mm-5

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
MM-5

இடைவிடாத 'கீச்.. கீச்' என்ற பறவைகளின் சத்தத்தில் கண்விழித்தேன் நான். கையை காலை நீட்டி நெளித்து புரண்டு படுக்கும்போது தான் புத்தியில் உறைக்க திடுக்கிட்டு எழுந்தேன். கண்களை கசக்கி சுற்றும் முற்றும் பார்க்க, நான் முன்னிரவு தூங்கிப் போயிருந்த நாற்காலி ஓரமாய் ஆநாதையாய் கிடந்தது.

''அய்யோடா ! நான் எப்படி பெட்டுல வந்து படுத்தேன். ஒருவேளை தூக்கத்துல நடந்து வந்திருப்பேனோ? ஆனா இதுவரைக்கும் இப்படி நடந்தது இல்லையே."என் மனதில் குழப்பங்கள் இழையோட சட்டென மூண்ட சந்தேகத்தில் கொஞ்சம் எட்டி கீழே பார்த்தேன்.

நீண்ட காலை கொஞ்சம் அகல விரித்து அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்த விவேக்கின் மீது என்பார்வை சந்தேகமாய் பதிந்தது.

'ஒருவேளை கதைகள்ல வர மாதிரி தூக்கத்திலேயே என்னை தூக்கிட்டு வந்திருப்பாரோ.' என்று யோசித்தவாரே விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவர் முகம் பார்த்தேன்.

'ச்ச எப்படிப் பார்த்தாலும் கதைகள்ல வர ரொமான்ஸ் ஹீரோவுக்கு உரிய பத்து பொருத்தங்கள்ல பத்தும் மிஸ்ஸாகுதே! இவர் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார். நான் தான் தூக்கக் கலக்கத்துல இங்க வந்து படுத்துருப்பேன் போல.' என்று யோசித்துக்கொண்டே மணியைப் பார்க்க அது அதிகாலை ஐந்து மணியைக் காட்டியது.

'இனி தூங்க முடியாது. எழுந்து வெளியவாவது போவோம்' என்று எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்து ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து விட்டு கதவைத் திறந்து வெளியே சென்றேன்.

வரவேற்பரைக்கு செல்லும் முன்னே என் மூக்கைத் துளைத்த ப்ரூ கஃபியின் மணத்தில் ஆழ்ந்து மூச்செடுத்து 'இந்த வாசனைக்கு என் உயிரையே தரலாமே' என்று முனுமுனுத்துக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தேன்.

அத்தை வசந்தி தான் நின்றிருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தவர் "வா அம்சா நேரமேவே எழுந்திட்டயா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமில்லையா"

"சட்டுனு முழிப்பு வந்திடுச்சு அத்தை. இனி தூக்கம் வராது. அதான் எழுந்து வந்துட்டேன்."

"உங்க வீட்டுல நேரமே எழுந்து வேலை செஞ்ச பழக்கம். அதான் அந்த நேரம் வரவும் முழிப்பு வந்துடுச்சு போல." என்று சொல்லவும் சின்னதாய் சிரித்து வைத்தேன்.

நான் தூக்கத்தில் கோல்டு மெடல் என்று இவருக்கு தெரியாதில்லையா !

"சரி இந்தா அம்சா ! இந்த காபியை குடிச்சுட்டு போய் குளிச்சுட்டு வந்து விளக்கேத்தி வைம்மா"

"சரிங்கத்தை" என்று பதிலளித்துவிட்டு காபி டம்ளருடன் வெளிவாசல் வந்தேன். மழையினால் மண்கள் ஈரத்துடன் உறவாடி ஒட்டிக்கிடக்க வெறும் காலில் அந்த ஈர மணலில் காபியை குடித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். வெளிவராண்டா சுவரோரம் இருந்த முல்லைப் பந்தலில் மலர்ந்திருந்த பூக்கள் காபியின் மணத்தை கிழித்துக்கொண்டு என் நாசியை தழுவியது.

வீட்டை ஒரு சுற்று சுற்றி முடிக்கையில் டம்ளர் காலியாகியிருந்தது. பதிலாக புத்துணர்வு என்னுள் நிரம்பி விட்டிருந்தது.

மனம்தனை மந்திர வசப்படுத்தி பரவசம் கொள்ள வைப்பதில் இந்த காலை நேரத்திற்கு பெரும் பங்குண்டு இல்லையா..

டம்ளரை கழுவி வைத்து விட்டு எங்கள் அறைக்குள் நுழைந்தேன்.உள்ளே அறை காலியாக இருந்தது. தலையணை கட்டிலின் மீது வைக்கப்பட்டிருந்தது.

'ஒ! எழுந்துட்டார் போல' என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே குளியலறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் விவேகானந்தன்.

ஒரு கணம் அவர் முகத்தில் என் பார்வை படிந்தது. அவரும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். மறுகணமே அவர் மீதிருந்த பார்வையைத் திருப்பியவள் என் துணிகளை எடுக்க ஆரம்பித்தேன்.

விவேக் அறையைவிட்டு சென்றிருந்தார். செல்ஃபில் இருந்த என் துணிகளை எடுத்துக் கொண்டிருந்த நான் அப்படியே தரையில் சம்மணமிட்டு அமர்ந்துவிட்டேன்.

ஒரளவு தெரிந்தவர்களை கூட எங்கேனும் முகத்திற்கு நேராய் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் சிறு புன்னகையாவது அளித்து விட்டுதான் நகருவோம். அப்படியிருக்க கணவன் மனைவி என்ற பந்தத்தில் இருக்கும் எங்களுக்குள் அந்தக் குறைந்தபட்ச எதிர்வினைகள் கூட இல்லாமல் போய் விட்டதே!

'அவருக்குத்தான் ஆயிரம் சங்கடங்கள். உனக்கென்ன வந்தது, எதையும் முதலில் அவர்களிடமிருந்து எதிர்பார்க்காமல் நாமே ஒரெட்டு முன்னாடி வைத்துத்தான் பார்ப்போமே! அப்பொழுதும் முகத்தை திருப்பிக்கொண்டு போக முடியுதா என்று பார்க்க வேண்டும். '

அதற்கென்று பார்க்கும் இடமெல்லாம் பல்லைக்காட்டித் தொலையாதே அம்சா. பிறகு பைத்தியம் என்று நினைத்துக் கொள்வார். ' என்று என்னை நானே எச்சரிக்கை செய்து கொண்டே குளிக்கச் சென்றேன்.

குளித்து முடித்து விளக்கேற்றி விட்டு அத்தைக்கு உதவி செய்யவென சமயலறைக்குள் நுழைய சீதாம்மாவும் அத்தையும் தாங்களே பார்த்துக்கொள்வதாக சொல்லி என்னை வெளியே அனுப்பி விட்டனர்.

மலரின் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். நல்ல தூக்கத்தில் இருந்தாள் குழந்தை. சத்தமின்றி கதவை சாத்திவிட்டு வெளியில் வந்தேன்.

''அத்தை சும்மா எவ்ளோ நேரம் இருக்குறது. எதாச்சும் வேலை சொல்லுங்களேன் செய்யுறேன்." என்றேன் சமயலறை வாயிலில் நின்றுகொண்டே.

" அதான் நாங்க ரெண்டு பேரும் இருக்கமேடாமா. வேலையொன்னும் பெரிசா இல்லடா. விவேக் தம்பி பக்கத்துல மஞ்சக்காட்டுல தான் இருக்கும். நீயும் ஓரெட்டு போய்ட்டு வாமா." என்று சீதாம்மா சொல்லவும் , சரி போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பி விட்டேன்.

வாசலில் இறங்கி வெளி கேட்டை திறந்து வெளியில் வந்து பார்த்தால் வீட்டை சுற்றிலும் மஞ்சள் காடுகள் தாம். இதில் எங்களுடையது எது என்று கண்டுபிடித்து எப்படி நான் போவது? என்று நான் யோசித்துக்கொண்டிருக்க என் மாமா குருசாமியும் தேவியின் அப்பா சேகரும் வந்தனர். என்னைப் பார்த்த மாமா,

"என்னடா பாப்பா நம்ம தோட்டத்துக்கா புறப்பட்டு நிக்கிற?"

"ஆமாங் மாமா"

"தோ இப்படிக்கா போனா மூனாவது வரப்புல இருந்து உள்ள போனா பம்புசெட்டு வரும். அத சுத்தி பூரா நம்ம வயக்காடு தாண்டா. நேத்து மழ பேஞ்சதுல வரப்புல்லாம் ஈரமா இருக்கு. வழுக்கி விட்டுரும். பார்த்து சூதானமா போய்ட்டுவா பாப்பு"

"சரிங் மாமா"

"காபி தண்ணி குடிச்சியாகண்ணு " என்ற தேவியின் அப்பாவிடம்,

"குடிச்சுட்டேங்ப்பா. நீங்கப்பா?"

"ஆச்சு கண்ணு" என்று சொல்லும் போதே குரல் கரகரத்தது.

என்னுடைய அப்பா என்ற அழைப்பில் மனிதர் சற்றே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்றே தோன்றியது.

"சரிங்ப்பா. நான் வயக்காட்டுக்கு போய்ட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க துவங்கினேன்.

ஒற்றைப் பிள்ளையை பறிகொடுத்தவர்கள் வேதனை அவர்கள் ஆயிசு மட்டும் தொடரும். நான் நிச்சயம் தேவியின் இடத்தை நிரப்ப முடியாது. ஆனால் இன்னொரு மகளாக இருக்க முடியும் என்றே தோன்றியது.

இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே இடைச்சொருகலாய் விவேக்கின் நியாபகம் வந்தது. அவருக்குமே நான் தேவியின் இடத்தை நிரப்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. அம்சவேணியாய் என்னை முழுதாய் அவர் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதும்.

முதல் காதலே வாழ்நாள் முழுதும் நியாபகம் இருக்கும்பொழுது முதல் காதலியை மனைவியை மனம் எப்படி மறக்க முடியும். சாத்தியமில்லாத ஒன்றை என்னால் எதிர்பார்க்கவும் முடியாதே. ஆனாலும் எனக்கே எனக்கான அந்த நேசம் பங்கிடப்பட்டுக் கிடப்பதை மனம் இப்பொழுதும் கூட ஏற்க முடியாமல் தவிக்கிறது.

இந்த புத்தி இருக்கிறதே எப்பவும் அறிவுக் குழந்தையாய் இருக்கும். மனம் இருக்கே அது சரியான மட சாம்பிராணி போல் ஆயிரம் க் வைத்து அதனுள்ளே உழன்று கொண்டிருக்கும்.

இப்படி ஏதேதோ நினைத்துக்கொண்டு வரப்பில் நடந்த நான் கால் கொஞ்சம் வழுக்கியதில் தடுமாறி விழவும்,

'ஏ வேணி பார்த்து பார்த்து ' என்றவாறே விவேக் ஒடிவரவும் சரியாக இருந்தது.

"என்ன வேணி பார்த்து வரக்கூடாதா?" என்றவாரே என் கைபற்றி எழுப்பி நிறுத்தினார்.

உடையில் படிந்த சேரில் என்னை நானே குனிந்து பாவமாய் பார்த்துக் கொண்டேன்.

'இவ்ளோ நேரமே குளித்து கிளம்பி இங்க வந்தது இவர் பார்க்க விழுந்து வாரத்தானா?' மனம் சிணுங்கிக் கொண்டது.

"இப்படி உத்து பார்த்துட்டே இருந்தா சேறு போயிடுமா? வா வந்து அந்த தொட்டி தண்ணில சேரை துடைச்சுக்கோ" என்றழைக்கவும் அவர் பின்னே சென்றேன்.

'ஒரு வழியாய் மௌன விரதம் முடிவுக்கு வந்திருச்சு போல'

தலைகுனிந்து கொண்டே அவர் பின்சென்றவள் அவர் சட்டென நின்று என்புறம் திரும்பவும் அவர் மார்பில் மோதி நின்றேன். சட்டென இருவருமே ஒரடி பின்னடைந்து நின்றோம்.

'என்னவாம்! எதுக்கு இப்படி திடுதிப்புனு நின்னாரு?' என்று கேள்வியாய் நான் அவரை நோக்க,

"அடி ஏதும் பட்டுருக்கா?" என்றவர் பார்வை கணப் பொழுதில் ஆராய்ந்தது.இல்லையென நான் தலையாட்டிய பொழுதும் ஸ்கேனிங் பார்வையை என் மீது செலுத்திவிட்டே முன்னேறி நடக்க ஆரம்பித்தார்.

தண்ணீர்தொட்டி அருகில் வந்ததும் வயலை வேடிக்கை பார்க்கும் சாக்கில் அவர் திரும்பி நின்று கொள்ள நான் உடையை சுத்தம் செய்து கை கால் முகம் கழுவிக் கொண்டேன்.

நனைந்திருந்த துப்பட்டாவை பிழிந்து உதறவும், விவேக்கிடமிருந்து 'ப்ச்ச்' என்ற சத்தம். உதறிய நீர் அவர்மேல் பட்டிருக்க வேண்டும்.

"சாரி" என்றேன் மெதுவாக.

'ம்' என்றதோடு நின்றுவிட்டது அவரின் பேச்சு.

அவ்வளவு தான்! மீண்டும் எங்களிடம் இடைவெளியற்ற மெளனம். அவரை விடுத்து சுற்றிலும் என் பார்வையைத் திருப்பினேன். விளைந்து கிடந்த மஞ்சள் செடிகள் பசுமையை பாய் விரித்திருந்தது.

சால்வையை ஒற்றையாய் விட்டவாறு உள் நோக்கி வரப்புகளில் நடக்க ஆரம்பித்தேன்.

''பார்த்துப் போ" என்ற குரலில் திரும்பி விவேக்கைப் பார்த்தேன்.

என்னையும் அறியாமல் 'ம்க்கும்' என்ற ரேஞ்சில் வாயை சுழித்துக் கொண்டு திரும்பி நடந்தேன்.

"யாருக்கு வேணும் இவன் அக்கறை" மீண்டும் என்னிடம் மரியாதை மண்ணைக் கவ்வியிருந்தது.

சிறிது தூரம் நடந்ததும் வீட்டின் ஞாபகம் வந்தது. நீலு இன்னேரம் என்ன செய்து கொண்டிருப்பாள். வேலம்மா சமைத்து வைத்திருப்பார் தான். ஆனால் நீலு சாப்பிட நான் அருகில் இருக்க வேண்டுமே!

சின்னவளுக்கு எப்போதும் ஒரு பழக்கம்.அவளுக்கான சாப்பாட்டை தனி தட்டில் சாப்பிட மாட்டாள்.நான் சாப்பிடும் போது என் தட்டில்தான் அம்மணி சாப்பிடுவது. மற்றவர்களுக்கு அது சோம்பேறித்தனம் போல் தான் தெரியும் என்றாலும் என்னாலும் அவளாலும் மட்டுமே உணரமுடியும் அதில் பொதிந்த பாசத்தை.

அப்பா அதிகம் எங்களுடன் ஒட்டுவதே இல்லை. அதிலும் என்னிடம் கொஞ்சம் கம்மிதான். வளர்ந்த பிள்ளையென்ற எண்ணமாக இருக்கலாம்.

நானோ என் விருப்பு வெறுப்புகளை என்னோடு புதைத்துக் கொள்ளும் ரகம். ஆதரவுக்கு கூட யாரையும் நாடி விடாத குணம். நட்புக்களிடையே கூட மறைமுக எல்லையை கொண்ட பிறவி. என் அழுகை முகத்தை என் அம்மாவை தவிர யாரும் பார்க்க இயலா அரிதாரப் பிள்ளை.

என்னை தெரிந்தோ தெரியாமலோ அவளின் கூட்டுக்குள் வைத்திருந்தாள் நீலு. வம்புச் சண்டையிட்டே உயிர்ப்பித்த அன்னையவள். அவளுக்கு நான் அன்னையாய் எனக்கு அவள் அன்னையாய் இருந்து வந்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.

நேற்றை விட இன்று இந்த நொடி பிரிவின் வேதனை அதிகமாய் வலித்தது எனக்கு. வீட்டிற்கு போனதும் போன் செய்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

"வாணி" என்ற விவேக்கின் அழைப்பில் திரும்பிப் பார்த்தேன். சற்று தூரத்தில் நின்றிருந்தான் அவன். திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன் அவனை நோக்கி.

"எதுக்கு கூப்பிட்டீங்க?"

"வீட்டுக்கு போகலாம்"

"நீங்க முன்னாடி போங்க. நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்."

"இல்ல! அப்பா போன் பண்ணாங்க. மலர் எழுந்ததும் உன்ன கேட்டு அழறாளாம்."

"உங்க போன்தாங்க"

"வீட்டுக்கு தான போகப்போறோம்."

"ப்ச்! அது வரைக்கும் குழந்தைய அழ விடறதா. குடுங்க போனை "

விவேக் அவன் அப்பாவிற்கு அழைத்து" அப்பா வாணி மலருகிட்ட பேசணும்னு சொன்னாங்க. "

"ங்க....வா! ரொம்பத் தான் மரியாதை" எனக்குள் முனுமுனுத்தேன்.

அவன் அலைபேசியை என்னிடம் நீட்ட வாங்கிக் கொண்டு முன்னால் நடந்தேன்.

"அம்முக்குட்டி எழுந்தாச்சா? மம் குடிச்சீங்களா? பிரஸ் பண்ணிங்களா?" பேசிக்கொண்டே வீடு நோக்கி நடந்தேன்.

போனில் கவனம் வைத்து நடந்ததில் இரண்டாம் முறையாய் வாரி விழும் சம்பவத்தில் இருந்து கைபற்றி காப்பாற்றினான் விவேக்.

என் மணிக்கட்டை அவன் கை இறுக்கமாய் பற்றியிருக்க அவன் முகமோ முறைப்பாய் என்னை நோக்கியே இருந்தது. அந்த அடர்ந்த புருவங்களுக்கு கீழே இருந்த கண்கள் தீனமாய் என்னை முறைத்ததில் லேசாய் சில்லிட்டது எனக்கு.

என் காதில இருந்த போனை வெடுக்கென பிடுங்கியவன் "குட்டிமா அம்மா வீட்டுக்கு வந்ததும் பேசுவீங்களாம்" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்திருந்தான்.

"என்ன கவனம் உனக்கு. பாதைல பார்வை வச்சு நடக்க மாட்டியா? எதிலும் அசால்ட்டு. இப்பயாச்சும் பார்த்துப்போ முன்னாடி" என்று சுள்ளென விழ அவன் கையை உதறிக் கொண்டு அப்படியே வரப்பில் அமர்ந்து விட்டேன்.

"நானொன்னும் வரல. நீங்க போங்க."என்றேன் கோவமாய்.

"ப்ச்..இதுக்குத் தான் வாயே தொறக்கறது இல்ல." அவன் முனகியது நன்றாக எனக்குக் கேட்டது.

"தொறக்க வேண்டாமே. எலக்ட்ரானிக் பூட்டு வாங்கி பூட்டி கூட வச்சுக்குங்க. யார் வேண்டாம்னா. இவ்ளோ நாள் ஒத்த வார்த்த கூட பேசாதவங்க இனியும் ஏன் பேசனுங்கறேன்." கொஞ்சம் சத்தமாகவே முனுமுனுத்தேன்.அவன் காதில் நன்றாய் விழுந்திருக்கும்.

சிறிது நேரம் அவனிடம் பேச்சே இல்லை. பிறகு" மலர் வெய்ட் பண்ணுவா. சீக்கிரம் வா" என்று சொல்லிவிட்டு அவன் செல்ல சிறிது இடைவெளி விட்டு நானும் அவன் பின்னே செல்ல ஆரம்பித்தேன்.

"மலருக்காகவே வாழ்க்கை முழுதும் இவன் பின்னயே செல்லும் நிலைதான் போல எனக்கு"

மெளனமாய் இடைவெளிகள்
மனதுக்கு பாரமாய் மௌனங்கள்
நிராசையாய் மனது
முடிவிலியாய் நிராசைகள்
அன்பு வேண்டும் முடிவிலியாய்
அவனின் அன்பே நிரந்தரமாய்!!
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN