உன்னுள் என்னைக் காண்கிறேன் 22

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் – 22



தன்னையே அடித்து விட்டு ஆறுதலைத் தேடி தன் மார்பிலேயே தஞ்சம் அடைந்த மித்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவ். ‘இப்போ இவளுக்கு ஏன் இந்தப் பயமும் பினாத்தலும்? இவள் மனதில் ஏன் அப்படி ஓர் எண்ணம் வந்தது? எதுவாக இருந்தாலும் முன்பே இவளிடம் மனம் விட்டுப் பேசி இருக்கணுமோ...



என்னனு? உன் வாழ்வில் நடந்தது எல்லாம் எனக்குத் தெரியும்னா இல்ல அந்த ஷியாமால மட்டும் இல்ல அவன் அனுப்பி வேறு யார் மூலமாகவும் உனக்கு எந்த தொந்தரவும் நெருங்காதுனா? இல்லைனா என் பழய வாழ்க்கையையும் ருத்ராவின் பிறப்பைப் பற்றியாவது சொல்லி இருக்கலாமோ? இதை எல்லாம் விட இவள் மேல் நான் கொண்ட காதலையாவது சொல்லியிருக்கலாமோ?!



ஆனால் இதோ இன்று எல்லார் முன்பும் என் காதலை நான் அவளிடம் சொல்லிட்டனே... அதையும் தான் புரிஞ்சிக்காம இப்படி எல்லாம் பேசி என்னை அடிச்சி வச்சிட்டா’ என்றெல்லாம் யோசித்தவன் அடித்த தன் கண்ணத்தை அவள் வலது கை கொண்டு வருடியவாறு “நீ அடிச்ச போது கூட எனக்குக் கோபம் வரலடி! மாறா உன் மனசுல இருக்குற வலி தான் எனக்குத் தெரிஞ்சது.



இன்று உனக்கே தெரியாமல் என்னிடம் ஆறுதலைத் தேடுறவ நாளைக்கு உன்னையே உணர்ந்து என் காதலால் உன் மனதில் உள்ள வலிகளை மறக்க நீ என்னிடமே தஞ்சம் அடைவடி. அதேபோல் எந்தக் கண்ணத்தில் உன் கை பதிந்ததோ அதே இடத்தில் உன் இதழ் பதிக்கிற நாளும் வெகு தூரத்தில் இல்லடி. நிச்சயம் நீ மாறுவ! என் காதல் நிச்சயம் உன்னை மாற்றும்” என்று வாய் விட்டுக் கூறிய தேவ் பின் குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளை இறுக்க அணைத்துக் கொண்டு கட்டிலின் தலைப் பகுதியிலிருந்து சற்றுக் கீழே இறங்கி அவளை அணைத்த படியே அவனும் தூங்கிப் போனான்.



நடுசாமத்தில் திடீர் என்று அவனுக்கு முழிப்பு வர எழ நினைத்தவனால் எழ முடியாத படி இரவு அவன் படுக்க வைத்தபடியே மித்ரா அவன் மார்பில் படுத்திருந்தாள். மணியைப் பார்தவனுக்கு அது விடியற்காலை மூன்று என்று காட்ட. “அடிப் பாவி! என்ன அடிச்சிட்டு என்னையே கட்டிப் பிடிச்சிகிட்டு கும்பகரணி மாதிரி இவ இந்த தூங்கு தூங்கறா. இவளே என்னக் கட்டிப்பிடிச்சித் தூங்கிட்டு என்னமோ நான் தான் இவளை ஏதோ செய்துட்ட மாதிரி காலையில் எழுந்த உடனே என்னை அந்த மிதி மிதிப்பா. எதுக்குடா அந்த மிதி எனக்கு?” என்று வாய் விட்டுக் புலம்பியவன் அவள் முழித்துத் தன்னைப் பார்ப்பதற்குள் அவளிடமிருந்து விலகி ஸோஃபாவில் சென்றுப் படுக்க நினைத்து அவளைத் தன்னிடமிருந்து விலக்கித் தலைக்கு ஒரு தலையணை வைத்து அவளைப் படுக்க வைத்தவன்.



பின் கட்டிலை விட்டு இறங்க, மித்ராவோ தன் தலைக்குக் கீழ் வைத்திருந்த தலையணை தான் விலகியது என்று நினைத்துத் தூக்கக் கலக்கத்திலே கையால் துழாவி இன்னோர் தலையனையை எடுத்து அதைத் தன் கழுத்துக் கீழே கொடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தூங்கினாள்.



அவள் செயலைப் பார்த்தவனோ அதில் வசீகரிக்கப்பட்டுத் திரும்பவும் அவளை நெருங்கி அவளை உற்றுப் பார்க்க அவள் ஒருக்களித்துப் படுத்திருந்ததால் தலையணையில் புதைந்திருந்த அவளுடையச் சிறிய இதழ் ஓரங்களைக் குனிந்து மிக மிக மெல்லியதாக தன் இதழால் ஒற்றியவன் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க. அவளோ எந்த சலனமும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். ‘இதுக்கு மேலையும் இங்கிருந்தா இவ எழுந்தா நிச்சயம் கடி தான் எனக்கு’ என்று நினைத்தவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் குனிந்து தான் கீழே போட்ட பனியனை எடுத்துப் போட்டுக்கொண்டு வந்து ஸோஃபாவில் படுத்து நல்ல பிள்ளையாகத் தூங்கினான் தேவ்.



அவன் நினைத்தது போலவே விடியற்காலை நாலரை மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்தவள் ‘தாம் எங்கு இருக்கிறோம்? நேற்று இரவு என்ன நடந்தது?’ என்று யோசித்தவள் பின் சுற்றும் முற்றும் தேவ்வைத் தேட அவனோ ஸோஃபாவில் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து டிரெஸ்ஸிங் ரூம் சென்று தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி வேறு உடைக்கு மாறி மீண்டும் படுக்கையில் வந்து படுத்தவளுக்கு மறுபடியும் கண்களில் கண்ணீர் வந்தது, தேவ்வைக் கெட்டவனாக நினைத்து!



அவன் தன்னைத் தப்பானக் கண்ணோட்டத்தில் பார்ப்பதாக நினைத்துக் கண்ணீர் விட்டாள் மித்ரா! அழுகையின் ஊடே இருந்தவள் அவளையும் மீறி விடிந்த பிறகு தான் திரும்பவும் தூங்க ஆரம்பித்தாள்.



காலையில் எழுந்த தேவ் அவள் அசந்து தூங்குவதைப் பார்த்து விட்டு ஆபிஸூக்குக் கிளம்பி கீழே சென்றவன் மித்ரா தானாக எழுந்திருக்கும் வரை அவளை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று கூறிச் சென்றான். மதியம் பதினொன்றரை மணி வாக்கில் தூக்கம் கலைந்த மித்ரா எழுந்து கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் படுத்திருக்க. இதுவரையுமே அவள் கீழே வரவில்லை என்று வேதா தேவ்வுக்குத் தகவல் சொல்ல, வேறு வழியில்லாமல் ருத்ராவை அனுப்பி அவளை எழுப்பச் சொல்ல அதன்படியே வள்ளி ருத்ராவை அழைத்துச் சென்றாள்.



உள்ளே ஓடிச் சென்று “அம்மா எழுந்து” என்று எழுப்ப. மித்ரா அசையாமல் இருக்க, “பாப்பா வந்துக்கேன்! டூ டேஸ் ஆச்சி நாம விளையாடி எழுந்துமா” என்று ருத்ரா அவள் கண்ணத்தை வருட. ‘உண்மை தான் அது! இரண்டு நாள்னு இல்லை, திருமணம் நடந்ததில் இருந்தே நான் குழந்தையுடன் சிரித்துப் பேசி விளையாடவில்லை. அவளுக்கான தேவைகளை கவனிப்பதோடு சரி’ என்று உணர்ந்தாள் மித்ரா.



‘ஆனால் இப்போதிருக்கும் மனநிலையில் குழந்தையுடன் பேசுவது கூட கஷ்டம்’ என்று நினைத்தவள் “அம்மாக்கு ஜுரம் குட்டிமா! அந்த ஜுரம் உனக்கும் வந்திடும். அதனால் வள்ளி கூட இரு, பிறகு அம்மா அப்புறம் வரேன்” என்று சொன்னவள் போர்வையால் முகத்தை மூடிக் கொள்ள அதைப் பார்த்த வள்ளியோ அவளை அழைத்துச் சென்று விட்டாள். அவர்கள் சென்ற பிறகு தன் முகத்திலிருந்த போர்வையை விலக்கி விட்டத்தைப் பார்த்துப் படுத்திருக்க சிறிது நேரத்திலே அறையின் உள்ளே நுழைந்தான் தேவ்.



வந்தவன் “என்ன மித்ரா, உடம்புக்கு என்ன பண்ணுது? ஃபீவராவா இருக்கு?” என்று கேட்டவன் அவளை நெருங்கி நெற்றியில் கை வைத்துப் பார்க்க. அவளோ முகத்தை வேறு புறம் திருப்பி “ஃபீவர்லாம் ஒண்ணுமில்ல. குட்டிமாக்காக சொன்னேன்” என்க.



“சரி, உடம்புக்கு வேற என்ன பண்ணுதுனாவது சொல்லு” என்று அவன் கரிசனமாகக் கேட்க



“ஐய்யோ.. எனக்கு ஒண்ணுமில்ல. ஒரு மனுஷி தூங்கக் கூடாதா?!” என்று அவள் கத்த..



“உன்ன யாருடி தூங்க வேணாம்னு சொன்னா? சாப்பிட்டுப் பிறகு படுத்து தூங்க வேண்டியது தான? காலையிலிருந்து நீ கீழேயே வரலையாம். சரி என்னமோ ஏதோனு வந்து பார்த்தா, இன்னும் மேடம் பெட்டை விட்டே எழுந்திருக்கல. இப்ப மணி என்ன தெரியுமா? மதியம் ஒண்ணு! இதுக்கு மேல நீ குளிக்க வேணாம் ஜஸ்ட் ஃபிரஷ் ஆகி வா, சாப்பிட போகலாம்” என்று அவளை அழைக்க அப்போதும் அவன் சொன்னது எதுவும் காதில் விழாத மாதிரி கண்களை மூடிப் படுத்திருந்தாள் மித்ரா.



அதைப் பார்த்தவன் “இங்க பாருடி, நான் அவ்வளவு பொறுமைசாலி கிடையாது. வீணா எனக்கு டென்ஷன் ஏத்தாத. எவ்வளவு வேலைகளுக்கு நடுவுல வந்திருக்கேன் தெரியுமா? ஸோ சீக்கிரம் எழுந்திரு” என்று அதட்ட. ‘உன் டென்ஷன் என்னை என்ன செய்யும்?’ என்பது போல் அவள் அப்படியே படுத்திருக்க, சிறிது நேரம் அவளையே பார்த்தவன் பின் அங்கிருந்து விலகிச் சென்றான்.



பின் கண்களைத் திறந்து பார்த்தவள் அவன் அங்கில்லை என்றவுடன் ‘அப்பாடா.. பயந்துட்டான்’ என்று நினைத்துக் கொண்டே நிம்மதியில் பெருமூச்சை விட, “அதெல்லாம் நான் போய்டனு நினைச்சி நிம்மதியால பெருமூச்சு விட்டுக்காத” என்று அந்த இடத்தின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு வந்தது அவன் குரல் பாத்ரூமின் உள்ளேயிருந்து! ‘அப்ப இவன் இன்னும் போகலையா?’ என்பது போல் மித்ரா திரும்பிப் பாத்ரூம் பக்கம் பார்க்க, வலது கையில் பேஸ்டுடன் கூடிய பிரஷ் இடது கையில் ஒரு சிறு வாளி மற்றும் அவன் இடது தோளில் முகம் துடைக்கும் துவாலையுடன் அவன் அவளை நெருங்க,



அந்த நேரத்திலும் அவனை அந்தக் கோலத்தில் பார்த்தவளுக்கோ அவளையும் மீறி சிரிப்பு வந்தது. பின்னே? காலையில் மீட்டிங்கிற்காக போட்ட கோட்டு சூட்டில் இப்போது அப்படியே வந்து நிற்க, அந்த உடையில் அவனைப் பார்க்கவும் அவளுக்கு ஓர் சினிமா படக் காட்சி தான் நினைவில் வந்து அவள் முகத்தில் சிரிப்பாய் தவழ்ந்தது. கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கியவள் ‘இவன் ஏன் இப்போது இதை எல்லாம் எடுத்து வரான்?’ என்று அவள் அவனைக் கேள்வியாய் பார்க்க.



அவனோ பக்கெட்டைக் கீழே வைத்து விட்டு பிரஷ்ஷையும் டேபிளில் வைத்தவன் பிறகு கட்டிலில் அவள் முகத்தருகே அமர்ந்து, அவள் தோள்களைப் பற்றித் தூக்க முயல “ஏய்… ஏய்… ஏய்…. என்ன செய்ற நீ?” என்று அவள் கத்த “பார்த்தா தெரியல? உனக்குப் பல் தேச்சி வாய் கழுவி முகம் துடைச்சி விட்டுப் பிறகு உனக்கு சாப்பாடு ஊட்டப் போறேன். இப்படியே என் மார்பு மேல் சாய்ந்து இருந்த படியே இதையெல்லாம் நான் செய்த பிறகு நீ மறுபடியும் படுத்து தூங்கு” என்றவன் அதைச் செயல்படுத்தும் விதமாக ஒரு கையால் அவள் தோள்களைப் பற்றித் தூக்கி மற்றோர் கையால் அங்கு டேபிளில் இருந்த பிரஷ்ஷை எடுக்க.



அவனை ஒரே மூச்சாகத் தள்ளி விட்டு எழுந்தவள் கட்டிலில் சற்று தூரப் போய் அமர்ந்து “நிறுத்து நிறுத்து நிறுத்து... இப்ப என்ன உனக்கு? நான் பிரஷ் பண்ணனும் அவ்வளவு தான? நானே அதை எல்லாம் செய்துட்டு கீழ வந்து நானே சாப்பிடறேன். ஐயா சாமி, இப்ப நீங்க இந்த இடத்த விட்டுக் கிளம்புங்க” என்று கூறிக் கையெடுத்து ஒரு பெரிய கும்பிடாகப் போட்டவள் கட்டிலிலிருந்து இறங்கி பாத்ரூம் பக்கம் செல்ல நினைத்தவள் அப்போதும் அவன் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருப்பதைப் பார்த்து.



“என்ன? நான் தான் வரேனு சொல்றேனே, கிளம்புங்க” என்று அதட்டினாள். அவனோ “நீ ஃபிரஷ் ஆகிட்டு வா, நான் இங்கையே இருக்கேன்” என்றான் அசையாமல். “நான் தான் சொல்றேன் இல்ல? வரேனு! இப்படி எல்லாம் செய்த நான் போக மாட்டேன்” என்று கூறியவள் மறுபடியும் கட்டிலில் அமர. “இங்க பாருடி, ஒரு அவசர வேலைக்கு இடையில நான் இப்போ வந்திருக்கேன். நீ சீக்கிரம் குளிச்சிட்டு வந்தா நாம ரெண்டு பேரும் சாப்பிட்ட பிறகு நான் போய்டுவேன்.



இன்னும் ஏதாவது வம்பு பண்ணா உன்ன அலேக்கா தூக்கிட்டுப் போய் பாத்ரூமில் உட்கார வச்சி குளிக்க வைக்கவும் நான் தயங்க மாட்டேன். உனக்கு வசதி எப்படி?” என்று அலட்சியமாகக் கேட்டவன் தான் அணிந்திருந்த கோட்டைக் கழற்ற, “ஐய்யயோ… வேண்டாம் வேண்டாம்...” என்று பதறியவள் தன் துணிகள் கொண்ட பையை எடுத்துக்கொண்டு ஒரே தாவாகத் தாவி பாத்ரூமுக்குள் சென்று மறைந்தாள் மித்ரா. குளித்தவள் சற்றுத் தயங்கித் தயங்கியே வெளியே வர..



தேவ்வோ தன் முதுகுப் புறத்திற்கு ஒரு தலையணையைக் கொடுத்துக் கண்களை மூடிக் கட்டிலில் சாய்ந்து அவள் வந்தது கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தான். அவனை நெருங்கியவள் அவனை எப்படி அழைப்பது என்று யோசித்து பிறகு “க்கும்..” என்று தொண்டையைக் கனைக்க. அந்தச் சத்தத்தில் கண்ணைத் திறந்தவன் அவளைப் பார்த்து, “என்ன குளிச்சிட்டியா? சீக்கிரம் வா போகலாம்” என்றவன் அவளுக்கு முன்பாக நடக்க அவனைப் பின் தொடர்ந்தாள் மித்ரா.



இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட, தனக்கு வேலை இருப்பதாகக் கூறி சீக்கிரம் சாப்பிட்டு விட்டு எழுந்தவன். “நீ மெதுவா சாப்பிட்டுப் பிறகு உன் தூக்கத்த கண்டினியூ பண்ணு” என்று ஓர் கோனல் சிரிப்புடன் அவளைச் சீண்டியவன் பின் எழுந்து கை கழுவியவன். மித்ரா குனிந்த தலை நிமிராமல் சாப்பிடவும், அவளை நெருங்கி அவள் முகம் பார்த்த மாதிரி டைனிங் டேபிளில் சாய்ந்து நின்றவன் மீண்டும் அவளைச் சீண்டும் பொருட்டு அவள் கழுத்தில் சுற்றி இருந்த துப்பட்டாவைத் தன்புறமாக இழுத்து அதில் கை துடைக்க.



அந்தச் செயலில் விதிர் விதிர்த்துப்போய் அவள் அவன் முகம் பார்க்க, தன் ஒற்றைக் கண்ணை அடித்து “இப்போ தான்டி நீ என் செல்ல பொண்டாட்டி!” என்று கூறியவன் இறுதியாக உதட்டைக் குவித்து ஒரு பறக்கும் முத்தத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான் தேவ். அவ்வளவு தான்... அவனுடைய இந்தச் செயலில் கோபத்தின் உச்சிக்கே சென்றாள் மித்ரா! பாதி சாப்பாட்டிலேயே எழுந்து நேரே அறைக்கு வந்தவள், “ராஸ்கல்! எவ்வளவு திமிர் இருந்தா என்னப் பார்த்துக் கண் அடிச்சதும் இல்லாம ஃபிளையிங் கிஸ் வேற கொடுப்பான்?! கட்டையால அந்த வாய் மேல நச்சு நச்சுனு நாலு போடணும்!” என்று கருவினாள்.



“ஐயா அவ்வளவு சந்தோஷத்தில இருக்கார். அதனால் தான் இந்த ஆட்டம் ஆடுறார். எப்போதுமே அவனே தான் ஜெயிக்கறான்? நான் தோத்துகிட்டே வரேன்! ஜெயிச்சதுனு இல்லாம, பாருடி பாரு நான் ஜெயிச்சிட்டனு சொல்லாம சொல்லி என்னப் பார்த்து சிரிக்கறான்” என்று உள்ளுக்குள் நினைத்ததை எல்லாம் யாரும் இல்லாத தனி அறையில் சத்தமாகவே கொட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா. இதெல்லாம் சாதாரணமாக கணவன் மனைவிக்குள் நடக்கும் சுவாரசியமானச் சின்னச் சின்ன சீண்டல்கள் என்று அவள் நினைக்கவில்லை.





அவள் தான் தேவ்வைத் தன் கணவனாகவே நினைக்கவில்லையே?! அவனிடம் ஒட்டி ஆறுதல் தேடியது, அவனை ஓர் தாயாக நினைத்து! அவன் மற்றவர்கள் முன் அசிங்கப் படக் கூடாது என்று நினைத்தது, ஓர் தோழனாக நினைத்து! தன்னை மறந்து இப்படி எல்லாம் அவனைப் பற்றி நினைப்பவள், ஆனால் மறந்தும் காதலனாகக் கூட வேண்டாம் கணவனாகக் கூட நினைக்கவில்லை. அவளைச் சீண்டும் போது கோப மிகுதியில் அவனை ஓர் அரக்கனாகவே நினைத்தாள்.



இப்போது அவளுக்கு இருக்கும் மனநிலை, எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ருத்ரா அவளுக்கு வேண்டும். அதற்காகத்தான் கொஞ்சமாவது அவனுக்கு விட்டுக் கொடுத்துப் போக நினைக்கிறாள். தேவ்வைச் சந்திக்கும் முன் அவள் எதிர்காலத்தைப் பற்றி முன்பே எடுத்த முடிவு ‘வேறு ஓர் வாழ்வைப் பற்றி நினைக்காமல் கடைசி வரை தனியாகவே இருந்து யார் ஆதரவும் அற்ற பெண் குழந்தையை சிறு வயதில் இருந்தே தத்து எடுத்து வளர்த்து உண்மையை மறைத்து தான் பெற்ற பெற்ற குழந்தையாகவே வளர்க்க வேண்டும்’ என்பது தான் அது...



அதையே வாழ்வின் குறிக்கோளாக எண்ணி வாழ்ந்த மனநிலையில்தான் தேவ்வைச் சந்தித்தாள். அதுவும் இருவருடைய வாழ்விலும் சிக்கல்கள் இருக்க, அதைப் போக்க வேறு வழியில்லாமல் அவன் வாழ்வில் தற்காலிகமாக இணையச் சம்மதித்தாள். சிறிது காலம் கூட இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டா வெறுப்பாகத் தேவ் வீட்டிற்கு வந்தவள், ருத்ராவின் பாச மழையில் நனைந்தபின் தன் வாழ்வின் பற்றுக்கோளாக வசந்தமாக ருத்ராவையே ஆதாரமாக மாற்றிக்கொண்டாள்.



எங்கேயோ ஏதோ ஓர் குழந்தைக்குப் பதில் இன்று அம்மா என்று தன் மடி தேடி ஓடி வரும் ருத்ராவையே தன் மகளாக மனதில் நினைத்து எதிர்கால கனவுகளில் ஒன்ற ஆரம்பித்தாள். அவள் மனதில் இவ்வாறான எண்ணங்கள் தினமும் ஓடிக்கொண்டிருக்க தேவ்வின் சீண்டலும் சிரிப்பும் அவளுடைய எண்ண ஓட்டத்தையும் நிம்மதியையும் குலைத்தது.



அவளைப் பொறுத்தமட்டில் தேவ் வேண்டாம், ஆனால் அவன் பெற்ற மகள் மட்டும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் அதில் அவளுடைய சுயநலம் மட்டுமே இருக்கிறது என்பதை அவள் உணரவில்லை. ருத்ராவைப் பிரிந்து தேவால் மட்டும் எப்படி வாழ முடியும் என்ற கோணத்தில் யோசிக்க இயலாத மனநிலையில் இருந்தாள்.



இப்போது கூட அவன் சீண்டலுக்குப் பதில் அடி கொடுக்க வேண்டும் என்றே யோசித்தாள். ‘என்னை வெறுப்பேத்தற தேவ்வ பதிலுக்கு பத்து மடங்கா நான் கடுப்பேத்தனும்! அதுக்கு ஏதாவது செய்யணுமே? அப்படி நான் செய்யறதால அவனுக்கு என் மேல் அலட்சியமும் கோபமும் வரணும், அதேசமயம் எனக்கு தாத்தாகிட்ட இருந்து எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது’ என்று பலவாறு யோசித்து இறுதியாக அந்த முடிவை எடுத்தாள் மித்ரா!



தேவ் எப்போதும் அவளிடம் அடிக்கடி சொல்வது, ‘ஸ்கூட்டியை எடுத்துத் தனியா எங்கையும் போகாத’ என்று தான்! அதுக்கு அவன் சொன்ன காரணம் தொழில் முறையில் அவனுக்கு நிறைய எதிரிகள் இருப்பதாகவும் அதே போல் கேஸ் விஷயமா பவித்ராவின் வழியிலும் அவனுக்கு எதிரிகள் இருப்பதாலும் அவள் உயிருக்கு ஆபத்து என்பதால் அவளைத் தனியே போக வேண்டாம் என்று சொல்லியிருந்தான் தேவ்.



இதில் அவன் தன் உயிருக்குக் கொடுக்கும் அக்கறையை கேஸ்சுக்காக என்று எடுத்துக்கொண்டாள் மித்ரா. கோபக்காரிதான் பிடிவாதக்காரிதான் வாயாடிதான். ஆனால் அடங்காப்பிடாரியோ மற்றவர்களை மதிக்கத் தெரியாத அகம்பாவம் பிடித்தவளோ இல்லை மித்ரா! ஆனால் இன்று அவள் குணத்திற்குச் சில எதிர் மறைச் செயல்களை அவள் செய்ய வேண்டியிருக்கிறது. அவன் பேச்சையும் மீறி இன்று அந்த வண்டியை எடுத்துக் கொண்டுதான் போகப் போகிறாள்.



ஆனால் அதை அவனுக்கு யாரோ சொல்லித் தெரிவதை விட தானே அவனிடம் சொல்லி விட்டுப் போவது என்று முடிவு எடுத்தாள்! ‘அப்ப தான் டென்ஷன் தலைக்கு ஏறி கத்தோ கத்து என்று கத்தி ஒரு வழியாவான்’ என்று நினைத்தவள் அவனைச் சீண்டிப் பார்ப்பதற்கு ஓர் வழி கிடைத்து விட்டது என்ற உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாள். மதியத்தில் வேதா சற்று தூங்கும் நேரத்தைக் கணக்கில் கொண்டு அமைதி காத்தவள் நித்திலா அறைக்குச் சென்று அவள் எப்போதும் வைக்கும் இடத்தில் இருந்து ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக்கொண்டு வள்ளியிடம் மட்டும் வெளியே போவதாகவும் அத்தை எழுவதற்குள் வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றாள்.



சிறிது தூரம் சென்றவள் ஒரு ரூபாய் போன் கண்டதும் வண்டியை நிறுத்தி தேவ் நம்பருக்கு அழைத்தவள் அவன் எடுத்ததும் தன் பெயரைக் கூடச் சொல்லாமல் “ஹலோ! சும்மா சும்மா என்னச் சீண்டி உங்க இஷ்டத்துக்குப் பணியவச்சிகிட்டு இருக்கீங்க இல்ல? இப்போ உங்க பேச்சையும் மீறி வண்டியை எடுத்துட்டுத் தனியா வெளிய வந்துட்டேன். இப்போ என்ன செய்யப் போறீங்க? இப்ப கூட வழியில நின்னு தான் பேசிட்டு இருக்கேன். உங்க நல்ல நேரம் நான் திரும்ப வீட்டுக்கு வந்துட்டா, பிறகு எல்லாத்தையும் நமக்குள்ள பேசித் தீர்த்துக்கலாம். இல்ல என் நல்ல நேரப்படி உங்க எதிரிகளால் என் உயிருக்கு ஏதாவது நடந்து நான் வர முடியாமப் போய்ட்டா வேறு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி உங்க கேசை முடிச்சிக்கங்க! ஆல் தி பெஸ்ட் மை பாய்!” என்று கூறி அவன் பேச இடம்தராமல் அழைப்பைத் துண்டித்தாள் மித்ரா!



காரை ஓட்டிக் கொண்டிருந்ததில் தேவ்வுக்கு அழைப்பு வர அட்டன் செய்ய, அவன் காதில் இருந்த ப்ளூ டூத்யில் கேட்டது ஓர் பெண் குரல்! முதலில் யாரோ என்று நினைத்தவன் பிறகு அது மித்ராவின் குரல் என்று தெரிந்ததும் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி அவள் பேசியதை முழுவதுமாகக் காதில் வாங்கியவன் பதிலுக்கு “ஏய்.. ஏய்.. மித்ரா! மித்ரா!” என்று கத்த அங்கு அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.



இது சும்மா அமர்ந்திருக்கும் நேரம் இல்லையென்று தெளிந்தவன் அவள் அதிக தூரம் போய் இருக்க மாட்டாள் என்ற முடிவில் வீட்டிற்குச் செல்லவிருக்கும் சாலையில் தன் வண்டியை இடது பக்கமாகத் திருப்பினான். இருப்பினும் தான் மட்டுமே அவளை சேஸ் செய்வதை விட எதற்கும் விஷ்வாவிடமும் சொல்வோம் என்று எண்ணி அவனை செல்போனில் அழைத்தான்.



தேவ்விடம் பேசி விட்டு வந்து வண்டியை எடுத்தவள் மனதில் ஓர் துள்ளலுடன் தூர இருந்த சிறுவர்களுக்கான பூங்காவில் நிறுத்த.



இதைத் தற்செயலாக அந்தப் பக்கமாக தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்த விஷ்வா பார்த்து விட்டான். ‘மித்ரா மாதிரி இருக்கே! இந்த இடத்தில அதுவும் இந்த நேரத்தில ஸ்கூட்டில வந்து இருக்காங்க! என்னவா இருக்கும்?’ என்று யோசித்தவன் ‘சரி மித்ராவிடமே கேட்டு விடுவோம்!’ என்ற முடிவுடன் காரை விட்டு இறங்க நினைத்த நேரத்தில் அவன் கைப்பேசிக்கு தேவ்விடமிருந்து அழைப்பு வர அட்டன் செய்து அவனைப் பேச விடாமல் இவனே பேசினான்.



“என்னடா மச்சான், என்ன விஷயம்? மித்ரா கையில தனியா வண்டியக் கொடுத்து அனுப்பி வச்சிருக்க. அவ்வளவு தைரியசாலியா மாறிட்டியா நீ? இல்ல துணைக்கு நித்திலாவையும் ருத்ராவையும் அனுப்பி வச்சிருக்கியா? அப்ப அவங்க பார்க் உள்ள இருக்காங்களா?” என்று அடுக்கடுக்காக கேட்டுக் கொண்டே போக விட்டால் இன்னும் பேசி இருப்பான் விஷ்வா!



அதற்குள் தேவ், “டேய்... டேய்... இப்போ என்ன சொன்ன? மித்ராவைப் பார்த்தியா? எங்க எப்படி எந்த இடம்?” என்று அவன் பதட்டமாக வினவ, ஏதோ சரியில்லை என்று உணர்ந்த விஷ்வா பின் எந்தக் கேள்வியும் கேட்காமல் அதற்கான பதிலைச் சொன்னான். அனைத்தும் கேட்டவன் சற்று முன் மித்ரா தனக்குப் போன் பண்ணி சொன்ன அனைத்தையும் ஒப்பித்தவன் “ப்ளீஸ்டா மச்சி! அவளுக்கே தெரியாம அங்கையே இருந்து அவ வேற எங்க போறா என்ன செய்றானு கொஞ்சம் பார்த்துட்டே இரு. அதுக்குள்ள நான் அங்க வந்தர்றேன்!” என்று கூறி அவன் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான் தேவ்.



‘அடேய்.. இவன் வேற இங்கையே இருக்க சொல்லிட்டான். எனக்கு என்ன வேலை வெட்டியே இல்லனு நினைச்சிட்டானா? ஊர்ல அவனவன் ஆயிரம் ஃபிரண்ட்ஸ் வெச்சிகிட்டு சந்தோஷமா இருக்கானுங்க! ஆனா ஒரே ஒரு ஃபிரண்ட் இவன வெச்சிகிட்டு நான் படற பாடு இருக்கே! ஐய்யயோ…. முடிலயடா சாமி! இவன் லவ்ஸ்கு நடுவுல அப்பப்ப நான் வேற வந்து மாட்டிக்கிறேன்! என்ன பண்றது? நண்பேன்டா!’ என்று வாய் விட்டுப் புலம்பினாலும் நண்பன் சொன்னதைச் செய்தான் விஷ்வா.



பார்க் உள்ளே சென்ற மித்ரா குழந்தைகளுக்கான சறுக்கு மரம் சீஸா ஊஞ்சல் என்று விளையாடியவள் பிறகு எதிரிலிருந்த ஐஸ்கிரீம் பார்லரில் தனக்குப் பிடித்த ஃபிளேவரை வாங்கிச் சாப்பிடாள்.



இவற்றை எல்லாம் காரில் அமர்ந்த படி பார்த்துக் கொண்டிருக்கும் போதே விஷ்வாவை அழைத்த தேவ் “இப்போ அவ எங்கடா இருக்கா?” என்று கோபத்துடன் கேட்க. பார்க்கில் நடந்தது முதல் ஐஸ்கிரீம் பார்லர் வரை விஷ்வா சொல்ல “கொஞ்ச நேரம் அங்கேயே இரு இதோ வந்துட்டே இருக்கேன்” என்றான் தேவ்.



“டேய் நான் ஒரு பேமஸ் டாக்டர்! அமெரிக்காவுல ஸ்பெஷல் கோர்ஸ் படிச்சவன்! என்னப் போய் மித்ராவுக்கு வாட்ச் மேன் ஆக்கிட்டியேடா…” என்று விஷ்வா மீண்டும் புலம்ப, மறுமுனையில் சத்தமே இல்லை. அதற்குள் அழைப்பைத் துண்டித்து இருந்தான் தேவ்! ரசித்து ஐஸ்கிரீமைச் சாப்பிட்ட மித்ரா வெளியே வந்து பார்க்கின் ஓரம் நிறுத்தியிருந்த தன் வண்டியை நெருங்க ‘க்ரீச்ச்..’ என்ற சத்தத்துடன் அவள் முன் தன் வண்டியை நிறுத்தினான் தேவ்.



முதலில் யாரோட கார் என்று பார்க்க நிமிர்ந்தவள் அந்தக் காரிலிருந்து தேவ் இறங்கவும் தன்னையும் மீறி பயத்தில் கண்கள் விரிய உடல் நடுங்க வண்டியின் சாவி துவாரத்தில் சாவியைக் கூடப் போட முடியாமல் அவள் கை வெளிப்படையாகவே நடுங்குவதைப் பார்த்தவள், அப்படியே திக் பிரம்மை பிடித்தது போல் அவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றாள் மித்ரா!



‘ஐய்யோ! என் வாழ்வில் நல்ல நேரம் என்பதே இல்லையா?’ என அவள் மனது ஓலமிட அவளை நெருங்கிய தேவ்வோ சற்றும் யோசிக்காமல் தன் உடலின் பலம் முழுவதும் தன் கையில் தான் இருக்கிறது என்பது போல் ஓங்கி அவள் இரண்டு கண்ணங்களிலும் மாறி மாறி அறை விட... முதலில் ஒரு கண்ணத்து அறைக்கே சற்றுத் தடுமாறி வண்டியைப் பிடித்தவள் அவன் மறு கண்ணத்தில் கொடுத்த அடுத்த அடிக்கு கீழேயே விழுந்து விட்டாள் மித்ரா!



தன் காது ஜவ்வே அறுந்து ரத்தமே வருகிறதோ என்று பயந்தவள் வலியில் அவளையும் மீறி கண்களில் கண்ணீர் கொட்ட தலை குனிந்து ரோட்டில் அமர்ந்திருந்தவளைக் கையைப் பற்றித் தூக்கி இழுத்துச் சென்று காரில் ஏற்றியவன் பின் விஷ்வாவுக்கு சிக்னல் கொடுக்க அடுத்த நொடியே அவன் சிட்டாகப் பறந்து விட்டான்! தானும் ஏறி காரை ஸ்டார்ட் பண்ண, “வண்டி அங்கேயே இருக்கு” என்றாள் கண்களால் ஸ்கூட்டியைக் காட்டி மெல்லிய குரலில் மித்ரா.



அதைக் கேட்டவன் “ஓ… ரொம்ப பொறுப்பு தான்டி உனக்கு! உயிர் உள்ள ஜீவன்களான எங்களைப் பற்றி யோசிக்காம உயிரே இல்லாத அந்த வண்டிக்காக யோசிக்கற பாரு” என்றான் குத்தலாக. அதன் பிறகு அவள் வாயே திறக்கவில்லை. மறுபடியும் திரும்ப வீட்டிற்குச் சென்று விடத்தான் நினைத்திருந்தாள் மித்ரா! அவனிடம் பேசி வைத்த அடுத்த அரைமணி நேரத்திற்குள் அவனிடமே இப்படி மாட்டுவோம் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவள்.



வண்டியை வீட்டு வாசலில் நிறுத்தியவன் “ம்..” இறங்குடி” என்றான் வார்த்தையிலும் முகத்திலும் அனல் பறக்க.



காரிலிருந்து இறங்கி யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தங்கள் அறைக்குச் சென்றவளை பின் தொடர்ந்து வந்தவன் “என்னடி திமிரா? உன் குழந்தைத் தனமான பேச்சையும் குறும்பையும் ரசித்து உனக்குக் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டுக் கொடுத்துப் போனது தப்பா போச்சி! இன்னைக்கு ஓர் முடிவு எடுத்தே ஆகணும்! ம்…. இப்ப என்ன சொல்ல வர? இங்க சொல்லு” என்று கேட்டு அவள் முகம் பார்க்க, மித்ராவோ குனிந்த தலை நிமிராமல் அசையாமல் நின்றிருந்தாள்.



“உன்ன தான்டி கேட்கறேன் வாயைத் திறந்து சொல்லுடி. ஏதோ என் நல்ல நேரம் உங்க நல்ல நேரம்னு டயலாக் விட்ட. இப்போ நான் உன்னத் தேடிக் கண்டுப் பிடிச்சிக் கூட்டிட்டு வந்துட்டேன். வந்த பிறகு பேசித் தீர்த்துக்கலாம்னு நீ தான சொன்ன? ம்…. இப்ப நான் ரெடி! சொல்லு, உன் மனசுல என்ன தான்டி நினைச்சிட்டு இருக்க? ஏன்டி இப்படி திரும்பத் திரும்ப என்னோட உணர்வோட விளையாடுற?” என்று உணர்ச்சி பொங்கக் கத்தியவன்.



அவள் அப்போதும் அமைதியாக நிற்கவும், பொறுமை இழந்தவனாக “மித்ரா!” என்ற கர்ஜனையோடு அவளை நெருங்க “நான் இங்க இருக்க மாட்டேன். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. என்ன விட்டுடுங்க, நான் எங்கையாவது போய்டறேன், எனக்கு ருத்ராவ மட்டும் கொடுத்துடுங்க” என்றாள் அழுகையின் ஊடே.



“நான் உன் புருஷன்டி! இது உன் குடும்பம். எங்கள எல்லாம் விட்டுட்டு நீ ஏன் எங்கையோ போய் இருக்கணும்? என் பொண்டாட்டி எங்கையோ இருந்து கஷ்டப் பட நான் விட மாட்டேன். அதனால நீ இங்க தான் இருக்கணும்” என்றான் உறுதியாக.



“இல்ல முடியாது, நான் இங்க இருந்தா செத்தே போய்டுவேன்” அவள் அழ.



“அப்ப செத்துப் போ. என்னப் பிரிஞ்சி எங்கேயோ போய் தனியா வாழறத விட என் மனைவியா என் வீட்டுல செத்துப் போ! அப்பவும் ஒரு கணவனா உனக்கான கடமையை நான் செய்த பிறகு தான் உன்ன இந்த வீட்டிலிருந்து தூக்கிட்டுப் போகவே விடுவேன். ஆனா அதுக்கப்புறம் நானும் உயிரோட இருக்க மாட்டேன்” என்றான் தேவ் திடமாக.



அவன் திடத்தில் கலங்கியவள் “இல்ல.. இல்ல.. என்னால முடியாது! முடியவே முடியாது…” என்று தன்னையும் மீறி கதறினாள் மித்ரா.



அவள் கதறலையும் அவள் சொன்னதையும் கேட்டவன் “ஏன் மித்ரா, என்னப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?” என்று மென்மையாகக் கேட்கவும் அந்தக் குரல் அவளுக்கு எதையோ உணர்த்த அதைத் தவிர்த்தவள் “உங்களுக்கு என்ன? பணம் இருக்கு! பார்க்கவும் நல்லா தான் இருக்கீங்க! ஸோ வேற ஓர் பெண்ணக் கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள் விட்டேத்தியாக. அவள் சொன்னதில் கோபம் கொண்டு “என்னடி சொன்ன?” என்ற உறுமலுடன் கையை ஓங்கிக் கொண்டு அவன் அவளை நெருங்க, அப்போதும் இருந்த இடத்தை விட்டு நகராமல் அவனைப் பார்த்து “என்னை அடிச்சே சாகடிச்சிப் போட்டாலும் நான் மாற மாட்டேன்” என்றாள் மித்ரா உறுதியாக.



அவள் உறுதியில் துணுக்குற்றவன் “நான் ஏன்டி உன்ன அடிக்கப் போறேன்? எப்போ கட்டின புருஷனையே இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்கற அளவுக்குத் தெளிவா முடிவெடுத்திட்டியோ அப்ப நானும் கணவன் என்ற உரிமையை உனக்குத் தெளிவு படுத்தினா தான் சரி வரும்” என்றவன்



அவள் கையைப் பிடித்து இழுத்தவன் அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு அவள் இரண்டு கைகளையும் பின்புறமாக ஒன்று சேர்த்துத் தன் இடது கையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் அவளை அப்படியே கட்டிலில் சரித்து அவள் கால்களை நகர்த்த முடியாத அளவுக்குத் தன் கால்களால் அவள் கால்களை பின்னிக் கொண்டு அவள் மேல் சரிந்தான் தேவ். இவை எல்லாம் ஓர் வினாடிக்குள் நடந்து விட அவனின் செயல் உணர்ந்து தன் முகத்தை இப்படி அப்படியுமாக திருப்பியவள் “ஐயோ! வேண்டாம் நான் கத்துவேன்” என்று அவனை மிரட்ட.



அதைக் கேட்டவன் “இப்போ கத்துடி!” என்ற சொல்லுடன் தன் வலது கையால் அவள் முகங்கட்டையைப் பிடித்து இரண்டு விரல்களாலும் அவள் இரண்டு பக்க கண்ணத்தில் சற்று அழுத்திப் பிடிக்க அவள் உதடுகளோ ஒன்று சேர முடியாமல் பிரிந்திருக்க குனிந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் அங்கிருந்து உதட்டை எடுக்காமல் அவள் புருவம் கண்கள் மூக்கு கண்ணம் என்று அவன் உதட்டின் ஊர்வலத்துடன் சேர்ந்து அவன் முத்தமும் வைத்து வர ஏற்கனவே அவன் அடித்ததில் எரிந்து கொண்டிருந்த கண்ணங்களில் அவன் அழுத்திப் பிடிக்கவும் வலியில் அவளையும் மீறி அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.



அந்தக் கண்ணீரைத் தன் உதட்டால் உணர்ந்தவனோ அவள் தன் தொடுகையால் தான் அழுகிறாள் என்று கோபத்துடன் அவள் கீழ் உதட்டைத் தன் இதழ்களால் சிறை செய்தவன் தன் கோபம், ஆத்திரம், தன்னை அவளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற வெறி, அவளுக்கான தண்டனை தன் காதல் என்று அனைத்தையும் அவன் அந்த ஒரு முத்தத்தில் காட்ட வலியில் துடிதுடித்துப் போனாள் மித்ரா! ஓர் கட்டத்திற்கு மேல் அவள் முகத்தைப் பிடித்திருந்த தன் கையை அவன் எடுத்து விட அப்போதும் தன் முகத்தை விலக்க முடியாமல் வலியில் மூச்சு விடவும் முடியாமல் படுத்திருந்தவளின் இதழில் தன் பற்கள் பதிந்து அதனால் ரத்தம் கசிந்து அது அவன் வாயில் உவர்ப்பான கண்ணீருடன் இறங்கிய பிறகே அவனுள் இருந்த வேகம் சற்றுக் குறைந்தது.



அதன் பிறகும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னையும் மீறி அவனுடைய வேகம் இருக்க அதே நேரம் அந்த அறையின் இண்டர்காம் ஒலித்தது. முதலில் அதைத் தவிர்த்தவன் மீண்டும் மீண்டும் அது ஒலிக்கவே “ச்சு….” என்று சலிப்புடன் அவளை விட்டு விலகி அதை எடுக்கவும் அந்தப் பக்கம் வேதா தான் பேசினார்.



இவன் குரலைக் கேட்டவர் “அப்பு, மித்ராவுக்கு இப்போ எப்படி இருக்கு? மதியம் சாப்பிட்டப் பிறகு மேல போன பொண்ணு! பிறகு கீழே வரலப்பா... என்ன ஆச்சி? என்ன செய்து அவளுக்கு?” என்று கவலைப்பட்டவர் “நான் இப்போ வந்து கதவைத் தட்டினேன். ஆனா மித்ரா திறக்கவே இல்ல. அதான் போன் பண்ணேன்” என்று தான் விடாமல் அழைத்ததன் காரணத்தை அவர் விவரிக்க.

அவரிடம் பேசிக் கொண்டே மித்ராவைத் திரும்பிப் பார்த்தவன் தரையில் அவள் இரண்டு கால்களும் தொட கண்களை மூடி அவன் விட்டுச் சென்றபடியே படுத்து இருந்தாள் அவள். அவன் அடித்ததில் அவள் கண்ணங்கள் இரண்டும் வீங்கிப் போய் சிவந்திருக்க அவள் உதடும் வீங்கி ரத்தம் கசிந்தது. அதை எல்லாம் பார்த்தவன் “ஆமாம் சித்தி! அவளுக்குக் கொஞ்சம் உடம்பு முடியல தான். அதனால அவள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அவ ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று இவன் கூற “ஐய்யோ என்னப்பா சொல்ற? இதோ நான் உடனே வரேன்” என்றவர் அவனின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தார்.



‘அப்போ, மித்ரா வெளியில் போனதோ நான் வந்ததோ சித்திக்குத் தெரியாதோ? இப்போ அவங்கள வர வேண்டாம்னு சொல்ல முடியாதே’ என்று குழம்பியவன் தன் ஆடைகளைச் சரி செய்து பிறகு மித்ராவின் ஆடைகளைச் சரி செய்ய அவளை நெருங்கித் தொட, அவன் தொடுகையை உணர்ந்தவள் “வேண்டாமே” என்றாள் மிகவும் பலவீனமான குரலில் கண்களைத் திறக்காமலே.



“இல்ல மித்ரா, இப்போ சித்தி வராங்க. கொஞ்சம் எழுந்து நேராக படுத்துக்கோ” என்று கூறி அவள் கழுத்தில் கை கொடுத்துத் தூக்க முயல முதலில் வேண்டாம் என்று அவனைத் தடுத்தவள் பின் தன்னால் முடியாமல் அவன் உதவியை நாட அவளை அப்படியே தூக்கி சரியான வாக்கில் படுக்க வைத்து போர்வையால் அவள் கழுத்து வரை மூட..



அந்த நேரம் கதவு தட்டப் பட்டது. விலகிச் சென்று கதவைத் திறக்க நினைத்தவன் திரும்பி அவள் முகம் பார்க்க அவளும் அவனைப் பார்க்க இருவருடைய கண்களும் ஒரு வினாடி சந்தித்துக் கொண்டது! பின் அவள் போர்வையை அவள் முகம் வரை போர்த்தி மறைத்துக் கொள்ள இவன் திரும்பி கதவைத் திறந்தான்.



உள்ளே வந்தவர் அவள் முகம் வரை போர்த்திப் படுத்து இருக்கவும், “என்ன அப்பு ரொம்ப முடியலனா விஷ்வாவையாவது வரச் சொல்லலாம் இல்ல? நாளைக்குக் காலையில் உங்க தாத்தா பாட்டி ஊருக்குப் போகணுமே! மித்ரா இப்படி இருந்தா அவங்களுக்கு நான் இப்போ என்ன சொல்ல?” என்று அவர் கேட்க “இல்ல சித்தி, காலையில் முடியாது. நாளைக்கு மறுநாள் போகலாம். அப்போ இதை நீங்களே அவங்களுக்குச் சொல்லிடுங்க” என்றான்.



“என்னபா, இப்படி சொல்ற?” என்றவர் மித்ராவை நெருங்கி “என்ன மித்ரா என்ன செய்து?” என்று கேட்டுக் கொண்டே அவள் போர்வையை விலக்கி அவள் முகம் பார்க்க மித்ராவோ கூனிக் குறுகி அவரைப் பார்க்க முடியாமல் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். அவள் கண்ணத்தில் தேவ்வின் விரல் தடயங்களைப் பார்தவர் திரும்பி தேவ்வைப் பார்க்க, அவனோ சங்கடத்துடன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.



பின் மித்ராவை உற்றுப் பார்த்தவர் அவள் வீங்கிய உதடும் அதில் கசிந்த உதிரமும் அவருக்கு வேறு ஒன்றை உறுதிப்படுத்தியது. அவள் தலை கோதி முகத்தில் இருந்த முடியை விலக்கியவர் ‘இது கணவன் மனைவிக்குள் நடக்கும் சாதாரண சண்டையை மீறிய வேறு ஒரு சண்டை’ என்பதைத் தன் வயதின் அனுபவத்தால் உணர்ந்தவர் அவனிடம் எதுவும் கேட்காமல் “மித்ராவ நீயே பாத்துக்க அப்பு! நித்திலாவையும் குட்டிமாவையும் நான் மேல அனுப்பல. விஷ்வாவ வரச் சொல்லி எதுக்கும் ஓர் இன்ஜெக்ஷன் மட்டுமாவது போடச் சொல்லு” என்றார் எங்கோ பார்த்துக் கொண்டு.



அவன் “ம்ம்ம்…” எனவும் வெளியே செல்லக் கதவு வரை போனவர் திரும்பி அவன் முகம் பார்த்து “நாளை மறு தினம் நாம போகத் தான் போறோம். அது கிராமம், அதுவும் உங்க தாத்தா பாட்டி அங்க இருக்காங்க! அவங்க ரெண்டு பேரும் எப்படிப் பட்டவங்கனு உனக்குத் தெரியும் இல்ல?



அதனால் இங்கையே நீங்க ரெண்டு பேரும் உங்க சண்டையை எல்லாம் மூட்டைக் கட்டி வச்சிட்டு அங்க கொஞ்சம் பார்த்து சூதானமா நடந்துக்கங்க!” என்று இருவரையும் எச்சரித்தார். மித்ரா கேட்டுக் கொண்டிருந்தாலும் பேசாமல் படுத்து இருக்க தேவ்வோ “சரி!” என்று தலையசைக்க, பின் வேதா அங்கிருந்து விலகிச் சென்றார்.

 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 22
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN