உன்னாலே உனதானேன் 13

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மதியம் இரண்டு மணியளவில் வினயிற்கு அழைத்தாள் ரேஷ்மி.... அழைப்பு எடுக்கப்படாமல் இருக்க எதிர்பார்த்ததே என்று எண்ணியவள்
“சாப்டாச்சா” என்று வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டாள்... ப்ளூடிக் விழுந்த போதிலும் பதில் வரவில்லை...
“நான் இன்னும் சாப்பிடலை” என்று செய்தியனுப்பிய போது
“ஹூ கெயாஸ்” என்று மறுமொழி வர அதில் கடுப்பானவள்
“ஆ... என் எக்ஸ் பாய்பிரண்ட் கேயார்ஸ்...” என்று பதிலனுப்ப
“அப்போ அவன்கிட்ட போய் சொல்லு...”என்று வினயிடம் இருந்து பதில் வந்தது...

“அந்த மரமண்டை, வளர்ந்து கெட்டவன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்.... ஆனா அது ஹூ கேயார்ஸ்னு கேக்குது?? பனைமரம் மாதிரி வளர்ந்தவனுக்கு கடவுள் மண்டையில் சரக்கை கொடுக்க மறந்துட்டாரு போல...” என்று வாய்ஸ் மெசேஜை பதிலாக அனுப்பினாள்...

அவளது வாய்ஜ் மெசேஜை ஹெட்செட் உதவியுடன் கேட்ட வினயிற்கு சிரிப்பை கட்டுப்படுத்தமுடியவில்லை....
உரையாடலை தொடர விரும்பியவனுக்கு வேலைப்பளு தடையாக இருக்க

“நான் சாப்டேன்... நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு... டேக் கேயார்...” என்றுவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டான்....
அவனது மெசேஜை பார்த்ததும் மனதினுள் “ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு எவ்வளவு பேச வேண்டி இருக்கு??? இப்போவே இப்படினா வீட்டுக்கு வந்ததும் நம்மாளு கோபம்னு என்னென்ன காமடி பண்ண போகுதோ...???” என்று பேசியவள் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடச்சென்றாள்..

மாலை ஐந்து மணியளவில் ரியாவை பார்க்கிற்கு செல்ல அழைத்தாள் ரேஷ்மி...

“ரேஷ்மி நீ ரொம்ப டயர்டா தெரியிற..இன்னைக்கு ரெஸ்ட் எடு நாளைக்கு போகலாம்....” என்று தடுக்க

“ஐயோ அக்கா அதெல்லாம் ஒன்றும் இல்லை... நான் நல்லா தான் இருக்கேன்... நல்லா தூங்கி எழுந்ததால இப்போ ப்ரஸ்ஸா இருக்கு... நாம போகலாம்... அனுகிட்டயும் இன்னைக்கு போவோம்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்... கூட்டிட்டு போகாட்டி குழந்தை ஏமாந்திடும்.. பாவம் அக்கா..”

“சரி உனக்கு உடம்புக்கு நல்லா இருந்த எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை..சரி ஒரு டென் மினிட்ஸ் தா.. நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்....” என்றவள் அனுவை அழைத்துக்கொண்டு உடைமாற்ற சென்றாள்...

உடைமாற்றி வந்த ரியாவையும் அனுவையும் அழைத்துக்கொண்டு வீரலட்சுமியிடம் சொல்லிக்கொண்டு மூவரும் அருகிலுள்ள பார்க்கிற்கு கிளம்பினர்....பார்க்கிற்கு சென்றதும் அனுவை விளையாடுமாறு விட்டுவிட்டு அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தனர் இருவரும்...
அப்போது ரியாவின் போன் ஒலிக்க அதை எடுத்து பேசினாள்..

பின் ரேஷ்மியிடம் அபி பார்க்கிற்கு வருவதாக கூற பத்து நிமிடங்களில் அபி அங்கிருந்தான்... அபியிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிய ரியா ரேஷ்மியை அழைத்துக்கொண்டு பார்க்கின் மறுகோடிக்கு சென்றாள்...

அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்ததும்

“இப்போ சொல்லு ரேஷ்மி... என்கூட என்ன பேசனும்??”

“ரொம்ப தாங்ஸ் கா... நான் எப்படி ஆரம்பிக்கிறதுனு தயங்கிட்டு இருந்தேன்.... “

“புரிந்தது மா... அதான் அனு அப்பாவை வரவைத்து குழந்தையை அவரிடம் ஒப்படைச்சிட்டு வந்தேன்... சரி நீ சொல்லு... என்ன பேசனும் என்கிட்ட???”

“அக்கா வினய் ஏதும் சொன்னாரா உங்ககிட்ட??”

“இல்லை மா... கவின் ஏதும் சொல்லலை... காலையில் முகம் வாடி இருந்தது... நேற்றும் நீங்க இரண்டு பேரும் வரும் போதும் உங்க இரண்டு பேர் முகமும் சரியில்லாததால் தான் என்னனு விசாரிச்சேன்...”

“ஆமா அக்கா... நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்... ஒரு நல்ல மனுஷனை என்னுடைய முட்டாள் தனமான நடவடிக்கைகளால் ரொம்ப காயப்படுத்திட்டேன்...என்னை விரும்புன ஒரே காரணத்துக்காக அந்த மனுஷனும் நான் காயப்படுத்தும் போதெல்லாம் அமைதியாக இருக்காரு...” என்றவளின் குரல் கம்மியது..

“ரேஷ்மி கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுமா??”

“சொல்றேன் கா... முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்றேன்....
எனக்கு லவ்னா பிடிக்காது.... அதாவது லவ் பண்ணுறேனு சொல்லுறவங்களையே பிடிக்காது.... அதுக்கு காரணம் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்டோட இறப்பு..”

“என்னாமா சொல்ற??” என்ற ரியாவின் கேள்விக்கு இவ்வளவு நாட்கள் அவள் மனதில் மறையா வடுவாக இருந்த அந்த சம்பவத்தை விபரிக்க தொடங்கினாள்...

அப்போது ரேஷ்மி ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள்...
அன்று காலை ரேஷ்மியின் வீட்டில் வந்து காத்திருந்தாள் அவளது உயிர்த்தோழி நித்யா...

“ரேச்சு இன்னும் எவ்வளவு நேரம்டி?? ஸ்கூல் பெல் அடிச்சதும் தான் நீ கிளம்புவ போல... இனிமே நான் தனியா போய்க்கிறேன்.... நீயும் தனியா போய்க்கோ...” என்று கத்திக்கொண்டு நடுசாலையில் அமர்ந்து ரேஷ்மியின் அன்னை கனகா கொடுத்த பூரியையும் கிழங்கு பிரட்டலையும் ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தாள் நித்யா...

ஜடையை பின்னியவாறு அறையில் இருந்து வெளியே வந்த ரேஷ்மி

“மிஸ். நித்யா இதோடு இந்த வார்த்தையை நூறு தடவைக்கு மேல சொல்லிட்டீங்க.... ஆனா செயல்படுத்துற வழியைத்தான் காணோம்..”

“ஓ உனக்கு அப்படி ஒரு கவலை இருக்கோ....??சரி இனிமே நான் தனியாவே போய்க்கிறேன்.. நீயும் தனியா வா..” என்று பதிலளித்தவள் சாப்பிடுவதை நிறுத்தவில்லை...

“ஹா.. காமடி... எங்க அம்மா பூரி செய்வதை நிறுத்துறவரை உன் கம்பனி எனக்கு எப்பவும் உண்டு” என்றபடி கனகாவிடம் தனக்கும் ஒரு தட்டை வாங்கிக்கொண்டு நித்யாவின் அருகில் அமர்ந்தாள் ரேஷ்மி...

“அப்போ நான் இந்த அல்ப பூரிக்காக தான் வாரேன்னு சொல்லுறியா???” என்று நித்யா எகிற

“இல்லைனு சொல்லுறியா??”

“ஆன்டி பாருங்க ஆன்டி இவளை... நான் உங்க மேலே உள்ள பாசத்தில் நீங்க கொடுக்கும் பூரியை சாப்பிட்டா இவ இந்த பூரிக்காக தான் நான் இங்க வாரேன்னு சொல்லுறா...” என்று நித்யா சிணுங்க அவளை சமாதானப்படுத்தியவர் இருவரையும் பள்ளிக்கு கிளப்பினார்...

இவ்வாறு செல்ல சண்டைகளும் நட்பு பரிமாறல்களுமாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில் வந்தது அந்த கொடிய நாள்..
வழமை போல் பாடசாலைக்கு தயாராகி வந்த ரேஷ்மி நித்யாவிற்காக காத்திருக்க அவளோ அன்று வரவில்லை.. சரி செல்லும் வழியில் அழைத்து செல்லலாம் என்று கிளம்பியவள் நித்யாவின் வீட்டிற்கு செல்ல அவளது வீட்டு வாசலின் முன் பலர் நின்றிருந்தனர்...

என்னவென்று புரியாது உள்ளே சென்று பார்த்தவளுக்கு நடப்பது கனவா நினைவா என்று புரியவில்லை... அங்கு நடு சாலையில் நித்யாவின் குடும்பத்தார் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர்..

ரேஷ்மியை கண்டதும் எழுந்த வந்து கட்டிக்கொண்டு அழுத நித்யாவின் அன்னை

“ஐயோ ரேஷ்மி நம்ம நித்யா நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டா மா... என் மக இப்படி எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டாலே... இனி யாருகூட நீ தினமும் ஸ்கூலுக்கு போவ.. ஐயோ ஐயோ..” என்று தன் முந்தனையால் வாயை மூடிக்கொண்டு அழ ரேஷ்மிக்கு நித்யாவின் இறப்பை ஜீரணிக்கமுடியவில்லை.... அவள் கதறியழவில்லை என்றாலும் அவளது கண்களில் இருந்து நீர் கொட்டியவண்ணமே இருந்தது....

அவளது இறப்புக்கான காரணத்தை அறியவேண்டும் என்றுகூட தோன்றாத நிலையில் இருந்தாள் ரேஷ்மி.... நித்யாவின் இறப்பை கேள்விபட்ட ரேஷ்மியின் பெற்றோரும் அங்கு வந்துவிட அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதனர் நித்யாவின் பெற்றோர்...

மதியம் பன்னிரண்டு மணியளவில் பிரேதம் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது... துக்கத்தை அடக்க முடியாத போதிலும் வந்திருந்த நட்புக்களை கவனிக்க வேண்டியிருந்ததால் வெளியே நின்றிருந்தவர்களை கவனிக்க தொடங்கினாள்...

அப்போது அங்கிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தில் யாரோ கதறி அழுவது போலவும் இடையிடையே நித்யாவின் பெயரை அந்த நபர் கூறுவதும் ரேஷ்மியின் காதுகளில் விழுந்தது.
அந்த கூட்டத்தின் அருகே சென்றவள் அவளது டியூஷன் க்ளாஸ் ஆண் நண்பர்கள் ஆறேழு பேர் சூழ்ந்திருக்க அதன் நடுவில் ஒருவன் அவர்களில் ஒருவரை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான்...

அவன்
“ஐயோ மச்சான்... இப்படி என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டாளே டா... நான் அவ கூட சண்டை போட்டுருக்க கூடாது... அய்யோ அவ சாகும் போது கூட நா அவகூட சந்தோஷமாக இருக்கலையே டா...எப்பவும் போல செல்ல சண்டைனு அவ கூட நான் போட்ட சண்டை என் கூட அவ போட்ட கடைசி சண்டையாகிருச்சே.... ஐயோ நித்யா எதுக்கு என்னை விட்டுட்டு போன??? என்னையும் உன்கூட கூட்டிட்டு போமா...இனிமே உன்கூட சண்டையே போட மாட்டேன்...” என்று அவன் அழகையூடு பிதற்ற அவன் நண்பர்கள் அவனை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்கள்...

இதை கேட்ட ரேஷ்மிக்கு இது புது தகவலாக இருந்தது... தகவலுக்கு சொந்தக்காரி உயிரோடு இல்லாத போது இந்த தகவலால் என்ன பயன் என்று தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்... மாலையில் பிரேதம் சிதையூட்டப்பட ரேஷ்மிக்கு தான் தன் உடலின் ஒரு பாகத்தை இழந்தது போல் இருந்தது....

எப்போதும் தன்னுடனேயே சுற்றும் ஜீவன் இன்று திரும்பி வரமுடியாத தூரத்திற்கு சென்றுவிட்டது என்ற உண்மையை அவளது மனமோ ஜீரணிக்க மறுத்தது... ஒருவாரம் பள்ளி செல்ல மறுத்தவளை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பினர் ரேஷ்மியின் பெற்றோர்...
பள்ளி சென்றவளுக்கு நித்யா இல்லாத வகுப்பில் இருக்க பிடிக்கவில்லை... ஒருவாறு நேரத்தை நெட்டித்தள்ளியவன் பாடசாலை முடிந்து நேரே சென்றது நித்யாவின் வீட்டிற்கு...

அங்கு அவளை வரவேற்ற நித்யாவின் பெற்றோரிடம் தன்னுடைய ஒரு புத்தகம் நித்யாவிடம் கொடுத்ததாகவும் அதை எடுப்பதற்காக வந்ததாகவும் கூறியவள் அவர்களது அனுமதியுடன் நித்யாவின் அறைக்கு சென்றாள்....

அறையினுள் சென்ற ரேஷ்மி நேரே சென்று நித்யாவின் மேசையில் இருந்த ட்ராயரை திறந்தவள் அதில் தான் நித்யாவின் பிறந்தநாள் பரிசாக கொடுத்த அந்த உலகவரைபடத்தை முன்புற அட்டையாக கொண்ட கனமான டயரியை வெளியே எடுத்தவள் அதை நித்யாவிற்கு கொடுத்தபோது தான் அவளிடம் வாங்கிய உறுதிமொழியை நியாபகப்படுத்தி பார்த்தாள் ரேஷ்மி...

“நித்து இது யூசுவல் டயரி மாதிரி யூஸ் பண்ண கூடாது.... இது நான் குடுத்ததால் உனக்கு இது ரொம்ப ஸ்பெஷல்..அதனால இதில் உனக்கு ரொம்ப ஸ்பெஷலாக நடக்கிற விஷயத்தை மட்டும் எழுதனும்.... அதாவது உன்னுடைய ஸ்வீட் மெமரிஸ்.. புரிஞ்சுதா??” என்று நித்யாவிடம் தான் வேண்டுகோள் விடுத்ததை நினைவுகூர்ந்தவள் அவள் அதனை மீறியிருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் அந்த டயரியை புரட்டத்தொடங்கினாள்....

ரேஷ்மி நினைத்தாற்போல் நித்யாவும் தன்வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் அந்த டயரியில் தன் அழகிய கையெழுத்தினால் பதிந்திருந்தாள்.. சில பக்கங்களை பிரட்டியதும் ரேஷ்மியின் கண்கள் அந்த பகுதியிலே நிலைகுத்தி இருந்தது....
அதில் என்.எம் என்று எழுதி அதை சுற்றி ஹார்ட் வரையப்பட்டு அம்பொன்று சொருகப்பட்டிருந்தது...
அடுத்த பக்கத்தை பிரட்டியவளுக்கு கிடைத்தது ஒரு கடிதம். கடிதத்தை கையில் எடுத்தவள் மறுகையில் இருந்த டயரியை மேசையின் மீது வைத்துவிட்டு அந்த கடிதத்தை பிரித்து படிக்கத்தொடங்கினாள்...

அந்த கடிதத்தில் அருண் என்றொருவன் நித்யாவை காதலிப்பதாக எழுதியிருந்தான்...
கடிதத்தை வாசித்துகொண்டிருக்கும் போது நித்யாவின் அம்மா வந்துவிட அதை அவர் பார்க்காதவாறு மறைத்து வைத்த ரேஷ்மி அவரிடம் சொல்லிக்கொண்டு அந்த டயரியை எடுத்துச்சென்றாள்..

வீடு திரும்பிய ரேஷ்மி முதல் வேலையாக தன்னறைக்குள் புகுந்துகொண்டவள் அறைக்கதவை தாளிட்டுவிட்டு அந்த டயரியை படிக்கத்தொடங்கினாள்.

அதில் ஒவ்வொரு பக்கத்திலும் நித்யா அருணுடன் தான் கழித்த தருணங்களை ரசித்து எழுதியிருந்தாள்...
அதை ஒவ்வொன்றாக வாசித்த ரேஷ்மிக்கு நித்யாவா இது என்று நம்பமுடியவில்லை... அவள் ஒவ்வொரு நிகழ்வுகளையும் வர்ணித்து எழுதியதிலிருந்தே அவள் எவ்வளவு ஆழமானது என்று புரிந்து கொண்டாள் ரேஷ்மி... ஆனால் அதை நித்யா தன்னிடம் பகிராமல் மறைத்துவைத்திருந்தது அவளது ஆரூயிர் தோழியாக ரேஷ்மியின் மனதை வருத்தியது... ஆனால் இறுதியாக அவள் எழுதியிருந்த சம்பவம் நித்யா தன்னிடம் எதையும் மறைக்காது சொல்லியிருந்தால் இந்நிலை வராது தடுத்திருக்கலாமே என்று மனம் புலம்பித்தவித்தது...

அதில் எழுதியிருந்ததாவது

“இன்னைக்கு அருண் என்னை திட்டிட்டான்.... திட்டியிருந்த கூட பரவாயில்லை.... அவன் என்னை ஏன்டா லவ் பண்ணோம்னு இருக்குனு சொல்லிட்டான்... அவன் நிம்மதியை நான் கெடுத்துட்டேன்னு சொன்னான்.. அவன் சுகந்திரத்தை நான் பறிச்சிட்டேன்னு சொன்னான்... அவனோட லைப்பில் இனிமே நான் இல்லைனு சொல்லிட்டான்.... அவனை நான் லவ்வுனு சொல்லி டாச்சர் பண்ணுறேனாம்.... கடைசியான ஒன்னு சொன்னான்.. இன்னைக்கு தான் அவன் என்னை பார்க்கிற கடைசி நாள்னு சொன்னான்.... அப்போ இனிமேல் என்னை பார்க்க வரமாட்டானா????இதுக்கு முதலிலும் சண்டை பிடிச்சிருக்கோம்...ஆனால் அப்போ அருண் இப்படியெல்லாம் பேசுனதில்லை.... ஆனால் இன்னைக்கு அப்படி சொல்லிட்டேன்..... உண்மையாகவே நான் டாச்சரா அவனுக்கு??? என் வீட்டுலயும் என்னை டாச்சர்னு தானே சொல்லுறாங்க....என் அம்மா அப்பாவுக்கும் என்னை பிடிக்கலை... என்னை காதலிக்கிறேன்னு சொன்ன அருணுக்கும் என்னை பிடிக்கலை.... அப்போ எதுக்கு நான் வாழனும்???” என்று முடிவடைந்தது....

அதை வாசித்த ரேஷ்மிக்கு ஆத்திரம் தாங்கமுடியவில்லை.... இப்படி ஒரு அசட்டு காரணத்திற்காக தன் உயிரை மாய்த்துக்கொண்டாளா நித்யா??? இதை தன்னிடம் பகிர்ந்திருந்தால் ஏதேனும் செய்திருப்பேனே??? காதலில் ஊடல் சகஜம் தானே??? அதற்காக உயிரை மாய்த்து கொள்வதா??? இந்த முடிவு யாருடைய மன அமைதிக்காக??? இந்த முடிவு எத்தனை சொந்தங்களை கஷ்டப்படுத்தியிருக்கும்??? எதனால் இதை பற்றி எதுவும் யோசிக்காது இப்படியொரு மடத்தனமான முடிவை எடுத்தாள் நித்யா??? என்று யோசித்தவளுக்கு ஒரு விஷயம் புரியவில்லை....
கரெண்ட் ஷாக் அடித்ததும் உடனடியாக முதலுதவி கொடுக்காததால் நித்யா இறந்து போனதாகவே நித்யா வீட்டில் கூறினர்... ஆனால் இதை வாசிக்கும் போது அவள் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் என்று புரிந்தது...

நித்யாவின் இந்த முட்டாள் தனமான முடிவு ரேஷ்மியினுள் பெரும் கோபத்தை கிளப்பியிருந்தது... அந்த கோபம் நித்யா தான் உயிரை மாய்த்துக்கொள்ள காரணமானவன் மீது திரும்பியது... அவனது கோபமான பேச்சு தான் நித்யாவின் இந்த முடிவுக்கு காரணம் என்று முடிச்சிட அவனை சந்தித்து அவனது சட்டையை பிடித்து கேள்வி கேட்க வேண்டும் என்ற வெறி ரேஷ்மியினுள் வந்தது...

அருண் ரேஷ்மி மற்றும் நித்யாவுடன் டியூஷன் கிளாசில் பயிலும் சக மாணவன்... அன்று மாலை டியூஷன் கிளாசிற்கு சென்ற ரேஷ்மி அருணை தேட அவன் அங்கு இருக்கவில்லை... அவனைப்பற்றி அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டுமே கூறினர்... ஆனால் அவர்கள் ஏதோ மறைப்பது போல் தோன்றியது ரேஷ்மிக்கு...

அருணுடைய நண்பன் ஒருவன் ரேஷ்மியின் நண்பியின் பாய் ப்ரெண்ட்... அவள் மூலம் அருண் பற்றி தெரிந்து கொள்ள முனைந்தாள் ரேஷ்மி...
நண்பியின் மூலம் கிடைத்த தகவல் ரேஷ்மியை இன்னும் உலுக்கிவிட்டது.... அருண் இப்போது வைத்தியசாலையில் இருப்பதாக கூறியவள் அவன் நித்யாவின் இறப்பிற்கு பின் திக்பிரம்மை பிடித்தது போல் இருப்பதாகவும் அவனது சித்தம் கலங்கிவிட்டதாக டாக்டர்கள் கூறுவதாகவும் கூறினாள்...

இதை கேள்விப்பட்ட ரேஷ்மிக்கு யாரை நோவது என்று தெரியவில்லை... காதல் என்ற பெயரில் ஜோடியாய் மகிழ்ந்து சுற்றி திரிந்த இரு ஜீவனில் ஒரு ஜீவன் உலகை மறந்தும் மறு ஜீவன் உலகை விட்டு மறைந்தும் அவஸ்தைபடுகிறதே....

இந்த காதல் தேவைதானா... காதலின் கைங்காரியம் இது தானா?? என்று வெதும்பியவளின் மனம் அந்த கணம் முதல் காதல் என்ற வார்த்தையை வெறுக்கத்தொடங்கியது... காதல் என்று பிதற்றுபவர்களை தலை தெறிக்க ஓடச்செய்தாள் ரேஷ்மி....
என்று ரேஷ்மி தன் கதையை முடிக்க

“இப்போ சொல்லுங்க அக்கா... நான் என்ன பண்ணட்டும்??? நித்யாவோட இறப்பும் அருணோட இந்த நிலைக்கும் ஒரே காரணம் காதல்...இப்படி இரண்டு பேரோட வாழ்க்கையையும் அழிச்ச காதலை எதிர்க்கிற என்னால் வினய் வெளிப்படுத்தும் காதலை ஏற்றமுடியவில்லை.....
அவரை மேரேஜ் பண்ணும் போது அவரோடு சேர்ந்து சந்தோஷமாக வாழனும் அப்படீங்கிற எண்ணம் மட்டும் தான் என்னோட மனதில் இருந்தது... ஆனால் அவர் என்னை காதலிச்சதாக சொன்னப்போ என்னில் புதைந்திருந்த அந்த கோபம் வெளியே வந்துவிட்டது.... அதன் செயலால் அடிக்கடி வினயை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்... அவரும் என்னுடைய செயலுக்கான காரணம் புரியாமல் தவிச்சிப்போய்ட்டாரு..... ஆனால் இப்போ என் மனம் அவரை விரும்பத்தொடங்கியிருந்தாலும் காதல் மீதான அந்த கோபம் வினையை அணுக எனக்கு தடையாக இருக்கு... நேற்று நான் வினயிடம் நடந்துகொண்ட விதம் அதன் வெளிப்பாடு தான்... என்னால் அதை கட்டுப்படுத்த முடியலை... அதனால் ரொம்ப கஷ்டப்படுறது வினய் தான்.... எனக்கு என்ன செய்றதுனே புரியலை.... காலம் இதை சரிப்படுத்தும்னு நினைத்தேன்... ஆனா அது நடக்கலை... இதற்கிடையில் அம்மா அப்பாவோட இறப்பு என்னை ரொம்ப மோசமா பிஹேவ் பண்ண வைத்துவிட்டது... அப்போ கூட வினய் ரொம்ப சப்போர்ட்டா தான் இருந்தாரே ஒழிய அவருடைய கோபத்தையோ ஏக்கத்தையோ வெளிப்படுத்தலை.... இப்படிபட்ட ஒரு நல்ல மனுஷனை கஷ்டப்படுத்துறோமேனு தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு.... அவரு நினைத்திருந்தால் எப்பவோ என்னோடு சேர்ந்திருக்கலாம்.... ஆனா அவர் என்கிட்ட கேட்டது என்னுடைய காதலை.... ஆனால் என்னால் அதை கொடுக்க முடியலை...” என்று கூறியவளின் குரலில் அத்தனை துயரம்...

ரேஷ்மியை ஆதரவாக அணைத்த ரியா

“இங்க பாரு ரேஷ்மி..... உன்னுடைய நிலை எனக்கு புரியிது.... ஆனா மாற்றம் ஒன்று தான் மாறாது..... மற்றையதெல்லாம் மாறும்.... நித்யாவோட இழப்பு உன்னை ரொம்ப காயப்படுத்தியிருக்குனு எனக்கு புரியிது.... ஆனால் அவளது முடிவுக்கு காரணம் தனிமையே தவிர காதல் இல்லை....
அவளுக்கு அருணோட உறவும் இல்லைனா தனித்துவிடும் அப்படீங்கிற பயம் தான் அவளை அந்த முடிவு எடுக்க வைத்தது... அவ தன்னோட காதல் மேலே முழு நம்பிக்கை வைத்திருந்தானா அவ இந்த முடிவை எடுத்திருக்க மாட்டா... நீ சொல்வதை வைத்து பார்க்கும் போது அவளுக்கு அவ வீட்டு ஆட்களோடு பெரிதாக ஒட்டுதல் இல்லைனு நினைக்கிறேன்... சரியா??”

“ஆமா அக்கா... அவ எப்பவும் எங்க வீட்டுல தான் இருப்பா... அவ அம்மா அப்பா வேலைக்கு போனதால் அவ தனியா தான் இருப்பா... நான் தான் அவளை என்னுடன் என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவேன்... அவளோட அம்மா அப்பாவோட அவ பெரிசா அட்டாச்டு இல்லை...”

“இப்போ நான் சொன்னது புரியிதா?? அருண் துணையும் இல்லாமல் தனித்துவிடுவோமோ என்ற பயம் தான் அவளை அந்த கோழைத்தனமான முடிவை எடுக்க வைத்தது.. அருண் கூட தன்னுடைய செயலால் தான் அவள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாலோ என்று குற்றவுணர்ச்சியில் தான் அப்படியாகியிருப்பான்.... அது காதலின் விளைவு இல்லைமா.... விதியின் சதி..... இதில் நீ காதலை வேணாம்னு சொல்றதுல எந்த வித நியாயமும் இல்லை...” என்று ரியா ரேஷ்மியை மெதுவாக குழப்பிவிட்டாள்...

ஏற்கனவே வினயின் காதலில் மயங்கித்தவிக்கும் ரேஷ்மியின் காதல் மனம் இப்போது ரியா கூறிய கோணத்தில் இருந்து யோசிக்கத்தொடங்கியது.... அவளது யோசனை படிந்த முகத்தில் அவள் குழம்பிவிட்டாள் என்று புரிந்து கொண்ட ரியா அவளது கைகளை அழுத்திகொடுத்தாள்...

அந்நேரம் ரியாவின் மொபைல் அழைக்க அதை எடுத்து பேசியவள்

“ரேஷ்மி அனு அப்பா கூப்பிடுறாரு... வா நாம கிளம்பலாம்... இருட்டுவதற்கு முதல்ல கிளம்பலாம்” என்று ரேஷ்மியை கையோடு அழைத்துக்கொண்டு சென்றாள் ரியா... வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் புகுந்துகொண்ட ரேஷ்மி கட்டிலில் அமர்ந்து ரியா கூறியதை பற்றி சிந்திக்க தொடங்கினாள்...

வழமைக்கு மாறாக நேரம் தாழ்த்தி வீட்டிற்கு வந்தான் வினய்... வந்தவன் நேரே தங்கள் அறைக்கு செல்ல அங்கு கட்டிலில் உறங்கிகொண்டிருந்தாள் ரேஷ்மி. குளியலறைக்கு சென்று பிரஸ் ஆகி வந்தவன் கட்டிலருகே சென்று முழந்தாளிட்டு ரேஷ்மியின் முன்னுச்சியை தொட்டு பார்த்தான்...

அது சில்லிட்டு இருக்க கன்னத்தில் கை வைத்து பார்க்க அதுவும் அவ்வாறே இருந்தது... அது அவனுக்கு வேண்டிய பதிலை தந்துவிட அங்கிருந்து எழுந்தவன் ஹாலிற்கு செல்ல ரியாவும் அபியும் அனுவுடன் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தனர்.

வினய் அவர்களருகே சென்று அமர அனு தன் தந்தை மடியிலிருந்து இறங்கி வினயிடம் சென்று அவனை கட்டிக்கொண்டாள்....கட்டிக்கொண்ட குழந்தையை அள்ளி அணைத்தவன் குழந்தையை கொஞ்சத்தொடங்கினான்..

அவர்கள் இருவரும் கொஞ்சுவதை ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்த அபியும் ரியாவும் அர்த்தமாக ஒரு பார்வையை பரிமாறிக்கொண்டனர். பின் ரியா அங்கிருந்து எழுந்து சென்று அனைவரையும் சாப்பிட அழைத்தாள்...

குழந்தை ஏற்கனவே சாப்பிட்டுவிட்டதால் டிவி பார்ப்பதாக சொல்லி ஹாலிலேயே இருந்துவிட வினயும் அபியும் உணவருந்த சென்றனர்.
ரியா உணவு பரிமாறத்தொடங்க அவளிடம் வினய்

“அண்ணி அம்மா சாப்பிட்டாங்களா??”

“அத்தை சாப்பாட்டு அப்போவே படுத்துட்டாங்க”

“அண்ணி ரேஷ்மி சாப்டாளா???” என்று கேட்க ரியா

“இல்லை கவின்.. அவ சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டா... நான் தான் மெடிசன் குடிக்கனும்னு சொல்லி வற்புறுத்தி ஒரு கிளாஸ் பால் குடிக்க வைத்தேன்.. அதை குடிச்சிட்டு படுத்துட்டா....”

“நல்ல வேலை செய்தீங்க அண்ணி.. இல்லைனா வெறும் வயிற்றோடு படுத்திருப்பா.... சாப்பிடுறதுக்கு மட்டும் சின்ன பிள்ளைகள் மாதிரி அடம்பிடிப்பா...” என்று வினய் சிரித்தவாறு கூற அபியோ

“அதுவும் நல்லது தான்டா.. ஒபசிட் டிரெக்ஷன் அட்ராக்ஸ் மோ...” என்று தத்துவம் பேசிய அபியை முறைத்து பார்த்தான் வினய்...
அவனது முறைப்பின் அர்த்தம் புரிந்த அபி சிரிக்க இவர்களது சம்பாஷனைக்கு அர்த்தம் புரியாத ரியா அபியிடம்

“அபி நீங்க சொல்லுறது எனக்கு புரியலை??” என்று ரியா அபியிடம் கேட்க அதற்கு பதிலளித்தான் வினய்...

“அதை நான் சொல்லுறேன் அண்ணி.... ஷிமி கம்மியா தான் சாப்பிடுவா... ஆனா நான் மூனு ஆள் சாப்பாட்டை தனியாளாக சாப்பிடுவேன்... அதோடு எல்லா வெரைட்டியையும் ரவுண்டு கட்டி அடிப்பேன்... அத தான் அண்ணா அப்படி சொல்றான்... அதாவது நான் சாப்பாட்டு ராமன் அவ சாப்பிடாத சீதை...”

“இப்போ புரியிது அத்தை ஏன் சமைக்கும் போது கவினிற்குனு தனியா ஒரு கிலோ கறி சமைக்கிறாங்கனு....” என்று ரியாவும் தன் பங்கிற்கு வாரினாள்.

“என்ன அண்ணி பண்ணுறது?? எங்க அம்மா கண்ணே மணியேனு இரண்டை பெத்து போட்டுட்டாங்க...அதுல ஒன்னு டயட்டு பாடி பிட்னு வாழ்க்கையை ஓட்டிரிச்சி... சரி இரண்டாவதாக பிறந்ததாவது நல்லா சாப்பிடட்டும்னு தாராளமா சமைச்சு போட ஆரம்பிச்சிட்டாங்க...அதுவும் இது தான் சான்ஸ்னு பூந்து விளையாட ஆரம்பிச்சி இப்போ அது பழக்கமாகவே போயிரிச்சி...” என்று வரலாறு கூறியவன் தன் வேலையில் கவனமாக இருந்தான்.(அதாங்க சாப்பிடுறது😂😂)

இவ்வாறு கலகலத்தவாறு உணவருந்திக்கொண்டிருக்கும் வேளையில் அபி வினயிடம்

“கவின் எப்போ ஹனிமூன் போகலாம்னு பிளான் பண்ணியிருக்க??” என்று கேட்க பேச்சு ஸ்வாரஸ்யத்தில் அபி கூறியதை சரியாக கவனிக்காதவன்

“யார் கூட அபி??” என்று கேட்டுவிட

“என்கூட தான்.. வர்றீயா சேர்ந்து போகலாம்???”என்று கடுப்பில் அபி வினவ

அப்போதும் புரியாது வினய்

“அப்போ அண்ணி அனுவெல்லாம்???” என்று கேட்க ரியா வினயின் கேள்வியில் சிரிக்க அபி வினயை முடிந்தமட்டும் முறைத்தான்..
ரியாவின் சிரிப்பில் ஏதோ குழறுபடி நடந்துவிட்டது என்று புரிந்து கொண்டவன் சமாளிக்கும் முகமாக ஈயென்று இளித்தான்.

“என்ன அபி கேட்ட???நான் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் நீ சொன்னதை சரியாக கவனிக்கலை..” என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு வினய் கேட்க

“ஆ... நீ எப்போ புள்ள குட்டினு செட்டில் ஆகப்போறேனு கேட்டேன்...” என்று அபி பதிலளித்தான்.

வினயோ கூலாக
“அதுக்கு என்னடா அவசரம்?? அதெல்லாம் ஆர அமர பெத்துக்கலாம்...” என்று வினயின் பதிலில் கடுப்பான அபி

“எப்போடா நீ கிழவனான பிறகா??”

“சீ.. சீ.. அவ்வளவு லேட்லாம் பண்ண மாட்டேன்...இன்னும் ஒரு த்ரீ இயர்ஸ்...”

“அது என்னடா த்ரீ இயஸ் கணக்கு??”

“த்ரீ இயஸ் ரொமென்ஸ் பீரியட்... அதாவது பி.பி பீரியட். அதுக்கு பிறகு வில்லன் பீரியட்... அதாவது ஆ.பி... அது ஸ்டார்ட் ஆகுனா ரொமேன்சிற்கு பஞ்சமாகிரும்... அதான் பி.பி பீரியட்டை த்ரீ இயர்ஸா எக்டென்ட் பண்ணிட்டேன்...” என்று வினய் கூற

“டேய் புரியிற மாதிரி சொல்லுடா???”

“இரு உனக்கு புரியிற மாதிரி சொல்லுறேன்....மேரேஜ் லைப்பை இரண்டு ஸ்டேஜா பிரிக்கலாம். பி.பி அப்புறம் ஆ.பி.
பி.பி னா பிபோ பேபி... அதாவது குழந்தை குட்டி இல்லாத பீரியட்.... அதாவது நம்ம ஸ்லேங்ல சொல்லுறதுனா ரொமான்ஸ் பீரியட்... அதாவது நான் இப்போ இருக்க பீரியட்...
ஆ.பி னா ஆப்டர் பேபி... அதாவது குழந்தை குட்டினு ஆன பிறகு உள்ள பீரியட்.. நம்ம ரொமான்சுக்கு குழந்தை ரூபத்தில் வில்லன் வருகிற பீரியட்...
இப்போ நீ இருக்கது ஆ.பி பீரியட்... உனக்கு அதில் அனுபவம் ஜாஸ்தியாச்சே.. நான் சொல்லனும்னு இல்லை..” என்று வரைவிலக்கணம் கூறியவனை வாய்பிளந்து பார்த்திருந்தனர் அபியும் ரியாவும்.

அபியோ
“எப்படிடா நீ மட்டும் இப்படி யோசிக்கிற??”

“உன்னை பார்த்த பிறகு இதை கூட யோசிக்கலைனா எப்படி??” என்று என்று தன் காலரை தூக்கிவிட அபியும் ரியாவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டனர்...

“இதுல எல்லாம் வெவரமா இரு... மத்த விஷயத்துல கோட்டை விட்டுரு...”

“கோட்டை விட்டத கப்பலேறி போய் புடிச்சிடுவேன்டா.. கவலைபடாத..” என்று மறைமுகமாக அபியிற்கும் ரியாவிற்கும் தன் வாழ்வை தான் சரிபடுத்துவதாக தெரிவித்தான் வினய்.

அவனது பதிலேயே அவனது எண்ணத்தை புரிந்து கொண்ட அபி ஏதோ கேட்க வந்த ரியாவை கண்களால் தடுத்தான்... உணவை முடித்துக்கொண்ட எழுந்த வினய் ரேஷ்மிக்கென்று ஒரு பிளாஸ்கில் பாலும் பிஸ்கட் பெக்கட்டையும் ரியாவிடம் கேட்டு வாங்கியவன் அனைவருக்கும் இரவு வணக்கத்தை கூறிவிட்டு தனது அறைக்கு சென்றான்...

அறைக்கு சென்றவன் தன் கையோடு கொண்டுவந்த பொருட்களை அருகிலிருந்த மேசையில் வைத்தவன் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த ரேஷ்மியின் அருகில் சென்றான்..

எப்போதும் போல் அன்றும் குழந்தையாய் உறங்கிகொண்டிருந்த ரேஷ்மியின் முன்னுச்சில் தன் இதழ் பதித்தவன் மறுபுறம் சென்று கட்டிலில் படுக்க முயன்ற போது முதல்நாள் இரவு சம்பவங்கள் நியாபகத்தில் வர கட்டிலில் இருந்து எழுந்தான்.

கட்டிலில் இருந்த விரிப்பை எடுத்து கீழே விரித்தவன் விளக்கை அணைத்துவிட்டு உறங்கிவிட்டான்.

அதிகாலை மூன்று மணியளவில் கண் விழித்த ரேஷ்மி மொபைலில் நேரத்தை பார்க்க அது மணி மூன்று என்று காட்டியது... கட்டிலில் இருந்து எழுந்தவள் நைட் பல்பை ஆன் செய்துவிட்டு வினயை தேட அவனோ கீழே படுத்துறங்கிக்கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் ரேஷ்மியின் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது...

ஒரு கையை தலைக்கு கொடுத்து மறுகையை பனியனால் மறைக்கப்பட்டிருந்த அவனது மார்பில் வைத்து கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான்.. அவன் மூச்சுவிடுகையில் மேலே எழும்பி கீழே வரும் அவனது மார்பின் சந்த அசைவை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த ரேஷ்மிக்கு அதில் தலை சாய்த்து உறங்கும் அவா எழுந்தது...

கட்டிலிலிருந்து எழுந்தவள் பூனை நடை நடந்து வினயருகே சென்று அவனது உறக்கம் கலையாதவாறு அவனருகே படுத்துக்கொண்டாள்.
அவள் நெருங்கி படுத்த மறு நொடி வினய் மறுபுறம் திரும்பி படுத்துக்கொள்ள ரேஷ்மிக்கு சப்பென்றாகிவிட்டது..

இருந்தும் தன் முயற்சியை கைவிட விரும்பாதவள் வினயை அவன் உறக்கம் கலையாது எவ்வாறு தன்புறம் திருப்புவது என்று யோசிக்கத்தொடங்கினாள்... சில நிமிட சிந்தனைக்கு பிறகு ஒரு யோசனை தோன்றிட அதை செயல்படுத்த முயன்றாள் ரேஷ்மி..
படுக்கையிலிருந்து எழுந்தவள் வினயின் பாதத்தருகே சென்று அவனது பாதத்தை கிச்சி மூட்டும் விதமாக மெதுவாக வருடினாள்...
இம்முறை அவனது முயற்சி பலனளித்தது...

ரேஷ்மியின் மெல்லிய வருடல் தந்த கூச்சத்தில் தூக்கத்தில் புரண்டு படுத்தான் வினய்..
தன் முயற்சி வெற்றியடைந்த மகிழ்ச்சியில் வினயருகே விரைந்தவள் தவறுதலாக வினயின் பெருவிரலை லேசாக மிதித்து விட்டாள்..
அதில் தூக்கம் கலைந்த வினய் மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்க எதிரே ரேஷ்மி திருதிருவென முழித்துக்கொண்டிருந்தாள்..
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தவனுக்கு காண்பது கனவா நினைவா என்றுகூட தெரியவில்லை...

கனவு என்று எண்ணியவன்

“என்ன ஷிமி கல்யாணத்துக்கு முதல்ல தான் கனவுல வந்து டிஸ்டப் பண்ணுவ.. இப்போ என்ன ரொம்ப நாள் கழிச்சி கனவுல வர்ற?? என்கிட்ட ஏதாவது சொல்லனுமா??” என்று வினய் கேட்க ரேஷ்மி வினயின் பேச்சில் இன்னும் விழித்தொடங்கினாள்..

“என்ன ஷிமி இப்பவும் பேசமாட்டியா?? ஒவ்வொரு முறையும் நான் உன்னை நினைக்கும் போது கனவில் வருவ.. நான் ஏதும் கேட்டா இப்படி முழிச்சிட்டு காணாமல் போயிரு.... இந்த முறை நான் கூப்பிடாமல் நீயா தான் வந்திருக்க... அதுனால விஷயத்தை சொல்லு...” என்று வினய் கண்களை மூடியவாறே உளறினான்.

அவன் தூக்கத்தில் இருந்து இன்னும் தெளியவில்லை என்று தெரிந்து கொண்ட ஷிமி அவனுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று எண்ணியவள் எதுவும் பேசாது அவனருகே சென்று அவன் மார்பில் தலை சாய்த்து படுத்துக்கொண்டவள் அவனது கையை எடுத்து தன் இடையின் மீது போட்டுக்கொண்டாள்...

வினயோ
“கனவுல எல்லாம் நல்லாதான் பண்ணுற... நிஜத்துல தான் பிரபோஸ் பண்ணா அடி பின்னிர்ற..” என்றவன் மீண்டும் உறக்கத்திற்கு சென்றுவிட்டான்.. ரேஷ்மியோ அவனது மார்பில் தலை வைக்க அது அசைந்த சந்தம் குழந்தையை தாலாட்டும் தொட்டிலாய் மாறி அவளை தாலாட்ட அதில் மீண்டும் கண்ணயர்ந்தாள் ரேஷ்மி...
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN