நெஞ்சம் 5

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பெரும் செல்வந்தர்களான மகிழ்வரதன், சசிரேகாவின் ஒற்றை வாரிசு தான் தன்யரித்விகா. அதென்னவோ இந்த வம்சத்தில் ‌வழி வழியாய் அனைவரும் ஒற்றை வாரிசாகவே பிறந்து.. வாழ்ந்து.. மடிந்து போனார்கள்.



மகிழ்வரதன், அவர் தந்தை சாருகேசனுக்கு ஒரே மகன். பெரும் செல்வந்தரான அவர், அக்காலத்தில் திரைத்துறையில்.. சிறந்த தயாரிப்பாளர் பணியை மட்டும் செய்யாமல் திரைத்துறைக்கு நிதி முதலீடு செய்யும் தொழிலையும் செய்து வந்தார். அதில் ஒருமுறை அவரின் தொழில் நொடிந்து விட... அச்சமயம், நண்பரும் தன் சில தொழிலில் பங்குதாரருமாக இருந்த சசிரேகவின் தந்தையிடம் சம்பந்தம் செய்து கொண்டு தன் தொழிலை நிலை நிறுத்திக் கொண்டார் சாருகேசன்.



சசிரேகாவின் தந்தை நண்பனைப் போல் சினிமாவில் பணத்தைக் இடாமல் தன் பெரும்பாலான முதலீடுகளை கப்பல் வணிகத்தில் இட்டு... தொழிலில் பெரும் இடத்தைப் பிடித்திருக்க... அவருடைய சாம்ராஜ்ஜியத்தின் ஒற்றை வாரிசு தான் சசிரேகா. தொழிலில் மதம் கொண்ட அதவையாய் பிளிர்பவள். மகிழ்வரதன் மட்டும் சளைத்தவரா என்ன... தொழிலில் சிங்கமாய் ஆட்சி செய்பவர்.



இப்படியான இரண்டு ஜாம்பவான்களுக்குப் பிறந்தவள் தான் விதுனதிபாகரனின் மனைவி தன்யரித்விகா. சுபாவத்தில் முயல் குட்டி.. பதினைந்து வயது வரை சிறகு முளைத்த வண்ணத்துப் பூச்சியாய்... தன் வாழ்வை... பல வண்ணங்களில் வாழ்ந்தவள். அதன் பிறகு அவளுடைய உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனையால்... ஊட்டி கான்வென்டில் படித்துக் கொண்டிருந்தவள்... பாதி படிப்பிலேயே வீட்டுக்குத் திரும்பி விட... பின் இப்போது வரை அவளின் வாசம் எல்லாம் மருத்துவமனையும்… அவளின் அறை என்று மாறிப் போனது.



அதிலும் அவளின் அப்பத்தாவுக்கு அவள் ஒற்றைச் செல்ல பேத்தி. பத்தாவது வரை படித்தவளை மேற்கொண்டு தொடர விடாமல்... பத்தொன்பது வயதிலேயே பேத்திக்கு திருமணம் நடந்தேற காரணமானவர்... கள்ளம் கபடம் தெரியாத கிராமத்து வாசி. பேத்திக்கு பிரச்சினை என்றதும் ஓடோடி வந்து பேத்தியை அரவணைத்துக் கொண்டவர்.



அவரின் அன்பும், அரவணைப்பும் தன்யரித்விகாவை... மேலும் மேலும் நொடித்து குழந்தையாய் மாற்றியதே தவிர தனக்கு வேண்டியதை கேட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் விதைக்காமல் போய் விட்டது. இந்த இருபத்தோர் வயதிலும் அவளின் உலகம் எல்லாம்.... டாம் அண்டு ஜெர்ரி பார்ப்பதிலேயே கழிந்து விட்டது. முன்பு அவளுள் இருந்த பிரச்சனையிலிருந்து பேத்தி வெளிவர அவளின் அப்பத்தா ஏற்படுத்திய பழக்கம்... அதன் பின் தன் கணவனின் எண்ணத்திலிருந்து வெளிவர பெண்ணவளாகவே பழகிக் கொண்டாள்.



அப்படி நினைத்து தன்னையே ஏமாற்றிக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னே... அந்த கார்ட்டூனை இவள் லயித்து பார்ப்பதே கணவனை நினைத்து தானே! கார்ட்டூனில் வரும் டாமை கணவனாகவும்... தன்னை ஜெர்ரியாகவும் பாவிப்பவளாச்சே!



உண்மையிலேயே… இருவரின் உடல் பொருத்தமும் அப்படி தான். விதுனதிபாகரன் நல்ல உயரத்துடன் கட்டுமஸ்தான உடல்வாகுடன்.. ராணுவ வீரனைப் போல் தோற்றத்தில் மிளர்பவன். அதே தன்யரித்விகா, சிறு அணில் குட்டியாய் மிளர்பவள். தோற்ற பொருத்தம் முதல் ஆஸ்தி அந்தஸ்து வரை. ஏன்... பழக்க வழக்கத்திலிருந்து குண நலன்கள் வரை மாறுபட்டவர்கள் இவர்கள் இருவரும்.



மகனின் சாதாரண காய்ச்சலைக் கண்டு பதறும் குடும்பம் நாயகனுடையது. அதே மகள் கேட்கும் விவாகரத்தை… எந்த தங்கு தடையும் அல்லாமல் வாங்கி தர நினைக்கும் குடும்பம் நாயகியுடையது. இப்படி பொருத்தம் இல்லாத இருவரையும் திருமணம் என்ற நிகழ்வில் சேர்த்து வைத்த விதியைத் தான் சொல்ல வேண்டும்.



மகிழ்வரதனின் அலுவலுக அறை…



“வரதா... என்ன டா முடிவு செய்திருக்க?” என்று அலுவலக அறைக்குள் நுழைந்த வல்லவன் நண்பனிடம் கேட்க



“எதை பற்றி டா?…” தன் முன்னிருக்கும் கோப்பில் கவனமாய் இருந்த படி மகிழ்வரதன் பதில் கேள்வி கேட்க



“தன்யா விவாகரத்து கேட்டதற்கு... திபாகரன் தரப்பிலிருந்து உன் மாப்பிள்ளை சொன்னதைப் பற்றி…”



“இதில் என் முடிவு என்ன… அவர்கள் இரண்டு பேர் சம்பந்தப்பட்டது. முடிவும் அந்த இருவரும் தான் எடுக்கனும்” மகிழ்வரதன் பட்டும் படாமல் பதில் தர…



“தன்யா... உன் மகள் வரதா”



“நான் மறுக்கல… தந்தையாகவே இருந்தாலும்… திருமண வாழ்வு பிடிக்கலைனு சொல்ற மகளை நான் எப்படி கட்டாயப்படுத்த முடியும்…”



“திருமண வாழ்வு… ம்ஹும்… டேய் இன்னும் அதுங்க இரண்டும் பேசிக்க கூட இல்லை டா” வல்லவன் விளக்க



“பார்த்தியா… கணவன் மனைவி இருவரும் பேசிக்கவே இல்லைனு சொல்ற… அப்போ அவங்க புரிதல் எப்படி இருக்கு பார்…” வரதன் எதிர் கேள்வி கேட்க



“இரண்டு பேரும் பேசி பழக வாய்ப்பு கொடுப்பனு பார்த்தா… என்னடா பதில் இது!” என்று கடுப்பான வல்லவன் கோபத்தை அடக்கி கொண்டார்.



“உனக்கு தான் புரியல... வாழணும்னு நினைத்து இருந்தாங்கனா... இரண்டு பேரும் அதற்கான வாய்ப்பை யார் தடுத்தும் ஏற்படுத்தி இருப்பாங்க...”



நண்பனின் வாதத்தில், “ஏன் வரதா.... உன் அந்தஸ்த்து அளவுக்கு உன் மருமகன் இல்லைன்னு அவனை அத்து விட பார்க்கிறீயா..” வல்லவன் தான் வக்கீல் என்பதை நிரூபிக்க



“ச்சேச்சே... பால்ய நண்பனாய் இருந்து நீ என்னை அறிந்தது இவ்வளவு தானா டா... என் மகளின் குறையைக் காட்டி... ஒரு இக்கட்டை வைத்து இருவரின் திருமணத்தை நான் நடத்தியிருந்தாலும்.... அவன் என் மகளின் கணவன்... எந்த இடத்திலும் திபாவை நான் விட்டு தரவும் நினைக்கல... விட்டு தரவும் மாட்டேன். அதேபோல் என் மகள் வாழ்விலிருந்து பத்தி விடவும் நினைக்கல.



திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம். இதை யோசிக்காம என் சுயநலத்துக்காக... இருவரிடமும் பிடித்தம் இருக்கான்னு கூட கேட்காமல்... அன்று திருமணத்தை நடத்திட்டேன். இப்பவும் இருவரின் எண்ணங்களுக்கு நான் மதிப்பு தரலைனா எப்படி டா... அதிலும் என் மகள் சந்தோசம் தான் டா எனக்கு முக்கியம்” ஒரு நல்ல தந்தையாய் வரதன் உணர்ச்சி வசப்பட்டுப் பேச... மவுனமானார் வல்லவன்.



நண்பன் சொல்வதும் சரி தானே... பெற்றோரே என்றாலும் பிள்ளைகள் முடிவில் எப்படி தலையிடலாம்... ஆனால் அது மற்ற தம்பதிகளுக்கு. தன்யாவும்... திபாகரனும்... அப்படி இல்லையே. இருவருக்கும் திருமணம் நடக்கும் போது... குடும்ப வாழ்வின் சிக்கல்களை அறிய முற்படாத இருபத்தி மூன்று வயதில் இருந்தவன் திபாகரன். தன்யா உலகம் அறியாத இரண்டாங்கெட்டான் வயதான பத்தொன்பது வயதில் இருந்தாள்.



இப்படியான இருவருக்கும் திருமணம் செய்தது யார்... பெரியவர்களான தங்கள் தவறு தானே?... அப்படி இருக்க இன்று இது அவர்களின் வாழ்வு என்று சொன்னால் எப்படி... மனம் முழுக்க இப்படியான கேள்விகள் தான் எழுந்தது.



அதுவும் இல்லாமல் நண்பன் மகள் என்று தன்யாவை வேறுபடுத்தி பார்க்காமல்... தன் மகளாய் சிறுவயதிலிருந்து பார்த்த வல்லவனுக்கு... அவள் வாழ்வை எப்படியோ போகட்டும் என்று விட மனமில்லை. தன்யரித்விகா வாயைத் திறந்து சொல்லவில்லை என்றாலும்.... வக்கீல் மூளையான அவருக்கே, தன்யரித்விகா கணவனுடன் வாழ ஆசைப்படுகிறாளோ என்று தான் தோன்றியது.



விதுனதிபாகரன் மட்டும் என்ன... தன் மனைவி எப்படி விவகாரத்து பத்திரம் அனுப்பலாம்... என்று கேட்டு அன்று அலுவகத்தில் குதித்தானே... அப்போ அவனும் தன் மனைவியுடன் வாழத்தானே விழைகிறான்? ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாமல் போக எது தடுக்கிறது என்று வல்லவனுக்கே புரியவில்லை.



ஏனென்றால்... அன்று தன்யாவிடம் இருந்த பிரச்சனை தான் இன்று தீர்ந்து விட்டதே... அவளுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருக்கும் போது அவசர அவசரமாய் திருமணம் செய்தது தவறோ என்று... தன்யரித்விகாவை தன் மகளாய் பாவித்த வல்லவனின் மனம் தற்போது அதிலேயே உழன்றது.



என்ன நினைத்து என்ன? விதி என்ற பெயரில் அவர்கள் இருவரையும் திருமண பந்தத்தில் இணைய வைத்த அந்த விதியே... இருவரையும் கடைசி வரை அதில் பயணத்தைத் தொடர வைக்கிறதா... இல்லை விலக வைக்கிறதா என்பதை பார்ப்போம் என்ற முடிவை அந்த விதியிடமே விட்டுவிட்டார் இவர். அதனால் தான் தன் வரையிலும் இருவரையும் சேர்க்க விரும்புகிறார்.



வல்லவன் வந்திருப்பதை வேலையாள் தன்யரித்விகாவிடம் தெரிவிக்க... அவரைக் காண தந்தையின் அலுவகத்தில் நுழைந்தாள் பெண்ணவள்.



“gud evening uncle...” வந்தவள் முகமுன் வழங்க




அதில் அவள் குரலுக்கே உள்ள... குழந்தைத் தனமான துள்ளல் இல்லை என்பதை அவர் அறிந்தாலும், “ஹாய்... தன்யா பேபி... வா டா... வா வா... உன் health... எப்படி இருக்கு... மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா...”



“fine… yes uncle...” சிறியவள் குரலோ சுருதியற்று ஒலித்தது.



அது ஏன் என்று அவருக்கு தெரியாதா... பாவம் இந்த பச்சை மண்ணுக்கு அப்படி ஒரு நோய் மட்டும் வராமல் இருந்திருக்கலாம்.. அந்த நோயால் குழந்தைப் பருவத்தை இழந்து... இன்று பருவ மங்கைக்கான வாழ்வையும் அல்லவா இந்த குழந்தை இழந்து நிற்கிறது. ஏற்கனவே தன்யரித்விகாவை தன் மகளாய் பார்த்தவர்... அவளின் உடல்நிலை சீர்கேட்டுக்கு பிறகு தன் வயிற்று பிள்ளைகளை விடவே... அவள் மேல் பாசம் கொண்டு விட்டார். அதனால் தான் ஒரு தந்தையாய் அவள் வாழ்வை நேர் செய்ய அவர் மனது துடிக்கிறது.



“என்ன சொல்ற தன்யா?” வக்கீல் வல்லவன் நேரிடையாக விஷயத்துக்கு வர



“என்ன விஷயம் அங்கிள்...” இவள் புரியாதது போல் கேட்க



“ப்ச்சு... நான் எதைப் பற்றி பேசுகிறேன்னு உனக்கு தெரியாதா பேபி... எல்லாம் உன் கணவன் விஷயமாக தான்...”



“என்ன புதுசா கேட்குறிங்க... என் முடிவில் மாற்றம் இல்ல. விவாகரத்து தான் என் இறுதி முடிவு அங்கிள்”



“ப்ச்சு!” என்று சளைத்து கொண்டவர் “சட்டம் தெரியாம பேசக் கூடாது” என்று சொல்ல



“என்ன அங்கிள்... எனக்கு சட்டம் தெரியல. என் விஷயத்தை நீங்க முன் வைங்க.. எல்லாம் விவாகரத்து கிடைக்கும்” சிறியவள் பிடிவாதமாய் நிற்க



“சும்மா அதையே சொல்லாத. இப்ப உனக்கு பெரிதா ஒரு பாதிப்பும் இல்ல. அதை உன் கணவர் சைட் வக்கீலும் கோர்ட்டில் சப்மிட் செய்வார். அதனால் நீ சொல்ற காரணம் செல்லாது” அவரும் பிடிவாதமாய் நிற்க



“அப்போ என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க” கேட்கும் போதே பெண்ணவளின் குரல் உடைந்து போனது.




“உங்க இருவருக்கும் திருமணம்னு நாங்க பேசும் போது உன்னுடைய உடல்நிலை விஷயத்தை மறைத்து ஒன்றும் திபாகருக்கு நாங்க கட்டி தரல. அதன் பின் உன்னுடைய உடல் பிரச்சனை... திபாகர் வெளிநாட்டு பயணம்... என்று நீங்க இரண்டு பேரும் முகம் பார்த்துப் பேசினதே அரிதாகிப் போக... இப்போ விவாகரத்துன்னு வந்து நிற்கிற... நல்லா கேளு நீ தான் விவகாரத்து கேட்கிற....”



‘அவர் வாயைத் திறந்து கேட்க மாட்டார் அங்கிள்... அதே சமயம் என் கூட வாழவும் அவருக்கு விருப்பம்மில்ல எனக்கு தெரியும்....’ சிறியவள் தனக்குள் சொல்லிக் கொள்ள, வல்லவனே தொடர்ந்தார்.



“இப்ப உன் கணவர் இந்தியா வந்தாச்சு பேபி. நீ ஒரு வருஷம் அவர் கூட அவர் வீட்டில் இருக்கணும்னு அவர் விருப்பப்படுறார். அதன் பிறகும் உனக்கு அவரைப் பிடிக்கலைனா விவாகரத்து தரேன் என்பது உன் கணவனின் வாதம்.. எனக்கும் அது தப்பு இல்லைன்னு தோணுது” என்றவர் நிறுத்தி அவள் முகம் காண, பாவையோ அமைதியாக இருந்தாள்.



பின் அவரே, “அதுவும் இல்லாமல் அவரின் மூத்த தங்கைக்கு திருமண ஏற்பாடு நடக்கிறதாகவும் இந்த நேரத்தில் எப்படி விவாகரத்து கொடுக்கிறதுனு திபாகரன் யோசிக்கிறான். இதிலும் தவறு இல்லை. சோ, என்னை கேட்டா நீ உன் கணவன் வீட்டுக்குப் போவது தான் சரின்னு நான் சொல்வேன்....” ஒரு குடும்ப நண்பராய் மட்டும் அல்லாமல்... அவளின் நலம் விரும்பியாய் வக்கீல் வல்லவன் சொல்ல..



மற்றது எல்லாம் மறக்க, ‘அது தான பார்த்தேன்.. இதிலும் அவருக்கு சுயநலம்.. அவர் தங்கை திருமணத்தின் போது அவர் கூட நான் நிற்கணுமா?…” என்று ஒரு மனம் முரண்டாலும் இன்னோர் மனமோ ‘இதில் தவறு இல்லையே.. ஒரு அண்ணியாய் நான் நின்றுதானே ஆக வேண்டும்... அதுவும் இல்லாமல் என் கணவன் சபையில் தலை குனிய நான் எப்படி அனுமதிப்பேன்?’ என்று கணவனுக்காக வாதிட்டது. அதுவே ‘சரி... ஒரு வருடம் தானே பார்த்துக்கலாம்’ என்ற முடிவையும் அவளை எடுக்க வைத்தது.



கொஞ்சம் நியாய குணம் உள்ளவள் என்பதால் வல்லவனின் பேச்சுக்கு சம்மதித்து இவள் தந்தையின் முகம் காண, “அது உன் கணவர் வீடு தன்யா. உன் வீடும் கூட.. போய் இருடா... நீ வெளியூர் எங்கும் போக போறத்து இல்லையே... இதே ஊர்... நீ நினைத்த நேரம் அப்பா வீட்டுக்கு வரலாம்... நாங்களும் உன்னை வந்து பார்ப்போம்... பிறகு என்ன டா..” என்று மகிழ்வரதன் தன் சம்மதத்தைத் தர



“சரி அங்கிள் நான் அவர் வீட்டுக்கு போகிறேன்... எல்லாம் ஒரு வருஷம் தான்... அதற்கான ஏற்பாட்டை அவரை செய்யச் சொல்லுங்க அங்கிள்” என்று பட்டும்படாமல் தன் சம்மதத்தைத் தந்து விட்டு அந்த இடத்தை விட்டு விலகியிருந்தாள் விதுனதிபாகரனின் மனைவி தன்யரித்விகா. ஆனால் இந்த ஒரு வருடம் முடியும் போது தன்னவ

ளை விலக விடுவானா அவள் கணவன்?...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN