உன்னுள் என்னைக் காண்கிறேன் 18

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் – 18

‘நிச்சயம் இப்படி ஓர் பொய்யானத் திருமணத்திற்குக் கூட மித்ரா சம்மதிக்க மாட்டா’ என்று தேவ்வுக்கு முன்பே தெரிந்து தான் இருந்தது. அதிலும் அவள் கடந்த கால வாழ்க்கையைப்பற்றித் தெரிந்த பிறகு அவனுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. அவள் சம்மந்தமே இல்லாமல் வலுக் கட்டாயமாக அவளை இழுத்து வைத்து அவள் கழுத்தில் தாலி கட்டவும் தேவ் தயார் தான்.

சட்டப் படி நாம் இருவரும் கணவன் மனைவி தான் என்பதற்குச் சாட்சியாக அன்று மருத்துவமனையில் அவளுக்கே தெரியாமல் அவளிடம் கையெழுத்து வாங்கின பேப்பர்ஸை எல்லாம் காட்டி அவள் சொல்வது போல் தேவ் ஓர் ஃபிராடு சந்தர்ப்ப வாதி நம்பிக்கை துரோகி என்றெல்லாம் அவள் சொல்வதற்கு,

“ஆமாம் நான் இப்படி தான்” என்று தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இருந்திருப்பான். அது பழைய தேவ்வாக இருந்திருந்தால் இப்படி செய்து இருப்பான். ஆனால் இப்போது இருப்பவனோ வேறு ஒருவனாச்சே… மனதில் முழுக்க முழுக்கக் காதலை அல்லவா சுமந்து இருக்கான்? அப்படி அந்தக் காதலைத் தந்தவளும் தன் மனைவியாக அழகு தேவதையாக தன் கண்ணெதிரே அல்ல இருக்கிறாள்? அதுவும் அவன் காதலை அறியாத அறிந்து கொள்ளவும் முடியாத ஓர் மங்கையாக.

அவன் காதலை இல்லையேன்றாலும் அவனையாவது அவள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் அவனுக்குக் கிடைத்த இந்த ஒரு வாரப் பயணத்தில் அவளிடம் பேசாமல் இருந்து புரிய வைக்க நினைத்தான். ஆனால் அப்படிச் செய்த அவனால் தான் அவளைப் பிரிந்திருக்க முடியவில்லை. அவன் போனது பவித்ராவுடைய விஷயமாக இருந்தாலும் அவனால் மித்ராவைப் பார்க்காமல் நினைக்காமல் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று பிரிந்தவன் இந்த ஒரு வாரமும் தான் தான் அவளின் அருகாமைக்கு ஏங்கித் தவிக்கிறோம் என்று உணர்ந்து கொண்டான். இப்போது எல்லாம் அவனின் இதயத் துடிப்பு என்றும் ‘மித்ரா மித்ரா’ என்றே துடித்தது. அதையும் அவன் நன்றாகவே அறிந்தான்.

அதனால் தான் தேவ் இதற்கு மேல் ஒரு வினாடி கூட அவளைத் தூர நிறுத்தி யாரோ மாதிரி பார்க்க முடியாது உடனே திருமணம் செய்ய முடிவு எடுத்தான். அவனுக்குப் பவித்ராவுடைய விஷயம் ஒன்றும் இல்லாமல் முடிந்த பிறகு இனி யாருக்காகக் காத்திருக்க வேண்டும்? மேற்கொண்டு அவனுக்குத் தடை தான் என்ன? ‘இருக்கே! தடை இருக்கே! அதுவும் வெளியிலிருந்து கூட இல்லை மித்ராவிடமிருந்து தானே வரும்?’ என்று நினைத்தது அவன் மனது.

‘எது எப்படியோ அவளுக்கு நிச்சயம் காதல் வந்து இருக்காது. அட்லீஸ்ட் என்னைத் தேடியாவது இருப்பா இல்ல…’ என்ற ஆசையில் அவன் யூ.எஸ்ஸில் இருந்து திரும்பி வர இங்கு இவளோ தேடினாள் தான்… ஆனால் அந்தத் தேடலில் தவிப்போ ஏக்கமோ என்று எதுவும் இல்லை. அதைப் பார்த்தவனோ ‘என்ன பொண்ணுடி நீ?’ என்று மனதால் திட்டியவன். ஏற்கனவே அவளைத் திருமணம் செய்ய நினைத்தவன் இதைப் பார்த்த பிறகு இன்னும் உறுதியாகவும் அவசரமாகவும் அதை செய்ய நினைத்தான்.

அந்த அவசரத்தில் அவன் செய்த தவறு அவளிடம் அன்றே சொல்லி அவள் சம்மதத்தைக் கேட்டது. அவள் சம்மதிக்க மாட்டாள் என்று தெரிந்து எப்படியாவது அவளைப் பேசி சம்மதிக்க வைத்து விடவும் இல்லையென்றால் அவளை மிரட்டி உருட்டி முன்பு போல் ஓர் இக்கட்டில் நிறுத்தி திருமணம் செய்ய இருந்தது தான்.

ஆனால் இன்று அவள் வீட்டை விட்டுப் போவாள் என்று கனவிலும் அவன் நினைக்கவில்லை எதிர்பார்க்கவும் இல்லை. அன்று அவள் காணாமல் போன போது மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அறியாமல் உணராமல் எப்படி அவன் மூளை வேலை நிறுத்தம் செய்ததோ அப்படி தான் இன்றும் இருந்தான் தேவ். அவள் சொன்னது மட்டும் இல்லாமல் தன் கண்ணெதிரேயே அவளுக்கான பொருட்களை அவள் எடுத்து வைக்கும் போதும் சரி அவன் மனது ஊமையாக அழுததே தவிர அவளைத் தடுத்து நிறுத்தவோ பேசிப் புரியவைக்கவோ முயலவில்லை. கண் இமைக்கவும் மறந்து அப்படியே ஸ்தம்பித்து நின்றவன் நின்றவன் தான்.

தன் பொருட்களுடன் கீழே வந்த மித்ரா தாத்தாவின் அறைக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்ப கண் விழித்த அவர் “என்னடா மித்துமா? நான் சாப்பிட்டேன்டா. நீ போய் சாப்பிடுமா” என்றார் அவள் சாப்பிடுவதற்குத் தான் அழைக்கிறாள் என்று நினைத்து.

“சாப்பிட இல்ல தாத்தா. எழுந்து கிளம்புங்க நாம இங்கிருந்து போகணும்” என்றாள் மொட்டையாக.

“என்ன போகணுமா? யாருக்கு என்ன ஆச்சி?” என்று பதறி எழுந்தவர் அவள் கையில் பெட்டியைப் பார்த்து இன்னும் பதற. “என்ன ஆச்சி? ஏன் பெட்டியுடன் வந்….”

“தாத்தா தாத்தா! முதல்ல கொஞ்சம் அமைதியா இருங்க. நீங்க எதுவும் எடுத்து வைக்க வேண்டாம். நான் எல்லாம் எடுத்து வைக்கிறேன். என்னை என்ன ஏதுனு கேள்வி கேட்காமல் என் கூட வாங்க”

“உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது பிரச்சனையா?” என்று அவர் நேரிடையாகக் கேட்க,

‘மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை! அவர் மாப்பிள்ளையே இல்லனு சொன்னா பிறகு அவன் என்னை நடிக்கக் கேட்டதையும் நான் நடிக்க வந்ததையும் சொல்லணும். அதனால் இப்போ எதுவும் வேண்டாம்’ என்று முடிவு எடுத்தவள்.

“இங்க பாருங்க தாத்தா நான் முன்பே சொன்ன மாதிரி என்னை ஏன் எதுக்குனு எல்லாம் கேட்காதிங்க கிளம்பச் சொன்னா உடனே கிளம்புங்க. ஆனா ஒன்று நல்லா யோசிச்சி முடிவு எடுங்க கடைசி வரைக்கும் உங்களுக்கு இந்தப் பேத்தி வேணும்னா உடனே என் கூட வாங்க இல்ல இந்த ஆடம்பர வாழ்க்கை தான் வேணும்னா இங்கையே உங்க மாப்பிள்ளை கூடவே இருந்துக்கங்க. நான் கிளம்பறேன் ஆனா என்ன தடுக்கணும்னு மட்டும் நினைக்காதிங்க” என்றாள் உறுதியாக.

“இல்ல மித்துமா நான் சொல்ற….”

“தாத்தா வேண்டாம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் கிளம்புங்க”

“இல்லடா நான் வேணா மாப்பிள்ள கிட்ட என்னனு பேசிப் பார்க்…”

“ஐய்யோ… தாத்தா நீங்க அவர் கிட்ட எதுவும் கேட்க வேணாம். நானே சொல்றேன். ஆனா இங்க இப்போ இல்ல என் கூட கிளம்பி வாங்க நான் சொல்றேன்” என்றவள் அவசர அவசரமாக அவருடையத் துணிகளை ஒரு பையில் எடுத்தவள் கதவு வரை சென்றுவிட அவரோ அசையாமல் அதே இடத்தில் நிற்பதைப் பார்த்து அவரிடம் வந்தவள் “நீங்க என் கூட வரலையா? அப்போ என்ன விட உங்களுக்கு உங்க மாப்பிள்ள தான் முக்கியம் இல்ல?

நான் என்னைக்குமே யாரும் இல்லாத அனாதை தானே…” என்று சொல்லி அவர் கையைப் பிடித்துக் கொண்டு அவள் கேவிக் கேவி அழ, அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுத் துடித்துப் போனவர். ‘ஏதோ பெரிசா நடந்து இருக்குனு மட்டும் தெரியுது. ஆனா என்னனு தான் தெரியல. கேட்டா இந்தப் பொண்ணும் சொல்ல மாட்டுது. சரி மாப்பிள்ள கிட்ட கேட்கலாம்னா அதுக்கும் விட மாட்டுது. இப்ப என்ன செய்ய?’ என்ற யோசனையிலே அவர் நிற்க.

‘தாத்தாவுக்குத் தன்னுடன் வர இஷ்டம் இல்லை’ என்று நினைத்தவள் “சரி தாத்தா நீங்க வர வேண்டாம். அப்ப நான் மட்டும் கிளம்பறேன். ஆனா ஒன்னு! நான் எங்க இருந்தாலும் உயிருடன் தான் இருப்பன். உங்களுக்கு எப்போ உங்க பேத்தி வேணும்ன்னு தோனுதோ அப்ப வாங்க நான் கிளம்பறேன்” என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவர் பையை அங்கேயே போட்டு விட்டுத் திரும்பிக் கதவு வரை செல்ல,

‘ஐய்யோ… உண்மையாவே இந்த புள்ள போகுதே!’ என்று பதறியவர் “நில்லுடா மித்துமா! நான் உன் கூடவே வறேன்” என்றவரிடம் நெருங்கியவள் அவர் பையையும் எடுத்துக் கொள்ள இருவரும் வெளியே வந்தனர்.

தாத்தாவை வெளியே இருக்கச் சொன்னவள் தேவ்வைப் பார்த்துப் பேசக் கூடாதுஎன்று எச்சரித்துவிட்டு நேரே வேதாவின் அறைக்குச் செல்ல.

“என்ன மித்ரா கையில பேக்குடன் வந்து இருக்க. ஊருக்குப் போகணுமா? யாருக்காவது உடம்பு சரியில்லையா? இப்பவே போகணுமா காலையில் போகக் கூடாதா?” என்று அவர் இயல்பாகப் பல கேள்விகளைக் கேட்க.

“இல்லமா நான் நிரந்தரமா ஊருக்குப் போறேன். இனி இங்க வரமாட்டேன் என்னை மன்னிச்சிடுங்க. நான் பாதியிலே இப்படி விலகிப் போகறதுக்கு” என்று கைகூப்பி மன்னிப்பு வேண்ட.

முதலில் ஒண்ணும் புரியாமல் இருந்தவர் சில நிமிடங்களுக்குப் பிறகே அவள் என்ன சொன்னாள் என்று உணர. “என்ன மித்ரா சொல்ற நிரந்தரமா போறியா? இது தேவ்வுக்குத் தெரியுமா? அவன் கிட்ட சொல்லிட்டியா?

“சொல்லிட்டேன்மா அவரும் என்னப் போகத் தான் சொன்னார்” என்று சாதாரணமாகச் சொல்ல,

“என்னது போகச் சொன்னானா? தேவ்வா? இல்லமா அவன் அப்படிச் சொல்லி இருக்க மாட்டான். நீ ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டனு நினைக்கிறேன். என் கூட வா நான் பேசுறேன். அப்ப தான் உனக்கு என்னனு புரியும்” என்றவர் அவள் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தவர் “தேவ் மேல தான இருக்கான் மித்ரா?” என்று கேட்க.

அவருடன் வெளியே வந்தவள் “நீங்க போய் பேசுங்கமா நான் வரல. நானும் தாத்தாவும் கிளம்பறோம்” என்றவள் அவர் கையிலிருந்து தன் கையை விடுவித்து அவரைத் திரும்பியும் பார்க்காமல் வெளியே சென்று விட.

தன் உடலையும் பொருட்படுத்தாமல் மகனிடம் ஓடியவர் அவன் மித்ராவின் அறையில் இருக்க “அப்பு மித்ரா வீட்டை விட்டுப் போறாப்பா” என்க அதில் சுயம் பெற்றவனோ,

“இல்ல சித்தி! அவ போக மாட்டா. அவ போய்ட்டா அதுக்கு அப்பறம் நான் இருக்க மாட்டேனு அவளுக்குத் தெரியும். அதனால் என்னையும் என் மகளையும் விட்டு அவ போக மாட்டா. சும்மா ஓரு பேச்சுக்கு சொல்றா சித்தி. நிச்சயம் இங்க தான் இருப்பா பாருங்க” என்று திடமாகக் கூறியவனிடம,

“இங்க பார், அவ மட்டும் இல்ல அவ தாத்தாவையும் கூட்டிகிட்டுப் போய்ட்டா. இப்போ தான் ரெண்டு பேரும் வீட்டை விட்டுப் போறாங்க” என்க.

‘அப்ப உண்மையாவே என்னையும் என் காதலையும் வேண்டாம்னு சொல்லிட்டுப் போய்ட்டாளா?’ என்று நினைத்தவன் “இதோ போறேன் சித்தி!” என்று அவசரமாக வெளியேற. “அப்பு, கார்ல போப்பா. அவங்க கொஞ்ச தூரம் போய் இருந்தா என்ன செய்வ?”

சரி என்றவன் வீட்டை விட்டு வெளியே வர,

கேட் தாண்டி ரோட்டில் சிறிது தூரம் தான் சென்று கொண்டிருந்தாள் மித்ரா. அவள் முன் வண்டியை க்ரீச்… என்ற சத்தத்துடன் நிறுத்தியவன் இறங்கி “என்ன இது புதுப் பழக்கம் மித்ரா வீட்டை விட்டுப் போறது? கிளம்பு நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றவன் கார் கதவைத் திறந்து விட,

அவள் அசையாமல் நிற்க அவன் கவனம் தாத்தா பக்கம் திரும்பியது. “தாத்தா நீங்க ஏன் நின்னுட்டு இருக்கீங்க? கார்ல ஏறுங்க. எங்கேயும் போக வேண்டாம், வாங்க வீட்டுக்குப் போகலாம்”.

“நாங்க எங்க வேணும்னாலும் போவோம். ஆனா உங்க கூட உங்க வீட்டுக்கு மட்டும் வர மாட்டோம். வழி விடுங்க நாங்க போறோம்” என்றாள் ஆவேசத்துடன்.

இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தாத்தா நீங்களே பேசி ஒரு முடிவு எடுங்க என்று நினைத்தவர் சற்று ஒதுங்கி நிற்க,

“இங்க பார் மித்ரா, நீ சொல்ற படி இப்போ இருக்குற மாதிரியே கடைசி வரைக்கும் இருப்போம். நான் கேஸை சமாளிச்சிக்கிறேன் கல்யாணம் வேண்டாம். மீதியை வீட்டுக்குப் போய் பேசுவோம் வா மித்ரா!” என்று அவன் அவசரப்படுத்த.

“இல்ல தேவ்! நீங்க என்ன சொன்னாலும் இனி நான் அங்க வரல. ஸோ வழிய விடுங்க” என்று இவள் அடம்பிடிக்க.

அதில் கோபம் கொண்டவன் “என்னடி நான் சொல்ல சொல்ல நின்னுட்டு இருக்க? உன்ன… வாடி!” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க , அந்த நேரம் பார்த்து இரண்டு போலீஸ்காரர்கள் அந்தப் பக்கமாகப் போக அதில் சற்று தைரியம் பெற்றவள் “கையை விடுங்க தேவ்! இல்லனா நான் அந்த போலீஸ்காரங்கள கூப்பிட வேண்டி இருக்கும்” என்று மிரட்டினாள்.

“போய் கூப்பிடுடி... உன் கையப் பிடிச்சதை அவங்க பார்த்துட்டுத் தான போனாங்க? நான் யார்னு அவங்களுக்குத் தெரியும். நீ என் மனைவினும் தெரியும். அதுதான் உன்கிட்ட எதுவும் கேட்காம போறாங்க” என்றான் கோபம் அடங்கிய குரலில். அப்போதும் அவள் தன் கையை விடுவித்துக் கொள்ள போராட அதை உணர்ந்தவன் தன் பிடியை இருக்க.

“இங்க பாருங்க, நான் உங்க மனைவியே இல்ல நீங்க என்ன நடிக்கத் தான் கூப்பிட்டு வந்திங்கனு எல்லா உண்மையையும் அவங்ககிட்ட சொல்லிடுவேன் என்று இவளும் சளைக்காமல் மிரட்ட.

“போய் சொல்லு... தாராளமா போய் சொல்லு. அதையும் எப்படி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும்” என்றான் பழைய தேவ்வாக.

அதில் கோபம் கொண்டவள் “வலுக்கட்டாயமா என்ன உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாலோ இல்ல போக விடாமல் தடுத்தாலோ அதற்குப் பிறகு நான் உயிரோடவே இருக்க மாட்டேன். இது சும்மா மிரட்டல் இல்ல உண்மையா செய்வேன்” என்று அவள் கர்ஜிக்க.

அவ்வளவு தான்... இதுவரை இருந்த பழைய தேவ் மறைந்து அவளிடம் உருகும் தேவ் வந்து விட்டான். மனதில் மிகுந்த வலியுடன் அவள் கையை விடுவிக்க அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் “வாங்க தாத்தா” என்றவள் அங்கிருந்து விலகிச் செல்ல, போகும் அவளையே கண் இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தவனோ தன் கைப்பேசியை எடுத்து விஷ்வாவிடம் சில தகவல்கள் கூறி அழைப்பைத் துண்டித்து பின் காரில் ஏறி அமர்ந்தவனோ.

“என்ன வார்த்தைடி சொல்லிட்ட, போடி போ... பழைய தேவ்வ காட்டினா நீ தாங்க மாட்டியேனு நினைச்சேன். ஆனா உனக்குப் பழைய தேவ் தான்டி சரி. பாரு இனிமே என்ன செய்யறனு” என்று வாய் விட்டுக் கூறியவன் அப்போதும் தன் மனது கேட்காமல் சற்று இடைவேளை விட்டு அவளைப் பின் தொடர.

அந்தப் பகுதி சற்று வசதி படைத்தவர்கள் இருக்கும் இடம் என்பதால் ஆட்டோவுக்காக தாத்தாவின் உடல் நிலை கருதி இவள் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்க அவளுக்கு எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த கார் இவள் அருகில் வந்ததும் வேகத்தைக் குறைத்து நிறுத்த.

அதிலிருந்து வேகமாக இறங்கிய விஷ்வா “என்ன மித்ரா இந்த நேரத்தில பேக்கோட? அதுவும் தாத்தா கூட நடந்து போய்ட்டு இருக்க? எங்க ஊருக்கா? அதுக்கு கார்ல போகலாம் இல்ல?” என்று அவன் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்க.

அவளோ தலை குனிந்து அமைதியாக நிற்க “என்ன தாத்தா ஏதாவது பிரச்சனையா?” என்று அவரிடம் கேட்க. என்னவென்றே தெரியாத அவர் என்ன சொல்வார் அவரும் மவுனம் காக்க மித்ராவே,

“எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா? இந்த நேரத்தில் பஸ்ஸோ டிரைனோ வேற வண்டியோ என்னால அரேன்ஜ் பண்ண முடியாது. தாத்தாவும் ரொம்ப சோர்வா தெரியறார். அதனால இன்னைக்கு ஒரு நைட் தங்க ஏதாவது ரூம் அரேன்ஜ் பண்ண முடியுமா? காலையில் நாங்க போய்டுவோம்” என்று அவள் திக்கித் திணற.

“இதுக்கு எதுக்கு வெளியில ரூம்? என் வீட்டுக்கு வாங்க. ஆனா நீங்க ஏன் வெளியில தங்கணும்? தேவ்வுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க மறுபடியும் அவளிடம் மவுனம். அதைப் பார்த்தவன் “எதுவும் கேட்கல! சரி வாங்க போகலாம். நீங்க காரில் உட்காருங்க தாத்தா” என்றவன் கார் கதவைத் திறந்து விட “இல்ல உங்க வீடுனா வேண்டாம், நான் வரல. அப்ப வேற ஏதாவது நான் அரேன்ஜ் பண்ணிக்கறேன்” என்றாள் அவசரமாக.

‘இவள் தேவ்வுக்காக யோசிக்கிறாள் என்பது புரிய “ஓ.கே ஓ.கே… அப்ப என் வீட்டுக்கு வேண்டாம். என் கெஸ்ட் ஹவுஸ் ஒன்னு இருக்கு. நீங்க அங்க தங்கிக்கோங்க. தயவுசெய்து என்னை வேற்று ஆளா நினைக்காம உன் அண்ணணா நினைச்சிக்கோ. உங்களுக்கு அங்க எந்த தொந்தரவும் கஷ்டமும் இல்லாமல் நான் பார்த்துக்கிறேன்.

நீ சொல்ற மாதிரி தாத்தாவும் ரொம்ப சோர்ந்து தான் இருக்கார். ஃபர்ஸ்ட் நான் அவர செக் பண்ணணும்” என்று கூற, மித்ரா எதற்கு அசைந்தாளோ இல்லையோ தாத்தாவின் உடல்நிலை என்ற வார்த்தையில் அசைந்தாள். வேறு வழியின்றி அரைகுறை மனதுடன் தாத்தாவுடன் அவன் காரில் ஏறினாள் மித்ரா.

விஷ்வாவின் காரில் மித்ரா ஏறி கார் கிளம்பிய பிறகே நிம்மதிப் பெருமூச்சுடன் தூர நிறுத்தி இருந்த தன் காரை எடுத்தான் தேவ்.

கெஸ்ட் ஹவுஸ் வந்தவுடன் தாத்தாவின் உடல் நிலையைப் பரிசோதித்தவன் “அவர் உடம்பு ரொம்ப சில்லிட்டுப் போயிருக்கு. அவருக்குக் குடிக்கக் கொஞ்சம் ஹாட் வாட்டர் எடுத்து வர முடியுமா?” என்று கேட்டு அவளை அனுப்பியவன் தாத்தாவிடம் திரும்பி. “உங்களுக்கு ஒண்ணும் இல்ல தாத்தா. சோர்வா இருக்கீங்க அவ்ளோதான். ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும். ஆனா நான் உங்கப் பேத்திக் கிட்ட நெஞ்சு வலிக்கான அறிகுறினு சொல்லப் போறேன் நீங்களும் அப்படியே சொல்லுங்க.

ஓர் ரெண்டு நாள் இங்க தங்குற மாதிரி மெய்ன்டென் பண்ணுங்க. அதுக்குள்ள அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனைனு தெரிஞ்சி சரி பண்ணப் பார்க்கறேன்” என்று அவரிடம் அவசரமாகக் கூற அவருக்குக் கண் கலங்கி விட்டது.

நெகிழ்ச்சியுடன் “தம்பி” என்றவர் அவன் கையைப் பிடித்துக் கொள்ள, “கலங்காதிங்க தாத்தா! அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. இதை மித்ராவின் அண்ணணா இருந்து நிச்சயம் நான் செய்வேன்” என்று உறுதியளித்தான் விஷ்வா.

அதற்குள் மித்ரா வந்து விட “அவருக்கு நெஞ்சுவலிக்கான அறிகுறி மாதிரி இருக்கு மித்ரா. நல்ல வேளை நான் கொஞ்சம் வேலையா தேவ்வைப் பார்க்க அங்க வந்தது நல்லதாப் போச்சி. இல்லனா அவர் உடல்நிலை ரொம்ப மோசமாகிப் போய் இருக்கும். ரெண்டு நாள் அவர் இங்கேயே ரெஸ்ட் எடுக்கட்டும்.

நான் அடிக்கடி வந்து பார்த்துக்குறேன். அதன் பிறகு ஊருக்குப் போங்க. இப்ப உங்களுக்கு வாட்ச்மேன் துணையா இருப்பார். நாளைக்குக் காலையில் வேலைக்கு ஆளுங்களை அனுப்பி வைக்கறேன்” என்று அவள் தடுத்துப் பேச வாய்ப்பே கொடுக்காமல் அனைத்தும் பேசி முடிக்க.

‘இன்னும் ரெண்டு நாளா! அதுவரைக்கும் இங்கையா?’ என்று அதிர்ந்தவள் பிறகு தாத்தா சோர்ந்து போய் கண் மூடி படுத்து இருப்பதைப் பார்த்து சரி என்று தலையாட்டியவள் “தாத்தாவுக்கு பயப்படும்படி ஒண்ணும் இல்ல தானே?” என்று கேட்க. தன் முடிவால் தான் தாத்தாவுக்கு இப்படி ஆனதோ என்ற குற்ற உணர்ச்சி அவளுக்கு.

“இப்ப எதுவும் சொல்ல முடியாது. இரண்டு நாள் கழிச்சு தான் சொல்ல முடியும்” என்று கூறி அவளுடனான அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டுக் கிளம்பினான் விஷ்வா.

சற்று தூரப் பயணத்திற்குப் பிறகு சாலையில் ஓரமாக வண்டியை நிறுத்தியவன் தன் கைப்பேசியில் தேவ்வுக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே அது எடுக்கப்பட.

“டேய் மாப்பிள்ள, நீ சொன்ன மாதிரியே மித்ராவக் கூட்டிட்டுப் போய் அவ தாத்தாகிட்டப் பேசிட்டேன். ஸோ டோன்ட் வொர்ரி” என்க.

“சரிடா விஷ்வா தாங்க்ஸ்டா”

“ஆனா இப்பவும் நல்லா யோசிச்சிக்கோ. இந்த அவசரம் உனக்குத் தேவையா? கொஞ்ச நாள் கழிச்சு மித்ராகிட்ட உன் காதல சொல்லி சம்மதம் வாங்கினப் பிறகு கல்யாணம் செய்துக்கக் கூடாதா? இல்லனா உன் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் எனக்குத் தெரியும்னு அவங்க கிட்ட உட்கார்ந்து பேசி அதற்குப் பிறகு முடிவு பண்ணக் கூடாதா?” என்று அவனுக்கு எடுத்துக் கூற.

“இல்லடா இதுல எதுவும் சரிவராது. அவளோட ஃபிரண்ட் அவளப் பத்தி சொன்னத வச்சிப் பார்த்தப் பிறகும் இந்த ரெண்டு மாதமா மித்ராவிடம் பழகினத வச்சியும் சொல்றேன். நான் முன்னாடியே சொன்னா நிச்சயம் அவ என் காதல ஒத்துக்க மாட்டா. அவ தாத்தாவ அவளால பார்த்துக்க முடியும் என்ற தைரியத்துல என் கண்ணுல படக் கூடாது என்ற முடிவுல ஊரை விட்டுப் போனாலும் போய்டுவா. அதே மாதிரி அவ வாழ்க்கையில் நடந்தத நான் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா அவளுக்கு ஏதோ நான் வாழ்வு கொடுக்கறதா தப்பா நினைச்சி இந்த உலகத்தையே விட்டுப் போனாலும் போய்டுவா.

ஸோ அவளுக்கு நான் பழைய தேவா எடுக்கற முடிவு தான் சரியா இருக்கும். டோன்ட் வொர்ரி விஷ்வா! என் காதலால் அவளை நிச்சயம் மாத்துவேன்டா” என்று நண்பனுக்கு நம்பிக்கை ஊட்ட,

“நீ சொல்ற மாதிரி நடந்தா சந்தோஷம்டா. சரி இப்ப சொல்லு மேற்கொண்டு நான் என்ன செய்ய?” என்று கேட்கவும் தேவ் அவனுக்கான வேலைகளைக் கூறவும் கேட்டு முடித்தவன் அழைப்பைத் துண்டித்தான்.

அன்றைய இரவு அவரவர் யோசனையில் கழிய மறுநாள் காலையில் அவள் தாத்தாவைப் பரிசோதிக்க வந்த விஷ்வா, “இன்னும் தாத்தாவுக்குச் சரியாகல மித்ரா. அதனால் இன்னும் இரண்டு நாள் இருக்கட்டும்” என்றான். பின் சிறிது தயங்கி ஏதோ சொல்ல வந்தவன் பின் சொல்ல முடியாமல் வேண்டாம் என்ற தலையசைப்புடன் விலகிச் செல்ல.

“என்ன டாக்டர் ஏதோ சொல்ல வந்திங்க பிறகு போறீங்க? தாத்தாவுக்கு ஏதாவது பெரிய பிரச்சினையா?” என்று இவள் பதற,

“தாத்தாவுக்கு கொஞ்சம் சிரமம் தான். பட் இப்ப வரைக்கும் பெரிசா இல்ல. ஆனா நான் சொல்ல வந்தது” என்று தயங்கியவன் பின் “நேற்று நீங்க கிளம்பினது ருத்ராவுக்குத் தெரியாது இல்ல? அதனால் நைட் முழுக்க சாப்பிடாம தூங்காம ஒரே அழுகையாம். சின்னக் குழந்தை இல்ல... அவள சமாதானப் படுத்த முடியலையாம்.

இதக் கூட தேவ் சொல்லல. வேதா ஆன்ட்டி தான் நீ எங்கனு தெரிஞ்சி உன் கிட்ட சொல்லணும்னு தேவ் கிட்ட கேட்டு இருக்காங்க. அவன் தெரியாதுனு சொல்லவும் என் கிட்ட கேட்டாங்க. நான் இப்ப அவங்க கிட்ட என்ன சொல்றதுனு தெரியல. நாளைக்கு ஏதாவது ஒன்னுனா ஏன் சொல்லலனு நீ கேட்கக் கூடாது இல்ல, அதான் சொல்றேன். ஆனா உனக்கு எந்த வகையிலும் டிஸ்டர்பன்ஸ் வராதுனு சொல்லி இருக்கேன் இல்ல? அதான் யோசிக்கறேன்” என்று அவன் தயங்க,
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN