🌹பாகம் 17🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கீழே இறங்கி வந்தவளை அமிர்தம் புன்னகையுடன் எதிர்க்கொண்டார். "நல்ல தூக்கமா மயூரா? இப்போ முகம் கொஞ்சம் தெளிவா இருக்கே. உனக்கு பசிக்கும், வா கை அலம்பிட்டு வந்து சாப்பிடு. இன்னிக்கு சாம்பார் கூட்டு பொரியல் அவியல் எல்லாம் செஞ்சி வெச்சிருக்கேன். இப்படி வெரைட்டியா சாப்பிட ஆள் இருந்தாதானே நமக்கும் சமைக்க தோணும். நானும் அவரும் சிம்பிள் அ பார்த்துக்குவோம். இனிமேல்தான் நீ இருப்பியே கண்ணம்மா, அதனாலே ருசியா நெறைய சமைக்கலாம் ''அமிர்தம் பேசிக்கொண்டே உணவை பரிமாறினார்.

வெங்காய வடகம் சேர்த்து தாளித்த சாம்பார் வாசனை மயூரா மூக்கை துளைத்தது. பசி உணர்ந்து நிறைவாக சாப்பிட்டாள். "தாத்தா சாப்பிடலையா பாட்டி? எங்க அவரை ஆளைக் காணோம்''மயூரா பார்வையால் பெரியவரைத் தேடினாள். "அவரு அப்பவவே சாப்பிட்டு அவரு பிரண்டை பார்க்க போய்ட்டாரும்மா. நானும் சாப்பிட்டாச்சு. நீ மொத சாப்பிடுமா'' அமிர்தத்தின் கனிவான பேச்சு மயூராவிற்கு அந்நியர் கூட இருப்பது போலவே தோன்றவில்லை. ஏதோ சொந்த தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்தது போலவே தோன்றியது. மயூரா இலகுவாய் உணவை இரசித்து உண்டாள்.
உணவு வேளைக்கு பின் பாட்டியுடன் வராந்தாவில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் வராந்தாவில் வரிசைப் பிடித்திருந்த ரோஜா செடிகளைப் பார்த்தாள். பெரிதும் சிறிதுமாய் பல வண்ணகளில் பூத்துக் குலுங்கிய ரோஜாக்கள் கண்ணைப் பறித்தன.

"அய்க் எவ்ளோ ரோஜாக்கள்.. பார்க்கவே இந்த ரெண்டு கண்ணு பாத்தாது பாட்டி. நீங்கள் நட்டு வெச்சதா இதெல்லாம்'' மயூரா ஒரு வெல்வெட் ரோஜாவை தடவியவாறே பாட்டியைக் கேட்டாள்.
"ஆமாம் கண்ணே, எனக்கும் அவருக்கும் இதுதானே குழந்தைகள். சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம்னு சொல்லுவாங்க இல்லையா? குழந்தை இல்லைனு ரொம்ப நான் சோர்ந்து என்னையே நான் இழக்க ஆரம்பிச்ச நேரம் யோகி அண்ணாவோட தோழிதான் செடிகளை வளர்க்க கத்துக் குடுத்தாங்க. நம்ம கையால் உருவாகர உயிர் நம்ப குழந்தைகள்தானேம்மா? செடிகளும் உயிர்கள்தானே மயூரா? ''பாட்டி பதிலளித்தார்.

"ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன், ஒவ்வொரு செடிகளும் மலரும் போது எனக்குள்ளே தாய்மை மலர்ந்த மாதிரி ஒரு சந்தோசம்டா. அப்படியே செடி கொடி நட்டு வைக்க கத்துக்கிட்டேன். வாரத்தில் 3நாள் இங்க உள்ள பெண்களுக்கு பின்னல் வேலைகள் கூட சொல்லிக் குடுக்கறேன் மயூரா. நமக்கு ஒன்னு இல்லைனு ஆயிட்டா அங்கேயே தேங்கி நிக்கக் கூடாதுமா. பின் வாழ்க்கையின் மற்ற சுவாரஸ்யங்களை இரசிக்க தவறிடுவோம். சோ அந்த தவறை நான் எப்போவும் செஞ்சது இல்லை ''அவர் தனக்காக கூறுவது போல் தான் மயூராவிற்கு தோன்றியது. "உண்மைதான் பாட்டிமா, யாருக்காகவும் நம்ம வாழ்க்கை வாழாமல் விட்டுற கூடாதுதான் ''மயூரா ஆமோதித்தாள்.

"புத்திசாலி பொண்ணு நீ, சட்டுனு புரிஞ்சிக்கிட்டியே ''அமிர்தம் அவள் கன்னத்தைக் கிள்ளினார்.
"உனக்கு தேவையான டைம் எடுத்துக்கோ. நடந்ததை கடந்து போக பழகிக்கோ. உன் படிப்பு இன்னும் முடியல. அங்க போய் படிக்க பிடிக்காட்டி தபால் மூலம் படி. உனக்கான வாழ்க்கை இது கண்ணம்மா. நீ அனுபவிச்சு வாழனும். இது சின்ன சறுக்கல் தான் அதுக்காக நீ ஒடைஞ்சி போக வேண்டாம் ''பரிவாய் அவள் தலை வருடி தன்னோடு அணைத்துக் கொண்டார்.

அவரின் அந்த அணைப்பு மயூராவிற்கு பெரிதும் தேவையாகியிருந்தது. அதற்கு பின் வந்த நாட்கள் எல்லாம் மயூரா தன்னை மீட்டுக் கொண்டு வர பயன்படுத்தினாள். தபால் மூலம் கல்வியை தொடர்ந்தாள். ஓய்வு நேரத்தில் அமிர்தத்தோடு பின்னல் வேலைகள் தோட்டம் போடுவதைக் கூட கற்றுக் கொண்டாள். அமிர்தத்திடம் பின்னல் கற்றுக் கொள்ள வரும் பெண்களுக்கு உபரியாக சுய பராமரிப்பு வீட்டு பாராமரிப்புகளை மயூரா கற்றுக் கொடுத்தாள். மாலையில் அங்கே இருக்கும் பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்தாள். சிவராமன் அமிர்தம் தம்பதிகளுக்கு சொந்தமான காபி எஸ்டேட்களை குத்தகைக்கு விட்டுயிருந்தார்கள். அதில் வரும் வருமானமே அவர்கள் தேவைக்கு அதிகம் தான்.

இருந்தாலும் சோம்பி இருக்காமல் இப்படி அக்கம் பக்கம் இருக்கும் மக்களுக்கு உதவியாக இருந்தார்கள். இவர்களோடு மயூராவும் வந்து சேரவும் அவர்கள் வாழ்வு மேலும் அர்த்தமுள்ளதாய் மாறியதாய் உணர்ந்தார்கள். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை யோகி தாத்தாவும் மயூராவை வந்து பார்த்தச் சென்றார்."அங்க நீ இல்லாமல் எதுவுமே நகரல மயிலே. இன்னும் உன் வேதனைத் தீரலயா? உன் அத்தை சதா மயிலு மயிலுனு புலம்பிட்டு இருக்கா.நீ இங்க மஜாவா இவங்க கூட வாழ்ந்திட்டு இருக்க. ஒரு மாசம் ஆச்சு பாப்பா, வா நம்ப வீட்டுக்கு போலாம் '' யோகி தாத்தா அழைக்கவும் மயூரா மறுப்பாய் தலையசைத்தாள் .

"சில வலிகளுக்கு காலம் கூட மருந்து ஆகாது தாத்தா. கண்ணீர் கூட அந்த காயத்தை ஆற்றுவதே இல்லை. எனக்கு இங்க இருக்கு புடிச்சியிருக்கு தாத்தா. தாத்தா பாட்டி எனக்கு நெறைய சொல்லித் தாரங்க. அங்க வந்தா நான் என் சுயத்தை இழந்துடுவேன்.என்னை எல்லோரும் பரிதாபமாய் பார்ப்பாங்க தாத்தா. எனக்கு அது வேண்டாம். எப்போ என் மனசுக்கு தோணுதோ அப்ப நான் அங்க வர்றேன். இப்ப என்னை இவங்க கூடவே விட்டுருங்க தாத்தா.அம்மா அப்பாவுக்கு என் வேதனை புரியும்னு நம்புறேன்''மயூரா அமிர்தம் மீது தலை சாய்த்தவாறே கூறினாள்.

நடப்பது எல்லாம் சிவன் சித்தம் போல் யோகி தாத்தா ஏற்றுக் கொண்டார். பிள்ளை இல்லாத தன் தங்கை மயூராவை கொண்டாடுவது அவருக்கும் ஆறுதலாய் இருந்தது. காலம் மயூரா மனதை மாற்றும் என்ற நம்பிக்கையோடு இன்பவனம் கிளம்பினார். பலமுறை ருத்ரன் அந்தரன் விசாரித்தும் கூட அவர் மயூராவை பற்றி எதுவும் கூறவே இல்லை. இதற்குள் ருத்ரனுக்குள் பல் வேறு மாற்றங்கள். அவன் மனம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது. அதை ஓட்ட வைக்க யாருக்கும் தெரியவே இல்லை.

அவ்வப்பொழுது வரும் தலைவலி.அவனுக்கு வலி நிவாரண மாத்திரைகள் உண்டு பழக்கமே இல்லையே. சிறிது வலியில் சுணங்கினாலும் அவன் கண்மணி மடிமீது தலை சாய்த்து பிடித்து விடுவாளே. ஏதாவது மூலிகை தேனீரைக் குடுத்து அவன் வலி வந்த சுவடு கூட இல்லாமல் செய்து விடுவாளே.ஒரு முறை நண்பர்களுடன் சம்மர் கேம்ப் சென்றவள், அவனுக்கு தலைவலி என்றதும் பாதியிலே திரும்பி வந்து அவன் வலி தீரும் வரை அவன் அருகில் இருந்தாளே. ஆனால் இப்பொழுது அவன் வலிக்கு நிவாரணமே இல்லாமல் போயிற்று.

மதனிகா அல்லது அவன் அத்தை சாம்பவி தலையை பிடித்து விட்டாலும் கூட மயூராவின் விரல்கள் செய்யும் மாயங்கள் இவர்களிடம் இல்லையே. இறுதியில் பெயின் கில்லர் சாப்பிடும் அளவிற்கு ருத்ரன் நிலை மோசமானது. உள்ளே இறுகி இறுகி அவன் புன்னகைப்பது கூட அரிதாகி போயிற்று. காலம் இவ்வாறே ஐந்து வருடங்கள் ருத்ரனை வாட்டி வதைத்து விட்டது. இனிமேல் பொறுப்பது சரியாகாது என்று, யோகி தாத்தா தான் அந்த ஐடியாவை செயல்படுத்தினார்.
அந்தரன் மதனிகா திருமணத்தை நிச்சயயிக்க சொன்னார். கண்டிப்பாக மயூரா திரும்ப வந்து விடுவாள் என்பது போல் பேசினார்.

இதுவே அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. சூனியமாக இருக்கும் அவர்கள் வாழ்வினில் மயூரா திரும்ப வந்தால்லொழிய வசந்தங்கள் மலர வழி ஏது? அந்தரனும் மதனிகாவும் கூட மயூரா இல்லாமல் திருமணமே செய்து கொள்வதில்லை என்ற முடிவில்தான் ஐந்து வருடங்களை கடந்து விட்டனர்.யோகி தாத்தா அவர்களிடம் ஒருவாறு பேசி திருமணத்திற்கு ஒத்துக்க வைத்தார். இனி மயூராவை சரி கட்ட வேண்டும்.

*தொடரும்*
 

Author: KaNi
Article Title: 🌹பாகம் 17🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN