பூ 32

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

பொன்நிற சூரியபந்து கடல் நீரில் மூழ்கி தென்றலின் இதத்தையும் குளுமையையும் பரப்பிவிடும் அந்திசாயும்வேளையில் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த தேவா, மணியை பார்க்க கடிகார முள் 5.30 நெருங்கி இருந்தது.


'அய்யோ இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா!' என்று நினைத்தவள், தான் அமர்ந்து இருந்த இடத்தை பார்க்க, அது விசாகனின் மெத்தையாக இருக்க, காதல் கொண்ட இதயம் அவனையே கைகளால் வருடுவதை போல மெல்ல மெத்தையை வருடிக் கொண்டு இருந்தவளுக்கு இளநகை ஒன்று இதழில் பூத்து உறைந்து போனது,


அதே நிலையில் அறையை சுற்றி கண்களை சுழற்றியவளுக்கு வாங்கிவந்த பொருட்கள் அனைத்தும் ஒரு ஓரமாக இருப்பதை கண்டதும் 'நான் இங்க வைக்கலையே அப்புறம் எப்படி வந்தது' என்று நினைத்தாள்.


சட்டென மெத்தையில் இருந்து இறங்கி ஆமா நான் இதுல எப்படி வந்து படுத்தேன்… என்று ஆராய்ச்சியில் மூழ்கியவள் நேரம் செல்வதை கருத்தில் கொண்டு அதே யோசனையோடே வாங்கி வந்த அனைத்து பொருட்களையும் அலமாரியில் அடுக்கி வைத்து விட்டு, குளியலறை சென்று முகம் கழுவி, தலையை திருத்தம் செய்து அறையிலிருந்து வெளியே சென்றாள்.


கூடத்தில் அமர்ந்து வேலையை ஏவிக்கொண்டு இருந்த தில்லை தேவாவின் வருகையில் "வா தாயீ... நல்லா உறங்கனியா" என்று அருகில் அமர வைத்துக் கொண்ட தில்லையை விழியகற்றாமல் பார்த்தாள் தேவா.


தேவாவின் பார்வையை கண்ட தில்லை "என்ன தாயீ அப்படி பாக்குற?" என்று அவளுடைய தலையை வருடிவிட அந்த வருடல் அவளுக்கு தேவையான ஒன்றாய் இருந்தது. கடந்த இரு நாட்களாக மனதை அழுத்திய பாரமும், வருத்தமும் குறைந்ததை போல் உணர்ந்தவள்.


"ஒன்னுமில்ல பாட்டி கொஞ்சம் அசந்துட்டேன்... மன்னிச்சிக்குங்க…"


என்று கூறியவள் கலங்கிய தன் கண்களை அவர் அறியாமல் மறைக்க முயன்றாள்.


"என்ன கண்ணு நீ… ஏதோ அசந்தர்ப்பமா தூங்கிட்ட அதுக்கு போய் மன்னிப்பெல்லாம் கேக்குற" என்று கூறி "பொன்னி சித்த காபி தண்ணிய கொண்டாந்து எம் பேத்திக்கு கொடு ரெண்டு நாள்ல புள்ள பொசுக்குன்னு போயிடுச்சி" என்றவர். ஏதேச்சையாய் திரும்பவும் அவள் கலங்கிய கண்களை கண்டு பதறிவிட்டார் தில்லை.


" என்ன புள்ள இது, கண்ணெல்லாம் கலங்கி இருக்கு…. ஆயீ அப்பன் ஞாபகம் வந்துடுச்சா… எல்லாம் ஒரு நாள் சரியா போகும் கண்ணு… அங்க என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது, ஆனா ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் பாரு உன் ஆயீ அப்பன் உன்னை கொண்டாட போற நாளும் வரும்... என் ராசத்தி அத்தனை தங்கமான புள்ள" என்று அவளின் மனசஞ்சலத்தை சற்றுநேரத்திலேயே தெளிவித்தார்…


தில்லையின் வார்த்தைகளில் சற்று தெளிந்தவள், தன் கலக்கத்தை மறந்து என்றாவது ஒரு நாள் தன்னுடைய இந்த நிலை மாறும் என்று நினைத்து அந்நேரத்தில் அதை விடுத்தவள், தன் மூளையை அரித்துக்கொண்டு இருந்த மாபெரும் கேள்வியை பெரியவரிடமே கேட்க எண்ணி "பாட்டி நான் நான் இங்க தானே இருந்தேன்!!… அப்புறம் எப்படி உள்ளே போய் படுத்தேன்!!.… தூக்கத்துல நடந்து போய்டேனா?" என்றாள் குழப்பமாக


"அதுவா உன் புருஷந்தேன் உன்னைய தூக்கிட்டு போய் படுக்க வைச்சது... பார்க்கவே மனசும் கண்ணும் நிறைஞ்சி போச்சி தெரியுமா… என் கண்ணே பட்டு இருக்கும் முதல்ல திருஷ்டி சுத்தி போடனும்…. என் பேரன் கல்யாணம் குடும்பம் குழந்தை குட்டின்னு இருப்பானான்னு கோவில் கோவிலா சுத்திட்டு இருந்தேன்… இனி இந்த கட்டை நிம்மதியா நெருப்புல வேகும்" என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.


அவர் உச்சரித்த வார்த்தைகள் அவளுக்கு வருத்தத்தை கொடுக்க பாட்டி இது மாதிரி எப்பவும் பேசாதிங்க ப்ளீஸ் நீங்களாவது என் கூட இருங்க" என்றாள் வருத்தம் தொய்ந்த குரலில்.


"அம்மாடி, நெருப்புன்னா வாய் சுட்டுடாது டா…. ஏதோ பேச்சுவாக்குல இந்த கிழவி சொல்லிட்டேன் இனி ஒருபோதும் இந்த வார்த்தையை சொல்ல மாட்டேன் போதுமா" என்று அவளை சமாதனம் செய்ய அதை பிகுசெய்து ஏற்றுக்கொண்டவள் "சரி வீட்டுல யாரும் இல்லையா?" என்றாள் கணவனை கண்களால் தேடியபடி அவனுடன் கழிந்த அரைநாள் அவள் வாழ்வின் பொக்கிஷம் அல்லவா, அமுதாவை மறந்து அவளை மறந்து அவனையே சுற்றியது அவளுடைய மனம், அவனுடைய அருகாமையை நாடியது.


கோவிலில் அவன் காட்டிய அக்கறை, ஜவுளிகடையிலும், நகைகடையிலும் தனக்காக அவன் பாரத்து பார்த்து அனைத்தையும் தேர்ந்தெடுத்தது எல்லாம், அவளுக்கு பனிச்சாரலில் நனைந்ததை போல குளுமையை கொடுத்திருந்தது என்றால், தன்னை தூக்கி சென்றான் என்று அப்பத்தா கூறியதை கேட்டதும், உள்ளுக்குள் புதுவித மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு வித சிலிர்ப்பு பரவியதை அவளால் தடுக்க முடியவில்லை.


"ஏன் இல்ல, நீ இருக்க... நான் இருக்கேன்... உள்ள பொன்னி இருக்கா... வெளியே வேலை செய்ற முத்து இருக்கான்…" என்று கூறிக்கொண்டே சென்றவரை


"பாட்டி" என்றாள் எப்போதும் அவருடன் பேசும் தேவாவாக சற்றே குரலை உயர்த்தி இருந்தாள். அதற்குள் பொன்னியும் காபியுடன் வர அதில் இருந்து ஒன்றை எடுத்து பருகியபடியே தில்லையின் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தாள்.


"அட… பாரு எம்பேத்திக்கு எப்படி குரல் வருது!!... ரெண்டு நாளா இருந்த இடம் தெரியல!!... நீ எப்பவும் இப்படியே சந்தோஷமா இரு கண்ணு" என்று கூறியவர் "நீ யார கேக்குறன்னு இந்த கிழவிக்கு தெரியாதா?? உன் புருசனை தானே!" என்று அவளின் மோவாயில் இடித்தவர் "என் புருசன் எங்கன்னு என்னை பார்த்து நேரா கேக்குறது... அது என்ன வீட்டுல யாரும் இல்லையான்னு காது சுத்தி மூக்கை தொடுறது…" என்று கை ஜாடையில் அதை செய்து கட்டியவர் "உன் புருசன் இப்போ வந்துருவான் நம்ம அமுதாவும் இன்னும் வரல" என்று கூறவும் அதே நேரம் விசாகன், அமுதா இருவரும் ஒன்றாக உள்ளே வந்தனர்.


அதுவரையிலும் கணவனின் நினைவில் ஒரு இதமான மனநிலையில் இருந்தவள் இருவரும் ஒன்றாக உள்ளே வருவதை பார்த்ததும் மறந்து இருந்த விஷயங்கள் அத்தனையும் அவள் நினைவில் வந்து தாக்கியது 'சே…. இந்த மானகெட்ட மனசுக்கு சூடு சொரணையே இல்ல... அவர் எனக்கானவர் இல்லன்னு மூளைக்கு தெரிஞ்சாலும், மனசு ஏத்துக்க மாட்டேங்குது…. இது என்ன வாழ்க்கைய!..'' என்று வெறுப்புடன் தன்னை தானே திட்டிக்கொண்டவளின் கண்கள் கலங்கி விட அதை யாரும் அறியா வண்ணம் மறைக்க எண்ணி சட்டென அறைக்கு சென்றுவிட்டாள்.


வரும்போதே அவளை பார்த்து விட்ட விசாகன் அவள் கண்கலங்கிய கண்களோடு திடீரென உள்ளே மறைந்ததும் என்னவோ ஏதோ என்று எண்ணம் தோன்றி அவள் பின்னே இவனும் செல்ல "எய்யா ராசா சித்த நில்லு யா" என்றார் தில்லை


உள்ளே செல்ல இருந்தவனை தில்லையின் சொற்கள் தடைசெய்து நிற்க வைக்க "என்ன அப்பத்தா" என்றான்.


அருகில் நின்றிருந்த அமுதாவை அம்மாடி "நீ போய் முகம் கைய கால கழுவிட்டு வா" என்று அவளை அனுப்பி வைத்தவர் "அய்யா உன் பொஞ்சாதி மனசுல பாரத்த வைச்சிக்கிட்டு மறுகிக்கிட்டு இருக்க யா அவளை கண்ணு கலங்காம பாத்துக்க ராசா... ஆயீ அப்பன் ஞாபகம் வந்துச்சோ, என்னவோ.. இன்னும் இரெண்டு நாள்ல தாலி பிரிச்சி போட்டுடலாம்னு நாளை பார்க்க சொல்லி இருக்கேன்... நீ ஒரு எட்டு போய் அவுக வீட்டுல சொல்லிடு பா… நான் சொல்லுவேன் அது முறையா இருக்காது நீ போய் அவுக வீட்டுல சொல்லிடு, அப்புறம் நான் முத்துவோட போய் சொல்றேன்" என்றார் தில்லை


"நான் சொல்றேன் அப்பத்தா" என்றவன் தனது அறைக்குள் நுழைய அங்கு இருந்த சேரில் அமர்ந்து டேபில் மேல் தலை கவிழ்ந்து படுத்திருந்தவளின் நிலையை கண்டு அருகில் சென்றவன் "தேவா மா" என்று மென்மையாக அழைத்து தலையில் கையை வைத்தான்.


அவன் தொடுகையை வெறுத்தவள் "பிளீஸ் கையை எடுங்க" என்றாள் மிக மெல்லிய அவள் குரலே கூறியது அவளால் பேச முடியாத அளவுக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது என்று தன் அழுகையையும் தளர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் முன் தன் காதலுக்காக அழுவதை கூட அவமானமாக கருதியவள் முடிந்தவரை அவள் உள்ளுக்குள் புதைத்துக் கொண்டாள்.


'என் கூட நல்லா தானே வீட்டுக்கு வந்தா அதுக்குள்ள என்ன வந்துச்சி இவளுக்கு, ஒரு வேலை அப்பத்தா சொன்னா மாதிரி வீட்டை நினைச்சி வருத்தபடுறாளோ!' என்று நினைத்தவன் தான் இன்னொரு பெண்ணை காதலித்தேன் என்று கூறியதால் தான் தற்போது மனம் வெம்பிக்கொண்டு இருக்கிறாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. நேற்று இரவு நடந்தது கூட தற்போது முற்றிலுமாக அவன் நினைவில் இல்லை அம்மா அப்பா அண்ணன் நியாபகத்துல் வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்தவன்


"என்ன தேவா எல்லாத்துக்கும் இப்படி வந்து தனியா உட்கார்ந்துட்டா தீர்வு கிடைச்சிடுமா? சொல்லு… எப்பவும் காலம் இப்படியே போயிடாது மனச கொஞ்சம் ரிலாக்ஸாக வைச்சிக்க எழுந்திடு என் கூட வா" என்று அழைத்தான்.


அவன் அருகாமையையும் இந்த பேச்சையையும் அவளால் வெறுத்து ஒதுக்கவும் முடியவில்லை சேர்த்து மகிழவும் முடியவில்லை இருதலை கொல்லி உயிராக துன்பப்பட்டவளுக்கு தலை வலிக்க ஆரம்பித்து இருந்தது… "என்னை தனியா விடுங்க... எனக்கு தலை வலிக்குது... அப்புறம் வறேன்…" என்று அவனை பார்க்காமல் கூறியவளுக்கு இங்கிருந்து அவன் சென்றாள் போதும் என்றிருந்தது.


தேவா தலை வலி என்றதும் அங்கிருந்து அகன்ற விசாகனின் அரவத்தை உணர்ந்தவள் மனது வெறுமையை சுமந்துகொண்டு இருந்தது. 'போயிடுன்னு சொன்னா உடனே போயிடுவிங்களா… இப்படித்தான் என்னை தனியா விட்டுடுவிங்களா ஹீரோ… உங்களை புரிஞ்சிக்க முடியல.. என் மேல உங்களுக்கு இருக்கறது அக்கறையா? இல்ல பரிதாபமா? தாலி கட்டிட்டோமேன்னு காதலை மறைச்சி சாதரணமா இருக்க முயற்சி பண்றிங்களா? எனக்கு எதுவுமே புரியல!!' என்று குமுறியவளின் கண்களில் இருந்து கண்ணீர் கோடுகள் வழிந்தது.


சிறிது நேரத்திலேயே அவளின் அருகில் வந்து நின்றவன் "தேவா கொஞ்சம் தலையை நிமிர்த்தி என்னை பாரு" என்றான் மென்மையாக


அவன் மென்மையான பேச்சை கூட அவளால் கேட்க முடியவில்லை தலைக்குள் யாரோ சம்மட்டியால் அடிப்பதை போன்ற வலியை அனுபவித்தவள் "பச் என்னால முடியல ப்ளீஸ்… நான் அப்புறம் வறேன்….. நீங்க…" என்றவளை முடிக்க கூட விடவில்லை கையை பிடித்து எழுப்பி உட்கார வைத்தவன் "தலைவலியோட இருந்தா எந்த வேலையும் செய்ய பிடிக்காது.. எல்லார் மேலயும் காரணமே இல்லாம கோவம் வரும்... முதல்ல சரியா உட்கார்ந்து தலையை காட்டு" என்று குரலை உயர்த்தி அவளை அமரசெய்தான்.


இருக்கையில் சாய்ந்து தலையை நிமிர்த்தி கண்களை மூடி அமர்ந்து இருந்தவளின் பின்பக்கம் நின்று கையில் இருந்த தைலத்தை அவளுக்கு நெற்றியில் பூசி விட்டு, சிறுது அழுத்தம் கொடுத்து பிடித்துவிடவும் மெல்லிய இதம் பரவியது அவளுக்கு, மூளையை குத்தி குடைந்துக்கொண்டு இருந்த அனைத்தும் அவன் ஒற்றை வருடலில் மறைந்தது… என் காதலன் என் கணவன் என்று மனம் முழுவதும் நிறைந்து போய் இருக்க மெதுவாய் கண்களை திறந்தவளின் நெற்றியில் மெல்ல இதழை பதித்தான் விசாகன், "எதையும் நினைச்சி மனசை கஷ்டபடுத்திக்காத தேவா, ரிலாக்ஸா இரு எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா மாறும் உன்னை தேடி எல்லாம் வரும்" என்று கூறி அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.


என்ன நடந்தது என்று கூட கருத்தில் பதியாதவளுக்கு அவன் கொடுத்த முத்தம் மட்டும் எப்படி நினைவில் நிற்கும் அவன் தலையை பிடித்து விட தொடங்கியதுமே கனவுலகில் சஞ்சரித்தவாளாயிற்றே இதுவும் ஏதோ கனவோ, இல்லை பிரம்மையோ, என்று நினைத்தவள் அவன் சென்றது கூட தெரியாமல் அமர்ந்து இருந்தாள். இரவு உணவை கூட ஏதோ கடமைக்கு என்று முடித்தவள் சீக்கிரமே அறைக்குள் சென்று அவளது இடத்தில் படுத்துக்கொண்டாள்.


அவளை தொந்தரவு செய்யாமல் விசாகனும் சென்று படுத்துவிட்டான். பாதி இரவில் அவளுக்கு காலில் ஏதோ ஊறுவதை போல இருக்க சட்டென துள்ளி எழுந்தவள் சுற்றி சுற்றி பார்த்தாள் அறை எங்கும் இருள் சூழ்ந்து இருக்க என்ன வா இருக்கும் என்று எழுந்து விளக்கை போட்டு பார்த்தாள். அவள் கண்களுக்கு எதுவும் அகப்படாமல் போக மறுபடி விளக்கை அணைத்து விட்டு படுத்தாள் இப்போதும் ஏதோ காலில் உருவதை உணர்ந்தவள் பட்டென எழுந்து அமர்ந்து சுற்றி முற்றி பார்த்தாள் இப்போது விளக்கை போடவும் விசாகனுக்கு உறக்கம் கலைந்து… "என்ன தேவா லைட் போட்டு போட்டு ஆப் பண்ற" என்றான் தூக்க கண்களுடன்


"அது அது ஏதோ பூச்சி காலில் பட்டுச்சி அதான்" என்று தேவா கூறிட


"பூச்சியா... இந்த ரூம்ல எப்படி பூச்சி வரும்... அது எல்லாம் ஒன்னும் இருக்காது போய் படு" என்றவன் "மறக்காம லைட் ஆப் பண்ணிட்டு படு" என்றான்.


'இங்க ஏதோ இருக்கு நான் எப்படி இங்க படுக்கறது' என்று தயங்கியபடி நின்று கொண்டு இருந்த தேவாவை வித்தியாசமாக பார்த்த விசாகன் "ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே…. இப்போ உன்னை தொந்தரவு பண்ண பூச்சி எங்க போச்சின்னு கண்டுபிடிக்க முடியாது... அது மறுபடி வராம இருக்குமுன்னும் என்னால உத்தரவாதமும் கொடுக்க முடியாது... உனக்கு பிரச்சனை இல்லன்ன நீ கட்டில்ல வந்து படுத்துக்கோ... இதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை"


என்றான் சர்வ சாதரணமாய்.


அவன் கூறுவதில் அவளுக்கு எந்தவிதமான விகல்பமோ இல்லை சந்தேகேமோ ஏற்படவில்லை சொல்ல போனால் இதையே தான் அவளும் கேட்டு இருப்பாள் கொஞ்ச நேரத்திலேயே அதனால் தான் அவன் சொன்னவுடனயே கட்டிலின் அடுத்த பக்கத்தில் சென்று அமர்ந்துக்கொண்டவள். "ஏதோ நீங்க கெஞ்சி கேடடதாலதான் சரின்னு ஒத்துக்கிட்டேன்... இல்லன்னா நானே அதை அடிச்சி கொண்ணு இருப்பேன்.. நாளைக்கு என் கையாலதான் அதுக்கு சாவு" என்று பல்லை கடித்தபடி கூறியவள் பெட்சீட்டை முகம் முதல் கால் வரையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.


அவள் இழுத்து போர்த்தி தூங்கிய தினுசை பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை 'பெரிய தில்லாலங்கடியாதான் இருப்பா போல, நல்லா பேச்சை மாத்தி பேசுறா டா… அந்த வாயி இருக்கே வாயி அது மட்டும் இல்லான்னா நீ எல்லாம் அவ்வளவு தாண்டி' என்று நினைத்தவன் அவளை சீண்ட பயன்படுத்திய குச்சியை கட்டிலின் ஓரத்தில் மறைத்து வைத்தவன்


தானும் படுத்துக்கொண்டான்.


விடியல் காலை ஜன்னலின் திரைச்சலைகளுக்கு இடையில் புகுந்த வெளிச்சத்தின் சொச்சம் கண்களை கூசச்செய்ய மெல்ல கண்களை திறந்தவளின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது இரவு எப்படி படுத்தானோ அதே நிலையில் விசாகன் படுத்து இருக்க தன் மூச்சு காற்று அவனை உரசிசெல்லும் அளவுக்கு அருகே அவனை இருக்கி பிடித்தபடி அவன் மார்பிலே தலைவைத்து படுத்துக்கொண்டு இருந்தாள் தேவா….
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN