பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 9பகுதி

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சங்கு பூ


சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் கருவிளை மலரை இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர். தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றம் தருவதால் இதனை இவ்வாறு கூறுகின்றனர். ஏழு வண்ணங்களில் ஒன்றான நீலநிறத்தைப் பஞ்சவண்ணங்களில் ஒன்றாகக் காணும்போது கருமை எனக் கொள்வர். இந்த வகையில் இது கரிய விளைப்பூ.குன்றத்து மகளிர் குவித்து விளையாடிய பூக்களில் இதுவும் ஒன்று.

இலங்கையில் இதனை நீல காக்கணை பூ என்ற பெயரால் அழைப்பர்.

சங்குப்பூ பல்வேறு வண்ணங்களில் பூக்கும். கருவிளை நீலநிறத்தில் மட்டும் பூக்கும் அதன் வேறு இனம்.

கருவிளை என்னும் இந்தப் பூ மணிப் பூங் கருவிளை என்று இந்தப் பூ விளக்கப்படுவதால் இந்தப் பூ மணிநிறம் கொண்டது எனத் தெரியவருகிறது. மணிநிறம் என்பது நீலநிறம். இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடி அணியாக்கிக் கொண்ட 99 பூக்களில் ஒன்று.[1]
மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும்.[2]
மயில்-பீலியின் கண் போல் இருக்கும்.[3]
கண்ணைப்போல் இருக்கும்.[4]
கண்ணைப் போல் மலரும்.[5][6]
வெண்ணிறப் பகன்றை மலரின் நிறத்தோடு மாறுபட்ட நிறம் கொண்டது.[7

பூ 9

"ஏங்க என்னங்க இப்படியே அமைதியா இருந்தா நான் என்னத்த சொல்றது.... எனக்கு இதெல்லாம் நல்லதா படல.. வருஷம் தொடங்கியதுல இருந்து இந்த புள்ளைக்கு நேரமே சரியில்லை... அன்னைக்கு என்னடான்னா, கோவிலுக்கு போனவ தொலைஞ்சு போய் மறுபடி கிடைச்சா... இப்போ அது முடிஞ்சு முழுசா ஒரு வாரம் கூட ஆகல, கால உடைச்சிகிட்டு வந்து படுத்து இருக்கா... எனக்கு நினைக்க , நினைக்க பயமா இருக்கு புள்ளையோட ஜாதகத்தை ஒரு எட்டு நம்ம கோதண்டராம ஜோசியர் கிட்ட காட்டிட்டு வருவோமா??" என்றார் மரகதம்.

மருந்தின் வீரியத்தால் தூங்கும் மகளின் தலையை பரிவாக கோதியவர் "அட படிக்கிற புள்ள அப்படி துருதுருன்னு தான் இருக்கும்... இதுக்கெல்லாம் ஜாதகத்தை எடுத்துட்டு ஓடுவியா??? அதான் இப்போ நல்லா இருக்காலே இதையெல்லாம் பெரிசாக்காதே விடு மரகதம்" என்றார்.

"அதெப்படி அப்படியே விட முடியும் அது என்னவோ ஏதோ நாமும் நாளும் பார்த்து தான் ஆகணும்... ஏதாவது பரிகாரம் இருந்தாலும் பண்ணிடலாம். நாளை பின்ன ஒரு வீட்டுக்கு வாழ போற பொண்ணு இப்படி கால கை ஒடச்சிக்கிட்டு வந்து நின்னா பரவாயில்லை... வேற ஏதாவது ஆகி இருந்தா நாம என்ன செய்தாலும் வருமா? சொல்லுங்க?" என்று மனைவி எதை எதையோ பேசி கிடுக்கிப்பிடி போடவும் "சரி" என்று வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்ட சௌந்தரலிங்கம் தேவாவின் தலையை வருடியபடியே "புள்ள சாப்பிட்டுதா??" என்றவர் "அப்புறம் நம்ம சந்திரன் ஃபோன் பண்ணானா?" என்றார் பெரிய மகனை பற்றியும் அறிந்து கொள்ள.

"ம் பண்ணான்ங்க சாயந்தரம். ஒரு நேரம் எப்பவும் பண்ற நேரத்துல பண்ணான்... சின்னவளுக்கு அடிப்பட்டுச்சுன்னு தெரிஞ்சதும் நாலு அஞ்சு தடவை பண்ணி அவளை பத்தி கேட்டுக்கிட்டே இருந்தான்... இதோ இப்போ கூட நீங்க வரமுன்னாடி தான் ஃபோன் பண்ணி வச்சான். அவ மேல கொள்ள பாசம் வச்சு இருக்கான் இந்த பையன் எப்படியும் இந்த வாரம் லீவுக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டான்." என்று ஜெயசந்திரனை பற்றி கூறியவர் மகளை பற்றியும் பேச ஆரம்பித்தார்.

"அவதான் பசி பொறுக்க மாட்டாளே வந்தவுடனே சாப்பிட்டு தான் தூங்கினா... இந்த முறையும் அந்த விசாகன் தம்பி தான் இவளை நல்லபடியா வீடு கொண்டு வந்து சேர்த்தது. ரொம்ப தங்கமான பொறுப்பான புள்ள. நாம ஏன் இதையெல்லாம் செய்யனும்னு போகாம நல்லது செய்ற மனசு யாருக்கு வரும்" என்று அவனை புகழ்ந்து பேசிட

"ஆமா மரகதம் ஊருக்குள்ள விசாரிச்ச வரையிலும் ஒரு குறையும் சொல்றா போல இல்ல. என்ன அந்த தம்பி மாமன்காரன் தான் ஒரு மாதிரியாம். மத்தபடி குடும்பம் பார்த்தா ரொம்ப அருமை பெருமையான குடும்பமா தான் இருக்கு. என்ன நம்ம சமூகம் இல்ல" என்றார் ஒரு மன தாங்களாக.

அவர் அவ்வாறு கூறியதும் "அவர் எந்த சமூகமா இருந்தா உங்களுக்கு என்ன? பொண்ணா தரப்போறீங்க! இந்த காலத்துல போய் இது எல்லாம் பாத்துக்கிட்டு" என்று மரகதம் எந்த வாய் முகூர்த்தத்தில் கூறினாரோ அதுவே பலிக்கும் காலம் வெகு விரைவில் வரப்போகிறது என்று அறியாமல் போயினர் அந்த தம்பதியினர். தன் பெண் காலை உடைத்துக் கொள்ள காரணமானவனே அவளின் கரம் பிடிக்க போகும் நாயகன் என விரைவில் அறிந்து கொள்வார்களா அந்த ஆதர்சன தம்பதிகள்.

வெண்மேகங்களின் இடையினில் சூரியக் கதிர்கள் பூமியில் தன் ஒளி கதிர்களை வீசி காலைப் பொழுதை அழகாக புலர செய்ய படுக்கையில் புரண்ட அவளின் கால் வலி எடுக்க "ஸ்.... ஆ.. அம்மா" என்று ஒலி எழுப்பியபடி மெத்தையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் தேவா....

"என்னடா கருமம் இது... இப்படி வலி உயிர் போகுது... காலு அவ்வளவு தானா கால் உடைஞ்சு போச்சு!! அய்யோ நம்மாள இனி நடக்க முடியாத! கடவுளே இது என்ன எனக்கு வந்த சோதனை!!! உன்னை மலை போல நம்பி இருந்தேனே என்னை இப்படி கை விட்டுட்டியே முனியாண்டி.... கருப்பண்ண சாமி" என்று கடவுளின் பெயர்களை வரிசையாக கூறியவள்

"அந்த சிடுமூஞ்சிய.. ச்சே ச்சே... எவ்வளவு அழகா இருக்காரு இனி சிடுமூஞ்சி கட்" என்றவள் "அழகன்.. ப்ச். இதுவும் ஏதோ போலவே இருக்கே. நோ இதுவும் வேணாம் வேற எப்படி ... கூப்பிடலாம். ஹீரோ பார்க்க ஒரு ஹீரோ மாதிரி தான் இருக்கார். அப்புறம் என்ன ஹீரோன்னே கூப்பிடலாம்... நாம என்ன எல்லோரும் பார்க்கும் படியும் கூப்பிட போறோம். அவருக்கு மட்டும் கேட்கும் படியா தான கூப்பிட போறேன். மனசுக்குள்ள தானே கூப்பிட போறேன்" என்று தனக்கு தானே ஒன்றை கூறி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து ஹாலுக்கு வர "அப்பா... ஸ் .. ஆ..." வலியில் அனத்தியபடியே வந்து அமர்ந்தாள்

மகளின் சத்தத்தில் உள்ளே வந்த மரகதம் "எழுந்திட்டியா தேவா... இப்ப எப்படி இருக்கு வலி??" என்று பரிவுடன் கேட்கவும்.

வழக்கமான துடுக்குத்தனம் தலை தூக்க "பொண்ணுக்கு முடியலன்னு படுத்து இருக்கா ஒரு பெட் காஃபியாவது உண்டா???" என்று தாயை வாரியவளை முறைத்த மரகதத்தின் முறைப்பில் அடங்கியவள் "சரி சரி" என்றபடியே "முடியலமா காலு பயங்கரமா வலிக்குது. நான் நினைக்கிறேன் காலு உடைஞ்சு போச்சின்னு..." என்று கூறியதுமே

"அடி வாயில ஒன்னு போட்டேன்னா இந்த மாதிரி பிரச்சனைக்கு எல்லாம் இடமே இருக்காது. காலங்காத்தால பேசுற பேச்சை பாரு. ஒரு சின்ன அடிக்கு ஊரையே ஒன்னு கூட்டிவைச்சி இருக்க..." என்று அவளை வறுத்தவர் "அப்படியே கை தாங்களா என்னை பிடிச்சு வா" என்று அவள் எழுந்து கொள்ள உதவியவர் அவளுக்கு தேவையானதை செய்ததும் ஹாலில் அமரவைத்து காலை உணவினை கொடுத்து "இதை சாப்பிடு இதோ வர்றேன்" என்று எழுந்து சென்றவர் கையில் ஃபோனுடன் வந்தார்.

"இந்தா அண்ணன் பேசனுமா நேத்துல இருந்து ஃபோன் அடிச்சிக்கிட்டு இருக்கான்". என்று அவளிடத்தில் நீட்ட "ஏம்மா அவன்ட சொல்லிட்டியா?" என்றவள் அன்னையை முறைத்திட

"என்னை ஏண்டி இப்ப முறைக்கிற? நேத்துல இருந்து ஃபோன போடுறான் என்னத்தை மறைக்க சொல்லுற?" என்றபடி "புடி பேசு" என்று கொடுக்க

அவன் எண்களை அழுத்தி காதில் வைத்தவள் அவனுக்காக காத்திருக்க "ஹலோ அம்மா" என்றான் ஜெயசந்தரன்.

"டேய் அண்ணா நான் தேவா" என்றதும்

"உனக்கு அறிவு இருக்கா இல்லையா தேவா... இப்படித்தான் கவனிக்காம பஸ் ஏறுவியா!!! ஒவ்வொரு நாளும் நீ என்ன பண்ணிட்டு வருவியோன்னு பயப்பட வைக்கிற" என்று அந்த பக்கம் கடுகடுத்தான்.

அண்ணனின் வார்த்தைகள் தன் மேல் இருக்கும் அன்பினால் என்று அறிந்து அவன் கவனம் கலையும் வித்தை தெரிந்து வைத்திருந்தவள் "நீ என்னை திட்ட தான் கூப்பிட சொன்னியா.... நானே கால் வலிக்குதுன்னு அழுதுட்டு இருக்கேன்" என்றதுமே அண்ணனின் மனது அப்படியே பாகாய் உருகி "அம்மு ரொம்ப வலிக்குதா மா" என்றான்.

"ஆமா கால் கீழே வைக்கவே முடியல... பயங்கரமா வலிக்குது ஒரு பக்கம் வேற வீங்கி போய் கிடக்கு... இதுல உன் திட்டு வேற" என்று கூறிட

"இதுக்கு தான் பார்த்து போடான்னு சொல்றது. இப்போ பாரு யாரு வலியை அனுபவிக்கிறது தங்கம்... எங்கே எனக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பு நான் பாக்கனும்" என்றதும்

"எங்கே ஃபோட்டோ எடுக்கறது அம்மாவோட ஹைதர் அலி காலத்து ஃபோன்ல... நம்ம அப்பா வெளியே போய் இருக்கார் அவர் வந்ததும் ஃபோட்டோ எடுத்து உனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புறேன். ஆமா நீ எப்போ ஊருக்கு வர்ற???. உன்னை பாக்கனும் போல இருக்கு ண்ணா" என்றாள் அன்புடன்.

"என் தங்கத்தை பார்க்க இந்த வாரமே வந்துடுறேன்..." என்றிட "ஆமா எனக்கு மொபைல் வாங்குறன்னு தானே சொன்ன எப்போ வாங்கி தருவ" என்று சலுகையாக கேட்க

"இப்போ அது ஒண்ணுதான் டி உனக்கு குறைச்சல்" என்றவர் "போதும் யா அவ கேட்டதுலாம் இப்போ எதுவும் வேண்டாம் உங்க அய்யாவுக்கும் இது தெரிஞ்சா திட்டுவார்" என்று மரகதம் கூறிட அவள் பாவமாய் முகம் வைத்துக் கொண்டு வாடினால் போல் அண்ணா "ப்ளீஸ்" என கெஞ்சவும்

"நீ கவலையே படாத செல்லம்மா. நான் வரும்போது உனக்கான பொருள் உன்னிடம் இருக்கும்" என்று வாக்கு கொடுத்து அவளை சமாதான படுத்தியவன் சிறிது நேரம் அன்னையிடம் பேசிய பின் ஃபோனை அணைத்தான்.

ஜெயச்சந்திரனுக்கு தனக்கு பின் 7 வருடங்களுக்கு பிறகு பிறந்த தேவசேனாவின் மேல் கொள்ளை பிரியம் வைத்திருந்தான். அண்ணன் என்பதை காட்டிலும் இன்னொரு தந்தையை போலவே அன்பை பொழிந்தான். எல்லா அண்ணன்களை போல அதட்ட ஆரம்பித்தாலும் தங்கையின் சிறு சுணக்கத்தை அவள் முகத்தில் கண்டாலும் அப்படியே உருகி விடுவான். அத்தனை பிரியம் தங்கையின் மேல். அதனாலேயே அவள் பஸ்ஸை தவற விட்டு அவள் வீடு திரும்பியதை சொல்ல வேண்டாம் என்று மரகதத்திடம் சௌந்தரலிங்கம் கூறியிருந்தார். ஆனால் நேற்றிரவு அவளிடம் பேச முடியாமல் போனதும் 'என்ன என்ன' என்று தோண்டி துருவி அன்னையிடம் விஷயத்தை வாங்கி விட்டவனுக்கு இப்போது தங்கையை காண வேண்டும் என்று ஆவல் வர அவனால் வர முடியாத சூழ்நிலையில் இருப்பதால் அந்த வார விடுமுறையில் வருவதாக அறிவித்து இருந்தான்.

___

உச்சி வெயிலையும் பாராமல் நிலத்தில் இறங்கி வேலை பார்த்து கொண்டு இருக்கும் ஆட்களுக்கு குடிக்க மோருடன் வந்தார் தில்லைநாயகி.

அவரை கண்டதும் வேலை இன்னும் சுறுசுறுப்பாக தொடர "சித்த இந்த மோரையும் குடிச்சுப்புட்டு வேலை பாருங்க" என்றபடி பக்கத்தில் இருந்த வரப்பின் மீது அமர்ந்தார்.

டான்னு மணி 12 அடிக்க கூடாது விசாகனின் வீட்டில் இருந்து ஏதாவது ஒன்று வந்துவிடும் பசியாறுவதற்கு. உச்சி வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு வயிறும் குளிற வேண்டுமே என்று தில்லைநாயகி தான் தினமும் இதை செய்து வருகிறார். வரப்பின் மீது அமர்ந்தவர் அங்கே வேலையில் ஈடுபட்டு இருப்பவர்களிடம் அவர்களை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.

திடீரென "அம்மா" என்ற குரல் காதில் விழவும் ஒரு நிமிடம் சிலிர்த்து அடங்கிய தேகத்தில் இருந்தே தெரிந்தது அது யார் என்று இருந்தும் முகத்தையும் மனதையும் விரைப்பாக வைத்து வைத்துக் கொண்டவரை பார்க்க பேரனுக்கு இதில் நான் என்றும் சலைத்தவள் இல்லை என்பது போல் இருந்தது.

அதே இறுகிய குரலுடன் "கண்டகண்டவங்களுக்கு எல்லாம் என்னை அம்மான்னு கூப்பிட எந்த உரிமையும் இல்லை... என் புள்ள ஒருத்தனுக்கு மட்டும் தான் என்னை கூப்பிட உரிமை உண்டு. அதுவும் இப்போ இல்லைன்னு ஆகி போச்சு" என்றபடி புடவை தலைப்பை உதறித் தோளில் போட்டவர்.

"நீ கொடுத்துட்டு வா புள்ள நான் போறேன்" என்று நடையை துரிதப்படுத்தி சென்றார் அவர் பின்னாடியே ஓடிய அலமேலு "கொஞ்சம்... கொஞ்சம் நில்லுமா..." என்றார் அலமேலு அழுகையுடன்

வேகமாக நடை பயின்றவர் அலமேலுவின் அழும் குரல் கேட்கவும் நடை சற்று மட்டுப்பட்டு நின்றது. "சொல்ல வந்ததை சொல்லிட்டு போ" என்ற ரீதியில்.

"அம்மா" என்று மீண்டும் அழைக்க

"இங்க பாரு. இன்னொரு முறை அம்மான்னு கூப்பிட்ட அறையும் அறையில் செவில் அந்த பக்கம் திரும்பும். நீ எப்போ என்னை கட்டினவர் மானத்தை வாங்கிட்டு போனியோ, அப்பவே என்னை பொறுத்தவரை நீ செத்து போயிட்ட. இந்த அம்மா மக என்ற உறவு முறையெல்லாம் செத்துப்போச்சி. எதுக்கு வந்தியோ அதை சொல்லிட்டு இடத்தை காலி பண்ணு" என்று ஈட்டியாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.

தாயின் ஒதுக்கம் தெரிந்தது தான் என்றாலும் எத்தனை வருடம் தான் அதை தாங்கி கொள்வது என்று வருத்தப்பட்டு கண்களிலிருந்து கண்ணீர் வழிய தான் செய்த தவறுக்காக அந்நாளில் எத்தனை முறை தான் கண்ணீர் வடிப்பார் அவர்.

'பூ போல் இருந்த தாயின் மனதை கல் போன்று இறுக்கியது என் செயல் தானே இதை ஏற்கத்தான் வேண்டும்' என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டவர் "அது அம்மா அவர் ஏதோதோ சொல்றார் எனக்கு பயமா இருக்கு" எனவும்.

"அவரா? யார் அவர்?? ஓ... உன் புருஷன் அந்த கேடுகெட்டவனா? அவன் என்ன சொன்னான் இன்னும் என் பேரனை வதைக்க ஏதாவது திட்டம் போட்டு வச்சிருக்கானா??" என்று கூறவும் ஒரு முறை திடுக்கிட்டாலும் அது உண்மை என்ற பட்சத்தில் கண்ணீர் பெருகியது.


"அது அவர் மனசுல ஏதோ ஓடுது. நம்ம அமுதாவ விசாகனுக்கு கட்டி வைக்க ஏதோ திட்டம் போடுறாரு. இதுல விசாகனோட வாழ்க்கையில் என் பொண்ணு வர்றது எனக்கு சந்தோஷமே ஆனாலும் அதுல விசாகனுக்கு பெரிய குழி தான் வெட்டி வச்சு இருப்பாரு"

இதை கேட்ட தில்லைக்கு பெருத்த அதிர்ச்சி என்றாலும் அமுதாவின் குணம் அவர் அறிந்ததே பேசி பழக வில்லை என்றாலும் சிறு வயதில் அங்கும் இங்கும் விளையாடும் போது பார்த்து இருக்கிறார். மகள் வயிற்று பிள்ளை என்ற பாசம் மனதின் ஓரத்தில் ஒட்டி இருந்தாலும் இரண்டு உயிரை வாங்கிய அவளின் பெற்றோர்கள் மேல் வைத்த வெறுப்பு அதை வெளிப்படுத்த முனையவில்லை. இன்று அலமேலுவின் வாயால் அவளுடைய கணவனின் பேராசையை கேட்டதில் தில்லை நாயகியின் மனம் இனி வேறு ஒரு பெண் தான் தன் பேரனையும் அவன் சொத்தையும் ஆள வேண்டும் என முடிவே செய்து விட்டார்.


அப்பன் செய்தது தப்புதான் அதற்காக மகளை தண்டிக்கலாமா என்று நினைக்கலாம் ஆனால் மகள் வயிற்று பெண் தானே என்று கட்டி வைத்தாள் அப்பனின் சுயரூபத்தால் அவளுடைய வாழ்வும் சரி பேரனுடைய வாழ்வும் சரி சூனியமாக போகும் என்று தான் இப்படி ஒரு முடிவை எடுத்து இருந்தார் அந்த பெரிய மனுஷி.


"விஷயம் அவ்வளவு தானே???" என்பது போல் மகளின் முகத்தை திரும்பியும் பாராது விறுவிறுவென சென்றவர் முதலில் அழைத்தது சோதிடரை தான்.


"அம்மா வரச்சொன்னிங்களாம்" என்று சொல்லியபடி வந்து அமர்ந்தார் அவர்

"ஆமா சாமி. இந்த வீட்டுலயும் ஒரு நல்லது நடக்குமான்னு பார்க்க தான்" என்று கூறியவர் கையிலிருந்த பேரனின் ஜாதகத்தை எடுத்து அவரிடம் நீட்டினார்.

"இது என் பேரனோட ஜாதகம். என் ராசாவுக்கு நல்ல குணமா அவன் மனசு நோகாம நடக்குற பொண்ணு அமையனும்" என்று சொல்லிக்கொண்டு இருக்க.

ஜாதகக் கட்டங்களை கணித்த ஜோசியர் "நல்ல பலம் உள்ள ஜாதக அமைப்பு அம்மா. இன்னும் ஒரு வருடத்தில் கல்யாணம் அமைந்திடும்..." என்றதும் தில்லையின் முகத்தில் அத்தனை பிரகாசம் "ரொம்ப சந்தோஷம் சாமி" என்று மனதார சொல்ல

"ஆனா பாருங்க பெரும் சிக்கலா தான் நடக்கும்" என்றதும் முகம் பொலிவிழந்து விட "பரிகாரம் இருக்கா சாமி??? அது மாதிரி ஏதாவது இருந்தா சொல்லுங்களேன். நான் பண்ணுறேன்" என்று கேட்க.

"என்ன நினைத்தாலும் நடப்பது நடந்தே ஆகும் மா. ஆனாலும் பெருசா வர்ற கஷ்டம் சின்னதா போகவும் வாய்ப்பு இருக்கு. உங்க மன அமைதிக்காக வெள்ளிக்கிழமை அம்பாள் கோவிலுக்கு மாவிளக்கு போடுங்க. எல்லாம் நல்லபடியாக முடியும்" என்றவர் தன் தட்சணையை வாங்கி கொண்டு கிளம்பி இருந்தார்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN