பூ 29

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூ 29

மரகதம் தேவாவை அழைத்துக்கொண்டு இருக்கையில் அங்கு வந்த இளையாவும் "என்ன அக்கா? தேவா இன்னும் எந்திரிக்கலையா? என்றதும் "நானும் கால் மணி நேரமா தட்டுறேன் புள்ள... கதவு திறக்கமாட்டுறாளே" என்றபடி சற்று அழுத்தம் கொண்டு வேகமாக தள்ள அது தானாக திறந்து கொண்டது.

கதவு திறந்துக்கொள்ளவும் சற்று ஆஸ்வாசம் அடைந்த மரகதம் "கதவு திறக்கலன்னுதும் பயந்துட்டேன் இளையா" என்றபடி அறைக்குள் நுழைந்தவர் கல்யாண வீட்டிற்கே உண்டான பரபரப்பில் "நீ போய் வர்றவங்களுக்கு காபிய கொடுத்து நேரா கோவிலுக்கு போகசொல்லிடு இளையா... இன்னும் விடிய நேரமிருக்கு இவளுக்கு நலுங்கு வைச்சி குளிக்க வைச்சிடலாம் அப்புறம் மேகலாவும் அன்னமும் தேவாவ ரெடி பண்ணட்டும் நானும் மத்த வேலைகளை பாக்குறேன் புள்ள" என்றவர் நினைவு வந்தவராக "அப்புறம் அத்த முறைக்கு சாந்தா தான் முதல்ல நலுங்கு வைக்கனும்... அப்படியே அவளுக்கும் ஒரு குரலை கொடுத்துடு" என்று இளையாவிடம் கூறியபடியே படுக்கையை பார்க்க அது வெறுமையாக இருந்தது.

கூடவே படுக்கையில் ஒரு காகிதமும் இருக்க " இது என்ன லெட்டர் இருக்கு அக்கா?... தேவா எங்க ஆளை காணும்?..." என்ற இளையா சென்று குளியலறையில் பார்க்க அங்கும் வெறுமையாக இருந்தது.

குளியலறையில் தேவா இல்லை என்றதும் "தேவா…. எங்க இருக்க…" என்று உரக்க அழைத்தவர் மகள் வராமல் போகவே எங்கெங்கோ எண்ணங்கள் பயணிக்க கட்டிலின் மீது இருந்த கடிதத்தில் பார்வை பதிந்தது. நடுங்கும் கரத்துடனே காகிதத்தை எடுத்து பார்க்கவும் மயக்கம் வருவது போல் அவர் உடல் தள்ளாடி விழ மரகதத்தை தாங்கி கட்டிலின் மேல் அமரவைத்த இளையா, அவரின் கையில் இருந்த பேப்பரை வாங்கி அதை வேகமாக பிரித்துப் படித்தார்.

படித்தவரின் கண்களில் அதிர்ச்சி கண்ணீர் இது இரண்டில் முதலில் எது வெளிப்படுவது என போட்டி போட்டுக்கொண்டு இருந்தது… மரகதத்திற்கு இளையாவின் முகம் ஏதோ நடக்க கூடாதது நடந்து விட்டது என்ற விபரீதத்தை உணர்த்த "திக்கி திணறியபடி குரலில் கலக்கத்தை தேக்கி என்ன இளையா தே… தேவா… எங்க" என்றார்

"அக்கா…நீ … நினைச்சி பயந்தமாதிரியே நடந்துடுச்சி… அவ நம்ம தலையில பெரிய கல்லை போட்டுட்டு போயிட்டா கா… இந்த கல்யாணம் பிடிக்கலன்னு லெட்டர் எழுதி வைச்சிட்டு போயிட்டாக்கா" என்று கூறி அழவும் இளையாவின் அழுகை சத்ததை கேட்ட துரையும் சௌந்தரலிங்கமும் அங்கு வேகமாக வந்தனர்.

விடிய இன்னும் சில நாழிகைகளே இருக்கையில் மனைவி மற்றும் மைத்துனி இருவரும் அழுவதை கண்ட சௌந்தரலிங்கத்திற்கும் துரைக்கும் ஒன்றுமே விளங்கவில்லை "ஏன்டி நல்ல நாள் அதுவுமா அழுது வடியுற" என்று மனைவியிடம் கேட்க பக்கத்தில் அழுதபடி இருந்த இளையா கடிதத்தை துரையிடம் கொடுத்தார். அதை படித்த துரை "அண்ணா தேவா.... தான் லெட்டர் எழுதி வைச்சிட்டு போயிட்டா" என்று பதற்றத்துடன் சௌந்தரலிங்கத்திடம் நீட்டினார்.

அவர் வாங்கிய அடுத்த கணமே ஆவேசமாய் எழுந்த மரகதம் கணவரின் சட்டையை பற்றி திருப்தியா?.... இப்போ திருப்தியா?.... என் பொண்ணு போயிட்டா... எந்த ஆத்துல, குளத்துல, விழுந்து செத்தாலோ தெரியலையே…" என்று புலம்பிட மகள் விட்டு சென்ற கடிதத்தை பிரித்தார்.

பிரியமான அப்பாவிற்கு

என்னை மன்னிச்சிடுங்க அப்பா இந்த கல்யாணத்துல எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை என்னோட எதிர்ப்பை நான் எல்லா வழியிலையும் காட்டிட்டேன் ஆனா என் மனசை கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டிங்க இந்த கல்யாணத்தை நிறுத்த இதை தவிர எனக்கு வேற வழி தெரியல அப்பா... முடிஞ்சா என்னை மறந்துடுங்க பா... இந்த உலகத்துல வாழ எனக்கு ஆசை இல்லை இனி என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது போறேன் பா திரும்பி வரவே முடியாத தூரம் போறேன்…. அம்மா நீயும் என்னை மன்னிச்சிடு….

இப்படிக்கு
தேவசேனா

கடிதத்தை படித்தவர் சட்டையில் இருந்து மனைவியின் கையை விலக்கக்கூட தோன்றாமல் அதிர்ச்சியில் இருந்தவருக்கு மனைவியின் அழுகை நிதர்சனத்தை உரைக்க தொப்பென அமர்ந்துவிட்டார்.

"தலைபாடா அடிச்சிக்கிட்டேன் அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல, இஷ்டம் இல்லன்னு என் வாய அடக்கி வைச்சி மூலையில உட்கார வைச்சிங்க ஆனா இப்போ என்ன ஆச்சி என் பொண்ணு போயிட்டாளே அவ கிட்ட ஒத்த வார்த்தை கேட்டீங்களா வரமுடியாத தூரத்துக்கு போறேன்னு சொல்லிட்டாளே " என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

மனைவி பேசியது கூட கருத்தில் பதியாது இடிந்து போனவராய் இருந்தார் சௌந்தரலிங்கம். மரகதம் போட்ட சத்ததில் ஜெயசந்திரன், சாந்தா, அழகன்பெருமாள் கல்யாணத்திற்கு வந்த உறவுமுறைகள் அனைவரும் அங்கே கூடிவிட்டிருந்தனர்.

கடிதத்தை பற்றி அறிந்ததும் ஜெயசந்திரனுக்கு தான் தவறு செய்துவிட்டது போன்ற குற்றவுணர்வுடன் தங்கையை காணவில்லை என்ற பரிதவிப்பில் நின்றிருக்க அருண் திகைத்த நிலையில் நின்றிருந்தான். அருணிற்கு ஏனோ அங்கு இருக்கவே மனம் வலித்தது… அவளிடம் திருமணம் பற்றி தெளிவாக பேசி இருக்க வண்டுமோ என்று முதல் முறையாக எண்ண ஆரம்பித்தான். இந்த திருமணத்தில் பயம் என்று தானே நினைத்தான் ஆனால் திருமணமே பிடிக்காமல் தான் வேண்டாம் என்று கூறி இருக்கிறாள் என்று இப்போது தான் உணர்கிறான். எல்லாம் கை மீறி போன பின்னே தாமதமாக உணர்ந்து என்ன பயன்... சிலையாகி நின்றவனை பார்த்த அவனின் பெற்றவள்

"அந்த சிரிக்கி மகளுக்கு என் பையனை கட்டிக்க கசக்குதா? சீமை சித்திராங்கி!!!.... என் புள்ளையா போய் நடுகூடத்துல நிறுத்திட்டாளே... அவ நாசமா போக… அந்த குடிகெடுத்தவ மட்டும் என் கையில கிடைச்சா காலை இரெண்டையும் உடைச்சி அடப்புல வைச்சிபுடுவேன் ஓடுகாலி கழதை... என்ன திமிர் இருந்தா கல்யாணத்தன்னக்கி ஓடிபோய் இருப்பா ஒடுவனவா தனியா போனாளா இல்ல" என்று கூற வாய் எடுக்க அம்மா என்று கத்தி அவள் மீது கூறாய் வீசிய சொல்லம்பை தடுத்து நிறுத்தி இருந்தான் அருண்.

"ஏன்டா இப்போ என் வாய அடக்குற... அந்த ஓடுகாலி சிரிக்கிக்காக" என்று அவன மீது கோவம் கொள்ள

"முதல்ல உன் வாய மூடுமா உன்னால உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் பேச முடியும்... அவ வரவே மாட்டேன்னு எழுதி வைச்சிட்டு போயிருக்கா கொஞ்சம் அமைதியா இருங்க…. என்றவன் அவங்கப்பாட்டுக்கு பேசிட்டே போறாங்க நீங்களும் பார்த்துட்டு பேசாம இருக்கிங்க" என்று அவரின் உடன் பிறந்தவர்ளையும் தன் தகப்பனையும் பார்த்துக் கூறிட

அதுவரை மகள் சென்றுவிட்டாள் இனி ஏச்சையும் பேச்சையும் சகித்து தான் ஆகவேண்டும் என்று அமைதியாய் இருந்தவர் கடைசியாக சாந்தா கொட்டிய சொற்கள் அவரிரை கோபத்தின் எல்லைக்கே கொண்டு சேர்த்து இருந்தது… சாந்தலட்சுமியை பார்த்து கையெடுத்து கும்பிட்டவர் "உன் மகனுக்கு என் புள்ளைய கட்டிக்கொடுத்து இருந்தா என்ன பாடுபட்டு இருப்பான்னு இப்போ தெரியுது... என் பொண்ணு போனது எனக்கு தான் கஷ்டமே தவிர உனக்கு இல்ல…. பூ மாதிரி வளர்த்த புள்ளைய தவறவிட்டு இருக்கேன் என் ஆத்திரத்தை கிளப்பாம முதல்ல நீ இந்த இடத்தை விட்டு கிளம்பு" என்று கர்ஜனையாக கூறிட்டதும்

அவரை தொடர்ந்து சொந்தபந்தங்களில் இருந்த ஒரு நரைத்த தலை அட என்னப்பா ஆளாளுக்கு இப்படியே பதிலுக்கு பதில் பேசிட்டு இருந்தா எப்படி விரசா புள்ளைய தேடுங்கங்கப்பா சாந்தா நீ கொஞ்சம் அமைதியா இரு… கல்யாணத்துக்கு பயந்து ஏதாவது தப்பான முடிவை எடுத்திட போகுது புள்ள… அது பயந்து போய் தான் வீட்டை விட்டு போயிருக்கும் எப்படியும் விடியறத்துக்குள்ள தேடி கூட்டி வரலாம் " என்று அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தை ஞாபகபடுத்தி பேசிட்டதும் ஜெயசந்திரன் அருண் இன்னும் சிலர் அவளை தேடி புறப்பட இருந்தனர்.

அதே நேரம் ஊரை வளைத்து பந்தல் போட்டு தெருவெல்லாம் தோரணம் கட்டி வண்ண மலர்களால் அலங்கரித்த வீட்டின் முன் விசாகனுடன் வந்து இறங்கினாள் தேவசேனா. அந்த அதிகாலை பொழுதிலும் அவள் முகத்தில் பூத்திருந்த வெண்முத்துக்கள் அவளின் படபடப்பை உணர்த்தியது நடுங்கும் விரல்கள் தாவணியின் தலைப்பை வைத்து அதை மறைக்க போராடிக்கொண்டு இருந்தது… கலங்கிய விழிகள் தனக்கு முன்னால் நின்றிருந்த அருணின் முகத்தை ஏறிட்டு பார்க்கவும் தயங்கியது வாசலிலேயே இவ்வளவு சலசலப்பு நடந்திருந்ததால் அனைவரும் அங்கேதான் நின்றிருந்தனர்… விடியல் காலை 5 மணியாக இருப்பதால் இன்னும் விருந்தினர்கள் அவ்வளவாக வந்திருக்கவில்லை தவிர முக்கிய உறவுமுறைகளே இருந்தனர். மகளை கண்ட மரகதம் "தேவா" என்று அருகில் ஓடி அவளின் கரத்தினை பற்றியவர் என்னடி இது ஏன் இப்படி எழுதி வைச்சிட்டு போன என்று கேட்டிட அம்மா… அம்மா…" என்று அழுதபடி பதிலை கூற முடியாமல் அவரின் தோள்சாய்ந்தவளை பாரத்ததும் வெறுப்பை உமிழ்ந்தது ஜெயசந்திரனின் கண்கள்.

ஜெயசந்திரனுக்கு இருவரையும் ஒன்றாக பார்த்ததும் விசாகனை புரட்டி போடும் அளவிற்கு கோவம் கண்ணை மறைத்தது ... "என்ன தைரியம் இருந்தா ரெண்டு பேரும் ஜோடியா வந்து இறங்குவிங்க?" என்று கோவமாக விசாகனின் மேல் கையை வைத்து அறைய வர அவனின் தாக்குதலை வெற்றிகரமாக தடுத்து "வேணா ஜெயசந்திரா… உண்மை என்னன்னு தெரியாம வார்த்தைய விடாத" என்று கூறி அவனை தள்ளி நிறுத்தினான் விசாகன்.

"என்ன உண்மைடா... என்ன உண்மை... அவ பின்னாடி நீ சுத்தறியா இல்ல உன் பின்னாடி அவ சுத்தறாளா? இல்ல எனக்கு புரியல எப்படி ஒவ்வொரு வாட்டியும் அவ ஏதாவது பிரச்சினையில இருக்கும் போதும் நீ எப்படி சொல்லி வைச்சா மாதிரி கரெக்டா அங்க வர்ற? எல்லாம் நீ பண்ற ட்ராமா தானே... இந்த ட்ராமா எதுக்கு டா? என்று கேட்டபடியே அடிக்க சென்றவன் அவனின் நெஞ்சில் மீது கை வைத்து தள்ளி விட்டான்.

அவனை தள்ளிவிட்டதும் பதறிய தேவாவை கண்டவன் சினம் கொண்டு பாவி என்னை நம்ப வைச்சி கழுத்தை அறுத்துட்டியே என்று அவளின் தொண்டையை பிடித்து நெறிக்க உடன் நின்றிந்த அருண் அவனை கட்டுபடுத்தி விடுவித்துக்கொண்டு இருக்க விசாகனின் கையிழுப்பில் அவனிடம் இருந்து பிரிந்து மறுபுறம் வந்து நின்றாள் தேவா… அண்ணின் சொற்கள் கூரிய வாள் கொண்டு நெஞ்சை குத்தியது போன்ற ரணத்தை உணர்ந்தாள். கண்களில் பயத்துடன் தந்தை தாயை பார்த்து இருந்தவளுக்கு ஜெயசந்திரன் கைகளால் தாக்கியது அவ்வளவு பெரிய வலியை தரவில்லை, மாறாக 'இங்கு மறுபடியும் கொண்டு வந்து நிறுத்திவிட்டானே' என்ற பயத்தைத்தான் கொடுத்து இருந்தது. நடுக்கத்தில் இருந்த தேவாவின் மலர்க்கரங்கள் விசாகனின் கையை இறுக பற்றியபடி இருந்தது.

"ஏலேய் என்ன காரியம் பண்ற…" என்று துரையும் மரகதமும் சத்தமிட்டு அவனை தடுத்து நிறுத்த முயன்றனர். சௌந்தரலிங்கம் ஒரு இன்ஞ் கூட அசையவில்லை திருமணத்தன்று தன் மகள் இவ்வாறு மற்றொரு ஆணோடு எல்லார் முன்னிலையிலும் வந்து இறங்கியது அதிர்வை கொடுத்து இருக்க ஆணி அடித்தார் போன்று அதே இடத்தில் நடந்த சம்பவங்களை பார்த்துக்கொண்டு இருந்தார்.

தாயிடம் இருந்து திமிறிக்கொண்டு வந்தவன் "மா இவ பண்ண வேலைக்கு வேற என்னம்மா பண்ண சொல்ற… இவன் பின்னாடி லோலோன்னு அலைஞ்சதுனால தானே இந்த கல்யாணத்துக்கே நான் சம்மதிச்சேன்... மறுபடியும் இவனையே கூட்டிட்டு வந்து நின்னா என்ன செய்றது இவ இருக்கறதை விட சாகட்டும்" என்று மறுபடி அவளின் மேல் பாய

இந்த வார்த்தைகள் பெரியவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்க சௌந்தரலிங்கத்திற்கு நடந்த அனைத்தும் அவன் ஒருவனுக்காவே செய்து இருக்கிறாள் என்று அனுமானித்து இருந்தார்…. அவன் மேல் கொண்ட விருப்பத்தினால் தான் திருமணம் வேண்டாம் என்று கூறினாளோ என்று முதல் முறை பெண்ணின் மேல் அவருக்கு வெறுப்பை கொடுத்து என்றால் சாந்தாவிற்கு அது கோபத்தை கொடுத்தது. "அப்போ இந்த ஓடுகாலி இவன் பின்னாடி போனான்னு தான் என் புள்ளைக்கு கட்டிக் கொடுக்க இருந்திங்களோ" என்று அண்ணனையும் ஜெயசந்திரனையும் கேட்டவர்.. "இந்தாம்மா இதையும் சொல்லிடு... வெறும் காதல் தானா? இல்ல அதுக்கும் மேல புள்ளகிள்ள வாங்கிட்டு அதையும் மறைச்சி உன்னை என் பையன் தலையில கட்ட பாத்தாங்களா?" என்று விஷமாய் பேசினார்.

தங்கையின் சுடுசொல்லை கேட்டவரின் இதயம் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது போன்ற வலியை உணர்ந்தவர் தலைகுனிந்து சௌந்தரலிங்கம் வலியை மறைக்க அய்யோ "அய்யோ…" என்று காதை பொத்தியபடி "அடி பாவி இந்த வார்த்தையல்லாம் கேக்கனும்னு எங்க தலையில எழுதி இருக்கா... கடவுளே…" என்று அழுத மரகதம் "என்ன காரியம் டி பண்ணி வைச்சிருக்க பாவி…. நாலு பேர் முன்னாடி உன் அப்பாரு மானத்தை வாங்கிட்ட டி.. நீ இருக்கறதை விட சாவு" என்று இரு கன்னங்களையும் மாற்றி மாற்றி அறைந்து விட அவரின் கை தேவாவின் மேல் மறுமுறை படும்முன் அதிலிருந்து அவளை மீட்டான் விசாகன்.

"ஏலேய் அருணு…. பார்றா சொல்லும் போது என்னமோ வாக்காலத்து வாங்கிட்டு வந்த, நிக்குற தினுச பாத்திங்களா அவன் மேல சாஞ்சிக்கிட்டு நிக்குறா" என்று இருவரும் உரசியபடி நின்றதை சுட்டிகாட்டியதும் உடனே விலகி நின்றாள் தேவா.

"அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு... மாமா இப்பவும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.. ஏதாவது பேசுங்க... என்ன தான் நினைக்கிறிங்க" என்றான் அருண்

"இதுல என்ன அவர் நினைக்க இருக்கு அருண் அவ செய்த வேலைக்கு வெட்டி போடனும்" என்று ஜெயசந்திரன் வீட்டிற்குள் சென்று அறுவாளை எடுக்க அதை ஓடி வந்து தடுத்த அருண் "கொஞ்மாச்சும் படிச்சவன் மாதிரி நடந்துக்குறியா ஜெய்…? நீ வெட்டிட்டா எல்லாம் இதோட முடிஞ்சிடுமா…? இல்ல போன மானம் திரும்ப வந்துடுமா? பேசி ஒரு முடிவுக்கு வருவோம்" என்று அவனின் கைகளில் இருந்த ஆயுதத்தை வீசி எறியவைத்தவன் அவனை வெளியே அழைத்துக்கொண்டு வந்தான்.

அழுந்த இதழ் மூடி கண்கள் கலங்கி தலை குனிந்து நின்றிருந்தவளை கூடி இருந்தவர்களும் சொந்தபந்தங்களும் வாய்க்கு வந்தபடி பேசுவது விசாகனுக்கு கோபத்தை கொடுத்தது… என்கிட்ட மட்டும் தான் வெட்டி சவடால் விடுவியாடி சுத்தி நின்னு பேசுதுங்க வாய் இறுக்க மூடி நிக்குறா மடச்சி மடச்சி என்று அவளை பார்த்து முனுமுனுத்தவனின் பொறுமை பறந்து போக "நிறுத்துங்க" என்று சிங்கமாய் சீறியவன் " என்ன நடந்துடுச்சின்னு தெரியாம பேசிறிங்க சரி பாரவாயில்ல... உங்க கண்ணுக்கு எப்படி தெரியுதோ அப்படியே இருக்கட்டும்… வந்து நின்னதும் என்ன ஏதுன்னு விசாரிப்பிங்கன்னு பார்த்தா உங்க இஷ்டத்தக்கு பேசுறிங்க இதுதான் உங்க பொண்ணு மேல வைச்ச நம்பிக்கையா?" என்று கேலியாக கேட்டவன் "சரி அது எப்படி வேணா இருக்கட்டும்... எங்களை நாங்க எப்படி நிரூபிச்சாலும் அதே தான் சொல்ல போறிங்க... இதுக்கு ஒரே வழிதான் இருக்கு" என்று சற்று இடைவெளி விட்டு பேசாமல் நின்றிருந்த அவளின் தந்தையிடம் சென்றவன் திரும்பி பின்னால் தலை குனிந்து நின்றிருந்தவளின் உருவத்தை ஒரு நிமிடம் பார்த்தான் பின் அவரிடம் "இதை நீங்க எப்படி எடுத்துக்குவிங்கன்னு தெரியல ஐயா… உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நீங்க என்ன சொல்றிங்க" என்றிட கூடி இருந்த அனைவரும் அதிர்ந்த பார்வை பார்க்க தேவா மட்டும் நின்ற இடத்திலேயே சிலையாகி போனால் அவளால் இதை சற்றும் நம்பமுடியவில்லை எது நடக்கவே நடக்காது என்று நினைத்தாளோ அது நிஜமாக போகிறதா? என்ற கேள்வியிலேயே உழன்றுக் கொண்டு இருந்தாள். அடுத்த அரை மணி நேரத்தில் தேவசேனா என்ற கன்னியை திருமதி தேவசேனா விசாகனாக மாற்றி இருந்தான்…

இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த ஜெய் அப்போதே கோவித்துக்கொண்டு ஊருக்கு கிளம்பி இருந்தான். சௌந்தரலிங்கம் முகம் மகளின் செயலில் இறுகி போய் இருந்தது மரகதத்தின் முகத்தில் திருப்தியும் நிம்மதியும் நிறைந்து இருக்க துரை அருண் மற்றும் அழகன்பெருமாள் வந்தவர்களை வழி அனுப்பிக்கொண்டு இருந்தனர். அழகன் பெருமாள் கைங்கரியத்தில சாந்தா இருகன்னங்களும் வீங்கிய நிலையில் வாயில் கைவைத்தபடி அமர்ந்து இருந்தார்.
…..

எப்பாடுபட்டவது பேரனை கல்யாண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று தவம் கிடந்த தில்லையின் ஆசை பூர்த்தியாகி இருக்க அதே சமயம் தன் மனதில் இருந்த தேவாவையே பேரன் மனைவியாக்கி கொண்டதில் பெரும் மகிழ்ச்சியே "அடியே அமுதா உன் மாமன் வந்துட்டான் சீக்கிரம் வா...வா" என்று அழைத்தவர் தேவாவும் விசாகனும் வாசலில் வந்து நிற்க ஆலம் சுற்றியதும் உள்ளே நுழைந்தனர் தம்பதிகள்.

அதுவரை பதுமையாய் நின்றிருந்தவள் அமுதாவை பார்த்ததும் தூங்கிக்கொண்டிருந்த பழைய நினைவுகள் வலம் வர தொடங்கியது எப்படி ஹுரோ கொஞ்சம் கூட மனசுல உருத்தலே இல்லாம என் கழுத்துல தாலி கட்டினிங்க... நீங்க எனக்கு கிடைச்சது சந்தோஷமா இருந்தாலும் இது நரகத்தை விட கொடுமையா இருக்கு... காலத்துக்கும் இந்த கொடுமைய நான் சகிச்சிக்கிட்டுதான் இருக்கனும் இல்லையா… இது நான் உங்களை விரும்பினதுக்கு தண்டனையா… அப்போவே நான் வரல என்னை விட்டுடுங்கன்னு சொன்னேன் வலுக்கட்டாயமா என்னை கூட்டிட்டு போய் என்னென்னவோ நடந்து முடிஞ்சிடுச்சி" என்று தன் போக்கில் சிந்தனையில் அங்கேயே நின்றிருந்தவளின் தளிர் கரங்களை பற்றி உள்ளே அழைத்து சென்றான் விசாகன்.

முதல் முறை அவன் ஸ்பரிசம் படவும் மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்வில் அவன் முகத்தையே பார்த்து வந்தவளை பூஜை அறையில் விளக்கேற்ற கூறினார் தில்லை.

மனதில் தெய்வத்தை பிரார்த்தித்த படியே விளக்கேற்றி முடித்தவள் கண்களை மூடி நிற்க அவள் நெற்றியிலும் உச்சிவகிட்டில் குங்குமத்தையும் வைத்தான் விசாகன்.

அவனின் தொடுகையில் கண்விழித்தவள் அவன் முகத்தை ஆராய்ந்தபடியே இருந்தாள். நிஜமாவே இவருக்கு உறுத்தலோ இல்லை அவளை கல்யாணம் பண்ண முடியலையேன்னு வருத்தமோ தென்படுகிறதா என்று…

இயல்பை விட மிகவும் கலையாகத்தான் இருந்தது அவனது முகம் ஏனோ இன்று மேலும் அவன் அழகு கூடியது போல தோன்றி அவனை ரசிக்க இருந்த மனதை எவரும் அறியாவண்ணம் மறைத்தவள் இதுவரை அவளிடம் காட்டிய சிடுசிடுப்பு சற்றும் இன்றி சாதாரண கணவன் மனைவி போல அவன் செய்த செயல்கள் அவளுக்கு கனவில் நடப்பதை போன்ற பிரம்மையில் இருந்தாள்.

"அம்மாடி... இந்தாம்மா... இந்த வீட்டு பரம்பர நகை" என்று ஒரு பெட்டியை தில்லை அவளிடம் நீட்டிட அவரிடமிருந்து பெட்டியை வாங்காமல் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் தேவா.

"என்ன ராசாத்தி இப்படி பேந்த பேந்த விழிக்கிறவ... என் ராசவ கட்டிக்கிட்ட ராசத்தி நல்ல கம்பீரமா இருக்க வேணாம்... ஏம் புள்ள இதுக்கு போய் இப்படி முழிக்கிற இது உன் அத்த நகைதான்... நான் போட்டிருந்து, உன் அத்த போட்டிருந்து இப்போ உனக்கு வருது இது வழி வழியா வர்ற பரம்பரை நகை" என்று கூறியவர் அதை திறந்து இரண்டு வைர வளையல்களை அவளின் கைகளில் அணிவித்து "போட்டுக்க மா" என்று கூறி "வா உன்ற அத்த மாமாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க" என்று அவரின் படத்தருகே அழைத்துச்சென்றவர் "ராசா நீயும் வாயா" என்று இருவரையும் விழுந்து வணங்கசெய்து இருந்தார்.

அடுத்தடுத்து நடக்க வேண்டிய சில சம்பிரதாயங்களை நடத்திய தில்லை தேவாவின் சோர்ந்திருந்த நிலையை பார்த்து "நீ சித்த படுத்துக்க ஆத்தா" என்று கூறி தன் அறைக்கு அனுப்பியதும்

விசாகனும் "அப்பத்தா எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு இதோ வந்துடுறேன்" என்றவன் தில்லையின் மறுமொழிகேட்க அங்கு இருக்கவில்லை

"காலையில கல்யாணம்.. மதியம் வேலையா.. என்ன வேலையோ அப்படி…" என்று புலம்பியவர் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

வீட்டிலிருந்து கிளம்பியவன் தோப்பு வீட்டிற்கு செல்ல நண்பனின் திடீர் திருமணத்தை அமுதாவின் மூலம் கேள்விபட்டு வந்த சுந்தரன் வழியில் விசாகனை பார்க்கவும் வண்டியை நிறுத்த போக தோப்பு வீட்டுக்கு போய் பேசலாம் நடுத்தெருவுல எதுவும் வேண்டாம் என்று கூறிய விசாகன் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றான்.
…...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN