என்னடி மாயாவி நீ: 11

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 11

வசந்தாவின் வார்த்தை வழியாக அவர்களின் நட்புலகத்திற்கே சென்று வந்த ஆதிகா, இவர்களின் இந்த பிரிவிற்கு தெய்வத்தையே குற்றம் சாடினாள்; விதியிடம் முற்றுகையிட்டாள்; அவளுக்கு அந்த இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. இப்படி ஒரு நண்பன் இருப்பதாக விஷ்ணு நம்மிடம் கூறவே இல்லையே. அப்போதுதான், அவளுக்கு நினைவில் பளிச்சிட்டது தான் தானே எப்போதுமே பேசுவோம் அவனை பேசவிட்டதே கிடையாதே என. இதனை நினைத்து சிரித்து தலையில் அடித்து கொண்டவள் கீழே படுத்திருக்கும் வர்ஷித்தை பார்த்து வேதனை கொண்டாள் எத்தனை துயரம், எத்தனை இழப்பு இந்த வயதில் என. இவனை இனிமேல் துயரம் தாக்காத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சிறு பிள்ளையை பார்ப்பது போல் வர்ஷித்தை பார்த்துக்கொண்டே நித்திரையை தழுவினாள். இந்த எண்ணத்திற்கு வர்ஷித் உயிர் கொடுப்பானா?

காலையில் விழிப்பு தட்டியதும் வர்ஷித், "ஆதிகா இந்த வீட்டுல இருந்த ரொம்ப கஷ்டப்படுவா, அவளுக்கு வேதனையா இருக்கும்" என்பதை நினைவில் கொண்டு நாம் வாங்கின அபார்ட்மெண்ட்க்கு இன்றே ஆதிகாவை அழைத்து செல்ல வேண்டும் என எண்ணினான். பிறகு, இன்றே கம்பெனியில் வேலையில் சேர வேண்டும் என நிறைய உத்திகள் ஒன்றன் பின் ஒன்றாக இருந்தது.

தூங்கி எழுந்தவுடனே ஆதிகாவை கிளப்ப நினைத்தவனுக்கு, அசந்து பொம்மை போல் அசைவு இல்லாமல் தூங்கும் மனையாளை எழுப்ப மனமே இல்லை. காலை கடன்களை முடித்துவிட்டு அவன் கீழே வருவதற்குள் ஆதிகா தூங்கி முழித்து கீழே வந்து அத்தையிடம் வாயடித்து கொண்டிருந்தாள்.

சமையல் கட்டில் இருந்த ஆதிகாவை பார்த்துக்கொண்டே சோபாவில் அமர்ந்து டிவி சேனலை மாத்தி கொண்டிருந்தான். வர்ஷித்தை கண்டதும் வசந்தா, ஆதிகாவிடம் காபி கப்பை கொடுத்து அனுப்பினார். அவளும் மறுப்பு சொல்லாமல், வாங்கி கொண்டு வர்ஷித்திடம் கொடுக்கும்போது அவனை கண்களால் முழுதாய் ஆராய்ந்தாள், இவ்வளவு சீக்கிரம் எங்கே போக கிளம்பிருக்கான் என. அவன் நேர்த்தியான உடையில் கம்பீரமாக ஆதிகாவின் கண்களுக்கு விருந்தளித்து கொண்டிருந்தான். வர்ஷித் காபி பருகிகொண்டிருந்தாலும் ஆதிகாவின் பார்வையில் தான் சிக்கி வதைபடுவதை உணர்ந்தவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள என்ன என்பது போல விழியாலே புருவம் உயர்த்தி கேட்டான். அந்த விழி வழியால் வந்த கேள்வியில் தன்னிலை அறிந்த ஆதிகவோ, "இவளோ நேரம் தன்னையே மறந்து இவனை பாத்துட்டு இருந்துருக்கோமே" என உள்ளுக்குள் நொந்துக்கொண்டவள், வெளியில் 'ஒண்ணுமில்லை' என்பது போல தலையை அசைத்தாள்.

அங்கு நடந்த மௌன மொழியை சட்டென உடைத்து, 'சீக்கிரமா கிளம்பு' என்றான் வர்ஷித். அவளோ எங்கே என கேட்க முடியாமல் தவிக்கும் தவிப்பை பார்த்துவிட்டு அவனே மீண்டும், 'நாம நம்ம வீட்டுக்கு போகலாம், இங்க இருக்க வேணாம். என்னைய மதிக்காத இந்த வீட்ல எப்படி இருக்கிறது' என கூறினான். அவனது பேச்சிலே பெற்றோர் இருவருக்கும் வர்ஷித்தின் கோபம் ஒரு துளி கூட குறையவில்லை என்பது புரிந்து போனது. வர்ஷித்தின் உரிமை நிறைந்த பேச்சோ அல்ல அவனின் கோபம் தெளித்த வார்த்தையோ எதுவென்று தெரியவில்லை. ஆனால், ஆதிகா சீக்கிரமா கிளம்பி வந்து அவன் முன் நின்றாள்.

அவள் வந்து நின்றவுடன் வசந்தா இருவரையும் பார்த்து, ''கிளம்புறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, அத நான் தடுக்க போறதில்ல, ஆனா சாப்பிட்டு கிளம்புங்க' என கூற ஏற்கனவே, அத்தைய தனியா விட்டுட்டு போறது கஷ்டமாயிருக்கு என எண்ணினாலும் கணவனின் சொல்லுக்கு கட்டுண்டு இருந்த ஆதிகா, வசந்தா இவ்வாறு கூறவும் அவள் பார்வையால் வர்ஷித்தை பார்க்க அவனும் சரி என்றே சம்மதித்தான்.

வசந்தா பரிமாற இருவரும் உண்டனர். வர்ஷித் சாப்பாடு முடிக்கும் தருவாயில் வசந்தா, 'கல்யாணம் ஆகிட்டாலே இந்த பசங்க எப்படித்தான் அம்மாவ விட்டுட்டு பொண்டாட்டி பின்னாடி சுத்துறானுங்களோ' என வர்ஷித்தை வம்பிழுக்க சொல்லி முடிக்கும்போது வர்ஷித்தும் சரியாக அந்த வேளையில் சாப்பிட்டு எழுந்தான் பொய்யான கோபத்தோடு கை கழுவுவதற்கு.

ஆதிகா, 'ஏன் அத்த இப்படி பேசுனீங்க, அவரே இப்பத்தா கோபம் இல்லமா சாப்பிட்டாங்க அதுக்குள்ளயும் இப்படி பண்ணிட்டீங்களே அத்த' என வருத்தப்பட. வசந்தா இதற்கு, 'உன் புருசன் கோவிச்சிக்கிட்டு போறானாக்கும், அவனுக்கு சிரிப்பு வந்திருக்கும் அத அடக்கமுடியாம தான் கோபமா போற மாதிரி நடிக்கிறான், எங்க சிரிச்சா கோபம் இல்லனு தெரிஞ்சிடுமோனு தான் ஓடுறான். காலையிலிருந்து பறந்து பறந்து கிளம்புறதுக்கும் இதுதான் காரணம்' என கூற ஆதிகவோ, 'அத்த சும்மா சொல்லாதீங்க, அவரு உண்மையிலே சாப்பிட்டு முடிச்சிட்டாரு, அதா கிளம்பிட்டாரு' என விட்டுக்கொடுக்காமல் பேச வசந்தா, ' நல்ல ஜாடிக்கு ஏத்த மூடிதான், நீயும் அவனுக்கு சளச்சவ இல்லை , நல்லா விட்டுக்கொடுக்கமா பேசுறமா' என கலாய்த்து பேசி இருவரும் சிரித்தனர்.

ஆதிகாவும் இந்த வீட்டிற்கு வந்து ஒரு நாள் என்றாலும் வசந்தாவுடன் நன்றாக பழகி அந்த குடும்பத்தில் ஒன்றாகியிருந்தாள். ஒருவாரம் சென்னையில் தனிமையில் இருந்த ஆதிகாவிற்கு இந்த வீடு நிம்மதியையும் புது சொந்தத்தையும் தந்து அவளை இதமாக்கியது.

கைகழுவி வந்த பிறகு, இருவரும் சிரித்து பேசுவதை பார்த்து மகிழ்ந்த வர்ஷித் ஆதிகாவிடம், 'சொல்லிட்டு வா கிளம்பலாம்' என்றான். ஆதிகாவிற்கு கவலை தொற்றி கொண்டது, அத்தையையும் மாமாவையும் தனித்து விட்டு போவதை நினைத்தும், வர்ஷித் கோபமாக இருப்பதை நினைத்தும், ஆனால் இவனும் பாவம் தானே என இன்னொரு மனமும் எண்ணியது.

வசந்தவிடம் சென்று, 'அத்த நான் கிளம்பவா' என வருத்தத்துடன் கேட்டாள் ஆதிகா. வசந்தா அவளின் எண்ணங்களை துல்லியமாக புரிந்து, 'எல்லாம் சரி ஆகிடும்மா, கவலை படாத, அவனை பத்திரமா பாத்துக்கோ வர்ஷித் ஒரு குழந்தை மாதிரி அவனால ரொம்ப நாளுக்கெல்லாம் கோபத்தை பிடிச்சு வச்சுக்க தெரியாது. அவனோட கோபமும் நியாயம் தானே, கொஞ்சம் நாள் போகட்டும்' என சமாதானம் கூறி அனுப்பி வைத்தார்.'ஆனா அவுங்க இப்போ' என ஆதிகா கூறும்போது, 'எங்க போயிடப்போரான் கோபம் போச்சுன்னா இங்க வந்து எங்களையே சுத்தி சுத்தி வருவான், அவனை பத்தி எனக்கு தெரியாதா' என வசந்தா மகனின் மனம் அறிந்து கூறினார்.

இருவரும் காரில் பயணிக்கையில், ஆதிகா வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள் அவள் சட்டென்று சாதாரணமாக வர்ஷித் பக்கம் திரும்பும்போது, அவனின் புன்னகை முகம் அவளின் கண்ணுக்கு தென்பட்டது. அவள் வினோதமாக வர்ஷித்தை பார்க்க, அவனோ மாட்டிகிட்டோமா என்பது போல விழித்தான். அவனே ஆரம்பித்தான் அவளிடம், 'எனக்கு இப்போ கோபம் எல்லாம் இல்ல, அவுங்களும் எனக்காக தானே யோசிச்சுருக்காங்க. ஆனா வருத்தமா இருக்கு. எங்க அங்க இருந்தா அவுங்கள கஷ்டப்படுத்திவேனோனு பயமா இருக்கு. அதனால தான் இப்படி. கொஞ்ச நாள் போகட்டும். எல்லாம் சரி ஆகிடும்' என்றான். 'அத்தையும் இதுதான் சொன்னங்க' என ஆதிகா கூற, வர்ஷித் 'இதற்கு நடுவில எங்க அம்மா வேற கோபத்தை குறைக்கிரேன்னு சொல்லிட்டு காமெடி பண்றாங்க, நானாவுது பொண்டாட்டி பின்னாடி சுத்துறதாவுது' என்றான் சாதாரணமாக. ஆதிகா, 'எப்படியோ ஒத்துக்கிட்டா சரி தான்' என்று தனக்கு மட்டும் கேக்கும் குரலில் மெதுவாக புலம்பினாள். அவள் புலம்பியதை கேட்ட வர்ஷித் தனக்குள் சிரித்து கொண்டு சாதாரணமாக, 'நீ மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு வெளில பேசிட்டு இருக்க' என கூற. அவன் கூற்றில் தன்னிலை அறிந்த ஆதிகா நாக்கை கடித்து தலையில் அடித்து கொண்டாள். இருவரும் சிறிது நேரம் இறுக்கம் தளர்ந்து பேசினர். வர்ஷித் ஆதிகாவின் செயலை கண்டு புன்னகைத்து காரை சாலையில் செலுத்துவதில் கவனமானான். அவளும் வேடிக்கையை தொடர்ந்தாள்.

அன்று வீட்டிற்கு சென்றவுடன் வர்ஷித், 'இப்போ நான் வெளில சாப்பாடு வாங்கிக்குடுத்துட்டு போறேன் நீ மதியத்துக்கு பாத்துக்கோ, நான் வெளியில் சாப்புடுகிறேன்' என கூற ஆதிகாவிற்கு "எப்படி சமைப்பது இப்போதான் இங்க வந்துருக்கோம் எதுமே இருக்காதே என்ன பண்றது" என யோசித்துக்கொண்டே புதுவீட்டிற்குள் போக அவள் வியந்து தான் போனாள். அங்கு வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் நேர்த்தியாக இருந்தது. இதுலயே தெரிந்தது வர்ஷித் பார்த்து பார்த்து வீட்டிற்காக செய்திருக்கிறான் என்பது.

அவனும் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தான். அவன் வந்தவுடன் ஆதிகா, 'ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க, டீ குடிக்கலாம்' என்றாள். இருவரும் டீ பருகிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர். வர்ஷித், 'சாரி ஆதிகா, இங்க நடந்தது தெரியாம நான் வேற உன்கிட்ட அன்னைக்கு கடுமையா பேசிட்டேன், நீ வேதனையில இருந்துருப்ப, நான் வேற திட்டிட்டேன்'என கூற ஆதிகா 'பரவலா விடுங்க' என்றாள். அவனே மேல தொடர்ந்தான் 'இன்னைக்கு நான் மட்டுமே இங்க வரலாம்னு இருந்தேன். ஆனால், நீ அங்க இருந்தா உனக்கு கஷ்டமா இருக்கும் அதான் உன்னைய என்கூடவே அழைச்சிட்டு வந்தேன். என்னாலேயே அங்க இருக்க முடியல, நீ மட்டும் எப்படி அங்க இருப்ப அதுனாலதான். எனக்கு தெரியும் அம்மாவ விட்டுட்டு உனக்கு வர மனசில்லேனு, என்ன பண்றது நீ கஷ்டப்படுறத பாத்த என்னால தாங்கமுடியாது' என அவளை பேசவிடாமல் அக்கறையாக பேசினான்.

ஒரு பார்வையில் பூ கொடுத்தாய்...
ஒரு வார்த்தையில் வாழ
வைத்தாய்...
ஒரு மேகத்தை போல் எந்தன்
தேகத்தை மாற்றி வைத்தாய்...
இறகை போல் ஒரு வேகத்தில்
வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்...
நிலவை போல் உன்னை தூரத்தில் தூரத்தில் பார்க்கின்ற போதெல்லாம் துள்ளுகின்றேன்...

இந்த வார்த்தைகளை கேட்ட ஆதிகாவிற்கு மனம் சிறகில்லாமல் பறந்தது... வானை தொட்டதுபோல் ஒரு உணர்வு. அவனின் ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக இருந்தாள். இவளோ சாதாரணமாக சொல்கிறானே, இந்த அக்கறையெல்லாம் என்மீது எப்படி என பல கேள்விகள் எழுந்தன. அவளது கண்கள் பலநாள் கழித்து வந்த மகிழ்ச்சியில் மின்னியது. இந்த நொடியை அனுபவித்த ஆதிகாவால் தொடர்ந்து அனுபவிக்கமுடியாமல் செய்தது வர்ஷித்தின் வார்த்தைகள்.

'கண்ணைமூடி திறக்குறதுக்குள்ள எல்லாமே நடந்த்துப்போச்சு. சரி விடு இது சூழ்நிலை காரணமா நடந்த கல்யாணம், இதுக்காக என்கூட வாழணும்னு கட்டாயம் இல்லை. எனக்கு தெரியும் என்னைய உனக்கு கண்டிப்பா பிடிக்காது. ஒரு வருஷம் தான் கொஞ்சம் பொறுத்துக்கோ, டிவோர்ஸ்க்கு அப்ளை பண்றேன். அதுவரையும் நாம பிரண்ட்ஸா இருக்கலாம்' என கூறி சட்டென எழுந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

இதை கேட்ட ஆதிகா கல்லென சமைந்து உணர்வற்று இருந்தாள். "இப்பதானே கொஞ்சம் நிம்மதியா இருந்தோம் அதுக்குள்ள அப்படி சொல்லிட்டானே. நாம எப்போ சொன்னோம் இவனை பிடிக்கலைனு இவனாவே முடிவு பண்ணிக்கிட்டானே" என எண்ணினாள். சரி நாம நினைக்கிறது எப்போ நடந்துருக்கு, வாழ்க்கை போற பாதையில போவோம் என கூறி தன்னை தேற்றிக்கொண்டாள். சரியான சிடுமூஞ்சி எப்படி பேசிட்டு போறான் பாரு என அவன் மேல குறை பாட்டு பாடியவள் தன் மனம் அவன் மீது சரிவதை அவள் கவனிக்கவில்லை.

காதல் இவளிடம் கூடி வருகையில் அவன் பிரிய நினைக்கும் இவர்களின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்? அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி !
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 11
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN