அத்தியாயம் 14

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 14
நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே...
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா...
( #Usure from SivappuManjalPachai)

தன் வீட்டின் மொட்டைமாடியில் நின்று உதிக்கும் இளஞ்சிவப்பு நிற சூரியனை பார்த்துக்கொண்டு இருந்த சக்திக்கு சிவரஞ்சனியின் நினைவுகள் தான். சக்தி அவளிடம் பேசி இன்றோடு ஒருமாதம் ஆகிறது. சிவரஞ்சனியும் சக்தியைப் பற்றியும் தான் செய்த தவறு பற்றியும் தான் யோசித்து கொண்டு இருந்தாள். அன்று நடந்தவை எல்லாவற்றையும் நூறாவது தடவையாக திரும்பவும் யோசித்து கொண்டு இருந்தனர் இருவரும்.‌..
அன்று செய்தியாளர்கள் முகில்வதனனிடம், காவலர் என்ற முறையில் வழக்கமாக கேட்பது போன்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் கைப்பேசியில் ஒரு வீடியோவையும் சேர்த்து காட்டி அவனிடம் விசாரிக்க, அதை கண்ட முகிலுக்கு குழப்ப முடிச்சுகள் மேலிட்டது. எனவே சம்பிரதாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் கூறிவைத்தான்.
அந்த வீடியோவில் இருந்தது ஸ்ரீ சிவசக்தி பள்ளியின் சிசிடிவி காட்சிகள்... அதில் சக்தி அர்ச்சனாவிடம் பேசிக் கொண்டு இருக்கிறான். என்ன பேசுகிறார்கள் என பதியவில்லை. திடீரென சக்தி சுற்றும் முற்றும் பார்க்கிறான். பிறகு ஏதோ கூறி விட்டு தன் இரு கைகளையும் நெஞ்சுக்கு அருகில் கொண்டு வந்து இதய வடிவில் வைத்து காட்டி பிறகு அது பிரிவது போல் செய்து காட்டுகிறான். அவ்வளவு நேரம் புன்னகை முகமாக இருந்த அர்ச்சனாவின் முகம் வாடிவிடுகிறது. சக்தி அங்கிருந்து சென்றதும் அர்ச்சனா சோகமாகவே தேர்வு எழுத செல்கிறாள். தேர்வு முடித்துவிட்டு வெளியே வந்தவள் நேராக சாலைக்கு செல்கிறாள். அவள் எதையோ இழந்தது போல் செல்வதே சொல்லியது அவள் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள் என்று. பிறகு ஒரு சிவப்பு நிற கார் அவளை மறைத்தபடி நின்று அவள் சாலையிடம் செல்வதை தடுத்து நிறுத்துகிறது. அதில் இருந்து இறங்கிய சிவரஞ்சனி அர்ச்சனாவின் கையைபிடித்து காரினுள் அமரவைக்க முயல, எங்கிருந்தோ வந்த கருப்பு நிற காரில் இருந்த ஒருவன் சிவரஞ்சனியை தள்ளிவிட்டு அர்ச்சனாவை இழுத்து செல்கிறான்...
கிட்டத்தட்ட ஐந்து சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் அனைத்தும் கோர்வையாக பின்னப்பட்டு அழகாக ஒன்றன்பின் ஒன்றாக எடிட்டிங் செய்யப்பட்டு கதையை நன்றாக கூறியிருந்தது. செய்தியாளர்கள் சக்தி 'பிரேக்கப்' என்று கூறி ஏமாற்றியதால் மனமுடைந்து அர்ச்சனா தற்கொலைக்கு முயன்றதாகவும், தற்கொலையை ஒருபெண் தடுத்ததால் சக்தியின் ஆட்கள் அவளை விபத்துக்கு உள்ளாக்கியதாகவும் கேட்க, முகில் விசாரிக்கப்படும் என்று கூறி முடித்துவிட்டான்.
ராஜரத்தினத்திற்கு கைப்பேசி மூலமாக உறவினர் ஒருவர் செய்தி வருவதை பற்றி கூறி விசாரிக்க, அர்ஜூன் என்ன செய்தி என கைப்பேசி மூலமாக பார்த்து அதிர்ச்சி அடைந்தான்‌. அர்ச்சனா வலி காரணமாக பெயின் கில்லரும் தூக்க மாத்திரைகளும் கொடுக்கப்பட்டு நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். அறையில் இருந்த டிவியை இயக்கி செய்தி சேனல்களை வைத்து பார்க்க எல்லா செய்தி சேனல்களும் அதையே கூறியது. ஒரு தொலைக்காட்சி மட்டும் ப்ரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 'ஸ்ரீ சிவசக்தி குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் சக்தி சரவணன்' என்றே ஏலம் விட்டுக்கொண்டு இருந்தது.

சக்திதான் அர்ச்சனாவை ஆள் வைத்து விபத்துக்குள்ளாக்கியது என்று கூறியது வேண்டுமென்றாலும் கட்டுக்கதையாக இருக்கலாம்... ஆனால் சிறுபெண் என்றும் பாராமல் காதலித்து ஏமாற்றியது உண்மையாகக் தான் இருக்கக்கூடும் என்று அர்ஜூன் நம்பினான். அவன் நேரில் பார்த்த காட்சிகள், ஏற்கனவே வீடியோவில் பார்த்தவை என அவனை குழப்பியது... மச்சினனை நம்பாமல் சாட்சியை மட்டுமே நம்பிய அர்ஜூனின் இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் அதிகரிக்க, அனைவரும் தடுத்தும் கேளாமல் சக்தியை தேடிச்சென்றவன் மருத்துவமனையில் உள்ள அனைவர் முன்னிலையிலும் சக்தியின் மூக்கை ஒரே குத்தில் உடைத்து இருந்தான்...
என்னவென்று அறியாமல் நின்றிருந்த சக்தியை ஸ்ரீதர் தான் அர்ஜூனிடம் இருந்து பிரித்தெடுத்து விவரம் கூற, சக்தி அர்ச்சனா தான் காதலை தெரிவித்தாள். நான் கூறவேயில்லை என்றும் நடந்தவை எல்லாவற்றையும் கூறி பார்த்தான். எங்கே அர்ஜூன் நம்பினால் தானே...
சிவரஞ்சனியை துணைக்கு அழைத்த சக்தி, அவள் ஒன்றும் பேசாமல் இருக்க விரக்தி அடைந்து, நான் தான் அவளை ஏமாற்றிவிட்டேன் என்று பொய்யாக ஒப்புக்கொண்டான். அங்கு மேலும் பிரச்சினை பெரிதாக வேண்டாம் என்று நினைத்த முகிலும் ஸ்ரீதரும் சக்தியை தன்னுடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறினான்.
அன்றுதான் சிவரஞ்சனி சக்தியை கடைசியாக பார்த்த நாள்... அதன்பிறகு அவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டி எவ்வளவு முறை அழைத்தாலும் அவனிடம் இருந்து பதிலில்லை. பலபேர் முன்னிலையிலும் குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியிலும் வயது பெண்ணை அவமானப்படுத்த சிவரஞ்சனிக்கு விருப்பம் இல்லை. அதனால் தன்னை கட்டுபடுத்தி கொண்டு அமைதியாக இருந்துவிட்டாள். ஆனால் அப்படி செய்துவிட்டு தற்போது தீயிலிட்ட பூழுப்போல் நொந்து கொண்டு இருப்பதை சக்தி அறியவில்லை.
உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர், சக ஊழியர்கள், நோயாளிகள் என அனைவரின் முன்னிலையிலும் அவமானப்பட்ட வலி சக்தியை யாரிடமும் பேசவிடவில்லை. செய்தி சேனல்களில் கூறியதை, அடுத்த செய்தி வந்தால் மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் இனி எப்படி அந்த மருத்துவமனையில் தொடர்ந்து வேலை செய்வது என நினைத்தவன் வேலையை விட்டுவிட்டு நியூரோசர்ஜன் ஆகவேண்டும் என்ற கனவை விட்டுவிட்டு தன் ஊருக்கே மூட்டைக்கட்டி இருந்தான். சிவரஞ்சனி தனக்கு சாதகமாக பேசாமல் இருந்தது, இவ்வளவு நாள் பழகிய அர்ஜூன் தன்னை நம்பாமல் போனது என அனைத்தும் அவனை அவனின் அறையிலேயே முடக்கியது.
அர்ஜூனுக்கு அடுத்து நான்கு வருடங்கள் கழித்து அபிநயா பிறந்தாள். அவளுக்கு அடுத்து எட்டு வருடங்கள் கழித்து தான் அர்ச்சனா பிறந்தாள். அர்ஜூனுக்கும் அர்ச்சனாவிற்கும் கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் வித்தியாசம். அதனாலேயே அர்ச்சனாவை தன் மகள் போல் எண்ணி பாசம் வைத்திருந்தான். அபியுடன் பழகும் அளவிற்கு பழகவில்லை என்றாலும் அவனின் உள்மனதில் அர்ச்சனாவிற்கான இடம் அபியின் இடத்தை விட உயர்ந்தே இருந்தது.

துருதுருவென ஓடியாடி விளையாடிக்கொண்டு இருக்கும் அர்ச்சனா, தற்போது வாடிய கொடிப்போல் படுத்து கிடக்க அவனின் மூளை வேலை நிறுத்தம் செய்தது. சிறுவயதில் இருந்து அண்ணா அண்ணா என்று நாய்க்குட்டி போல் அவனின் பின்னாலேயே சுற்றிய சக்தியை அவன் மறந்தே போனான். வெளுத்ததெல்லாம் பால் என்று செய்தியில் கூறப்பட்டதையே அவனும் நம்பிவிட்டான். ஆனால் சக்தியிடம் விசாரிக்க அவன் அதற்கு வேறு கதை கூறியதில் அர்ச்சனாவிடம் ஒருமுறை விசாரிப்போம் என அவனுக்கு தோன்றியது என்னவோ உண்மைதான்.
அர்ச்சனா விழிக்கும் வரை காத்திருந்தவனுக்கு சிவரஞ்சனியே உண்மையை கூறினாள்‌. அனைவர் முன்னிலையிலும் அர்ச்சனாவை அசிங்கப்படுத்த முடியவில்லை. அதனால் அமைதியாக இருந்தேன் என சிவரஞ்சனி கூற அவனின் மனதில் சிவரஞ்சனி தனி இடத்தை பிடித்தாள். சக்தி மேல் சந்தேகப்பட்டு தவறு செய்துவிட்டதை உணர்ந்த அர்ஜூன் அவனிடம் மன்னிப்பு கேட்க நினைக்க, அர்ஜூனின் அழைப்புகளையும் சக்தி புறக்கணித்தான்.
'சக்தி மேல் எந்த தவறும் இல்லை. அவர்கள் உறவினர்கள் என்ற முறையிலும், இருவரும் நல்ல நண்பர்கள் என்பதாலும் பேசி இருக்கிறார்கள். மற்றபடி காதல் தோல்வி எல்லாம் ஒன்றும் இல்லை...' என முகில் மூலம் செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்த அர்ஜூன், சக்தியின் வீட்டாரிடமும் மன்னிப்பு கேட்க தவறவில்லை.
அர்ச்சனாவும் ஒரு வாரத்திற்கு முன்பு குணமாகி வீடு திரும்பிவிட்டாள். ஸ்ரீதர் ஏற்பாட்டின்படி ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் கண்கானிப்பில் தேர்வுகள் அனைத்தையும் மருத்துவமனையிலேயே எழுதியும் விட்டாள். அனைத்தையும் மறந்து எப்பொழுதும் போல கலகலப்பாக பேச ஆரம்பித்து விட்டாள். ஆனால் அர்ஜூனின் நிலைமை ‌தான் மோசமாக சென்றது.
அர்ச்சனாவை இந்த நிலைக்கு தள்ளிய ரவியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கவலையே அவனை வாட்டி வதைத்தது. ராக்கி, ப்ரீத்தி விஷயத்தில் பிடிப்பட்ட ரவிதான் இந்த வேலையை பார்த்து இருந்தான். சில அரசியல்வாதிகளுடன் அவனுக்கு தொடர்பு இருந்ததால் விரைவில் வெளிவந்துவிட்டான். இந்த விஷயம் முடிவுக்கு தாமதமாகவே தெரியவந்தது. அதற்குள் அவன் அர்ச்சனாவை காயமாக்கிவிட்டு தலைமறைவாகி இருந்தான்.
அவனால் வீட்டினற்கு எதாவது நடந்து விடுமோ என்ற பயத்திலேயே அர்ஜூன் அலுவலகத்திற்கு மருத்துவ விடுப்பு எடுத்து விட்டு அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் கண்காணித்துக் கொண்டே இருந்தான். ஹாலிலேயே காவல் காத்துக்கொண்டு இருப்பான். படுக்க கூட அறைக்கு செல்லாமல் சோஃபாவிலேயே உறங்கிவிடுவான். அர்ச்சனாவிற்கு நடப்பது சிரமமாக இருந்ததால் சிவரஞ்சனி அர்ச்சனாவிற்கு உதவியாக அவளுடன் படுத்துக்கொள்வாள்.
யாராவது வீட்டின் அழைப்பு மணியை அடித்தால் அர்ஜூனை தவிர வேறு யாரும் கதவை திறக்கக் கூடாது என அர்ஜூன் நிபந்தனை விதித்து இருந்தான். சீராக வெட்டப்பட்ட தலைமுடியுடன் ரன்பீர் கபூர் போன்று எப்பொழுதும் கிளீன் சேவ் செய்து இருப்பவன் தற்போது அர்ஜூன் ரெட்டி பட விஜய் தேவர்கொண்டா போல் தாடியும் மீசையும் முடியுமாக கிட்டத்தட்ட மனநோயாளி போன்று மாறியிருந்தான்.
கண்ணாடி வழியாக ஹாலின் சோஃபாவில் படுத்திருந்த அர்ஜூனை பார்த்த சிவரஞ்சனிக்கு பாவமாக இருந்தது. அவனின் பயம் அவளுக்கு புரியவே செய்தது. அதனாலேயே அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும், சக்தியை பார்க்க வேண்டும் என்ற தன் ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறாள்.
இப்பொழுது எல்லாம் அர்ஜூன் அனைவரிடமும் அதிகம் பாசம் கொண்டு உள்ளது போல் தோன்றுகிறது அவளுக்கு. நேற்று கூட அர்ச்சனா அவனின் தலையில் உச்சி முடியை எடுத்து ஜெமினி கொண்டை போட்டு விட்டாள். அதை புன்சிரிப்புடன் அவனும் ஏற்றுக்கொண்டான். லட்சுமி ஊட்டி விடுவதை நல்ல பிள்ளையாக வாங்கிக்கொள்கிறான்... இதை செய்து கொடுங்கள் அதை செய்து கொடுங்கள் என வாய்விட்டு கேட்கிறான்... ராஜரத்தினத்துடன் முழு நேரமும் சீட்டுகட்டு விளையாடுகிறான்.... அவனிடம் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள் சிவரஞ்சனிக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்து இருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் எவ்வளவு நாள் தான் வீட்டிலேயே அடைந்து கிடக்க முடியும்....?
அர்ஜூனின் ஒன் ப்ளஸ் தொடர்ந்து ஒலியெழுப்பிக்கொண்டு இருக்க அர்ஜூன் அதை எடுத்ததாக தெரியவில்லை. இரவு வெகுநேரம் கழித்தே உறங்கச் சென்றவனுக்கு அலைப்பேசி சத்தமெழுப்புவது ஏதோ கனவில் கேட்பது போல் இருக்க தன் தூக்கத்தை தொடர்ந்தான். அந்த அழைப்பு ஒருமுறை முழுதாக அடித்து நின்று திரும்பவும் அடிக்க ஆரம்பிக்க சிவரஞ்சனி யார் என்று பார்த்தாள்.
போனில் எம்.வி. என்ற ஆங்கில எழுத்துக்கள் பதியப்பட்டு இருந்ததில் இருந்து அழைப்பது முகில்வதனன் தான் என்று தெரிந்து கொண்ட சிவரஞ்சனி அர்ஜூனை அவசரமாக எழுப்பினாள். பதறியடித்து கொண்டு எழுந்தவனுக்கு தகவல் கூறியவள் முகிலுக்கே அழைப்பு விடுக்க கூற, அர்ஜூனும் அவசரமாக அழைத்தான்.

முக்கியமான விஷயமாக இருக்கும் என நினைத்த அர்ஜூன், சிவரஞ்சனியும் தெரிந்துகொள்ளட்டும் என்று நினைத்து ஸ்பீக்கரில் போட அவனின் மானமும் அவனின் தோழனின் மானமும் தான் கப்பல் ஏறி சென்றது. ஸ்பீக்கரில் இருப்பது தெரியாமல் முகில் அவர்களின் கல்லூரி நாட்களில் பேசுவதை போல் பல ஆங்கில கெட்ட வார்த்தைகளை உபயோகித்து ரவி கிடைத்து விட்டான் விஷயத்தை கடகடவென கூறி முடித்தான்.

"முயல்குட்டி நல்லா இருக்காடா..." பல்லை கடித்து கொண்டு அர்ஜூன் ரகசிய வார்த்தையில் அலார்ட் செய்த பிறகே முகில் புரிந்து கொண்டு, வங்கக்கடல் ஓரத்தில் சதுப்பு நில காடுகளில் அவன் கைது செய்யப்பட்டதாக கூறியவன் அழைப்பை துண்டித்து இருந்தான். சிவரஞ்சனி அதை கவனித்திருந்தாள்.' பழைய அர்ஜூன் வந்துட்டானே... போலிசயே மிரட்டுரான்...' என நினைத்தவள் வெறுமனே சிரித்து மட்டும் வைத்து வீட்டினருடன் இத்தகவலை பகிர்ந்து கொண்டாள்.

பிச்சாவரத்தில் கைதுசெய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வந்த ரவியை மீட்பார் யாரும் இல்லை. ஏனெனில் முகில் அவனை சற்றும் விடுவதாக இல்லை. அதோடு தேர்தல் நேரம் என்பதாலும் பல பெரிய ஆட்களை உருவாக்கிய ஸ்ரீசிவசக்தி கல்வி குழுமத்தின் உறவினரை அவன் காயப்படுத்திவிட்டதால் அவர்களை பகைத்துக்கொள்ள நேரிடும் என்பதாலும் அவனை விடுவிக்க யாரும் முன்வரவில்லை.
இனி பயப்பட தேவையில்லை என்று நிம்மதி அடைந்த அர்ஜூனுக்கு அப்போது தெரியவில்லை, ரவியை இவ்வாறு செய்யத் தூண்டியது, செய்திகளில் தவறான தகவலை பரப்பியது எல்லாம் வேறொருவன் என்று.....!

- தொடரும்....

வணக்கம் வாசகர்களே... உங்களுக்கு இப்பகுதி பிடித்து இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும். viewers இருக்கும் அவளுக்கு கொஞ்சம் கூட votes கிடைக்கவில்லை...‌ நீங்கள் எனக்கு கதை நன்றாக செல்கிறதா அல்லது மொக்கையா என்று தெரியப்படுத்தினால் நான் என் எழுத்துக்களை மேம்படுத்த முயற்சி செய்வேன். அல்லது வேறு கதை ஆரம்பிப்பேன். எனவே பிடித்து இருந்தால் உங்கள் வாக்குகளை செலுத்தவும். அடுத்த பகுதி வர தாமதம் ஆகலாம்.... முகில்வதனனை கதாநாயகனாக வைத்து எழுதிய மாயவெற்றி தினமும் பதிப்பிக்கப்படும்.
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 14
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN