பூ 33

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

தன்னையும் மறந்து அவனது முகத்திலேயே நிலைத்திருந்தது அவளது விழிகள்... அவள் இருக்கும் நிலையை மூளை எடுத்துரைக்க விசாகன் எழுந்துக் கொள்வானோ என்ற அச்சத்துடனே அவனை தழுவிக்கொண்டு இருந்த கரங்களை சட்டென பிரித்து எடுத்தவள் அவன் அறியும் முன்பே கட்டிலை விட்டு இறங்கி படபடத்து கொண்டு இருக்கும் தன் மனதை சமன்படுத்திக் கொண்டாள்.


'சே என்ன முட்டாள் தனமான வேலையை செய்து வைச்சிருக்கேன்' என்று தலையில் தட்டிக்கொள்ளவும் அவனது அழகை, ஆளுமையை, சிரிப்பை, கோவத்தை, அலட்சியத்தை, ரசிக்கும் மனசாட்சி


'எதுடி முட்டாள் தனம் உன் புருசன் மேல தான தலைய வைச்சி படுத்து இருக்க…. என்னமோ அடுத்தவளுக்கு தாலி கட்டின புருஷனை ஆட்டைய போட்டா மாதிரி பதறி நிக்குற!' என்று மனம் ஒரு பக்கம் தான் செய்த செயலுக்கு நியாயத்தை பேசினாலும் 'ஏய் மானங்கெட்ட மனசே நான் தாலிய மட்டும் தான் வாங்கி இருக்கேன்... அவர் மனசுக்கு வேற ஒருத்தி சொந்தம் கொண்டாட இருக்க... நீ சித்த பொத்திக்கிட்டு போ…. நானே இப்படி செஞ்சிட்டேனேன்னு கடுப்புல இருக்கேன்… இருக்க கோவத்துல உன் மண்டைய உடைச்சி மாவிளக்கு போட்டுட போறேன் ஓடி போயிடு' என்று அதனை துரத்திவிட்டவள் அழ்ந்த ஒரு பெருமூச்சி ஒன்றை வெளியேற்றினாள்


'என் மூளைக்கு தெரியுது உங்க காதல்... ஆனா, என் மனசு என்ன சொன்னாலும் கேக்கமாட்டது' என்று முகத்தில் கவலை ரேகை பதிய அவனை பார்த்துக்கொண்டு இருந்தவள் 'எது எப்படி இருந்தாலும் இது தான் என் வாழ்க்கை... இந்த வாழ்க்கைக்கு நான் பழகி தான் ஆகனும்…. ஆனா, உடனே இது எல்லாத்தையும் மறந்து சட்டுன்னு என்னால அதுல இருந்து வெளியே வரமுடில... என்னாலதான் உங்களோட காதல் பிரிந்து போச்சோன்னு குற்றவுணர்ச்சியா வேற இருக்கு…. அதுவும் உங்களையும் அமுதாவையும் ஒன்னா பார்க்கும் போது அது என்னையும் மீறி உங்க மேல கோவமா வெளிப்படுது என்னால என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியல…. பைத்தியம் பிடிக்குது' என்று தனக்குள் பேசிக்கொண்டிருந்தவள் அவன் அசைவது தெரிந்த உடனே உடையை எடுப்பதை போல அலமாரியின் முன் நின்றுக் கொண்டு தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு இருந்தாள்..


தூக்கம் தெளிந்து எழுந்தவன் மெத்தையில் அவள் இல்லை என்றதும் அறையை சுற்றி பார்த்த விசாகனின் கண்கள் அவளை சல்லடையாய் சலித்து தேடிட அலமாரியின் முன்னால் இருப்பவள் அகப்பட்டதும் "சீக்கிரமே எழுந்திட்டியா தேவா…?" என்றான் சாதரணம் போல சோம்பலை முறித்தபடி


"ம் ஆமா எழுந்துட்டேன்" என்று கடனே என்று பதலளித்தவள் உடையை எடுத்துக்கொண்டு இருக்கையில்


"ப்பா என்ன கணம் டா….. என்ன அழுத்துச்சின்னே தெரியல!.... இறுக்கமா வேற பிடிச்சி இருந்தது, சரியா வேற தூங்கவும் முடியல…." என்றான் அவளை முந்திக்கொண்டு துவாலையை எடுத்தபடி


அவன் கூறியதை கேட்டவள் "என்ன என்ன அழுத்துச்சி?" என்றாள் ஒன்றும் புரியாமல்


"என்னன்னே தெரியல கண்ணை வேற பாதி தூக்கத்துல திறக்க முடியல... நெஞ்சி மேல ஏதோ பாராமா இருந்தா மாதிரியும், என் கையை யாரோ இறுக்கமா பிடிச்சா மாதிரியும் ஒரு வலி"... என்று கைக்கு சீராக ரத்தவோட்டத்தை கொடுப்பது போல் உறுவி விட்டு "இன்னும் நெஞ்சி வலிக்குது... நான் நினைக்கிறேன், மோகினி பிசாசு ஏதாவது அறைக்கு வந்து இருக்கும்னு" என்று மார்பை தடவியவனை படபடவென அடித்துக்கொள்ளும் விழிகளால் பார்த்தாள்.


'அய்யயோ நான் கட்டிபுடிச்சேன்னு தெரிஞ்சிடுச்சா… மோகினி பிசாசு அது இதுன்னு பேசுறாரே' என்று தனக்குள்ளயே பேசியபடி படபடப்பானவள் "அது அது உங்க பிரம்மையா இருக்கலாம்ல கனவு ஏதாவது கண்டு இருப்பிங்க... எனக்கு அதுமாதிரி எதுவும் தெரியல நைட்டு நான் கூட நல்லா தூங்கினேன்" என்று அவசர அவசரமாக கூறியவள் "ரொம்ப நேரம் ஆகிடுச்சி... நான் குளிச்சிட்டு பாட்டி பாட்டிக்கிட்ட போறேன்... என்னைய கூப்பிட்டா மாதிரி இருக்கு" என்று அவனை முந்திக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துவிட்டாள்.


அவளின் செய்கைகளை கண்டவனின் இதழ்கள் சிரிப்பில் விரிந்து இருந்தது "இவ கூட இருந்தா எப்பவும் சிரிச்சிக்கிட்டே தான் இருக்கனும் போல.. மனுசனை கோவபடவே விடமாட்டுங்குறா குட்டச்சி... ஏதாவது சேட்டைய செய்யறதையே பொழப்பா வைச்சிருக்கா... என் தோள் ஹைட்டு கூட இல்ல என்னமா பொய் சொல்றா… என்று மனைவியை மனதில் ரசித்தவன் கீழே இருக்கும் குளியலறைக்கு சென்றான்.


……


தங்களது அறைக்குள் இருந்த சௌந்தரலிங்கத்திடம் காபியை நீட்டிய மரகதம் "இப்படியே இருந்தா எப்படிங்க? ஊருக்கு போனவன் மூனு நாளச்சி ஒரு போன் பண்ணல போய் சேர்ந்தானா, சாப்பிட்டானா தூங்கினான்னு எந்த தகவலும் இல்ல… போன் பண்ணாலும் எடுக்க மாட்டுறான்... அவன் தான் கோச்சிக்கிட்டு போனாலும் நீங்க ஒரு போன் போட்டு கேட்க கூடாதா? பெத்த வயிறு கிடந்து தவிக்குது" என்று கண்ணீரை விட


மனைவியின் பேச்சு மேலும் ஆத்திரத்தை கிளப்பி விட "சீ மனுசனை நிம்மதியா இருக்க விடுறியா டி... எப்ப பார்த்தாலும் வாலு வாலுன்னு கத்திக்கிட்டு கிடக்க…" என்று காபி டம்ளரை விசிறி அடித்தவர் "நீ பெத்தது ரெண்டுமே என்னை ஏமாத்தி வேலைய பாத்து இருக்கு... இதுங்கள பத்தி கவலை படலைன்னு கேட்க வந்துட்டியோ, நீ கட்டிக்கிட்டவனை பத்தி கவலை படல, இதுங்கல பத்தி கவலைபடுற" என்று மனைவியின் மேல் எகிறிக்கொண்டு செல்ல


"இவ அந்த புள்ளைய விரும்பினதுக்கு அவன் என்ன பண்ணுவாங்க" என்று மரகதத்தின் கேள்விக்கு அவரை முறைத்த சௌந்தரலிங்கம்


"இவ காதலிக்கிறான்னு அவனுக்கு தெரிஞ்சிதுல, ஒரு அண்ணனா என்ன பண்ணி இருக்கனும் தங்கச்சி பண்ற வேலைய என்கிட்ட சொல்லி இருக்கனும் தானே…. ஏதோ கலைய புடுங்குறா மாதிரி நினைச்சிக்கிட்டு காதலை புடுங்க போனானோ உன்புள்ள... அப்புறம் வீட்டுல நான் எதுக்கு இருக்கேன்... அப்பன் ஒருத்தன் செத்துட்டேன்னு நினைச்சி தானே இந்த காரியத்தை என்கிட்ட இருந்து மறைச்சிட்டான்" என்று கோபத்துடன் கத்திக்கொண்டு இருக்க


"என்ன வார்த்தைங்க செல்றிங்க? தப்புத்தான் அவன் செஞ்சது முழுக்க முழுக்க தப்புதான் அதுக்குன்னு இப்படியே இருந்திடனுமா... அது ஏதோ நம்ம நல்லதுக்குன்னு பண்ண போய் இப்படி முடிஞ்சி போச்சி... நான் பெத்தது ரெண்டுமே எனக்கு இல்லாம போயிட போதுங்க" என்று அழுதவரை பார்க்க சகிக்காமல் "சே… உன்னை" என்று பேச வந்தவர் சலித்து போய் தோளில் இருந்த துண்டை உதறிஎடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டார்.


…….


காலையில் தேவா கீழே இறங்கி வரும்போது ஜோசியர் அமர்ந்து கொண்டு இருந்தார். இவள் அருகில் போய் நிற்கவும் "வா புள்ள" என்று அருகில் அமரத்திக் கொண்ட தில்லை "ஜோசியரே இது தான் என் பேத்தி என் பேரன் பொஞ்சாதி" என்று …அறிமுகபடுத்தி வைக்கவும்


"வணக்கம் மா என்று கூறியவருக்கு பதில் வணக்கம் கூறியவள் அவரை பார்த்தபடியே "என்ன பாட்டி வீட்டுல ஏதாவது விஷேஷமா?" என்றாள் தில்லையிடம்.


"ஆமாடா கண்ணு உனக்கு தாலி பிரிச்சி போடனும் ல அதான் ஜோசியரை நல்ல நாள் பாக்க வர சொன்னேன்" என்றார்.


பஞ்சாங்கத்தை பார்த்துக்கொண்டு இருந்த ஜோசியர் "கல்யாணம் முடிச்சி வர்ற ஐந்தாம் நாள் நல்லா இருக்கு மா… முகூர்த்த நாளும் கூட" என்று அவர் கூறியதும் "சரிங்க ஜோசியரே நல்லது.… அன்னைக்கே நேரத்தை குறிச்சிடுங்க" என்ற தில்லையிடம். "சரிங்க மா" என்ற ஜோசியர் நல்ல நேரத்தை குறித்து கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.


காலையிலையே வயலுக்கு சென்றிருந்த விசாகன் மதியம் சுந்தரனுடன் வீட்டிற்கு வந்திருந்தான். வெளியில் தில்லையுடன் அமரந்திருந்த தேவா சுந்தரனை காணவும் "என்ன ணா நான் இந்த வீட்டுக்கு வந்து இத்தனை நாளாகுது இன்னைக்குதான் வரனும்னு தோனுச்சா?" என்றாள் சற்றே உரிமையுடன்.


"அது உன் புருசன்கிட்ட தான் கேட்கனும் தாயே.. கல்யாணம் முடிச்ச நாள்ல இருந்து எனக்கு வேலைய ஏவிகிட்டு இருக்கான். கொஞ்ச நேரம் கூட ரெஸ்ட் கொடுக்க மாட்டுறான்". என்று நண்பன் மேல் பழியை போட விசாகனோ "டேய் நல்லவனே எனக்கு கல்யாண ஆன ஷாக்குல இருந்து நீ வெளியே வர இத்தனை நாள் ஆச்சின்னு சொல்லு... என்மலே பழியை போடாதே" என்றதும் சுந்தரனை முறைத்தாள் தேவா.


"ஏண்டா நான் கை காலோட வீட்டுக்கு போறதுல உனக்கு விருப்பம் இல்லையா... காது வேற ரெண்டு நாளா லேசா அடைச்சா மாதிரி இருக்கு... இன்னைக்கு உன் பொண்டாட்டி தயவுல ரத்தம் வராம வைக்க மாட்ட போல" . என்று பயம் கொண்டவன் போல பேசியதை பார்த்தவள் "அந்த பயம் இருக்கனும்" என்று அவனுக்கு அழகு காட்டி வீட்டிற்குள் அழைத்து சென்றவள் குடிக்க குளிர்ந்த மோரை கொண்டு வந்து நீட்டினாள்.


தில்லை, பேத்தியின் சிறுபெண் நடவடிக்கையை பார்த்து சிரித்தபடியே அமரந்திருக்க "என்ன அப்பத்தா உன் மருமக எப்படி? பேச்சில, ம்கூம்…. யாரும் அடிச்சிக்க முடியாது... எட்டு உரு ஒன்னா வந்தாலும் ஒத்தையா வாயாலையே சுழட்டி விட்றும்…. உன்னையே மிஞ்சும்னா பாத்துக்க" என்று சுந்தரன் வம்பு இழுக்க


"பின்ன இந்த தில்லைநாயகி வீட்டுக்கு மருமக பொண்ணுன்னா சும்மாவா!???…. எனக்கு அப்புறம் ஆளும் பேருமா கட்டி ஆள தைரியம் வேண்டாமா??? அதான் என் பேத்தி என்னை மாதிரியே இருக்கு... குணத்துல மட்டுமா…. அழகுலயும் குறை இல்லையே செப்பு சிலை கணக்கா பர்வதம் மாதிரி அழகோட இருக்கா…. தேடி எடுத்தாலும் இப்படி ஒரு பொண்ணு கிடைக்குமா?" என்று அவள் கன்னம் வழித்து பேசிட


"வந்த அன்னைக்கே கவுத்திட்டியா பங்கு" என்று சைகையில் சுந்தரன் கேட்கவும் சிரிப்புடனே அங்கிருந்து நகர்ந்திட "தேவா... எங்கமா போற வா இப்படி நில்லு" என்றுவன் "உன்னையும் உன் புருசனையும் விருந்துக்கு அழைக்க தான் வந்தேன்…. நாளைக்கு நம்ம வீட்டுல விருந்து வந்துடுங்க| என்றிட


"அதெல்லாம் எதுக்குடா?" என்று மறுத்து பேச வந்த விசாகனிடம் "உனக்காக இல்லடி மாப்ள... என் தங்கச்சிக்காக தான் உன்னையே கூப்பிட வந்தேன்… அவளை அழைச்சிட்டு வந்து சேரு" என்று கூறியவன் சிறிது நேர உரையாடலுக்கு பின் சாப்பிட்டு அங்கிருந்து சுந்தரன் கிளம்பிட அவனுடனே விசாகனும் கிளம்பி இருந்தான்.


அவ்வளவாக அமுதாவிடம் ஒட்டமுடியாமல் தவித்த தேவா தில்லையிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள் அவன் இல்லாத நேரங்களில் தில்லையுடன் தான் இருந்தாள் மில்லுக்கு சென்றிருந்தவன் மாலை நேரத்தில் தான் வீட்டுக்கு வந்தான். தேவா தில்லையுடன் பேசி சிரித்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன் அவளை பார்த்தபடியே வந்து அமர்ந்தான்.


பேரனின் கண் தேவாவையே சுற்றி வருவதை புரிந்த கொண்ட தில்லை "ஏய்யா ராசா... உன் பொஞ்சாதிய நம்ம தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டு போய் காட்டுறது... ஊட்டுக்குள்ளயே இருக்கா கொஞ்சம் வெளியே கூட்டிட்டு போய்யா" என்றிட


"இருக்கட்டும் பாட்டி... அவரே இப்பத்தான் வந்தாரு அதுக்குள்ள எதுக்கு? … இன்னொரு நாள் பாத்துக்கலாம்" என்று கூறிய தேவா விசாகனின் முகத்தில் இருந்த மாற்றத்தை கவனித்து விட்டு இருந்தாள் 'ஏன் இவரு இப்படி யேசனையா இருக்காரு முகம் வேற ஏதோ போல இருக்கு… உடம்புக்கு ஏதாவது' என்று நினைக்கும் போதே தில்லை "எய்யா... என்ன யா செய்யுது உடம்புக்கு?" என்று கேள்வியை கேட்க விசாகனின் பதிலுக்காக காத்திருந்தாள் தேவா.


"அட ஒன்னும் இல்ல அப்பத்தா... கொஞ்சம் வேலை அதிகம், அதான் அசதியா இருக்கு" என்றவன் தனது அறைக்குள் செல்ல பின்னாடியே வால் பிடித்தது போல் தேவாவும் அவனை தொடர்ந்து சென்றாள்.


கட்டிலில் படுத்து கண்களை முடி இருந்தவன் தேவாவின் கொலுசொலியில் கண் திறந்து பார்க்க "என்ன... என்ன செய்யுது?" என்றாள் அவனுக்கு என்னவோ என்று வருத்தம் கொண்டு


"ஒன்னுமில்ல லேசா அசதி அவ்வளவு தான் நீ போ" என்று அவன் கூறிய போதும் தெளியாதவள்


"நெஜமாவே ஒன்னுமில்லையா…" என்றதும், அவன் வித்தியாசம் கொண்டு தேவாவை பார்க்கவும் இல்ல, முகமெல்லாம் வாட்டமா இருக்கு... கண்ணு சோர்வா ரெட்டா இருக்கு.. எப்பவும் பளீச்ன்னு இருக்கும் உங்க முகம் டல்லா இருக்கு... வந்து படுத்து இருக்க தினுசும் ஏதோ போல இருக்கு .. உங்களுக்கு நெஜமாவே ஒன்னுமில்லையா?" என்று மிகவும் துள்ளியமாக அவனின் ஒவ்வொரு செய்கைகளை பற்றியும் விசாரித்தவளின் அக்கரையில் மகிழ்ந்து போனவன் சிரித்தபடியே "ஒன்னுமில்ல சனா... பயப்படாத... கொஞ்ச நேரம் படுத்தா சரியா போயிடும் நீ போ" என்று மென்மையுடன் கூறவும் அவனை விட்டு செல்ல மனமில்லாதவள் அந்த அறையிலேயே ஏதோ வேலை இருப்பது போல் காட்டிக்கொண்டு அமர்ந்து விட்டாள். அவனை விரும்பிய மனம் அயிற்றே அவனுக்கு ஏதோ ஒன்று என்றால் அதை தாங்கி கொள்ள முடியாமல் அவனுக்காக அடித்துக்கொண்டது.


ஓரக்கண்ணால் தன்னை பார்த்தபடியே வேலையை செய்துக்கொண்டு இருந்த தேவாவை பார்த்தவன் இன்று அவளது வீட்டில் நடந்த நிகழ்வை நினைத்தான்.


மதியம் தில்லை கூறியபடி தேவாவின் வீட்டிற்கு தாலிபிரித்து கோர்க்கும் விஷேஷத்தை கூறுவதற்கு சென்றான். வாசலில் தனது பைக்கை நிறுத்தியவன் சற்று தயக்கம் கொண்டே வெளியில் இருந்து "ஐயா" என்றான் இன்னும் யாரையும் முறை வைத்து எல்லாம் கூப்பிடவில்லை அவன் குரலை கேட்டதும் வெளியே வந்து பார்த்த அருண் "வாங்க விசாகன்... ஏன் அங்கயே நிக்கிறிங்க... உள்ள வாங்க" என்று வரவேற்று அழைக்க


"இல்ல பரவாயில்லை... வீட்டுல யாரும் இல்லையா?" என்றான் உள்ளே பார்த்தபடி


"ம் இருக்காங்க… நீங்க வாங்க விசாகன்... என்ற அருண் "அத்தை மாமா" என்று அவர்களை அழைத்ததும் மரகதம் சௌந்தரலிங்கம், துரை, இளையா, அர்ஜூன் மற்றும் சாந்தலட்சுமி என்று ஒருவர் பின் ஒருவராக வந்தது யார் என்று பார்க்க வெளியே வந்தனர் நடுகூடத்ததில் குழுமி இருந்த அனைவருக்கும் வெளியில் நின்றிருந்த விசாகனை கண்டவுடன் அதிர்ச்சியாக இருக்க முதலில் சுதாரித்த "மரகதம் வாங்க மாப்பிள்ள உள்ள வாங்க" என்று மரியாதை நிமித்தமாக அழைக்க


"மாப்பிள்ளையாம்… மாப்பிள்ளை…. யாரு யாருக்கு மாப்பிள்ளை... முறைப்படி பொண்ணு பாத்து... பரிசம் போட்டு... நாளு கிழமைன்னு பார்த்து, பார்த்து... எல்லாம் நடந்தா மாதிரி மாப்பிள்ளன்னு கூப்பிடுற?…. இழுத்துகிட்டு ஒடுன சிரிக்கி தானே" என்று சாந்தா தேவாவை பற்றி இழிவாக பேசவும்


"அம்மா" என்று அருண் கொடுத்த சத்ததில் கப்சிப் என்று அடங்கி போனார் சாந்தா… சாந்தாவை பார்த்த அருண் "என்னம்மா அப்பாவை வரவைக்கனுமா? அவர் இல்லனதும் பயம் விட்டு போச்சா!!! நீ இங்க இருந்து ஏத்தி விட்டது போதும் கிளம்பு ஊருக்கு" என்று நரநரவென்று பற்களை கடித்தபடி பேசிட


"தேவை இல்லாத பேச்செல்லாம் எதுக்கு சாந்தா?!!? இதுல நீ தலையிடாத" என்று தங்கையை கண்டித்தவர் விசாகனிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் "என்ன விஷயமா வந்திங்க"? என்றார் எங்கோ பார்த்த படி


சாந்தா பேசியதில் கோவம் கொண்டு இறுகிப்போய் நின்றிருந்தவன் "இங்க உறவு கொண்டாட யாரும் வரலை... என் மனைவிக்கு தாலி பிரிச்சி போடுற விசேஷம் இருக்கு... இந்த ஊர்ல பொண்ணை எடுத்தவன் என்ற முறையில ஊர் பெரிய மனுஷன்னு உங்களை அழைக்க வந்தேன்" என்று கூறியவன் விறுவிறுவென வெளியேறி இருந்தான்.


கண்கள் திறந்து மனைவியை பார்த்தவன் 'என்னால தானடி உனக்கு கெட்ட பேரு... அப்பவே உன்னுடைய காதலை நான் ஏத்துக்கிட்டு இருந்தா... எப்படியாவது உங்க அப்பா சம்மதத்தோட நம்ம கல்யாணம் நடந்து இருக்கும்... உனக்கும் மரியாதையா இருக்கும்… நீ கஷ்டப்பட நானே காரணம் ஆகிட்டேனடா…" என்று வருத்தம் கொண்டு எழுந்து அவள் அருகில் சென்றவன் தேவாவின் தலையை மெல்ல வருடி "வா பண்ணை வீட்டுக்கு போயிட்டு வரலாம்" என்றான்.


அவன் வருடலில் நிமிர்ந்து அவனை கண்டவள் "இல்ல... வேணாம்... உங்களுக்கு அசதியா இருக்குன்னு சொன்னிங்களே அப்புறம் போலாம்" என்று மறுத்திட


"இப்போ பரவாயில்லை...நீ கிளம்பு நாமா போயிட்டு வரலாம்" என்றவன் தில்லையிடம் கூறிவிட்டு தேவாவை தன்னுடன் பண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தான்.


சில்லென்று மேனியை வருடிச்செல்லும் தென்றலின் இதமும் தன் உள்ளத்தை நிறைத்தவளின் கலங்கிமில்லா முகமும் மனதில் ஒரு வித நிம்மதியை கொடுக்க கயிற்று கட்டிலில் அவளை அமர வைத்தவன் அவளின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.


உ… உங்களுக்கு என்று பேசியவளின் குரலுக்கு பதில் அவளின் மூச்சுக்காற்று தான் வெளியே வந்தது. அவனின் இந்த புது அவதாரத்தில் கதிகலங்கியவள், திக்கி திணறி நா… நா.. மா வீட்டிக்கு போலாம்" என்று வார்த்தைகளை உதிர்த்திட


"ஏன்…?" . என்றான் ஒற்றை சொல்லில்


"இல்ல கொ.. கொ…" என்று அவள் திணறிட அதை ரசித்தவன் அவள் அறியாமல் அதை மறைத்து "என்ன கொக்கு பிடிக்க போறியா?" என்றான்


"இல்ல ப… படிக்க…" மீண்டும் அவள் காற்றை வெளியேற்ற


"ஓ.. படிக்க.!.... " என்று வியப்பாய் கேட்டவன் "இப்போ படிக்க போறியா?" என்றான் கேளியாக


'ம்" என்று தலையை ஆட்ட சிறிது நேரம் அவளை சீண்ட எண்ணியவன் அவள் பதட்டம் கண்டு அமைதியை தத்தெடுத்து நிதானத்தை வரவழைத்துக் கொண்டு "வா போகலாம்" என்று அவள் எழும்பி நிற்க கை கொடுத்தான்.


நீட்டிய கையை பற்றலாமா வேண்டாமா என்று மனதில் பட்டிமன்றம் நடத்தியவளின் பெருமூளையையும், சிறுமூளையையும் ஒருசேர மழுங்க செய்தவன் "ஏன் சனா கை கொடுக்க வேண்டா மா…. என்றவன் அவளை சீண்டும் எண்ணம் வர "அப்போ உன்னை பைக் வரையும் தூக்கிட்டு வறேன் வா" என்று அவளை தூக்க முன் வர துள்ளி குதித்து இரண்டு எட்டுக்கள் பின்னால் வைத்தவள்


"கை… கைதானே இதோ நான்... நானே உங்க கைய பிடிச்சிக்கிறேன் தூக்கலாம் வேண்டாம்" என்று அவன் கரங்களை பற்றி அவனுடன் பயணித்த தேவாவிற்கு வீட்டிற்கு வந்த பிறகுதான் சீராண மூச்சே வந்தது அவன் நெருங்கி வரும் தருணங்கள் எல்லாம் படபடவென கைகால்கள் தந்தியடித்துக்கொள்ள வாய் குழறி பேச்சையே மறந்து விடுகிறாள்.


எப்போதும் கண் கலங்க மனம் வாடா பேசும் விசாகனையே பார்த்து பழக்கப்பட்டவளுக்கு தன்னிடம் கிண்டல் செய்து வம்பு பேசும் விசாகன் புதிதாய் தெரிந்தான். அவன் மாற்றத்தில் கணவன் என்ற உரிமை மனதில் பொங்கி வழிந்தாலும் அவன் இன்னோரு பெண்ணை காதல் செய்கிறான் என்ற செய்தி அதை மேலே வரவிடாமல் தொடக்கத்திலேயே அமிழ்த்தி விடுகிறது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN