உன்னுள் என்னைக் காண்கிறேன் 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 2

அன்றைய தினம் பௌர்ணமி என்றாலும் கருமேகக் கூட்டங்கள் வானம் எங்கும் சூழ்ந்திருக்க நட்சத்திரப் பாவையின் கண்சிமிட்டல் எதுவும் இல்லாமல் அந்தச் சமுத்திரப் பிரதேசமே குகைக்குள் இருப்பது போல் காட்சி அளித்தது. அங்கு எந்த மனித நடமாட்டமும் இல்லா அமைதிக் கானகமாக இருக்க….


கருமேகங்கள் இடம் பெயர்ந்த அந்த நொடிப்பொழுதில் நிலவு ஒளியில் அது ஓரு பெண் உடல் என்பதை தேவ் சற்றுத் தூரநிலையிலேயே அறிந்துகொண்டான்.


தங்கள் வாழ்வில் தோல்வி அடைந்து துன்பங்களைக் கண்டு சோர்ந்து போய் மன வலிமையைத் தற்கொலையில் காட்டிப் போராடி வெற்றிக்காண நினைப்பவர்களில் ஒரு சிலர் நாடுவது இந்தச் சமுத்திரத்தைத்தான். அப்படித் தற்கொலைக்கு முயன்றவர்களோ இல்லை சுற்றிப் பார்க்க வந்ததில் பாறையில் இருந்து தவறி விழுந்தவர்களோ?! அல்லது ஏதோவொரு வகையில் கடலில் விழுந்தவர்களாக இருந்தால் அது இந்த ஊர் மீனவர் தலைவனான ஜோசப்புக்குத் தெரிந்திருக்கும்.


அவன் தலைமையில் மீனவ இளைஞர்கள் அவர்களைக் காப்பாற்றவோ இல்லை அந்த உடலை மீட்கவோ தத்தம் மோட்டார் படகுகளில் சென்று சுற்றுவார்கள். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படகோ மக்கள் நடமாட்டமோ இல்லை அலைகளின் பேரிரைச்சலைத் தவிர. அதனால் இது தற்கொலைதான் என்ற முடிவுடன் சற்று வேக எட்டுகள் வைத்து நடந்தான் தேவ்.


அன்று அலைமகள் தன் பாதத்தில் சலங்கையைக் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்னும் போது அவள் நடனத்தை யாரால் நிறுத்தமுடியும்? ஆம் ஒரு பேரலை எழுந்து அந்த பெண் உடலை மீண்டும் தன்னுள் இழுத்துக் கொள்ள முயன்றபோது தேவ் தன் வேகநடையையும் மீறி அவ்வுடல் மீது பாய்ந்து, அவளை நீரில் அடித்துச் செல்ல முடியாமல் பார்த்துக் கொண்டான். ஆனாலும் ஆண்மகனான அவனையும் கொஞ்சம் திணற வைத்துவிட்டாள் அந்த அலைமகள். அதன் பிறகு அவன் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அடுத்த அலை வருவதற்குள் அவளை ஒரே மூச்சில் இழுத்து வந்து கரை சேர்ந்தான்.


அப்பெண் சற்று மெல்லிய உடல்வாகு கொண்டவள் என்பதால் அவனால் அதைச் சுலபமாகச் செய்யமுடிந்தது. அதன் பிறகு அவள் யாராக இருக்கும் என்று முகத்தை ஆராய்ந்ததில், அவள் முகத்திலும் உடலின் பல இடங்களில் காயங்களும் கீறல்களும் இருக்க. அவள் அணிந்திருந்த சுடிதாரோ உச்சி முதல்பாதம் வரை பல இடங்களில் தாறுமாறாகக் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவேளை கொலையோ என்று பயந்தவன்.


உயிர் இருக்கிறதோ என்று மூக்கில் விரல் வைத்துப் பார்க்க மிகவும் நிதானமாக மூச்சு வந்து கொண்டிருந்தது, அந்த மூச்சும் நான் இருக்கவா இல்லைப் போகவா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க.. .


அதன் பிறகு தான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவள் உயிருக்கு ஆபத்து என்று அறிந்து அவளைத் தன்கைகளில் ஏந்த நினைத்த நேரத்தில், அவள் உடையின் கிழிசல் கண்ணில் பட இப்படியே எப்படித் தூக்கிச் செல்வது பத்து அடி வைத்தால் வீடு வந்துவிடும் அதன் பிறகு உள்ளே உள்ள வேலையாட்கள் கண்ணில் இவள் இப்படியா பட வேண்டுமா என்று தோன்ற தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி அவளுக்குப் போர்த்தி விட்டப் பிறகே தூக்கிச் சென்றான் அவன்.


அவன் பண்ணை வீடு கடற்கரையை ஒட்டியே இருக்க, அதன் பின்வாசல் வழியாக அவன் நுழையும் போதே, அந்த வீட்டின் தலைமை வேளையாள் முனிபாண்டி அவன் ஒரு பெண்ணின் உடலைத் தன் கையில் சுமந்துக் கொண்டு வருவதைக் கண்டவரோ, ஏதோ விபரீதம் என்பதை அறிந்து உடனே தன் வயதின் அனுபவத்தை வைத்து, அவனுக்கு முன்பே வீட்டினுள் சென்று விருந்தினர் அறையை ஒழுங்குப்படுத்த.


அவரைக் கண்ட தேவ், “முனி அண்ணா பழனியைச் சுடுநீர் போட்டு எடுத்து வரச் சொல்லுங்க. குட்டிமா தூங்கியிருந்தா வள்ளியையும் வரச்சொல்லுங்க, இல்லனா நீங்க குட்டிமா கிட்ட இருந்துட்டு வள்ளியை அனுப்புங்க” என்றவன் விருந்தினர் அறையில் நுழைந்து அவளைக் கட்டிலில் கிடத்த. அவர்கள் இருவரும் ஈரஉடையுடன் இருப்பதைப் பார்த்த பாண்டி, அங்கு பீரோவில் இருந்து இரண்டு பூத்துவாலையை எடுத்து அவனுக்கு ஒன்று கொடுக்க.


அதை வாங்கி முதலில் கட்டிலில் கிடந்த அவள் கூந்தலில் உள்ள நீரைப் போக்க கூந்தலைப் பரபர எனத் தேய்த்தவன். பிறகு அவள் முகம், கை, கால் என்றுத் துடைக்க, அதைக் கண்ட முனி பல பேர் இவருக்கு சேவகம் செய்யக் காத்திருக்க இவர் இதை எல்லாம்யாருக்கோ செய்வதா என்று எண்ணி “இதை எல்லாம் வள்ளி செய்வாள் தம்பி நீங்க உங்களை துடைச்சிக்கோங்க” என்று கூற, அவனோ அவரைத் திரும்பியும் பார்க்காமல் “நீங்க இன்னும் போகலையா? போய் வள்ளியைச் சீக்கிரம் வரச் சொல்லுங்க” என்று குரலை உயர்த்த உடனே அங்கிருந்து அகன்றார் அவர்.


அவனோ சில்லிட்டிருந்த அவள் உள்ளங்கையும், கால்களையும் தேய்த்துக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த வள்ளி “ஐயா கூப்பிட்டீங்களானு” கேட்க கட்டிலில் இருந்த பெண்ணைக்காட்டி “வள்ளி இவங்க வாய்ல உன் வாய் வைத்து கொஞ்சம் ஊது” என்று அவன் சொல்ல அவளும் அவன் சொன்னபடி அவள் முகத்தைப் பற்றி உதடுகளைப் பிரித்து ஊதினாள்.


இப்படியே பலமுறை முயன்றும் எந்த பலனும் இல்லாமல் போக. அவளோ அச்சத்துடன் தேவ்வை பார்க்க, அவனுக்கும் பயம் தான். ஆனால் அந்த பெண்ணின் மார்பு ஏறி இறங்குவதால் சற்று அமைதியாய் இருந்தான்.

பிறகு வள்ளியை அந்தப் பெண்ணின் நெஞ்சில் கை வைத்துச் சற்று நிதானமாகக் குத்தச் சொல்ல. அதன் படியே அவள் பலமுறை செய்தும் எந்தப் பயனும் இல்லை. கடல் நீரை அருந்தி இருப்பதால் அவளைத் தரையில் புரட்டிப் போட்டு முதுகில் அழுத்தம் கொடுத்து அந்தநீரை வெளியேற்ற முயன்றார்கள் அதற்கும் எந்தப் பலனும் இல்லை.


அதற்குள் பழனி சுடுநீருடன் வர, அவனுடன் முனிபாண்டியும் வர தேவ்வோ நீங்கள் ஏன் வந்தீங்க என்பது போல் அவரைப் பார்க்க அந்தப் பார்வையைப் புரிந்து கொண்டவரோ “பாப்பா தூங்கியாச்சு தம்பி” என்றார். பிறகு அவர் கொண்டு வந்திருந்த நீலகிரி தைலத்தை நீட்ட, அதில் ஒன்றை வாங்கியவன் “வள்ளி அதில் ஒன்றை வாங்கி இவங்க உச்சந்தலை, நெற்றினு எல்லா இடத்திலும் அழுந்தத் தேய்ச்சிவிடு” என்றவன் தன் கையிலிருந்த தைலத்தால் அந்தப் பெண்ணின் பாதத்தைத் தேய்க்க செல்ல உடனே அதை உணர்ந்த முனி “ஐயா நீங்க அவங்க உள்ளங்கையைத் தேய்த்துவிடுங்க. நானும் பழனியும் பாதத்தைத் தேய்த்து விடுகிறோம்” என்று கூற அவனுக்கும் அது சரி என்றே பட்டது.


சற்று நேரம் அங்கு அனைவரும் தங்கள் வேலையை முழுமையாகச் செய்ய. எவ்வளவு முயன்றும் அந்தப் பெண்ணிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. மேற்க கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தேவ்வையே பார்க்க, உயிர் தன் உடலை விட்டுப் போகும்போது அப்படிப் போக விடாமல் தன் உடலுடன் சேர்த்து போராடுபவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் உயிர் இருந்தும் உயிரற்ற உடலாய் இருப்பவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் திறனற்று நின்றிருந்தான் தேவ்.


அவன் இன்னும் ஈர ஆடையுடன் இருப்பதைப் பார்த்த முனி “ஐயா நீங்க உங்க உடையை மாற்றினுவாங்க. ஈரத்தால் பிறகு உங்களுக்கு ஏதாவது ஆகப்போகுது” என்று கூற தேவ்வோ வள்ளியிடம் திரும்பி “இவங்க ஆடையைக் கொஞ்சம் தளர்த்தி அந்தச் சுடு நீரால் உடலைத் துடைத்து விடு” என்று கூறி அனைவரும் வெளியேற.


தன் அறைக்கு வந்தவன் போனில் தோழனான டாக்டர் விஸ்வநாதனை அழைத்து விவரம் கூறி முதலுதவி மற்றும் மருத்துவத்துக்குத் தேவைப்படும் பொருட்களுடன் உடனே வரச் சொன்னான். பிறகு தன் உடன் பிறவா சகோதரனான கௌதமை அழைத்து தாங்கள் நடத்தும் “ஆடைகளின் உலகம்” என்ற கடையில் இருந்து சில ஆடைகளைச் சொல்லி அதைக் கடை ஊழியர்களிடம் உடனே கொடுத்து அனுப்பும் படியும் கூறினான்.


அடுத்து நண்பனான ACP ராஜசேகரை போனில் அழைத்துச் சில தகவல்கள் கூறி அவனைக் காலை வரச் சொன்னான். இவை அனைத்தும் முடித்தப் பிறகே குளித்து வேறு உடைக்கு மாறியவன் தன் மகளின் அறைக்கு சென்றுப் பார்க்க. அவளோ டெடிபியரை அணைத்துக் கொண்டு வாயில் விரல் சப்பியபடி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கி கேசத்தை வருடி நெற்றியில் முத்தமிட்டவன் இவளுக்காக அடுத்து என்ன செய்வது என்ற எண்ணத்தில் ஒரு நெடிய மூச்சை வெளியேற்றியவன் பிறகு அறையை விட்டு வெளியேற.


அவன் எப்போது வெளியே வருவான் என்று காத்துக் கொண்டிருந்தவள் போல் வாசலிலே நின்றிருந்த வள்ளி “ஐயா அந்தப் பெண் உடல்ல சில இடங்களில் எல்லாம் கீறல்கள், சிராய்ப்புகள்னு இருக்கு, அது மட்டும் இல்ல..” என்று தயங்க “என்ன வள்ளி என்னனு சொல்லு”. “அவங்க மார்பில் ஏதோ காயம் ஐயா, அது கொஞ்சம் பெரியதாக இருக்குனு” அவள் தலைகுனிந்தபடியே சொல்ல “சரி நீ போ நான் பார்த்துக்கிறேன்” என்றவன் மறுபடியும் போனில் விஸ்வநாதனை அழைத்து அவன் கிளம்பிவிட்டானா என்று கேட்டவன் கூடவே அவன் மனைவி மாலாவையும் அழைத்து வரச் சொல்லியவன் திரும்ப விருந்தினர் அறைக்குச் சென்று அவளைப் பார்க்க எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அதே உயிரற்ற உடல் போல் இருந்தாள் அவள்.


இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் வெளிவாசலில் உள்ள தோட்டத்தில் வந்து இவன் நிற்க அதே நேரம் இரண்டு கார்கள் சற்று இடைவெளி விட்டு அடுத்தடுத்து அங்கு வந்து நின்றது. அதில் ஒன்றிலிருந்து அவர்கள் கடையின் பணியாள் ஒருவன் இறங்கி வந்து தேவ் கேட்ட ஆடைகள் நிறைந்தப் பையை அவனிடம் கொடுக்க அதை வாங்கியவனோ “நீ போ முத்து வேற ஏதாவது வேணும்னா நான் கௌதம் கிட்ட சொல்லிக்கிறேன்” என்றான் தேவ். அவனும் சரி என்று சொல்லி விலகிவிட


பிறகுத் தன் நண்பனைப் பார்த்து “வாடா,” என்றவன் பின் மாலாவிடம் வாம்மா, மதிகுட்டி எப்படி இருக்கா” என்று கேட்க அவளோ“ “நல்லா இருக்காண்ணா இப்பதான் ஓரு டெலிவரி பார்த்துட்டு வந்தேன். இவர் நீங்க வரச் சொன்னதா சொன்னார் என்ன விஷயம்ணா இந்தநேரத்தில வரச் சொல்லி இருக்கீங்க” என்று கேட்க, நீ எதுவும் சொல்லலையா என்பது போல் தேவ் நண்பனைப் பார்க்க இல்லை என்று தலையசைத்தான் அவன்.


மூவரும் பேசிக் கொண்டே வீட்டிற்குள் வந்துவிட, தேவ் “எதாவது சாப்பிடறியாமா” எனக் கேட்க


மாலா “இல்லை வேண்டாம்ணா ஹாஸ்பிட்டலிலே உணவு வர வைத்து சாப்பிட்டேன். இல்லனா இவர் என்னைத் திட்டுவாரே” என்று கூறியவள் தன் கணவனைக் காதல் பார்வைப் பார்க்க அவனோ அவள் பார்வையை அறிந்து மனதிற்குள் “அடியே நீ இந்தப் பார்வையை இங்கு வந்தாடிப் பார்த்து வைப்ப” என்று நொந்து கொள்ள அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவளோ தன் ஒற்றைக் கண்ணை அடித்து ‘உன்னை நான் அறிவேன்’ என்ற பாணியில் சிரித்து வைத்தாள்.


வீட்டினுள் விருந்தினர் அறைவாசலுக்கு அழைத்து வந்தவன் “இந்த அறையில் ஒரு பெண் இருக்கா அவளுக்கு இந்த பைல இருக்க துணிய மாற்றிவிடுமா. உனக்கு உதவியா வள்ளி இருப்பா” என்று கூறித் தன் கையிலிருந்த பையை நீட்டினான். மாலாவோ ‘யார் அந்தப் பெண்’ என்ற மனதின் கேள்வியோடு அதை வாங்கியவள் சரி என்று தலையசைத்து உள்ளே செல்ல நினைக்க. தேவ்வின் கண் ஜாடையை உணர்ந்த முனி விஸ்வநாதனின் கார் டிரைவரிடமிருந்து அவர்கள் கொண்டு வந்த மருத்துவத்துக்குத் தேவையான அனைத்தையும் பழனியுடன் சேர்ந்து விருந்தினர் அறையில் கொண்டு வைக்க இதையெல்லாம் பார்த்த மாலா தன் கணவனிடம் “அப்போ முன்பே உங்களுக்குத் தெரியுமா” என்ற கேள்விப் பார்வையுடன் உள்ளே சென்றாள்.


உள்ளே இருந்தவளை முதலில் பரிசோதனை செய்து சற்றுப் பலமான காயங்களான தலைக்கும் மார்பில் ஏற்பட்டிருந்த காயத்தையும் பரிசோதித்து மருந்திட்டு கட்டுகட்டியவள் பிறகு அவள் ஆடைகளைக் களைந்து வள்ளியின் துணையுடன் வேறு உடைமாற்றினாள். பின் சகமருத்துவரான தன் கணவனை அழைத்து அவனுடன் சேர்ந்து அவளுக்கு முதலுதவி செய்ய அவர்களுக்கு உதவியாக தேவ்வும் வள்ளியும் உடனிருந்தார்கள்.


உடலில் இருந்த கீறல் சிராய்ப்புகளுக்கு மருந்திட்டு இறுதியாக அவளுக்கு டிரிப்ஸை ஏற்றிய பிறகே அனைவரும் மாடியில் உள்ள தேவ் அறைக்குச் சென்றனர்.


இன்றைய காலத்தில் சிறுகுழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அது மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் இந்தப் பெண் வாழ்விலும் நடந்திருந்தால் இவளை எப்படி மீட்பது என்ன சொல்லிப் புரிய வைப்பது அப்படிச் சொன்னாலும் அவள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்க வேண்டுமே? என்றும் அப்படி ஏதோ ஒன்று அவள் வாழ்வில் நடந்திருக்கக்கூடுமோ என்று யோசித்த தேவ் அறையில் நுழைந்ததும் “இப்ப சொல்லுமா என்ன பிரச்சனை”? என்றுகேட்க


“நீங்க நினைக்கிற மாதிரி அவர்களுக்கு எந்த ஒரு அநியாயமும் அசம்பாவிதமும் நடக்கலணா. ஷி இஸ் நார்மல் அண்ட் ஆல் ரைட். அவங்க மார்பில் ஏற்பட்ட காயம் கூட ஏதோ கூர்மையான கல்லோ, இரும்புக் கம்பியோ, இல்லை மரத்தின் கூரோ கூட குத்தி இருக்கலாம். அதுவும் அவங்க உப்பு நீரில் இருந்ததால் செப்டிக் ஆகல.


காலில் லேசான தசைப்பிடிப்பு மாதிரி இருக்கு. காயங்களும் சிராய்ப்புகளும் சீக்கிரம் சரியாகிடும். நான் பார்த்தவரை அவர்கள் ரொம்ப பலவீனமாக இருக்காங்க. அதிலும் அவங்க தலையில் சற்றுப் பலமான அடியா தெரியுது. அதனால் எதாவது பாதிப்பு வருமா என்றதால ஹாஸ்பிடலில் வச்சி செக் பண்ண பிறகு தான் சொல்ல முடியும் மாலா.”


“அதனால் ஏதாவது பாதிப்பு இருக்கா” தேவ்


“என் யூகப்படி இருந்தால்...அவர்களுக்கு நினைவு திரும்புவதும் சற்று கேள்வி தான். காலை வரை பார்ப்போம்ணா. நினைவு திரும்பலனா ஐசியூவில் அட்மிட் பண்ணிடுவோம். அப்பவும் நினைவு திரும்பலனா…” என்று இழுத்தபடி அவள் கணவனைப் பார்க்க “அப்பவும் திரும்பலனா அவங்க கோமாவுக்குப் போய்ட்டாங்கனு அர்த்தம். அதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. நினைவு திரும்ப எழுபத்தைந்து சதவீதம் வாய்ப்புகள் இருக்கு மீதி இருபத்தைந்து சதவீதம் தான் கோமா என்ற முடிவுக்குப் போக இருக்கு.


“அப்படியே கோமா இல்லனாலும் கழுத்துக்குக் கீழ் எந்த அசைவும் இல்லாம படுத்தப் படுக்கையா இருப்பாங்க. அதுக்கும் வாய்ப்பு குறைவு தான் இதில் எது நடந்தாலும் தகுந்த சிகிச்சைக் கொடுத்தால் நிச்சயம் பலன் உண்டு. ஆனால் அவங்களா தெளிந்து தான் யார் என்ற உண்மையைக் கூறனும், இல்லனா தான்” விஷ்வா இழுக்க... “நாம் நடத்தும் ஹோமிலே சேர்த்து விட்டுடுவோம்டா கூடவே நமக்குத் தெரிந்த ஆட்களைப் பாதுகாப்புக்கு வச்சிடுவோம் அதனால் அந்தப் பெண்ணின் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல நமக்கும் எந்த கஷ்டமும் தொந்தரவும் இல்ல” என்று நண்பனின் சஞ்சலம் அறிந்து கூறினான் தேவ்.

“சரி... இப்பவாது சொல்லுங்கள் அந்தப் பெண் யார்? அவர்களுக்கு என்ன நடந்தது?” மாலா கேட்க, தேவ் இன்று அவளைக் கண்டது முதல் இப்போது வரை அனைத்தும் கூறினான். “ஓ...அதனால் தான் இங்கு வரும் போதே சிகிச்சைக்குத் தேவையானதை எல்லாம் எடுத்து வந்திங்களா” என்று தன் கணவனிடம் கேட்க….


“ஆம்” என்றான் விஷ்வா.


“சரிம்மா நேரம் ஆகிடுச்சி நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று தேவ் அவர்களை அப்புறப்படுத்த “ஏன்டா இவ்வளவு நேரமா நேரம் போனது உனக்குத் தெரியலையா? இப்போது தான் நேரமாச்சா. எனக்குத் தூக்கம் வருது இருவரும் இடத்தைக் காலி பண்ணிப் போய்ச் சேருங்கனு நேரடியாக சொல்ல வேண்டியது தான. வா மாலா! நாம் போகலாம் ஐயாவுக்குத் தூக்கம் வந்திடுச்சாம். இவன் வேலை முடிந்தவுடன் நம்பலைத் துரத்தரான் பார்” விசு.

“ஆமாம், ஆமாம்” என்று கணவனுக்கு மாலா ஒத்து ஊத, “ஏன்மா அவன் தான் சொல்றானா நீயுமா? சரி ரெண்டு பேரும் இங்கேயே தங்கியிருந்து காலையில் போங்க. நான் மதிக்காகத் தான் சொன்னேன்” “தெரியும்ணா…. நாங்க இருவரும் சும்மா தான் சொன்னோம். அப்போ கிளம்புகிறோம்ணா” என்று கிளம்பிவிட…


அவர்களை வழி அனுப்பி விட்டு வந்தவனோ நேராக விருந்தினர் அறையில் இருக்கும் அந்தப் பெண்ணை பார்த்தவன் அவளுக்குத் துணையாக வள்ளியை இருக்கச் சொன்னவன். பிறகுத் தன் மகளின் அறைக்குச் சென்று நாளைய தினம் விடியும் விடியலில் என்ன நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்துடன் தன் மகளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான் தேவ்.


எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இரவு உறங்கிக் காலையில் கண் விழிக்கும் போது நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை மட்டும் இன்னும் அறிய முடியவில்லை. அப்படி இருக்கும் போது இவர்கள் மூவரும் பேசி முடித்த படியா நாளை நடக்கும்?


உன்னுள் என்னைக் காண்கிறேன்... 1
 
Last edited:

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN