உறவாக வேண்டுமடி நீயே 13

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 13


அதன் விளைவால் அபி எப்படிப் பட்ட முடிவை எடுக்கப் போகிறான் என்பதை அவள் தெரிந்திருக்கவில்லை. ஏன், அவனைச் சுற்றி யாருமே தெரிந்திருக்கவில்லை. அப்படி தெரிய வரும்போது…

ஒரு நாள் அபி ஆபீஸில் வேலையாக இருக்க, அவனின் போனுக்கு அழைப்பு வந்தது. எதிர் பக்கம் யார் அழைப்பது என்பதை அறிந்தவன் உடனே எடுத்துப் பேச, அங்கு என்ன சொன்னார்களோ இவனின் முகம் கறுத்து சிவந்தது.

“என்ன ஐயா இப்படி சொல்றீங்க? எத்தனை சி வேணாலும் தரேன்”

“…..”

“பரவாயில்ல… இதுலயிருந்து நான் பின் வாங்கிறதா இல்ல. உங்களால முடியும் மேற்கொண்டு முவ் பண்ணாலம் ஐயா”

“…..”

“யார் துரை கம்பெனி எம்.டி யுகநந்திதாவா? எப்போதிருந்து?” பல்லைக் கடித்த படி கேட்டவன், “ஓகே ஓகே. நீங்க விலகிகோங்க ஐயா நான் பார்த்துக்கிறேன்” அவரிடம் தன்மையாக அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டான் தான். ஆனால் மனைவியிடம் தான் ஒன்று சொல்லி அவளை விலக வைக்க வேண்டுமா என்ற எண்ணமே அவனை பாறையாக இறுகச் செய்தது. நந்திதாவின் பர்சனல் நம்பருக்கு அழைத்தவன் அவள் எடுத்ததும், “எங்கே இருக்க?” என்று கேட்க,

“ஆபீஸ்ல” அவள் முடிப்பதற்குள்,


“அங்கேயே இரு இன்னும் டென் மினிட்ஸ்ல நான் அங்கே இருப்பேன்” என்ற கட்டளையுடன் இவன் அழைப்பைத் துண்டிக்க,

‘மீட்டிங்ல’ என்று சொல்ல வந்தவளோ அவனின் அதிரடி பதிலில் அமைதி ஆனாள்.

இப்பொழுது அபியிடம் பேசியவர் ஜெயக்குமார். தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு மச்சான் உறவு. அரசியலில் பெரிய புள்ளியாக இருந்தவர், வயதிலும் பெரியவர். அபியின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியவர். இவரிடம் அபிக்கு அன்பு மரியாதை அதிகம். அதனால் தான் அவரிடம் பேசும் போது பேச்சில் கொஞ்சம் மரியாதையும் பவ்வியமும் இவனிடம் இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டிப் பறப்பவர். அபியையும் அந்த தொழிலுக்கு அழைக்க, இவனுக்கு அதில் விருப்பம் இல்லாததால் அவரின் தூண்டுதலின் பேரில் கொடைக்கானலில் ரிவர் வியூயில் ஒரு ரிசார்ட் கட்ட நினைத்தவன், அதற்கான வேலையில் முன்பே இறங்கி இடம் பார்த்து அனைத்தும் செய்ய, இன்று எல்லாம் முடியவேண்டிய நேரத்தில் அந்த இடத்தில் அப்படி ஒன்று வரக் கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறாள் அவன் மனைவி நந்திதா.

அவளும் தான் என்ன செய்வாள்? save nature என்ற அமைப்பை நடத்தி வருகிறாள் இல்லையா? அதனால் இயற்கையை அழித்துக் கட்டிடம் கட்டுபவர்களை எதிர்க்க, அதில் அபி மேற்கொள்ள இருக்கும் இந்த இடம் அவள் பார்வைக்கு வந்தது. முதலில் அதற்கான எதிர்ப்பை சாதாரணமாக தெரிவித்தவள் அதற்கு பின் தன் கணவன் அபி இந்த விஷயத்தில் இருப்பதை அறிந்தவள் முழு மூச்சாக எதிர்க்க ஆரம்பித்தாள் நந்திதா.

இன்று நந்திதா தான் எதிர்க்கிறாள் என்று தெரிந்ததும் கோபம் என்பதை விட மனதிற்குள் ஏதோ ஒன்று தட்டி எழுப்பி அவனை உசுப்பி விட்டது. அதனால் தான் அவளை நேரில் காணச் சென்று விட்டான் இவன்.

இவன் அங்கு செல்ல, இவனைத் தடுப்பவர் யார்? மீட்டிங் ஹாலில் இருந்த எல்லோரையும் அனுப்பிவிட்டு அமர்ந்திருந்தாள் நந்திதா. அறை உள்ளே வந்தவன், “என்ன தான் டி உன் மனசுல நினைச்சிட்டு இருக்க? எப்பபொழுதும் என்ன எதிர்க்கணும்னு கங்கணம் கட்டியிருக்கியா? முன்னாடி எப்படியோ! இனி என்ன எதிர்த்த, ம்ஹும்.... எதிர்க்கணும்னு நினைக்கக் கூட கூடாது நீ” இவனுக்கு இருந்த ஆத்திரத்திற்கு ஆவேசத்துடன் இவன் பொரிய, ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் கம்பீரத்துடன் நிதானமாக அமர்ந்திருந்தாள் நந்திதா.

பெண்களுக்கு நிதானம் இல்லை என்று யார் சொன்னது? இதோ அமர்ந்திருக்கிறாளே, இவளும் பெண் தானே! என்று பார்ப்பவர்களை நினைக்க வைப்பாள். இது இவள் சிறுவயதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களால் நிதானத்திற்கே நிதானத்தைக் கற்றுக் கொடுப்பவள் யுகநந்திதா.

“இனிமே எதிர்க்கக் கூடாதா? அப்படி புதுசா நமக்குள்ள என்ன உறவு மலர்ந்தது?” அதே நிதானத்துடன் இவள் கேள்வியாய் கேட்க

“புல் ஷிட்! என்ன தெரியாத மாதிரி கேட்கிற? கணவனை இப்படி தான் எதிர்ப்பாங்களா? இது தான் தமிழர் பண்பாடா?” இப்போதும் இவனுக்கு கோபம் குறையவில்லை. இந்த உரிமை கலந்த கோபம் தான் இன்று இவனை இப்போது நிதானம் இழக்க வைத்து இப்படி எல்லாம் வாய் வார்த்தையாகக் கேட்க வைத்தது. அதுவும் அவனையும் மீறி முன்பு நந்திதா எதிர்த்த போது வந்த கோபம் வேறு. ஆனால் ஊரறிய மனைவி என்று சொன்ன பிறகு இவள் எதிர்ப்பது கணவன் என்ற உரிமையில் சராசரி ஆண் மகனாய் மனைவியிடம் வந்த கோபம். ஆனால் இதை இவன் முழுமையாக உணர்ந்தானா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

“ஓ! கணவன் மனைவியா… தாலி கட்டிட்டேணு இவ்வளவும் பேசுறீங்களா? அதை நீங்க எனக்கு கட்டி மூன்றரை வருடம் ஆக போகுதுங்க சார்…. இப்போ என்னமோ புதுசா கட்டின மாதிரி சொல்லுறீங்க… அப்புறம் என்ன சொன்னீங்க? தமிழர் பண்பாடு! ம்ம்ம்... அப்போ நானும் கேட்கின்றேன், அதே பண்பாடு படி நேரம் காலம் பார்த்து ஊர் கூட்டி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சொந்தபந்தம் வாழ்த்த என் சம்மதத்தோட எனக்கு தாலி கட்டினீங்களா? இல்லை இல்ல? பிறகு நான் ஏன் அதை எடுத்துக்கணும் ?

“நீ எடுத்துக்கல, ஆனா நான் எடுத்துகிட்டேன். அதையும் ஊரறிய சொல்லிட்டேன். அப்போ நீயும் அதை எடுத்து தான் ஆகணும்…. அதாவது நமக்கு நடந்தது திருமணம் தான்” இவனிடம் அப்படி ஒரு அகங்காரம்.

‘என்ன ஒரு அதிகாரம்?’ என்று நினைத்தவள், “முடியாது மிஸ்டர். அபிரஞ்சன்! எனக்கு சரின்னு படுவதை யார் தப்பு செய்தாலும் அது நீங்களே ஆனாலும் நான் எதிர்த்து தான் தீருவேன். அந்த இடத்தில் உங்களால ரிசார்ட் கட்ட முடியாது” இதைக் கொண்டு தான் இந்த பேச்சு என்பதால் இவள் தெளிவாகவே அந்த விஷயத்தை மறுக்க,

“என்ன மறுபடியும் சவாலா? இப்போ என் மனைவி என்ற ஆணவமா?”

“முன்பும் நான் சவால் விடும்போதும் உங்க மனைவியா தான் இருந்தேன். இப்போ என்னை உங்க மனைவியா ஊரறிய சொன்னது நீங்க தான். அதனால் எல்லாம் எதுவும் மாறிடப் போறது கிடையாது” இவள் உறுதி பட உரைக்க,

“ஓ! அன்று சொன்னது தான்! இந்த அபிரஞ்சன் எதையும் விட்டுக் கொடுத்திட மாட்டான்” நிமிர்வுடன் இவன் சொல்ல,

“அதைத் தான் நானும் சொல்றேன். இந்த யுகநந்திதா அபிரஞ்சனும் எதையும் விடறதா இல்லை” முதல் முறையாக இவள் தன் பெயரோடு கணவன் பெயரையும் சேர்த்து இவளும் அதே நேர்கொண்ட பார்வையுடன் சொல்ல, அதுவே அவனுக்கு இன்னும் எறிந்தது. ஆனால் இவர்கள் இருவரின் பெற்றோரும் என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பதை இருவரும் யோசிக்கவில்லை.

இதற்கிடையில் சின்ன மகனுக்கு திருமணம் முடிந்ததால், முன்பே திட்டமிட்ட படி வயலூர் முருகனுக்கு சில கடமைகளைச் செய்ய திட்டமிட்டு இருந்தார் மேகலை. அந்த நாளும் வர, முறையாக பெரிய மருமகளை அழைத்திருந்தார் அவர். அவரின் சொல்லுக்காகவும் தாயின் பிடிவாதத்திற்காகவும் மகளுடன் வந்து இருந்தால் நந்திதா.

கோவிலில் அபியைத் தவிர எல்லோரும் இருந்தார்கள். அவன் சற்று நேரத்தில் வருவதாக சொல்லவே, மகன் வந்தால் தான் பூஜை என்ற முடிவில் அமர்ந்திருந்தார் மேகலை. எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கவும், வேணிக்கு தான் குஷி தாங்கவில்லை. காலை நேரம் என்பதால் ரொம்பவே சுறுசுறுப்பாக பபுலுவின் மேல் சாய்வது விளையாடுவதும் பின் தாய் கழுத்தைக் கட்டிக்கொள்வதுமாக இருந்தாள். அதில் நந்திதாவின் நெற்றியில் உள்ள பொட்டு விழுந்து விட, அதை அவள் உணரவில்லை.

அதே நேரம் பட்டு வேஷ்டி சட்டையில் கோவில் உள்ளே நுழைந்த அபியின் பார்வையில் விழுந்தது வெறும் நெற்றியோடு நின்ற நந்திதா தான் . தாயைப் பார்த்து, ‘நான் வந்துட்டேன்’ என்ற தலை அசைப்புடன் நந்திதாவை நெருங்கி அவளின் இடதுபுறம் நின்றவன் பின் திரும்பி நண்பனான பாலாவைப் பார்க்க, உடனே அவன் தன் கையிலிருந்த பெட்டியை மேகலையிடம் கொடுக்க, அதை அவர் கேள்வியுடன் திறந்து பார்க்க உள்ளே அம்மை அப்பனுடன் திருமாங்கல்யமும் இன்னும் சில உருக்களும் பொன் தாலிச் சரடில் கோர்த்திருந்தது.

“இன்னைக்கு நாள் நல்லா இருக்குனு சொன்னாங்க மா. அதான் இந்த ஏற்பாடு. நல்ல நேரம் முடியறதுக்குள்ள உங்க கையால எடுத்துக் கொடுங்க. உங்க மருமக கழுத்துல நான் போட்டு விடுறேன்” என்றவன் திரும்பி நந்திதாவைப் பார்க்க, அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

உடனே தன்னைச் சமாளித்தவள் ஒருவித அயர்ச்சியுடன் அவள் விலக நினைக்க, நகர முடியாத அளவுக்கு அவள் கையை இறுக்கி பிடித்தவன் கூடவே அவள் காதோரம் குனிந்து, “வேணியோட விஷயத்திற்கு ஒரு முடிவு வரணும்னா நீ இதற்கு மட்டும் இல்லை சட்டபூர்வமா நான் செய்யறதுக்கும் நீ சம்மதித்து தான் ஆகணும் யுகா. வேணி விஷயம் எவ்வளவு முக்கியமானது உனக்கே தெரியும்!” என்று தாழ்ந்த குரலில் எச்சரிக்க, அவன் சொல்வது மெய் என்று உணர்ந்தவள் பணம் காசு இருந்தும் ஆள் பலம் இருந்தும் எதுவும் செய்ய முடியாமல் அப்படியே நின்றாள் நந்திதா. கூடவே அவளின் வலது புறம் தங்கம் கெஞ்சலான பார்வையுடன் அவள் கையைப் பிடித்து நிற்கவும், அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஐயரிடம் அந்த திருமாங்கல்யத்தைக் கொடுத்து முருகன் காலடியில் வைத்துக் கொடுக்கச் சொன்னவர் பின் அதை மிகுந்த சந்தோஷத்துடன் மகனின் கையில் மேகலை கொடுக்க, அதை வாங்கி பெரிய ஜமீன்தாரான தன் எதிரியானா யுகநந்திதாவின் கழுத்தில் “உன் கழுத்துல தாலின்னு ஒண்ணு ஏறுனா அது என் கையால கட்டுவதாதான் இருக்கணும்” என்ற சொல்லுடன் அவளுக்கு அணிவித்தான் பிடிவாதக்காரனான அபிரஞ்சன். பின் அவள் நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்தவன், “இனி உன் நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் இல்லாமல் நான் உன்னைப் பார்க்கக் கூடாது” என்ற கட்டளையிட்டவன் அவன் கட்டிய திருமாங்கல்யத்திலும் குங்குமம் வைக்க, அவளை வளர்த்த தாயான தங்கத்திற்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்தது.

பின் இவன் குனிந்து அவளின் பாதத்திற்கு மெட்டி போட நினைக்க, “குழந்தை எப்படி டா நிற்பா? என் மடி மீது கால் வை மா நந்திதா” என்று மேகலை அவள் முன் அமர வர, “அச்சோ! அத்தை வேணாம்” என்று நந்திதா பதற, முதல் முறையாக அவள் தன்னை அத்தை என்று அழைத்ததில் மனம் குளிர்ந்த படி அவர் மகனைப் பார்க்க, “உங்க குழந்தை ஒண்ணும் விழுந்துட மாட்டா. என் மடி மீது பாதத்தை வை யுகா” என்றவன் சொன்னபடியே அவன் மடி மீது வைத்து மெட்டியிட, பபுலுவின் கையிலிருந்து இறங்கி “அபிப்பா!” என்ற சொல்லுடன் ஓடி வந்து அபியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் வேணி. இவ்வளவு நேரம் அவளை யாரும் அவனிடம் விடாததால் அவளால் பொறுக்க முடியவில்லை.

வேணியை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தூக்கிக் கொண்டவன், மகள் மனைவியுடன் தாயின் காலிலும் தங்கத்தின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான் அபி. எல்லாம் முடிந்து மறுபடியும் அபி நண்பனைப் பார்க்க, இருவர் முன்பும் சில ஆவணங்கள் மற்றும் அரசாங்க லெட்ஜர் புத்தகம் நீட்டப் பட, இதெல்லாம் சட்டப்படி திருமண பதிவுக்கானது என்பது நந்திதாவுக்குப் புரிந்தது.

மேகலையிடம் இருந்த வேணியை ஒரு பார்வை பார்த்தவள், பின் எந்த சுணக்கமும் இல்லாமல் கையெழுத்துப் போட்டாள் நந்திதா. சாட்சி கையெழுத்துக்கும் ஆட்கள் இருக்க முடிந்தததும், பத்திரிகைத் துறையில் இருக்கும் தன் நண்பனிடம் திரும்பியவன்,

“நாளைக்கு காலையில் வருகிற எல்லா பத்திரிகையிலும் எங்க கல்யாணத்திற்கு வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் AR குரூப் கம்பெனி சார்பா நானும் துரை கம்பெனி சார்பா யுகாவும் நன்றி சொன்னதா எங்க போட்டோவோட நியூஸ் போட்டுடு” என்று அபி சொல்ல, “அதன்படியே செய்றேன்” என்றான் அவன்.

பூஜை முடித்து வீட்டுக்குக் கிளம்பும் நேரம், “வீட்டுக்கு வந்து நந்திதா விளக்கு ஏற்றணும் தங்கம்” என்று மேகலா ஆரம்பிக்க, “இப்போ எதுவும் வேணாம் அத்தை. நான் வரல” என்றாள் நந்திதா நேரடியாகவே அவரிடம். ‘என்ன டா இது?’ என்பது போல் இவர் மகனைப் பார்க்க,

“ம்மா... அவளுக்கு எது விருப்பமோ அவ இஷ்டத்திற்கே விடுங்க” என்று அபி சொல்லி விட, அதன் பிறகு வேறு பேச்சுயில்லாமல் ஆனது. “ஆமா! எல்லாம் என் விருப்பப்படியே நடக்கிற மாதிரி தான்!” என்று நந்திதா வாய்க்குள் முனங்க, அது தெளிவாக அபியின் காதில் விழ, “அப்படி எல்லாம் உன் இஷ்டத்திற்கு நடக்கலை. என்ன டி பண்ணுவ?” என்று இவன் ஒற்றைப் புருவம் உயர்த்தி சன்னமாக அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் கேட்க,
‘அதெல்லாம் நடக்கும் போது பார்க்கலாம்’ என்ற விழி மொழியுடன் விலகிச் சென்றாள் நந்திதா.

“சரிங்க ம்மா... எனக்கு முக்கியமான வேலை இருக்கு, நான் கிளம்பறேன். நீங்க வீட்டுக்குப் போங்க” என்று தாயிடம் சொல்லிக் கொண்டு இவன் கிளம்ப, ‘உன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பு டா’ என்று மகனுக்கு கண்ணாலேயே பாடம் எடுத்தவர் தள்ளி நின்றிருந்த நந்திதாவைப் பார்த்து,

“நந்தித்தா இங்க வா, உன் புருஷன் உன் கிட்ட ஏதோ சொல்லணுமாம்” என்று மருமகளையும் அழைக்க கையில் வேணியுடன் கணவன் எதிரில் வேற வழியில்லாமல் இவள் வந்து நிற்க மகளிடம் நெருங்கியவன்,

“பிரின்சஸ்! அப்பாவுக்கு வேலை இருக்கு அதான் உடனே கிளம்பறேன். சமர்த்தா நீங்க வீட்டுக்குப் போறீங்களா?” என்று கேட்டவன் மகளின் கன்னத்தில் முத்தமிடுவது போல் மனைவியின் காதோரம் நெருங்கி “உனக்கும் தான் டி என் காட்டுப்பூச்சி! சமர்த்தா வீட்டுக்குப் போ” என்று சொல்ல, முதல் முறையாக சரி தான் போடா என்பது போல் நின்றாள் நந்திதா.

அவன் கிளம்ப, ‘இவ்வளவு சொல்லியும் மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் போகிறானே!’ என்ற கோபம் மேகலைக்கு வருத்தம் தங்கத்திற்கு. ‘பெரிய மகாராஜா! எல்லோர் முன்னாடியும் சொல்ல மாட்டார்’ என்ற எண்ணம் நந்திதாவுக்கு என்று, எல்லோருக்கும் வெவ்வேறு எண்ணம் இருந்தது.

திருமணம் முடித்து வந்த பிறகும் அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்க்க, இதற்கு எதற்கு திருமணம் என்று நொந்து போனார்கள் இருவரின் தாயும்.

மறுபடியும் இப்படி வலுக்கட்டாயமாக நந்திதாவுக்கு அபி தாலி கட்ட முதல் காரணம் வேணி. வேணியின் தாய் வழி தாத்தா பெரிய செல்வந்தர். ஆனால் ஜாதி வெறி பிடித்தவர். மகள் காதலையும் கல்யாணத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர், அவள் இறந்தும் இறுதி காரியத்தில் கலந்து கொள்ளாதவர். இப்போது பேத்தியை மட்டும் கேட்கிறார், அதுவும் கவுரத்திற்காக தான்.

இதெல்லாம் தெரிந்தாலும் வேணியின் தந்தை தீனேஷ் இறக்கும் போது கேட்டுக் கொண்ட வாக்கினால் நந்திதா வேணியை விட்டுக் கொடுக்கவில்லை. அவரும் எப்படி எப்படியோ முயன்று பார்த்தார். நந்திதாவின் ஆள் மற்றும் பண பலத்தால் அவரின் பாச்சா பலிக்காமல் போனது. இறுதியாக நந்திதாவுக்கு திருமணம் ஆகவில்லை, அதனால் குழந்தை அவளிடம் வளரக் கூடாது. வேணிக்கு நல்லதொரு ஒரு குடும்ப அமைப்பு வேண்டும் என்று அவர் சட்டப்பூர்வமாக வாதிட, இப்பொழுது நந்திதாவின் நிலைதான் திண்டாட்டம் ஆகிப் போனது.

இதையெல்லாம் அறிந்த அபியால் வேணியை விட்டு கொடுக்க முடியவில்லை. அது மட்டுமா காரணம்? தன் மனைவி யாரிடமும் தோற்கக் கூடாது என்ற எண்ணம் இருந்ததோ என்னமோ அவனுக்கு? அதனாலேயே தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வ திருமணமாக மாற்றிக் கொண்டான்.

இன்னொன்று ஊர் உலகம் அறிய இவள் தான் என் மனைவி என்று சொன்ன பிறகும் இவள் அதை ஏற்றுக் கொள்ளாதது அவனை உசுப்ப, கூடவே நந்திதா அன்று கேட்டாளே, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து எனக்கு தாலி கட்டினாயா என்று! அது அவன் மனதை வால் கொண்டு அறுப்பது போல் இருக்கவும், தாயின் அன்றைய அதிர்ந்த முகத்துடன் அவரின் ஆசையும் நினைவு வர, இன்று தன் உறவுகள் முன்னே மனைவியை மறுபடியும் திருமணம் செய்து கொண்டான்.

இதையெல்லாம் விட முக்கியமானது, அன்று அவன் கட்டியதைக் கழற்றப் போன போது பார்த்து அதிர்ந்தது தான். எவ்வளவு கோடி கோடியாக அவளிடம் பணமிருந்தும் தங்கம் வைரம் என்றிருந்தாலும் அவன் அன்று கட்டின மஞ்சள் கயிறுடன் இன்றுவரை இருப்பது தான் அது! அது எத்தனை முறை நைந்த பிறகும் அதேமாதிரி வேறு ஒரு மஞ்சள் கயிறை அவள் போட்டிருந்ததைத் தான் அவன் எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் ஏன் அவள் எப்போதும் காலர் வைத்த உடுப்புகளையே போடுகிறாள்? என்ற கேள்வி எழுந்தது. கூடவே அவன் கையால் அவன் குடும்ப அங்கீகாரத்தைத் தானே மனைவி கேட்கிறாள்? என்ற எண்ணம் வர, அவன் தாய், தம்பி மனைவி பாரதிக்கு செய்தது போல் செய்தான் அவன்.


இதற்கு மேலாவது அந்த மாதிரி உடைகளை மனைவி போட மாட்டாள் இல்லையா? என்ற எண்ணம்! ஆனால் இப்படி செய்வதால் அவள் தன்னை எதிர்க்க மாட்டாள் என்ற எண்ணம் மறந்தும் அவனுக்கு வரவில்லை. அன்று அவளுக்குப் பிடிக்காமல் கட்டிய தாலிக்கும் இன்று அவளுக்குப் பிடித்ததைப் பார்த்துப் பார்த்து செய்வதற்கும் அடி மனதில் அவள் மேலுள்ள காதல் தான் காரணம் என்பதை இவன் உணரவில்லை. ஆனால் மனைவிக்கு அந்த காதல் இருப்பதால் தான் வீம்புகாகவாது அவன் கட்டிய தாலியை அவள் இவ்வளவு நாள் சுமந்ததாக அவன் உணர்ந்தான். ஒருவேலை அது பொய்யும் இல்லையோ
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN