பாகம் 18

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாயா பெயரைக் கேட்டதும் அர்மி சண்டைக் கோழியானாள். ஒரே பாய்ச்சலாய் அவன் மடி மீது அமர்ந்து, அவன் குரல்வளையை இறுக்கப் பற்றினாள்.அரவிந்தன் திணற,

"டேய் மாயா உனக்கு மச்சினிச்சி,அவள தப்பா பார்த்தே உன்னை கொன்னுடுவேன் ராஸ்கல்.என்ன விட்டுட்டு எவளையாச்சும் பார்த்தே மவனே நீ தொலைஞ்ச!" அர்மி பெரிதாய் தன் கண்களை உருட்ட,அவன் அவள் பக்கம் எழுந்து அவளைப் படுக்கையில் வீழ்த்தி,"நீ மட்டும் மித்திரனை நினைக்கலாமா?"கோவத்தில் கண்கள் ஜொலிக்க, அர்மிதா பட்டென சிரித்தாள்.

"கூல் மச்சி,சும்மா கலாய்ச்சேன்.நா எப்பவும் உன் அர்மிதா தான்." காதலாய் தன் கைகளை அவன் கழுத்தில் மாலை போல் போட்டுக் கொண்டாள்.
அப்படியே சொக்கிய அரவிந்தன், தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து சின்ன பெட்டி ஒன்றை எடுத்தான்.அதில் அபூர்வ ரக வைரங்கள் பதித்த தங்க மோதிரம் மின்னிக் கொண்டிருந்தது.

மெல்ல அர்மியின் வெண்டை விரலில் அதை அணிவித்தவாறு "இந்த விலை மதிக்க முடியாத வைரத்திற்கு இந்த சின்ன வைரத்தை என் காதல் சின்னமாய் அணிவிக்கிறேன்"அரவிந்தன் தன் இதழ்களை அர்மியின் கையில் பதித்தான்.அர்மி அப்படியே அவனைக் கட்டிக் கொண்டாள்.

மித்திரனுடன் குடிலுக்கு திரும்பிய மாயா அவனுக்கு திரும்பவும் நன்றி கூறினாள். அதற்கு அவன் "மாயா எங்கூட வருவியா?உனக்கு ஒன்னு காமிக்கணும்.என் வருங்கால மனைவிக்காக நான் ஒரு ஸ்ர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்.அத நீ பார்க்கணும்.உன் கருத்தை சொல்லணும். ஒகேவா?" மித்திரன் உற்சாகமாய் கேட்க மாயா அறைகுறையாய் தலையாட்டி வைத்தாள்.

"இப்ப கண்களை கட்டிக்கோ,ஸ்ர்ப்ரைஸ் அ இப்டிதான் பார்க்கணும்,அப்புறம் என் கையை புடிச்சிக்கோ.சரியா?" மித்திரன் கண்சிமிட்டி அழைக்க மாயாவும் உடன் பட்டாள்.மித்திரனுடன் மாயா நடக்க ஒரு அறைக்கு முன் வந்து நின்றனர். மெல்ல மாயாவின் கண் கட்டைப் பிரித்த மித்திரன் மெதுவாக தன் கைகளால் அவள் கண்களைப் பொத்தினான்.

சற்றே இளம் சூடான மித்திரனின் கைகள் மாயாவிற்குள் ஏதோ ஒரு உணர்வை உற்பத்தி செய்தது.மெல்ல மாயாவின் காதருகே குனிந்தவன், இன்னும் கொஞ்சம் முன்னுக்கு நட மாயா,நான் சொன்ன ஸ்ர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு. மாயா முன்னேற,மித்திரன் சற்றே தன் கைகளைப் பிரித்தான்.முதலில் மாயாவின் நாசியில் ஏறியது அவளுக்குப் பிடித்த லாவண்டர் வாசனைத் திரவியத்தின் மணம்.அந்த அறை முழுவதும் சுகந்தமாய் மணத்த இலாவண்டர் மணத்தை மாயா மூச்சு நுறைக்க சுவாசித்தாள்.

மெல்ல தன் கண்களைத் திறந்தவள்,அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.அவளது அறை போன்றே இருந்த அந்த அறை அவளை திகைப்படைய வைத்தது.மித்திரன் இருப்பதையும் உணராதவளாய்,அந்த அறை முழுவதும் நோட்டமிட்டாள்.அவள் கண்களில் பல்வேறு உணர்ச்சிகள் மாறி மாறி தோன்றி மறைந்தன.

அந்த அறை முழுவதும் பெர்கண்டி வண்ணம் பூசப்பட்டு இடை இடையே சில்வர் வர்ணத்தில் மேபல் இலைகள் சிறிதும் பெரிதுமாய் வரையப் பட்டிருந்தன.பழங்கால தினுசில் கிரிஸ்டல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.அதன் வெளிச்சம் அறை முழுவதும் படர்ந்திருந்த வெள்ளி மேபல் இலைகளின் மேல் பட்டு ஒரு விதமான மினுமினுப்பை வெளிப்படுத்தின. அறையின் கோடியில் அழகிய பெண் அபிநயம் பிடிப்பது போல் பளிங்கு சிற்பம் ஒன்று நின்றிருந்தது.

சற்றே விழியுயர்த்திப் பார்த்தவள்,அதிர்ந்து போனாள். அங்கே அறை சுவரில் மித்திரன் மாயாவை அணைத்து நிற்பது போல் ஆளுயர வரைப்படம் ஒன்று வரையப்பட்டிருந்தது.பழங்கால ஆங்கில பாணியில் நிற்பது போல் தங்கள் இருவரையும் வரைந்திருந்தான். அதில் மாயாவின் வெண்டை விரலில் பளிச் பளிச்சென்று எதோ ஒன்று மின்னிக் கொண்டிருந்தது.மாயாவின் கண்களில் நீர் சுரந்தது. அருகே மித்திரனின் நின்றிருப்பது அப்பொழுதான் உணர்ந்தாள்.

மாயாவின் கண்களில் நீர் வழிவதைக் கண்டு மித்திரன் பதறிப்போனான். "வாணிம்மா என்ன இது? ஏன் அழறடா?,அவளை தன் அருகில் இழுத்து அணைத்தவன், அவள் விழி நீரையும் துடைத்து விட்டான்.
"மித்திரன் என்ன இதெல்லாம்,நான்... நான் எப்படி உங்கள் வாழ்க்கைத் துணையாய்?இதெல்லாம் எப்படி சாத்தியம்?
எனக்கு பிடிச்ச மாதிரி இந்த ரூம் இருக்கே..எனக்கு எதுவுமே விளங்கலயே..,
" மாயா திக்கி திணறி கேட்க மித்திரன் முறுவலித்தான்.

"நாந்தான் ஸ்ர்ப்ரைஸ்னு சொன்னேனே செல்லம்," கன்னக் குழி சுழிய மித்திரன் பதிலளித்தான்.
"இப்படி வந்து உட்காரு மாயா," அவளை படுக்கை விளிம்பில் அமர வைத்து விட்டு அவனும் அமர்ந்தான்.மெல்ல நடுங்கும் அவள் கைகளை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு,

"மாயா உன்ன முதல் தடவை பிஸ்னஸ் விசயமாய் பார்த்த அப்பவே எனக்குள்ள ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துச்சு. என்னை பார்த்து வழியற பெண்களைத்தான் உன்னை பார்க்கறதுக்கு முன்னாடி என் வாழ்க்கையில நான் சந்திச்சிருக்கேன்.பட் முதல் தடவையாய் என்னை சட்டை செய்யாத பெண்ணாய்,
என்னைப் போல கலைத்தாகம் கொண்ட உயிராய் உன்னைப் பார்த்ததும் நிஜமாவே சொக்கித்தான் போனேன்.
உன்னைப் பத்தி எதுவும் தெரியாத நிலையில் உன்மேல ஒரு ஈர்ப்பு வந்திடுச்சி.உன்னை ஒட்டிக்கிட்டே இருக்கணும் ஆசை. பட்,நீ எங்கிட்ட பேசக்கூட யோசிப்ப,"


"உனக்குள்ள இருந்த கலையுணர்வுக்கும் உன் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நீ நடந்து கொண்டது முதலில் என்னை குழப்பிடுச்சு.அப்ப நீ சிம்மி அண்ணி ப்ரண்டுண்ணு கூட எனக்கு தெரியாது.ஆனா நீ இல்லாம நான் வாழ முடியாதுன்னு மட்டும் புரிஞ்சது.உன் அம்மா மூலமாய் உன் கடந்த காலமும் தெரிஞ்சிக்கிட்டேன்.அது இன்னும் உன்னை நேசிக்க வெச்சது. உன் மாதிரி என் இரசனைகள் ஒன்றுனு பல சமயங்களில் உனக்குப் புரிஞ்சதால்,இன்னும் என்னை விட்டு நீ விலகி ஓடின."

"அந்த வலி எனக்கும் புரிஞ்சது மாயா.பட், நான் மதன் இல்லடா. மித்திரன். உனக்கே உனக்கான மித்திரன்.

நீ யார்னு தெரியாத அந்த வயசில் உன்னை காப்பாத்தினவன் உனக்கு சொந்தமானவன் இல்லையா?
மெல்ல மெல்ல உன் பயத்தைப் போக்கி என்னை நீ முழு மனசா ஏத்துக்கணும்தான் இதெல்லாம் செஞ்சேன்.
அதுவும் நீ டொரோந்தொவிற்கு கிளம்பின அப்புறம்தான், இந்த அறையை நமக்காக நானே வடிவமைச்சேன்.

காலம் முழுக்க உனக்கு மட்டும் மித்திரனாய் வாழ நான் இருக்கேண்டா,பழசை மறந்திடு.என்னை முழு மனசாய் ஏத்துக்குவியா மாயா?" மித்திரன் கண்களில் காதல் கசிய கேட்க,மாயா அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.அவள் கண்களில் நீர் சுரப்பது நிற்கவில்லை.

"உங்களை ரொம்பப் பிடிக்கும் மித்திரன். என் கடந்த காலம் என்ன இப்படி ஆக்கிடுச்சி.திரும்பவும் ஒரு வலியை வாங்கிக்க தெம்பு இல்லாமதான் எனக்குள்ளே ஒரு திரையைப் போட்டு வாழ ஆரம்பிச்சேன். நான் சந்தோசமாய் ஆடி பாடி ரொம்ப வருஷங்கள் ஆச்சு.அதெல்லாம் மெல்ல மெல்ல திரும்ப கிடைச்சது உங்களாலதான்."


"அன்பான உங்க குடும்பத்தாலதான். நான் உங்க மனசு வலிக்கும்படி நடந்திருந்தா என்னை மன்னிச்சிடுங்க மித்திரன். பார்த்த இரண்டு சந்திப்புகளில் உங்கள் இரசனை என்னை ஒத்து இருந்தது தெரிஞ்சித்தான் பட்டும் படாமலும் பழகினேன்.
பட்,மனசு ஏனோ உங்கள சுத்தி சுத்திதான் வந்தது.எப்பவோ இந்த கைகளில் பாதுகாப்பாய் இருந்த மாதிரி தோணும். அதற்கும் ஜாஸ்மின் தெளிவு தந்துட்டாள்."அவளை தன் மார்போடு இறுக்க அணைத்தவன்,

"இந்த மாயா இனிமே மித்திரனோட மாயாவாக்கும்". அந்த ஆளுயர சித்திரத்தில் நிஜமாய் டால் அடித்துக் கொண்டிருந்தது ஒரு வைர மோதிரம்.

மித்திரன் அதை அழகாய் உருவி மாயாவின் முன் மண்டியிட்டான். ஒரு கையால் அவள் வலக் கரத்தைப் பற்றி, "விலைமதிக்க முடியாத இந்த அற்புத வைரத்திற்கு இந்த சின்ன வைர மோதிரத்தைப் பரிசளிக்கிறேன்".மேபல் இலைடிசைனில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அபூர்வ மோதிரத்தை மாயாவின் விரலில் அணிவித்து கண்சிமிட்டினான்.

மாயா காதலோடு கலைந்திருந்த அவன் தலை முடியைக் கோதி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
காந்தம் போன்ற அவன் கண்களைப் பார்த்து,
"ஐ லவ் யூ மித்திரன்.இந்த வாழ்க்கை முழுவதும் எனக்கு நீங்க மட்டும்தான் எல்லாமே." மாயா மித்திரனை அணைத்துக் கொண்டாள்.

அப்பொழுது இரவு உணவு தயார் என்று இண்டர்காம் ஒலிக்க இருவரும் சுய உணர்வு பெற்றனர்.மூன்று ஜோடிகளும் அன்று இரவு உணவை குடிலுக்கு அருகில் அமைந்திருந்த கூடாரத்தில் அமர்ந்து அருந்திக்கொண்டிருந்தனர்.அருகில் குளிருக்கு இதமாய் நெருப்பு மூட்டியிருக்க, இதமான கதகதப்பில் 6 ஜோடி கண்களும் ஒரே உணர்வில் இலயித்திருந்தன.

மௌனத்தை உடைக்கும் விதமாய் , சிம்மி பேச ஆரம்பித்தாள். "எங்கடி போயிட்டிங்க ரெண்டு பேரும்?ஒரு வார்த்தை சொல்லறது இல்ல." அர்மியும் மாயாவும் அசடு வழிந்தனர். சகோதரர்கள் மூவரும் உணவிற்கு பின் காலார நடக்க, தோழிகள் மூவரும் அறைக்குள்
அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.மூவரின் முகத்திலும் பூரிப்பு படர்ந்திருப்பது அப்பட்டமாய் சிம்மிக்கே தெரிந்தது.

சிம்மியின் கால் விரலில் மினுமினுத்த மெட்டியை பற்றி மாயா விசாரிக்கையில்,அவள் முகம் சிவந்தாள். "வந்து ..வந்து..இது அவர் போட்டு விட்டாருடி..விலையே இல்லாத இந்த வைரத்திற்கு...",சிம்மி இழுக்க,

"இந்த சின்ன வைரத்தை காதல் பரிசாய் அளிக்கிறேனு சொன்னாரா உன் அனிஷ்?"அர்மிதா முடித்து வைக்க.சிம்மியின் கண்கள் வியப்பில் விரிந்தன.

ஹேய் உனக்கு..உனக்கு எப்படி" இது தெரியும் அர்மி?என்று மாயா ஆச்சரியமாய் கூற'

"ஹூம் ..எனக்கெனு ஒருத்தன் இருக்கனே..அரவிந்தன் ராஜ்னு ,அவன் விட்ட டயலாக்கு இது.அர்மிதா தன் மோதிர விரலை நீட்ட,மாயாவும் தன் கரத்தை நீட்டினாள்.

"மித்திரன் என்னை ப்ரோபோஸ் பண்ணாருடி"

மூவருக்கும் ஒரே டயாலாக்கா? நல்ல அண்ணன் தம்பிங்க போ அர்மி அலுத்துக் கொண்டாள்.
இதை கேட்ட சிம்மி இருவரையும் பாய்ந்து வந்து கட்டிக்கொண்டாள். வாழ் நாள் முழுவதும் மூவரும் இணைப்பிரியாமல் ஒரே குடும்பத்திற்கு மருமகள்களாய் போகப் போவது அவளுக்கு தெவிட்டாத இன்பத்தை அளித்தது. இரவு முழுவதும் மாயா மற்றும் அர்மியின் காதல் கதையை கேட்டு,சிம்மியின் மனக்குழப்பம் தீர அனிஷ் செய்த காரியங்களையும் சிம்மி விளக்கினாள்.

இனியும் தாங்காது என்பது போல் விடிந்ததும் விஷயத்தை சிம்மி அனிஷிடம் கூற அந்த இடமே சந்தோசத்தில் திளைக்கத் தொடங்கி விட்டது.
நிலாவிடம் விஷயத்தை சொன்னவர்கள்,அவளை அங்கே ஹனிமூன் எஞ்சாய் பண்ண சொல்லி விட்டு டொரோந்தொவிற்கு பறந்தனர்.
மூன்று ஜோடிகளும் வீட்டு வாசலில் நிற்க,இவர்களின் வருகை உணராத அவர்களின் மாமனார் சதாசிவம் தன் மனைவி மீனாட்ச்சியிடம் வழிந்துக் கொண்டிருந்தார். அதே வசனம் அங்கேயும் அரங்ககேற,மூலம் எதுவென்று பெண்களுக்குப் புரிந்துப் போயிற்று.
இவர்களின் விஷயம் அரசல் புரசலாய் அவர்களுக்கும் தெரியும் என்பதால்,வந்ததும் சதாசிவம் தன் மருமகள்களை அணைத்துக் கொண்டார். வேடிக்கையாய் பேசும் சுபாவம் கொண்டவராதலால் மாயாவும் அர்மியும் சிம்மியின் கல்யாணத்தின் போதே அவருடன் சகஜமாய் பேசத் தொடங்கியிருந்தனர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN