ஆதித்யா சக்கரவர்த்தி-13

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 13

சுவாதிக்கும் சௌமியாவிற்கும் ஆதித்யாவின் திருமணத்தை நடத்த இன்னும் இரண்டு தடைகள் இருந்தது ஒன்று மலர்... மற்றொன்று மலரின் அண்ணன் மகேஷ்....

சுவாதிக்கு... மலரைக் கூட அரட்டி மிரட்டி சம்மதிக்க வைத்துவிடலாம் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் மகேஷ்?? ஊஹூம் அவனை சம்மதிக்க வைக்க வாய்ப்பு மிகவும் கம்மிதான். ஏனென்றால் அவன் ஒரு தங்கை பைத்தியம். அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். ஏன் உயிருக்கு உயிராக காதலிக்கும் தன்னையே தங்கையை ஒருசொல் சொல்ல விட மாட்டேங்கிறான்? இதில் அவளுக்கு எதிராக தாங்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரிந்தால்.... சொல்லவே வேண்டாம். அவ்வளவுதான் அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா? அப்படியே விட்டால் அவர்களின் திட்டம் என்னாவது? மகேஷை சம்மதிக்க வைப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம்... என்று யோசிக்க ஆரம்பித்தாள் சுவாதி.

மகேஷ் சுவாதி இருவரும் ஊரிலிருந்து வந்த ஐந்து தினங்கள் முழுதாக கழிந்து இருந்தது.
மகேஷ் வீட்டில் இரவு உணவிற்கு பின் மலர், வானதி இருவரும் தூங்க சென்றுவிட... கணவனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் சுவாதி.

ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனமாக பயன்படுத்தி அவனிடம் பேச வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து வைத்திருந்ததால் தெளிவாகவே பேச ஆரம்பித்தாள்.

"மகி மலருக்கு எப்போ நம்ம கல்யாணம் பண்றது?" என்று கேட்ட மனைவியை வித்தியாசமாக பார்த்த மகேஷ்,

"சுவாதி நாம ஊர்ல இருந்து வந்து அஞ்சு நாள்தான் ஆகுது... இன்னும் நந்தன் நம்மள மீட் பண்ணி எதுவும் பேசல... அதுக்குள்ள மலர் மேரேஜ் பத்தி என்ன பேசுறது...??" என்று மறு கேள்வி கேட்டான்.
சுவாதிக்கு ஆரம்பமே சிக்கலாக இருந்தது.

"பேசித்தான் ஆகணும் மகி...
நான் சொல்ல போற விஷயத்தை கொஞ்சம் நிதானமாக கோவப்படாம பொறுமையா கேளுங்க... மலருக்கு என்னோட அண்ணன் ஆதித்யாவை கல்யாணம் பண்ணி வைப்போமா?" என்று கேட்ட சுவாதியை உச்சக்கட்ட அதிர்ச்சியுடன் பார்த்தான் மகேஷ்
கணவனின் அதிர்ச்சியை பார்த்த சுவாதி,
"மலருக்கு கண்டிப்பா ஆதித்யாவை பிடிக்கும் கவலைப்படாதீங்க..." என்றாள். மலரை தன்னால் சம்மதிக்க வைத்து விட முடியும் என்ற தைரியம் தான் அவளுக்கு....

ஆனால் மகேஷ் வேறொரு சிந்தனையில் இருந்தான்.
மகேஷுக்கு ஆதித்யாவை பற்றி நன்றாக தெரியும் என்று சொல்ல முடியவில்லை என்றாலும்.... ஓரளவு தெரியும் தான். அவனின் கோபம், கடுமை, ஏச்சுப் பேச்சுக்கள்... எல்லாமே சாட்டையடி போல் அடுத்தவர்களை கொன்று தின்று விடும்.

மலர் மென்மையானவள். சுடு சொற்கள் பேசி பழக்கம் இல்லாதவள். சுடு சொற்களையும் தாங்க முடியாதவள். அவளின் கோபத்தைக் கூட கண்ணீர் மூலமாகத்தான் வெளிப்படுத்துவாள். அப்படிப்பட்டவளுக்கு எப்படி ஆதித்யாவை போல் ஒரு கோபக்காரனை திருமணம் செய்து வைக்க முடியும். ஒரு அண்ணனாக அவனது மனம் ஒப்பவில்லை. இத்தனைக்கும் மலருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது.
அப்படியிருக்க சுவாதியின் பேச்சு கோபத்தையும் எரிச்சலையும் தான் கொடுத்தது. ஆனால் காதல் மனைவியின் மீது காட்ட மனம் வரவில்லை அடக்கிக் கொண்டான்.
என்ன தான் இவள் சொல்ல வருகிறாள்? என்று பார்ப்போம் என்று நினைத்து...


மகேஷ் இவ்வாறு தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்க, சுவாதியும் அவனது முகத்தை கவனித்துக்கொண்டு ஆதித்யாவிற்கு ஏற்ப பேசினாள்.

"மகேஷ் உங்களுக்கு என்னோட அண்ணன் ஆதித்யாவை பத்தி தெரியும். அவன் கோபக்காரன் தான்... அழுத்தம் காரன் தான்... ஆனால் இது வர அவனோட ஒழுக்கத்தை பற்றி ஏதாவது தப்பான பேச்சு வந்து இருக்கா? எந்தப் பெண்ணையும் இவன் கூட சேத்து வச்சு யாராலும் பேச முடியாது... அந்த அளவுக்கு ஆதித்யா கண்ணியமானவன் தான்...அப்புறம் நீங்களே நல்லா யோசிச்சு பாருங்களேன்... எனக்கும் சௌமியாவுக்கும் எங்க அண்ணன் எவ்வளவு செய்றான்? கூட பிறந்த எங்களுக்கே இவ்வளவு செய்ற எங்க அண்ணா... மலர நல்லா பாத்துக்க மாட்டாரா? கொஞ்சம் உங்க கோபத்தை தள்ளி வச்சிட்டு யோசிச்சு பாருங்க மகி" என்று சுவாதி உருக்கமாக சொன்னாலும் மகேஷின் முகம் தெளியவில்லை.

இன்னும் என்ன? என்பதுபோல் சுவாதி மகேஷை பார்க்க...
அவளது பார்வையை புரிந்து கொண்டவன்...
ஒரு பெருமூச்சுடன்,
"இங்கபாரு சுவாதி ஆதித்யா கண்ணியமானவனா... ஒழுக்கமானவனா இருந்துட்டு போகட்டும்...
ஆனா மலருக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிட்டே அதுமட்டுமில்லாமல் எனக்கு தெரிஞ்சு மலருக்கு கண்டிப்பா இதுல விருப்பம் இருக்காதுனு தோணுது.... சோ ப்ளீஸ் சுவாதி... இந்த பேச்சை விடேன்" என்றான் மகேஷ் தளர்வாக...

ஆனால் சுவாதி பேச்சை விடாமல் தொடர்ந்தாள்.
"மலர் தான் நம்ம முதல் குழந்தை மாதிரி... மகி" என்று மகேஷின் முகத்தையே பார்த்துக் கொண்டுதான் ஒவ்வொரு சொல்லையும் நிதானமாக தெளிவாக உச்சரித்தாள். அவள் சொன்னதைக் கேட்ட மகேஷின் முகம் லேசாக தெளிந்தது.

"நம்ம மலர் நம்ம என்ன சொன்னாலும் கேட்பா... புரிஞ்சுக்குவா... அவளுக்கு மட்டும் நம்மள விட்டு பிரிய மனசு இருக்குமா? நீங்களே சொல்லுங்க மகி... கண்டிப்பா மலருக்கு ஆதித்யாவை பிடிக்கும் ...கல்யாணம் பண்ணிக்கவும் சம்மதிப்பாள். நம்ம பேச்சை மீற மாட்டா" என்றாள் சுவாதி.
மகேஷ் மீண்டும் சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தான். சுவாதிக்கு எரிச்சலாக வந்தது. எவ்வளவு தான் அவனுக்கு புரியும்படி சொல்ல? மகேஷ் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் சௌமியா வேறு கிண்டல் செய்வாள்.... எல்லாம் என் தலைவிதி!!! என்று நினைத்துக்கொண்டிருக்க...

மகேஷ் மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றான்.
"சுவாதி எனக்கு இப்பவும் மனசு ஒத்து வரல... மலருக்கும் நந்தனுக்கும் அவங்கவங்க விருப்பத்தோட தான் அப்பா நிச்சயதார்த்தம் பண்ணி வச்சிருப்பார். அது எப்படி மலருக்கு திடீர்னு நந்தன பிடிக்காம ஆதித்யாவை பிடிக்கும். நீ பேசுறது எனக்கு சுத்தமா புரியல.... இதுல லாஜிக் இல்லயே... கல்யாணம் அவ விருப்பம். அவளோட உரிமை. இதுல நம்மள விட்டுப் பிரியக் கூடாதுன்னு சொல்லி அவளோட விருப்பத்திற்கு நேர் மாறாக நம்ம நடக்க முடியாதே?" என்றான் மகேஷ்.

சுவாதிக்கு... இதற்கு மேல் என்ன பேசி அவனை சம்மதிக்க வைக்க... என்று தெரியவில்லை. இவனிடம் பேச வருவதற்கு முன்... ஒரு அண்டா நிறைய எனர்ஜி ட்ரிங்க் குடித்திருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

சுவாதியின் முகம் யோசனையை காட்டவும்..."ஆமா நீ எதுக்கு திடீர்னு மலருக்கு ஆதித்யாவை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிற?"
என்று அவளிடமே திரும்பி கேள்வி கேட்டான் மகேஷ்.

மனதிற்குள்ளே... "எத்தனை கேள்வி டா சாமி போதும்" என்று நினைத்து சுவாதி உள்ளுக்குள் கதறினாலும்... அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
லேசாக குரல் தடுமாற,

"நந்தன் கல்யாணம் முடிஞ்சதும் சீக்கிரம் மலர கூட்டிட்டு அமெரிக்காவுக்கு போயிடுவான். உங்களுக்கு இருக்கிறதோ...ஒரே ஒரு தங்கச்சி அவளை விட்டுட்டு நம்மளால இருக்க முடியுமா? மகி நீங்களே யோசிச்சு பாருங்க... ஆதித்யாவை மலர் கல்யாணம் பண்ணிக்கிட்டா ...நம்ம எல்லாம் ஒரே ஃபேமிலியா சந்தோஷமா இருக்கலாம்"என்றாள்.

அவள் சொல்வது கேட்க நன்றாக இருந்தாலும்...மகேஷுக்கு தங்கை மனதில் நந்தன் இருந்தால் எப்படி?ஆதித்யாவுடன் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாள்? என்றிருந்தது.

"இங்கபாரு சுவாதி... மலர் எப்பவுமே பாரம்பரியம் மரியாதைய முக்கியமா நினைக்கிறவ ...அவளுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சு... கண்டிப்பா நந்தன விட்டு அவளால ஆதித்யா கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்றான் அழுத்தமாக...

சுவாதியின் முகம் மீண்டும் சுருங்கியது. அடிக்கடி அவன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று அதிலேயே தான் நின்றான். கடுப்பாக வந்தது அவளுக்கு... இருந்தும் தோல்வியை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் அடுத்த ஆயுதத்தை எடுத்தாள்.

"சரி நா இதை சொல்ல கூடாதுன்னு தான் நினைச்சேன்... இப்போது சொல்லிடுறேன்..." என்றவள்
"சௌமியா சொன்னா நந்தனுக்கும் மலருக்கும் சண்டையாம் இரண்டு பேரும் பேசிக்கிறதே இல்லயாம்.." என்றாள்.

அவளை அதிர்ச்சியுடன் பார்த்த மகேஷ்,
"மலருக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராதே? எப்படி ரெண்டு பேருக்கும் சண்டை வந்தது?" என்று அவன் சுவாதி இடம் கேட்க....

'திரும்பவும் கேள்வியா? முடியல மகி அழுதுடுவேன்...' என்று சுவாதி உள்ளுக்குள் கதறினாலும்... கோபமும் வந்தது அவளுக்கு...

"யார் கோபப்பட்டானு எனக்கு என்ன தெரியும்? நானா கேமரா வச்சி படம் புடிச்சிட்டு இருக்கேன்" என்று சிடு சிடுத்தாள் சுவாதி

மகேஷ் அவளை யோசனையாக பார்க்கவும்...
லேசாகத் தயங்கி,
"உங்க தங்கச்சிக்கு தான் கோபம் வராது... அடுத்தவங்களுக்கு வராதுனு சொல்ல முடியாதுல... ஒருவேளை நந்தனுக்கு கூட கோபம் வந்து இருக்கலாம் "என்று கோபமாக சொல்வதுபோல் முணுமுணுத்தாள்.

அவளின் கோபத்தை பார்த்து, ஒரு நிமிடம் அமைதியான மகேஷ்...
"எனக்கு நந்தன் நம்பர் வேணும் சுவாதி. நான் அவர் கிட்ட பேசணும்" என்றான் யோசனையாக...

கண்டிப்பாக தங்கை தன்னிடம் சொல்ல மாட்டாள் என்று நினைத்தான் மகேஷ். ஏனென்றால் எப்பொழுதுமே மலர் தனது பிரச்சினைகளை வாயைத் திறந்து சொல்ல மாட்டாள் என்பது அவன் அறிந்த ஒன்று. சிறு வயதிலிருந்தே அவள் அப்படித்தான்... ஆனால் இந்த முறை சொல்லத்தான் துடித்துக் கொண்டு இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியாது அல்லவா??
சுவாதிக்கு மகேஷிடம் பேசிப்பேசி நாக்கு தள்ளியது. பெரிய சிபிஐ ஆபீசர் மாதிரி சுற்றி சுற்றி கேள்வி கேட்கிறானே...? இவனை கட்டிக்கிட்டு எவ்வளவு பாடுபடுறேன் என்று இருந்தது அவளுக்கு...
இப்பொழுது நந்தனிடம் பேசினால் உண்மை தெரிந்துவிடுமோ? என்று லேசாக பயமாகவும் இருந்தது. ஆனால் கண்டிப்பாக நந்தன் அப்படி ஒன்றும் சொல்லி விடப்போவதில்லை... அப்படி சொன்னால் அவளுக்கென்ன வந்தது.

சுவாதி யோசித்தது ஒரு நிமிடமே...

சௌமிக்கு கால் செய்து விஷயத்தை கூறி, வாட்ஸப்பில் நந்தனின் கைபேசி எண்ணை வாங்கி மகேஷிடம் கொடுத்தாள்.
மகேஷும் உடனே நந்தனிற்கு அழைப்பு விடுத்தான்.

சில நொடிகளுக்கு பிறகு தான்,புதிய எண் என்றவுடன் அட்டன் செய்து "ஹலோ" என்றான் நந்தன்.

"ஹலோ நான் மலரோட அண்ணன் பேசுறேன்..." என்றவுடன் கட் செய்ய போன நந்தன்... தனது முடிவை அவரிடம் சொல்ல வேண்டும்.அதுதான் மரியாதை என்று நினைத்து அமைதியாக இருந்தான்.

நந்தன் அமைதியான உடன் மகேஷ் தயங்கிக்கொண்டே....
"உங்களுக்கும் என் தங்கச்சிக்கும் என்ன பிராப்ளம்??"என்று கேட்டது தான் தாமதம் நந்தன் பொங்கி விட்டான்.

"உங்க தங்கச்சியே ஒரு பிராப்ளம் தான்... என்ன பொண்ணு அவ... பணத்துக்காக எவ்வளவு ஈஸியா மனச மாத்தி கிட்டா... என்ன விட்டுட்டு அந்த பணம் உள்ளவன தான் அவளுக்கு பிடிச்சிருக்கு ... நான் எந்த அளவுக்கு அவளை காதலிச்சேனோ... அந்த அளவுக்கு அவளை வெறுக்கிறேன்... இனி அவளோட வாழ்க்கையில நான் வரமாட்டேன்... அவளுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை... சண்முகம் அங்கிள் மேல எனக்கு நிறைய மரியாதை பாசம் இருக்கு. அதுக்காக தான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். எனக்கு இப்போ கல்யாணம் மேலேயே வெறுப்பு வந்துட்டு.... அதுக்காக காலம்பூரா கல்யாணம் பண்ணிக்காம இருக்கமாட்டேன்... கூடிய சீக்கிரமே மலர மறந்துட்டு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா இனி கண்டிப்பா மலருக்கு என் லைஃப்ல இடம் கிடையாது... நாளைக்கு நைட் எனக்கு ப்ளைட் இனி இந்த ஊருக்கு நான் வர்றது சந்தேகம்தான் குட் பாய்... இதுக்கு மேல எனக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்க...மிஸ்டர்" என்று பேச வாய்ப்பளிக்காமல் பட்டாசு போல் படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு மகேஷின் பதிலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டான் நந்தன். அவ்வளவு கோபத்துடனும் வெறியுடனும் இருந்தான் அவன்.
இந்த புறம் மகேஷ் சிலையாய் நின்றான்.

நந்தன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மகேஷின் மூளையை மழுங்கடித்து கோபத்தை அதிகரித்தது.

என்ன வார்த்தை சொல்லிவிட்டான்? அவளது தங்கை பணத்திற்காக அவனை நிராகரித்து விட்டாளாமே... மலரின் பிஞ்சு முகத்தை பார்த்தால் அப்படி நினைக்க தோன்றுமா என்ன? அவ்வளவு நம்பிக்கை இல்லாதவனுக்கு காதல் ஒன்றுதான் கேடு... கூடிய விரைவில் திருமணம் வேறு செய்யப் போகிறானாம்... மலர் மட்டும் அவன் நினைப்பிலேயே ஔவையார் ஆகும்வரை காலத்தை கழித்துக் கொண்டு இருக்க வேண்டுமா என்ன? என்று நினைத்து மகேஷின் மனம் கொதித்தது.

இவ்வளவு மட்டமான புத்தி உள்ளவனுக்கு இனி அவனே கேட்டாலும் மலரை கண்டிப்பாக திருமணம் செய்து வைக்கக் கூடாது. அவனை விட சிறந்த மாப்பிள்ளையாக பார்த்து தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அவனது முகத்தில் கரியைப் பூச வேண்டும் உள்ளுக்குள்ளேயே கருவிக் கொண்டிருந்தான் மகேஷ்.

கணவனின் முகத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுவாதியின் மனம் அவனின் மனநிலையை உணர்ந்தது.
"மகி" என்று அவனது தோள்பட்டையை பிடித்த சுவாதியின் கையை கோபத்துடன் தட்டி விட்டு விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்.

10 மணிக்கு போல் வெளியே சென்றவன் திரும்பி வரும்பொழுது மணி 2 என்று காட்டியது.
அவனுக்காக சுவாதி தூங்காமல் சோபாவில் அமர்ந்திருந்தாள்.
சுவாதியின் கண்கள் தூக்கத்தை காட்டினாலும் தனக்காக அமர்ந்திருந்த மனைவியின் அருகே சென்று அமர்ந்தவன்... அவளது கைகளை பிடித்துக் கொண்டான்.

சுவாதி அவனின் கையை தட்டி விட்டு விட்டு நகர்ந்து அமர்ந்தாள். மகேஷுக்கு சிரிப்பாக வந்தது. அவன் அப்பொழுது கையை தட்டி விட்டு சென்றான் என்று இப்பொழுது தட்டி விடுகிறாள்.

மீண்டும் நெருங்கி அமர்ந்து அவளது கைகளை பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டவன்...
"மலருக்கு இஷ்டம்னா ஆதித்யாவை கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.. ஓகேவா" என்றான் சிரிப்புடன்....
அவ்வளவு நேரம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்த சுவாதிக்கு தன் காதுகளை நம்பவே முடியவில்லை.

உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது. கர்வமாகவும் இருந்தது. கணவன் தான் சொன்னதை கேட்கிறான் என்று....
அவனைப்பார்த்து வசீகரமாக புன்னகைத்தாள்.

அவளைத் தன் தோளின் மீது சாய்த்துக் கொண்ட மகேஷ்,
"ஆதித்யாவுக்கு மலர பிடிக்குமா?" என்று கேட்டான்.

"நம்ம மலர யாருக்கு தான் பிடிக்காது... அவள மாதிரி யாராலயும் இருக்க முடியாது... ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு... என்னோட அண்ணனுக்கு அவளை பிடிக்காம இருக்குமா?"என்று மறு கேள்வி கேட்டாள் சுவாதி.
மகேஷ் அவளை பார்த்து சிரித்தான்.

ஆரம்பத்தில் மலரிடம் பேசிய பேச்சு என்ன? இப்பொழுது அவளைப் பாராட்டி பேசுவதென்ன? எப்படி மலரின் மீது இவ்வளவு பாசம் என்று சந்தேகப்பட தோன்றவில்லை.
சந்தோஷமாகத்தான் இருந்தது.

"சரி நானே காலைல கல்யாணத்தைப் பத்தி... மலர் கிட்ட பேசுறேன்... அவளுக்கு சம்மதம்னா மேல இதப்பத்தி பேசுவோம்" என்று சொன்னதும் தான் சுவாதிக்கு தான் திக்கென்று இருந்தது.
அவன் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று...

"நானே மலர் கிட்ட பேசுறேன்னே... உங்ககிட்ட சொல்ல கூச்ச படலாம்... எங்கிட்டனா கொஞ்சம் ஃப்ரீயா பேசுவா..." என்று சுவாதி முயன்று சாதாரணமாக சொல்ல... மகேஷுக்கு அதில் உள்ளர்த்தம் இருப்பது போல் தெரியவில்லை "சரி" என்று விட்டான்.
சுவாதியின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கையும் காதலும் வைத்திருந்தான் அவன்...
ஆனால் மகேஷுக்கு உண்மை தெரியவரும் பொழுது சுவாதியின் நிலை?

மறுநாள் காலை உணவு வேளையில் உணவின் சுவையை கூட உணராமல் விழுங்கிக் கொண்டிருந்த தங்கையை பார்த்தான் மகேஷ். முகம் சோர்ந்து களையிழந்து இருந்தது. தங்கையின் முக வாடலுக்கு நந்தன் தான் காரணம் என்று நினைத்து அவனின் கோபம் இன்னும் அதிகரித்தது. அதை கட்டுப் படுத்திக் கொண்டு சுவாதியிடம் மலரை கண்ஜாடை காட்டினான்.

சுவாதியும் அதை உணர்ந்து, மலரின் தட்டில் இன்னொரு சப்பாத்தியை எடுத்து வைத்தாள். மலர் மறுத்தும் கனிவாக சாப்பிடுமாறு அறிவுறுத்தினாள். மலரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது... உணவில் கவனமாக இருப்பது போல் குனிந்து கொண்டாள். அதை கவனித்த மகேஷின் மனம் தங்கைக்காக உருகியது.

உணவிற்குப்பின் மனைவியிடம் திருமணத்தை பற்றி பக்குவமாக பேச சொல்லிவிட்டு மகேஷ் அலுவலகத்திற்கு கிளம்பி விட... வானதி மலரின் அறையில் தனக்கு பிடித்த பொம்மைகளை சுற்றி வைத்துக் கொண்டு... படம் வரைந்து கொண்டிருந்தாள்.

மலர் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்க, அவளைப் பார்க்க அங்கு வந்தாள் சுவாதி.
தன் அண்ணி தன் அறைக்கு வந்தவுடன் அதிசயமாக பார்த்த மலர் "என்ன அண்ணி" என்றாள்.
கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும்,
"மலர் உன்னோட கல்யாணத்த பத்தி பேசணும்" என்றாள் சுவாதி.
ஒரு நிமிடம் இறுகிய மலரின் முகம் அண்ணியின் முகத்தை அழுத்தமாக பார்த்தது.

அவளது முகத்தைப் பார்த்த சுவாதி,
"நேத்து நந்தன் கிட்ட உங்க அண்ணன் பேசினார்..."என்றதும்,
இறுக்கம் தளர்ந்து...
ஆவலாக, "என்ன பேசினார்?" என்று கேட்டாள் மலர்.

"அவர் கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டாராம் ....திரும்பவும் அமெரிக்காவிற்கு போறாராம் இனி வரவே மாட்டார்" என்று அண்ணியின் பதிலைக் கேட்டதும் முகம் சோர்ந்து போனாள் மலர்... உடலில் இருந்த மொத்த திடமும் வடிந்தது போல் இருந்தது அவளுக்கு...

அவளின் சோர்ந்த முகத்தைக் கவனித்த சுவாதி இதுதான் சமயம் நினைத்து விஷயத்தைப் போட்டு உடைத்தாள்.
"பேசாம நீ எங்க அண்ணன் ஆதித்யாவை கல்யாணம் பண்ணிக்கோ மலர்..." என்ற அண்ணியை முறைக்க கூட முடியாமல் தலையை தாழ்த்தினாள் மலர்.

பேசாமல் தலை குனிந்து தன் நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தவளிடம், "பதில் சொல்லு மலர்" என்று சுவாதி அழுத்தமாக கேட்ட பிறகு தான்,
"எனக்கு இஷ்டம் இல்ல அண்ணி" என்று பட்டென்று பதில் வந்தது
சுவாதிக்கு கடுப்பாக இருந்தது.
மகேஷிடம் சம்மதம் வாங்க அவள் பட்டபாடு அவளுக்கு தானே தெரியும். மகி கூட சம்மதித்துவிட்டார்... இவளுக்கு என்னவாம்....
அது அவளது வாழ்க்கை ...அவளது விருப்பம் என்றெல்லாம் அவளுக்கு தோன்றவே இல்லை சுவாதிக்கு... தன் பேச்சை எப்படி... ஒட்ட வந்த இவள் மறுக்கலாம் என்று தான் நினைத்தாள்.

கோபத்தை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு....
"நல்லா யோசிச்சு பாரு மலர்... என்னோட அண்ணனுக்கு எந்த குறையும் இல்ல... பணம் இருக்கு ...செல்வாக்கு இருக்கு இதைவிட என்ன வேணும்... நீ ராணி மாதிரி வாழலாம்" என்று ஆசை காட்டினாள் சுவாதி.

"எனக்கு ராணி மாதிரி வாழ விருப்பம் இல்ல அண்ணி" என்றாள் மலர் மீண்டும் முகத்தில் அடித்தது போல்...
சுவாதிக்கு பொறுமை பறந்தது...
"நீ என்னோட அண்ணன கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்" என்றாள் சுவாதி இறுக்கத்துடன்....

மலரும் அவளுக்கு சளைத்தவள் இல்லை என்பதுபோல், "என்னால நிச்சயமா முடியாது" என்று விட்டாள்.
ஆங்காரம் அகங்காரம் அதிகரிக்க மலரை உறுத்து விழித்த சுவாதி,
"அப்போ இதையும் நல்லா கேட்டுக்கோ இனி உன்னோட அண்ணன் கூட நான் வாழமாட்டேன்...என்னோட குழந்தைய கூட்டிட்டு என்னோட அண்ணன் வீட்ல போய் இருப்பேன். எனக்கும் மகேஷுக்கு டைவர்ஸ் ஆகும். நீயும் உன்னோட அண்ணனும் தனிமரமாக சந்தோஷமா இருங்க... இனி உங்க வாழ்க்கையில நான் தலையிட மாட்டேன்" என்றவள் விடுவிடுவென்று குழந்தையை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்று தன் பொருட்களை அள்ளி பெட்டியில் போட ஆரம்பித்தாள்.
மலர் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அவள் திருமணத்திற்கு சம்மதிப்பதற்கும் அவளது அண்ணனுக்கும் என்ன சம்மதம்? எதற்கு தேவையில்லாமல் அண்ணி இப்படி எல்லாம் செய்கிறார்கள்? என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் அண்ணனின் சந்தோஷம் சுவாதியிடம் தான் உள்ளது என்பது மலருக்கு நன்றாக தெரியும்...
வேகமாக அண்ணியின் அறைக்கு சென்று அவளை தடுக்கப் பார்த்தாள் மலர்.


"ப்ளீஸ்... அண்ணி எங்கேயும் போகாதீங்க.. அதுக்கும் இதுக்கும் என்ன கனெக்ஷன்னு எனக்கு இப்பவும் புரியல"

"உனக்கு புரியலைன்னா நானே சொல்றேன்... நல்லா காத தொறந்து வச்சு கேட்டுக்கோ... உனக்கு நிச்சயமான நந்தன் உன்ன வேண்டாம்னு சொல்லிட்டான்... நீ அதையே சாக்கா வச்சு இங்கேயே டேரா போடலாம்னு நெனச்சிட்டா என்ன பண்ண?... அதான் சொல்றேன் எங்க குடும்பத்துக்குள்ள இருக்க முயற்சி பண்ணாத... மரியாதையா எங்க அண்ணன் ஆதித்யாவ கல்யாணம் பண்ணிட்டு இங்கிருந்து நடைய கட்ற வழியை பாரு..." என்றாள் சுவாதி எரிச்சலுடன்.... சுவாதியை பொறுத்தவரை அவள் மகேஷ் மகள் வானதி இதுதான் அவளது குடும்பம். அதில் மலர் இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.

மலருக்கு அண்ணியின் ஒவ்வொரு சொல்லும் சாட்டையடியாக மனதில் விழுந்தது.
உதட்டை கடித்துக் கொண்டு
நின்றவள்... முயன்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "உங்க அண்ணன் ஆதித்யாவை நான் கல்யாணம் பண்ணிக்கலனா? என்ன செய்வீங்க அண்ணி" என்று அமைதியாக கேட்டாள் மலர்.

அவளது அமைதியைப் பார்த்து சுவாதிக்கு இன்னும் கோபம் கூடியது.
"நீ மட்டும் என் அண்ணன கல்யாணம் பண்ணிக்கலனா... கண்டிப்பா நான் உன்னோட அண்ணன் கூட வாழ மாட்டேன். என்னோட குழந்தையை கூட பாக்க விட மாட்டேன்.." என்று சுவாதி கத்தினாள்.

வானதிக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அவளும் அழ ஆரம்பித்துவிட... மலருக்கு சங்கடமாக இருந்தது.

"அண்ணி ப்ளீஸ் நான் வேணா இந்த வீட்டை விட்டு போயிடுறேன்... தயவுசெஞ்சு என்ன இப்படி எல்லாம் பிளாக் மெயில் பண்ணி கஷ்ட படுத்தாதிங்க அண்ணி" என்று தன்மானத்தை விட்டு கெஞ்சினாள் மலர்.

"மலர் நீயே இந்த வீட்டை விட்டு வெளியே போனாலும் என்னோட முடிவு இதுதான்" என்றாள் சுவாதி கறார் குரலில்...

மலர் திணறிப் போனாள்.
"அண்ணி எனக்கு நல்லா தெரியும் ...நீங்க மகேஷ் அண்ணன் மேல உயிரையே வச்சு இருக்கீங்க...கண்டிப்பா உங்களால அண்ணன விட்டு வாழ முடியாது... எதுக்கு தேவையில்லாம இப்படி எல்லாம் பண்றீங்க" என்று கிட்டத்தட்ட அழு குரலில் கேட்டாள் மலர்.

"என்னோட அண்ணன் உன்ன விரும்புறார்னு எனக்கு தோணுது மலர். நந்தன் கூட உன்னை விட்டு போயிட்டான் தானே... இப்போ உனக்கு என் அண்ணன கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன பிரச்சனை... நீ போனா தான் எனக்கும் நிம்மதி.. இந்த வீட்டுக்கும் நிம்மதி" என்று சுவாதி வெறுப்புடன் சொல்லவும் கலங்கிய கண்களுடன் தன் அண்ணியை வெறித்துப் பார்த்தாள்.
ஒருவேளை தன் அண்ணிக்கு சௌமியாவின் எண்ணத்தைப் பற்றி தெரியாமல் இருக்கலாம் என்ற நப்பாசையில்,

"அண்ணி... ஆனா நந்தன சௌமியா என்கிட்ட..." என்று மலர் ஏதோ சொல்ல வர....
"ப்ச்ச் எனக்கு எல்லாமே தெரியும்" என்று முகத்தை சுளித்தாள் சுவாதி.
மலர் இப்பொழுது உண்மையிலேயே மனதளவில் பலம் இழந்து போனாள். மனமெங்கும் விரக்தியாக இருந்தது... என்ன வாழ்க்கை இது? எவர்தான் இந்த உலகில் உண்மையானவர்கள்? திரும்பிய இடமெல்லாம் சுயநலம் சூழ்ச்சி வஞ்சகம் தான்... என்று ஏதேதோ யோசித்தவளின் யோசனையை வானதியின் அழுகை தான் தடை செய்தது.
ஒருபுறம் அண்ணனின் வாழ்க்கை... ஒருபுறம் தன் வாழ்க்கை... என்ன சொல்வது? என்ன செய்வது? என்று தெரியாமல் மலர் தடுமாறிப் போனாள்.

தரையில் உட்கார்ந்து அழுத குழந்தையை தூக்கி சமாதானப்படுத்தியவள்... இப்பவோ அப்பவோ என்று விழ தயாராகிக் கொண்டிருந்த கண்ணீரை துடைத்து விட்டு,
"அண்ணி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்... நீங்க போக வேண்டாம்" என்றாள் மலர்.... வலியை தேக்கிய குரலில்....
சுவாதி தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி உள்ளுக்குள் பெருமகிழ்ச்சி அடைந்தாள். அவளாவது கணவனை விட்டு இருப்பதாவது? முட்டாள் பெண்.. எதை சொன்னாலும் நம்புகிறாள் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

பின் மலரின் கலங்கிய முகத்தை பார்த்தவுடன்,
"மலர் கண்டிப்பா நீ நல்லா இருப்ப கவலைப்படாத... எப்பவுமே நானும் உன்னோட அண்ணனும் உன் கூட தான் இருப்போம்" என்றாள் கடைசியாக... போனால் போகட்டும் என்பது போல...
ஆனால் அது மலரின் மனதிற்கு ஆறுதல் அளிக்கவில்லை. அண்ணியை பார்த்து விரக்தியாக சிரித்துவிட்டு... அந்த அறையை விட்டு வெளியேறினாள் மலர்.

எல்லாரும் தன்னை ஒரு பொம்மையாக ஆட்டி வைக்கிறார்கள் என்பது அவளுக்கு மிகவும் நன்றாகவே புரிந்தது... தன் அறைக்கு வந்தவள் தன்னை தனியாக விட்டு சென்ற தாய் தந்தையை நினைத்து மீண்டும் ஒரு மூச்சு அழுதாள்.

மாலை வந்த மகேஷ் தங்கை திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதை அறிந்து, அவளிடம் மீண்டும் சென்று உனக்கு சம்மதமா? கேட்கத்தான் செய்தான். ஆனால் மலர் தான் பதில் சொல்ல முடியாமல், தலை குனிந்து கொண்டாள். அண்ணியை மாட்டி விட மனம் வரவில்லை. கண்ணில் ஊறிய நீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. பொய் சொல்லியும் பழக்கமில்லை. மொத்தத்தில் உள்ளுக்குள் நரக வேதனையை அனுபவித்தாள்.
மலர் தலையை குனிந்ததும் மகேஷ் அவளை வித்தியாசமாக பார்க்க, சுவாதி அவளுக்கு வெட்கம் என்று சமாளித்து வைத்தாள். வெட்கம் என்றவுடன் மகேஷும் விட்டுவிட்டான்.

மகேஷ் மலர் இருவரின் சம்மதத்தை கேள்விப்பட்ட சௌமியாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி... தான் நினைத்ததெல்லாம் நடக்கிறது என்று...

ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் கடவுள் எதற்கு?
ஆதித்யாவிடம் திருமண விடயம் பேச வந்த மகேஷுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை... எப்பொழுதும்போல் தான் பேசினான் ஆதித்யா. எப்போதுமே அவன் என்ன நினைக்கிறான்? என்று வெளியில் தெரியாது... அன்றும் அப்படியே!!
மகேஷினால் அவனிடம் தைரியமாக தங்கையை பற்றி பேச முடியவில்லை. திருமணத்திற்கு சம்மதமா? என்று மட்டும்தான் கேட்க முடிந்தது. அதற்கு ஆம் என்பது போல் சிறிய தலையசைப்பு வேறு ஒன்றும் அவன் பேசவில்லை.

அதன் பிறகு நடந்தது எல்லாம் கனவு போல் தான் இருந்தது மலர்விழிக்கு ...
விறுவிறுவென்று திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தது....
மகேஷ் சுவாதி இருவரும் மலரின் பக்கம் நின்று, எந்த குறையுமின்றி திருமண ஏற்பாடுகளை செய்தனர். மகேஷுக்கு தங்கையை அருகில்தான் கொடுக்கப் போகிறோம் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வரலாம் சந்தோஷம்... சுவாதிக்கு தன் சொல் பேச்சு கேட்கும் மலர் அண்ணியாக வரப் போகிறாள் என்றும்... தன் வீட்டிலிருந்த தேவையில்லாத லங்கேஜ் ஒன்று வெளியேறுகிறது என்றும் சந்தோஷம்...

ஆனால் மணமக்கள் இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பாவம்தான். அதை யாரும் கவனிக்கவுமில்லை... எல்லாரும் படுபிஸியாக சுற்றினர்.

ஆதித்யா கடமைக்காக திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான் என்றால் மலர் கட்டாயத்திற்காக ஒப்புக்கொண்டாள். இதில் எங்கிருந்து மகிழ்ச்சி பொங்க...
ஆனால் இந்த திருமணத்தில் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த ஜீவன் என்றால் சௌமியா தான்...
ஆதித்யா திருமண விஷயங்களில் தலையிடவில்லை. சௌமியாவிடம் நீயே பார்த்துக்கொள்... என்று சொல்லிவிட்டான். ஆதித்யாவின் பக்கம் சொந்த பந்தங்கள் எல்லாம் குறைவுதான் என்பதால் ஆட்களை வைத்து தான் வேலை செய்ய முடிவு செய்தனர். அதிலும் சௌமியா தான் ஆதித்யாவின் சைட் பெரிய மனுஷியாக மாறி வேலை ஆட்களை வைத்து திருமண ஏற்பாடுகளை நன்றாகவே செய்தாள்.

கல்யாண வேலைகளுக்கு இடையில் நந்தனின் மொபைலுக்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேதான் இருந்தாள். ஆனால் அவன் தான் பதிலளிக்க வில்லை.

மலரின் மீது உள்ள கோபத்தில் நந்தா தன்னை ஏன் தவிர்கிறான்? என்று தான் அவளுக்கு விளங்கவில்லை. சரி பரவாயில்லை. ஆதித்யா மலரின் திருமண பத்திரிகையையும் விழாவில் எடுக்கும் புகைப்படங்களையும் அவனுக்கு கண்டிப்பாக இ-மெயிலில் அனுப்பி விட வேண்டும். அதன் பிறகாவது அவன் ஏதாவது ரியாக்ட் செய்வான் என்று எதிர்பார்த்தாள்.

திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தமும் மறுநாள் சுபமுகூர்த்தம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண வேலைகள் துரிதமாக நடந்தது
திருமண உடைகள், நகைகள் எல்லாம் வீட்டிற்கே வரவழைக்கப்பட்டு எடுக்கப்பட்டது. எல்லாவற்றிலும் மலர் உற்சாகமற்று இருந்ததால் சுவாதியே அவளுக்கு தேர்ந்தெடுத்தாள்.
மகேஷுக்கு தங்கையின் முகத்தை பார்க்க வருத்தமாக இருந்தது. அவள் நந்தனை மறக்க முடியாமல் கவலைப் படுகிறாள் என்று நினைத்தான். திருமணத்திற்கு பின் அது எல்லாம் சரியாகி விடும் என்று நம்பினான். ஆதித்யாவிற்கு தங்கைகளின் மேல் எவ்வளவு அன்பு என்று மகேஷிற்கு தெரியும் அதே அளவு அன்புடன் மலரை பார்த்துக்கொண்டாள் போதும் என்று நினைத்தான்.
ஆனால் ஆதித்யாவோ நிச்சயதார்த்தம் அன்று தான் தொழில் விரிவாக்கம் சம்பந்தமாக மும்பை வரை சென்றவன் வந்து சேர்ந்தான். அவனுக்குமே திருமணத்தில் ஈடுபாடு இல்லை.... அதுவும் சௌமியாவிற்கு மகிழ்ச்சியைத் தான் தந்தது.

அன்று எப்படி எல்லாம் பேசிவிட்டு விட்டு சென்றாள் மலர். இன்று அவளுக்கு பிடிக்காத தன் அண்ணனுடன் திருமணம்... அதிலும் தன் அண்ணனுக்கும் விருப்பமில்லை... இனி அவள் வாழ்க்கை அவ்வளவுதான்... என்று அவளது உள்ளம் எக்களித்து சிரித்தது.

திருமண நாளும் வந்தது.... பட்டு வேட்டி சட்டையில் அக்மார்க் தமிழ் மாப்பிள்ளையாக ஆதித்யா ஐயர் செல்லும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க, ஐயர் "பொண்ண அழைச்சிட்டு வாங்கோ" என்றவுடன் சுவாதி மலரை அழைத்துவர, அரக்கு நிற புடவையில் சோகப் பதுமையாக வந்தவளை ஏறிட்டும் பார்க்காமல் அமர்ந்து இருந்தான் ஆதித்யா.

மலரோ தன் வாழ்வே முடியப் போகிறது என்ற விரக்தியில் அமர்ந்திருந்தாள். சுற்றி இருந்த அனைவருமே அவளது கண்களுக்கு பூதங்களாக தெரிந்தனர்.... தனக்கு என்று இங்கே யாருமே இல்லை என்று கண்கள் கலங்க தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் மலர்விழி.

"கெட்டி மேளம் கெட்டி மேளம்...
மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்
" ஐயர் மந்திரம் சொல்ல ஆரம்பித்தவுடன், மேள வாத்தியங்கள் ஒலிக்க, மலரின் சங்கு கழுத்தில் திரு மாங்கல்யம் அணிவித்தான் மலர்விழியின் பூச்சாண்டி...

தங்கையின் திருமணத்தை கண் குளிர பார்த்தான் மகேஸ்வரன். தன் தாய் தந்தையரிடம் தங்கையின் நல்வாழ்விற்காக வேண்டிக் கொண்டு அட்சதையை தூவி கண்கள் கலங்க வாழ்த்தினான்.
சுவாதியும் சௌமியாவும் தாங்கள் நினைத்ததை நடத்தி விட்ட மமதையில் வெற்றி சிரிப்புடன் அட்சதையை தூவினர்.

எல்லாம் முடிந்தது என்று நினைத்த மலரின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக வழிந்து ஆதித்யாவின் கைகளில் பட்டு தெரித்தது...
அப்பொழுதுதான் ஆதித்யாவின் கண்கள் மலரை பார்க்கவே செய்தன...
தொடரும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN