8. என் பார்வை உனக்கும் இரகசியமா?

Sankaridayalan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திடீரென எங்களின் முன் வந்தமர்ந்த ஹரியைப் பார்த்து ஆச்சரியமடைந்த மயூ" அண்ணா… நீங்களா… எப்படி இங்க எங்க காலேஜ்ல இருக்கீங்க?..."

"நான் இந்த காலேஜ்ல தான் மாஸ்டர்ஸ் ஜாய்ன் பண்ணிருக்கேன்… வான்மதி உங்க கிட்ட சொல்லலியா?நான் நேத்தே அவங்க கிட்ட சொன்னேனே!..."என அவள் கேள்விக்கு பதில் கூறி என்னையும் அவளிடம் நன்றாக மாட்டிவிட்டான்.

அவன் அப்படிச் சொன்னதும் என் பக்கம் தலையைத் திருப்பி ஒரு குறும்புப் பார்வை பார்த்த மயூ பிறகு அவனிடம் "அவ மறந்துட்டா போல"என அமைதியாகக் கூறினாள்

"ஓ… சரி சரி என்ன வான்மதி அமைதியா இருக்கீங்க? அசைன்மெண்ட் நல்லாதானே பண்ணீங்க" என மீண்டும் அதே கேள்வியை முன்வைத்தான் ஹரி.

"ஹ்ம்ம்… நல்லா பண்ணேன் ஹரி...மேம் ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு பாராட்டினாங்க…"என அமைதியாகக் கூறினேன்.

"வாவ்… சூப்பர்ப்… வாழ்த்துக்கள்… "என புன்னகையுடன் கூறினான். அதற்குள் அவனின் நண்பன் ஒருவன் ஹரியை யாரோ அழைப்பதாகக் கூறி கையோடு கூட்டிச் சென்றுவிட்டான்.

அவன் தலை அங்கிருந்து மறைந்ததும் "மேடம் இன்னும் என்கிட்ட சொல்லாம என்னெல்லாம் மறைச்சி வச்சிருக்கீங்க…."எனக் கேலியாகக் கேட்டாள் மயூ.

"இதான்… இதுக்குத்தான்… நீ என்னை இப்படி கிண்டல் பண்ணுவேன்னு தெரிஞ்சு தான் நான் உன்கிட்ட அவனைப் பத்தி சொல்லலை… செமினார் நடந்த அன்னைக்கே நீ ஓவரா பேசிட்டு இருந்த… அதனாலத்தான் நான் அவனைப் பார்த்ததைப் பத்தி உன்கிட்ட எதுவும் சொல்லலை" என என் மனதில் உள்ளதை படபடவென அவளிடம் கூறினேன்.

"சரி சரி… நான் ஒன்னும் உன்னை கிண்டல் பண்ணலை...இப்படி அப்பளம் மாதிரி பொரியாத… எனக்கு காது வலிக்குது… சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பனும்… அடுத்த க்ளாஸ் சுபா மேமோடது… டெரர் லேடி லேட்டா போனா நம்மல கரண்டி இல்லாமயே ஹல்வா கிண்டிடுவாங்க" என அப்பேச்சுக்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தபடி இருவரும் அங்கிருந்து புறப்பட்டோம்.

இப்படியே ஒரு வாரம் கழிந்திருந்தது. அன்று எங்களுக்கு ஆய்வகத்தில் செய்முறை வகுப்பை முடிப்பதற்கே வெகுநேரம் ஆகிவிட்டிருந்தது.

அது ஒரு மழைக்காலம் ஆகையால் அடாத மழையோ விடாது பெய்துகொண்டிருந்தது. மயூவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அன்று அவளால் கல்லூரிக்கு வரமுடியாமல் விடுப்பு எடுத்திருந்தாள். அந்த மழையில் சாலையே ஆள்நடமாட்டமில்லாமல் வெறிச்சோடியிருந்தது. வெகு நேரமாக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தும் பேருந்து வந்தபாடில்லை…

கையில் கட்டியிருந்த கடிகாரத்தையும் சாலையையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன். மழைக்காலமாதலால் வானம் 6.30 மணிக்கே நன்றாக இருட்டிவிட்டது போன்ற தோற்றத்துடன் இருந்தது.

சரி வீட்டிற்கு வருவதற்கு காலதாமதம் ஆகும் என்று அம்மாவிடம் ஃபோன் செய்து சொல்லிவிடலாம் என என் அலைபேசியை எடுத்தால் அதுவோ நான் நேற்று இரவு அதற்கு சரியாக உணவளிக்காததால் (சார்ஜ் செய்யாததால்) மயக்கநிலையில் கிடந்தது (ஸ்விச்சுடு ஆஃப் ஆகிடுச்சுங்க)

நேரம் செல்ல செல்ல ஒரு லேசான பயம் மனதில் பரவியது. சரி ஆட்டோவிலாவது வீட்டிற்கு செல்லலாம் என்றால் ஆட்டோவும் அந்த நேரத்தில் சதி செய்து அந்த சாலை பக்கமே வராமல் இருந்தது.

அப்போது அந்த பக்கமாக வகுப்பு முடிந்து பைக்கில் சென்றுகொண்டிருந்த ஹரி பேருந்து நிறுத்தத்தில் என்னை பார்த்ததும் என் அருகில் அவனின் ராயல் என்ஃபீல்டை நிறுத்தினான். "என்ன வான்மதி… இன்னும் பஸ் ஸ்ட்ப்லயே நிக்குறீங்க…? பஸ் வரலயா இன்னும்" என்ற கேள்வியோடு பைக்கிலிருந்து இறங்கி என் அருகில் வந்து நின்றான்.

"இல்ல ஹரி… என்னோட பஸ் வரவே இல்ல… நானும் ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்…ஒரு ஆட்டோ கூட வரமாட்டேங்குது…" காத்திருப்பின் ஆயசத்துடன் நான் கூறினேன்.

"ரொம்ப இருட்ட ஆரம்பிச்சிடுச்சே வான்மதி… இனிமே பஸ் வந்தாலும் ரொம்ப கூட்டமாதான் வரும்… ஆட்டோவும் வரலைன்னு சொல்றீங்க… பேசாம நான் உங்களை உங்க வீட்ல ட்ராப் பண்ணிடவா?..." எனக் கேட்டவனிடம் "அது… பரவாயில்லை… இந்த டைம்க்கு ஒரு பஸ் வரனும் நான் அதுல போய்க்குறேன்… உங்களுக்கு எதுக்கு என்னால வீண் சிரமம் " என அவனின் உதவியை நாசுக்காக மறுதலித்தேன்.

அவனும் அதற்கு மேல் என்னை வற்புறுத்தாமல் "ஓகே வான்மதி… ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணேங்க… இதோ வந்துட்றேன் எனக் கைறியவன் தன் பைக்கில் அங்கிருந்து விருட்டென்று
புறப்பட்டுச் சென்றான்.

ஒரு சில நிமிடங்களில் திரும்பி வந்தவனின் பைக்கிற்குப் பின்னால் ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. என் அருகில் அவன் பைக்கை நிறுத்தியதும் அந்த ஆட்டோவைப் பார்த்து அருகில் வருமாறு சைகை செய்தான்.

மீண்டும் என்புறம் திரும்பி " இந்த ஆட்டோல வீட்டுக்கு கிளம்பறீங்களா வான்மதி? என அக்கறையாகக் கேட்டவனிடம் "எப்படி ஹரி...இந்த ஆட்டோவ எங்க இருந்து கூட்டிட்டு வந்தீங்க… இந்த பக்கமா ஆட்டோவே வரலையே… உங்களுக்கு மட்டும் எங்க இருந்து கிடைச்சுது?"அந்த ஆட்டோவைப் பார்த்ததும் மனத்தினில் தோன்றிய கேள்வியைக் கேட்டுவிட்டேன்.

"ஹாஹா…இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியமா?...ரொம்ப இருட்டிடுச்சு…முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க… நாளைக்கு பேசிக்கலாம்".
எனப் புன்னகையுடன் கூறினான்.

"ரொம்ப ரொம்ப தேங்கஸ் ஹரி...என்னால உங்களுக்கு எவ்வளவு சிரமம். தேங்க் யூ சோ மச்" என்று அவனிடம் நன்றியைத் தெரிவித்துவிட்டு ஆட்டோவிற்குள் ஏறினேன்.

"அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை… நீங்க பத்ரமா வீட்டுக்குப் போங்க…" என்று கூறிவிட்டு ஆட்டோ கிளம்பும் வரை அங்கேயே இருந்தான்.

வழி நெடுகிலும் ஹரியைப் பற்றிய சிந்தனையே என் மூளைச் செல்களின் நியூரான்களை ஆக்கிரமித்திருந்தது. "இவன் ஏன் இப்படி என் மீது கரிசனமாக இருக்கிறான். எல்லாரிடமும் இப்படித்தான் இருப்பானா… இல்லையென்றால் என் மீது மட்டுமா? நான் எப்போதெல்லாம் சங்கடத்தில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் வந்துவிடுகிறானே….எனக்கும் இவனைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ இனம் புரியா ஈர்ப்பு ஏற்படுகிறதே…" என அவனைப் பற்றியே சுற்றி சுற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.

சில நிமிட நேர பிராயாணத்தில் என் வீட்டை அடைந்தோம். ஆட்டோக்காரரிடம் எவ்வளவு ரூபாய் ஆயிற்று என்று கேட்டு பணத்தைக் கொடுத்தால்… "இல்லம்மா… அந்தத் தம்பி ஆல்ரெடி காசு கொடுத்துத்தான் அனுப்பினாரும்மா…"என்று கூறிவிட்டு தன் ஆட்டோவை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அன்று முழுவதும் என் எண்ணமெல்லாம் அவனைச் சார்ந்ததாகவே இருந்து கொண்டிருந்தது.என்னையுமறியாமல் சிறிது சிறிதாக என இதயத்தில் குடியமர்ந்துவிட்டான் என்பது நாளடைவிலேயே எனக்குத் தரிய ஆரம்பித்தது.

*****
வருடா வருடம் எங்கள் கல்லூரியில் எங்கள் துறை மாணவர்கள் அனைவரையும் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வார்கள்.கொடைக்கானல் , ஊட்டி போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளே பெரும்பாலும் இருக்கும்..

அந்த வருடத்திற்காக கேரளாவின் மூணாறுக்கு அழைத்துச் செல்வதாக அறிவித்திருந்தார்கள். நாங்களும் அந்த நாளை ஆவலாக எண்ணிக் காத்திருந்தோம்.

செல்வதற்கான நாளும் வந்தது. வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஏகப்பட்ட அறிவுரைகளை எடுத்து வீசிய என் அம்மாவினை சமாளித்துக்கொண்டு ஒரு வழியாக நானும் மயூவும் எங்கள் கல்லூரியை அடைந்தோம். அங்கிருந்து மூணாறுக்கு ஒரு சொகுசுப் பேருந்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

திட்டமிட்டபடி மூன்று நாட்களும் மூணாறின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளான ரோஸ் கார்டன்,ராஜமலை, ஆனை முடிமலை என அனைத்துப் பகுதிகளையும் பார்த்துவிட்டு பாடத்திற்குத் தேவையான குறிப்புகளையும் எடுத்துக்கொண்டோம்.மூணாறின் ஒரு காட்டுப் பகுதியில் அரிய தாவரங்களின் வகைகளை அனைவரும் சேகரித்துக் கொண்டிருந்தோம்.

என்னுடைய ஆர்வமிகுதியால் தாவரங்களினை பார்த்தவாறே அனைவரும் உள்ள பகுதியை விட்டு ஏறத்தாழ காட்டிற்குள்ளேயே சென்றுவிட்டேன். நான் மற்றவர்களிடமிருந்து வெகுதூரம் வநீதுவிட்டேன் என்பது சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது.

மற்றவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றால் நானோ கையோடு அலைபேசியைக் கொண்டுவரவில்லை. பேருந்திலேயே வைத்துவிட்டேன்.என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஊர் பேர் தெரியாத காட்டில் வசமாக சிக்கிக் கொண்டோமே … என்ன செய்வது… ஏது செய்வது என்று ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு இருந்தேன்.

என் நினைவுகளையெல்லாம் திரட்டி இந்த வழியாகத்தான் வந்திருப்போம் என நானே நினைத்துக்கொண்டு முன்னேறி நடந்தேன். பயத்தில் என் இதயம் தாறுமாறாக துடிப்பதை என்னால் கேட்க முடிந்தது. அவ்வளவு பதற்றம்…

திடீரென எனக்குப் பின்னால் ஏதோ ஒரு காட்டு விலங்கு கத்தும் சப்தம் கேட்டதும் மூச்சு பிடிக்க அங்கிருந்து ஓடிவர ஆரம்பித்தேன்.கண்மண் தெரியாமல் ஓடிவந்த நான் எதன் மீதோ மோதி தடுமாறி கீழே விழப்போனேன். கீழே விழப்போன என்னை விழாமல் யாரோ தன் கைவளைவில் பிடித்து நிறுத்தியிருப்பது போல் இருந்தது. பயத்திலும் படபடப்பிலும் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை...

நான் சுதாரிப்பதற்குள் " வான்மதி…. எங்க போய்ட்ட… உன்ன காணாம இந்த இரண்டு மணி நேரத்து என் உயிரே என்கிட்ட இல்லைடி… என்ற ஹரியின் கமறிய குரலில் மெல்ல மெல்ல சுயநினைவை அடைந்த நான் அவனின் அணைப்பில் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

குழப்பத்துடன் மெல்ல மெல்ல அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த என்னை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் ஹரி… "யெஸ் வான்மதி… ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ மச்...நீ இல்லாம என்னால என் வாழ்க்கையை கற்பனை கூட பண்ணி பார்க்க முடியலை…உனக்காக தான் இந்த காலேஜ்க்கே வந்து சேர்ந்தேன்.உன் கிட்ட பேசனும், பழகனும்னுதானே உன்னை சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கேன்… உனக்கு இன்னுமா புரியலை… "என்று என் மீதான அவன் காதலை முதல்முறையாக என்னிடம் கூறினான் ஹரி.

ஒன்றன் மேல் ஒன்றாக நடந்த அதிர்ச்சியான நிகழ்வுகளாலும் ஆயாசத்தினாலும் மெல்ல மெல்ல மயக்க நிலைக்கு சென்றுகொண்டிருந்தேன் நான். "வான்மதி… வான்மதி ...என்று என்னைத் தேடி வந்த மற்றவர்களின் குரலும் மெல்ல மெல்ல தேய்ந்து போனது போல் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மயக்க நிலைக்குச் சென்றுவிட்டேன் நான்.

*****

மெல்ல மெல்ல கண்களைத் திறந்த நான் மருத்துவமனையின் அறையில் இருப்பதை உணர்ந்துகொண்டேன். என் அருகில் மயூ உட்கார்ந்துகொண்டே தூங்கிக்கொண்டு இருந்தாள்.

"மயூ… மயூ…"என்று அவளை மெதுவாக எழுப்பினேன். தூக்கம் கலைந்து எழுந்தவள் என்னைப் பார்த்ததும் "வானு… முழிச்சிட்டியா...இப்ப எப்படி இருக்கு உடம்பு… ஒரு நிமிஷம் எல்லாரையும் ரொம்ப பயமுறுத்திட்டியேடி…" என அக்கறையுடன் கேட்டாள்.

"ஹ்ம்ம்… பரவாயில்லை மயூ… எனக்கு என்னடி ஆச்சு...எப்படி இங்க வந்தேன்"என மயூவிடம் கேட்டேன்.

" பாய்ஸ் , சார் எல்லாம் உன்னைக் காணோம்ன்னு ஃபாரஸ்ட் உள்ளயே வந்து தேட ஆரம்பிச்சிட்டாங்க வேண்டும் வானு… ஹரிதான் உன்னை ஃபர்ஸ்ட் பாத்தாங்க… அப்புறம் நீ மயங்கிட்ட … அதான் பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டல்ல வந்து சேர்த்தோம்… நீ கொஞ்சம் டென்ஷன்லதான் மயங்கி விழுந்துட்டியாம்… வேற ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… மேம் கீழ ரிஷப்ஷன்ல ஒரு வேலையா போய்ருக்காங்க….நீ முழுச்சிக்கிட்டன்னு நான் மேம்க்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லிட்டு வந்துட்றேன்…. நீ இந்த ஆப்பிள் சாப்பிடு என்று அக்கறையுடன் கூறி அதைக் கொடுத்தாள் மயூ.

அப்போதுதான் அனைத்து நிழ்வுகளும் மெல்ல மெல்ல என் நினைவிற்கு வர ஆரம்பித்தன. ஹரி என்னிடம் அவனின் காதலைக் கூறியதும் எனக்கு நினைவில் ஆடியது… "என்ன சொன்னான்… எனக்காகதான் இந்த காலேஜ்லயே வந்து சேர்ந்தானா...எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து பண்ணது கோ இன்ஸிடென்னுதானே நினைச்சிக்கிட்டு இருந்தேன்…. அப்ப இதெல்லாம் அவனா உருவாக்கிக்கிட்டதா?...என் மேல அவ்வளவு காதலா…. ஏன் ? " என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே மயூ எங்கள் மேமிடம் பேசிவிட்டு வந்தாள்.

"வானு… மேம்கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிட்டேன். இப்ப வந்துடுவாங்க…" என்றவள்… "வானு… உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்டி… நான் கிண்டல் பண்றேன்னு மட்டும் நினைக்காத … கொஞ்ச நேரம் நீ காணலைன்னதும் ஹரியோட முகத்தை நீ பார்க்கனுமே… என்னை விட அவன்தான் ரொம்ப துடிச்சுப்போய்ட்டான்… கண்ணெல்லாம் கலங்கிடுச்சு… அவனுக்கு உன்மேல ஏதோ ஃபீலிங்க்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அதற்குள் எங்கள் மேம் வந்துவிடவே டாக்டரிடம் மறுபடியும் எனக்கு ஒன்றும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார் அவர்.

பிறகு நாங்கள் மருத்துவமனையிலிருந்து நாங்கள் தங்கியிருக்கும் விடுதியை நோக்கி புறப்பட்டோம்.

ஹரியைப் பற்றி மயூ கூறிய வார்த்தைகளே என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. எந்தப் பெண்தான் தான் ஒருவனால் காதலிக்கப்படுவதை விரும்பமாட்டாள்?அதுவும் அவள் மனம் கவர்ந்தவனே தன்னை விரும்பும்போது எப்படி காதலை நிராகரிக்க முடியும்.

மறுநாள் சுற்றுலாவை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பும்போது என்னை சந்தித்த ஹரி "வானு… என்ன இன்னும் ஒன்னுமே சொல்லாம இருக்கியே…"என அமைதியாகக் கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன் கன்னக் கதுப்புகளும் காது மடல்களும் என்னையுமறியாமல் சூடேறியது. அவனின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதே எனக்கு பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது.

"இந்த மௌனத்தை நான் என்னன்னு எடுத்துக்கிறது வானு …என்னைப் பார்த்து உன் வாயால சம்மதம்னு சொன்னாலே போதும்… அதுக்கு மேல எஎதுவுமே நான் உன்கிட்ட எதிர்பார்க்க மாட்டேன் வானு… ப்ளீஸ்" என்று ஏறத்தாழக் கெஞ்சியவனின் மொழியினை ஏற்று அவனை நோக்கி "சம்மதம் " என்ற ஒற்றை வார்த்தையை சொன்னவுடன் முகம் கொள்ளாப் பூரிப்புடன் என்னை அணைக்க வந்தவன் சுற்றுப்புறம் கருதி அதற்கு அணையிட்டான்.

அதன் பிறகு காதல் ஜோடிகளாக மாறிய நாங்கள் எங்களின் கட்டுப்பாட்டை மீறாமல் கண்ணியமாகவே நடந்து கொண்டோம். வருடங்கள் சில கழிந்து எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளைத் தேட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் நான் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்பது தெரிந்தது. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் தந்தையிடம் சென்று " அப்பா… நான்… நான் ஒருத்தரை விரும்புறேன்பா … அவர் ரொம்ப நல்லவர்ப்பா… நீங்க அவரை மீட் பண்ணி ஒரு முறை பேசுங்கப்பா … உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும் " என்று கூறியதுதான் தாமதம் சுரீர் எனீறு கன்னத்தில் விழுந்த அடியை என்னால் ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.விழுந்த ஒரே அடியில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த என்னை ஓடிவந்து பிடித்துக்கொண்ட என் அம்மாவிற்கும் வசவுகள் சாரமாரியாக விழுந்தது.

நான் எவ்வளவு கெஞ்சியும் என் பேச்சைக் கேளாமல் அவசர அவசரமாக திருமண ஏற்பாட்டை ஆரம்பித்தார். ஹரியே நேரில் வந்து பேசியும் எங்கள் இருவரைப் பற்றியும் தரக்குறைவாக பேசிய அவரின் வார்த்தைகள் என்னை குத்திக் கிழிப்பது போன்ற வீரியத்தைக் கொண்டிருந்தது. அதற்கு மேல் பொருத்துக்கொள்ள முடியாத நான் "போதும்பா நிறுத்துங்க… இனிமேல் ஒரு வார்த்தை பேசினாலும் நான் பொல்லாதவளா மாறிடுவேன். என்னைப் பத்திப் பேச உங்களுக்கு உரிமை இருக்கு பேசுங்க… ஆனா ஹரியைப் பத்தி இனி ஒரு வார்த்தை பேசுனீங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்பா… "எனக் கூறிய என்னை தீப்பார்வை பார்த்த என் தந்தை


"யசோதா … இவளை இப்பவே இங்க இருந்து கிளம்ப சொல்லு… சட்டப்படி இவ மேஜர்.. இவ வாழ்க்கையை இவளே அமைச்சிக்கட்டும்… இனி அப்பா அம்மா அக்கான்னு இந்த வீட்டு பக்கம் மட்டும் வந்துட வேணாம்ன்னு சொல்லி வை " என்றவர் எங்களை வெளியே தள்ளி ககதவைத் தாழிட்டுக் கொண்டார்.

இதற்கு மேல் அங்கு நின்று எந்த ப்ரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்த ஹரி என்னை பதிவுத் திருமணம் செய்துகொண்டு மனைவி என்ற மரியாதையுடன் அவரின் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

****
கடந்த கால நிகழ்வுகளை மஞ்சுவிடம் சொல்லிக்கொண்டே என் நினைவுகளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தேன்.

கண்களை அகலவிரித்தபடி கதைக் கேட்டுக்கொண்டிருந்த மஞ்சு "அக்கா… என்னக்கா சினிமா பார்த்த மாதிரி இருக்கு… எங்க ஹரி அத்தான் ப்ரித்விராஜ் மஹாராஜா மாதிரி இந்த ராணி சம்யுக்தாவை தூக்கிட்டு வந்த மாதிரி உங்களை எங்க அத்தான் தூக்கிட்டு வந்துட்டாரு... " எனக் கூறி கலகலத்தாள்.

அதற்குள் திருமண வரவேற்புக்கு துணிமணிகள் எடுக்க நேரமாகிக்கொண்டு இருப்பதை உணர்ந்த நாங்கள் அவரவர்களின் அறைக்குச் சென்று கடைக்கு செல்வதற்கு தயாரானோம்.
 

Author: Sankaridayalan
Article Title: 8. என் பார்வை உனக்கும் இரகசியமா?
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN