உறவாக வேண்டுமடி நீயே 12

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 12


“இதை ஒரு ஆண் ஒரு பொண்ணுக்கு கட்டிட்டா அன்றிலிருந்து இருவருக்குள் ஏதோ பிரிக்க முடியாத பந்தம் சொந்தம்னு உளறுவது இல்லாம எங்க வீட்டு சொந்த பந்தத்திலிருந்து சொத்து பணம் காசு வரை உரிமை கொண்டாட முடியும்னு தானே பொய்யச் சொல்லி இவ்வளவு ஆட்டம் போடறீங்க? இப்போ நான் உனக்கு தாலி கட்டிட்டேன். யாருக்கும் தெரியாம கட்டிட்டேன். அதற்காக உனக்கும் எனக்கும் உரிமை பந்தம் ஆகிடுமா? நெவர், ஐ சே நெவர். ஏன்னா இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

அப்படியே இருந்தாலும் உனக்கு நான் எந்த எண்ணத்துல கட்டலை. என்னை எதிர்த்து நீ போட்ட ஆட்டத்திற்கு உன்னைப் பழிவாங்க இதைக் கட்டினேன். நான் தோல்வியே அறிய கூடாதுனு நினைத்து இதுவரை தோல்வியே அடையாம இருக்கிறவன் டி நான் என்னையே நீ ஊர் முன்னே நிற்க வைத்து பேசி ஜெயிக்கறியா அதிலும் பெரிய மகாராணி மாதிரி என்ன ஜம்பமா பேசின அவ்வளவு பேர் இருக்க உனக்கு ஏன் டி இவ்வளவு திமிர்? என்ன ஜெயித்த இல்ல, அதற்கு தான் இதை உனக்கு கட்டினேன். மற்ற ஆண்கள் மாதிரி உன்னை என்னிடம் நெருங்க விடுவேனு நினைக்காத. நான் மற்றவர்கள் மாதிரி இல்ல.

உனக்கு இதை கட்டினதை நான் யாருகிட்டவும் சொல்ல மாட்டேன். உண்மையாவே நீயும் ரோஷம் உள்ளவளா தன்மானம் உள்ளவளா இருந்தா நான் தான் உனக்கு இதை கட்டினேனு யாரிடமும் சொல்லக் கூடாது. அதனால தான் யாரும் பார்க்க இதை நான் உனக்கு கட்டலை அதற்காக இதை கடைசிவரை சுமந்துட்டு திரியணும்னு நான் சொல்லவோ எதிர்பார்க்க மாட்டேன். Just இது ஒரு மஞ்சள் கயிற் அவ்வளவு தான் அதனால் இதை கழட்டி வீசிட்டு கூட நீ போகலாம். ஐ டோன்ட் கேர். உனக்கும் எனக்குமான உறவு ஆரம்பித்த இந்த விநாடியிலேயே முடிந்தும் போகுது. என்ன புரிந்ததா?” என்று கர்ஜித்தவன் பிடித்து அவளைக் கீழே தள்ளி விட்டு வெளியே செல்ல நினைக்க,

“ராணிமா!” என்ற அழைப்புடன் தங்கம் உள்ளே நுழைய , திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வேறு வழியில் அந்த கோவிலை விட்டு வெளியே சென்று மறைந்தான். அபி தங்கத்தின் குரலைத் தான் கேட்டனே தவிர முகத்தைப் பார்க்கவில்லை அவன். ராணிமா என்ற பெயரைத் தவிர நந்திதாவைப் பற்றி எதுவும் தெரியாமல் போனது அபியின் துரதிர்ஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்.

உள்ளே நுழைந்ததும் மகளின் நிலைகுத்திய பார்வையைப் பார்த்தவர், அவளிடம் நெருங்கி அவள் கை கட்டை அவிழ்த்தவர் வாயில் திணித்து இருந்த துணியை நீக்கி “எந்தா ராணிமா? எந்தா ஆயி?” என்று கேட்ட படி அவள் கழுத்திலிருந்த தாலிக்கயிறைத் தொட்டவர் “யாரானு இங்ஙன செய்தது?” என்று ஒரு தாயாய் அவர் பதற, வாழ்வில் முதல் முறையாக எதுவும் பேச முடியாமல் அவரைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள் நந்திதா.

இதையெல்லாம் அங்கிருந்த சாந்த சொரூபியான அந்த அம்மனும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவளைத் தவிர சாட்சி ஏது? ‘எங்கள் இருவரின் பந்தத்திற்கு கற்சிலையான உன்னால் என்ன செய்ய முடியும்? என்ற எண்ணத்தினால் தானே அபி அந்த பேச்சு பேசினான்? ஆனால் நான் பேச மாட்டேன் செயலில் காட்டுகிறேன் பார்’ என்பதைப் போல் பின் செயலில் காட்டினாள் அந்த கற்சிலையான தாய்.

தங்கம் எவ்வளவு கேட்டும் நந்திதா அபி பெயரைச் சொல்லவில்லை. அதனால் தங்கமும் இவளுக்கு நடந்த திருமணத்தை ஊராருக்கு மறைத்து விட்டார். நந்திதாவும் தான் அவளுக்கு நடந்த திருமணத்தை ஊரார் முன் மறைத்து விட்டாள். அதாவது அவன் சொன்னது போல் கழட்டிப் போடாமல் தாலியை மறைத்துக் கொண்டாள். இவள் தந்தையால் வாங்கிய அடி ஆறுவதற்குள் அபி கையால் திரும்பவும் இவள் அடிவாங்கவும் தன்னிறக்கத்தில் இன்னும் பேசா மடந்தையாகி இன்னும் கூட்டுக்குள் சுருண்டாள் அவள்.

நந்திதா இந்த ஊருக்கு வரும் போது தங்கத்தின் இன்னோர் அண்ணன் மகன் தினேஷின் மனைவி மாலதி எட்டு மாதம் கருவுற்றிருக்க, அவள் கணவனோ வாழை மரத்தின் நாரில் அணை ஆடை தயாரிப்பதில் மும்முரமாய் இருந்தவன் ஒரு நாள் வெற்றியும் காண, அது அந்த ஊர் அமைச்சருக்குத் தெரிய வர, அதன் ரகசியத்தை அறிய நினைத்த அவன் கணவன் மனைவி இருவரும் ஒரு நாள் வெளியே சென்ற நேரத்தில் இவர்கள் வண்டியை எதிரே வந்த லாரி தாக்கி விட அந்த நேரமே பிரசவம் கண்டு இறந்தாள் மாலதி.

பின் தினேஷ்க்கு எவ்வளவு சிகிச்சை கொடுத்தும் எந்த முனேற்றமும் இல்லாமல் போக நந்திதாவை அழைத்து அவனது முதல் குழந்தை திருவேணியையும் அவன் கண்டு பிடித்த பொருளின் மூலத்தையும் அவளிடம் கொடுத்தவன் இனி முழுமுதல் பொறுப்பு அவள் என்ற நிலையில் அவன் இறந்து விட, நந்திதாவுக்கோ இனி வாழ்வில் அவள் வாழ வேண்டிய கட்டாயம் வர, வேணியால் ஒரு பிடிப்பும் வந்தது அவளுக்கு.

அதன் பின் இரண்டு வருடம் அவளுக்கு குழந்தை தான் உலகம் என்று ஆனது முன்பே அவள் படிக்கும் போது பகுதி நேர வேலையில் சம்பாதித்த பணமும் இப்போது ஆன் – சைடில் சம்பாத்தித்த பணமே அவளுக்கு வேணியை நிம்மதியாக வளர்க்கப் போதுமானதாக இருந்தது

அந்த இரண்டு வருடத்திற்கு எல்லாம் துரைசிங்கமும் படுத்த படுக்கையாய் போய் விட, கடைசி நேரம் உயிர் போகும் நேரத்தில் அவர் மகளிடம் மன்னிப்புடன் வேண்ட, தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்வது போல் நந்திதா வீம்பை இழந்து தான் போனாள். அந்த ஜமீன் வம்சத்தின் கீழ் எத்தனையோ பேர் வாழ, அவர்கள் வாழ்வு அழியக் கூடாது என்பதாலும் தினேஷின் இறுதி வாக்கைக் காப்பாற்றவும் துரைசிங்கத்தின் வாரிசாக ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் யுகநந்திதா. அதன் பிறகு நடந்தது தான் அபியின் சந்திப்பு எல்லாம்.

அன்று தாலி கட்டும் போது நந்திதாவைப் பற்றி எதுவும் தெரியாது அபிக்கு. அதன் பிறகு அவளை மறந்தும் போனான் அவன். ஆனால் எப்பொழுது அவளைப் பார்த்தானோ அன்றே டிடெக்டிவ் மூலம் அனைத்தையும் வேணி முதல் கொண்டு அறிந்தவன் அவன் வாய் மொழியாகவே அனைத்தையும் தன் தாயிடம் சொல்லி முடிக்க,

மகனுக்கும் நந்திதாவுக்கும் ஏதோ உரசல் இருக்கும் என்று மேகலை நினைத்தார் தான் ஆனால் இப்படி இருக்கும் என்று அவர் யோசிக்கவில்லை அங்கு இருந்த அனைவரின் சிந்தனையையும் கலைத்தது

“இப்படி ஒரு வார்த்தை உங்க வாயிலிருந்து வரணும்னு தான் மிஸ்டர். அபிரஞ்சன் நான் இத்தனை நாள் காத்துகிட்டு இருந்தேன். எந்த உண்மைய நீங்க அன்று சொல்ல மாட்டீங்கனு சொன்னீங்களோ அதை உங்க வாய் மொழியா சொல்ல வைக்கணும்னு இருந்தேன். அது நடந்துவிட்டது. இனி நீங்க கட்டின இந்த கயிறு அதாவது அன்று வெறும் கயிறா நினைத்து எனக்கு நீங்க கட்டினது இனி என் கழுத்தில் வேண்டாம்” என்று தலை நிமிர்ந்து அங்கு இருந்தவர்களுக்கும் அவனுக்கும் பதில் கொடுத்தவள் கழுத்தில் இதுநாள் சுமந்து இருந்த மஞ்சள் கயிற்றை கழட்டப் போக,

“ஏய்!” என்ற சிங்கத்தின் உறுமலுடன் எட்டிச் சென்று அவள் கையைப் பிடித்தான் அபி. அவன் குரலில் தூங்கிக் கொண்டிருந்த வேணி கூட எழுந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

“என்ன திமிர் இருந்தா நான் கட்டினதை கழட்டுவேனு சொல்லுவ?” அன்று கழற்றி தூர வேண்டுமானால் போடு என்று சொன்னவனே இவன் தான். அதை மறந்தவன் “முன்னாடி எப்படியோ, இந்த வினாடியிலிருந்து ஊரறிய நீ தான் என் மனைவி. அதை நான் அறிவித்த பிறகு பின் வாங்குவேனு பார்த்தியா? நெவர்! இந்த ஜென்மம் முழுக்க நான் கட்டின தாலி உன் கழுத்தில் தான் டி இருக்கணும்”

“என்ன அதிகாரம் செய்றீங்க? அதெல்லாம் முடியாது” அவனிடம் வீம்பாய் பேசி இவள் கழட்ட முற்பட, பெரியவர்களான திருமலையிலிருந்து சிறியவர்கள் வரை பார்த்திருக்க,

“ராணிமா! ஞான் நிங்கள வீட்டு பணியாளாகினும் நிங்கள என்ட மகளாய் வளர்த்தது. அதே போல நிங்களும் என்னை அம்மேனு விளிக்குன்னது சரியானெங்கில் இ பாபம் செய்ய வேண்டா. இ அம்மேக்காக!” என்று தங்கம் இறைஞ்ச, விழிகளை மூடித் திறந்தவள் பட்டென்று கயிற்றில் இருந்து கையை எடுத்தாள் நந்திதா.

அப்பொழுது தான் இவன் அன்று கட்டிய கயிறு படியே கயிறும் அதனுடன் மஞ்சள் கிழங்கு மட்டுமே அவள் போட்டிருப்பதைப் பார்த்தான் அபி. அவள் எப்போதும் கழுத்து முடிய ஆடைகளையே ஏன் போட்டாள் என்பது இப்பொழுது அவனுக்குத் புரிந்தது.

பின் மனைவியை விட்டு விட்டு தாயிடம் வந்தவன், “அம்மா இதான் மா நடந்தது” என்க

“பளார்” அவன் சொல்லி முடிப்பதற்குள் மகன் கன்னத்தில் ஒரு அரை கொடுத்திருந்தார் மேகலை.

“உன்னை நான் இப்படியா வளர்த்தேன்? பிள்ளைகள் செய்கிற தப்புக்கு அதிலும் ஆண் பிள்ளைகள் செய்கிற தப்புக்கு எல்லாம் ஒரு தாய் தான் நரகத்திற்கு போவான்னு உனக்கு தெரியல இல்ல? இன்று நீ அவ முன்னாடி தலை குனிந்து நிற்கறியோ இல்லையோ ஆனா நான் தலை குனிந்து குற்றவாளியா நந்திதா முன்னாடி நிற்கறேன்டா” வலிகள் நிறைந்த குரலில் சொன்னவர்,

நந்திதாவிடம் சென்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, “ஆன்ட்டி ப்ளீஸ்! நீங்க ஏதாவது கேட்டு நான் மறுத்தேனு இருக்க வேண்டாம். அதனால என்கிட்ட எதுவும் பேசாதீங்க. ஒரு பொண்ணா என் இடத்திலிருந்து பாருங்க நான் செய்றது புரியும்” என்றவள் பபுலுவின் மடியில் தூங்கி கொண்டு இருந்த வேணியை வாங்கி தோளில் போட்டவள் “வாங்க அம்மே போகலாம்” என்ற சொல்லுடன் யாரையும் பார்க்காமல் வெளியே சென்றாள் நந்திதா. மேகலையை ஒரு சங்கடமான பார்வை பார்த்தவர் பின் எதுவும் சொல்லாமல் மகளுடனே வெளியேறினார் தங்கம்.

துருவனிடம் வந்தவர், “நீயும் பாரதியும் சம்பந்தியும் வீட்டுக்கு கிளம்புங்க. நான் டிரைவர் கூட வேற வண்டியில் கிளம்பறேன்” மேகலை கட்டளையாக சொல்ல, தாய் சொல்லைத் தட்ட முடியாமல் அண்ணனைப் பார்த்த படி வெளியேறினான் அபியின் தமையன்.

‘இவ்வளவு நடந்தும் மன்னிப்பு கேட்காமல் இந்த பிறவி முழுக்க உன் கழுத்தில் தான் இருக்கனும்னு நந்திதா கிட்ட திமிராக பேசுறானே?’ என்ற கோபம் மேகலைக்கு.

தாயின் வார்த்தைக்கு விக்கித்து நின்றவன் ‘யாரோ ஒருத்திக்காக என்னை அடிச்சிட்டிங்க இல்ல மா? இப்போ நான் யாரோவா ஆகிட்டேன் இல்ல உங்களுக்கு. இந்த நிமிடம் மருமகள்னு தெரிந்த அவ தான் உங்களுக்கு முக்கியம் இல்ல? என்ன ஆனாலும் நான் அவ கிட்ட விட்டுக் கொடுத்துப் போக மாட்டேன் மா. அவளை வரவழைப்பேன். என் மகன் அபிப்பானு உங்களையும் பழைய படி என் கிட்ட பேச வைப்பேன் மா’ என்று அபி மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

விதியின் இந்த விளையாட்டில் கர்வம் பிடித்தவனான அபி ஜெயிப்பனா இல்லை சுயமரியாதையுடன் வாழும் நந்திதா ஜெயிப்பாளா? அதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

தாய் தன்னை வர சொல்லாததால் ஹோட்டலிலேயே தங்கிக் கொண்டான் அபி. இரவு இருந்த மனநிலையில் திருமணமான அன்றே மணமக்களுக்கான சடங்கு நடக்காமல் போக, மறுநாள் இரவு அந்த சடங்குக்கு மருமகளைத் தயார் செய்தார் மேகலை. ஏற்கனவே அதற்கான பால் பழம் எல்லாம் அறையில் வைத்து விட, பாரதியை மிதமான அலங்காரத்தில் அறைக்கு அனுப்பினார் அவர்.

இவள் உள்ளே வர, மனைவி வந்த அரவம் கூட தெரியாமல் கட்டிலில் ஒரு பக்கத்தில் அமர்ந்து லேப்டாப்பில் முகம் புதைத்திருந்தான் துருவன். சம்பிராயத்திற்குப் பால் பழம் மட்டும் தான் அங்கிருந்தது. கட்டிலில் எந்த அலங்காரமும் இல்லை. கணவன் தன்னைப் பார்ப்பான் என்று நினைத்தவள் அவன் நிமிரவில்லை என்றதும் “க்கும்” என்று தொண்டையைச் செரும, நிமிர்ந்தவன் “ஹே! வந்துட்டியா?” என்று கேட்டவன் பின் “உனக்கு சௌகரியமா இல்லனா டிரஸ் மாற்றிகிட்டு தூங்கு டா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றவன் மறுபடியும் லேப்டாப்பில் முகம் புதைத்துக் கொள்ள, இவளுக்கோ சுர்ரென்று கோபம் ஏறியது,

“ஆமா! ஒரு காட்டன் புடவை எனக்கு அசௌகரியமா இருக்காமா? முழுசா கூட என்னைப் பார்க்கல. பிறகு என்ன கரிசம் வேண்டி இருக்கு?” என்று வாய்க்குள்ளே முணுமுணுத்தவள் அவனை நெருங்கி, கொஞ்சம் லேப்பை விட்டு தள்ளி அமர சொல்ல அவன் புரியாமல் ஏன் என்று கேட்க

‘மடசாம்பிராணி!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், “உங்க காலில் விழணுமாம்! அது தானே சம்பிரதாயம்? செய்துட்டுப் போய் தூங்குறேன்” இவள் அமைதியாய் பதில் தர, அந்த அடக்க ஒடுக்கத்தை நம்பியவன் சற்றே தள்ளி கால் தெரியும் படி அமர,

இவளோ அங்கு ஜக்கிலிருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க,
‘இப்போ எதுக்கு தண்ணி குடிக்கிறா? அதற்குள்ள அவ்வளவு தாகமோ?’ இவன் மனதால் நினைத்துக் கொண்டிருந்த நேரம் வாயிலிருந்த தண்ணீரை அவன் முகத்தில் துப்பியிருந்தாள் அவன் மனையாள்.

“ஏய்.... ச்சீ ச்சீ!” என்று இவன் திணற,

“என்னது ச்சியா?” என்று இவள் முறைக்க,

“அது ஒரு ஃப்ளோல வந்துடிச்சு டா” என்றான் அவள் முந்தானையை இழுத்து முகம் துடைத்த படி.
கணவன் கையிலிருந்து புடவையைப் பறித்தவள்,

“இன்னைக்கு நமக்கு என்ன நாள்னு தெரியுமா?” உள்ளே நுழைந்ததும் அப்படியே கட்டிப் பிடித்து கணவன் உருள்வான் என்று அவள் நினைக்கவில்லை. ஒரு அன்பான கண் ஜாடை, ஆசையான வருடல், முகம் சிவக்க வைக்கும் பேச்சு, அழகான அணைப்பு இப்படி எதிர்பார்த்து வந்தவளை முகம் கூட பார்க்காமல் படுக்கச் சொன்னதால் அவளுக்கு கோபம் வராதா?

“தெரியும். மாமனுக்கு அதிகம் வேலை இருக்கே. அதே சமயத்தில் இப்போ எதுவும் வேணாம்” அவன் உறுதியாய் தெளிவாய் சொல்ல, இவள் புசு புசுவென்று மூச்சு விட்ட படி அவன் போனை வாங்கி தொடு திரையில் எதையோ தேட

“என்ன டி தேடற?” அவள் செயலில் படு மும்முரமாய் இவன் கேட்க,

“ம்.. கணவனை எப்படி வசியம் பண்றதுனு இருக்கானு தேடி பார்க்கிறேன்” இவளும் சீரியசாகச் சொல்ல, பக்கென்று சிரித்தவன் மனைவியை இழுத்து நெருக்கமாய் நிற்கவைத்து அவள் புடவை மேலேயே வயிற்றில் முகம் புதைத்தவனோ,

“உன் மாமா என்னைக்கோ உன்னிடம் வசியம் ஆகிட்டேன் டி. நெஞ்சு நிறைய ஆசை இருக்கு. ஆனா அதை விட உன் வேலை போனதற்கு நான் காரணம் இல்லைன்னு நிரூபிக்கிற வேகம் தான் அதிகம் இருக்கு. அதுவரை இது வேணாமே…” அவன் எது என்று பிரித்துச் சொல்லவில்லை ஆனால் பாரதிக்கு புரிந்தது.

“அதை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கீங்க? நான் எப்பவோ மறந்துட்டேன். சாரி! உங்களை தப்பா நினைத்ததற்கு… அதற்கு நீங்க காரணமா இருந்து இருக்க மாட்டிங்கனு இப்போ நம்பறேன்” இவள் உணர்ந்து சொல்ல,

தலையை நிமிர்த்தியவன், “ம்ஊம்! அதை யாரு செய்தாங்கனு தெரியணும் இல்ல? அது மட்டும் இல்ல. அண்ணனுக்குப் பிறகு தான் என் கல்யாணம்னு இருந்தேன். ஆனா உன்னை விட முடியாமா அவருக்கு முன்னாடி செய்துகிட்டேன் இப்போ அவர் வாழ்க்கை நேராகி அண்ணி வீட்டுக்கு வந்த பிறகு தான் நமக்குள்ள எல்லாம். அதுவரை இந்த மாமனை நீ ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணு” அவள் இரண்டு கையால் தன் இரு கன்னத்தை தாங்கியபடி சொல்ல,

அவன் மண்டையில் நறுக்கு என்று நாலு கொட்டு கொட்டியவள் “அசிங்கமாகப் பேசாத டா. நான் என்ன இன்றே வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னா சொல்றேன்… எனக்கும் இங்கிருக்கும் சூழ்நிலை தெரியாதா? இதையே என்ன அணைத்து என் முகம் பார்த்து இதமா சொல்லியிருக்கலாம் இல்ல?” அவள் குரல் ஆதங்கமாய் ஒலிக்க, அவள் மூக்கைப் பிடித்து வலிக்காமல் திருகியவன்,

“அப்படி எல்லாம் செய்து சொன்னா உன் மாமனுக்கு அடுத்த கட்டத்திற்குப் போகணும்னு தோணும் டி”

“இதெல்லாம் சாக்கு. நீங்க ஒன்னும் அப்படி கட்டுப்பாடு இழக்கிறவர் இல்லையே?” இவள் அவனை அறிந்து சொல்ல,

மனைவியின் முகம் பற்றி நெற்றியில் முத்தமிட்டவன், “டைம் ஆச்சு டா, நீ போய் தூங்கு. நான் வேலையை முடித்துட்டு வரேன்” என்று அவன் பழசையே சொல்ல, அண்ணனை நினைத்து வருந்துவதால் அவன் மனநிலையை உணர்ந்தவள் கணவனின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு விலகிச் சென்று படுத்தாள் பாரதி.

விதியை மதியால் வெல்ல முடியும் என்கிறார்கள். அப்படி தான் சொல்லியும் கொள்கிறார்கள். தான் எடுத்த காரியத்தில் தோல்வி அடைந்தவன், அவனுக்கு விதிச்சிருக்கு எனக்கு விதிக்கவில்லை அதான் என் விதி இப்படி இருக்கு என்பான். வெற்றி பெற்றவனோ, பார்த்தியா விதியை என் மதியால் வென்றேன் என்பான்.

எது விதி? ஒருவர் பெறும் வெற்றி தோல்வியா விதி? எனக்கு அப்படி படவில்லை. நாம் மாற்றவே முடியாத ஒன்றை நடத்தி நாம் எதிர்பார்க்காத ஒன்றை நிரந்தரமாக நம் வாழ்வில் கொடுப்பது தான் விதி. அதாவது தாய் தந்தையர், நாம் திருமணம் செய்யும் பந்தம், நாம் பெற்ற பிள்ளைகள் இவை யாவும் சரியாக அமையவில்லை என்றால் விதி என்று தான் சொல்லவேண்டும்.

அப்படி தனக்கு நடந்த திருமணத்தை விதிப் படி நடந்ததோ என்று யோசித்தாள் நந்திதா. விதியின் மேல் நம்பிக்கை இல்லாத அபியோ இது அதன் படி நடந்திருந்தாலும் இதை தன் மதியால் வெல்வேன் என்ற அகந்தையில் இருந்தான். இப்படிப் பட்ட இருவரை ஒரே நேர் நேர்க்கோட்டில் சந்திக்க வைத்து இன்று அபியை அவன் வாயாலேயே உண்மையைச் சொல்ல வைத்தவள், அன்று மவுனமாய் அமர்ந்திருந்து சாட்சியாய் மாறிய அந்த அம்மன், தெய்வம் என்று நினைப்பவர்களுக்கு தெய்வம். இல்லை ஏதோ கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தி என்று நினைப்பவர்களுக்கு அது சக்தி.

அது தான் எங்கோ பிறந்த அபியை பெண்களை வெறுக்க வைத்து இங்கு கொண்டு வந்து சேர்த்தது. அதே சக்தி தான் நந்திதாவையும் வெளிநாட்டிலிருந்து வரவழைத்து, பெற்றவரை வெறுத்து இங்கு கொண்டு வந்து சேர்த்தது. பிறகு இருவரையும் ஒன்றாக சந்திக்க வைத்தது. இதைத் தான் இன்னார்க்கு இன்னார் என்று சொல்வதோ?

அன்று இரவு குடும்பத்திலிருந்த அனைவரும் விலகிச் சென்று விட, ‘என்னை விட அந்த நந்திதா தான் இவங்களுக்கு முக்கியமா?’ என்ற எண்ணத்தில் தாய் மேலுள்ள கோபத்தில் அபி அந்த ஹோட்டலிலேயே தங்கி விட்டான். தனக்காக பேசாத தம்பியை விட தாய் மேல் தான் அவனுக்கு வருத்தம் அதிகம். அதனால் மறுநாளும் அவன் வீட்டுக்குச் செல்லாமல் இருக்க, அவன் தாயோ ‘எங்கு சென்றாலும் இங்கு தான் டா நீ வர வேண்டும்’ என்ற வீம்பில் இருந்தார்.

தன்னை வீட்டுக்கு அழைக்கவில்லை என்றாலும் போனில் அழைத்து அவருடைய ட்ரேட் மார்க்கான ‘அபிப்பா சாப்டியா? இன்னும் என்ன டா கோபம்?’ என்று அவரின் வார்த்தைகளுக்காக இவன் தவம் கிடக்க, ஆமாம், தவம் தான்! ஒவ்வொரு நாளும் இவன் பேசுவதைக் கேட்க கையில் போனையே பார்த்துக் கொண்டு அவர் தவமிருந்தது போல் இன்று இவன் எந்த வேலையும் செய்யாமல் தவமிருந்தான்.

அதெல்லாம் ஒரு நாள் தான். நீங்க என்ன அழைக்கிறது நான் என்ன வர்றது என்ற வீம்பில் மறுநாள் காலையே இவன் வீட்டுக்கு வர, தாய், தம்பி, அவன் மனைவி அவள் தந்தை என்று அனைவரும் ஹாலில் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள். திருமணத்திற்குப் பிறகு திருமலை இங்கேயே தங்குவது என்றானது. இவனைப் பார்த்ததும் அனைவரும் அமைதியாகிவிட, இது என் வீடு என்ற உரிமையில் எதையும் யாரையும் கவனிக்காமல் அவனின் அறைக்குச் சென்றான் அபி.

இவன் எல்லாம் முடித்து உணவுக்காக வந்து அமர, அவனுக்கு முன்பே உணவு உட்கொள்ள அமர்ந்து விட்டார் மேகலை. அதனால் கணவனுக்கும் தந்தைக்கும் பரிமாறிய கையோடு அபிக்கு பரிமாற வர, “நானே வேண்டும் என்றதை எடுத்து போட்டுகிறன். நீ மற்றவர்களை கவனி பாரதி” என்று அவள் நோக்கம் புரிந்து இவன் சொல்லி விட, பாரதியின் முகம் சோர்ந்து போனது.

‘இன்னும் தகுதியைப் பார்க்கிறாரோ இவர்? இந்த வீட்டில் மருமகளாய் ஆன பிறகு நானும் இவர்களுள் ஒருத்தி தானே? அதனால் தானே அவருடைய பசி அறிந்து அவருக்கும் நான் பரிமாற வந்தேன்?’ என்று தன்னுள்ளையே மருகிப் போனாள்.

பின் இவள் கணவனைக் கவனிக்க , “எனக்கு வேண்டியதை நானே எடுத்துக்கிறேன். நீ அம்மாவுக்கும் உங்க அப்பாவுக்கும் பரிமாறு. இல்லைனா எங்க கூட சேர்ந்து அமர்ந்து நீயும் சாப்பிடு” கொஞ்சம் கறாராகவே ஒலித்தது துருவனின் குரல்.

‘இவ்வளவு நேரம் இல்லாமல் இப்பொழுது மட்டும் என்ன ஆச்சு?’ என்று முழித்த படி இவள் கணவனைப் பார்க்க, அவனோ கர்ம சிரத்தையாய் உண்டு கொண்டிருந்தான். ஆனால் சின்ன மகனின் பேச்சையும் உடல் மொழியையும் புரிந்து கொண்டார் மேகலை.

அப்பொழுது மட்டும் இல்லை அன்று மாலை வீட்டிலிருந்த நீச்சல் குளத்திலிருந்து வெளி வந்த துருவன், துவாலையுடன் தன்னிடம் வந்த மனைவியிடம் அவன் சுற்றுப்புறம் மறந்து சீண்டி விளையாடிக் கொண்டிருக்க, அதே நேரம் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த அபியின் காதில் அவர்கள் சிரிப்புச் சத்தம் விழ, அனிச்சை செயலாய் திரும்பிப் பார்த்த அண்ணனின் முகத்தை ஏறிட்ட துருவனோ முகம் மாற ஒரு இறுக்கத்துடன், ‘நீ போ பாரதி. நான் மறுபடியும் ஸ்விம் பண்ணிட்டு வரேன்’ எனவும், பாரதிக்கு இப்பொழுதும் சுருக்கென்றது. இது இன்னும் இரண்டு தினங்கள் தொடர, சின்னவனின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு தான் இருந்தார் மேகலை.

‘தவறுக்கு தண்டனை கொடுத்து பழக்கப்பட்டவள், தானே தண்டனைக்கு ஆளானாள் தான் ஏமாந்து போன தவறால்!’ என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது மேகலைக்கு. ஏனெனில் இப்போது அந்த சூழ்நிலையில் தான் இருப்பதாக உணர்ந்தார் அவர். அபியை நினைத்து அவர் ஒவ்வொரு நிமிடமும் வருந்திக் கொண்டிருக்க, அவனோ எதையும் கண்டு கொள்வதாய் இல்லை.

மூன்றாம் நாள்! அபி மீட்டிங்கில் இருக்க, அவன் பர்சனல் நம்பருக்கு அழைப்பு வரவும் எடுத்துப் பார்த்தவன் அழைப்பது தாய் என்றதும் எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு இவன் ஆன் செய்து, “ம்மா...” என்பதற்குள் “என்ன அபிப்பா நினைச்சிட்டுருக்க? நீ செய்யறது எல்லாம் சரியா? இப்படி உன் இஷ்டத்திற்கு இருக்க பெரியவளா உன் தாயா நான் எதற்கு?” இன்னும் என்னவெல்லாம் கேட்டிருப்பாரோ?

“ம்மா... இப்போ என்ன நடந்ததுனு இவ்வளவு கேள்வி கேட்குறீங்க?” இவன் சர்வசாதரணமாக கேட்க, ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார் மேகலை.

“ஒரு பொண்ணுக்கு பெற்றவளுக்குத் தெரியாம வம்படியா தாலி கட்டியாச்சு. ஊரறிய அவளையே மனைவினு சொன்னது மட்டுமில்லாம நீ பெற்றெடுக்காத குழந்தையை உன் பொண்ணுனு சொல்லிட்ட. இதற்கு மேல் இன்னும் என்ன செய்தேனா கேட்குற? இதெல்லாம் தப்புன்னு உனக்குப் படலையா அபிப்பா?” ஒரு தாயாய் ஆதங்கத்துடன் இவர் கேள்வி கேட்க, அவருக்கு பதில் சொல்ல வந்தவனை முந்திக் கொண்டு “இப்படி எல்லாம் செய்தது மட்டும் இல்லாம இதுவரை அந்த குழந்தையை போய் பார்க்கவோ பேசவோ இல்லாம இருக்க வேணி ஏங்கிப் போய் இருக்கா அபிப்பா!” இவர் பேச்சில் வருத்தமும் கோபமும் ஆதங்கமும் முட்டி மோதியது.

“ம்மா! ஒரு மகனா என் வாழ்க்கையில் என்ன நடந்ததுன்றதுக்கு உங்களுக்கு விளக்கம் கொடுத்துட்டேன். அதை செய்ததற்கு ஒரு மகனா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன். அதற்கு பிறகு வேற யாருக்கும் விளக்கம் கொடுக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. ஏன்? அன்று நான் எல்லோரையும் நிற்க வைத்து தானே சொன்னேன்! உங்க கிட்ட மட்டும் தனியா சொல்லலையே இல்லை உங்க மருமக கிட்ட மட்டும் தனியா எனக்கான அன்றைய சூழ்நிலையை விளக்கி சொன்னேனா?” அவன் மூச்சு விடாமல் கேள்வி கேட்க

தான் சொல்லாமலே தன் மனதிற்குள் இருப்பதைத் தெரிந்து கொண்ட மகனை மனதிற்குள்ளே மெச்சியவர், “விளக்கம் சொல்வது மட்டும் ஒரு வாழ்விற்கு போதும்னு நினைக்கிறியா?”

“ம்மா! என் வாழ்விற்கு அது போதும். ப்ளீஸ்! என்ன கொஞ்சம் என் இஷ்டத்திற்கு விடுங்க”

“இவ்வளவு நாள் அப்படி தானே அப்பிப்பா விட்டு வச்சேன்?”

“ம்மா போதும் விடுங்க. நான் வேணியைப் பார்க்காம பேசாம இருந்ததால தான் இப்போ அதை வைத்து நீங்க என்னடானு கேள்வி கேட்டிங்க. அதற்காவது என்கிட்ட பேசுனிங்க இல்ல? அப்படி உங்களை பேச வைக்கத் தான் இப்படி செய்தேன். இப்போ சரியா வந்ததா? அதேமாதிரி எல்லாம் சரியா வரும். இந்த நிமிடமே உங்க பேத்தியான என் பிரின்சஸ் கிட்ட பேசறேன். ஓகே வா? ஆனாலும் இப்பவும் உங்க மருமகளுக்காகவும் பேத்திக்காகவும் தான் என் கிட்ட பேச வந்தீங்க இல்ல மா நீங்க?” இவன் குரல் குற்றம்சாட்டியது.

மகனின் பேச்சில் தான் பேச்சிழந்து நின்றவரோ, “மருமக, பேத்தி இப்படி எல்லாம் வக்கனையா தான் பேசுற அபிப்பா. ஆனா செயலில் ஒண்ணும் காணோம்”

“ம்மா! ஊரறிய கூட இல்ல உலகம் அறிய அவளை தான் மனைவினு சொல்லி இருக்கேன். அப்போ இப்படியே விட்டுடுவேனு நினைக்கிறீங்களா?” பட்டென கேட்டான் அவன்

“அதற்காக விருப்பமே இல்லாத பொண்ண...?”

“விருப்பம் இல்லையா?” வெகு ஆச்சரியமாகக் கேட்டவன், “எனக்கு வேலை இருக்கு மா. நான் வைக்கிறேன்” என்றவன் அவரின் பதிலை எதிர் பார்க்காமல் வைத்தும் விட்டான் அபி.

‘அவசரத்தால் அன்று யாருக்கும் தெரியாமல் இப்படி ஒன்றை செய்தானே!’ என்று இவ்வளவு நாள் கோபத்தில் இருந்தவர் இன்று ‘இவன் பிடிவாதத்தால் வாழ்வே என்ன ஆகுமோ?’ என்று பயந்து வருந்தினார் மேகலை.

இரண்டு நாள் இழுத்து வைத்து இருந்த கோபத்தை இன்று விட்டவர் இரவு உணவுக்கு அமர்ந்த மகனிடம், “நீ தோளுக்கு மேல வளர்ந்துட்ட அபிப்பா. இதற்கு மேல உன்னை என்னால் கண்டிக்க முடியாது. அப்படியே கண்டித்தாலும் நீ அடங்குறவன் கிடையாது” ஒருவித சலிப்புடன் இவன் தாயைப் பார்க்க, அதில் சற்றே அமைதி ஆனவர் “முன்னாடி எல்லாம் உனக்கு எப்போ கல்யாணம் ஆகும்னு என்ன புலம்ப வைத்த. இப்போ மனைவி பொண்ணு இருந்தும் இப்படி தனியே இருக்கியேடானு புலம்ப வைக்கிற…. நீ செய்த வேலையை கேட்டதில் இருந்து ஒரு மாமியாரா நான் தான் உன்னையும் உன் மனைவியையும் பிரித்து வைத்து அநியாயம் செய்யனும்…. ஆனா இங்கு நீ இப்படி அநியாயம் செய்றியேடா” மேகலை அழாத குறையாக புலம்ப

தாயை நிமிர்ந்து பார்த்தவனின் நெஞ்சம் சுட்டது. ‘உண்மை தானே அவன் செய்ததற்கு அவர் தானே பிடிவாதம் பிடித்து மனைவியை ஒதுக்க வேண்டும் ஆனால் இன்று நான் தானே அவளை விட்டு ஒதுங்கி இருக்கிறேன்’ என்ற நிதர்சனம் புரிந்தது அவனுக்கு

அதை மறைத்தவன் “ம்மா! என்ன சாப்பிட விடுங்க” இவன் சற்றே அதட்ட, அதற்கு மேல் கம் போட்டு ஒட்டிக் கொண்டது மேகலையின் உதடு. உணவு உண்டு இவன் எழுந்திருக்கும் நேரம் சின்ன மகனின் திருமண வாழ்வைப் பற்றி தனக்கு தெரிந்ததை சற்றே கோடு காட்டினார் அவர். எந்த சலனமும் இல்லாமல் அதைக் கேட்டவன் தாய்க்கு எந்த பதிலும் தராமல் விலகி தன் அறைக்குச் சென்றான் அபி.

மறுநாள் மாலை சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டான் துருவன். இனி சீக்கிரம் அவன் வீட்டுக்கு வர வேண்டும் என்பது தாயின் கட்டளை. அதன்படியே இவன் வர, கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து வீட்டிலிருந்த பெரியவர்களும் வெளியே சென்று விட, கணவன் இருப்பது தெரிந்தும் தெரியாததுபோல் பாரதி பின்புற தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த கணவனின் கணைப்புக்கோ கெஞ்சலுக்கோ கொஞ்சலுக்கோ வார்த்தைகளுக்கோ செவி சாய்க்கவில்லை அவள்.

நான்கு நாட்களாக தன்னைத் திரும்பியும் பார்க்காத கணவன் இரவும் தாமதமாக வர, அதை அறிந்த மாமியார் மந்திரிக்க தான் இன்று கணவன் சீக்கிரம் வந்தான் என்ற கோபம் அவளுக்கு. மனைவியின் ஊடலை ரசித்தவன் அவளைத் தாஜா செய்ய நினைத்து அவனின் மொபைலில் அவளின் அழைப்புக்கான ரிங் டோனைத் தட்ட,

‘எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ, அது ஏதோ

அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ‘
என்ற பாடலைக் காற்றில் தவழ விட்ட படி மனைவி முன்னே சென்று நிற்க, அவளோ அவன் பக்கம் இருந்து வேறு பக்கம் விலக, இப்போதோ
‘அதை அறியாமல் விடமாட்டேன்

அது வரை உன்னை தொடமாட்டேன்...’
என்ற வரிகளுடன் மறுபடியும் இவன் மனைவியைத் தொடர கடுப்பானவள், கையிலிருந்த பைப் வழியே தண்ணீரால் கணவனை அபிஷேகம் செய்ய,

திடிர் தாக்குதலில் மூச்சு திணறியவன், “அடி பாதகி! உன்னால் என் போன் போச்சு டி. எப்ப பாரு என்ன ஜலக்கிரீடை பண்றதே உனக்கு வேலையா போச்சு. மாமா என்னை விட்டுடுங்கனு இன்று உன்னை கதற வைக்கிறனா இல்லையா பாரு” அவளின் செயலை ரசித்து சொன்னவன் மனைவியை எட்டிப் பிடிக்க நினைக்க, அவளோ அவனுக்கு பழிப்புக் காட்டியவள்,

“எப்போ பாரு தண்ணியில நனைந்த சீக்கு வந்த கோழி மாதிரி துள்ளாத மாமா. அப்புறம் பச்ச தண்ணிக்குப் பதில் சுடு தண்ணியால உன்னைய அவிச்சிடப் போறேன்” என்றவள் அவனிடம் சிக்காமல் இங்கே அங்கே என்று ஓடிய படி போக்கு காட்டியவள் கடைசியாக வீட்டினுள்ளே நுழைய, பின்புறமாகச் சென்று அலேக்காக மனைவியைத் தூக்கியவன், படிக்கட்டின் கீழே உள்ள சுவற்றில் மனைவியைச் சாய்த்து அவளின் இரு பக்கமும் கைகளால் சிறை செய்து காதலுடன் மனைவியை நெருங்க, கணவனின் நோக்கம் புரிந்தவளோ முகத்தைத் திருப்ப, அவனுடைய உதடுகளோ குறி தவறி மனைவியின் காதில் புதைந்தது. அங்கிருந்தே அவள் கூந்தலில் வாசம் பிடித்தவன் “ஹேய் சண்டி ராணி! ஒரு முத்தமாவது கொடுக்க விடுடி” என்று காதலோடு கெஞ்ச

“முடியாது” என்று வீம்புடன் அவனைத் தள்ளியவள், “இரண்டு நாளா என் முகத்தைப் பார்க்காம தானே போனீங்க! இப்போ என்ன?” என்று இவள் முறுக்கிக் கொள்ள, மனைவியை விட்டு விலகாமலே நேருக்கு நேர் அவள் முகம் பார்த்தவன்,

“அதுக்கு தண்டனையா மாமா இன்று இரவு யாரும் இல்லாத அப்போ உனக்கு பிடித்த நெய் ரோஸ்ட் எல்லாம் சமைத்து தரேன் டி” இவன் சமாதானத்திற்காக குழைந்து கொண்டு தான் பேசினான்.

அவளோ முகம் மாற, “அப்போ நான் யாருங்க? உங்க மனைவி தானே? அதென்ன அம்மா இருந்தா பேசி சிரிக்கிறது, அதுவே உங்க அண்ணன் இருந்தா என் முகத்தைக் கூட பார்க்கத் தயங்கிறது? எனக்குப் புரியல! எனக்கு ஏதோ அசிங்கமா இருக்கு.. இப்படி எல்லாம் நீங்க நடந்துகிறதுக்கு நான் என் அப்பாவ கூட்டிட்டு தனியாவே போறேன். என்ன போக விடுங்க… பிறகு உங்க அண்ணன் வாழ்வு சரியானதும் வந்து கூட்டி வாங்க சாமி” என்று கோபத்துடன் ஆரம்பித்தவள் இறுதியில் கெஞ்சலாக முடிக்க, துருவனுக்கு மனைவி படும் வேதனை பார்த்து கஷ்டமாக இருந்தது.

ஆனால் இப்பொழுது நயமாக பேசினால் சரி வராது என்று யோசித்தவன் “இப்போ எதுக்கு டி கத்துற? எனக்கு மட்டும் உன் மேல் பாசம் இல்லையா? காதல் இல்லையா? உன்னை பார்த்ததிலிருந்து நீ தான் என் மனைவினு நினைத்தவன் நான். அண்ணன் கல்யாணத்திற்குப் பிறகு வீட்டில் பேசி நம்ம கல்யாணத்தை முடிக்க இருந்தேன். ஆனா அதற்கு எல்லாம் நேரம் தராம உன் அவசரத்தினால் தானே நம்மோட கல்யாணம் என் அண்ணனுக்கு முன்னே நடந்தது? அந்த குற்ற உணர்ச்சியில் நான் இருந்த நேரத்தில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சுனு தெரிந்த பிறகு தான் அதிலிருந்து வெளியே வந்தேன்.

ஆனா இப்போ இப்படி அவங்க இருவரும் பிரிந்து இருக்காங்க. எனக்கு நீயும் முக்கியம் என் அண்ணனும் முக்கியம். ஆனா உனக்கு ஒண்ணு நடந்தப்போ உன் பக்கம் நின்னேன்ல? அதே மாதிரி என் அண்ணன் வாழ்க்கை சரியாகி அண்ணனும் அண்ணியும் சேரும் வரை நம்ம வாழ்க்கை இப்படி தான். அதற்காக நீ என் மனைவி இல்லைனு ஆகிட முடியாது. சும்மா சும்மா நான் யாரு நான் யாருனு கேட்கிறதை விடு. அப்புறம் என்ன சொன்ன? அசிங்கமா? அதுக்கு அர்த்தம் புரிந்து தான் பேசினீயா கண்ணம்மா…. ரொம்ப வலிக்குது டி…. வீட்டை விட்டுப் போவியா? இப்படி நினைத்ததற்கே உன் காலை உடைப்பேன் டி. ச்சே! என்றைக்கோ ஒரு நாள் மனுஷன் கிட்ட வந்தா, ஏதேதோ பேசி முகத்தை திருப்ப வேண்டியது. இனி உன் பக்கமே வரல போடி” என்றவன் திரும்ப தோட்டத்து பக்கமே சென்று விட்டான் துருவன்.

கணவனின் ஆசையும் எண்ணமும் அறிந்தவள் விக்கித்துப் போய் அதே இடத்திலேயே அமர்ந்து விட்டாள் பாரதி. வீட்டில் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இருவரும் இப்படி கத்திப் பேச, இவர்கள் இருவரும் தோட்டத்தில் இருக்கும் போதே ஏதோ ஒரு ஃபைல் எடுக்க வீட்டுக்கு வந்து தன் அறைக்குப் போன அபி திரும்ப படியில் இறங்கும் போது இருவரும் கத்திக் கொண்டிருந்ததைத் தான் கேட்டான்.


‘இதைத் தானே நேற்று தாய் சொன்னார்கள்!’ என்று நினைத்தவனோ தம்பியின் வாழ்விற்காகவாது தான் நந்திதா பக்கம் ஒரு அடி எடுத்து வைக்க நினைக்க, ஆனால் அங்கு இவனின் மனைவியோ இவர்களுக்குள் இருக்கும் நுறு மீட்டர் இடைவெளியை பல ஆயிரம் மீட்டராக மாற்ற வழி வகை செய்து கொண்டிருந்தாள் அவனின் ஜமீன் ராணி.
 
Last edited:

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Athane nandhi thava kokka
Ivan than ava kalil poi vilangum
Apdi vilunthalume ava kandipa compramise aga matta
Ivan ethachum athirai action than edupan
அதே தானுங்க சிஸ்🤗🤗♥️♥️
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN