளிவான நீரோடையைப் போல் ஓடிக்கொண்டிருக்க. அதில் கல்லெறிவது போல் அவளுக்கே தெரியாமல் பிரச்சனை பிள்ளையார் சுழிபோட ஆரம்பித்தது. ஒருநாள் அவள் காலேஜில் செக்கென்ட் இயர் படிக்கும் மாணவி (கவிதா) காதல் தோல்வியால் விஷம் சாப்பிட்டு ஆஸ்பிட்டலில் படுத்துவிட, அவளைப் பார்க்க அங்கு சென்ற மித்ரா ரம்யாவிடம் விசாரிக்க.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 26
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN