என்னடி மாயாவி நீ: 7

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்: 7

நாளையிலிருந்து இனிமேல் இவரோட பேசணும். பேசுனாதான் எல்லாமே சரி ஆகும் இது தான் ஒரே வழி. இவர் கூட தான் இனி என் வாழ்க்கை என தீர்மானமாக நினைத்துக்கொண்டாள். காலையில் முதல் வேலையாக அவரிடம் என்னோட கடந்த காலத்தை பத்தி பேசி, கொஞ்சம் டைம் கேட்போம் என முடிவெடுத்தாள்.

இவள் குழப்பத்தில் இருந்ததால், அவனும் குழப்பத்தில் உள்ளான் என்பதை இவள் அறியாமல் விட்டாள். என்ன சொன்னாலும் அவன் தன்னை ஏற்கமாட்டான் என இவளுக்கு துளியளவும் தெரியவில்லை. தெரிய வரும்போது என்ன செய்வாள்?

இவள் தூக்கத்திற்கு போராடி கொண்டிருக்கும்போது தான், வர்ஷித் உள்ளே நுழைந்தான். இவள் கீழே படுத்திருப்பதை பார்த்தவன், "நீ மேல படுத்துக்கோ நான் ஹால்ல படுத்துக்குறேன்", என கூறி இவள் பதில் கூற நேரம் கொடுக்காமல் அறையை விட்டு வெளியேறினான்.

காலையில் எழுந்தவுடன் வர்ஷித்தும் முதல் வேலையாக ஆதிகாவிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தான்.

வர்ஷித் காலையில் குளித்து முடித்து அலுவலகத்திற்கு கிளம்பி ஆதிகாவிடம் பேசுவதற்காக காத்து கொண்டிருந்தான். ஆதிகா அப்போதான் தூங்கி முழித்து வெளியில் வந்தாள். அவள், மாலையில் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு பேசலாம் என நினைத்தாள். வர்ஷித்தோ இப்பவே பேசிவிடனும் என முடிவாக இருந்தான். ஆனால், ஆதிகாவிற்கு மாலை வரை இந்த விஷயத்தை மனதில் போட்டு குழப்பிகொள்ள விரும்பவில்லை. எனவே, இப்பவே கூறிவிடலாம் என நினைத்து, அவனிடம் பேசுவதற்காக வந்தாள். உங்களிடம் ஒன்னு பேசணும் என ஆரம்பித்தாள் ஆதிகா. வர்ஷித் நிமிர்ந்து பார்த்தான் தன் எதிரில் நிற்கும் ஆதிகாவை. என்னோட கடந்த காலத்தை பத்தி, என ஆதிகா கூறி முடிப்பதற்குள்ளவே அவன் கை நீட்டி தடுத்து, " வேண்டாம் எல்லாம் எனக்கு தெரியும்" என்றான். ஆதிகா திரு திரு வென முழித்தாள். அவன்மேலும், "இன்னும் கொஞ்ச நாள் தான், அதுக்கு அப்பறம் நான் உன் வாழ்க்கைய விட்டு போயிருவேன். நீ எந்த கவலையும் படாத, உன் வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன். இந்த வீட்டிலயும் நீ எனக்காக ஒன்னும் செய்ய வேண்டாம். நான் வெளியில் சாப்பிடுகிறேன்" என ஆதிகாவை பேச விடாமல் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் வர்ஷித்.

அவன் போன பிறகு, இவளும் நின்ற இடத்திலேயே உணர்வற்று அமர்ந்தாள். தான் காதலித்தது தெரிந்து தான் இப்படி பேசுகிறான். தானே கல்யாணத்திற்கு முன்னாடி அவனிடம் கூறியிருக்க வேண்டும் தப்பு செய்துவிட்டோமே என தன்னையே நொந்துக்கொண்டாள். இது மட்டும் வீட்டிற்கு தெரிந்தால் எல்லாருக்கும் என்ன பதில் சொல்வது, என்னோட வாழ்கை இப்படி ஆகிடுச்சே, தானே மாறி வந்தால் கூட இவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என நினைத்து அழுது மடிந்தாள் அந்த அறியா பெண். ஆனால், அவன் இப்படி கூறியதற்கு இது காரணமில்லை என்பதை இவள் உணர்வாளா?

நாட்கள் இதுபோலவே நகர்ந்தது இருவருக்கும், ஒருவரையொருவர் பார்க்காமலே... வர்ஷித் காலையில் சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவான். ஆதிகாவோ நாள் முழுவதும் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தாள். வர்ஷித் அவசரத்துக்கு மட்டும் தனது நம்பரை மட்டும் ஆதிகாவிடம் பகிர்ந்து கொண்டான். பதிலுக்கு அவள் எண்ணை கூட அவன் வாங்கிக்கொள்ளவில்லை.

ஒருநாள், ஆதிகாவின் தம்பி முகேஷ் போன் செய்தான். தம்பியின் புகைப்படத்தை போனில் பார்த்ததும் கண்கள் குளமாகிப்போனது ஆதிகாவிற்கு. அதை உயிர்ப்பித்து காதில் வைத்து தம்பி என பேசும்போதே அவளின் குரல் கரகரத்தது. மறுபக்கம் முகேஷ், "அக்கா அழுகாத ஏன் அழுகுற? என்றான் கஷ்டமிருந்தாலும் அதை மறைத்து அக்காவை தேற்றும் பொருட்டில். அவள் பதிலேதும் பேசாமல் இருந்தாள். அவனே மேல தொடர்ந்தான்," அப்பா இப்பதான் போன் பண்ணி நடந்த எல்லாமே சொன்னாங்க. நான் காலேஜ்ல கேம்ப் போன ஒரு வாரத்துல இப்படியெல்லாம் நடந்து போச்சு, சரிக்கா கவலைப்படாத. பாஸ்ட மறந்துட்டு இந்த வாழ்க்கையை ஏத்துக்க பழக்கிக்கோ அக்கா. எல்லாமே ஒரு நாள் கண்டிப்பா மாறும்", என கூறினான் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்தும் கொல்லும் தன் தமக்கையின் வாழ்க்கையை சரி செய்யும் நோக்கில். தன்னை தூக்கி வளர்த்து, தனக்கு மறு அன்னையாகவே வாழ்ந்த அக்காவின் வாழ்க்கையை நினைத்து மிகவும் வேதனை கொண்டான். அவளுக்கு ஆறுதல் மொழி பேசி, ஆறுதலாகவே மாறினான் முகேஷ். என்னதான் தம்பி ஆறுதலாக இருந்தாலும் ஆதிகாவிற்கு வர்ஷித் கூறிய சொற்கள் பயம் அளித்தது எதிர் கால வாழ்க்கையைப்பற்றி. வர்ஷித் கூறியதை தன் தம்பியிடம் அவள் கூறவில்லை. தன் கஷ்டம் தன்னோடவே இருக்கட்டும் என நினைத்தாள். பிறகு, தம்பியிடம் பொதுவாகவும் அவனது படிப்பு பற்றியும் பேசி விட்டு அழைப்பை தூண்டித்தாள். தன் கடந்த கால காதல் எதிர்கால வாழ்வை அழிக்கப்போகிறது
எனும் பயம் இவளை மிரட்டியது. வாழ்க்கையே கேள்வி குறியாக மாறிப்போனது.

வாழ்க்கையின் விடை தெரிந்துவிட்டால், வாழும் போது என்ன சுவாரசியம் இருக்க போகிறது என்பதை இந்த பாவை புரிந்துக்கொள்ளவில்லை. இந்த பயம், இதனை தெரிந்துக்கொள்ளவும் விடவில்லை. சரி பயப்படுவதால் என்ன ஆகப்போகிறது? நடக்கும் போது பார்த்து கொள்ளலாம் என நினைத்து பயத்தை மூட்டை கட்டி வைத்தாள்.

பிரச்சனையை நாம் ஒதுக்கி வைத்தாலே போதும் தானாகவே நம்மை விட்டு அது நீங்கிவிடும். நாம் அதை நினைக்க நினைக்க தான், அதுவும் நம்மையே நாடுகிறது.

நான்கு நாள் கழித்து, வர்ஷித் அலுவலகத்திலிருந்து வந்தது முதல் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தான். யாருக்கோ போன் செய்து கொண்டிருக்க, மறுபக்கம் எடுத்தவுடன் காட்டு கத்து கத்தினான். ட்ரஸ் கூட மாற்றமால் கோபத்தில் இருந்தவனை கண்டவள், "அலுவலகத்தில் ஏதோ பிரச்சனை போல" என நினைத்தாள். அதனால், அவள் அவனிடம் ஏதும் கேட்டு கொள்ளவில்லை. நேரம் ஆக ஆக அவனின் கோபம் அதிகரிப்பதை பார்த்து அரண்டு போனாள். அவள் சென்று கேட்டதிற்கும் அவன் பதிலளிக்கவில்லை. இப்படி இருப்பவனிடம் என்ன கேட்பது என தெரியாமல், அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். இரவு 11மணிக்கு அறைக்கதவை திறந்தவன் திடுதிடுமென உள்ளே நுழைந்தான். சத்தம் கேட்டு விழித்தவள், எழுந்து அமர்ந்தாள். சட்டென, வர்ஷித்
' உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிக்கோ, இப்பவே ஊருக்கு கிளம்பனும்' என்று கூறி கொண்டு அவன் பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தான். அவன் முகத்தை உற்று பார்த்தாள் ஆதிகா ஒரு நிமிடம், கோபம் கோபம் கோபம் மட்டுமே பிரதிபலளித்தது. பிறகு, 'ஒரு வாரம் இருக்கணும்ணு சொன்னிங்க, இப்ப வந்து கிளம்பனும்னு சொல்றிங்க என்ன ஆச்சு, எதாவுது பிரச்சனையா' என அவள் கேட்டதுதான் தாமதம், உடனே அவன் "எதிர்கேள்வி கேட்காமல் கிளம்பு சீக்கிரமா இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வந்துரும்" என கத்தினான். இவன் திட்டிய வேகத்தில் பயந்து இவளும் கிளம்ப ஆரம்பித்தாள். வர்ஷித் தனது உடைமை எல்லாம் எடுத்து வைத்து விட்டு, கவினிடம் வீட்டை காலி செய்வதாக தெரிவித்தான். ஆதிகவோ சமையல் அறையை சுத்தம் செய்துவிட்டு தானும் ஆயத்தமானாள்.

கார் இவர்களை சுமந்துக்கொண்டு திருச்சியை நோக்கி சென்றது. ஆதிகாவிற்கு பயம் தொற்றிக்கொண்டது, தன் காதல் தெரிந்து தான் பிரச்சனை செய்ய போறான் என. திருச்சி செல்லும் வரையிலும் அவன் கோபம் மட்டுப்படவேயில்லை. இருவருக்கும் ஒரு நிமிடம் கூட கண் அயரவில்லை அவனுக்கு கோபத்தில், இவளுக்கு பயத்தில்... ஒரு வழியாக காலை பொழுது நெருங்கியதும் கார் திருச்சியை அடைந்து விஷ்ணுவின் வீட்டின் வாசலில் நின்றது.

ஆதிகாவின் வாழ்கை என்ன ஆகப்போகிறது... வர்ஷித்தின் முடிவு என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...

நன்றி !!!
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN