என்னடி மாயாவி நீ: 16

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 16

என்னுடைய காதல் ஒருதலை காதலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னை பகல் கொள்ளை அடித்த அவளது இருவிழிகளே என்னை வாழ வைத்தது. நான் சந்தோசமாக இருப்பதற்கும் அந்த கண்களே காரணம். நான் துவண்டு போகையிலும் அந்த விழிகள் எனக்கு உயிர் ஊட்டியது.

நானும் அந்த வருடம் 11வது தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றேன். எனக்கு துணையாக இருந்தது விஷ்ணு, அப்பா, அம்மா என்றாலும் எனது காதலும் எனக்கு துணையாக இருந்தது.

அவளின் உண்மையான பெயர் தெரிந்தாலும் நான் அம்மூ என்றே எனக்குள் பதிய வைத்திருந்தேன்.

அவள் செல்லும் வழியெங்கும் பின்தொடர்ந்தெல்லாம் செல்வதில்லை அது இருவருக்கும் பாதிப்பு என்பதால். அவள் வீடு, அவளது குடும்பம், அவளுக்கு எது புடிக்கும், எது புடிக்காது என அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தேன். அவளோடு வாழ்வது போல ஓர் மாயை என்னிடத்தில் ஏற்பட்டது.

பன்னிரண்டாம் வகுப்பும் சென்றேன். இப்போதாவுது அவளிடம் சொல்லலாம் என முயன்றேன்.நாம சொன்னா, அவ காதலிக்கிறத தப்பா எடுத்துக்கிட்டா என்ன செய்றதுனு யோசிச்சே, கொஞ்ச நாள் போகட்டும்னு அப்போ அந்த முடிவ கை விட்டுட்டேன்.

ஒரு நாள், விஷ்ணுவும் நண்பர்களும் ஸ்போர்ட்ஸ் விஷயமா வெளியூர் போனதுனால நான் மட்டுமே தனியா மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், எனது தனிமையை போக்கியது கூட எனது அம்மூ தான்.

கொஞ்சம் தொலைவில் அவள் அமர்ந்து ஒரு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தாள். அக்குழந்தையின் தாய் அன்று வராததால், அக்குழந்தை அழுதது. அந்த குழந்தையை மடியில் கிடத்தி பேச்சு கொடுத்து, விளையாடிக்கொண்டே தோழிகளோடு சிறு பிள்ளையாகவே மாறி அக்குழந்தைக்கு உணவை ஊட்டி கொண்டிருந்தாள். அக்காட்சியை பார்க்கையில், அவளது அந்த அன்பும், சிறு பிள்ளை போல் விளையாடுவதும், அனைவரிடமும் சீக்கிரம் ஓட்டி கொள்ளும் குணமும் தெரிந்தது. பார்க்க பார்க்க திகட்டாத காட்சியாக அமைந்தது எனக்கு.

அந்த மடியில் நான் படுத்துறங்கும் நாள் எப்போ வருமோ, அந்த பாசம் முழுதும் எனக்கே சொந்தமாகும் பொழுது என்று விடியுமோ என ஏங்கினேன்.

கடவுள் இதற்கு மேலும் காக்கவைக்க வேண்டாம் என முடிவு செய்து நாட்களை நகர்த்தினார்.

அவள் முழுதாக குமரியென மாறி விட்டாள், அவளுக்கு முடிவு எடுக்கும் பக்குவம் வந்திருக்கும் இனியும் தாமதம் செய்யாமல் சீக்கிரமாக காதலை சொல்ல வேண்டும் என முடிவெடுத்தேன்.

நாளை சொல்லலாம், பள்ளி முடிந்து அவளை வழியில் பார்த்து சொல்லிவிடலாம் என முடிவு செய்து தூங்க முயன்றேன். ஆனால், உறக்கம் எனும் அதிகாரமே கடவுள் எனக்கு படைக்கவில்லை போலும்.

நறுமணம் புகட்டும் மென்மையான பூ ஒன்று புயலென மாறி வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை மறுநாள் தான் உணர்ந்தேன்.

அன்று, நான் அவளை நோக்கி செல்லும்போது விஷ்ணு என்னை நோக்கி முகத்தில் சந்தோசம் பொங்க வேக நடையிட்டு வந்து என்னை கட்டியணைத்துக்கொண்டான்.

நான், "என்னடா ஆச்சு சந்தோசமாக இருக்க, மேட்ச் ஏதும் ஜெயிச்சிட்டியாடா? "என வினாவினேன். அவனோ அதற்கு, "இல்லை மச்சான் வாழ்க்கையில ஜெயிச்சிட்டேன்டா" அவ்வளவு சந்தோசமாக சொன்னான். நான் புரியாமல் பார்க்கவும், அவனே தொடர்ந்தான், "மச்சான் நான் லவ் பண்றேன்டா, அந்த பொண்ணுக்கிட்ட சொன்னேன்டா, அவளும் ஒத்துக்கிட்ட "என்றவுடன் எனக்கும் ஆயிரம் ஆனந்தம் ஒன்று கூடியது. எனக்கும் என் உயிர் நண்பனுக்கும் இதிலும் ஒற்றுமை என்பதை நினைத்து ஒரே சமயத்தில் காதல் அமைந்திருக்கே என.

"யாருடா அந்த அதிர்ஷ்டசாலி பொண்ணு" என ஆர்வமுடன் நான் கேட்டவுடன் விஷ்ணு கூறிய அந்த பெண்ணின் பெயரையும் வகுப்பையும் கேட்டவுடன், "சரியா தெரியலடா"
என குழப்பத்துடன் கேட்ட என்னிடம் சில அடையாளங்களை சொன்னவுடன் என் இதயம் இரண்டாக பிளந்து, உயிரை அறுப்பது போல் வலி ஏற்பட்டது. ஏனெனில், விஷ்ணு கூறியது நான் காதலிக்கும் என் அம்மூவை தான்.

நான் மேலும், "அந்த பொண்ணு ஒத்துக்கிட்டாங்களா", என ஒரு எதிர்பார்ப்பு, பயம் கலந்த உணர்வுடன் கேட்டவுடன் "ஒத்துக்கிட்டா மச்சி, அவளுமே என்ன லவ் பண்ணிருக்காடா" என்றவுடன் உயிர் இல்லாத ஜடம் போல உணர்ந்தேன். சோகத்துடனும் ஏமாற்றத்துடனும், "இதை ஏண்டா முன்னாடியே என்கிட்டே சொல்லல? "என நான் வலியுடன் கேட்க அவனோ, "சாரிடா மச்சான், சக்ஸஸ் ஆனா பிறகு சொல்லலாம்னு இருந்தேன்டா "என விஷ்ணு கூறியவுடன்,"சரிடா மச்சான், எனி வேஸ் பி ஹாப்பி மச்சான்" என்றேன் கட்டியணைத்து வலியை மறைத்துக்கொண்டு.

தனக்கே தனக்கென்று இருந்த ஒரே ஒரு சொந்தமும் தன்னை விட்டு போய்விட்டதே என மன உளச்சலில் ரொம்ப நாள் மிகவும் கஷ்டப்பட்டேன். வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்த என் வாழ்க்கை அர்த்தமற்றது என வாழ்வையே வெறுத்தேன்.

அதன் பிறகு அவளை பார்க்கும்படி சூழல் வந்தாலும் மறுத்துக்கொண்டேன். விஷ்ணு அவளிடம் பேசும்படி சொன்னாலும் காரணம் சொல்லி மறுத்துவிடுவேன். தன் கஷ்டம் தன்னோடவே போகட்டும் என யாரிடமும் சொல்லாமல் என தனக்குள் போட்டு புழுங்கி கொண்டேன்.

ஏற்கனவே, விஷ்ணுக்கு போட்டி போட்டு கொண்டு நானும் இருக்கிறேன், நான் அவர்களுக்கு பாரமாக இருக்கிறேன், என்னை விடுதியில் சேர்க்க சொல்லும் சமுதாயத்தின் மத்தியில் என்னை அவர்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து படிக்க வைக்கும் அப்பா, அம்மா இவை யாவும் பாகுபாடு பார்க்காமல் நண்பனாக பழகும் விஷ்ணுவிடம் இதை சொல்ல எனக்கு மனம் இடம் கொடுக்க வில்லை. விஷ்ணுவிடம் என் காதலை பற்றி சொன்னால், அவர்களுக்குள் பிரிவு ஏற்படலாம். அவன் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். எனக்கு வலி தந்த காதலை பற்றி அவனிடம் சொல்லி ஒரே பற்றுக்கோளாக இருக்கும் விஷ்ணுவின் பொன்னான நட்பை நான் இழக்க விரும்பவில்லை. அவளை மறக்க முற்பட்டேன். ஆனால், அதுக்கு எனக்கு கடினமாகிப்போனது.

அதன் பிறகு, கல்லூரி வாழ்க்கையும் நன்றாக சென்றது இருவருக்கும். அதிக நாள் சோகமாகவே இருந்தேன். காரணம் கேட்டாலும் ஒன்றுமில்லை என்றதோடு முடித்துக்கொள்வேன். யாரிடமும் இதை பகிர நான் நினைக்கவேயில்லை. கருவை தொலைத்த தாய் போல நானும் காதலை மலரும் முன்னே வேரோடு அழிந்து போனதால் பிறகு வாழ்கையில் பிடிப்பு தன்மை காணாமல் போனது. அதிக நேரம் தனிமையே நாடினேன்.

அவளை மறக்கமுடியாமல் தவிக்கும் நாளில், ஒரு முறை விஷ்ணு வெளியூர் சென்றதால் அவன் எனக்கு போன் செய்து அவளுக்கு உடம்பு சரியில்லை, மருத்துவமனை சென்று ரத்தம் கொடுத்து உதவுமாறு கெஞ்சினான். நான் எப்படி என தயங்கிய என்னை கட்டாயப்படுத்தி செல்ல வைத்தான்.

அங்கு சென்றேன். அவள் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்று அவளின் அப்பா அம்மாவிடம் ஏதேதோ கூறி சமாளித்து விட்டு ரத்தம் கொடுத்தேன். அவளுக்கு என்ன ஆனது என எதையுமே நான் அறிய முற்படவில்லை. அவள் முகமோ கலையிழந்து வாடிபோய் இருந்தது. வெகு நாட்கள் கழித்து அவளை பார்த்த என் நெஞ்சில் ஓர் கணம் குடிகொண்டது. 'நீ எங்க இருந்தாலும் சந்தோசமா இருப்பனு நான் ஒதுங்கி போறேன். ஆனால், நீ இப்படி வந்து படுத்துருகியே' என ஆதங்கப்பட்டு தன்னை கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளால் நெற்றியில் இதழ் பதித்து விட்டு சென்றேன். காதலிக்கும் போதுகூட இப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை, இப்போ மறக்க முனைகையில் அமைத்துவிட்ட விதியை எண்ணி என்னால் விரக்தியாக சிரிக்க மட்டுமே முடிந்தது.

அவளின் மாற்றங்கள், கண்கள் என எல்லாமே பழைய மாதிரி என்னை நிம்மதி இழக்க செய்தது. மூச்சு முட்டி இறந்துவிடுவேனோ என பயம் கூட ஏற்பட்டுவிட்டது. இதனை மறந்து, மாற்றம் தேடியே யார் சொல்லும் கேட்காமல் வெளி நாடு பறந்தேன். அங்கு சென்றும் என்னை மறக்கமுடியாமல் போக, தினமும் குடிக்க ஆரம்பித்தேன். குடி பழக்கம்தான் நீடித்தது தவிர அவளை மறக்க முடியவில்லை.

அவளின் இடத்தில் வேறு ஒரு பொண்ணை உருவகம் செய்துகூட பார்க்க முடியவில்லை. ரத்தத்தில் கலந்து சித்தத்தை வதைத்த காதலாயிற்றே எப்படி மறக்க முடியும்.

அவளின் சந்தோசம் வாழும் வரை எனது காதலும் வாழும் தவிர தோல்வியும் அடையாது, அழிவையும் நோக்காது. அவளின் நலனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என எண்ணத்தில் இருந்தேன். தூர இருந்தாலும் பக்கத்தில் இருந்தாலும் அவள் நிம்மதியென தெரிந்தால் மட்டுமே போதும் நானும் என் காதலும் உயிர் வாழ்வோம் என மனதை தேற்றி கொண்டேன். விஷ்ணுவிடம் பேசும்போதெல்லாம் அவளின் நிலை குறித்து விசாரிக்க தவற மாட்டேன்.

அவள் எப்பவுமே எனக்கு மாயாவி தான். மாயமே உருவாக கொண்டவள் தான் அவள். அவளின் நியாபகத்தை தனக்குள் வைப்பது விஷ்ணுவிற்கு செய்யும் துரோகம் என்பதால், அதை ஒதுக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் போக, நான் டைரியை நாடி என் காதல் நினைவுகளை அதில் புதைத்து வைக்க முயற்சி செய்து எல்லாவற்றையும் அதில் கொட்டி வைத்தேன் மனதில் உள்ள பாரம் குறையுமென்ற நம்பிக்கை கொண்டு.

இவ்வாறு முடித்திருந்தான், அது உயிர் பெற்று திரும்பவும் முளைக்கும் விதி தெரியாமல்.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN