பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 20

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

மனதில் இருக்கும் குழப்பங்களை முகம் பிரதிபலித்து கொண்டு தான் இருந்தது. மூளை என்னவோ செயல் திட்டங்களை அடிக்கொரு தரம் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தும், தங்கையிடம் எவ்வாறு பேசுவது என்ற யோசனையோடே இருந்தான் ஜெயசந்திரன்.


அன்னையிடம் தலை வலி என்று காபியை வாங்கியவன் மர ஊஞ்சலில் அமர்ந்தவாறே தங்கையின் காதலை பற்றி எண்ணிக்கொண்டு இருக்க "அண்ணா என்ன யோசிச்சிட்டே இருக்க ஏதோ உனக்குன்னு இருக்கும் கொஞ்ச மூளையும் உருகி ஊத்திட போகுது" என்று அண்ணனை வம்பு பேசிக்கொண்டு முகத்தில் சிரிப்புடனே வந்து நின்றாள் தேவசேனா.


அவளின் வம்பு பேச்சிற்கு எதிர்வினையை உண்டாக்காமல் "ஒன்றுமில்லை" என்று ஊஞ்சலில் இருந்து எழுந்துக்கொண்டான் ஜெயசந்திரன்.


'என்ன ஆச்சு இவனுக்கு நாம வம்பு இழுத்தாலும் பேசாம போறான் ஒருவேளை நாம கவனமா இல்லாம விளையாட்டுதனமா இருக்கோம்னு கோவம் வந்து இருக்குமா? இனி அவன் கோவப்படுறா போல நடந்துக்கவே கூடாது' என்று மனதில் நினைத்தபடி ஊஞ்சலில் ஏறி அமர தன் கையில் இருந்த காயத்தை மறந்து அதையே வைத்து ஊணி அமர முயன்ற தேவா ஸ்…. ஆ… என்று வலியில் கத்திவிட்டாள்.


வெளியே செல்ல போனவன் தங்கையின் கத்தலில் "ஹேய் தேவா பாத்து கவனமா இருக்க மாட்டியா" என்று கடிந்துக்கொண்டு தேவாவின் கையை பிடித்து ஊஞ்சலில் அமர வைத்தவன் அவளை பாராமல் மீண்டும் வெளியே சென்று விட்டான். அண்ணனின் வினோத போக்கு அவளுக்கு எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை மாறாக தான் கவனம் இல்லாமல் இருப்பதால் தான் அண்ணன், தன் மீது கோவத்தை காட்டுகிறான் என்று எண்ணியவள் இனி தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.


'இவ இன்னும் சின்ன பொண்ணாவே இருக்காளே அவள பார்த்துக்க கூட அவளுக்கு தெரியல இதே லட்சணத்துல தான் இருக்கும் இவளோட காதலும்… முதல்ல அவனை தள்ளி வைக்கனும் அவனோட மனசுல இருந்து இவளை தூக்கி வீச வைச்சிட்டாலே தன்னால இவ அடங்கிடுவா' என்று முடிவை எடுத்தவன் அதன் படி செயல்பட ஆரம்பித்தான்.


வண்டியுடன் வெளியே செல்ல போனவனை நிறுத்திய சௌந்தரலிங்கம் "என்ன சந்திரா லீவு உறுதியாகிடுச்சில்ல "என்றார்.


"சாங்ஷன் ஆகிடுச்சி பா இப்போ தான் மெயில் செக் பண்ணேன் இன்னும் பத்து நாளைக்கு இங்க தான் இருப்பேன்". என்றவன் "அதுக்குள்ள நாம கோவிலுக்கு போறா மாதிரி பாத்துக்கோங்கப்பா" என்றான்.


"சரி பா நான் உங்க அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன். அப்புறம் நீ எங்க கிளம்பிட்ட" என்றார் சந்திரன் பைக்குடன் கிளம்பியதை பார்த்து.


"அது… சும்மா பிரெண்ட்ஸை பார்த்துட்டு வரேன் பா வந்ததுல இருந்து வெளியவே போகல" என்று கூறியவன் தந்தை தலை அசைக்கவும் விறுட்டென வெளியே சென்று விட்டான்.


நேராக தன் தந்தையின் தோட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தவன் தன்னிச்சையாக பள்ளிகூட வாசலில் பைக்கை நிறுத்தி இருந்தான்.


அந்திசாயும் நேரமாதலால் ஆட்கள் யாரும் அவ்வளவாக இருக்கவில்லை இருந்த ஒரிருவர் கூலியை வாங்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அன்று ஆலையில் வேலை இருப்பதாக சுந்தரனும் சீக்கிரமே கிளம்பி விட்டிருக்க விசாகன் மட்டுமே தனித்து இருந்தான். அவர்களும் செல்லட்டும் என்று காத்திருந்தவன் யாரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டே உள்ளே சென்றான் ஜெயசந்திரன்.


விசாகனை பார்த்த மறுகனமே ஜெயசந்திரனின் முகம் இறுகியது. அவனை விட்டு சற்று தள்ளியே நின்றவன் "என்ன வந்த வேலை செய்யறதை விட்டுட்டு ஊர் பொண்ணுங்களை மயக்குற வேலையை பாத்துக்கிட்டு இருக்குற…" என்றான் கோவமான அழுத்தம் நிறைந்த குரலில்.


"மயக்குறேனா?.... என்ன டா பொம்பள மாதிரி ஜாடையா பேசுற! எதுவா இருந்தாலும் நேரா பேசுடா?" என்று பதிலுக்கு விசாகனும் அவனுக்கு நான் கொஞ்சமும் சளைத்தவன் இல்லை என்ற ரீதியில் பேசிட,


"நான் ஏன் ஜாடையா பேசனும்... நேரா தானே சொல்றேன் செய்ற வேலை சிறப்பா செய்துட்டன்னு" என்றான் நக்கல் தோனியிலேயே சாமாதனம் என்பது மருந்திற்கும் இல்லை அவன் பேச்சில்.


அவன் பேச்சு விசாகனுக்கு கோபத்தை எழுப்பினாலும் அவன் தந்தையின் மேல் உள்ள மரியாதையால் கண்கள் இடுங்க அவனை பார்த்தவன் 'இனி இவன் கிட்ட பேசினா சல்லி பைசாவுக்கு பிரோயஜனம் இல்லை மண்டை முழுக்க கோபத்தோட நிக்குறான் பேச பேச கைகலப்பு ஆகும்' என்று உணர்ந்தவன் அமைதியாக அங்கிருந்து கிளம்பி செல்ல வண்டியினை நெருங்கினான்.


தான் பேச பேச விலகி ஓடும் விசாகனின் போக்கு கோபத்தை வரவழைக்க தனக்கு முடிவாய் ஒரு பதிலை கூறாமல் இங்கிருந்து செல்ல விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டவன் விசாகனின் பைக்கின் முன்னால் கை வைத்த அவனை தடுத்து நிறுத்தி, "என்ன உன்னோட உள் மனசுல இருக்க உண்மையை எல்லாம் செல்லிட்டேன்னு அதிர்ச்சியா இருக்கா உடனே கிளம்பிடுற?" என்றான் கிண்டலாக அது விசாகனின் கோவத்தை மேலும் அதிகபடுத்த


"நீ விஷயம் என்னன்னு சொல்லாம வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்க தேவையில்லாம வார்த்தையையும் விடுற, உன் அப்பாவுக்காக பாக்குறேன் மரியாதையா இங்கிருந்து போயிடு" என்று கர்ஜனையாய் குரல் வந்தது விசாகனிடம் இருந்து.


"அய்யயோ பயமா இருக்கே…" என்று வேடிக்கையாக கூறியவன் "இவரு பெரிய சண்டியரு உனக்கு மட்டும் தான் அடிக்க தெரியுமா? படிச்சி பட்டணத்துல இருக்கான் இவனுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சியா? நானும் கிராமத்தான் தான்டா… உனக்கு இருக்க அதே கோவமும் திமிரும் என்கிட்டயும் இருக்கு…" என்று சட்டையை மடித்து விட்டு வேட்டியை மடித்து கட்டி முன்னால் வந்தான் ஜெயசந்திரன்.


அவனின் பேச்சு எரிச்சலை கிளப்பிட தன்னையே குறற்வாளியாக சித்தரித்து பேசும் அவன் செய்கைகள் கண்டதும் தன் முன்னால் வந்து நின்ற ஜெயசந்திரனின் நெஞ்சில் கையை வைத்து நெட்டி தள்ளியவன் "உன் ரவுடிதனத்தை என்கிட்ட காட்டாதே உன்னை பார்த்து பயப்புடுறவன், இந்த ஊர்ல நிறைய பேர் இருப்பான் அவன் கிட்டபோய் உன் திமிர் தனத்தை காட்டு நல்லா கொடுத்து அனுப்புவான்" என்று பைக்கில் ஏறப் போக


தன் நெஞ்சில் கைவைத்து தள்ளவும் இரண்டு எட்டு பின்னால் சென்றவன் அதே போல அவனை நெட்டி நெட்டி தள்ளியபடியே "என்னடா என்ன பண்ணி என் தங்கச்சிய உன் பின்னாடி சுத்த வைச்சி இருக்க?... இதே வேலையா தான் ஊர் ஊருக்கும் பண்ணிட்டு திரியுரியாடா பொறுக்கி பையலே" என்று ஆத்திரத்தில் அவனை பார்த்து பேசிக்கொண்டே தள்ளி விட்டான்.


அதுவரையும் பொறுமை என்பதை இழுத்து பிடித்து இருந்தவன் ஜெயசந்திரனின் சொல்லில் விசாகனும் ஜெயசந்திரனின் சட்டையில் கை வைத்து "யார பார்த்துடா சொல்ற பொறுக்கி பையன்னு" என்று ஆத்திரம் மேலிட்டு கத்திட இதை சற்றும் எதிர்பாராத ஜெயசந்திரனும் விசாகனின் சட்டையை பற்றி இருந்தான்.


ஒருவருக்கொருவர் சட்டையை பற்றிக்கொண்டு கீழே புரண்டவர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ள முற்பட


"பண்றதையும் பண்ணிட்டு என்னடா கோவம் வேண்டி கிடக்கு உனக்கு" என்று ஜெயசந்திரன் விசாகனை அடித்திட அவனை திருப்பி அடித்து இருந்தான் விசாகன்.


வாய்பேச்சில் தொடங்கிய சண்டை அடிதடியில் முடிய இருபக்கமும் சிறிது சேதாரம் இருக்கவே செய்தது. தலை கலைந்து முகத்தில் அங்காங்கே சிறு காயம் கைகளிலும் காயம் ஏற்பட்டு இருந்தது இருவருக்கும். சட்டை முழுவதும் மண்புழுதியை பூசிக்கொண்டு எழுந்து நின்றிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் விடிவித்துக்கொள்ள போராடிக்கொண்டே


"என்கிட்ட சொல்றத விட்டுட்டு உன் தங்கச்சிக்கிட்ட முதல்ல போய் சொல்லுடா பரதேசி பயலே... அவ பின்னாடி நான் சுத்துறேனா இல்ல என் பின்னாடி அவ சுத்துறாளா... அவளை அடக்கறதை விட்டு என்னமோ என்கிட்ட வந்து பேசி உன் வெட்டி வீரத்தை இங்க காட்டுற". என்று தன் சட்டையை உதறி தூசியை தட்டியவன்


"நீ வீரனாவே இருந்துட்டு போ அதை பத்தி எனக்கு கவலை இல்ல டா "என்றிட


'என்ன சொல்றான் இவன்... இவனுக்கும் தேவா காதலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா!! அவளை போய் இப்படி பேசிட்டான் என்று தங்கையை நினைத்து அதிர்ந்து அவனை விட்டு விலகி நின்றுவிட்டான் ஜெயசந்திரன்.


நீ அவளை அடக்கி வைப்பியோ இல்ல இன்னொருத்தனுக்கு கட்டி வைப்பியோ அந்த அரை கிறுக்கு என் பின்னாடி சுத்தறதை விட்டுட சொல்லு சே எங்க போனாலும் காலை சுத்தி சுத்தி வருது என்று முகத்தில் வெறுப்பை தேக்கி சொல்லும் போது தன் தங்கையை பற்றி அவன் கூறிய வார்த்தைகள் கூர் ஈட்டியாய் அவன்இதயத்தை குத்தியது இவள் ஏன் புத்தி கெட்டு போய் இவன் பின்னாடி சுத்தி அவப்பெயர் உண்டாக்கி கொள்கிறாள் என்று தான் தோன்றியது…


தங்கையை அவன் குறைவாய் கூறியதும் சினம் துளிர்க்க "அவளே காதலிச்சாலும் அதுக்கு ஒரு பர்சன்ட்டாவது நீ ஹோப் கொடுக்காமதான் அவ உன் பின்னாடி சுத்தினாலா இது அவளோட தப்பு மட்டும் இல்ல உன்னோடதும் தான். இனி அவ கண்ணு முன்னாடி கூட வந்துடாத" என்று மிரட்டுவது போல் ஜெயசந்திரன் கூறிட


"போ போ முதல்ல அங்க கவனி அப்பறம் இங்க வா என்று அவனிடம் கூறியவன் பைக்கில் அமர்ந்த படி வந்துட்டான் இங்க பேச என்று நக்கலாய் பேசி அவனை மேலும் கோபமூட்டிய விசாகன் அங்கிருந்து கிளம்பிவிட்டான் .





புழுதியில் புரண்டது உடையெல்லாம் மண்ணும் தலை ஒரு கோலமுமாக இருக்க நோரடியாக வீட்டிற்கு செல்லாமல் வயலுக்கு சென்றவன் அங்கு வரும் மோட்டர் குழாயில் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல் படுத்து விட்டான் விசாகன். பேரன் வீட்டிற்கு வராததால் தில்லை அழைக்க அப்பத்தாவின் அழைப்புக்கள் எதுவும் ஏற்கப்படவில்லை…


உடனே சுந்தரனுக்கு அழைத்தார் தில்லை முதல் ரிங்கிலையே அலைபேசியை எடுத்து காதில் வைத்த சுந்தரன் "சொல்லு அப்பத்தா" என்றதும்


"ஏய்யா எங்கப்பா இருக்க என் ராசா உன் கூடதான் இருக்கா?" என்றிட


"இல்லையே அப்பத்தா" என்ற சுந்தரன் "அவன் இன்னும் வீட்டுக்கு வரலையா?" என்றான்.


"ஆமா யா இன்னும் புள்ள வீடு வந்து சேரல... நேரம் ஆகுறா மாதிரி இருந்தா ஒரு போனாவது போட்டு சொல்லும். நீ என்னன்னு ஒரு எட்டு பாருய்யா" என்றிட


"உன் பேரன் என்னமோ சின்ன புள்ளையா வீட்டுக்கு வரலன்னுதாம் பயப்பட, வீணா நீ பயந்து உடம்பு கெடுத்துக்காத" என்று கூறி தில்லையை சமாதனம் செய்து நண்பனுக்கு அழைப்பை விட்டிருந்தான் சுந்தரன்.


அனைத்து அழைப்புக்களும் எடுக்கப்படாமலே போக சுந்தரனுக்குமே கொஞ்சம் பதட்டமாகியது. ஆலையில் காவலுக்கு இருக்கும் ஒருவனுக்கு போன் செய்து கேட்க அங்கு வரவில்லை என்ற பதிலில் தோப்பு வீட்டில் இருக்கலாம் என்ற ஐயத்தோடு அங்கே சென்றான்.


தோப்பு வீட்டின் மின்விளக்கு எரிந்துக்கொண்டு தான் இருந்தது. சிலுசிலுவென குளுங்காற்று மேனியை உரசி சென்றிட வெளியில் போடப்பட்டு இருந்த கயிற்று கட்டிலில் படுத்து இருந்தவனை கண்டதும் தான் மனம் சற்று ஆஸ்வாசமாகியது சுந்தரனுக்கு உடனே தில்லையின் எண்ணுக்கு அழைத்தவன் விசாகனை பற்றி கூறி பயப்பட வேண்டாம் என்றவன் அவனை நோக்கி எட்டுக்களை வைத்தான்.


"விசா, … டேய் மாப்ள", என்று அழைத்துக்கொண்டு அருகில் செல்ல


கண்களை மூடி படுத்துக்கொண்டு இருந்தவன் விழிகளை திறந்து "நீ இங்க ஏன் வந்த" என்றான் காரமாக.


"என்ன மாப்ள நைட்டு அதுவும் இங்க வந்து படுத்து இருக்க அடிச்சி புடிச்சி உன்னை தேடி வந்த இப்படி ஏன் வந்தன்னு பட்டுன்னு கேக்குற" என்றான் பாவனையாக


"பச்.என்னடா உன்னோட பெரிய இம்சையா இருக்கு என்ன சொல்லனும்... நான் ஏன் இங்க வந்து இருக்கேன்னு காரணம் தெரிஞ்சா உடனே போயிடுவியா?" என்றான் கடுப்பாக


"இது என்னடா கேள்வி?? நீ எங்க இருக்க எப்போ வர போறன்னு சொல்ல மாட்டியா வீட்டுல உனக்காக ஒரு ஜீவன் காத்து கிடக்கு அதுக்காகவாச்சும் நீ சொல்லிட்டு வரனும்லடா" என்றான் விசாகன் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான் என்ற குழப்பத்தோடு


"பச் எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன் அப்பத்தாகிட்ட போய் சொல்லிடு... முதல்ல என்னை தனியா இருக்க விடு" என்று அவனை துரத்த பார்க்க


"அதெல்லாம் முடியாது நீயும் கிளம்பி வா வீட்டுக்கு போலாம்" என்று அவன் கைப்பிடித்து சுந்தரன் எழுப்பி வெளிச்சத்தில் அவன் முகம் பார்க்கவுமே சுந்தரனுக்கு ஒரே அதிர்ச்சி "என்னடா ஏன் இப்படி இருக்க நெத்தில என்ன காயம்?" என்று தொட்டு பார்த்து கேட்க


அவன் கையை விலக்கி விட்டவன் "அது ஒன்னுமில்ல நீ கிளம்பு" என்றான் அழுத்தம் நிறைந்த. குரலில்


"இப்போ என்ன நடந்ததுன்னு சொல்ல போறியா இல்லையா?" என்று அழுத்தம் நிறைந்த குரலில் அவனை வினவியவன் "உன் மனசுக்குள்ளையே எல்லாம் போட்டு மூடி வைச்சிட்டு இருந்தா எதுவும் சரி ஆகாது" என்றிட இன்னும் முகத்தை திருப்பாமல் நின்றிருந்தான் விசாகன். உருக்கிய வெள்ளி கம்பியின் கோடாய் பிறை நிலவு வளைந்து நட்சத்திரங்களை தெறிக்க விட்டிருந்த வானவீதியினை வெறித்து பார்த்து நின்றிருந்தான் விசாகன்.


"கேக்குறேன் இல்ல இப்போ சொல்றியா இல்லையா?" என்று கத்தியவன் அவன் இறுக்க முகம் பார்த்து "இனி விஷயத்தை சொல்ற வரைக்கும் என் கிட்ட பேசாத" என்று கோபமாக கூறி அங்கிருந்து அகலமுற்பட


"தேவசேனா அண்ணன் சந்திரன் தான் என்னை அடிச்சது" என்று ஆரம்பித்து மாலை நடந்தவற்றை கூறி இருந்தான்.


அழகாய் எழும்பிய கோட்டையை யாரோ உலுக்கியதில் ஆட்டம் கண்டது போல் இருந்தது சுந்தரனுக்கு சே… என்று தலையில் கைவைத்துக் கொண்டவன் "அவனுக்கு எப்படி டா இதெல்லாம் தெரியும்…ஆனா நீயும் அவ மேலேயே தப்பு இருக்கு அடக்கி வைன்னு சொல்லிட்டு வந்து இருக்க கூடாது" என்று வெடித்தான் சுந்தரன்.


"நீ எதுக்கு இப்ப பதறுற அவ மேல தானே தப்பு… நானா என் பின்னாடி அவளை சுத்த சொன்னேன்…"


"டேய் டேய்…. காட்டன் மாதிரி வந்து கத்திட்டு போய் இருக்கான். உன் மேலையும் கை வைச்சி இருக்கான். அங்க என்ன ரகளை பண்ணி இருந்தானோ! ஒரு வேளை நீ சொல்லி விட்டா மாதிரி அந்த பொண்ணுக்கு வேற கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணா என்னடா பண்ணுவ" என்று கேட்டிட


"பண்ணட்டும் அவன் தங்கச்சி அவன் கல்யாணம் பண்றான்" என்றான் விட்டேத்தியாக


"டேய் வெறுப்பேத்தற அந்த பொண்ணு மேல ஒரு பிலீங்க்ஸ் கூடவாடா இல்ல உனக்கு"


அவன் கேள்வி தன்னை அசைக்க வில்லை என்று இருமாப்போடு அமைதியாய் நிற்க


"சே அவ தப்பு பண்ணிட்டா ஒரு கல்லை போய் காதலிச்சி இருக்கா... நான் கூட நீ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வரன்னு நினேச்சேன்... நீ மாறவே இல்லடா, ஒரு பொண்ணோட பாவம் உன்னை சும்மா விடாது... உன்னையே சுத்தி சுத்தி வந்த பொண்ணு, நல்லா வைச்சி செய்துட்ட டா" என்று மொத்த எரிச்சலையும் அவன் மேல் கொட்டிட


சாதரணம் போல் இருந்தவன் "இதுல எரிச்சல் பட என்ன இருக்கு கூட பொறந்தவன் கேட்கதான் செய்வான்… அதுக்கு முன்னாடியே இது எனக்கு எல்லாம் சரிபடாதுன்னு நான் சொல்லிட்டேன். நீ தான் அவளுக்கு நம்பிக்கைய கொடுத்து தப்பு பண்ணி இருக்க என் வாழ்க்கையில் நிச்சயம் இன்னொரு காதல், கல்யாணம் குடும்பம் இதுக்கு எல்லாம் இடமே இல்லை" என்றான் தீர்மானம் எடுத்தது போல்


"மடையா மடையா இன்னும் அந்த சுயநலம் பிடிச்சவளையே நினைச்சிட்டு இருக்கியா நீயும் வேணாம் உன் உறவும் வேணாம் இவனை போய் யார் கல்யாணம் பண்ணிப்பான்னு கேட்டவள் உனக்கு நல்லவளா இன்னும் உன் மனசுல நிக்குறா!!! நீ ஆயிரம் திட்டி விலக்கினாலும் உன் காலை சுத்தியே வந்தவ உனக்கு கிறுக்கா தெரியறாளா!! தப்பு விசா நீ அந்த பொண்ணுக்கு அநியாயம் பண்ற" என்று கோபம் கொண்டு பொறிய


நண்பனின் கூற்று கோவத்தை கொடுக்க அருகில் இருந்த மரத்தில் ஓங்கி குத்திட "போதும் போதும் என்று உரக்க கத்தி அவனை கை நீட்டி தடுத்து நிறுத்திட்ட சுந்தரனை கூர்விழியால் பார்த்தவன் "நீ இங்கிருந்து போயிடு நிறைய பேசிட்ட இனி எதையும் கேக்குற மனநிலையில் நான் இல்லை தயவுசெய்து நான் மனுஷனா இருக்கறப்போவே கிளம்பு" என்றான் விசாகன்.


டேய் கைடா என்று அவன் கையை பிடித்து பதறிய சுந்தரன் சரி சரி இனி நான் எதுவும் கேக்கல கிளம்புறேன், கிளம்புறேன்... என்று கூறி மேலும் அவன் கோவத்தை கிளறிட வேண்டாம் என அங்கிருந்து சென்று விட்டான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN