நெஞ்சம் 5

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பெரும் செல்வந்தர்களான மகிழ்வரதன், சசிரேகாவின் ஒற்றை வாரிசு தான் தன்யரித்விகா... அதென்னவோ இந்த வம்சத்தில் எல்லோரும் ஒற்றை வாரிசாகவே பிறந்து.. வாழ்ந்து.. மடிந்து போனார்கள்.

மகிழ்வரதன், அவர் தந்தை சாருகேசனுக்கு ஒரே மகன். பெரும் செல்வந்தரான அவர்... அந்த காலத்தில் திரைத்துறையில்.. சிறந்த தயாரிப்பாளர் மட்டும் அல்லாமல்... திரைத்துறைக்கு நிதி முதலீடு செய்யும் தொழிலையும் செய்து வந்தார். அதில் ஒரு சமயம் அவருக்கு தொழில் நொடிந்து விட... அவரின் நண்பரும் சில தொழிலில் பங்குதாரருமான சசிரேகவின் தந்தையிடம்.... சம்பந்தம் செய்து தொழிலை நிலை நிறுத்திக் கொண்டார் சாருகேசன்.

சசிரேகாவின் தந்தை நண்பனைப் போல் சினிமாவில் பணத்தைக் கொட்டாமல்... தன் பெரும்பாலான முதலீடுகளை கப்பல் வணிகத்தில் இட்டு... தொழிலில் பெரும் இடத்தைப் பிடித்திருந்தார் அவர். அவருடைய சாம்ராஜ்ஜியத்தின் ஒற்றை வாரிசு தான் சசிரேகா... தொழிலில் மதம் கொண்ட அதவையாய் பிளிர்பவள். மகிழ்வரதன் மட்டும் சளைத்தவரா என்ன... தொழிலில் சிங்கமாய் ஆட்சி செய்பவர்.

இப்படியான இரண்டு ஜாம்பவான்களுக்கு பிறந்தவள் தான் திபாகரனின் மனைவி தன்யா. சுபாவத்தில் முயல் குட்டி அவள்... பதினைந்து வயது வரை சிறகு முளைத்த வண்ணத்துப் பூச்சியாய்... தன் வாழ்வை... பல வண்ணங்களில் வாழ்ந்தவள் தான் தன்யா. அதன் பிறகு உடல்நிலையில் அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனையில்... ஊட்டி காண்வென்டில் படித்துக் கொண்டிருந்தவள்... பாதி படிப்பிலேயே வீட்டுக்கு வந்துவிட... பின் இப்போது வரை அவளின் வாசம் எல்லாம்... மருத்துவமனையும்... அதனுடனான அவளின் அறையும் என்று மாறிப் போனது.

அதிலும் அவளின் அப்பத்தாவுக்கு அவள் ஒற்றை செல்ல பேத்தி... பத்தாவது வரை படித்தவளை மேற்கொண்டு தொடர விடாமல்... பத்தொன்பது வயதிலேயே தன்யாவுக்கு திருமணம் நடந்தேற காரணமானவர்... அவளின் அப்பத்தா தான். கள்ளம் கபடம் தெரியாத கிராமத்து வாசி.... பேத்திக்கு பிரச்சினை என்றதும் ஓடோடி வந்து தன்யாவை அரவணைத்துக் கொண்டவர்.

அவரின் அன்பும்.. அரவணைப்பும் தன்யாவை... மேலும்.. மேலும்.. நொடித்து குழந்தையாய் மாற்றியதைத் தவிர... தனக்கு வேண்டியதை கேட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் விதைக்காமல் போய் விட்டது. இந்த இருபத்தோர் வயதிலும் அவளின் உலகம் எல்லாம்.... டாம் அண்டு ஜெர்ரி பார்ப்பதிலேயே கழிந்து விட்டது. முன்பு அவளுக்குள் இருந்த பிரச்சனையிலிருந்து தன்யா வெளிவர அவள் அப்பத்தா ஏற்படுத்திய பழக்கம்... அதன் பின் தன் கணவனின் எண்ணத்திலிருந்து வெளிவர அவளாகவே பழகிக் கொண்டாள்.

தன்யா அப்படி நினைத்து தன்னையே ஏமாற்றிக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னே அந்த கார்ட்டூனை இவள் லயித்து பார்ப்பதே கணவனை நினைத்து தானே! கார்ட்டூனில் வரும் டாமை கணவனாகவும்... தன்னை ஜெர்ரியாகவும் பாவிப்பவளாச்சே!

உண்மையிலேயே… இருவரின் உடல் பொருத்தமும் அப்படி தான்… திபாகரன் நல்ல உயரத்துடன் கட்டுமஸ்தான ஆண்மகனாக.. ராணுவ வீரன் போல் தோற்றத்துடன் இருப்பான். அதே தன்யா, சிறு அணில் குட்டியாய் மிளர்பவள். தோற்ற பொருத்தத்தில் இருந்து.. ஆஸ்தி அந்தஸ்து என்று இல்லாமல்.. ஏன் பழக்க வழக்கத்திலிருந்து குண நலன்கள் வரை மாறுபட்டவர்கள் இவர்கள் இருவரும்.

மகனின் சாதாரண காய்ச்சலைக் கண்டு பதறும் குடும்பம் திபாகரனுடையது… அதே மகள் கேட்கும் விவாகரத்தை… எந்த தங்கு தடையும் அல்லாமல் வாங்கி தர நினைக்கும் குடும்பம் தன்யாவுடையது. இப்படி பொருத்தம் இல்லாத இருவரையும் திருமணம் என்ற நிகழ்வில் சேர்த்து வைத்த விதியைத் தான் சொல்ல வேண்டும்…

மகிழ்வரதனின் அலுவலுக அறை…

“வரதா என்ன டா முடிவு செய்திருக்க?” என்று அலுவலக அறைக்குள் நுழைந்த வல்லவன் கேட்க

“எதை பற்றி டா?…” தன் முன்னிருக்கும் கோப்பில் கவனமாய் இருந்த படி மகிழ்வரதன் கேட்க

“தன்யா விவாகரத்து கேட்டதற்கு.. திபாகரன் தரப்பிலிருந்து உன் மாப்பிள்ளை சொன்னதைப் பற்றி…”

“இதில் நான் என்ன முடிவு எடுக்கணும்… இது அவர்கள் இரண்டு பேர் சம்பந்தப்பட்டது…” மகிழ்வரதன் பட்டும் படாமல் பதில் தர…

“தன்யா உன் மகள் வரதா..”

“நான் மறுக்கல… தந்தையாகவே இருந்தாலும்… திருமண வாழ்வு பிடிக்கலைனு சொல்கிற மகளை நான் எப்படி கட்டாயப்படுத்த முடியும்…”

“திருமண வாழ்வு… ம்ஹும்… டேய் இன்னும் அதுங்க இரண்டும் பேசிக்க கூட இல்லை டா” வல்லவன் விளக்க

“பார்த்தியா… கணவன் மனைவி இருவரும் பேசிக்கவே இல்லைனு சொல்ற… அப்போ அவங்க புரிதல் எப்படி இருக்கு பார்…” வரதன் எதிர் கேள்வி கேட்க

“இரண்டு பேரும் பேசி பழக வாய்ப்பு கொடுப்பேனு பார்த்தா… என்னடா பதில் இது…” என்று கடுப்பான வல்லவன்… கோபத்தை அடக்கி கொண்டார்…

“உனக்கு தான் தெரியல... வாழணும்னு நினைத்து இருந்தாங்கனா... இரண்டு பேரும் அதற்கான வாய்ப்பை யார் தடுத்தும் ஏற்படுத்தி இருப்பாங்கன்னு சொல்றேன்...”

நண்பனின் வாதத்தில், “ஏன் வரதா.... உன் அந்தஸ்த்து அளவுக்கு உன் மருமகன் இல்லைன்னு... அவனை அத்து விட பார்க்கிறீயா..” வல்லவன் தான் வக்கீல் என்பதை நிரூபிக்க

“ச்சேச்சே... பால்ய நண்பனாய் இருந்து என்னை அறிந்தது... இவ்வளவு தானா டா நீ... என் மகளின் குறையைக் காட்டி... ஒரு இக்கட்டை வைத்து அவர்களின் திருமணத்தை நான் நடத்தியிருந்தாலும்.... அவன் என் மகளின் கணவன்... எந்த இடத்திலும் திபாவை நான் விட்டு தரவும் நினைக்கல... விட்டு தரவும் மாட்டேன்… அதேபோல் என் மகள் வாழ்விலிருந்து பத்தி விடவும் நினைக்கலை.

திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம்... இதை யோசிக்காம என் சுயநலத்துக்காக... இருவருக்கும் பிடித்தம் இருக்கான்னு கூட கேட்காமல்... அன்று திருமணத்தை நடத்திட்டேன்.... இப்பவும் இருவரின் எண்ணங்களுக்கு நான் மதிப்பு தரலைனா எப்படி டா... அதிலும் என் மகள் சந்தோசம் தான் டா எனக்கு முக்கியம்..” ஒரு நல்ல தந்தையாய் வரதன் உணர்ச்சி வசப்பட்டு பேச, மவுனமானார் வல்லவன்.

நண்பன் சொல்வதும் சரி தானே... பெற்றோரே என்றாலும் பிள்ளைகள் முடிவில் எப்படி தலையிடலாம்... ஆனால் அது மற்ற தம்பதிகளுக்கு. தன்யாவும்... திபாகரனும்... அப்படி இல்லையே... இருவருக்கும் திருமணம் நடக்கும் போது... குடும்ப வாழ்வின் சிக்கல்களை அறிய முற்படாத வயதான இருபத்தி மூன்று வயதில் இருந்தவன் திபாகரன். தன்யா உலகம் அறியாத இரண்டாங்கெட்டான் வயதான பத்தொன்பது வயதில் இருந்தவள்.

இப்படியான இருவருக்கும் திருமணம் செய்தது யார்... பெரியவர்களான இவர்கள் தவறு தானே?... அப்படி இருக்க இன்று இது அவர்களின் வாழ்வு என்று சொன்னால் எப்படி... மனம் முழுக்க இப்படியான கேள்விகள் தான் எழுந்தது.

அதுவும் இல்லாமல் நண்பன் மகள் என்று தன்யாவை வேறுபடுத்தி பார்க்காமல்... தன் மகளாய் சிறுவயதிலிருந்து பார்த்த வல்லவனுக்கு... அவள் வாழ்வை எப்படியோ போகட்டும் என்று விட மனமில்லை. தன்யா வாயைத் திறந்து சொல்லவில்லை என்றாலும்.... வக்கீல் மூளையான அவருக்கே... தன்யா கணவனுடன் வாழ ஆசைப்படுகிறாளோ என்று தான் தோன்றியது.

திபாகரன் மட்டும் என்ன... தன் மனைவி எப்படி விவகாரத்து பத்திரம் அனுப்பலாம்... என்று கேட்டு அன்று அலுவகத்தில் குதித்தானே... அப்போ அவனும் தன் மனைவியுடன் வாழத்தானே விழைகிறான்? ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாமல் போக எது தடுக்கிறது... என்று வல்லவனுக்கே புரியவில்லை.

ஏனென்றால்... அன்று தன்யாவிடம் இருந்த பிரச்சனை தான் இன்று தீர்ந்து விட்டதே.... அவளுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருக்கும் போது அவசர அவசரமாய் திருமணம் செய்தது தவறோ என்று... தன்யாவைத் தன் மகளாய் பாவித்த இவரின் மனமோ தற்போது அதிலேயே உழன்றது...

என்ன நினைத்து என்ன? விதி எனற பெயரில் அவர்கள் இருவரையும் திருமண பந்தத்தில் இணைய வைத்த அந்த விதியே... இருவரையும் கடைசி வரை அதில் பயணத்தைத் தொடர வைக்கிறதா... இல்லை விலக வைக்கிறதா என்பதை பார்ப்போம் என்ற முடிவை அந்த விதியிடமே விட்டுவிட்டார் இவர். அதனால் தான் தன் வரையிலும் இருவரையும் சேர்க்க விரும்புகிறார்.

வல்லவன் வந்திருப்பதை வேலையாள் தன்யாவிடம் தெரிவிக்க... அவரைக் காண தந்தையின் அலுவகத்தில் நுழைந்தாள் தன்யா.

“gud evening uncle...” இவள் முகமுன் வழங்க

அதில் அவள் குரலுக்கே உள்ள... குழந்தைத் தனமான துள்ளல் இல்லை என்பதை அவர் அறிந்தாலும், “ஹாய்... தன்யா பேபி... வா டா... வா டா... உன் health... எப்படி இருக்கு... மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா...”

“fine… s... uncle...” இவள் குரலோ சுருதியற்று ஒலித்தது.

அது ஏன் என்று அவருக்கு தெரியாதா.... பாவம் இந்த பச்சை மண்ணுக்கு அப்படி ஒரு நோய் மட்டும் வராமல் இருந்திருக்கலாம்.. அந்த நோயால் குழந்தைப் பருவத்தை இழந்து... இன்று பருவ மங்கைக்கான வாழ்வையும் அல்லவா இந்த குழந்தை இழந்து நிற்கிறது. ஏற்கனவே தன்யாவைத் தன் மகளாய் பார்த்தவர்... அவளின் உடல்நிலை சீர்கேட்டுக்கு பிறகு... தன் வயிற்று பிள்ளைகளை விடவே... அவள் மேல் பாசம் கொண்டு விட்டார். அதனால் தான் ஒரு தந்தையாய் அவள் வாழ்வை நேர் செய்ய... அவர் மனது துடிக்கிறது.

“என்ன சொல்கிற தன்யா?” வக்கீல் வல்லவன் நேரிடையாக விஷயத்துக்கு வர

“என்ன விஷயம் அங்கிள்...” இவள் புரியாதது போல் கேட்க

“ப்ச்சு... நான் எதை பற்றி பேசுகிறேன்னு உனக்கு தெரியலையா பேபி... எல்லாம் உன் கணவன் விஷயமாய் தான்...” இவர் எடுத்து சொல்ல

“என்ன புதுசா கேட்குறிங்க... என் முடிவில் மாற்றம் இல்ல... விவாகரத்து தான் என் இறுதி முடிவு அங்கிள்” இவள் சொல்ல.

“ப்ச்சு!” என்று சளைத்தவர் “சட்டம் தெரியாம பேசக் கூடாது” என்று சொல்ல

“என்ன அங்கிள் எனக்கு சட்டம் தெரியல… என்னுடைய விஷயத்தை நீங்க முன் வைங்க.. எல்லாம் விவாகரத்து கிடைக்கும்” இவள் பிடிவாதமாய் நிற்க

“சும்மா அதையே சொல்லாதே. இப்போ உனக்கு பெரிதா ஒரு பாதிப்பும் இல்ல. அதை உன் கணவர் சைட் வக்கீலும் கோர்ட்டில் சப்மிட் செய்வார். அதனால் நீ சொல்கிற காரணம் செல்லாது” அவரும் பிடிவாதமாய் நிற்க

“அப்போ என்னை என்ன தான் செய்ய சொல்றீங்க” கேட்கும் போதே இவள் குரல் உடைந்து ஒலித்தது.


“உங்க இருவருக்கும் திருமணம்னு நாங்க பேசும் போது உன்னுடைய விஷயத்தை மறைத்து ஒன்றும் திவாகருக்கு உன்னை நாங்க கட்டி தரலை. அதற்கு பிறகு உன்னுடைய உடல் பிரச்சனை, திவாகர் வெளிநாடுன்னு போக... நீங்க இரண்டு பேரும் முகம் பார்த்துப் பேசினதே அரிதாகிப் போக... இப்போ விவாகரத்துன்னு வந்து நிற்கிற... நல்லா கேளு நீ தான் விவகாரத்து கேட்கிற....”

‘அவர் வாயைத் திறந்து கேட்க மாட்டார் அங்கிள்... அதே சமயம் என் கூட வாழவும் அவருக்கு பிடிக்கவில்லை என்பதும் எனக்கு தெரியும்....’ தன்யா தனக்குள் சொல்லிக் கொள்ள, வல்லவனே தொடர்ந்தார்.

“இப்போ உன் கணவர் இந்தியா வந்தாச்சு பேபி. நீ ஒரு வருஷம் அவர் கூட அவர் வீட்டில் இருக்கணும்னு அவர் விருப்பப்படுகிறார். அதன் பிறகும் உனக்கு அவரைப் பிடிக்கலைனா விவாகரத்து தரேன் என்பது உன் கணவனின் வாதம்.. எனக்கும் அது தப்பு இல்லைன்னு தோணுது” என்றவர் நிறுத்தி அவள் முகம் காண, தன்யாவோ அமைதியாக நின்றிருந்தாள்.

பின் அவரே, “அதுவும் இல்லாமல் அவர் மூத்த தங்கைக்கு திருமண ஏற்பாடு நடக்கிறதாகவும் இந்த நேரத்தில் எப்படி விவாகரத்து கொடுக்கிறதுனு திபாகரன் யோசிக்கிறான். இதிலும் தவறு இல்லை. சோ, என்னை கேட்டா நீ உன் கணவர் வீட்டுக்குப் போவது தான் சரின்னு நான் சொல்வேன்....” ஒரு குடும்ப நண்பராய் மட்டும் அல்லாமல்... அவளின் நலம் விரும்பியாய் வக்கீல் வல்லவன் சொல்ல..

மற்றது எல்லாம் மறக்க, ‘அது தானே பார்த்தேன்.. இதிலும் அவருக்கு சுயநலம்.. அவர் தங்கை திருமணத்தின் போது அவர் கூட நான் நிற்கணுமா?…” என்று ஒரு மனம் முரண்டாலும் இன்னோர் மனமோ ‘இதில் தவறு இல்லையே.. ஒரு அண்ணியாய் நான் நின்றுதானே ஆக வேண்டும்... அதுவும் இல்லாமல் என் கணவன் சபையில் தலை குனிய நான் எப்படி அனுமதிப்பேன்?’ என்று கணவனுக்காக வாதிட்டது. அதுவே ‘சரி... ஒரு வருடம் தானே பார்த்துக்கலாம்’ என்ற முடிவையும் அவளை எடுக்க வைத்தது.

கொஞ்சம் நியாய குணம் உள்ளவள் இவள் என்பதால் வல்லவனின் பேச்சுக்கு சம்மதித்து இவள் தந்தையின் முகம் காண, “அது உன் கணவர் வீடு தன்யா. உன் வீடும் கூட.. போய் இருடா... நீ வெளியூர் எங்கும் போகலையே... இதே ஊர்... நீ நினைத்த நேரம் அப்பா வீட்டுக்கு வரலாம்... நாங்களும் உன்னை வந்து பார்ப்போம்... பிறகு என்ன டா..” என்று மகிழ்வரதன் தன் சம்மதத்தைத் தர

“சரி அங்கிள் நான் அவர் வீட்டுக்கு போகிறேன்... எல்லாம் ஒரு வருஷம் தான்... அதற்கான ஏற்பாட்டை அவரை செய்யச் சொல்லுங்க அங்கிள்” என்று பட்டும்படாமல் சம்மதத்தை தந்தவள் அந்த இடத்தை விட்டு விலகியிருந்தாள் விதுனதிபாகரனின் மனைவி தன்யரித்விகா. ஆனால் இந்த ஒரு வருடம் முடியும் போது தன்னவளை விலக விடுவானா அவள் கணவன்?..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN