உன்னுள் என்னைக் காண்கிறேன் 14

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் – 14

ரம்யாவிடம் பேசி முடித்த வைத்த தேவ் பின் டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருக்கும் தன் நண்பனை அழைத்துத் தனக்கு வாட்ஸப்பில் வந்த புகைப்படத்தை அவனுக்கு அனுப்பி அதிலிருக்கும் பெண்ணின் உண்மையான பெயர் மற்றும் அவளைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் இன்று மாலைக்குள் தர வேண்டும் என்றான். கூடுதல் தகவலாக “படத்தில் இருக்கும் இருவரும் ஓரே காலேஜில் படித்தவர்களாக இருக்கலாம். அதனால் காலேஜில் இருந்து ஆரம்பித்தா உனக்கு ஈஸியாயிருக்கும். ஸோ பீ க்யூக் அண்டு டெல் மீ இன் தி ஈவினிங்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

பின்னர் தன் வேலைகளைச் சற்றுத் தள்ளி வைத்து விட்டு வீடு நோக்கிச் சென்றவன் தன் அறையில் முக்கியமான பேப்பர்கள் டாக்குமெண்டுகள் ஃபைல்கள் என்று வைக்கும் சீக்கரெட் அறையில் நுழைந்து மித்ராவைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ஃபைலை எடுத்துப் படித்துப் பார்க்க அதில் அவள் பிறப்பு, தாய் தந்தையர் ஊர், படித்தக் கல்லுரி முதல் அனைத்தும் இருந்தது. ஆனால் அவள் காதலித்த காதலன் பெயரோ அல்லது கணவன் பெயரோ இல்லை. அவளுக்கு விபத்து நடந்து உடலில் ஏதோ ஒரு குறைபாடு என்றோ எழுதியில்லை.

‘அவள் வாழ்க்கையில் அப்படி என்ன தான் நடந்தது? உண்மையில் அந்த ரம்யா சொல்வதுபோல் ஏதாவது நடந்திருக்குமா, அதுவும் திருமணத்தை வெறுக்கும் அளவுக்கு? இல்லை நான் போட்டிருக்கும் நாடகத்தைத் தெரிந்து கொண்டு என்னிடமிருந்து பணம் பறிக்க யாராவது முயற்சி செய்யறாங்களா? என்னவா இருக்கும்?

அப்படியேயிருந்தாலும் இதற்குப் பின்னால் யார் இருக்காங்க? உண்மையில் எனக்கான எதிரியா இல்லை மித்ராவுக்கான எதிரியா? அப்படி யோசிக்கும் போது தான் அன்று மித்ரா சொன்ன வார்த்தைகளும் அவள் சொன்ன பெயரும் ஞாபகம் வந்தது அவனுக்கு.

ஆமாம்… அன்று என்ன கேட்டா? ஷியாம் அனுப்பின ஆளா நீ என்று தான? அவன் தான் என் வாழ்க்கையை அழிப்பேனு சொல்றானா நீயுமானு தானே கேட்டா? ம்ம்ம்…. அப்ப அந்த ஷியாம் தான் அவள் வாழ்க்கையில் வந்திருக்கணும். அப்போது தான் அவள் வாழ்க்கையில் ஏதோ நடந்திருக்கு. எனக்குக் கிடைத்த தகவல்படி ஷியாம் என்ற பெயரோ அல்லது வேறு ஓர் ஆணோ அவள் வாழ்க்கையில் வந்ததாகயில்லையே? பிறகு எப்படி?

ஒரு வேளை அவள் கடைசி இரண்டு மாதம் எங்கிருந்தாள் என்று தெரியலைனு அவள் தாத்தா கூட தேடிட்டுயிருந்தார்னு இல்ல சொன்னாங்க. அதற்குப் பிறகு தானே கடலில் கரை ஒதுங்கி இவ என் கண்ணுல பட்டா. அப்போ அந்த இரண்டு மாதத்தில் தான் ஏதோ நடந்திருக்கு. அதுவும் அந்த ஷியாமால்! என்னவாயிருக்கும்? தன் மனதில் தோன்றிய சந்தேகங்களைப் போக்க முதல் படியாக மித்ரா இருக்கும் இடம் தேடி வந்தவன் அவள் காதுபடவே தொலைபேசியில் வேண்டும் என்றே “ஷியாம்! ஷியாம்!“ என்று கத்திப் பேச

முதல் முறை அந்தப் பெயரைக் கேட்டவள் முகம் வெளுத்துத் திடுக்கிட்டுத் தேவ்வைப் பார்த்தாள். இரண்டாவது முறை சொல்லும்போது வெளிப்படையாக முகத்தில் எந்த மாற்றமும் இல்லைனாலும் அவள் உடல் மட்டும் விறைத்து நிமிர்ந்தது. இதை எல்லாம் கண்டும் காணாதது போல் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.

பின் காரைத் தன் அலுவலகம் நோக்கி விட்டவன் மனதில் ஆயிரம் கேள்விகள். அதில் ‘ஆமா மித்ரா வாழ்க்கையில் எது நடந்திருந்தா எனக்கென்ன? அதேபோல் அவ கல்யாணம் செய்தா என்ன இல்ல கடைசிவரை கல்யாணமே செய்யாமல் போனாதான் என்ன? எவ்வளவோ வேலைகள் எனக்கு இருக்கும்போது அதை எல்லாம் விட்டுட்டு நான் ஏன் இவளைப் பற்றி ஆராய்ச்சி பண்ணனும்? ச்சேச்சே… ச்சேச்சே… நான் ஏன் இவளைப் பற்றியே யோசிக்கறேன்?

இவள் வாழ்க்கையாலும் எதிரிகளாலும் எங்க நான் போட்ட கல்யாண டிராமா வெளியே தெரியவந்து அதனால் என் கேஸ்க்கு ஏதாவது பிரச்சனை வருமோனு தான் யோசிக்கிறேன்’ என்று அவனே கேள்வி கேட்டு பதிலையும் அவனே சொல்லிக் கொண்டவன் பின் தன் வேலைகளில் மூழ்கினான். என்ன தான் தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொண்டாலும் முழுமையாக அதில் ஈடுபட முடியாமல் அவன் மனமோ அப்படி அவளுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் ‘இது சரிப்பட்டு வராது. நாம அவளிடமே உன் வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்ததுனு கேட்டுட வேண்டியது தான்’ என்ற முடிவுடன் மாலை இவர்கள் தோட்டத்திலிருக்கும் நேரம் பார்த்து வீட்டுக்கு வர, அங்கு மித்ரா தான் இல்லை. நித்திலாவும் ருத்ராவும் மட்டுமிருந்தார்கள். இவன் “மித்ரா எங்கே?” என்று கேட்க “அண்ணிக்கு மதியத்திலிருந்து தலைவலியாம். அதான் டேப்லெட் போட்டுட்டு படுத்துட்டாங்க. ஸோ டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நானும் ருத்ராவும் மட்டும் வந்துட்டோம்” என்றாள் நித்திலா.

‘என்னது தலைவலியா? அதுவும் மதியத்தில் இருந்தா? உண்மையாவே தலைவலியா இல்ல... ஒருவேளை நான் ஷியாம் பெயர் சொன்னதிலிருந்து தான் ஏதாவது யோசனையில் இருக்காளா?’ என்று நினைத்தான் தேவ். உண்மை தான் தேவ் நினைத்ததுபோல் மித்ராவும் அதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அன்று அவ்வளவு வாக்கு வாதத்திற்குப் பிறகும் தேவ் அவனைப்பற்றிய எந்த உண்மையையும் சொல்லாதது மித்ராவுக்கு அவன் மனைவியைப் பற்றிய தேடல் இன்னும் அதிகமானது. ஆனால் அதற்கான பதில் தான் இல்லை. ‘இங்கு இந்த அரண்மனையில் அவன் மனைவியின் புகைப்படம் ஒன்று கூடயில்லை. அவன் வாழ்க்கையில் அப்படி என்ன தான் நடந்தது என்று அவள் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாள்?

அவன் சித்தியோ சும்மா ஒன்றிரண்டு வார்த்தை பேசுவதோடு சரி. எங்கே தேவ்வின் மனைவிபற்றிய உண்மையை உளறி விடுவோமோ என்ற பயம்தான் அதுக்கு காரணமோ? மூச்சுக்கு முண்ணூறு தடவை என்னை அண்ணி அண்ணினு கூப்பிடும்போதே தெரியுது, நித்திலாவுக்கு ஒண்ணும் தெரியாதுனு. இதில் அண்ணாவ முதல் முறையா எங்க பார்த்தீங்க? எங்கெல்லாம் போனீங்கனு கேள்வி வேற!

வேலையாட்களிடம் இங்கு யாருக்கும் அனாவசியமான பேச்சே கிடையாது. அவர்கள் யாரும் யாரிடமும் வம்பு பேசுவதும் இல்லை.

அப்போ இதற்கு ஒரே வழி தேவ் மட்டும் தான். அவன் தான் சொல்ல வேண்டும் அவன் வாழ்க்கையில் என்ன நடந்ததுனு’ என்று பலவாறு யோசனையில் இருந்த நேரம் மதியம் உணவுக்கு வீட்டு வந்த தேவ் ஷியாம் என்ற பெயரை அவன் பேச்சில் இழுக்கவும் அவள் யோசனை வேறு திசையில் போனது.

‘ஒருவேளை இவன் உண்மையாவே ஷியாமுடைய கையாளா? இவனுக இரண்டு பேரும் சேர்ந்து தான் என் வாழ்க்கையைப் பிளான் பண்ணி நாசம் பண்றானுங்களா? அதில் இவனுக்கு என்ன லாபம் இருக்கு? இல்லையே... தேவ் தான் தனக்கு ஷியாமைத் தெரியாதுனு சொல்றானே. ஆமா இவன் அப்படியே அரிச்சந்திரன்! உண்மையைத் தான் சொல்வான் பாரு. ஆனா குழந்தை மேல சத்தியம்னு சொன்னானே, அப்ப அது பொய்யா? இல்லயே இன்று ஷியாம்னு பேசினானே, அப்ப வேற ஷியாமா?

ஐய்யோ… யோசிக்க யோசிக்க எனக்குத் தலையே வெடிச்சிடும் போலயிருக்கே. அப்ப இதற்கு என்னதான் செய்ய? என்று பலவாறு குழம்பியவள் தேவே அவன் வாயால் சகல உண்மைகளையும் சொன்னால் தான் உண்டு. ஆனால் சொல்லுவானா? சொல்லமாட்டானே. இனி இதற்கு என்னதான் வழி?’ என்று சிந்தித்தவள் தலைவலிக்கவே வழக்கமாக நித்திலாவுடன் தோட்டத்திற்குக் கூடச் செல்லாமல் ரூமிலேயே இருந்து விட்டாள். தேவ் வந்ததோ அவளைப் பற்றி விசாரித்ததோ எதுவும் அவளுக்குத் தெரியாது.

மித்ரா தேவ்வின் மனைவி பற்றியும், தேவ்வோ யார் அந்த ஷியாம் அவனால் மித்ராவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று இருவரும் அவரவர் யோசனையில் அன்றைய இரவைக் கடந்தனர். மறுநாள் எழுந்ததிலிருந்து தேவ்வின் மனதிலோ இறுக்கம். அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை. அன்று மாலைத் தன் கார் கம்பெனி ஊழியர்களோடு இருந்த மீட்டிங்கை அவன் பி.ஏவைப் பார்க்கச் சொல்லிவிட்டு ரம்யாவைப் பார்க்கப் போனான்.

இவனுக்கே பல தியேட்டர்கள், ரெஸ்டாரண்டுகள், சகல வசதிகளுடன் கூடிய மால்களும் இருந்தாலும் அங்கு வேண்டாம் என்று இந்த மாலில் சந்திக்க முடிவெடுத்தான். தன் டிடக்டிவ் நண்பன் மூலம் கிடைத்த தகவல்படி அவள் மித்ராவுடைய தோழிதான் என்று உறுதியானது. அப்படியானால் அவளுக்குச் சில உண்மைகள் தெரிய வாய்ப்பிருக்கிறது என்பதையும் உணர்ந்தான்.

இவன் சரியான நேரத்திற்கு அங்கு செல்ல அதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தாள் ரம்யா. தேவ் தூரத்தில் வரும்போதே யாருடா இவன்னு சைட் அடித்தவள் தேவ் அவள் டேபிளை நெருங்கவும் ஆ.. என்று வாயைப்பிளந்தபடி எழுந்து நின்றேவிட்டாள்.

“உட்காருங்க மிஸ் ரம்யா. நான் தேவேந்திரபூபதி உங்க பிரண்ட் மித்ராவோட ஹஸ்பண்ட்” என்றான் ஒரு அழுத்தத்துடன். அதில் தன் நிலைப்பெற்றவள் “நான் தான் அப்படி இல்லனு சொல்றேனே! அப்பறம் நீங்க தான் தேவேந்திர பூபதி என்றதும் நான் உங்ககிட்ட தான் பேசினேன் என்பதையும் எப்படி நம்பறது?”

“ரம்யா ம்ம்ம்… வெயிட் வெயிட். ஃபஸ்ட்டு என்ன சாப்பிடறீங்க என்ன ஆர்டர் பண்ண?” என்றான் தேவ் ஒரு சினேகப்பாவத்துடன். பின் சில சாட் ஐட்டங்களை ஆர்டர் பண்ணியவன்.

“நீங்க மித்ரா தாத்தாகிட்ட பேசிட்டு தான் நேற்று என்கிட்ட பேசி இருப்பீங்க. ஐயம் கரெக்ட்?” அவள் “எஸ்” என்று தலையசைக்க “என் ஆபிஸ் அட்ரஸ் வீட்டு அட்ரஸ் ரெண்டையும் அவர் சொல்லியிருப்பார். அது இது தானானு பாருங்க” என்று தன் விசிட்டிங் கார்டை எடுத்து அவள் முன் வைக்க.

அவள் ஏதோ சொல்ல வர “வெயிட் வெயிட்” என்று கூறி கை உயர்த்தித் தடுத்தவன் “இது மட்டும் போதாதுனு எனக்கும் தெரியும்” என்றவன் தன் கைப்பேசியிலிருந்து அவள் கைப்பேசிக்கு ரிங் கொடுத்து “இது தான் நீங்க பேசின நம்பர். வாட்ஸப்பை ஆன் செய்து நீங்க எனக்கு அனுப்பின போட்டோ அதில் டைம் டேட் செக் பண்ணிக்கோங்க” என்று தன் கைப்பேசியைக் காட்டினான்.

பின் தன் மொபைல் கேலரியிலிருந்து அன்று அமைச்சர் வீட்டு விழாவுக்குப் போன போது ருத்ரா மித்ரா என்று இருவரும் நிற்கும் படம் மற்றும் தேவ் ருத்ரா மித்ரா என்று இவர்கள் குடும்பமாக நிற்கும் படத்தையும் காட்டி அதிலிருக்கும் குழந்தை தன் மகள் என்று கூறினான்.

“இதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகமாயிருந்தா மித்ராவுக்கு நான் போன் போட்டுத் தரேன் நீங்களே பேசுங்க” என்று கூறித் தன் மொபைலை எடுக்க “வேண்டாம் வேண்டாம்” என்று பதறித் தடுத்தாள் ரம்யா. “நான் இங்க வந்ததோ உங்களை மீட் பண்ணதோ அவளுக்குத் தெரிய வேண்டாம்” என்றாள் ரம்யா.

உன் விருப்பம் என்பது போல் தோளைக் குலுக்கினான் தேவ். “தென் எனக்கு ஓர் அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு. அதை உங்களுக்காகத் தான் கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன். ஸோ நோ டைம் ஃபார் மீ. என்ன எதற்கு மீட் பண்ணனும்னு சொன்னீங்க?” என்று கரார்வாதி மாதிரி அவன் பேச.

அவளும் மித்ராவுடனான நட்பு எப்படி ஆரம்பித்தது என்பது முதல் ஷியாம் அவள் வாழ்க்கையில் எப்படி வந்தான் அதனால் அவள் வாழ்க்கையில என்ன நடந்தது சாகும்வரை அவள் தனிமை தான் என்ற முடிவை ஏன் எடுத்தாள என்பது வரை ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி முடித்தாள்.

அவள் முடிக்கும் வரை எந்த ஒரு இடையூறுமில்லாமல் முழுமையாகக் கேட்டவன், அவள் வாழ்கையில் எது நடந்திருந்தா எனக்கென்ன என்பது போல் உணர்ச்சிகளைத் துடைத்த முகம் போல் கல்லென அமர்ந்திருந்தான்.

“ஓ.கே நீங்கள் சொல்வது போல் உங்க ஃபிரண்ட் வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் நான் தெரிஞ்சிக்கணும்னு எந்த அவசியமுமில்ல. பை த பை நீங்கள் சொன்னது சரிதான். நாங்க இரண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கல. அவங்க தாத்தா ஜெயிலுக்குப் போகாமலிருக்கத் தான் நாங்க அப்படி நடிக்கிறோம்” என்று ஆரம்பித்து சகலத்தையும் கூறி முடித்தான்.

தனக்கு ஒர் இக்கட்டான தேவையால் தான் அவள் அப்படி நடிக்கிறாள் என்றதை மட்டும் சொல்லவேயில்லை. அனைத்தும் கூறியவன் இதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் அதனால் மித்ராவின் வாழ்க்கையும் அவள் தாத்தாவும் தான் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்து விட்டுச் சென்றான் தேவ். இதை எல்லாம் இவர்கள் தனி அறையில் பேசியதால் வெளியில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அவன் சென்ற பின் ரம்யா பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.

‘என்னது அவள் தாத்தாவின் பணத் தேவையைப் போக்க மித்ரா இப்படி நடிக்கிறாளா? ஏன் அவள் வாழ்வில் மட்டும் இப்படி அடுக்கடுக்கான சோதனைகள்? ஆமாம் அவள் அப்படி நடித்தாலும் இவருக்கு ஏன் மனைவியா நடிக்கணும்? அதை கேட்கலாம்னா அவளுக்கும் எனக்குமே எந்த சம்மந்தமும் இல்ல, இதில் அவள் வாழ்க்கையைப் பற்றி எனக்கென்ன இருக்கு என்பது போல் இவர் நடந்துக்கிறார்! நான் எவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லி இருக்கேன், ஏன் இப்படி எந்த ரியாக்ஷனும்யில்ல…’ என்று குழம்பித் தான் போனாள் ரம்யா.

ரம்யாவைச் சந்தித்து வந்த பின், தான் அன்றாடம் செய்யும் வேலைகளில் சில மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தான் தேவ். காலை உணவை மித்ரா ருத்ரா என்று அனைவரும் சாப்பிடும் நேரத்தில் கீழே இறங்கி வந்து அவர்களுடன் சாப்பிட்டான். மதியம் ருத்ராவை அழைத்து வரும் நேரம் பார்த்து ஸ்கூல் வாசலில் காத்திருந்து “இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன் குட்டி. அப்டியே என் குட்டிமாவைப் பார்த்துட்டுப் போகலாம்னு அப்பு இருக்கேன்டா” என்று மகளிடம் கூறி அவளுக்குத் தேவையானா ஏதோ ஒன்றை அவளிடம் நீட்டுவான்.

மாலை நேரத்தில் மூவரும் தோட்டத்திலிருக்கும் நேரத்தில் வேண்டும் என்றே வீட்டிற்கு வந்து தோட்டத்தை ஒட்டினாற் போல் இருக்கும் தன் அலுவலக அறையில் ஃபைபர் கிளாஸ் வழியாக அவர்கள் மூவரையும் பார்த்துக்கொண்டே தன் வேலைகளை முடித்தான். இரவும் அப்படித் தான்... நேரத்துடன் வந்து அனைவருடனும் சேர்ந்து உணவு உண்டான்.

ஒருநாள் தூக்கம் வரும்வரை அனைவரையும் படம் பார்க்க ஹோம் தியேட்டர் ரூமுக்கு அழைக்க, மித்ரா வர மறுக்க “அண்ணி ப்ளீஸ் அண்ணி! வாங்க... அண்ணா எப்போதும் வீட்டிலிருக்க மாட்டார். இன்னைக்கு இருக்கார் படம் பார்க்க வேற கூப்பிடுறார். ஸோ வாங்க எல்லோரும் ஒன்னா பார்க்கலாம்” என்று மித்ராவின் கையைப்பிடித்து நித்திலா கெஞ்சிக் கூப்பிட அப்போதும் மித்ரா தயங்க..

இவர்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்த தேவ் ஒரு வேக மூச்சுடன் மித்ராவை நெருங்கி “இப்ப எதுக்குத் தயங்குற? நித்திலா தான் கூட இருப்பாயில்ல? என்னமோ நீயும் நானும் ஏதோ தனியா இருக்கப் போற மாதிரி ஏன் சீன் போடற?” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,

ரொம்ப நாள் கழித்து தேவ்விடமிருந்து வரும் கோப வார்த்தைகளில் அவள் கண்களில் நீர் கோர்த்து விட்டது. அதை மறைக்க அவள் தலை குனிந்து நிற்க, உள்ளேயிருந்து ஓடி வந்த ருத்ரா மித்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு “அம்மா வாமா, உள்ளே வாமா... பாப்பா பத்தி உக்காந்து படம் பாக்கலாம்மா” என்று அவளை இழுக்க வேறு வழியில்லாமல் உள்ளே சென்றாள்.

படத்தைப் போட்டுவிட்டு ஆளுக்கு ஓர் ஸோஃபாவில் உட்கார, லைட் எல்லாம் அணைக்கப்பட்டு அனைவரும் திரையைப் பார்க்க தேவ்வுக்கு மட்டும் முடியவில்லை. என்னமோ வயிற்று வலியால் துடிப்பவனைப்போல் இருக்கையில் அமராமல் இப்படி அப்படியுமாக நெளிந்தான். கால்களைத் தரையில் ஊன்றிச் சற்று எம்பி எம்பி சீட்டில் உட்கார்ந்தான். தலையைக் கோதினான், ஸோஃபாவின் கைப்பிடியைக் குத்தினான்.

அவன் தான் படம் பார்க்க அழைத்தது. ஆனால் அதைப் பார்க்காமல் இவ்வளவும் செய்தான். இவையெல்லாம் வேறு எதற்கு? எல்லாம் மித்ராவின் முகம் இருட்டில் தெரியவில்லையாம்! பூனைக் குட்டியாக ஸோஃபாவில் நெளிந்தவன், ஓர் கட்டத்திற்கு மேல் முடியாமல் தன் சீட்டிலிருந்த அட்ஜஸ்மெண்ட் கண்ட்ரோல் மூலம் படத்தை நிறுத்தியவன் ஒண்ணும் தெரியாதது போல் அமர்ந்திருந்தான்.

பின்னே படம் பார்க்க அழைத்த அவனே படத்தைப் பார்த்தது போதும் எல்லோரும் எழுந்து வாங்கனா சொல்லமுடியும்? அதான் அப்படிச் செய்தான். ருத்ரா “என்னாச்சுபா?” என்று கேட்க “டி.வி.டி வொர்க் ஆகல குட்டிமா. என்ன பிராப்ளம்னு தெரியலையே. ஐய்யோ அப்ப படம் பார்க்க முடியாதா?” என்று அப்பாவியாகக் கேட்டவன் “சரி வாங்க, அப்ப எல்லோரும் கேம் ரூமுக்குப் போகலாம்” என்று ஒண்ணும் தெரியாதவன் போல் அழைத்தான் தேவ்.

எல்லோரும் கிளம்பி கேம்ரூம் வந்தார்கள்.

ஸ்னோ பௌலிங் விளையாட நினைக்க, மித்ராவால் அந்தப் பந்தைத் தூக்கவே முடியவில்லை. அதனால் சிறு பந்தை ருத்ரா நித்திலா மித்ரானு உருட்டி விளையாடினர்.

என்ன தான் தேவ் மட்டும் ஸ்னோ பௌலிங் விளையாடினாலும் பார்வை முழுக்க மித்ராவிடமேயிருந்தது. அவனுக்கே அவன் நடந்து கொள்வது சற்று விசித்திரமாகத் தானிருந்தது. ஒரு மணி நேரம் கடந்ததும் ருத்ராவுக்கு தூக்கம் வர எல்லோரும் குட் நைட் என்ற சொல்லுடன் கலைந்து சென்றனர். படுக்கையில் விழுந்த தேவ்வுக்குத் தூக்கம் தான் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தவன் பின் மீண்டும் தன் நடவடிக்கை மாற்றம் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

இப்படி ஏன் இருக்கிறோம் எதனால் இப்படி நடந்து கொள்கிறோம்? என்ற கேள்விக்கான பதில் தான் அவனுக்கே தெரியவில்லை. மித்ராவிடம் அவள் வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி கேள்வி கேட்டான் என்றால் அதுவும் இல்லை! முன்பு மாதிரி வம்பு இழுக்கவோ இல்லை குத்திக் காட்டுவதோ இல்லை. மாறாக அவளை வருடும் பார்வை! அவள் எங்கிருந்தாலும் தன் கண்ணெதிரே இருக்க வேண்டும் என்ற எண்ணம்!

ஏன் என்று யோசித்ததில் கிடைத்த பதிலைத் தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘இது எப்படி சாத்தியம்? இல்லை... அப்படி எதுவும் இருக்காது!’ என்று குழம்பியவனை மூன்றாம் நாள் அவனே இது தான் என்பதை பரிதவித்து துடிதுடித்து ஏற்றுக் கொள்ளும்படி நடந்தது அந்த சம்பவம்.

அந்த சம்பவம் நடக்கவிருக்கும் மூன்றாவது நாளான அன்று காலை எழுந்திருக்கும் போதே ‘இன்று வீட்டிற்கு வரவே கூடாது அவளைப் பார்க்கவே கூடாது. எனக்கு வேலை மீட்டிங்குனு எவ்வளவோயிருக்கு? அதை எல்லாம் விட்டுட்டு இவளைப் பார்க்க வந்தா, என்னமோ நான் அங்கு இருக்கிறேன்னு கூட நினைக்காமல் வந்தியா வா போனியா போ என்பது போல் இல்ல இருக்கா? இன்னைக்கு வரவே கூடாது அவளைப் பற்றி நினைக்கவே கூடாது’ என்ற முடிவுடன் எழுந்தான் தேவ். (பார்க்கறேன்டா உன் உறுதி எவ்வளவு தூரத்துக்கு இருக்குதுனு என்று பரிகாசம் செய்தது அவன் மனசாட்சி).
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 14
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN