நெஞ்சம் 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் லட்சியம், தன் கனவு என்று பயணித்த விதுனதிபாகரனின் அகத்தில்… தற்போது எல்லாம் மருண்ட விழியாளின் முகமே வந்து சென்றது. மணையில் தன் பக்கத்தில் அமர்ந்து தத்தா பித்தா என்று தடுமாறிய மனையாளே அதிகம் அவனை ஆக்ரமித்தாள் என்றே சொல்லலாம். அதில், அவனுள் மனையாளைக் காண வேண்டும்... கண்டே ஆக வேண்டும் என்ற உறுதியெழ




ஒரு நாள் தன்யாவைக் காண இவன் மருத்துவமனை செல்ல.. இவன் நல்ல நேரம் அறை வாயிலிலேயே இவனைக் கண்டு கொண்டார் தன்யாவின் அப்பத்தா.



“வாங்க தம்பி... எப்படி இருக்கீங்க...” என்று அவர் நலம் விசாரிக்க



“எனக்கு என்னங்க... இருக்கேன்... அவ எப்படி இருக்கா? உங்க பேத்திக்கு என்ன ஆச்சி... டாக்டர் என்ன சொல்றார்... சாதாரண மயக்கத்துக்கு... எதுக்கு இத்தனை நாள் ஆஸ்பிட்டல்?” இவன் அவசர கதியில் அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்க...



ஒரு நிமிடம் அவனை வியந்து பார்த்த அந்த மூதாட்டி, “அப்போ தன்யாவுக்கு இருக்கிற நோய் உங்களுக்குத் தெரியாதா?…”




“தெரியாது…” என்று சங்கடத்துடன் இவன் நிற்க



“அது வந்து... இதை நீங்க உங்க அப்பாம்மா கிட்ட கேட்கிறது தான் நல்லது... தன்யா பிரச்சனை அவங்களுக்குத் தெரியும்” பெரியவர் பட்டும் படாமல் முடித்து விட



“அவ பெயர் தன்யாவா?” அடுத்து இவன் கேட்ட கேள்வியில்.... அப்பட்டமாய் அதிர்ந்தே போனார் பெரியவர்.



“தன்யரித்விகா... இது தான் என் பேத்தி பேரு... அதாவது... உங்க பொஞ்சாதி பேரு...” பெரியவர் விளக்க




“ஓஹ்... நீங்க ஏதோ கண்ணு... கண்ணுன்னு சொன்னீங்க...” என்று அன்றைய தினத்தின் அழைப்பை இவன் நினைவுபடுத்த...



“நான் தன்யாவை அப்படி தான் கூப்பிடுவேன்...”



அவர் பதிலைக் கிடப்பில் போட்டவன், “அது வந்து.. நான் படிச்சிட்டு இருக்கும்போதே எங்க கல்யாணம் நடந்தது... அதனால் தான் நான் எதையும் சரியா கேட்டுக்கல... இன்னும் சொல்லனும்னா தன்யாவ போட்டோவில் கூட நான் பார்த்தது இல்ல... என் சூழ்நிலை அப்படி.. இப்போ டாக்டரை நெருங்கி அவ உடல்நிலை சம்பந்தமா என்னால் பேசவும் முடியல... எனக்கு எக்ஸாம் வருது... அதில் நான் பிசியாகிடுவேன்...” இப்படியாக துண்டு துண்டாய் சொல்லிக்கொண்டு வந்தவன்...




பின் நிறுத்தி, “அவள நான் அன்று பார்த்தது. இப்.. இப்போ நான் அவளைப் பார்க்கலாமா...” என்று இவன் தயக்கத்துடன் கேட்க




“கேட்கணுமா தம்பி... உள்ள போங்க...” என்றவர் விலகி விட




இவனுள் தயக்கம்... ‘அவளைப் பற்றி எதுவும் தெரிஞ்சிக்காம கல்யாணம் செய்துட்டு... இப்படி தூர நின்னுட்டனே...’ என்ற எண்ணத்தில் சட்டையை நீவி சரி செய்வதும்... தலை கோதுவதுமாய்... இருந்தவனோ... பின் ஒரு நீண்ட நெடுமூச்சுடன் உள்ளே நுழைய...




கட்டிலில் படுத்திருந்தவளோ... கதவுக்குழியின் ஓசையில் கண்விழித்து வந்தவனைக் காண... அந்நேரம் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று தழுவிக் கொண்டது. ‘என்ன இவ்வளவு சோர்ந்து தெரியறா… இவ உடம்புக்கு என்ன?’ என்று எண்ணியவனுக்கு தயக்கம் எல்லாம் தூர விலகிச் சென்றுவிட... வாடிய கொடியாய் துவண்டு படுத்திருந்தவளை நெருங்கி “என்ன டா ம்மா உனக்கு என்ன செய்யுது?” என்று கேட்ட அக்கறையுடன் கூடிய வார்த்தையோ.. அல்லது மனைவியின் கேசத்தைக் கோத உயர்ந்த கரமோ தன்யாவின் கருத்தில் பதியவில்லை. காரணம் அந்நேரம் கதவைத் திறந்து கொண்டு தன்யாவின் அறைக்குள் நுழைந்தது டாக்டர் குழு. இவன் தலைமை மருத்துவரை நெருங்கி, “டாக்டர்... தன்யாவுக்கு...” என்று மனைவியின் நலம் பற்றி விசாரிக்க எத்தனிக்க...





“சார்... நீங்க கொஞ்ச நேரம் வெளிய இருங்க... சசிரேகா மேடம் வந்துட்டு இருக்காங்க... Its already late... Pls be out” என்று முடித்த அவர்... மற்றவர்களிடமும் தன் பங்குக்கு வேலைகளை ஏவ…





மனம் சோர வெளிய வந்தவன் மனைவியின் நலம் பற்றி கேட்க வாயிலில் காத்திருந்த நேரம்… புயலென அதிகார தோரணையுடன் சசிரேகா வரவும், இவன் “அத்த… தன்யாவுக்கு” என்று மனைவியைப் பற்றி மாமியாரிடம் கேட்க எத்தனிக்க... இவனைக் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழைந்தார் சசிரேகா. அதில் முகத்தில் அடி வாங்கியவனாக மனைவிக்காக பொறுமையுடன் வெளியே காத்துக்கொண்டிருந்தான் திபாகரன்…




நேரம் கடந்து அனைவரும் வெளியே வர... இவனைக் கண்ட சசிரேகா, “டாக்டர்... என் அனுமதி இல்லாம யாரையும் தன்யாவைப் பார்க்க விடாதீங்க… முக்கியமா உறவுன்னு சொல்லி யார் வந்தாலும் விடாதிங்க… it's my order… எல்லோருக்கும் கேட்டு இருக்கும்ன்னு நினைக்கிறேன்..” என்று கட்டளையாகச் சொல்ல




இது தனக்கான உத்தரவு என்று தெரிந்து கொண்டவன் தனக்கு நேர்ந்த அவமதிப்பில்… மனைவியையும் காணாமல் தன்னவளைப் பற்றி மருத்துவரிடமும் விசாரிக்காமல் அங்கிருந்து வெளியேறினான் திபாகரன்.




அதன் பிறகு தன்னை இவன் தேர்வில் ஈடுபடுத்திக் கொள்ள... எல்லாம் முடித்து நிமிர்ந்த நேரம்... தன்யாவை மருத்துவமனையில் இருந்து... அவளின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர் என்ற செய்திதான் இவனுக்கு கிடைத்தது.




அதில் இன்னும் மனம் சோர்ந்தது இவனுக்கு. ‘என்ன தான் பிரச்சனை அவளுக்கு.. நான் அன்று கோபத்துடன் எதையும் விசாரிக்காமல் வந்தது தப்போ’ என்று நினைத்தவன், தாயிடம் “என்ன ம்மா... எதுக்கு தன்யா இன்னும் அவ அம்மா வீட்டுல இருக்கா.... எனக்கு தான் எக்ஸாம்... நான் போனாலும் அங்க யாரும் பிடி கொடுக்கல.. நீங்க போய் அவளை அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்க




தமிழரசியிடம் மவுனம் மட்டுமே… அவர் ஏதோ சொல்ல தயங்குவது தெரிய... இவனுள் நெருடல்.. “ம்மா... என் கிட்ட எதையாவது மறைக்கிறீங்களா...” என்று மகன் நேரடியாகவே கேட்டு விட...




இன்னும் தயங்கினார் தமிழரசி... அதெல்லாம் ஒரு நொடி தான்... பிறகு வழக்கம் போல் அவர் இயல்பு தலை தூக்க, “தன்யா நம்ம வீட்டுக்கு வர மாட்டா சாமி... நீ தான் அவ வீட்டுக்குப் போகனும்…”




“நான் போகனுமா! எதுக்கு? என்ன சொல்றீங்க எனக்குப் புரியல”




“அது... நீ தான் போகனும்” தாயின் சூது மகனுக்குத் தெரியவில்லை.




“ஓ… நான் போய் கூட்டிட்டு வரவா.. அப்படி அங்க போனா யாரும் தான் இல்லையே”




“அதில்ல திபாகரா… திருமணம் சம்பந்தமா பேசும்போதே... நம்ம வீடு வசதிப்படாதுன்னு அவ வீட்டில் சொல்லிட்டாங்க....” என்று தாய் கூற




“வசதிப்படாதுன்னா… எனக்கு இப்பவும் புரியல” இவன் புரிந்தும் புரியாதவனாக கூர்மையுடன் கேட்க




“நீ அவங்க வீட்டுல தங்கனும்… அதாவது வீட்டோட மாப்” தாய் முடிக்கவில்லை




“இது திருமணத்திற்கு முன்பே உங்களுக்குத் தெரியுமா?..” மகனின் ஆவேச கேள்வியில்



தலை தாழ... “ம்ம்ம்..” என்று தமிழரசி தலையாட்ட...



சாதாரணமாகவே தன்மானம் பார்ப்பவன் இதை எப்படி ஏற்றுக் கொள்வான்… கோபத்தில் கண்கள் சிவந்தது திபாகரனுக்கு.. “என்ன ம்மா செய்து வச்சிருக்கீங்க? உங்கள நம்பி என் வாழ்க்கைய ஒப்படைச்ச என்னைக் கேவலப்படுத்தி இருக்கீங்க… அப்பாவுக்காக அப்பாவுக்காகன்னு சொல்லி கடைசியில என் தன்மானத்த அடகு வச்சிட்டீங்களே ம்மா… இதுக்கு அப்பாவும் உடந்தையா… உங்களுக்கு ஒரு மகனா நான் தேவையில்லையா ம்மா.. அந்தளவுக்கா உங்களுக்கு நான் வேண்டாதவனா ஆகிட்டேன்.. நிச்சயமா நீங்க தான் என்னைப் பெத்தெடுத்தீங்களா ம்மா..”




“அய்யோ சாமி!... இப்படி எல்லாம் பேசாத”




“சாமி… சாமி ன்னு சொல்லி இந்த சாமிய பதினைந்து லட்சத்துக்கு வித்திட்டீங்க இல்ல ம்மா… ஓஹ்... அப்போ உங்களுக்குப் பதினைந்து லட்சம் போதும்… சூப்பர் இல்ல?...” மகன் கேட்க... இப்போது அதிர்வது தமிழரசியின் முறையானது.



“அப்படி இல்ல திபாகரா... அப்ப இருந்த சூழ்நிலைய நினைச்சிப் பாரு டா”



“ஓ… நான் நினைச்சிப் பார்க்கனும்... ஆமாம்.... தன்யா யாரு ம்மா...”



“இது என்ன டா... கேள்வி... அவ தான் உன் பொஞ்சாதி...”



“ஒஹோ.... அவ முழு பேரே தன்யா தானா?” இவன் தன்மையாய் கேட்க



“தன்யரித்விகா...”





“அவ பெயர கூட தெரிஞ்சிக்காம... பெத்தவங்களான உங்களை நம்பி திருமணம் செய்ததுக்கு... எனக்கு மிகப் பெரிய நல்லது செய்திட்டீங்க. இதுல நான் நினைச்சிப் பார்க்கனும்னு சொல்றீங்க.. உங்களுக்கு மகனா பிறந்ததுக்கு.. எனக்கு மான ரோஷம் இருக்கக் கூடாதுன்னு முடிவு செய்திட்டீங்களா?...”





இப்படியாக கேட்டவன், “ஆனா இனி.. இங்க நான் தான் முடிவு செய்வேன்.. நீங்க அங்க என்ன சொல்லுவிங்களோ... ஏது செய்விங்களோ... எனக்குத் தெரியாது.... தன்யா என் மனைவி... உங்க மருமக... இனி அவ நம்ம வீட்டில் தான் இருக்கனும்… ஒருகாலமும் அவங்க சொன்னத இந்த திபாகரன் செய்ய மாட்டான்” உறுதியாய் சொன்னவன் அங்கிருந்து விலகி விட... மகனின் கேள்வியிலும்... அவனின் உறுதியிலும் பாவம் மனதால் அடி பட்டு தான் போனார் தமிழரசி. இந்தக் கலவரத்தில்... மனைவிக்கு என்ன நோய் என்பதைத் தாயிடம் கேட்கத் தவறி விட்டான் விதுனதிபாகரன்.




நாட்கள் சென்று மறைய... அன்று திபாகரனை விசா சம்பந்தமாக விசாரணைக்கு வரச் சொல்லியிருக்க… அதற்கு செல்ல இருந்தவனின் மனது ‘ஆமா தன்யாவுக்கு விசாக்கு ஏற்பாடு செய்துட்டியா’ என்று கேட்க ஆமா இதை எப்படி மறந்தேன்… அவளுக்கும் பாஸ்போர்ட் விசா ரெடி செய்யனும் இல்ல… அவ இல்லாம நான் மட்டும் எப்படி வெளிநாடு போக.. பேசனும்... இதுக்காகவாது அவ வீட்டுக்கு நானே போய் பேசி எல்லாம் சரி செய்யனும்… கூடவே அவங்க திருமணம் அப்ப வைத்த கண்டிஷனை… என் ஆயுசுக்கும் நடக்காதுன்னு சொல்லிட்டு வரனும். போதும்... நானும் தன்யாவும் பிரிந்து இருந்தது போதும்…” என்று வாய் விட்டு மொழிந்தவனின் மனமோ மனைவியைக் காண வெகுவாய் ஆவல் கொண்டது.




இவன் சென்ற நேரம் தன்யா செக்கப்பிற்காக வெளியூர் சென்றிருக்க... இது இவனுக்குத் தெரியாதே… வெளி வாசல் காவலாளி திபாகரனை உள்ளே விட மறுத்து பிடிவாதம் பிடிக்க.. இவன் பேச... அந்த இடமே குட்டி கலவரமான நேரம் சசிரேகாவின் கார் கேட் உள்ளே நுழைய எத்தனிக்க… திபாகரனைக் கண்ட சசிரேகா சோனியாவைக் கைப்பேசியில் அழைத்து வந்தவனை உள்ளே செல்ல அனுமதி தர.. அவள் காவாளியிடம் சொன்ன பிறகே இவனை உள்ளே அனுமதிக்க.. இதையெல்லாம் மனதில் குறித்துக் கொண்டான் நம் நாயகன்.




திபாகரனை வரவேற்று அமர வைத்த சோபியாவிடம்... இவன் தன்யாவை பற்றிக் கேட்க… அவளோ பாஸ் வரும்வரை காத்திருங்கள் என்ற சொல்லுடன் விலகிவிட.. அமர்ந்திருந்தவன் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ‘தன்யா எந்த ரூம்ல இருக்கா… அதான் அவ வீட்டுக்கு வந்துட்டனே... பிறகு ஏன் இன்னும் அவ வந்து என்னைப் பார்க்கல… கோபமா… என்னிடம் பேசப் பிடிக்கலையா…’ என்று மனைவியைப் பற்றி பல சிந்தனைகள் இவனுள். இறுதியாய் இவன் பொறுமை இழந்த நேரம்... உடல் மொழியில் அலட்சியத்துடன்... முகத்தில் வெறுப்புடன் மருமகனின் முன் வந்து அமர்ந்தார் சசிரேகா.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN