<div class="bbWrapper"><b>மயூரா ஆமாம் என்பது போல தலையசைத்தாள். "உண்மை தான் பாட்டி, வாழ்க்கைல உண்மையான காதல் கிடைக்ககூட குடுத்து வெச்சிருக்கணும் இல்ல, யோகி தாத்தா லக்கி பாட்டி '' ஏக்கத்தோடு கூறியவள் யோகி தாத்தாவை நோக்கி நகர்ந்தாள்.<br />
அவள் அருகே நின்று கொண்டிருந்த ருத்ரனுக்குத்தான் அந்த பதில் சவுக்கடியாய் இருந்தது. அவன் முகவாட்டத்தை அமிர்தம் பார்த்ததும் புரிந்துக் கொண்டார் .<br />
<br />
அவன் அருகே வந்தவர் "கொஞ்ச நாள் பழகியிருந்தாலும் மயூரா மனசு எனக்கு புரிஞ்சது சிவா. அண்ணா உன்னை அப்படிதானே கூப்பிடுவான்? கூடவே வளர்ந்து அவளை உன்னால புரிஞ்சிக்க முடியலனு நெனைக்கறப்ப ரொம்ப வருத்தமாய் இருக்குப்பா. லேட் பண்ணிடாத, உன் மனசும் அவளைத்தானே விரும்புது. முயற்சி பண்ணி பாரு சிவா . அப்புறம் இல்லாட்டி 60 வயசில தோ இந்த யோகி அண்ணா மாதிரி நீயும் மயூரா பின்னால பூக் கூடையோட இதே இன்ப வனத்தில் திரிய வேண்டியதுதான்.''<br />
<br />
"ரொம்ப நேரமாய் இந்த மனுஷன் அம்புஜம் மாமி கிட்ட கடலையை போடறாரு. நான் போய் என்னான்னு கவனிக்கிறேன்.'' அமிர்தம் ருத்ரன் தோளைத் தட்டி விட்டு சென்றார்.அதற்குள் மயூரா யோகி தாத்தாவை அடைந்து விட்டாள். கண்களில் குறும்பு மின்ன "என்ன மிஸ்ட்டர் யோகி, டேட்டிங்லாம் பலமாய் இருக்கே. எத்தனை நாளா இந்த திருட்டுத்தனம் நடக்குது இங்கே. நீங்கதான் சிவராம் தாத்தாக்கே சீனியராமே?''மயூரா கேள்வி கேட்க, அந்த வயதிலும் யோகி தாத்தா அழகாய் வெட்கப்பட்டார்.<br />
<br />
"போ மயிலே, எனக்கு வெக்கமாயிருக்கு. என்ன எங்கள பத்தி அமிர்தம் சொல்லிட்டாளா?'' யோகி தாத்தா கேட்க, ஆம் என்பது போல் தலையசைத்தாள்.<br />
<br />
"சிவா என் ஜுனியர்தான் மயிலே. எனக்கு அப்போ கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லைனு ,இந்த அப்பாவிய அமிர்தத்திற்கு கட்டி வெச்சிட்டாங்க. பயலுக்கு சைட் அடிக்க கூட அப்போ டைம் கொடுக்கல. அதான் இப்போ அம்புஜம் கூட கடலைய போடறான் பாரு ''யோகி தாத்தா கபடம் இல்லாமல் சிரித்தார்.<br />
<br />
"உங்க லவ் ஸ்டோரிய எங்கிட்ட கூட சொல்லலியே தாத்தா '' மயூரா ஆதங்கப்பட்டாள்.<br />
"அது என்ன பெரிய தங்க மலை இரகசியமா மயிலே. சொல்லற அளவுக்கு அவ்வளவு பெரிய கதை இல்லைடா. சொல்லப் போனா, என்னை நேசிச்சவள நிர்கதியா விட்டுட்டு கனவு அது இதுனு பரதேசியா அலைஞ்சி திரிஞ்சி, கடைசில அவளும் வாழாம நிக்கறது பார்த்த அப்போ, மனசுல ஒரு வலி வந்துச்சு. நான் தேடி அலைஞ்ச எதுவுமே எனக்கு நிலையான திருப்திய தரலனு அப்போ புரிஞ்சது. என் தேடலே அஞ்சனை தான்னு அப்போ தெரிஞ்சது.''<br />
<br />
"உனக்கு ஒன்னு தெரியுமா மயிலே. அஞ்சனைக்கு நான்தான் உயிரே. என்னோட விளையாட்டு குணம்தான் அவள் ரொம்ப இரசிச்ச விஷயம். இந்த உறவு சரி வராதுனு நான்தான் சொன்னேன். அதுக்கும் அவள் சரி சொன்னா. அந்த வயசில உலகம் சுத்தி அலையற ஆசை, அதுக்கு கல்யாணம் செட் ஆவாதுனு நான் சொன்னதும் அதுக்கும் சரின்னு சொன்னா.''<br />
<br />
"ஆனா அமிர்தம் -சிவா கேட்ட அப்போ ரெண்டு பேருக்கும் வேற வேற தேடல்கள்னு தன்னையும் குற்றவாளி ஆக்கிட்டா.இது வரைக்கும் எனக்காகவே வாழ்ந்திருக்கா. என் ஸ்தானத்தில் நின்னு அமிர்தத்தையும் அவள் தானே பார்த்துக்கிட்டாள்.''<br />
<br />
"வரம் மாதிரி வந்தவளை வாழ வைக்காம போயிட்டேன்னு குற்ற உணர்ச்சி என்னை கொல்லுச்சு மயிலே. அதான் அமிர்தத்தை பார்க்க போனப்போ, கையோட கூட்டி வந்திட்டேன். எஞ்சியிருக்கற காலமாச்சும் என் அஞ்சனை என்கூடவே இருக்கட்டும்னு தான் கூட்டி வந்திட்டேன்டா.நீங்களும் என்னை மாதிரி இருந்திடக் கூடாதுன்னுதான் இவ்வளவு மெனக்கெடறோம். வயசு இருக்கும் போது வாழ்ந்திடனும் கண்மணி."<br />
<br />
நீ புத்திசாலி புரிஞ்சிக்குவனு நம்புறேன் '' வாஞ்சையாய் அவள் தலை தடவி விட்டு அகன்றார்.<br />
அங்கேயே சிலைப்போல் நின்றவளை ருத்ரன் குரல் அசைத்தது."என்ன இராசாத்தி அப்பிடியே நின்னுட்ட, வா வந்து எல்லோருக்கும் உன் கையால துணி எடுத்து குடு. அப்புறம் நிதானமாக உன் யோகி தாத்தா லவ் ஸ்டோரிக்கு பீல் பண்ணிக்கலாம்.'' ருத்ரன் அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான்.<br />
<br />
மயூராவும் எதுவும் பேசாமல் ருத்ரனைப் பின் தொடர்ந்தாள்.அனைவருக்கும் ஓரளவு அவர்களின் கதை தெரியும் என்பதால் யாரும் மயூரா மனம் புண்படும் வகையில் எதுவும் கேட்டு வைக்கவில்லை.அஞ்சனை பாட்டிக் கூட எதோ புரிந்தது போல் அவளைப் பார்த்து புன்னகையித்தார்.<br />
இப்பொழுது மயூராவின் பார்வையில் அவர் உயர்ந்த இடத்தில் நின்றார்.யோகித்தாத்தாவிடம் உரிமையாய் பழகுபவள் அஞ்சனை பாட்டியிடம் அவ்வளவாக ஒன்றியது இல்லைதான்.தன் காதலன் கனவுகளையும் சேர்த்து இரசித்து,மதித்து எந்த ஒரு ஏமாற்ற உணர்வுகளையும் வெளிக்காட்டாது,தனக்கென்று ஒரு வழிப்பாதையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றிகரமாய் பயணித்து மீண்டும் அதே காதலால் இணைக்கப்பட்டு உலா வருபவரை மயூரா பெருமை பொங்கப்பார்த்தாள்.<br />
<br />
இதே போன்ற சூழ்நிலையில் அன்பை மட்டுமே கொட்டி வளர்த்த கொண்டாடிய குடும்பத்தை விட்டு விட்டு வைகரையில் கோழைப் போல் எங்கோ சென்று ஒளிந்துக் கொண்ட தன்னிலை நினைத்து வெட்கினாள்.இருந்தாலும் உலக அறிவைப் பெற்றுக்கொள்ள அமைந்த அந்த தருணங்கள் அவள் வாழ்க்கையை மேலும் மெருகூட்டும் வண்ணம்தானே அமைந்தது.அதை நினைத்து மனதை தேற்றிக் கொண்டாள்.அனைவரும் திருமணத்திற்கு அவசியம் வரவேண்டும் என்ற வேண்டுதலோடு ருத்ராவும்-மயூராவும் புறப்பட்டனர்.<br />
<br />
காரில் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மௌனமாய் மனப்போரட்டங்களின் கூச்சலை செவிமடுத்துக் கொண்டு வந்தனர்.வழக்கமாய் அவளை சீண்டுபவன் கூட அன்று சிந்தனை வயப்பட்டிருந்தான்.எல்லாம் அவன் அவசரத்தில் வந்த வினைகள் தானே.பேசாமல் இருந்திருந்தால் இன்னேரம் இன்பமாய் வாழ்ந்திருப்பானே.வீட்டு வாசலை அடைந்தவுடன் ,மயூரா ருத்ரனைப் ஏரெடுத்தும் பாராமல் சென்று விட்டாள்.ஏதோ நினைப்பில் படியேறியவள்,முன்னே வந்த உருவத்தை எதிர்ப்பாராமல் இடித்து நிமிர்ந்தாள்.<br />
<br />
"ஐயாம் சாரி,தெரியாமல் இடிச்சிட்டேன்என்று நிமிர்ந்தவள் திடுக்கிட்டாள்.யார் இந்த பெண்?என்ற கேள்வி வேறு மனதில் தோன்றியது.மயூரா அவளைப் பார்த்து திருதிருவென முழிக்க ,பின்னாலே வந்த ருத்ரன் குரல் கொடுத்தான்.<br />
<br />
"வா ரோஜா,வந்து ரொம்ப நேரம் ஆச்சா,அம்மா அப்பா எல்லாம் வந்திருக்காங்களா?"என கேள்வியுடன் ருத்ரன் அங்கு வந்து நின்றான்.<br />
மயூரா மனதிற்குள் அட நம்ம அல்ரா மாடல் ரோசாப்பூ,இவள் மூஞ்சி எப்படி எனக்கு மறந்து போயிடுச்சி?அது சரி,மனதில் நிக்கிற அளவிற்கு இவள் என்ன மோனாலிசா ஓவியமா என்ன?இந்த மாடசாமியின் விசிறிதானே?.மயூரா லேசாக புன்னகையித்தாள்.அதற்குள் ரோஜாவின் லேசர் கண்கள் மயூராவை ஸ்கேன் செய்து முடித்திருந்தன.<br />
<br />
ரோஜா மனதில் இவள் சாமியார் மாதிரி குர்தா,தூக்கிப் போட்ட கொண்டை,லூசு மாதிரி இருந்தாலே இந்த ருத்ரா கள் உண்ட வண்டாய் இவள பத்தியே பேசி பேசி காதில் புகை வர வைப்பான்.இப்போ இவ்வளவு அழகாய் தேவதை மாதிரியிருக்காளே,அவளே இவனை வேண்டாம்னு விட்டு ஓடினாலும் இவன் விட மாட்டான் போலிருக்கே.என்ன ரோஜா உனக்கு வந்த சோதனை இது.என வன்மமும் பொறாமையும் அவள் மனதில் போட்டிப் போட்டுக்கொண்டு புகைய ஆரம்பித்தன.<br />
<br />
மயூரா திரும்பி வந்ததைக்கூட ருத்ரா தன்னிடம் தெரிவிக்கவில்லையே.அவர்களின் பால்ய விவாகமும் அவன் சொல்லக் கேட்டு அறிந்துக் கொண்டவள்,மயூரா வீட்டை விட்டு சென்றதும் பெரிதும் நிம்மதியடைந்தாள்.இனி மயூரா எதற்கும் ருத்ரன் பக்கம் சாயமாட்டாள் என்பது ரோஜாவுக்கு சர்வ நிச்சயம்.அதனாலே இந்த ஐந்து வருடங்கள் மெல்ல மெல்ல ருத்ரனை தன் வசப்படுத்த பெரிதும் முயன்றுக் கொண்ட்டிருந்தாள்.அவன் சிக்கினால்தானே.<br />
<br />
அவள் ஆசைக்கோட்டையில் மண் விழுந்தது போல்,எதிரில் வந்து நிற்கிறாளே ,அதுவும் பேரழகியாய்.மயூராஅதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.விறுவிறுவென மேலே படியேறிச் சென்றுவிட்டாள். சிந்தனைவயப்பட்டிருந்த ரோஜாவை ருத்ரனின் குரல் கலைத்தது.என்ன அவளையே உத்து உத்து பார்த்துட்டு நிக்கிற ரோஜா,நம்ம ஃப்ர்ண்ட்ஸ்க்கு எல்லாம் மது வெட்டிங்கு வர சொல்லிட்டதானே?அவன் கேட்க அவள் தலையசைத்தாள்.<br />
<br />
"ம்ம் சொல்லிட்டேன் ஆர்யா,அதுசரி மயூரா எப்ப இங்க வந்தாள்?இத பத்தி ஒரு வார்த்தைக் கூட நீ சொல்லவேயில்லை?சொல்ல மறந்துட்டியா? இல்ல விருப்பம் இல்லையா? ரோஜா ஒரு மாதிரி கேட்கவும் ருத்ரன் சிரித்தான்.<br />
<br />
"அப்படில்லாம் ஒன்னும் இல்லை,அவள் திடீர்ன்னு தான் வீட்டுக்கு வந்தாள்.அப்புறம் மது கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி.நீ அப்ப ஊரில் இல்லை,சோ சொல்ற சந்தர்ப்பம் வாய்க்கல,நானும் ஓட்டல்ல கொஞ்சம் பிசி".இலகுவாய் இயம்பியவனை என்ன சொல்லி நோவது என்று ரோஜாவிற்கு தெரியவில்லை.<br />
<br />
மேலும் மயூராவின் நடவடிக்கைகள் ஒன்றும் அவள் ருத்ரனை மன்னித்து ஏற்றுக்கொண்டது போலவும் அவளுக்கு தோன்றவில்லை.எதுவாக இருந்தாலும் விரிசல் விட்ட உறவு மேலும் மேலும் விரிசல் விட தன்னால் ஆனதை செய்து ருத்ரனை எப்படியாவது மணந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ரோஜா மனதில் வேரூன்றி நின்றது.</b></div>
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.