நெஞ்சம் 7

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விதுனதிபாகரனுக்குத் தன் மனைவியை நேரில் சென்று அழைத்து வர விருப்பம் தான். அதைச் செய்ய முடியாமல் தடுப்பது முதலில்... அவனுக்கான அலுவல் வேலைகள். இரண்டாவது... மனைவிக்கே என்றாலும் மாமனாரின் வீட்டிற்குச் செல்ல அவனுக்கு உடன்பாடில்லை.




இவ்விரண்டையும் விட... எங்கே மனைவி தன் முகம் நோக்கி... நான் வர மாட்டேன் என்று சொல்லி பிடிவாதமாக மறுத்தால், ஒன்று... மனைவி மேலுள்ள அதீத காதலில் அவளை அவளின் விருப்பத்திற்காக மாமனார் வீட்டிலேயே விட்டு வந்து விடுவான். இல்லை என்றால் தன் காதல் மேலுள்ள பற்றில்... மனைவியின் விருப்பத்திற்கு இடம் தராமல் அவள் மறுக்க... அவளைத் தன்னுடைய தோளில் சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்தாலும் வந்திருப்பான் இந்தக் காதல் கணவன்.




தற்சமயம் இவை இரண்டில் எது நடந்தாலும் அது தங்கள் இருவரின் உறவுக்கும் நல்லதில்லை என்ற காரணத்தால் தன்னுடைய வேலையைக் காரணம் காட்டி... மாமனார் வீட்டிற்குச் செல்ல மறுத்து விட்டான். ஒருவேளை மாமனார் வீட்டில் இவன் வரவை யாராவது எதிர்பார்த்திருந்தால் சென்றிருப்பானோ என்னமோ... குறைந்தபட்சம் மனைவியாவது. அப்படி இல்லை எனும் போது... ஒதுங்கிக் கொண்டான் ஆண்மகன்.



மகிழ்வரதனும்... மருமகனின் செயலை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. தாய் என்ற முறையில் சசிரேகாவாவது மகளை அழைத்துச் சென்று புகுந்த வீட்டில் விட்டிருக்கலாம். அவளுக்குத் தான் மருமகனின் குடும்பத்தையே பிடிக்காதே.




“மகிழ், அதுங்க எல்லாம் லோ கிளாஸ் peoples... எப்படி தான் அந்தக் குடும்பத்தில நம்ம பொண்ண கட்டி தரச் சொல்லி உங்க அம்மா ஒற்றைக் கால்ல நிற்கறாங்கனு தெரியல... அதையும் நீங்க கேட்டுட்டு வந்து என் கிட்ட சொல்றிங்க... ஏன் மகிழ் இப்படி இருக்கீங்க?” முதல் முறை விதுனதிபாகரன் தான் மாப்பிள்ளை என்று சொன்ன போதே... இப்படியாகப் பொரிந்தார் சசிரேகா.



அதன் பிறகு இன்று வரை ஒவ்வொரு முறையும்... அவர் படிக்கும் பாட்டு விதுனதிபாகரன் குடும்பம் என்றாலே அவர்கள் தி சீப் ஃபேமிலி என்பது தான்... அவர்கள் இருக்கும் திசையில் கூடத் தன் மகளின் கால் தடம் பதிவதை விரும்பாத சசிரேகா... தற்போது மட்டும் மகளைப் புகுந்த வீட்டிற்கு அனுப்ப சம்மதிப்பாரா என்ன... அங்குத் தமிழரசி மாதிரி இங்கும் சசிரேகா ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டைகள் இட்டார் தான்.




ஆனால் மகிழ்வரதன் கொஞ்சம் நியாய குணம் உள்ளவர் என்பதால்... மனைவியின் மறுப்பை எல்லாம் கிடப்பில் போட்டார். இது எல்லாவற்றையும் விட சசிரேகாவுக்கே சிறிது சந்தேகம் தான்... ஒருவேளை மகளுக்கே கூட நடந்த இத்திருமணத்தால்... விதுனதிபாகரன் மேல் பிடித்தமோ என்று... அந்தப் பிடித்தம் கூட அவன் வீட்டில் சென்று மகள் நான்கு நாட்கள் இருந்தால்... காணாமல் போய் விடும் என்ற நம்பிக்கையில் தான் தற்போது மகளை அவள் புகுந்த வீட்டிற்கு அனுப்ப சம்மதித்தது.



தன்யரித்விகா தன் கணவன் வீட்டிற்கு வர... நேரமோ அந்திப்பொழுதை நெருங்கியிருந்தது. இவள் இறங்கியதும்... காரோட்டி, அவளின் உடமைகளை எடுத்து வெளியே வைத்து விட்டு அவளுடனே நிற்க, “நீங்க கிளம்புங்க தாத்தா... நான் போய்டுவேன்...” சின்னவள் அவரை அனுப்ப...



அவளைச் சிறு வயதிலிருந்து வளர்த்தவர் அல்லவா... அந்தப் பாசம் அவரைத் தயக்கம் கொள்ள வைத்தது. அதைக் கண்டவள், “தாத்தா.. இது என் கணவர் வீடு... என் வீடு... நான் போய்டுவேன்... நீங்க கிளம்புங்க...” சின்னவள் மறுபடியும் அழுத்தி சொல்ல... மனமே இல்லாமல் சிறு தலையசைப்புடன் விலகிச் சென்றார் அந்த முதியவர்.



படிகளில் ஏற... வீட்டினுள்ளே ஆள் அரவமற்ற நிலையில் நிலைக்கதவு திறந்திருப்பதைக் கண்டவள்... தயக்கத்துடன் அழைப்பு மணியை அழுத்த இவள் எத்தனித்த நேரம்.... பின்வாசல் வழியே தாயும், மகளும் சுவாரசியமாகப் பேசிய படி வீட்டின் உள்ளே பிரவேசித்தார்கள். அதில் சித்ரா மட்டும் தன்னைக் கண்டு கொண்டதை அறிந்த தன்யா... தன் வரவை முன்னிறுத்தி சிநேகமாய் அவளைக் கண்டு மென்னகைக்க... அவளோ முகத்தில் வெறுப்புடன் தன்யாவைக் கண்டும்... காணாதவள் போல் மிக இயல்பாய் தாயுடன் நடந்து வந்து... அங்கிருந்த சோபாவில் அமர... தன்யரித்விகாவோ அவமானத்தில் தலை கவிழ்ந்தாள். தமிழரசியோ... வாசல் பக்கம் முதுகு காட்டி அமர்ந்து கொள்ள... இப்போது தன்யா கூனிக்குருகி நிற்கும் கோலத்தைக் கண்டு சந்தோஷத்தில் மிதந்தாள் சித்ரா.




சித்ராவுக்கு, அண்ணியான தன்யரித்விகாவை ஆரம்பத்திலிருந்தே அறவே பிடிக்காது. தன்யாவின் அழகையும்... அவள் வீட்டு வளத்தையும் கண்டு பொறாமையில் எப்போதும் வெந்து மடிபவள். அதிலும் தன் தாயின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இன்று ஒரு பார்பி டால் போல் காக்ராசோலியில்... கண்ணைப் பறிக்கும் வைரங்கள் ஜொலிக்க... வந்து நிற்கும் அண்ணியைப் பார்த்து இன்னும் வயிறெரிந்தாள் சித்ரா.



கணவன் வீட்டில் தனக்குக் கிடைத்த அவமதிப்பில்... மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தன்யா தவித்து நிற்க..



அந்நேரம், “அண்ணி... வந்திட்டீங்களா!...” என்று கேட்ட படி தவமதி மாடியிலிருந்து இறங்கி வர... அதற்கு இவள் சிறிதாய் புன்னகைக்க...



பதிலுக்கு மகிழ்ச்சியுடன் விரிந்த புன்னகையைத் தந்த தவமதி, “என்ன அண்ணி இங்கேயே நின்னுட்டிங்க.. உள்ளே வாங்க அண்ணி...” என்று உரிமையாய் அழைக்க



மகளின் குரலுக்குத் திரும்பி பார்த்த தமிழரசி... மருமகளைக் கண்டதும்... எனக்கும் உனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொள்ள.... வந்தவளுக்கு விழிகள் கலங்கியது.



அதை கவனிக்காமல், “உள்ளே வாங்க அண்ணி” என்று தவமதி பிடிவாதமாய் அழைக்க



“இல்ல... முதல் முறை வீட்டுக்கு வந்திருக்கேன்... ஆ.. ஆரத்தி எடுக்கணும்னு சொல்லுவாங்க...” எப்போதோ அவள் அப்பத்தா சொன்னதை வைத்து தன்யரித்விகா சற்றே நினைவுபடுத்த...



உடனே தவமதி தாயைக் காண... அவரோ, “அதெல்லாம் புதுசா வர்றவளுக்குத் தான்... நீ என்ன புதுசா.... இரண்டு வருஷத்திற்கு முன்ன கட்டிட்டு வந்தவ தான... அப்ப நீ பழசு தான்.... அதான் வந்திட்டியே... பிறகு என்ன?...” என்று நீட்டி முழங்க.... விழிகளை ஒரு நொடி மூடிக் கொண்டாள் தன்யரித்விகா.



உண்மை தான்.. தன்யரித்விகாவுக்கும் விதுனதிபாகரனுக்கும் திருமணம் நடந்தேறி இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் இன்று தான் முதல் முறையாகக் கணவன் வீட்டிற்கு வருகிறாள். அதன் பொருட்டே தன்யா இவ்வாறு சொன்னது. அதற்குக் கிடைத்தது என்னமோ உதாசீனம் தான்.



இவள் இன்னும் தயங்கி நிற்க, “வாங்க அண்ணி...” என்று அழைத்த தவமதி... மாடியைப் பார்த்து, “குலமதி.. அண்ணி வந்திருக்காங்க.. கீழ வா...” என்று தமக்கையை அழைக்க...



நின்ற இடத்திலிருந்து சிறிதும் அசையாமல், “உன் அண்ணா எங்க?” என்று வந்தவள் கேட்க



“அண்ணா இன்னும் ஆபிஸிலிருந்து வரல அண்ணி...” சின்னவள் சொன்ன நேரம்.... முகம் வாட அடுத்த நொடி உள்ளே பிரவேசித்திருந்தாள் தன்யரித்விகா. அவள் மனம் இந்த நொடி கணவனை எதிர்ப்பார்த்து இருந்தது என்னமோ உண்மை தான்.



இப்போதும்... நீ எங்களுக்கு யாரோ என்பது போல் சித்ராவும்... தமிழரசியும்... அமர்ந்திருக்க... இவளுக்கு, தான் எங்கு செல்ல வேண்டும் என்பதே புரியாத நிலை. அந்நேரம், “அண்ணி.. அது அண்ணா ரூம்.. வாங்க நான் உங்களை கூட்டிட்டுப் போறேன்...” தவமதி அவளை அழைத்துச் செல்ல



“வந்துட்டா சீமாட்டி... என்ன பார்... என்னிடம் உள்ள பணத்தைப் பார்ன்னு காட்ட... வந்திருக்கிற பவுச பார்... நாங்க ஒண்ணும் இல்லாதவங்க என்றத குத்திக் காட்ட.... எல்லா நகையையும் பூட்டிட்டு வந்திருக்கா சீக்காளி...” என்று தமிழரசி மருமகள் காதுபடவே முணுமுணுக்க...



மனதில் பலத்த அடிவாங்கினாள் தன்யரித்விகா. இப்போது மட்டும் இல்லை... முன்பிருந்தே... அவளின் நோயைக் குறித்து யார் பேசினாலும் மனதால் துவண்டு தான் போவாள்.



அறைக்குள் நுழைந்த வேகத்தில்... அவளிருந்த மனநிலையில்... அறையின் உள் அலங்காரம் எதுவும் அவள் கருத்தில் படவில்லை. வேறு உடைக்கு மாறியவள்... நேரம் போனது தெரியாமல் தவமதியுடனும்... குலமதியுடனும் பேசிக் கொண்டிருக்க... இரவு எட்டு மணி வாக்கில் அறைவாயிலில் வந்து நின்ற தமிழரசி, “ஏய் குலமதி... உன் அண்ணன் இரவு வர லேட் ஆகுமாம்... நம்மளை சாப்பிட சொல்லிட்டான்... நீயும் தவமதியும் சாப்பிட வா...” என்று மகள்களை மட்டும் உயர்த்த குரலில் அழைக்க



தவமதியோ, “அண்ணா வர லேட் ஆகுமாம்... அண்ணி, அப்ப நான் போய் நம்ம மூணு பேருக்கும் இங்கேயே சாப்பிட... எதாவது எடுத்துட்டு வரேன்...” என்றவள்... சொன்ன மாதிரியே சென்று உணவை எடுத்து வர... பேருக்கென்று உண்டாள் தன்யரித்விகா.



அவர்கள் இருவரும் இருக்கும் வரை தன்யா பெரிதாய் வருந்திக் கொள்ளவில்லை. அதே குலமதியும்... தவமதியும் படுக்கைக்குச் சென்ற பிறகு... இவளுக்குள் பல வாதங்கள்.



‘அப்பா வீட்டிலிருந்து என்னை அழைத்து வர தான் இவருக்கு நேரம் இல்ல... வந்த பிறகு வந்திட்டியான்னு ஒரு வார்த்தை கேட்கல. இதோ.. இப்பவும் சீக்கிரம் வீட்டுக்கு வர விரும்பல... அந்தளவுக்கு நான் அவருக்கு வேண்டாத மனைவி! பிறகு எதற்கு என்னைத் திருமணம் செய்யணும்?



ஏன்னு உனக்குத் தெரியாதா தன்யா... அவர் என்ன உன்னை விரும்பியா திருமணம் செய்தார்?’ இப்படியாக வாதம் பிரதிவாதங்களுக்கு இடையே இருந்தவளோ... கணவன் அறையில் இருக்க விரும்பாமல் பக்கத்திலிருந்த விருந்தினர் அறைக்குச் சென்று படுக்க... உறக்கம் வருவேனா என்று அவளிடம் கண்ணாமூச்சி காட்ட... தன் உடமைகளையாவது எடுத்து அடுக்கலாம் என்ற நோக்கில் மீண்டும் அவள் தங்கள் அறைக்குச் சென்று கதவைத் திறக்க...



முன்பு கண்ணிலும் கருத்திலும் படாத ஒன்று இப்போது இவளை சூழ... ஏதோ விண்வெளியில் இருப்பதைப் போன்று அறையைச் சுற்றி நிலவும்... நட்சத்திரங்களும் ஜொலிக்க.. ஒரு வினாடி மனது இதமானது பெண்ணவளுக்கு.



மின்விளக்கை உயிர்ப்பிக்க... அந்த அறையோ அவளுக்குப் பிடித்த கடல் நீல வண்ணத்தில் இருக்க... சுவற்றில் அவளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களான டாம் அண்டு ஜெர்ரி ஸ்டிக்கர்கள்.



அவளுக்குப் பிடித்தமான அமரும் வகையில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய french bay window பாணியில் ஜன்னல்... கூடவே அங்கு ஆளுர டெடி பியர் பொம்மையும் வீற்றிருக்க... காலை மற்றும் மாலை வேளையில்... தன் வீட்டில் அந்த ஐன்னலின் மெத்திருக்கையில் அமர்ந்து... டெடி பியர் பொம்மையை ஒரு கையில் அணைத்துக் கொண்டு... இன்னொரு கையில் டீ அருந்தும் ஞாபகமும் சட்டென வந்து போனது இவளுக்கு.



மெத்தை, தலையணை என அனைத்தும் தன் பிறந்த வீட்டில் பயன்படுத்திய அதே நிறம் மற்றும் பிராண்ட்டில் இருக்க... இவை அனைத்தும் பெண்ணவளுக்கு ஏதோ ஒன்றை உணர்த்த..



இப்பொழுது நிதானமாக நின்று அறை முழுவதும் நோட்டமிட்டவளுக்கு... இந்த அறை அச்சு அசலாகத் தன் வீட்டில் உள்ளதைப் போல் மாற்றியமைக்கப் பட்டுள்ளது தெரிய வர... கணவன் தனக்காக அணு அணுவாகப் பார்த்து ரசித்துச் செய்த எதையும் இவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.



'ஓ!... என் வீட்ல இருக்கிற மாதிரி இங்கயும் காப்பியடித்து வெச்சா... இது என் பிறந்த வீட்டு சூழல் ஆகுமா? இப்படியெல்லாம் செய்தா... நான் impress ஆகி பழசையெல்லாம் மறந்து ஈஈனு இளிச்சி இவர் கூட ஒட்டிக்குவேனா?... என்ன ஒரு முட்டாள்தனமான ஐடியா!...' என்று தலையில் அடித்துக் கொண்டவளின் மனதில் வெறுமை தான் சூழ்ந்தது.



அதே மனநிலை சித்ராவின் உதாசீனத்தையும்... மாமியாரின் வெறுப்பையும் தற்சமயம் கண் முன்னே மீண்டும் கொண்டு வர... தன் இயல்பையும் மீறி அவளுள் கோபம் படரவும்... கணவன் எந்நேரம் வந்தாலும்... அவனிடம் சண்டையிடும் நோக்கத்தில் அறையிலிருந்து ஹாலுக்கு வந்து அமர்ந்தவள்... சிறிது நேரத்திற்கு எல்லாம் அதே வாக்கிலேயே கண்ணயர்ந்துவிட..



எவ்வளவு நேரமோ… திடீரென்று ஏதோ உள்ளுணர்வு உந்த... இவள் விழி மலர்த்தி வாசலைக் காண... அங்கு தலைவாசல் கதவில் சாய்ந்து நின்றிருந்த கணவனோ.. இமைக்கவும் மறந்தவனாக... ஆழ்ந்த பார்வையால் மனைவியைத் தான் கவர்ந்து கொண்டிருந்தான்.




அது ரசிப்பு பார்வையில்லை.. மாறாகத் தன்னவளைத் துளி துளியாய் ஆராய்ந்து கொண்டிருந்தான்… இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்தது போல் வடிவில் அதே வெள்ளை நிற முயல் குட்டி… தற்போது மருந்து மாத்திரைகளின் உதவியால் சற்றே உடல் பிடித்திருக்க… முகத்தில் அன்று தவழ்ந்த குழந்தைத் தனம் இல்லாமல்… சற்றே முதிர்ச்சியைப் பறைசாற்ற… இருபத்தியோர் வயதுக்கு எல்லாம் முதிர்ச்சியா என்று நினைத்து மனம் ரணப்பட்டது இவனுக்கு. கூடவே இவள் என்னவள் என்ற எண்ணம் எழ… இனி எப்போதும் தன்னவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியைப் பூண்டது விதுனதிபாகரனின் மனது.




ஆனால் ஆண்மகனின் பார்வையை உணர முடியவில்லை பெண்ணவளால்… ‘இவர் எப்ப வந்தார்?’ என்ற எண்ணத்தில் இவள் எழ... தன்னவளின் அசைவில் கலைந்தவனோ... மறு நொடி விறுவிறுவெனத் தங்கள் அறைக்குள் சென்று மறைந்திருந்தான்.



“இரண்டு வருடம் சென்று பார்ப்பதால் எனக்குத் தான் பேச்சு வரல.. இவர் பேசினா என்ன?” என்று முணுமுணுத்தவளின் உள்ளமோ இன்னும் கோபம் கொள்ள… ‘இப்ப இவருக்கு சாப்பாடு எடுத்து வைக்கனுமா? வேணாம்... பேசாம நாமளும் அறைக்குள்ள போய் முடங்குவோம்’ இப்படியாக தன்யாவால் எண்ண தான் முடிந்தது. அந்த எண்ணங்கள் கூட வலுவிழந்து போக... அவளின் பாதங்களோ தன்னைப் போல் கணவனுக்கு உணவு எடுத்து வைக்க சமையலறை நோக்கி சென்றது.



குளித்து முடித்து வந்தவனோ... அதே ஆழ்ந்த பார்வையை மறுபடியும் மனைவி மேல் தொடர... இவளோ அதைக் கண்டு கொள்ளாதவள் போல் உணவு மேஜையில் உணவை எடுத்து வைக்க... இருவரிடமும் மவுனம் மட்டுமே.



தன் பார்வையை மாற்றிக் கொள்ளாமல்... அங்கிருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து அருந்தியவன், “நான் பாக்டரியிலேயே சாப்டேன்.... அதுவும் இல்லாம மணி இப்போ பத்தரை” என்று எவ்வித நல விசாரிப்பின்றி இவன் சொல்ல



மறுநொடி தட்டில் வைத்த உணவை.. மறுபடியும் இவள் ஹாட்பாக்ஸில் மாற்ற… பேச்சற்ற மனைவியின் உடல் மொழியில் என்ன கண்டானோ…




“ஹேய்… wait.. wait… அது எப்பவோ செரிமானமாகி இருக்கும்... இடியாப்பாம் தான.. இப்ப ஒரு தடவை சாப்டா ஒன்றும் ஆகாது… தா..” என்று சொல்லி இலகுவாக சேரில் அமர்ந்து கொண்டு இடியாப்பத்தை இன்னோர் தட்டில் எடுத்து வைத்து மனைவியை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி அவளையும் சாப்பிட சொல்ல...




கணவனிடம் சண்டை போடவேண்டும் என்று நினைத்தவை எல்லாம் அப்படியே இருக்க... கணவனின் இலகு தன்மையில் உள்ளுக்குள் மலைத்தவளோ.. தான் மட்டும் உங்களுக்கு சளைத்தவளா என்ற எண்ணத்தில், “நான் எட்டு மணிக்கே சாப்டேன்.. நீங்க சாப்பிடுங்க...” என்று ஆதர்ச மனைவியைப் போல் இவள் மொழிய



“எனக்கு சொன்னது தான் உனக்கும்... சாப்பிடு ரிது...” என்று இவன் அழுத்தி சொல்ல



முதன்முறையாகக் கணவன் தன்னைப் பெயர் சுருக்கி அழைத்ததை உள்வாங்கியவளாக.. பெண்ணவள் மவுனமாக அமர்ந்திருக்க



“உன் கோபத்த சாப்பாட்ல காட்டாத.. என்ன பழக்கம் இது.. ஒவ்வொரு தடவையும் நான் உன்ன அதட்டிட்டு இருக்க முடியாது… சாப்பிடு..” என்று இவன் கொஞ்சம் அதட்டலுடன் மொழிய



“அப்ப நான் கோப படக் கூடாதுன்னு சொல்றீங்களா..”



“அப்படி யார் சொன்னா… உனக்கு கோப பட எல்லா உரிமையும் இருக்கு… அதுவும் என் கிட்ட கோப பட முழு உரிமையும் உள்ளவ நீ மட்டும் தான்.. அதைச் சாப்பாட்ல காட்டாத சாப்பிடு” அவன் தன்மையாகச் சொல்ல



மறுக்கத் தோன்றாமல் கணவனுடன் உணவை உண்டாள் தன்யரித்விகா.



உண்டு முடித்ததும் இருவருமாக அந்த இடத்தைச் சுத்தம் செய்ய, “இனி எனக்குப் பாக்டரி விஷயமா வீட்டுக்கு வர லேட்டாகலாம்... நீ எனக்காகக் காத்துட்டு இருக்காம சாப்பிட்டு படு... என் கிட்ட இன்னோர் சாவி இருக்கு நான் கதவை திறந்துக்குவேன்....” என்றவனுக்கு



இவளோ, “பரவாயில்ல.. ஒரு வருடம் தான... இருக்கேன்...” என்று பட்டும்படாமல் சொல்ல...



அதன் பின் இருவருக்குள்ளும் கனத்த அமைதி சூழ... அதைத் தகர்க்க நினைத்து, “மாமா உன்னை விட்டுட்டுப் போகும் போது என்ன சொன்னார்... என்னைக் கேட்டாரா?” இவன் பேச்சை மாற்ற....



பெண்ணவளிடம் மவுனம் மட்டுமே... அவள் தான் தந்தையுடன் வரவில்லையே... மாறாக யாருமற்ற அநாதை போலல்லவா இங்கு வந்தாள்?...



மனைவியின் மவுனத்தை... ‘மாமனார் அதீத கோபத்தில் சென்றார் போல..’ என்று தவறாக யூகித்தவனோ,



“என்னால் வர முடியாத சூழ்நிலை ரிது... மாமா கோ..” கோபபட்டாரா என்ற வார்த்தையைச் சொல்ல வந்தவன் பின் “வருத்தப் பட்டாரா” என்று மாற்றிக் கேட்க



பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள் அதை அப்படியே விட்டுவிட்டு கணவன் பக்கம் திரும்பி, “டாடி கோப படல… வருத்தமும் படல… ஏன்னா என்னை டாடி அழைச்சிட்டு வரல... நான் தனியா தான் வந்தேன்....” என்று அறிவிப்புக் குரலில் சொன்னவள் மறுபடியும் திரும்பி நின்று வேலையைத் தொடர...



இவனுள் அதிர்வு... “என்னடி சொல்ற!... யா... யாரும் இல்லாம தனியா வந்தியா?” அதிர்ச்சியில் இவனுக்குக் குரலே எழவில்லை... ‘முதல் முறை கணவன் வீடு வருபவள்... யாரும் இன்றியா வந்தாள்.... என்னிடம் சொல்லியிருக்கலாமே... அந்தளவுக்கா நான் இவளுக்கு வேண்டாதவனா ஆகிட்டேன்?’ தான் பேசவில்லை என்றும்... மனைவியிடம் தன்னுடைய போன் நம்பர் கூட இல்லை என்பதையும் மறந்தவனாக... கோபம் எழ.. மனைவியை உறுத்து விழித்தான் இவன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN