நெஞ்சம் 8

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“என்ன டி... சொல்ற... அப்போ நீ தனியாவா வந்த!?” என்று அதிர்ச்சியுடன் கணவன் கேட்கும்போதே தன்யாவுக்கு புரிந்து விட்டது கணவன் தன்னை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை என்று... அது அவள் மனதிற்கு சற்றே இதத்தை தர.. கூடவே, ‘இதில் என்ன இருக்கு... எங்கும் நான் தனியா தானே போவேன்... இதென்ன எனக்கு புதுசா?’ என்று அவளுள் எண்ணவும் வைத்தது.

ஆனால் திபாகரன் அப்படி நினைக்கவில்லை. அவனுடைய தங்கைகள் எங்கு சென்றாலும்.... அதற்குரிய பாதுகாப்புடன் தான் அவர்களை அனுப்பி வைப்பான். எங்கும் யாரையும் தனியாக விட மாட்டான். அப்படி இருக்க, இன்று முதல் முறையாக அவனுடைய மனைவி தனியாக வந்திருக்கிறாள் என்றால் இவனுக்கு எப்படி இருக்கும்... கூடவே, ‘அப்போ இவ என்னை தேடவே இல்லையா?’ என்பதே இவனுள் இன்னும் கோபத்தை படர வைக்க... அதுவே தன்னவளை உறுத்து விழிக்கவும் வைத்தது.

அதையெல்லாம் கண்டு நடுங்க இவள் பழைய தன்யாவா என்ன... இவளோ கை வேலையில் கவனமாக இருந்தபடி “ஆமாம்” என்று தலையசைக்க...

“என் கிட்ட சொல்லியிருக்கலாம் இல்ல?” இவன் உறும


அங்கு பெண்ணவளுக்கும் கோபமோ... அதில் ஒரு வித வேகத்துடன் கணவன் புறம் திரும்பியவள், “நான் எப்போ வருவேன் என நீங்க என்னை அழைத்து கேட்டிங்களா... நானா வந்தேன்… வீட்டுக்கு வந்த பிறகாவது நீங்க இங்கே இருந்தீங்களா... இல்ல... எப்போ வீட்டுக்கு வந்தேன்னு என்னிடம் கேட்க வேண்டாம்… atleast உங்க தங்கைகளை அழைத்தாவது கேட்டிங்களா... எல்லாவற்றுக்கு மேல் உங்க நம்பர் என் கிட்ட இல்லை சாமி… வந்தவளை ஏன் வந்த என்ற மாதிரியே குறுக்கு விசாரணை வைக்க வேண்டியது” என்று பொரிந்தவள் கடைசி வாக்கியங்களை மட்டும் தன்னுள் முணுமுணுத்தவள்... பின் விழிகளை ஒரு நொடி மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளோ... “இதை எதையும் நான் கேட்கலங்க... இனியும் கேட்க மாட்டேன்... நமக்குள்ள நடந்தது... என்னை பொறுத்த வரை பொம்மை கல்யாணம்... உங்களை பொறுத்த வரை பிடித்தமில்லாத திருமணம்... நமக்கான இன்றைய உறவே விவாகரத்து வரை தான்... அதுவரை எனக்கு சில கடமைகள் இருக்கு அவ்வளவு தான்...” அதாவது உங்களுக்கு இல்லை என்றாலும் எனக்கு இருக்கு என்பதாக அதே அறிவிப்பு குரலில் சொன்னவள்... திரும்ப எத்தனிக்க.. பாவம் அதை அவளால் செயல்படுத்த தான் முடியவில்லை.

ஏனென்றால்.... அப்படி ஒரு ஆழ்ந்த அணைப்பில் கணவனின் கைப்பிடியில் சிக்கியிருந்தாள் பெண்ணவள். பிடித்தம் இல்லையாமே… அந்த வார்த்தையே அவனுள் கோபத்தை எழ செய்ய மனைவியை இழுத்து அணைத்திருந்தான் திபாகரன். ஆண்... பெண்... என்ற உறவில் இவர்கள் இருவருக்குமே... இது முதல் அணைப்பு... அதிலும் தங்கள் திருமணத்திற்கு பின் இருவருக்கும் கிடைத்த முதல் சந்திப்பில் நேர்ந்த ஸ்பரிச நிகழ்வு.... அதில் இருவரும் சற்றே தடுமாறி தான் போனார்கள். தன் மனதிற்கு இனியவள் என்ற நிலையில் இவன் தடுமாறி நிற்க.... இவர் தன்னவர் என்ற நிலையில் அவள் தடுமாறி நிற்க... பேச்சற்று காமம் அல்லாமல்.. ஏன்... காதலே அல்லாமல்... அணைத்த இந்த அணைப்பு... இருவரையும்... தத்தம் வெறுமையை விரட்டியது என்றால் அது தான் நிதர்சனம்... இருவரின் இதய துடிப்பைத் தவிர அங்கு வேறு ஓசைகள் இல்லை.

திபாகரன் தன் கரங்களை மனைவியின் முதுகில் ஆதரவாய் படர விட்டு இன்னும் அணைப்பை இறுக்க... கணவன் அணைப்பு தந்த மயக்கத்தில்... பெண்ணவளின் கரங்களும் உயர்ந்து... தன்னவனின் முதுகில்... படர்ந்தது... அதில் விந்தையிலும் விந்தை... இவ்வணைப்பில் ஆண்மகனை விட... பெண்ணவளின் தேகம் தான் சிலிர்த்து அடங்கியது. அதைக் கண்டு கொண்ட மன்னவனோ... தன் நெஞ்சில் பதிந்த தன்னவளின் முகம் நிமிர்த்தி... அவளின் காதல் மொழிகளைக் காண... விழி மூடியிருந்த பெண்ணவளின் விழிகளோ கண்ணீரை சிந்த ஆயத்தமாவது போல்... கருமணிகளை உருட்ட... கூடவே அவளின் உதடுகளோ மெல்லிய நடுக்கத்தை தத்து எடுத்திருந்தது. மொத்தத்தில் தன்யா... உணர்வுகளின் குவியலாய்… வெடித்து சிதற துடிக்கும் எரிமலையாய் இருக்க... அதை படித்தவனோ... தன் முத்தத்தால் மனைவியை ஆராதிக்க நினைத்து அவன் உதடு பதிக்க நினைத்தது என்னமோ... தன்னவளின் இதழில் தான்... ஆனால் அதை செய்ய விடாமல் அவனுள் தயக்கம் மேலிடவும்.... நானா தயங்குவது என்று தன்னுள் கேட்டுக் கொண்டவனின் மனமோ... தன்னுடைய செயல்கள் எதுவும் தன்னவளை காயப்படுத்தவும் கூடாது... தன்னுடைய பிம்பம்... இனி தன் மனைவியின் மனதில் தவறாய் பதியவும் கூடாது என்று நினைத்தவனோ... மெல்லிய... மிக மெல்லிய இதழ் ஒற்றலை... தன்னவளின் பிறை நெற்றியில் நேசத்துடன் இவன் பதிக்க... அவன் நேசத்தை உணரும் நிலையில் தான் பெண்ணவள் இல்லையே. கணவன் முத்தத்தில் தன் நிலை உணர்ந்து ஒரு வேகத்துடன் இவள் விலக

மனைவி விலகவும்... இவன், “ரிது...” என்று அவளின் கரத்தைப் பற்ற முயல... கணவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை பெண்ணவளும் சிறிது கேட்டாவது இருக்கலாம்...

இப்படி கணவனோடு ஒன்றிவிட்டோமே... என்ற கோபத்தில் இவள், “உங்களுக்கு மட்டும் இது பிடித்தம் இல்லாத திருமணம் இல்ல... எனக்கும் தான் பிடித்தம் இல்லாத திருமணம்... சோ விருப்பம் இல்லாமல் இணைந்த நம்ம பந்தத்தில்... அதாவது நம்ம வாழ்வில்... இனி இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்...” என்றவள் ஓட்டமும் நடையுமாய் விருந்தினர் அறை நோக்கி விறைய...

தன்னவளின் வார்த்தைகளில்... திபாகரனின் முகமோ ஒரு வித தீவிரத்தை தத்து எடுத்திருக்க... பாவம் பெண்ணவளும் அதை காணவில்லை....


மனைவியின் நோக்கம் புரிந்தவனாக... அவளுக்கு முன்பாக விரைந்து அவ்வறையின் வாசலில் தன்னவளை மறித்தார் போல சென்று நின்றவனோ, “நம்ம அறை அங்கு இருக்கு ரிது... என்று தங்கள் அறையை இவன் சுட்டு விரலால் சுட்டிக் காட்ட

‘இவ்வளவு சொல்லியும்... இப்படி சொல்கிறாரே’ என்ற எண்ணத்தில் பெண்ணவள் உடல் நடுங்க... முகம் சிவந்தது கோபத்தினால் தான். ‘எல்லாம் தான் உருகி நின்றதால் தானே?’ என்ற எண்ணத்தில்,
“ஒரு வருஷம் நான் உங்க வீட்டில் இருப்பேன் என்பது தான் டீல்...” இவள் நினைவுபடுத்த

“தப்பு தப்பு... என் மனைவியா... என் கூட என் அறையில் நீ இருக்கணும் என்பது தான் என் டீல்...” இவன் திருத்த

“நான் அங்கு வரல...” இவள் பிடிவாதம் காக்க...

அடுத்த நொடி, “வா டி என் அணில் குட்டி” என்ற சொல்லுடன் திபாகரன் மனைவியை கையில் ஏந்தி.. தங்கள் அறை நோக்கி நடையைப் போட.. அதில் இவள் சற்றே திமிர..

ஆனால் கணவனின் பிடி இறுக்கமாக இருக்கவும், “விதுன்... விடுங்க...” என்று இவள் கெஞ்சவும்... ஒரு நொடி மனைவியின் அழைப்பில் இன்பமாய் அதிர்ந்தவனோ பின் தன்னவளைப் பூ போல் கட்டிலில் சாய்க்க.. பெண்ணவளுக்கோ இயலாமையில் கண்ணீர் உதயமானது. கதவை அடைத்தவன்... விளக்கை அணைத்து விட்டு... மனைவியின் பக்கத்தில் படுத்து பெண்வளின் முதுகை தன் நெஞ்சோடு அணைக்க... தன்யாவோட அழுகையோ இன்னும் அதிகமானது.

“ரிது...” என்று இவன் அழைத்து.. தன்னவளுக்கு சொன்ன சமாதான வார்த்தைகள் எல்லாம் அவளிடம் செல்லாமல் போக... “ரித்விகா....” என்று அதட்டி அழுத்தி இவன் அழைக்கவும்... அதில் உடல் அதிர இரண்டு கையால் தன் வாயைப் பொத்தியவளோ ஒரு கேவலுடன் இன்னும் சுருண்டு படுக்க...

மனைவியின் செயலில் தன்னையே நொந்தவனோ தன்னவளை அப்படியே பூமாலையாய் தூக்கி தன் மார்பையே அவள் தலைக்கு மஞ்சமாக்கி... தன்னோடு இறுக்க அணைத்து, “எதையும் யோசிக்காம பேசாம தூங்கு டி” என்றவன் தானும் தூங்க முயற்சிக்க... அவனின் நினைவுகளோ அவனையும் அறியாமல்.... இவர்களின் திருமண நிகழ்வை நோக்கி பயணித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு...
எப்போதும் திபாகரனின் வீடு சற்று கலகலப்பாய் இருக்கும். அண்ணன்... தங்கைகள் என்று அனைவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து... வம்பிழுத்து... பேச்சும் சிரிப்பும் நிறையும் அவர்கள் வீட்டில்... பிள்ளைகளுடன் தமிழரசியும் அந்த கலகலப்பில் கலந்து கொள்வார். கடலழகன் எப்போதுமே இவர்களின் செயல்களை தூர நின்று தான் ரசிப்பார்... இதில் தற்போது ஒரு வாரகாலமாய் தாயின் முகம் களையிழந்து இருப்பதும்... திபாகரன் காணும் போது எல்லாம்.. தாய், சாமி படங்கள் முன் வேதனையான முகத்துடன் நிற்பதுமாய் இருக்க... இவை எல்லாம் திபாகரனுக்குள் எதுவோ சரியில்லை என்று உறுத்திக் கொண்டேயிருக்க.... தாயிடம் அது பற்றி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவன்... இன்று கல்லூரியிலிருந்து சீக்கிரமாக வந்து என்ன ஏது என்று தாயிடம் இவன் அழுத்தி கேட்க

கண்ணீருடன் அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தார் தமிழரசி... அவரும் தான் அந்த பாரத்தை தனியாளாய் எத்தனை நாள் சுமப்பார்… கடலழகனும், தமிழரசியும் நற்தம்பதிகளே... அன்பு... பாசம் காதல்... என்று இருவரும் அதில் திளைத்து வாழ்ந்தவர்கள் தான்... கடலழகன் தன் மனைவி மீதும், பிள்ளைகள் மீதும் அதீத பாசம் வைத்திருந்தார். அந்த பாசமும்... அவர் விரும்பிய பகட்டு வாழ்வும் தான்... அவரை அத்தகைய செயலை செய்ய வைத்தது. மனைவிக்கும்... பிள்ளைகளுக்கும் அவர்கள் கேட்காமலே... அவர்கள் விரும்பியதை வாங்கி தர வேண்டும் என்று இவர் நினைக்க... அதற்கு அவர் பொருளாதாரம் இடம் தரவில்லை. விளைவு... மகிழ்வரதனின் கம்பெனியில்... கணக்கராய் வேலை செய்த அவர்... அங்கு கம்பெனி பணத்தை கையாடல் செய்து விட... அவர் நேரம் அவரின் முதலாளியான சசிரேகாவிடம் கையும் களவுமாய் பிடிபட்டு கொண்டார். தன் ஆளுமையைக் காட்ட சசிரேகாவுக்கு சொல்லித் தரவா வேண்டும்... கடலழகனை அழைத்து அவரை உண்டு இல்லை என்று செய்து விட... இறுதியாய்... போலீசில் கடலழகனை ஒப்படைக்க இருந்த நேரம்... கடலழகன் மானத்திற்கு அஞ்சி மகிழ்வரதனிடம் அழுது கெஞ்சி வேண்டவும்... கடலழகன் திருடிய பணத்தை திரும்பி தந்து விட்டால்... அவர் சிறை செல்ல வேண்டியதில்லை என்று மகிழ்வரதன் முடித்து விட்டார்... பின்னே அவர் கெஞ்சலில் வேறு என்ன தான் மகிழ்வரதனால் செய்ய முடியும்.

அதிலும் ஒரு சிக்கல் இருந்தது... கடலழகன் தன் மூன்று பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு என்று தலா ஐந்து லட்சம் என்ற பேரில்... பதினைந்து லட்சத்தை கையாடல் செய்தவர்.... அதை இரட்டிப்பாக்க யாரோ முகம் அறியா ஒருவரிடம் வட்டிக்கு விட்டிருக்க... இவரிடம் வாங்கியவனோ ஏமாற்றி விட... அவ்வளவு தான் மொத்தமாய் பதினைந்து லட்சமும் பறிபோக... கம்பெனியிலும் மாட்டிக் கொண்டார் கடலழகன். தற்போது பணத்திற்கு என்ன செய்வது... என்பது கணவன் மனைவி இருவருக்கும் புரியாத நிலை...

தமிழரசி சொல்லி முடிக்க... திபாகரனுக்குள் அதிர்ச்சி.... ‘அப்பா திருடுவாரா!... மற்றவர் பொருளுக்கு ஆசை பட கூடாது... நீதி... நேர்மை... ஒழுக்கம்னு சொல்லிக் கொடுத்து எங்களை வளர்த்த என் அப்பா திருடுவாரா?’ இது தான் அவன் அதிர்ச்சிக்கு முதல் காரணம். ஆனால் நடந்து விட்டதே.. இனி என்ன செய்ய...

அவர்கள் குடும்பம் இருக்கும் சூழலில்... அதிலும் அவன் M.B.A இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் வேளையில்... அவர்கள் கொடுத்த கெடுவில் நான்கு நாள் முடிவதற்குள் எப்படி பதினைந்து லட்சத்தைப் புரட்ட முடியும்.. திபாகரனால் பணத்தை தான் புரட்ட முடியாதே தவிர... வேறு ஒன்றை நிச்சயம் அவனால் செய்ய முடியுமே...

“ம்மா... அழாதீங்க... அப்பா செய்தது மிகப்பெரிய தவறு... ஆனா ஒரு மகனா அந்த பணத்தை என்னால் திருப்பித் தர முடியும்... வேலை கிடைத்ததும் இரண்டு வருடத்தில் அதை நான் செய்திடுவேன்... அதுவரை அந்த முதலாளி எனக்கு அவகாசம் தந்தால் போதும்மா...” திபாகரன் தன் நிலையில் தந்தையின் பாரத்தை சுமக்க நினைக்க... அகமகிழ்ந்து தான் போனார் தமிழாசி.

தான் கொடுத்த வாக்கு படி..... திபாகரன் மகிழ்வரதனை சந்தித்து பேச செல்ல.... அங்கு தான் அவன் வாழ்வில் யாரும் எதிர்பாராத திருப்பு முனையே நிகழ்ந்தது.... முதலாளி தான் சொன்னதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று இவன் முகம் வாட திரும்பி வந்து விட...


மறுநாளே வேறு ஒரு செய்தியுடன் கடலழகனை சந்தித்தார் மகிழ்வரதன். அந்த செய்தி... விதுனதிபாகரனுக்கும்... தன்யரித்விகாவுக்கும் திருமணம் என்பது தான் அது. இத்திருமணம் நடந்தால் கடலழகன் திருடிய பதினைந்து லட்சத்தை தர வேண்டாம் என்பது தான் மகிழ்வரதனின் பேச்சின் கூடுதல் அம்சம். அதை கடலழகன் மனைவியிடம் வந்து சொல்ல... கசக்குமா தமிழரசிக்கு.... கோடி கோடியாய் பணத்தில் புரளும் தன்யா குடும்பம் எங்கே... மாத நெருக்கத்தில் சில செலவுகளை குறைத்துக் கொண்டு கைக்கும் வாய்க்குமாய் ஜீவனம் நடத்தும் இவர்கள் எங்கே... எத்தனையோ ஏணிகளை இவர்கள் படிகளாக வைத்து ஏறினாலும் இப்படி ஒரு குடும்பம் தங்களுக்கு சம்பந்தமாய் வாய்க்காதே... இதை உணர்ந்ததாலோ என்னவோ... இத்திருமணத்திற்கு மறுத்த மகனிடம் மடிபிச்சை வேண்டினார் அவர்.

தந்தை கையெடுத்து கும்பிட... தாய் மடிபிச்சை வேண்ட.... திபாகரனுக்கோ தர்மசங்கடமான நிலை... “அம்மாப்பா.. புரிஞ்சிக்கோங்க... நான் அந்த பொண்ண பார்த்தது கூட இல்லை... நான் அந்த பெண்ணை மறுக்கல... எனக்கு இப்போ திருமணம் தான் வேண்டாம்னு சொல்றேன்... கனவில் கூட நான் என் கல்யாணத்தைப் பற்றி யோசித்தது கிடையாது.. நீங்க பார்க்கிற மத்த மிடில் கிளாஸ் பையன் மாதிரி நான் இல்ல மா எனக்கு சில லட்சியங்கள் இருக்கு... அதெல்லாம் ரொம்ப பெருசு.. அதை அடைய எனக்கு கல்யாணம் என்கிற கமிட்மெண்ட் ஒரு தடை கல். அதனாலே என் லட்சியத்தை நோக்கி என்னை போக விடுங்க.. தயவுசெய்து நீங்களே என் லட்சியத்துக்கு தடையா நிற்காதீங்க.. நான் மறுபடியும் அவங்க கிட்ட பேசி பார்க்கிறேன்.. கண்டிப்பா வேற வழி ஏதாவது இருக்கும்.. கொஞ்சம் என்னை பற்றி யோசித்து எனக்கு உறுதுணையா இருக்க பாருங்க” இவன் உறுதியாய் மறுத்து விட...

“உன்னை பற்றி யோசிக்காமல் இருப்போமா டா கண்ணு.. ஆனா உன் அப்பாவோட நிலைமையை யோசிச்சு பாரு டா.. உன்னை விட அவர் தான் பா நெருப்பு மேல் நிற்கறாரு.. அந்த கடவுளா பார்த்து ஒரு வழி சொல்லி இருக்காரு.. அந்த வழியை நீயே அடைக்கலாமா சொல்லு.. நீ நினைக்கிற மாதிரி உன் லட்சியத்துக்கு தடையா இந்த கல்யாணம் கண்டிப்பா இருக்காது பா.. அதை நீயே பிறகு புரிந்துக்குவ.. தயவுசெய்து கல்யாணத்திற்க்கு ஒத்துக்கோ டா” என்று தமிழரசி மீண்டும் வேண்ட..

“என்னம்மா திரும்ப திரும்ப அதையே சொல்றீங்க.. அப்பாவை காப்பாற்றுவது என் கடமை தான்.. அதே சம..” மேற்கொண்டு அவனைப் பேச விடாமல் எந்த தாயும் செய்யாத செயலை செய்தார் தமிழரசி...

“உன் காலில் வேணாலும் விழறேன் திபாகரா... நம்ம குடும்ப மானத்தைக் காப்பாற்று...” சொன்னவர் அதன்படியே சாஷ்டாங்கமாய் மகன் எதிரில் விழுந்து விட.... தீ சுட்டது போல் விலகிய திபாகரனோ துடிதுடித்துப் போனான்...

“ம்மா எழுந்திருங்க… என்ன காரியம் செய்றீங்க… நீங்க போய் என் பாத…. ம்மா நான் படிச்சிட்டு இருக்கேன்… வேலை வெட்டி இல்லாதவன்…. அதுவும் இல்லாமல் எனக்கு பிறகு மூன்று தங்கைகள் இருக்க… நான் எப்படிமா மணையில் அமர….” இவன் இன்னும் தயங்க

“அப்போ நானும் உன் அப்பாவும் பிணவரை போய்டுவோம் பரவாயில்லை யா” தமிழரசி தான் சொன்னதை செய்வேன் என்ற குரலில் அறிவிக்க… அதிர்ந்தவன் அந்த நொடியே அவன் தன் சம்மதத்தை சொல்லி விட... அதன் பிறகு அவன் வாழ்வில் நடந்தது எல்லாம் அவன் அறியாதவைகள் தான்.


திருமணதிற்கு இரண்டு தினங்களுக்கு முன் தமிழரசி மகனிடம் ஏதோ சொல்ல வருவதும் தயங்குவதுமாய் இருக்க... “ம்மா... இந்த திருமணம் நடப்பதே அப்பாவையும் உங்களையும் முன்னிறுத்தி தான்... சோ எனக்காக நீங்க எதுவும் பார்க்க வேண்டாம்.... நீங்க எது செய்கிறதா இருந்தாலும் தயங்காமல் செய்யுங்க... என் கிட்ட அனுமதி கேட்கவோ… சொல்லிட்டு இருக்கவோ வேணாம்... ஏன் பெண்ணைக் கூட நான் பார்க்க தயாரா இல்ல... வந்து தாலியை கட்டுடான்னு சொல்லுங்க... அதன்படியே வந்து கட்டுறேன்...” இவன் முடித்துவிட... பூரித்து தான் போனார் தமிழரசி. தாய்க்கே உள்ள என் மகன் என்ற கர்வம் அப்போது அவருள் படர தான் செய்தது…


திருமண நாளும் வர... எளிமையாய் கோவிலில் நடந்தேற... இவன் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொன்னதை செய்து கொண்டிருக்க... அந்நேரம் யாரோ பெண்ணை அழைத்து வர... இவனுக்குள் ஏதோ உந்த.. அதில் இவன் நிமிர்ந்து அவள் வரும் திசையைக் காண... மருண்ட விழிகளோடு... குழந்தை முகம் என... அந்த முகத்தில் அப்பட்டமாய் சோர்வு தெரிய... பார்பி பொம்மையைப் போல்... அன்ன நடையிட்டு வந்து கொண்டிருந்தாள் பத்தொன்பதே வயது பாவை... இல்லை இல்லை குழந்தை மனம் கொண்ட தன்யரித்விகா…
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN