ஆழி சூழ்ந்த உலகிலே...‌‌1

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் லீப் ஆண்டு அது..., நேரம் பிப்ரவரி 29 ம் நாள் இரவு ஒருமணியை தாண்டி இருந்தது.
இன்று அவளுக்கு பிறந்தநாள். அவளின் பிறந்தநாள் பிறந்து ஒரு மணி நேரம் சென்றுவிட்டது... பிப்ரவரி 29 வந்தால் என்ன வராவிட்டால் என்ன... என்று வருடா வருடம் தவறாமல் அந்த மாத இறுதியில் பிறந்த நாள் விழாவை அவர்கள் கொண்டாடுவதுண்டு. லீப் ஆண்டு என்றால் அவ்வளவு தான்... கொண்டாட்டம் கலை கட்டும்...
ஆனால் இன்றோ புது கணவன் அருகில் குப்புற படுத்துக் கொண்டு தூங்கிக்கொண்டு இருக்க யாராவது வாழ்த்து கூற அழைப்பார்களா என தன் கைப்பேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
சென்ற வருடம் அவளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது யாராவது 'அடுத்த வருடம் நீ தனியாக அமர்ந்து உன் கைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருப்பாய்...' என கூறி இருந்தால் அவரை ஏற இறங்க பார்த்து வைத்து இருப்பாள்...
ஸ்ரீ சிவசக்தி கல்வி குழுமத்தின் இளவரசி அவள். தமிழகத்தில் பல கிளைகள் கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு இளவரசி அவள். ஆனால் இன்றோ....? எல்லாம் என்னால் எழுதப்பட்ட என் தலையெழுத்து... என நொந்து கொண்டாள். அதைத்தவிர வேறு எதையும் அவளால் செய்ய இயலவில்லை...
"அவன் கூட கால் பன்னல... அவதார் குட்டி சொன்னபடியே என்ன தண்ணி தெளித்து விட்டுடுச்சா....?" என மனதில் அவனை திட்டிக்கொண்டே தன் நகங்களை கடித்தபடி இருந்தவள் தன் கணவன் புரண்டு படுப்பதை பார்த்துவிட்டு கப்சிப் என படுத்து கொண்டு தன் கண்களை மூடி கொண்டாள். பிறந்தநாள் என்று கூறினாள் அதற்கும் எதாவது கூறுவான் என்ற பயம் அவளுக்குள்.
'நைட் டியூட்டியா அவனுக்கு... ஏன் இன்னும் விஷ் பன்னல...' என்று கண்களை மூடியபடி சிந்தித்தவளுக்கு கண்களை கறித்துக்கொண்டு வரும் போல் இருக்க அவனை கடிந்துக்கொண்டு அதை அடக்கியவளை மெல்ல நித்திரை ஆட்கொண்டது.
தன் கணவன் வாழ்த்த வேண்டும் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் வாழ்த்து கூற வேண்டும் என மிகவும் எதிர்பார்த்தாள். அவனின் துள்ளல் குரலை கேட்க ஆசைப்பட்டாள்....
அவன்... சக்தி சரவணன். சிவரஞ்சனிக்கு பிறகு மூன்று நிமிடங்கள் பொறுத்து பிறந்தவன். அவர்களின் தாயின் வயிற்றில் இருந்தே அவளின் கூடவே இருப்பவன்... அவளுக்கு எல்லாமுமானவன்.
அவனுக்கும் இன்று பிறந்தநாள் தான். அவனும் சிவாவே கால் செய்யட்டும் என்று காத்துக்கொண்டு தான் இருக்கிறான். எப்பொழுதும் அவன் தான் சிவரஞ்சனியிடம் முதலில் வாழ்த்துகளை கூறுவான். ஆனால் இன்று திருமணமாகி முழுதாக இருவாரம் கூட ஆகாத தன் சகோதரியிடம் எப்படி இரவு நேரத்தில் பேசுவது... என்று சக்தி தயங்கித் கொண்டு இருந்தான்‌.
'இரவு வேலையில் பேசி எதற்கு என் தூக்கத்தை கலைக்கிறாய்...' என்று தன் கணவன் எரிந்து விழுவானோ என்ற பயத்தில் அவளும் அமைதியா இருந்தாள்.
அவள் அழைப்பிற்காக பொறுமையாக காத்திருந்தவன் நேரம் ஆக ஆக அவனை கோபம் கொள்ள ஆரம்பித்தது. "என்ன விட அவர் தான் உனக்கு பெருசா போயிட்டாரு இல்ல... உன்ன என்ன பன்னரேன் பாரு..." என நினைத்தவன் காலை ஐந்து மணிக்கே அவளின் புகுந்த வீட்டின் வாசலில் நின்றிருந்தான்.
அது கொஞ்சம் வசதியானவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு... சிவரஞ்சனியின் புகுந்த வீடு மூன்று படுக்கை அறைகள் கொண்டு சற்று தாராளமாகவே இருந்தது. ஆனால் அவளின் வீட்டை ஒப்பிடும்போது அது சிறியது தான்... ஆனால் ஒருநாளும் அவள் இதை ஒப்பிட்டு பார்த்தது இல்லை. அவள் ஒப்பிட்டு பார்க்கும் ஒரே விஷயம் கணவனின் அன்பையும் தன் உடன்பிறப்பின் அன்பையும் மட்டுமே...‌ சகோதரனின் கைக்கொள்ளா அன்பில் திளைத்திருந்தவள் தற்போது கணவனின் கடுமையில் அன்பிற்காக ஏங்கியவள் ஆகினாள்.
அவளின் மாமனார் ராஜரத்தினம் மற்றும் மாமியார் லட்சுமியை காலை ஐந்து மணிக்கு அலைபேசியில் அழைத்து கதவை திறக்க கூறிய சக்தி, சிவரஞ்சனி இன்னும் எழவில்லை என்றதும் அவளின் அறைக்கதவை தட்டினான்.
அவளின் மாமனார் வங்கி மேலாளர். இன்னும் இரண்டு வருடங்களில் பணி ஓய்வு பெற்று விடுவார். மாமியார் தொடக்கப்பள்ளி ‌ஆசிரியை. இருவரும் கண்டிப்பு மட்டுமல்லாது பாசமானவர்கள் கூட...
ஆனால் அவர்களின் கண்டிப்பு பாசம் எதுவும் அவளின் கணவனிடம் எடுபடாதது சிவரஞ்சனியின் முன்ஜென்ம பாவமோ என்னவோ‌... தங்கள் மருமகளை மகன் புறக்கணிக்கிறான், ஏற்றுக் கொள்ளவில்லை... என்று தெரிந்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். ஒரு பெண்ணின் வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கிவிட்டோமே என்ற குற்றவுணர்வு ஒரு புறமும் தன் மகன் மருமகளை நடத்தும் விதம் அறிந்தால் அவளின் குடும்பத்தினர் தன் மகனை என்ன செய்வார்களோ என்ற அச்சம் ஒருபுறமாக தவித்துக்கொண்டு இருந்தனர்....

சிவரஞ்சனி இன்னும் எழவில்லை என்றதும் அவளின் அறைக்கதவை தட்டியவன் அவளுக்காக காத்துக்கொண்டு இருக்க கதவை திறந்ததோ அர்ஜூன். அவளின் கணவன்.
அர்ஜூன் மீது எப்பொழுதும் சக்திக்கு மரியாதையும், நல்ல அபிப்பிராயம் உண்டு. பல ஆண்களை புறக்கணித்து விட்டு அவனின் குடும்பத்தாரால் தேர்ந்து எடுக்கப்பட்டவன். முக்கியமாக தன் உடன்பிறப்பின் கணவன். சக்திக்கு அவன் மேல் மரியாதை வர வேறு என்ன காரணம் வேண்டும்...
சிவாவின் குடும்பத்தாரை பொறுத்தவரையில் அர்ஜூன் திறமையானவன், அழகானவன், இருபத்தி ஒன்பது வயதிலேயே முன்னனி தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகிப்பவன், லட்சங்களில் சம்பளம் வாங்குபவன், முக்கியமாக பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஸ்ரீ சிவசக்தி பள்ளிக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவனாக வந்து பெருமை தேடி தந்தவன்... ஆனால் சிவரஞ்சனிக்கு ஹிட்லர், சிடு சிடு சின்ராசு, கடுவன் பூனை, ராட்சசன்.
" குட் மார்னிங் மாமா... சாரி டிஸ்டர்ப் பன்னிட்டனா..." என அன்று மலர்ந்த மலர் போல அவ்வளவு துள்ளலுடன் கேட்டவனை கண்டு சிறு புன்னகையுடன் பதில் கூறிய அர்ஜூனை கண்ட அவனின் பெற்றோருக்கு இந்த புன்னகை அதிசயமாக தான் இருந்தது. அதுவும் சிவரஞ்சனியின் சகோதரனிடம்... வியந்தார்கள்.
" இல்ல சக்தி... இது எழுந்திரிக்கிற டைம் தான்..." என விடை அளித்தவன் அவன் வந்த காரணம் அறியுமாதலால் அவனிடம் வாழ்த்துக்களை கூறியவன் பிறகு தன் அறைக்கு செல்ல வழி விட்டு நின்றான்...
வேறு யாராவது வாழ்த்து கூறி இருந்தால் காதை பொத்திக்கொண்டு இருப்பான். சிவா தான் முதலில் வாழ்த்த வேண்டும் என்று. ஆனால் இன்று அமைதியாக ஏற்றான். 'தன் வாயை நோண்டி முதல் வாழ்த்தை பெற்றுக்கொள்ளும் அவளுக்கே இவர் தான் முதலில் கூறி இருப்பார்...' என நினைத்தவனுக்கு வருத்தமாக இருந்தாலும் நிதர்சனம் இதுதான் என்று ஏற்றான்.
அவன்‌ வழி விட்டு நின்றதில் "சோ ஸ்வீட் மாமா நீங்க..." என்று கூறியவாரே உள்ளே நடந்தவன் அர்ஜூனுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை தர மறக்கவில்லை.
ஸ்ரீ சிவசக்தி பள்ளியில் படிக்கும் போது 'அண்ணா அண்ணா' என்று அழைத்துக்கொண்டு பின்னாலேயே சுற்றும் சக்தியிடம் இப்பொழுதும் தனி பாசம் இருந்தது அர்ஜூனுக்கு. சிவரஞ்சனியின் சகோதரன் என்ற சிறு வெறுப்பு இருந்தாலும் அவனை நேரில் கண்டால் எவ்வளவு முயன்றாலும் கோபத்தை வரவழைக்க முடியவில்லை. ஆனால் சிவரஞ்சனியை கண்டால் அவனுக்கு வருவது கோபம் கோபம் கோபம் மட்டுமே...
"கண்ணுக்கு மை அழகு...
கவிதைக்கு பொய் அழகு..." என விக்ரம் போல பாடிக்கொண்டே தூங்கி கொண்டு இருந்த சிவாவின் முகத்தில் கருமை நிற எழுதுகோலால் மீசை தாடி வரைந்தவன் "ஏய் பப்ளிமாஸ்..." என அவளை உலுக்க தூக்கத்திலும் அவனின் குரலை கண்டுகொண்டவள் "சக்தி... ப்ளீஸ்டா..." என்றபடி அவனின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
" பர்த்டே பேபி... எழுத்துருடி..." என்று அவளை உலுக்கியதும் நினைவு வநதவளாக சட்டென்று எழுந்து அமர்ந்தவள் அவன் சட்டையை ஒரு கையால் பிடித்து கொண்டு அவனை சரமாரியாக அடிக்க துவங்கினாள்.
*ஏன்டா நைட் கால் பன்னல‌..." என்று ஒவ்வொரு அடிக்கும் கூறியவள் அவனின் அடக்கப்பட்ட சிரிப்பை பார்த்து விட்டு ஏதோ வேலை பன்னி இருக்கான்... என்று நினைத்தவளின் கை தானாக அவளின் முகத்தை தொட்டு பாரத்தது. இது அவனின் வழக்கமான விளையாட்டு என்பதால் அவளின் கை அனிச்சையாக முகத்தை ஆராய்ந்தது.
அதுவரை அவளை பார்த்து சிரித்துக் கொண்டும் அவளின் அடிகளை தடுத்து கொண்டும் இருந்தவன் அவள் முகத்தை ஆராய அசந்த நேரம் பார்த்து கையோடு கொண்டு வந்த ஸ்னோ ஸ்பிரேவை அவள் தலை முழுவதும் அடித்து விட்டு ஓடினான். தன் தலையை வேகமாக ஒன்று பாதியுமாக சரி செய்துகொண்டே அவனை துரத்திக்கொண்டு வீடு முழுவதும் சுற்றியவள் அவன் கைகளில் சிக்கிய பிறகு அவன் முதுகில் இரண்டு அடி வைத்தவள் ஏதோ ஒன்று குறுகுறுக்க நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அர்ஜூனின் சிடுசிடு முகம் தான் தென்பட்டது. பிறகு பெட்டி பாம்பாய் அடங்கினாள். அவளுக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது. பிறந்தநாள் அதுவுமாக தனக்கு திட்டு உறுதி என்று...
அர்ஜூன் மட்டுமல்லாது அர்ஜூனின் தங்கை அர்ச்சனாவும் சிவரஞ்சனியை முறைத்து கொண்டு தான் இருந்தாள். தன் அன்பு அண்ணனின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு இவள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது அர்ச்சனாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சகோதரனை கண்டதும் சிவாவின் முகம் கொள்ளா சிரிப்பை கண்ட அர்ஜூனின் பெற்றோருக்கு எப்படி இருந்த பெண்னை தினமும் கண்ணீருக்குள்ளாக்கி விட்டானே என்று வருந்தினர்.
இரவு ஹோட்டலுக்கு செல்லலாம் என அனைவரையும் அழைத்து விட்டு சக்தி விடைபெற, அர்ஜூனும் அலுவலகம் செல்ல, அவனின் பெற்றோரும் வேலைக்கு செல்ல, அர்ச்சனா பள்ளிக்கு செல்ல, வீட்டில் தனித்து விடப்பட்டாள் சிவரஞ்சனி. திருமணம் ஆன இரண்டாம் நாளில் இருந்து இந்த வெறுமையை போக்க எதாவது வேலைக்கு செல்கிறேன் என்று கேட்டுகொண்டே தான் இருக்கிறாள். அவளின் கணவன் செவி சாய்த்தால் தானே...
என்றும் போல் இன்று வெறுமையாக இல்லை அவளுக்கு. சக்தி தன் வாழ்த்தை கூறிய பிறகு ஒன்றன் பின் ஒன்றாக அனைவரும் அவளை அலைபேசியில் பிடித்துக்கொட்டனர்... சக்தி கூறவேண்டாம் என கூறியும் அவளின் வீட்டார் இறவு நடைபெறவிருக்கும் பிரமாண்ட பார்ட்டிக்கு நாங்கள் வரவிருக்கிறோம் என்று கூறிவிட்டனர். அவளுக்கு அர்ஜூன் என்ன செய்வாரோ என்று கவலையாக இருந்தபோதிலும் தன் குடும்பத்தாரை சந்திக்க போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.
பிரிந்தே நாம்
வாழ்ந்திடும் போதிலும்
நினைவுகள் நம்மை
சேர்த்திடுமே
அழகாய் பூ பூத்திடவேண்டியே
வேர்கள் நீர் ஈர்திடுமே...
இன்னோர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம் தேவை...
யாரென்ன சொன்னாலும்
யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்....
 

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே...‌‌1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN