பூ 36

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

மூளைக்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டத்தில் அதிகம் தோற்பது மனம் மட்டும் தான் இப்போதும் மனது தோற்றுப்போய் ஒரு மூலையில் அடங்கிவிட்டது தேவாவிற்கு, அந்த சம்பவத்திற்கு பிறகு வந்த நாட்களும் எந்த ஒரு மாற்றமுமின்றி அவனுடன் காதல், மோதல் என்று நகர்ந்துக்கொண்டு தான் இருந்தது.


விசாகனுக்கும் அரிசி ஆலை, தொழிற்சாலை, தோப்பு, வயல்வெளி என்று வேலைகள் வரிசை கட்டி நின்றாலும் மனைவியை கவனித்துக் கொள்வதே முதல் வேலையாக வைத்துக்கொண்டு இருந்தான். அவ்வப்போது அவளை சீண்டி வம்பிழுக்கவும் மறக்கவில்லை, அது அவளை எந்த விதத்திலும் பாதிக்காமலும் பார்த்துக் கொண்டான்.


தேவா, அமுதாவிடம் முழுவதும் முகத்தை திருப்பி முறுக்கிக் கொள்ளாமல் பட்டும் படாமலும் பேசிக்கொண்டு இருந்தாலும் தேவாவிடம் அமுதா நன்றாகவே பேசிக்கொண்டு இருந்தாள். தினமும் வீட்டிற்கு சென்று தாயின் படத்திற்கு பூ போட்டு விளக்கேற்றி சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு வருபவள், ஒரு நாள் ஞாயிற்று கிழமை வாக்கில் வீட்டில் இருந்த தேவாவை தன் வீட்டிற்கு அழைத்தாள் அமுதா, மறுத்து பேச வந்த தேவாவிடம் தில்லை, "காலேஜி படிப்பு, வீடுன்னே இருக்கியே கண்ணு இன்னைக்கு புள்ளைகளும் இல்லையே கொஞ்சம் வெளியே தெரு போயிட்டு வா டா... உனக்கும் ஒரு மாற்றமா இருக்கும்". என்று கூறிய பெரியவரிடம் மறுத்து பேச முடியாமல் அமுதாவுடன் அவளின் வீட்டிற்கு சென்றாள்.


வீடு, வீட்டை விட்டால் கல்லூரி, படிப்பு, பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது... என்று கடிவாளம் கட்டிய குதிரையை போல ஒரே நேர்கோட்டில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தவளுக்கு பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல்வெளிகளும் உடலையும் மனதையும் வருடிச்செல்லும் குளிர் காற்றும் அவளுக்குள் ஒரு மாற்றத்தை கொடுக்க இருக்க மனது லேசானது போல தான் இருந்தது.


வீட்டிற்குள்ளே வந்த அமுதா வெளியே சுற்றி பார்த்திருந்த தேவாவை "ஏன் தேவா அங்கயே நிக்குற?.. உள்ள வா" என்று அழைத்தாள்.


வீட்டின் கூடத்திலேயே பெரிய புகைப்படத்தில் இருந்த அலமேலுவின் படத்தின் அருகே சென்ற அமுதா அவரின் புகைப்படத்தில் இருந்த காய்ந்த பூவை எடுத்துவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த மலர் சரங்களை மாலையாக தொங்க விட்டு படத்தின் கீழே இருந்த விளக்கில் எண்ணெயை ஊற்றி தீபத்தை ஏற்றினாள்…


புகைப்படத்திலேயே நிலைத்திருந்தது அவள் விழிகள் தாயின் முகத்தினை கண்டவளுக்கு விழிகள் நீர்திரையிட்டு பளபளப்பை கொடுத்தது, வேதனை தாங்காமல் கண்களை மூடி நின்றவளுக்கு இரண்டு சொட்டுக்கள் கன்னத்தில் இறங்கியது….


தேவாவிற்கு அமுதாவை காணவே வருத்தமாய் இருந்தது. திருமணத்திற்கு முன்னமே அமுதாவின் தாய் இறந்த விஷயம் தெரியும். ஆனால், எப்படி? ஏன்? இறந்தார்கள் என்று எல்லாம் அவளுக்கு தெரியாது. அந்த நேரத்தில் அவள் கேட்கவும் இல்லை, கண்களும் மனதும் கலங்கி நிற்பவளின் அருகே சென்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டு ஆறுதலை கொடுத்தவள் "தைரியத்தை விடாதிங்க அமுதா" என்றாள்


ம் என்று தலையை ஆட்டி அதை ஒப்புக்கொண்டவள் "ரொம்ப பட்டுட்டோம் தேவா... நாங்க படாத கஷ்டமே இல்லை... அந்த கஷ்டமே எங்களுக்கு தைரியத்தை கொடுத்துடுச்சி"... என்றாள் தழுதழுத்த குரலில்.


அவளின் குரலில் உள்ள வேதனையையும் அன்னையை பிரித்து துக்கத்தையும் கண்டவளுக்கு அவள் மேல் இருந்த கசப்பு மறந்து போய் அனுதாபமே பிறந்தது. "அமுதா" என்று தேவா அழைக்க தன்னிலைக்கு வந்த அமுதா தன் கன்னத்தை துடைத்தபடி துக்கத்தை விழுங்கியவள் சிரிக்க முயற்சித்த வண்ணமே "நான் ஒருத்தி... முதல் முதலா வீட்டுக்கு வந்து இருக்க, இரு வறேன்" என்று கூறியவள் பின் கட்டு வழியாக தோட்டத்திற்கு சென்றாள்.


அமுதா செல்லும் திசையை பார்த்தவளின் கவனம் அலமேலுவின் புகைபடத்தின் மீது திரும்ப அவரின் புகைப்படத்திலேயே அவளின் பார்வை நிலைத்து இருந்தது... கொள்ளையில் இருந்து திரும்பி வந்த அமுதா கையில் வைத்திருந்த ஒற்றை ரோஜாவை தேவாவின் தலையில் வைத்துவிட. "ரொம்ம அழகா இருக்காங்க" என்றாள் தேவா, அவளின் அன்னையின் படத்தை பார்த்து


கசந்த முறுவல் ஒன்றை உதிர்த்த உதடுகள் பின் அமுத்தமாக "ஒரு சிலருக்கு அழகும் அந்தஸ்தும் ஆபத்து தேவா" என்றாள் ஒரு மாதிரியான குரலில் .


"புரியல அமுதா" என்ற தேவாவிடம்


"எங்க அம்மா அழகாவும், பணமும் இருக்க போய் தானே, அந்த ஆள் காதலுன்ற பேர்ல ஏமாத்தி கல்யாணம் செய்தான்" என்றாள் சலிப்பாக


"தேவா அவர் உங்க அப்பா" என்று தயங்கி கூறிட "அவரா… அந்த மரியாதை கூட கொடுக்காத தேவா, அதுக்கு எல்லாம் கொஞ்சம் கூட அருகாதை இல்லாத ஆளு... அப்பா என்ற உறவுக்கே கலங்கம் அந்த ஆளு… அந்த ஆள் பண்ண அட்டகாசம் எல்லாம் பாத்து பாத்தே, காதல், கல்யாணம், குடும்பம் இது மேல விருப்பமே இல்லா தேவா.. வெறுத்து போச்சு… இன்னும் சொல்ல போனா காதல் அந்த பெயரை கேட்டாலே அலர்ஜியாகிடுது" என்றாள் அமுதா.


"என்னது காதல்னா அலர்ஜியாகிடுதா"!!!!! என்று ஓர் அதிர்வான பார்வையை அமுதாவை நோக்கி வீசியவளின் மூளை வேலை நிறுத்தம் செய்து பல நிமிடங்கள் ஆனது.


ஆணியடித்தார் போன்று ஒரே இடத்தில் நின்றிருந்தவளை "தேவா" என்று உலுக்கியதில் சுயம் பெற்றவள் "என்ன சொன்னிங்க??? திரும்பவும் எனக்காக சொல்ல முடியுமா?" என்று கெஞ்சி கேட்க


"அப்படி என்ன சொன்னேன்" என்று அமுதா யோசிக்க


"இல்ல காதலை பத்தி ஏதோ சொன்னிங்க... நான் சரியா கவனிக்கல" என்றதும் "அந்த வார்த்தையை கூட சத்தமா சொல்லாத தேவா, எனக்கு அலர்ஜியாகிடும்" என்று அமுதா சிரித்தபடியே கூறினாள்.


'அப்போ…. அமுதா, உங்க வாழ்க்கையில நான் குறுக்க வரலை... உங்களுக்கு கிடைக்க இருந்த தாலியை நான் பறிக்கல…' என்று மனதில் நிம்மதி கூக்குரல்கள் ஒலித்து சந்தோஷத்தை கொடுத்தாலும் 'நீங்க ஹீரோவ லவ் பண்ணலியா!!! ஹீரோ தான் ஒன்சைடா உங்களை லவ் பண்ணாறா' என்று கவலையும் கொண்டாள்


( இந்த கவலை எதுக்கோ….அந்த கடவுளே இறங்கி வந்து சொன்னாலும் இது திருந்தாத கேஸ் அடேய் விசா உனக்கு இந்த பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா)


அமுதாவின் வீட்டிலிருந்து தங்களது வீட்டிற்கு வந்தவள் மந்திரித்து விட்டது போல குழம்பி போய் இருந்தாள். இரவு உணவிற்கு வந்து அமர்ந்த விசாகனிடம் "எய்ய ராசா தேவா கண்ணு இன்னும் சாப்பிடாம இருக்கு" என்றிட


"ஏன் அப்பத்தா? மணி என்ன ஆகுது? ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கா?... என்றான் அக்கரையாக


"நான் கூப்பிடாம இருப்பேனாய்யா?? நானும் போய் ரெண்டு தரம் கூப்பிட்டேன்.... அமுதாவும் கூப்பிட்டுச்சி... அது என்னமோ நெனைச்சிக்கிட்டு மோட்டு வளையத்தை பாத்துக்கிட்டு இருக்கு... எதுக்கும் நீ ஒரு எட்டு போய் கூட்டிட்டு வா ராசா" என்றவர். "நான் சித்த படுக்குறேன் முதுகு பிடிப்பும், கால் வலியும் படுத்தி எடுக்குது" என்றிட


"நாளைக்கு ரெடியா இரு ஹஸ்பிட்டல் போகலாம்... இந்த வலியோட எல்லாம் இருக்க முடியாது" என்று விசாகன் கூறியதும்.


"அட இது ஒரு வலியாக்கும்... இப்படி கொஞ்ச நேரம் போய் படுத்தா சரியா போகுது... நீ போய் புள்ளைய பாருயா, இந்த கட்டைக்கு ஒன்னும் ஆகாது" என்றவர் விசாகன் எவ்வளவு கூறியும் மறுத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.


"பச் அப்பத்தா எப்போதான் என் பேச்சை கேக்க போறயோ!" என்று முனங்கியவன் மேல்மாடியை நோக்கி நடந்தக்கொண்டே 'இப்போ எந்த படத்தை பார்த்து தொலைச்சான்னு தெரியலையே!!! முதல்ல டிவி கனெக்ஷ்ன் கட் பண்ணனும் தியேட்டர் கூட்டிட்டு போய் சொந்த செலவுல சூனியத்தை வைச்சிக்கிட்டேன்.. இப்போ எது எனக்கு சூனியம் வைக்க காத்திருக்கோ' என்று கிண்டலாக நினைத்தபடி அறைக்குள் சென்றான்.


அறை முழுவதும் இருட்டு நிறைந்து இருக்க விளக்கை போட்டு வெளிச்சத்தை அள்ளி தெளித்து இருந்தான் விசாகன். அவன் தேடி வந்தவளோ ஏதோ யோசனையில் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வேறு எங்கோ பார்வையை பதித்தபடி நாற்காலியில் அமர்ந்து இருந்தாள்.


'இருட்டுல புக் வைச்சி என்ன பண்றா இவ !!!' என்று நினைத்தவன் "சனா...சனா…" என்று மெல்லிய குரலில் அழைக்க எந்த சலனமும் இன்றி அதே நிலையில் இருந்தவளை "சனா" என்று சற்று சத்தத்தை அதிகப்படுத்தி அழைக்க வெகு அருகில் கேட்ட குரலில் அதிர்ந்து அவனை கண்டவள் கனவில் இருந்து விழிப்பது போல் திருதிருவென்று விழித்தாள்.


"இருட்டுல உட்காந்துட்டு என்ன பண்ற சனா?" என்றான் விசாகன்.


கையில் இருந்த புத்தகத்தை காட்டி "என்ன பண்றேன் தெரியல? படிக்கிறேன்" என்றாள் விட்டேத்தியாக.


"நீ இருட்டுல உட்காந்து படிக்கற லட்சணம் நல்லாவே தெரியுது" என்றவன் "வா சாப்பிடலாம்" என்றான்.


"ஓ… உங்க கண்ணுக்கு நான் தெரிஞ்சிட்டேனா" என்று கோபமாக கேட்டவள் "எனக்கு பசிக்கல நீங்க போங்க" என்று மறுபடி புத்தகத்தின் மீது பார்வையை பதித்தாள். ஏனோ அவன் கண்களுக்கு தான் ஒரு பெண்ணாக ஏன் ஒரு பொருட்டாக கூட அவன் பின்னாள் சுற்றித் திரிந்தக் காலங்களில் தெரியவில்லையே என்று கோவம் உள்ளுக்குள் அவளை வாட்டியது


அவள் எதையோ மனதில் வைத்து பேசுவதும் அல்லாமல் உணவையும் வேண்டாம் என்று மறுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் "இப்போ இல்ல சனா எப்பவும் என் கண்ணுக்கு உன்னை மட்டும் தான் தெரியும்... அது உனக்கு எப்போ தான் புரிய போதோ" என்று அவள் கேள்விக்கு விசாகன் பூடகமாக பதிலை அளித்து இருந்தான்.


அதை மனது அறிந்து கொண்டாலும் மூளை ஏற்க மறுக்க "இப்போ என்ன நான் சாப்பிடனுமா? வயிறும் மனசும் நிறைஞ்சி போயிருக்கு... எனக்கு சாப்பாடு வேண்டாம்.… நீங்க போய் சாப்பிட்டு வாங்க... எனக்கு படிக்க நிறைய இருக்கு" என்றாள் புத்தகத்தை கையில் எடுத்தபடி


அமுதா கூறியதில் இருந்து அவள் காதலிக்கவில்லை அவளுடைய வாழ்க்கையை தான் தட்டி பறிக்கவில்லை என்று தெரிந்துக் கொண்டவள் விசாகனிடம் இன்னும் அதிக உரிமையுடனே நடந்துக் கொள்ள அவர்கள் அறியாமலேயே கணவன் மனைவி என்ற இடத்தினை இருவரும் பூர்த்தி செய்துகொண்டு இருந்தனர்.


"ஒரு முறை சொன்னா கேக்குறது உன் அகராதியிலையே இல்லையாடி... எப்பவும் வம்பு பண்ணிக்கிட்டே இருப்பியா! வாயாடி…." என்று அவளின் கையில் இருந்த புத்தகத்தை பிடிங்கி அதை மூடி மேசையின் மீது வைத்தவன் "உனக்கு பசிக்குது பசிக்கல அது எல்லாம் பிரச்சனை இல்லை... நீ நேர நேரத்துக்கு சாப்பிட்டு இருக்கனும் அவ்வளவு தான்... இல்ல," என்று அவளை பார்த்து கூறிட


"இல்லன்னா என்ன… " என்று அவள் எழுந்துக்கொண்டே கேட்டு இருக்க


அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அவளை இரு கைகளிலும் மலர்சரத்தை ஏந்துவது போல் ஏந்தியவன் "சொல்ல மாட்டேன் டி செய்து காட்டுவேன்.… இப்போ எப்படி அடம் புடிக்கிறன்னு பாக்குறேன்" என்று அவளை சுமந்தபடியே அறையை விட்டு வெளியேற இதை எதிர்ப் பார்க்காதவளுக்கோ கண்கள் இரண்டும் அதிர்வை வெளிபடுத்தி இமைகள் படபடவென அடித்துக்கொண்டது, இதய துடிப்பு அவளுக்கே கேட்கும் அளவிற்கு வேகமாக துடிக்க, குரல் தந்தியடிக்க "ப்ளீஸ் ப்ளீஸ் என்னை கீழே இறக்கிடுங்க... எனக்கு கைகால் எல்லாம் உதறது ப்ளீஸ்" என்றாள் கெஞ்சலில் இறங்கி.


"இல்ல நீ அடங்க மாட்ட... இறக்கி விட்டபிறகு சாப்பிட வரமாட்டுன்னு சொல்லிட்டா" என்றான் அலளை நம்பாத பார்வையில்


சட்டென அவன் தலையில் கரத்தை வைத்தவள் "சத்தியமா சாப்பிட வறேன்... இனி சாப்பிட லேட் பண்ண மாட்டேன்.. இறக்கி விட்டுங்க ஹீரோ ப்ளீஸ் பீளீஸ்... பாட்டி அமுதா முத்தண்ணே பொன்னி அக்கா எல்லாம் இருப்பாங்க என் மானம் போகும் இறக்கி விடுங்க" என்று குரல் கம்ம கூறினாள்.


'எதே ஹீரோவா?' என்று கண்களாலே விசாகன் வினா தொடுக்க வாய் தவறி உளறிய வார்த்தையில் நாக்கை கடித்தவள் "ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.


"அப்போ உன்னை இறக்கி விடனும்னா இப்போ என்ன பார்த்து ஏதோ சொன்னயே அது என்னன்னு சொல்லு அப்பதான் இறக்கி விடுவேன்" என்றான் மிரட்டல் தோணியில்.


முகத்தை திருப்பி வைத்துக்கொண்டவள் "அது சொல்ல முடியாது நீங்க என்னை இறக்கி மட்டும் விடுங்களேன்" என்றாள்


"அது பரவாயில்லை உனக்கு எப்போ சொல்லனும்னு தோனுதோ சொல்லு நான் கம்பல் பண்ண மாட்டேன்… என்று பெருந்தன்மையாக கூறிபவன் போல் கூறியவன் "ஆனா உன்னை கீழே இறக்கி மட்டும் விட முடியாது டி... இப்படியே வா கீழே போகலாம்" என்று அறை வாசலில் இருந்து மாடிபடியை நோக்கி நடையை போட்டான்


கண்களை இறுக்க மூடி காதை பொத்தி "சொல்றேன் சொல்றேன் இறக்கி விடுங்க" என்று அழுத்தமாக அவள் கூறியதும்


"முதல்ல நீ சொல்லு அப்புறம் இறக்கி விடுறேன்" என்று சட்டமாக கூறியவனின் மேல் கடுங் கோபத்தில் இருந்தவள் "உங்க மேல பைத்தியமா சுத்திட்டு இருக்கும்போது உங்கள இப்படி தான் மனசுக்குள்ள கூப்பிடுவேன்" என்று கூறிய அடுத்த நொடி அவளின் நெற்றியில் தன் நேற்றியோடு முட்டியவன் மெல்ல அவள் கண்களில் இதழ் பதித்து இறக்கி விட்டான். அதன் பிறகு தான் செய்த முட்டாள் தனத்தை நினைத்து தன்னை திட்டிக்கொண்டவன் சாதரணமாக இருப்பது போல காட்டிக்கொண்டு அவளை பார்த்தான்.


அவன் கொடுத்த முத்தத்தை மனது ஏற்றுக்கொண்டது போலும் அவள் கண்களில் நிற்காமல் வழிந்த நீர் அவளின் படபடப்பை உணர்த்த தேவாவை கீழே இறக்கியவன் அவளின் கன்னத்தை துடைத்தவன் "வா சனா" என்னு கைபிடித்து அழைத்து வந்து மேசையின் முன் அமரவைத்து இருந்தான்.


நடந்த சம்பவத்தால் பிரம்மையில் இருந்தவள் தன் முன்னே என நடக்கிறது என்பதை கூட அறியாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். "சனா" என்று மெல்லிய குரலில் அழைக்க எந்த வித சலனமும் இன்றி அவன் மீது மயக்கத்தில் இருந்தவளுக்கு தானே சாதத்தை பறிமாறி அவளுக்கு ஊட்டியும் விட்டு இருந்தான்.


அவளுக்குத்தான் சாதம் இறங்குவேனா என்று சண்டித்தனம் செய்தது கஷ்டப்பட்டு உணவை விழுங்கியவளுக்கு இன்னும் அந்த சம்பவத்திலிருந்து வெளியே வர முடியவில்லை அந்த இனிமையான தருணத்தையும் மறக்கவும் முடியவில்லை... சாப்பிட்டு முடித்து அறைக்குள் பிரவேசித்தவர்களுக்கு அந்த நாளே இன்பமாய் இருந்தது. அடிமனதில் தன் காதல் நாயகனின் முத்தத்தின் இதத்தை சேமித்து வைத்தவளுக்கும் சரி அதை கொடுத்தவனுக்கும் சரி நிம்மதியான உறக்கம் கண்களை தழுவியது. எப்போதும் போல வாய் பேசும் தேவா தன் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பிக்கொண்டு இருந்தாள்.


தேவா, மேகலாவின் மூலம் வீட்டில் நடப்பதை தெரிந்துக் கொள்பவள் எப்போதாவது அத்தி பூத்தார் போன்று மரகதத்தை கோவிலில் சந்தித்து போசிக்கொள்வாள் தாயை காண ஆசையும் ஆவளும் இருந்தாலும் தந்தை மற்றும் தமையனின் கோபத்திற்கு அன்னையை ஆளாக்கா வேண்டாம் என்று நினைத்து அடிக்கடி சந்திப்பதை தவிர்த்து இருந்தாள்.


தேவாவை சந்தித்த மரகதத்திற்கு மகளின் கவலை தீர்ந்து இருந்தாலும் மகனை பார்க்கவில்லையே என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை போன் செய்தாலும் பேசாமல் வீட்டிற்கும் வராமல் சென்னையிலயே தங்கி இருப்பவனின் பிடிவாதத்தில் நொந்து போனார் மரகதம். நாளுக்கு நாள் முக வட்டத்திலும் உடல் மெலிவதிலுமே இதை தெரிந்துக்கொண்ட சௌந்தரலிங்கம் ஒரு நாள் மாலை பொழுதில் வீட்டிற்கு வந்தவர் "மரகதம் ஒரு ரெண்டு நாளுக்கு ஆகுறா மாதிரி துணி எடுத்து வைச்சிக்க வெளியே போறோம்" என்றார்.


"எங்கே" என்று கேட்கற்கு "உன் மகனை பார்க்கத்தான்" என்று கூறியதும் மறுப்பேச்சி ஏதும் இன்றி உடனே கிளம்பி விட்டார் மரகதம்.


தூங்கிக்கொண்டு இருந்த ஜெயசந்திரனுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு முழிப்பு வர போனை எடுத்து நேரத்தை பார்த்தான் இன்னும் விடிவதற்கு நேரம் இருக்க இவ்வளவு காலையில் யாரக இருக்கும் என்ற யோசனையோடே கதவை திறந்தவனுக்கு பெற்றவர்களை கண்டதும் அதிர்ச்சியாக இருக்க அப்படியே நின்றிருந்தான்.


மகனை கண்ட மரகதத்திற்கு கண்கள் இரண்டும் கலங்கி விட்டது அவனை கண்ட சந்தோஷத்தில் பேச்சை மறந்தவர் மகனையே பார்த்துக்கொண்டு இருந்தார். அவன் கோபித்துக்கொண்டு சென்று முழுதாய் நான்கு மாதங்கள் கடந்து இருந்த நிலையில் தாய் தந்தையரை கண்டவனுக்கும் மனம் இளகி விட்டது "அம்மா.. அப்பா.. நீங்க" இங்க என்று வார்த்தைகள் வராமல் தவித்தவனை "வாசல்ல நிக்கவச்சே பேசனுமா சந்தரா" என்ற சௌந்தரலிங்கத்தின் பேச்சில் "உள்ள உள்ள வாங்க பா... வா மா.." என்று இருவரையும் அழைத்தவன் அவர்களுடைய பயணப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான்.


அமைதியாக வந்த சௌந்தரலிங்கம் நாற்காலியில் அமர்ந்துவிட மகனை கண்ட மரகத்திற்கு தான் மனது ஆறவில்லை "ஏய்யா சந்திர நீ பண்றது உனக்கே நல்லதா படுதா... உங்க அப்பாருக்கு உன் மேல கோபட உரிமை இல்லையா?.. ஒரு வார்த்தை கேட்டதுக்கு, இருக்கோமா... செத்தோமான்னு... கூட ஊர்பக்கம் எட்டி பாக்கமாட்டியா? என்று ஆற்றமையுடன் கேட்டிட


மன்னிச்சிடுமா என்று தாயின் கைகளை பற்றிக்கொண்டவன் கண்கள் கலங்கியது போல தான் இருந்தது. தந்தையின் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து "என்னை மன்னிச்சிடுங்க பா நான் வேணும்னு இதை உங்ககிட்ட மறைக்கல" என்றான் தவறு செய்து விட்ட மனப்பான்மையில்.


பேசாமல் அமைதியாக குனிந்து இருந்த சௌந்தரலிங்கம் "என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேக்குற சந்தரா?... ஆளுக்கு ஆள் வளந்துட்டிங்க நீங்க தனியா முடிவு எடுக்க முடியும் போது இந்த அப்பன் ஆத்தா எல்லாம் கண்ணுக்கு எப்படி தெரியும்… பெத்து, வளர்த்து, படிக்க வைச்சா மட்டும் போதும் அதுக்கப்புறம் எங்க தயவு எதுக்கு உங்களுக்கு?" என்றவர் பயணகலைப்பில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்துவிட்டார்.


தந்தையின் சொற்கள் ஒவ்வொன்றும் சூடாய் விழ்ந்தது அவன் இதயத்தில், அதே ரணத்துடன் "அம்மா" என்றவன் "நீயும் என்னை திட்டத்தானே போறம்மா திட்டு மா திட்டு ஆனா நான் அவளுக்கு நல்லது பண்ண தானேம்மா நினைச்சேன்... இவ காதல் தெரிஞ்சதும் என் கண்ணுக்கு முதல்ல தெரிஞ்சது அப்பா... அப்பா மட்டும் தான்... அவருக்கு தலை குனிவாகிட போகுதேன்னு தான் பயந்தேன்... இருந்தும் அவனை பத்தி விசாரிச்சேன்… முரடன் முன்கோபி யாருக்கிட்டயும் பேச மாட்டான்றதை எல்லாம் தாண்டி அவன் ஒரு பொண்ணை விரும்பி இருக்கான் மா, படிக்கிற டைம்ல நானே அந்த பொண்ணு கூட அவனை பாத்து இருக்கேன்... அப்படி இருக்கும் போது என் தங்கச்சியை அவனுக்கு எப்படி மா கட்டிக்கொடுக்க மனசு வரும்... அவன் எப்படி நல்லா வைச்சிப்பான்… அதுவும் ஒருதலையா காதலிச்சி ஏமாந்தவங்கள நாம பாக்கலையா அது என் தங்கச்சிக்கும் நடக்கனும்மா மா?" என்றான் தன்னுடைய நிலையை விளக்கும் ஆவேசத்துடன்


சந்திரன் விசாகனை பற்றி சில விஷயங்களை பேசும் போதே அவனை உள்ளறைக்கு அழைத்து வந்தவர் "அமைதியா பேசு" என்று சைகை செய்ய


"என்ன மா? ஏன் அப்பாவுக்கும் அவனை பத்தி தெரியனும்ல? நல்லவன், நல்லவன்னு பேர் எடுத்து வைச்சிட்டான்... ஆனா, அவனை பத்தி அவருக்கு தெரியாமையே போயிடும் மா... நாள பின்ன அவளுக்கு ஒரு கஷ்டம் வந்தா கவலைப்பட போறது நாமதானே மா" என்று கூறியவன் தாய் எதற்கு அப்பாவிற்கு தெரிய வேண்டாம் என்கிறார் என்று புரியாமல்


"விடுய்யா சந்தரா நடந்ததை நீ மறைச்சது தான் உன் அப்பாருக்கு கோவம்... அதுவும் அத்தனை பேர் முன்னாடி அவங்க காதல் தெரிஞ்சி அசிங்கப்பட்டு நின்னது தான் அவருக்கு உறுத்திட்டு இருக்கு... போக போக எல்லாம் சரியாகனும் நீ அந்த புள்ளைபத்தி சொன்னது எல்லாம் எனக்கு தெரியதுய்யா... ஆனா, எம்பொண்ணு நல்லா இருக்கா... அவ வாழுறதை பார்க்கும் போது கண்ணும் மனசும் நிறைஞ்சி போய் இருக்கு" என்று மனநிம்மதியுடன் கூற


நீ..நீங்க அவள எப்போ பாத்திங்க? அவ அவ நல்லா இருக்காளா? அவ கூட பேசினிங்களா? அவ எப்படி இருக்கா?… அவன் தேவாகிட்ட நல்லா நடந்துக்குறானா?... அவளை நல்லா பாத்துக்குறானா?…" என்றான் ஆர்வமாக அவன் குரலில் தங்கையின் வாழ்வில் சோதனைகள் இல்லை என்ற சந்தோஷத்தில் சத்தத்தை அதிகபடுத்தி இருக்க "ஏய்யா பொறுமை, பொறுமை" என்றவர் "நல்லா இருக்காய்யா நீ மாப்பிள்ளைய பத்தி கண்டதையும் பேசி உங்க அப்பாரு காதுக்கு போக வைச்சிடாத... குணமான மாப்பிள்ளை தான்ய்யா... அவரு உன் தங்கச்சிய நல்லா வைச்சி இருக்காரு" என்று கூறிட


"என் மூலமா எப்போதும் அப்பா காதுக்கு போகாதுமா... உன் பொண்ணை பத்தியும்…


உன் மாப்பிள்ளைய பத்தியும்…" என்ற போது குரலில் ஒரு அந்நிய தன்மை தொக்கி வந்தாலும் தங்கையின் நினைவில் கண்கள் கலங்கியது அதை தாய் அறியாதவாறு மறைத்தவன் வந்தவர்களை கவனிக்க சென்றான்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN