நெஞ்சம் 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தாய்... தந்தையரை முன்னிறுத்தி தான் இத்திருமணம் என்றாலும்... ஏனோ தன்யாவைக் கண்டதும் அதிர்ந்து தான் போனான் திபாகர். அவன் நினைத்தது என்னமோ உடலளவில் ஊனமாய்... அல்லது முகம் ஏதோ ஒரு வித அவலட்சனத்தில் இருக்க... ஏன்... மறுமணம் என்ற நிலையில் கூட தான் மணக்கவிருக்கும் பெண்ணை கற்பனை செய்து வைத்திருந்தான்... அதில் நிச்சயமாகவும் இருந்தான்.

பின்னே வேறு எதற்கு இந்த கோடீஸ்வரர் தன்னை இவருக்கு மருமகனாய் வர இக்கட்டுகள் வைத்திருப்பாராம்? ஆனால் இதில் எதுவும் இல்லாமல்... அவன் நினைத்ததை பொய்யாக்குவது போல்... தங்க சிலையென... குழந்தை முகம் கொண்டவள் வந்து அமர்ந்தால் இவனுக்கு எப்படி இருக்கும்...

‘ஐயோ! பார்க்க ரொம்ப குழந்தையா தெரியறாளே... ஒருவேளை சிறுமி திருமணமோ... இந்த குழந்தையா என் மனைவி? மணவறை தூரம் வந்த பிறகு இனி எப்படி?’ என்று திபாகரன் எண்ணும்போதே... அவனின் பக்கத்தில் வந்ததமர்ந்தாள் தன்யா. என்னதான் அவனின் பக்கத்தில் அமர்ந்தாலும்.. ஏனோ தன் மருண்ட விழியால்... ஒரு முறை கூட நிமிர்ந்து திபாகரனைக் காணவில்லை அவள்.

ஓரவிழிப் பார்வையால் கூட தன்னைக் காணாதவளை கண் சிமிட்டாமல்... கொஞ்சமும் லஜ்ஜையின்றி... தன்யாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தான் திபாகர். ஐயர் சொல்வதைக் கூட செய்யாமல் தன்யா விழிக்க, “அதை இங்க வை கண்ணு... இதை இப்படி செய்... தம்பி கையில் கொடு கண்ணு...” என்று அவளுடனே அமர்ந்து.... அவளுக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருந்த... வயது முதிர்ந்த பெண்மணியின் சொல்லைத் தான் கேட்டு நடந்தாள் தன்யா. திபாகரனுக்கே பார்த்தவுடனே தெரிந்து விட்டது... அவர் அவளின் பாட்டி என்று.

மாங்கல்ய தாரணம் செய்யும் போது... சித்ரா கையில் தீபத்துடன் ஒதுங்கி விட... நாத்தனார் முடிச்சை யார் போடுவது என்ற உரிமைப் போராட்டத்தில் சத்தமில்லாமல் குலமதியும், தவமதியும் மோதிக் கொள்ள... இருவரையும் தன் கண் பார்வையால் அடக்கியவனோ... ‘நானே மூன்று முடிச்சையும் போட்டுக்குறேன்...’ என்ற நிலையில் தன்னவளுக்கு அதையே செய்ய... திபாகரனின் செயலில் கண்ணீர் சுரந்தது.... அந்த வயது முதிர்ந்த பெண்மணிக்கு.

“கருவேலங்காட்டு கருப்பா... என் தேர்வு சரின்னு சொல்லிட்டப்பா...” என்று அவர் வாய்விட்டே முணுமுணுக்க... அவர் முகத்தில் என்ன கண்டானோ... தன்னையும் மீறி விழி மூடித் திறந்து பெரியவருக்கு ஆறுதல் அளிக்க.. அதில் நெஞ்சம் குளிர்ந்து தான் போனது தன்யாவின் பாட்டிக்கு.

“கண்ணு எழுந்து... மாப்பிள்ளை கையை பிடிச்சிட்டு இந்த இடத்தை சுற்றி வா...” என்று தன்யாவிடம் அவள் பாட்டி சொல்ல

அதை செய்யப் போனவளோ.... எழுந்து நின்றதும் தடுமாற... அப்போது தான் அவளுக்கே தெரிந்தது... அவள் இடுப்பிலிருந்த புடவை கொசுவம் சரிந்து விட்டது என்று. சிறு பெண் என்பதாலும் அவள் அவ்வளவாக புடவை கட்டிப் பழகாததால் நேர்ந்த விளைவு இது. நடக்கும்போதும்... நிற்கும்போதும் சமாளித்தவளால் தற்போது அது நடவாமல் போக... பெண்ணவளுக்கோ விழிகள் கலங்கியது. பொண்ணவளின் நிலையை நொடியில் யூகித்த திபாகரனோ... சற்றும் யோசிக்காமல் அவளைத் தன் கைகளால் தாங்கி நிறுத்தியவனோ... தன் தோளில் வழிந்த அங்கவஸ்திரத்தை எடுத்து... தன்யாவின் இடுப்பில் முடிய எத்தனிக்க...

“தம்பி... தம்பி... அது உங்க அங்கவஸ்திரத்தையும்... கண்ணுவோட புடவையையும் சேர்த்து முடி போட்ட பிறகு தான் நீங்க இருவரும் வலம் வரணும்...” என்று தன்யாவின் பாட்டி அவசரமாய் மொழிய...

‘இவ இப்போ இருக்கும் நிலைக்கு இது தேவையா?’ என்ற எண்ணத்தில் சற்றே அவனுள் கடுமை பரவியது. இருந்தாலும் பெரியவரின் வார்த்தைக்காக இவன் அங்கிருந்த தங்கை குலமதிக்கு விழி அசைவால் செய்தி சொல்ல... அதில் அவளோ சிட்டாய் பறந்து சென்று ஒரு அங்கவஸ்திரத்தை எடுத்து வந்து தர... அதை வாங்கி கடமை சிரத்தையாய் மனைவியின் இடுப்பில் இவன் கட்டி விட... அவனின் செயலைத் தான் அங்கிருந்தவர்கள் அனைவருமே வாய் மேல் விரல் வைத்து பார்த்திருந்தார்கள்.

வழக்கமாய் பெண்ணின் சுண்டு விரலையும், ஆணின் சுண்டு விரலையும் கோர்த்து தான் அக்னியை வலம் வர சொல்லுவார்கள். இங்கும் அப்படியே செய்ய சொல்ல... ஆனால் திபாகரன் அதை செய்யாமல்... தன்னவளின் வலது கை மணிக்கட்டை மென்மையாய் பற்றி அழைத்து செல்ல.... இதை கண்ட அவனின் தாயான தமிழரசியே சற்று அசந்து தான் போனார் ‘இவன் என்ன வந்தவளை இப்படி தாங்குறான்!...’ என்ற எண்ணத்தில்.

நான்கு அடி தான் திபாகரன் எடுத்து வைத்திருப்பான்... அதற்குள் தன்யா துவள ஆரம்பிக்க... அதை தன் பிடியில் கண்டு கொண்டவனோ, “ஹேய்...” என்ற கூச்சலுடன் மின்னல் வேகத்தில் இவன் மனைவியைத் தன் நெஞ்சில் தாங்கி கொள்ள... அதன் பிறகு அந்த இடமே கலவரமானது.

“யாரு ப்பா அங்க.. அதுவே நோயாளி பொண்ணு.. அதுக்கு சாப்பிட ஏதாவது தந்தீங்களா...”

“உடம்பு சரியில்லாத பொண்ணு இல்ல... அதான் இப்படி மயங்கி விழுந்துடுச்சு....”

“புகை வேற... பாவம் அந்த பொண்ணு.. கொஞ்சம் தள்ளி நின்று... காற்றோட்டமா விடுங்க...”

“கோடி கோடியா பணம் இருக்கு... கடைசியில் மகிழ்வரதன் பொண்ணுக்கு இப்படி ஒரு நோய் வந்திருக்க வேணாம்...” இப்படியாக அங்கு பல கலவையான குரல்கள் ஒலிக்க... அப்போது தான் விதுனதிபாகரனுக்கு ஏதோ ஒன்று புரிவது போல் இருந்தது. ஆனால் அவனை மேலே சிந்திக்க விடாமல் டாக்டர் வந்து மணப்பெண்ணை பரிசோதிக்க... அதில் தன்யாவின் பெற்றோரும், உற்றாரும் அவளை சூழ்ந்து கொள்ள... தாலி கட்டிய மறு வினாடி முதல் தன்னவளிடமிருந்து அன்னியமாகிப் போனான் திபாகரன்.


திபாகரனுக்கு... மகிழ்வரதன் நடத்தி வரும் பல தொழில்கள் பற்றி தெரியும்..... ஏன் சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு கூட இவனுக்கு தெரியும். ஆனால் அவர் மகளுக்கு நோய் என்பது இவனுக்கு இன்று வரை தெரியாது. இந்த திருமணம் முடிவான போது கூட... இவன் எதையும் யாரிடமும் விசாரிக்கவில்லை. அதற்கு முதல் காரணம் அவன் படித்துக் கொண்டிருந்ததால்... கல்லூரியிலும் சரி... அவன் நண்பர்களிடமும் சரி... அவனின் திருமணத்தை யாரிடமும் திபாகரன் தெரியப்படுத்தவில்லை.

அடுத்து, இவனுக்கு தான் தன்னவளை தேர்ந்தெடுக்கும் உரிமையில்லையே... தந்தை செய்த குற்றத்தால்... தன்யா தான் இவனின் துணையென்று ஆன பிறகு... இவன் எதற்கு யாருக்காக விசாரிப்பான்.


அதன் பிறகு தன்யா மூன்று தினங்கள் மருத்துவமனையில் இருக்க... திபாகரனால் தான் தன் மனைவியை நெருங்கி நலம் விசாரிக்க முடியவில்லை. இந்த சோதனை... அந்த சோதனை என்றார்கள். யாரும் தற்சமயம் தன்யாவைக் காண்பது உசித்தமில்லை என்றார்கள். கணவனே என்றாலும்... அவர்களின் மேல்தட்டு வர்க்கத்துக்குள் நுழைய முடியாமல் தவித்தான் ஆண்மகன். இதில், இவனுக்கு தேர்வு வேறு நெருங்கியது.

“இதுக்கு தான் படிக்கும் போது கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்... அவசரகதியில் எல்லாத்தையும் செய்திட்டு... இப்போ... நான் தான் அனுபவிக்கிறேன்...” என்று வாய் விட்டே புலம்பியவனின் மனது... எப்படியாவது இன்று மனைவியை சந்தித்தே தீர வேண்டும் என்று தீர்மானித்தது.

இவன் அதே உறுதியுடன் தன்யாவைக் காண மருத்துவமனை விரைய.. இவன் நல்ல நேரம் அவளின் அறை வாயிலிலேயே இவனை கண்டு கொண்டார் தன்யாவின் பாட்டி.

“வாங்க தம்பி... எப்படி இருக்கீங்க...” என்று அவர் இவனின் நலம் விசாரிக்க

“நான் இருக்கிறது இருக்கட்டும்... அவ எப்படி இருக்கா... உங்க பேத்தி உடலுக்கு என்ன... டாக்டர் என்ன சொல்கிறார்... ஒரு சாதாரண மயக்கத்துக்கு... எதுக்கு இத்தனை நாள் ஆஸ்பிட்டலில்?” இவன் அவசர கதியில் அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்க...

ஒரு நிமிடம் அவனை வியந்து பார்த்த அந்த மூதாட்டி, “அப்போ தன்யாவுக்குள் இருக்கிற நோய் உங்களுக்கு தெரியாதா.... அது வந்து... இதை நீங்க உங்க அப்பாம்மா கிட்ட கேட்கிறது தான் நல்லது... நீங்க அவங்ககிட்டயே கேளுங்க..” இவர் பட்டும் படாமல் முடித்து விட

“யார் தன்யா?” அடுத்து இவன் கேட்ட கேள்வியில்.... அப்பட்டமாய் அதிர்ந்தே போனார் அவர்.

“தன்யரித்விகா... இது தான் என் பேத்தி பேர்... அதாவது... உங்க பொஞ்சாதி பேர்...” பெரியவர் விளக்க

“ஓஹ்... நீங்க ஏதோ கண்ணு... கண்ணுன்னு சொன்னீங்களா...” அன்றைய தினத்தின் அழைப்பை இவன் நினைவுபடுத்த...

“நான் தன்யாவை அப்படி தான் பா கூப்பிடுவேன்...”

அவர் பதிலைக் கிடப்பில் போட்டவன், “அது வந்து.. நான் படிச்சிட்டு இருக்கும்போதே எங்க கல்யாணம் நடந்தது... அதனால் தான் நான் எதையும் சரியா கேட்டுக்கல... இன்னும் சொல்லனும்னா தன்யாவை போட்டோவில் கூட நான் பார்த்தது இல்ல... இப்போ டாக்டரை நெருங்கி அவ உடல்நிலை சம்மந்தமா என்னால் பேசவும் முடியல.... எனக்கு தேர்வு வேற வர இருக்கு... அதில் நான் பிசியாகிடுவேன்...” இப்படியாக துண்டு துண்டாய் சொல்லிக்கொண்டு வந்தவன்... பின் நிறுத்தி,
“இப்போ நான் அவளைப் பார்க்கலாமா...” என்று கேட்க

“கேட்கணுமா தம்பி... உள்ள போங்க...” பதில் தந்தவர் விலகி விட

இவனுக்குள் தயக்கம்... ‘அவளைப் பற்றி எதுவும் தெரிஞ்சிக்காம கல்யாணம் செய்துட்டு... இப்படி தூர நின்னுட்டனே...’ என்ற எண்ணத்தில் சட்டையை நீவி சரி செய்வதும்... தலை கோதுவதுமாய்... இருந்தவனோ... பின் ஒரு நீண்ட பெருமூச்சுடன் உள்ளே நுழைய...

கட்டிலில் படுத்திருந்தவளோ... கதவுக்குழியின் ஓசையில் கண்விழித்து காண.... அந்நேரம் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று தழுவிக் கொண்டது. வெளியே தான் திபாகரனுக்கு எல்லா தயக்கமும் போல... உள்ளே நுழைந்தவனுக்கு... அத்தயக்கம் எல்லாம் தூர விலகிச் சென்றுவிட... வாடிய கொடியாய் துவண்டு... படுத்திருந்தவளை நெருங்கியவனின் கரங்களோ... மனைவியின் கேசத்தைக் கோத உயர...

அந்நேரம் கதவைத் திறந்து கொண்டு தன்யாவின் அறைக்குள் நுழைந்தது ஒரு டாக்டர் குழு. அவர்களைக் கண்டதும்... இவன் தலைமை மருத்துவரை நெருங்கி, “டாக்டர்... தன்யாவுக்கு...” என்று மனைவியின் நலம் பற்றி விசாரிக்க எத்தனிக்க....

“சார்... நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருக்கீங்களா... சசிரேகா மேடம் வந்துட்டு இருக்காங்க... Its already late... Pls be out” என்று முடித்த அவர்... மற்றவர்களிடமும் தன்பங்குக்கு வேலைகளை ஏவ...

இங்கு தனக்கு அவமானம் நேர்ந்தாலும்... அதை மனைவியிடம் காட்டாமல்... அவளைக் கண்டு ஒரு தலையசைப்புடன் வெளியேறினான் திபாகரன்.

அதன் பிறகு இவன் தன்னை தேர்வில் ஈடுபடுத்திக் கொள்ள... எல்லாம் முடித்து இவன் நிமிர்ந்த போது... தன்யாவை மருத்துவமனையில் இருந்து... அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர் என்ற செய்திதான் இவனுக்கு கிடைத்தது.

அதில் இவன், “என்ன ம்மா... எதுக்கு தன்யா இன்னும் அவங்க அம்மா வீட்டில் இருக்கா.... எனக்கு தான் எக்ஸாம்... நீங்க போய் அவளை அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்று தாயிடம் கேட்க

தமிழரசியிடம் மவுனம் மட்டுமே... அதில் இவனுக்குள் நெருட, “ம்மா... என் கிட்ட எதையாவது மறைக்கிறீங்களா...” என்று இவன் நேரடியாகவே கேட்டு விட...

இன்னும் தயங்கினார் தமிழரசி... அதெல்லாம் ஒரு நொடி தான்... பிறகு வழக்கம் போல் அவர் இயல்பு தலை தூக்க, “தன்யா நம்ம வீட்டுக்கு வர மாட்டா... நீ தான் அவ வீட்டுக்கு போகணும்... திருமணம் சம்மந்தமா பேசும்போதே... இங்க வசதிப்படாதுன்னு அவ வீட்டில் சொல்லிட்டாங்க....” என்று முடிக்க

சாதாரணமாகவே தன்மானம் பார்ப்பவன் இதை எப்படி ஏற்றுக் கொள்வான்... அவனுள் அதிர்ச்சி தான்.... “ஓஹ்... அப்போ பதினைந்து லட்சத்துக்கு என்ன அவங்க கிட்ட விற்றுட்டீங்களா....” இவன் கேட்க... இப்போது அதிர்வது தமிழரசியின் முறையானது.
இவன் அடுத்த கேள்வியாக, “ஆமாம்.... தன்யா யாரு ம்மா...” என்று கேட்க

“இது என்ன டா... கேள்வி... அவ தான் உன் பொஞ்சாதி...”

“ஒஹோ.... அவ பேரே தன்யா மட்டும் தானா ம்மா?” இவன் தன்மையாய் கேட்க

“தன்யரித்விகா...” தாய் பட்டும் படாமல் பதில் தர...

“அவ பெயர் கூட தெரிஞ்சிக்காம... பெத்தவங்களான உங்களை நம்பி கல்யாணம் செய்ததுக்கு... எனக்கு மிகப் பெரிய நல்லது செய்திட்டிங்க. உங்களுக்கு மகனா பிறந்ததுக்கு.. எனக்கு உணர்வுகள் இருக்க கூடாதுன்னு முடிவு செய்திட்டிங்களா...”

இப்படியாக கேட்டவன், “நீங்க அங்க என்ன சொல்லுவிங்களோ... ஏது செய்விங்களோ... எனக்கு தெரியாது.... தன்யா என் மனைவி... உங்க மருமக... இனி அவ நம்ம வீட்டில் தான் இருக்கணும்...” உறுதியாய் சொன்னவன் அங்கிருந்து விலகி விட... மகனின் கேள்வியிலும்... அவனின் நிலையிலும் பாவம் மனதால் அடி பட்டு தான் போனார் தமிழரசி. இந்த கலேபரத்தில்... மனைவிக்கு என்ன நோய் என்பதை தன் தாயிடம் கேட்க தவறி விட்டான் திபாகரன்.

ஒரு மாதம் சென்று மறைய ... அன்று திபாகரனை வேலைக்கு வந்து சேரும்படி... ஒரு கம்பெனியிலிருந்து அழைப்பு கடிதம் வந்திருக்க... அதை கையில் வாங்கியவன், “இத்தனை நாள்... தன்யாவை அழைச்சிட்டு வர்றத பற்றி நான் பேசினா.. பிடி கொடுக்காம இருந்தீங்க... நானும் என் வேலையைப் பொறுத்து பேசாமா போனேன்... இப்போ எனக்கு வேலை கிடைச்சிடுச்சு... இதற்கு மேல தன்யா அங்கே இருக்க வேண்டாம்... நானே போய்.. அழைச்சிட்டு வரேன்...” என்று தாயிடம் அறிவித்தது போல் இவன் சென்று மனைவியின் வீட்டில் நிற்க

அவனை அங்கு வரவேற்க தான் யாரும் இல்லை... இன்னும் சொல்ல வேண்டும் என்றால்... அவன் மனைவியே அங்கு இல்லை... செக்கப்பிற்காக வெளியூர் சென்றிருந்தாள்... இது இவனுக்கு தெரியாதே...

இவனை வரவேற்று அமர வைத்த சோபியா... என்ன என்று விசாரிக்க... இவன் மருமகன் என்பதை மறைத்து... தன்யாவின் பெற்றோரைக் காண வேண்டும் என்று சொல்ல... “சாரி சார்... appoinment இல்லாமல்... பாஸையும்... சாரையும்... காண முடியாது என்று அவள் மறுக்க....

இவனுக்குள் கோபம் துளிர்ந்தது. அதில், “நான் அவங்க கம்பெனியில் வேலை செய்த கடலழகன் மகன் விதுனதிபாகரன் வந்திருக்கேன்னு அவங்க கிட்ட சொல்லுங்க... பிறகும் என்ன பார்க்க மாட்டேன்னு மறுத்தா நான் போய்கிட்டே இருக்கேன்....” என்று சொன்னவன் ஒரு ஆளுமையுடன்... சட்டமாய் அங்கு அமர்ந்து விட...

இனி என்ன செய்வது என்ற நிலையில்.... சோபியா இருவருக்கும் தகவல் தெரிவிக்க... ஏற்கனவே ஒரு டீலிங் கையை விட்டுப் போனதால் ஏக கொதிப்பில் இருந்த சசிரேகா... திபாகரன் சட்டமாய் வீட்டில் அமர்ந்திருப்பதைக் கேட்டு இன்னும் கொதிநிலைக்கு சென்றவள்... அதே வேகத்துடனே வீட்டிற்கு வந்து...

“உன்னை பார்க்க நான் அனுமதி தராத போதும்... இப்படி விடாப்பிடியா... அமர்ந்து தர்ணா செய்யறது சரியா... அப்படியே லோ கிளாஸ் பீப்பிள்னு காட்டுறீயே... say what u want...” என்று மாமியார் ஏக வசனத்தில் பொரிய.. சர்வமும் அடங்கியது திபாகரனுக்கு.

இதென்ன மாதிரியான செயல்... அவரின் வார்த்தைகளை ஒதுக்கி தள்ளியவன், “இந்த லோ கிளாசிலிருந்து வந்தவன் தான் உங்க வீட்டு மருமகன்... ஏன் அது உங்களுக்கு மறந்து போச்சா... சரி நீங்க மறந்தது இனி மறந்ததாகவே இருக்கட்டும்... தன்யாவை என் கூட அனுப்பி வைங்க நான் போயிடறேன்..” இவனும் திமிராய் அறிவிக்க

சசிரேகா இந்த உலகத்திலே ஒரு உறவை வெறுக்கிறாள் என்றால்.... அது மருமகன் என்ற அடைமொழியில் உள்ள விதுனதிபாகாரனின் உறவைத் தான்... அதையே அவன் சொல்லிக் காட்டவும்... “என்ன! என் மகளை உன் வீட்டுக்கு அனுப்பனுமா?... உன் அப்பன்... பணத்தை திருடிட்டு நின்னப்போ எல்லாத்துக்கும் சரிசரின்னு... தலையை ஆட்டிட்டு... இப்போ உன் அப்பன் தப்பிச்ச உடனே உன் புத்தியை காட்டுறீயா....” இவள் இன்னும் பாய.. வேலையாட்கள் முன்னாள் குன்றித் தான் போனான் திபாகரன்.

இன்றைய பேச்சில் திபாகரனுக்கு ஒன்று மட்டும் தெரிந்தது... அது, சசிரேகா ஒரு சாக்கடை! அந்த சாக்கடையில் கல்லை எறிந்தால்... தன் மீது தான் நாறும் என்பதை அறிந்தவன்... தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள, “என் மனைவி என் வீட்டுக்கு வரணும்... அப்படி வரலனா... உங்க மேலே கேஸ் போடுவேன்...” என்று இவன் சொல்லிக் கொண்டிருக்க...

உங்க மேல் கேஸ் போடுவேன் என்ற வார்த்தையைக் கேட்ட படி அங்கு நுழைந்த மகிழ்வரதன், “என்ன சசி... இவர் அப்படி என்ன நம்ம மேல் கேஸ் போட்டுடுவாராம்?” என்று எகத்தாளமாய் கேட்க

சசிரேகாவுக்கு இனி சொல்லவா வேண்டும், “இவனை ஏமாற்றி... இவன் தலையிலே நம்ம மகளை கட்டிட்டோமாம்... அதான் கேஸ் போடுவேன்னு சொல்கிறான்....” அவள் திரித்து சொல்ல

மனைவியை நம்பிய மகிழ்வரதன் கொஞ்சமும் யோசிக்காமல் இருவருக்குள் நடந்த வாக்கு வாதம் உண்மையோ என்று எண்ணியவர், “உன் அப்பன் ஜெயிலுக்கு போகாமல் இருக்க நாங்க செய்ததற்கு... நன்றி வேண்டாம்… எங்க மேலேயே கேஸ் போடறதா சொல்கிறயா?” என்று மகிழ்வரதன் கேட்டு முடிக்கவில்லை...

அதற்குள் சசி, “நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தா இப்படி தான்... இனி இவன் நம்ம வீட்டில் ஒரு நிமிஷம் கூட இருக்க கூடாது வெளியே போடா பரதேசி...” என்று அவளும் வார்த்தையை விட...

தன் தன்மானம் சீண்டப் படவும்... அந்த நொடி மனைவியையும் மறந்து... மனதில் ஒரு முடிவுடன்
வெளியேறினான் திபாகரன்.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN