உன்னுள் என்னைக் காண்கிறேன் 30

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் – 30



அன்று மதியம் வீட்டில் வேதா இல்லை. நித்திலா காலேஜ் சென்று விட விசாலமோ மருந்தின் தாக்கத்தால் தூக்கத்தில் இருக்க ருத்ராவுடன் தன் அறையில் இருந்த மித்ராவிடம் வள்ளி வந்து “யாரோ பவித்ராவோட அப்பாவாம் வந்திருக்காங்க. ஐயாவோட மாமானு சொன்னா தெரியும்னு சொன்னாங்க. ருத்ரா பாப்பாவ பாக்கணும்னு சொல்றாங்கமா” என்று சொல்ல



மித்ராவுக்கு ஒண்ணும் புரியவில்லை. ‘யார் வந்திருக்கா? என்ன ருத்ராவோட தாத்தாவா?’ என்று நினைத்தவள் “கூட யார் வந்திருக்கானு?” கேட்க “ஒரு பொண்ணு வந்திருக்குமா” என்று அவள் பதில் சொல்ல மித்ராவின் மனதுக்குள் மின்னல் வெட்டியது. ‘ஐய்யோ.. அப்ப அந்த பொண்ணு பவித்ராவா?! அவ திரும்ப வந்துட்டாளா என்னோட ருத்ராவக் கூட்டிகிட்டுப் போய்டுவாளா?



யாரும் இல்லாத நேரத்தில் வந்திருக்கும் அவர்களை முதலில் பார்க்க வேண்டாம்னு தவிர்க்க நினைத்தவள் ‘இன்று இல்லை என்றாலும் வேறு ஒரு நாள் நாம் இந்த சூழ்நிலையை எதிர் கொண்டு தானே ஆகணும்?! எப்படி இருந்தாலும் நான் இப்போது இருப்பது பவித்ராவின் இடத்தில் தானே? இது என் வாழ்வு நீ போனு அவ சொன்னா போய் தானே தீரணும்? ஆனால் தேவ்வையும் ருத்ராவையும் விட்டு என்னால இருக்க முடியுமா? எது எப்படியோ ருத்ராவை மட்டுமாவது நான் என்னுடன் கூட்டி போய் விட வேண்டும்னு’ நினைத்தவள் “சரி, நான் வரேன் நீ போனு” வள்ளியை அனுப்பி வைத்தவள் கடவுளே எனக்கு கொஞ்சம் கூட நிம்மதியைக் குடுக்க மாட்டியா? ருத்ரா எனக்கு வேணும். இத அவ கையில கால்ல விழுந்தாவது நான் கேட்கணும். ஆனா தேவ் பவித்ராவோட சந்தோஷமா நிம்மதியா வாழட்டும். நான் ருத்ராவோட இங்கிருந்து போறதுதான் சரியான முடிவு! ஆனா இதுக்கெல்லாம் அவங்க ஒத்துக்குவாங்களா? சரி, எதுவா இருந்தாலும் அவங்ககிட்டயே பேசிக்கலாம். கடவுளே எனக்கு இந்த உதவியாவது செய்னு’ வேண்டிக்கொண்டாள் மித்ரா.





ருத்ராவுடன் கீழே போக நினைக்க ‘ஒருவேளை அவர்கள் இப்பவே குழந்தையை வலுக் கட்டாயமா பிடிங்கிப் போய்ட்டா என்ன செய்வது? கணவனுக்கு அழைப்போமானு?’ முதலில் நினைத்தவள் ‘வேண்டாம், சுற்றி வேலையாட்கள் இருக்கும் போது என்ன பயம்? அதனால் நாமே சமாளிப்போம்’ என்று முடிவுடன் அவர்களைக் கீழே வைத்துப் பேசினால் பவித்ராவைப் பற்றி தன் கணவன் காத்து வரும் ரகசியம் ஏதாவது ஒரு வகையில் வெளியே வேலையாட்கள் மூலமாக தெரிய வந்து விடும்னு’ யோசித்தவள் இண்டர்காமை எடுத்து அவர்களைக் கெஸ்ட் ரூமில் அமர வைத்து எதாவது குடிக்க கொடுக்கச் சொன்னவள் குழந்தையிடம் “அப்பாவுடைய ஃபிரண்ட்ஸ் வந்து இருக்காங்கடா குட்டிமா. இப்போ அம்மா உன்ன அங்க கூட்டிட்டுப் போவன், நீ எந்த சேட்டையும் பண்ணாம சமர்த்தா அம்மா கூடவே இருக்கணும். சரியானு?” மகளுக்கு எடுத்துச் சொல்ல “சரி மம்மீ” என்றது அந்த குட்டி வாண்டு.

நெஞ்சு படபடக்க அவளை அழைத்துச் சென்றவள் கதவைத் திறந்து உள்ளே போவதற்கு முன் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக ருத்ராவைத் தன் கையில் தூக்கிக் கொண்டு உள்ளே போக, முடிகள் நரைத்து உடல் சற்று தளர்ந்து போய் இருந்தவரையும் அவர் பக்கத்தில் சோகமே உருவான முகத்துடன் உட்கார்ந்து இருந்த பெண்ணையும் பார்த்தவள் “வாங்க!” என்று உபசாரம் செய்தவள் அவர்களுக்கு எதிரில் உள்ள ஸோஃபாவில் அமர்ந்து மடியிலே தன் மகளையும் இருத்திக் கொண்டாள்.



“சொல்லுங்க, என்ன விஷயமா வந்து இருக்கிங்க? அத்தான் வர சாய்ந்திரம் ஆகுமே?!” தான் தேவ் மனைவி தான் என்பதை விட்டுக் கொடுக்காமல் மிடுக்காகக் கேட்க



“நாங்க தேவ்வ பார்க்க வரலமா, உன்ன தான் பார்க்க வந்தோம்” - தேவ் மாமா



“……” - மித்ரா எதுவும் பேசாமல் கேள்வியாக அந்த பெண்ணையே பார்க்க





“இவ என் மருமகமா. இவ கணவன் விஷயமா தான் என் தங்கச்சிய அதான் உன் மாமியார் விசாலத்தப் பார்க்க வந்தேன். அவ உடம்பு அசதில தூங்கறதா சொன்னாங்க. சரி வேதாவ பார்க்கலாம்னு நெனச்சா அவளும் இல்லையாம். இவர்கள் எல்லாம் என்ன சொன்னாலும் தேவ் கேட்க மட்டானு தெரியும். அவன் கிட்டையும் நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டன். அவன் எதுக்கும் வழி விட மாட்ரான். நாளைக்கு ஒரு நாள் என் தங்கச்சி கிட்ட கேட்டு இருந்தா ஒருவேளை நல்லது நடந்து இருக்குமோனு நான் நினைத்து நினைத்து வருந்தக் கூடாது இல்ல? அதான் கேட்க வந்தன். ஆனா என்ன பண்ண? என் பையன் நேரம் அப்படி இருக்கு. சரி வந்தது தான் வந்தோம் குழந்தையையாவது பார்த்துட்டுப் போகலாம்னு தான் கூட்டி வரச் சொன்னேன்னு” அவர் சொல்ல



‘அப்பாடா அப்ப இவ பவித்ரா இல்லையானு?’ நிம்மதி அடைந்தவள் அவர் சொன்னதில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்க, “உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா என்ன விஷயம்னு என் கிட்ட சொல்லுங்க நான் அத்தான் கிட்ட பேசிப் பார்க்கிறேன்” என்று மித்ரா பரிவுடன் கேட்க



“உன் கிட்ட சொல்லக் கூடாதுனு இல்லமா. எல்லாம் உனக்கும் ஒரு நாள் தெரிய வேண்டியது தான்……” என்றவர் மேல் கொண்டு சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டார் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அந்தப் பெண்ணால்!



இவ்வளவு நேரம் அமைதியாக தரை பார்த்து அமர்ந்திருந்த அந்தப் பெண் திடீர்னு “நீங்க தான் அண்ணி என் கணவர காப்பாத்தணும். அவர் வாழ்க்கை ஜெயில்லயே முடிஞ்சிடுமோனு எனக்குப் பயமா இருக்குனு!” சொல்லி எழுந்து வந்து மித்ராவின் காலைக் கட்டிக் கொண்டு கதற, முதலில் மித்ராவுக்கு ஒண்ணுமே புரியவில்லை. ருத்ரா வேறு பயத்தில் நடுங்க, “ஐய்யோ…. என்னங்க நீங்க? என் காலை எல்லாம் பிடிச்சிட்டு, அதுவும் குழந்தை முன்னாடி! எழுந்திருங்கனு” சொல்லி மித்ரா எழுப்ப



எழுந்திரிக்க மாட்டேன் என்பது போல் தலை அசைத்தால் அந்தப் பெண். உடனே மடியிலிருந்த ருத்ராவைக் கீழே இறக்கி விட்டவள் அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கி “என்னங்க நீங்க? என் வயசு தான் உங்களுக்கும் இருக்கும். நீங்க போய் என் காலப் பிடிச்சிட்டு? போங்க போய் உட்காருங்க. எதுவா இருந்தாலும் நான் அத்தான் கிட்ட பேசி சரி பண்ணச் சொல்றேன் என்றவள் அவளை நடத்திக் கொண்டு போய் மறுபடியும் ஸோஃபாவில் அமரவைக்கப் போக, மித்ராவின் முந்தானையை இறுக்கப் பிடித்துக் கொண்டு அவளுடனே நடந்தாள் ருத்ரா.



அதைப் பார்த்தவரோ “நான் உன் தாத்தாடா! தாத்தா கிட்ட வா மானு” தேவ்வின் மாமா ருத்ராவை அழைக்க



“ம்ஊம்…..”என்று சொல்லி மித்ராவின் காலைக் கட்டிக் கொண்டாள் ருத்ரா. அதைப் பார்த்தவர் ‘உனக்கு தாத்தாவா நான் என்ன செய்து இருக்கேன்? அப்பவே உன்ன வேண்டாம்னு அழிக்கச் சொன்னவன் தானனு?” அவர் கசந்து போய் சொல்ல



“குழந்தை கிட்ட என்னங்க ஐயா இப்படி எல்லாம் பேசுறிங்க?” என்றவள் மறுபடியும் ஸோஃபாவில் அமர்ந்து ருத்ராவை மடி மீது அமர்த்திக் கொள்ள மித்ராவின் கழுத்தில் தன் கைகளைப் போட்டு அவளை இறுக்கக் கட்டிக் கொண்டாள் ருத்ரா. அதைப் பார்த்த தேவ் மாமா ஏதோ சொல்ல வர



அதற்குள் அந்த பெண்ணே வாய் திறந்தாள். ‘நீங்க ஒருமுறை கிராமத்திற்கு வந்திருந்த அப்போ கத்தியால குத்துப் பட்டு உயிர் பிழைத்து வந்திங்களே?! அதை உங்களுக்கு செய்தது என் புருஷன் தான். இரண்டு பேர் உங்கள அப்படி செய்யச் சொன்னது. அதுல அந்த ஜமீன்தார் உயிர் இருந்தும் படுத்தப் படுக்கையா இருக்க, என் புருஷன மட்டும் வேறு ஒரு கேஸில் உள்ள போட்டுட்டாங்க. அவர வெளியே கொண்டு வர நாங்களும் இத்தனை மாதமா வக்கீல் வச்சிப் போராடிட்டோம். ஆனா தேவ் அண்ணா விட்டுக் கொடுக்க மாட்றார். அவர நிரந்தரமா ஜெயில்லேயே இருக்க வைக்க தான் பார்க்கறார். நானும் அண்ணாவப் பார்த்து என் தாலியைக் காப்பாத்தச் சொல்லி கேட்கலாம்னு பார்த்தா என்னைப் பார்க்கவே விட மாட்றார். இதுக்கு நீங்க தான் ஏதாவது செய்து என் புருஷன வெளியே கொண்டுட்டு வரணும் அண்ணி. ரெண்டு பொம்பளைப் பிள்ளைகளை வச்சி இருக்கேன். நாளைக்கு அதுங்க எதிர்காலம் என்ன ஆகுமோனு எனக்குப் பயமா இருக்குனு” அவள் கண்ணீர் விட



இப்போது தான் மித்ராவுக்கு எல்லாமே புரிந்தது. ‘அன்று இருவரில் ஒருவன் தன் தங்கைவாழ வேண்டிய வாழ்வை நீ வாழறியானு கேட்டானே?! அவனுடைய மனைவியா இந்தப் பெண்? இந்தப் பொண்ணுக்காகவும் இவ பிள்ளைகளுக்காகவும் தான் அவனை ஜெயில்ல போட்டு இருக்கார். இல்லனா என்னக் குத்திப் போட்டதுக்கு இன்னேரம் அவனை கொன்னு இருப்பார்னு!” நினைத்தவள்



அந்தப் பெண்ணைப் பார்த்து “உங்க வீட்டுகாரர் செய்ததும் தப்பு தான். அதற்கான தண்டனையும் அவர் இவ்வளவு நாள் அனுபவிச்சிட்டார். ஸோ உங்களுக்காக நான் அத்தான் கிட்ட பேசறன். ஆனா உங்க வீட்டுக்காரர் வெளிய வந்தா அதுக்குப் பிறகு எங்க பக்கமே திரும்பக் கூடாது. மீறி எதாவது செய்தார்னா அப்பறம் நாளைக்கு என் அத்தான் எது செய்தாலும் நான் பொறுப்பு இல்லனு!” முதலில் அந்தப் பெண்ணுக்காகப் பேசியவள் பின் தன் கணவனையும் விட்டுக் கொடுக்காமல் நிறுத்த



“இல்லங்க.. அவர் வெளில வந்த பிறகு உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன் அண்ணி” என்று அவள் உறுதி அளித்தாள்.



“ரொம்ப நன்றிமானு!” நா தழுதழுக்க எழுந்து நின்று அந்த பெரியவர் கும்பிட்ட.



“என்ன ஐயா…. என் அப்பா மாதிரி இருந்துட்டு என்ன போய் கையெடுத்துக் கும்பிடுறிங்கனு?!” அவள் கேட்க



உன்ன பார்த்த பிறகு “ஒரு தந்தையா என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்தில இன்னோர் பொண்ணானு என் மனசு சுனங்கிச்சி தான்! ஆனா இப்படி ஒரு வார்த்தை நீ சொன்ன பிறகு நீயும் என் மகள் தான். இன்னைக்கு என் இன்னோர் மகளத் தான் தேவ்வுக்குக் கொடுத்திருக்கன். எல்லாத்தையும் விட இன்னார்க்கு இன்னார்னு கடவுள் எழுதி வச்சி இருப்பார்னு சொல்லுவாங்க. அப்படிப் பார்த்தா தேவ்வுக்குனு எழுதின பொண்ணு நீ தான். அதனால் தான் அவன் வாழ்க்கையில இவ்வளவு பிரச்சனைக்கு அப்பறம் நீ வந்து இருக்கனு” அவர் அவள் தலையில் கை வைத்துச் சொல்ல



‘அன்றும் தேவ் அவர் வாழ்வில் பிரச்சனைனு சொன்னாரே! இன்று இவரும் சொல்றார்! அப்படி என்னவா இருக்கும்னு?’ யோசித்தவள் அவரைப் பார்த்துச் விரக்தியாகச் சிரிக்க



அதைப் பார்த்தவர் “நான் பொய் சொல்லலமா. என் பொண்ணுக்கே இந்தக் குழந்தைக்கு அப்பா யாருனு தெரியாதப்போ அவன் தாய் சொன்ன வாக்குக்காக அவன் தாத்தாவுக்காக அதான் என் அப்பாவுக்காக இந்தக் குழந்தைய தன் குழந்தையா ஏத்துக்கிட்டான். ஆனா எந்த சம்பந்தமும் இல்லாத நீ இந்தக் குழந்தைய ஏத்து கிட்ட பாரு, அது தான் பெரிய விஷயம்! நல்ல வேளை இந்த குழந்தை யாரோ ஒரு வெள்ளக்காரன் மாதிரி பிறக்காம எங்க குடும்பமா பிறந்துச்சேனு!” ருத்ராவின் தலையைத் தடவி இவ்வளவு நேரமும் அவள் தன் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் சொல்ல



மித்ராவுக்குத் தான் இந்த உலகமே தலை கீழாக சுற்றுவது போல் இருந்தது. ‘அப்ப ருத்ரா தேவ் குழந்தை இல்லையா? அப்படி தேவ் வாழ்க்கையில் என்ன நடந்துச்சினு?’ குழம்பியவள் அவரிடம் எதுவும் கேட்காமல் அமைதி காக்க



“சரிமா நாங்க கிளம்பறோம். நீ தேவ் கிட்ட சொல்லு. அப்படி ரொம்ப பிடிவாதம் பிடிச்சா விட்டுடுமா. என் மகன் தலையெழுத்து என்னவோ அதன் படி நடக்கட்டும்னு” சொல்லி அவர்கள் கிளம்பி விட



எந்த ஓர் உணர்வுமே இல்லாமல் சிலையாக அமர்ந்து விட்டாள் மித்ரா. “மம்மீ…. அவங்க போய்ட்டாங்க. நாம இப்போ விளையாடலாமானு?” ருத்ரா கன்னம் தடவிக் கேட்க, அப்போது தான் தெளிந்தவள். “அம்மாக்கு தலை வலிடா. அதனால நித்திலா அத்த வந்த பிறகு நீ அத்த கூட விளையாடுனு” சொன்னவளுக்கு இப்போதே எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேகத்தில் தன் கைப்பேசியில் இருந்து கணவனுக்கு அழைக்க அது எடுக்கப் படாமலே இருந்தது. ஒரு முறைக்கு மூன்று முறையாக முயற்சித்தும் அது எடுக்கப்படாமல் இருக்க பிறகு விட்டு விட்டாள் மித்ரா.



ஒரு மணிநேரம் கழித்து அவனே அவளை அழைக்க அதை எடுத்து ஹலோ சொல்வதற்குள் “என்னடா?” என்று கேட்டு இருந்தான் தேவ்.



அவன் கரிசனத்தில் கண்கள் கலங்க “அத்தான்…..” என்று திக்கியவள் “நீங்க உடனே வாங்கனு” சொல்ல, மிகவும் முக்கியமான நேரத்தில் தான் மித்ரா அத்தான்னு அழைப்பாள் என்பதை அறிந்தவனோ அவளிடம் மேற்கொண்டு எதையும் கேட்காமல் “இதோ பத்து நிமிஷத்துல இங்கிருந்து கிளம்பிடுவன்னு” அழைப்பைத் துண்டித்தவன் பிறகு அவன் சொன்ன நேரத்தை விட சீக்கிரமாகவே வந்து விட



“எதாவது அர்ஜென்ட்னா நீ ஜீவாவுக்குக் கால் பண்ணி இருக்கலாம் இல்லனு?” கேட்க அப்போதும் அவள் அமைதியாக இருக்கவும் கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தவன் “என்னடா, என்ன பிரச்சனைனு?” கேட்க



“முதல்ல உங்களுக்கு காபி சொல்றேன்னு” எழுந்து அவள் இன்டர்காமை எடுக்கப் போக



“இல்ல.. இப்போ எதுவும் வேண்டாம். முதல்ல நீ என்னனு சொல்லு” - தேவ்



“இன்று வீட்டுக்கு உங்க மாமா வந்து இருந்தார். கூடவே அவர் மருமகளும் வந்தாங்க” - மித்ரா



“யார், பிரபு மனைவியா?” - தேவ்



“அது எனக்குத் தெரியாது. ஆனா அன்று என்னக் கடத்தியவங்கள்ல ஒருத்தர்னு மட்டும் தெரியுது” - மித்ரா



“அவன் தான் பிரபு. யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டனு தெரிஞ்சி உன் கிட்ட வந்தாங்களா? என் பொண்டாட்டி மேல அவன் கைய வைப்பான், பார்த்துட்டு என்ன சும்மா போகச் சொல்றியானு?” தேவ் உறுமலாகக் கேட்க



“அதுக்கு ஏதோ சின்ன தண்டனை கொடுக்கலாம் அத்தான். அதுவே ஆயுசுக்கும்னா, வேண்டாம் அத்தான். அவ்வளவு பெரிய தண்டனை அவருக்கு வேண்டாம்” - மித்ரா



“என் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு என்ன மாதிரியான தண்டனை என்பதை நான் தான் முடிவு பண்ணனும்” - தேவ்



“இருக்கட்டும்! ஆனா இந்த விஷயத்தில மட்டும் எனக்காக கொஞ்சம் விட்டுக் கொடுங்க. ஏற்கனவே நான் என்ன பாவம் செய்தனோ இப்படி ஒரு நிலைமையில இருக்கன். திரும்பவும் ஒரு பொண்ணோட பாவம் நமக்கு வேண்டாம்!” - மித்ரா



“ஆரம்பிச்சிட்டியா? உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி! ச்சே…. மனுஷனுக்கு நிம்மதி இருக்கானு?” அவன் கோபப்பட



“சாரி அத்தான்.. நான் அப்படி சொன்னது தப்பு தான்! ஏதோ ஒரு வேகத்துல வந்துடுச்சி. இனி அப்படி சொல்ல மாட்டன். பிளீஸ் அத்தான், அந்த இரண்டு பெண் குழந்தைகளைப் பாருங்க அத்தான்னு’ அவன் இரண்டு கன்னங்களைத் தன் கைகளால் தாங்கிப் பிடித்துக் கொண்டு அவள் கெஞ்ச



“நீ சாதாரணமா சொன்னாலே நான் செய்வன். இதுல இத்தனை அத்தான் சொல்லி பிளீஸ் போட்டா செய்யாம விட்டுடுவனா? சரி, உனக்காகப் பார்க்கிறேன்” என்றான் அறை குறை மனதாக தேவ்.



அதிலேயே தன் கணவன் தனக்காக செய்வான்னு திருப்தியுற்றவள் எழுந்து அவனுக்குக் காபி சொல்ல காபி வரும் வரை அவனிடம் எதுவும் பேசவில்லை. வள்ளி காபி டிரேவைக் கொண்டு வந்து வைக்க, டிகாஷன் பால் சர்க்கரை என்று கலந்தவள் அந்தக் கப்பை கணவனிடம் நீட்ட, அவன் அதை வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அது ஏன்னு உணர்ந்தவள் முதலில் தான் ஒரு வாய் குடித்து விட்டு அவனுக்குக் கொடுக்க, இப்போது அதை வாங்கியவனோ “இன்னும் என்ன சொல்லணும்னு நினைக்கிற? அதையும் சொல்னு” அவனே ஆரம்பித்தான்.



“நான் இப்போ கேட்கறதுக்கு உண்மையா பதில் சொல்லுங்கனு” மித்ரா கண்ணில் கூர்மையுடன் கேட்க



“சரி கேளு” தேவ்



“பவித்ரா உங்க மனைவி தான? மித்ரா



“ஆமாம்” தேவ்



“ருத்ரா உங்க குழந்தை தான?” மித்ரா



“இல்ல” தேவ்



அவன் சொன்ன பதிலில் ஓர் நிமிடம் ஆடிப் போனவள் “அப்ப ருத்ராவோட அம்மா யாரு? என்று கேட்டாள் குரல் நடுங்க



“பவித்ரா தான் அம்மா. ஆனா அப்பா நான் இல்ல!” அதைச் சொல்லும் போதே அவன் உடல் இறுகியது.



“போதும் தேவ், விளையாடாதிங்க! இவ்வளவு நாள் நான் என் பிரச்சனையிலே இருந்தேன். அதனால உங்களப் பற்றி கேட்கல. இப்போ கேட்கறேன், எனக்கு மறைக்காம பதில் சொல்லுங்க” - மித்ரா



“ருத்ரா விஷயத்துல உன் கிட்ட நான் பொய் சொல்லவோ விளையாடவோ மாட்டன் ஹாசினி. உண்மையாவே ருத்ரா என் குழந்தை இல்ல.



பவித்ராவுக்குத் தாலி கட்டி அவளை என் மனைவியா ஆக்கிக்கிட்டதோட சரி! அதன் பிறகு ஒரு கணவனா நான் அவளை நெருங்கியதே இல்ல” - தேவ்



‘இவர் என்ன சொல்றார்னு தெரிஞ்சி தான் சொல்றாரானு?’ அவள் விழி விரித்து அவனைப் பார்க்க



“உனக்கு முதல்ல இருந்து எல்லாமே சொன்னா தான் புரியும்” - தேவ்



ருத்ரமூர்த்தி பூபதியின் (தேவ்வின்அப்பா) சொத்திலோ அந்தஸ்திலோ கொஞ்சமும் குறைந்தது இல்லை விசாலத்தின் (தேவ்வின் அம்மா) குடும்பம். இன்னும் சொல்லப் போனால் விஜயேந்திர பூபதி (தேவ்வின் தாத்தா) மாதிரி தேவ் மாதிரி அந்த சொத்துக்களைக் கட்டி ஆண்டு வந்திருந்தால் இவர்களை விட இருமடங்கு இன்று விசாலத்தின் குடும்பமே செல்வ செழிப்பில் முன் இருந்திருக்கும்.



ஆனால் ராஜ தோரணையான வாழ்வுக்கும் அதிகாரத்திற்கும் அடிமையாகி புத்தி மயங்கிப் போய் தங்கள் சொத்துக்களை ஊதாரித்தனமாக செலவு செய்து சும்மாவே ஊரைச் சுற்றி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் விசாலத்தின் இரண்டுஅண்ணன்கள்.



அதனால் தந்தைக்கு பின் பொறுப்புகளை எல்லாம் விசாலமே கையில் எடுத்து தந்தைக்கு ஓய்வு கொடுத்து நல்ல முறையில் தொழில்களை நடத்திச் செல்ல, அப்போது தான் அவருக்குத் தான் எவ்வளவு பெரிய தப்பு செய்துள்ளோம் என்று புரிந்து மகன்களைக் கோபமாகத் திட்ட ஆரம்பித்தார்.



அப்போதும் அவர்கள் கண்டுகொள்ளாமல் சுற்றிக் கொண்டிருக்க, தன் மனைவி சொன்ன யோசனையின் படி அவர்களுக்கு ஒரு திருமணம் நடந்துவிட்டால் எல்லா பொறுப்பும் வந்து விடும்னு நினைத்தவர் அதன்படியே செய்ய, அப்போதும் அவர்கள் யாரும் திருந்தவில்லை.



அதிலும் மூத்த மருமகளுக்கோ தான் தான் இனி எல்லாம் என்ற திமிர் இருந்தது. கல்யாணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் ஆண் வாரிசான பிரபுவைப் பெற்று எடுத்து விட, மச்சினருக்குக் குழந்தை இல்லாமல் இருந்ததால் இன்னும் அதிகாரத் தோரணையுடனே இருந்து வந்தாள்.



ஒரு முறை விஜயேந்திர பூபதி தொழில் விஷயமாகப் போன இடத்தில் விசாலத்தைப் பார்த்து அவள் கெட்டிகாரத் தனம் பிடித்துப் போக, தன் இரக்க குணம் உள்ள பையனுக்கு இந்த பெண் தான் சரினு நினைத்தவர் உடனே அதற்கானதைப் பேசி தன் மகன் ருத்ரமூர்த்திக்கு மணம் முடித்து விட்டார். திருமணத்திற்குப் பிறகு அவள் தந்தை தொழிலுக்குப் பதில் தங்கள் தொழிலைக் கணவனுடன் பார்க்கச் சொல்லி விட அங்கு தந்தை வீட்டில் மறுபடியும் தொழில் படுத்து விட்டது. விசாலத்திற்குப் பிறகு பிள்ளைகள் இருந்தாலும் அவர்கள் அந்த அளவுக்கு கெட்டிக்கார்கள் இல்லை என்பதால் விசாலத்தின் தந்தையே மறுபடியும் தொழிலைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது.



அப்போது மனைவின் பேச்சைக் கேட்டு இளையவன் தந்தைக்கு உதவியாக இருந்தான். ஆனால் மூத்தவன் மட்டும் வரவில்லை. அவன் தந்தைக்கு உதவியாக நான் வேலைக்குப் போகிறேன்னு சொன்னாலும் அவன் மனைவியோ ‘இங்கு நாம் தான் இந்த சமஸ்தானத்தை ஆளப் போகும் அடுத்த ராஜா ராணி. அதனால் நாம் உழைக்க வேண்டாம், அவர்களே உழைத்து வந்து கொடுக்கட்டும்னு’ அவனை ஏற்றி விட முழுமையாக மனைவியின் பேச்சைக் கேட்டு அடங்கிப் போனான் அவன்.



இதற்கிடையில் விசாலத்திற்கு தேவ் பிறந்து விட கொஞ்ச நாளிலேயே அவள் மூத்த அண்ணனுக்கும் பவித்ரா பிறந்து விட வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டிருந்தது



விசாலத்தின் இரண்டாவது அண்ணனுக்கும் பல வருடங்கள் கழித்துக் குழந்தை பிறந்து விட, அதில் அவர் தந்தையுடன் சேர்ந்து தொழிலில் அதிக கவனம் காட்டினார். சொத்தில் பங்கு போட தன் மச்சினனுக்கு வாரிசு வந்ததில் கலக்கமுற்ற மூத்த மருமகள், அவர்களை மட்டம் தட்டி தன் பிள்ளைகளை உயர்வாகக் காட்ட சுதந்திரம் என்ற பெயரில் தான்தோன்றித் தனமாக பிரபுவையும் பவித்ராவையும் வளர்க்க ஆரம்பித்தாள்.



காலங்கள் உருண்டோட பிரபுவுக்குத் திருமண வயது வந்தவுடனே ஒற்றைக் காலில் நின்று தன் அண்ணன் மகளையே முடித்து விட்டார் பிரபுவின் தாய். இதற்கிடையில் விசாலத்தின் தாய் இறந்து விட, அதில் தொழிலை மேல் கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு அவள் தந்தை நொடிந்து விட.



இது தான் சமயம்னு தொழிலைத் தன் மகன் பிரபு கையில் கொடுக்கச் சொல்லி பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணி பஞ்சாயது வைக்க அதன்படியே பிரபு கைக்கு போனது. கூடவே தன் அண்ணன் மார்த்தாண்டத்தைத் துணைக்கு வைக்க அங்கு ஆரம்பித்தது பிரச்சினை.



தந்தையைப் போவவே பிரபுவும் உழைப்பதில் விருப்பம் இல்லாமல் போக மறுபடியும் நஷ்டத்தில் ஓடியது தொழில். இரண்டாவது மகனின் பிள்ளைகளும் இன்னும் வளராமல் பள்ளிப் பருவத்திலே இருக்க என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தார் விசாலத்தின் தந்தை.



அப்போது தான் அவர் முன்பு தன் இளமைப் பருவத்தையும் மீறி ஆஜானுபாகுவாக வந்து நின்றான் தேவ்! மேல் படிப்பை வெளி நாட்டில் முடித்து விட்டு வந்து இங்கு தாய்க்கும் தந்தைக்கும் தொழிலில் உதவியாக இருந்தவன் பின் தங்கள் தொழிலை அமெரிக்காவில் விரிவுபடுத்தப் போவதாகவும் அதற்கு அங்கேயே தங்கி தொழிலைத் தொடங்கி மேற்பார்வை இட்டு அங்கு கொஞ்சம் நன்றாக கால் ஊன்றிய பிறகு திரும்ப இந்தியா வர இரண்டு வருடங்கள் ஆகும்னு தன் தாத்தாவிடம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிப் போக வந்தவனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்தவரோ வந்த பிறகு தங்கள் தொழிலையும் பார்த்துக்கச் சொல்லி கெஞ்ச சரி என்று அரை மனதாக சம்மதம் சொல்லிச் சென்றான் தேவ்.



பல வருடங்கள் கழித்து தேவ்வைப் பார்த்த பவித்ராவின் தாய் மனதில் தேவ்வுக்கு பவித்ராவைக் கட்டிக் கொடுத்து அவன் சொத்தை எல்லாம் ஆள வேண்டும் என்ற எண்ணம் உதயமாக அதற்குத் துணையாக வீட்டோட சம்மந்தியாக இருக்கும் தன் அண்ணன் மார்த்தாண்டத்தை நாட, அவன் கொடுத்த ஐடியா தான் தேவ் இருக்கும் ஊரிலேயே அவனுக்கு நிகராக பவித்ராவையும் அமெரிக்கா அனுப்பி படிக்க வைப்பது என்பது.



படிப்பே ஏறாத பவித்ராவோ போகவே மாட்டேன்னு ஆர்ப்பாட்டம் பண்ண ஒரு தாயாக அதட்டி புத்திமதி சொல்லாமல் குடும்ப கவுரவத்துக்காகவாது அங்கு போய் படிக்காமல் சும்மாவாது ஊரைச் சுற்றிப் பார்த்துட்டு வரச் சொல்ல தன் தாய் சொன்ன அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றாள் பவித்ரா.



அங்கு போய் படிப்பதைத் தவிர மற்ற அனைத்தும் செய்தாள். ஊர் சுற்றுவது மட்டும் இல்லாமல் குடி கிளப் ஆட்டம் பாட்டம்னு அல்ட்ரா மாடர்ன் பெண்ணாகவே மாறிப் போனாள். தேவ்வும் பவித்ராவும் ஒரே நாட்டில் இருந்தாலும் இருவரும் இருந்தது என்னவோ எதிர் எதிர் கோடியில். அதனால் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போனது.



ஆனால் அவள் இப்படியெல்லாம் இருப்பது தேவ்வுக்குத் தெரிந்திருந்தாலும் அப்போதிருந்தே மாமன் குடும்பத்தில் அதிக ஒட்டுதல் இல்லாததால் அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இதெல்லாம் பவித்ராவின் தாய்க்குத் தெரிந்திருந்தாலும் தன் மகளைக் கண்டிக்காமல் தன் கணவன் மாமனார் என்று அனைவரிடமும் இதை மறைத்து அவளுக்குப் பணம் மட்டும் அனுப்பிக் கொண்டிருந்தார்.



தேவ் அமெரிக்கா சென்ற வருடம் அவன் பிறந்த நாள் வர, அதைத் தன் தாய் தந்தையருடன் கொண்டாட நினைத்தவன் அவர்கள் இருவரும் அமெரிக்க வர வழி செய்ய அவனைப் பார்க்க அவன் தாத்தா ஆசைப் படுவதாகச் சொல்லி அவருக்கும் சேர்த்து விசாலம் டிக்கெட் போடச் சொல்ல அதன்படியே செய்தான் தேவ்.



அவர்கள் மூவரும் அமெரிக்கா வந்து அவனுடன் பிறந்த நாள் கொண்டாடிய மறு நாள் பவித்ரா குடித்து விட்டுத் தாறுமாறாக கார் ஓட்ட அவளைப் போலீஸ் பிடித்துக் கொள்ள, தேவ் அவள் தாய் தந்தையருக்குத் தகவல் சொல்லி உடனே கிளம்பி வந்தனர் பவித்ராவின் தாயும் தந்தையும்.



“குடிச்சிட்டு கார் ஓட்டறது என்ன பெரிய குத்தமா? இதுக்கு எதுக்கு உங்க தங்கச்சி பையன் நீங்க வந்தா தான் பவித்ராவ வெளியே எடுப்பனு சொல்லி கூப்பிடறான்? ஃபைன கட்டிட்டு அவள எடுக்க வேண்டியது தானேனு?” புலம்பிக்கொண்டு வந்த மனைவியை அடக்காமல் “ம்ம்ம்….” என்று அவளுக்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்தார் பவித்ராவின் அப்பா.



ஆனால் இங்கு மகள் எப்படிப் பட்ட வாழ்வு வாழ்கிறாள் என்பதைத் தாய் தந்தையர் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே அவன் தாத்தாதான் அப்படிச் சொல்லச் சொன்னார். அவர் தன் மகள் வீட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்க, மாறாக அமெரிக்க போய் இருக்கிறார் என்பது பவித்ராவுடைய தாய் தந்தையருக்குத் தெரியாது.



அவர்கள் வந்த பிறகு பணம் கட்டி வெளியே எடுக்கும் போது தான் ஒரு விஷயம் அங்கிருந்த அனைவருக்கும் தெரிய வந்தது. அவள் ஏற்படுத்திய கார் விபத்தில் அவளுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு விட அதில் அவளைப் பரிசோதித்த மருத்துவர் அவள் ஐந்து மாத கர்ப்பம் என்று சொல்லி விட, தலையில் இடி விழுந்த நிலையில் பவித்ராவின் அப்பாவும் அம்மாவும் நிலை குலைந்து தான் போனார்கள்.



தேவ்வின் தாத்தாவோ இதைக் கேட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட, அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்துக் காப்பாற்றினர்.



இதற்கிடையில் அந்தக் குழந்தைக்குத் தகப்பன் யார்னு கேட்க யார்னே தனக்குத் தெரியாது என்றாள் பவித்ரா. மேற்கொண்டு அவளிடம் என்ன கேட்பது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இப்போது தான் முதல் முறையாக ஒரு தந்தையாக பவித்ராவை அடித்து உதைத்து “நீ குடி மயக்கத்தில் இருக்கும் போது யார் கூட நீ எங்க போனனாவது சொல்னு” தந்தை கேட்க



“என்ன குடி போதையில் யாரும் எதுவும் செய்யல. நானா தான் விரும்பி எல்லார் கிட்டையும் பழகினன். இதுல நான் யாருதுனு சொல்ல?” என்று கொஞ்சம் கூட தப்பு செய்த உறுத்தலே இல்லாமல் பவித்ரா நெஞ்சை நிமிர்த்திப் பேச, இதற்கு மேல் இவளைத் திருத்த முடியாதுனு ஒதுங்கிப் போனார் அவள் தந்தை.



குழந்தையையாவது அழிக்கலாம் என்றால் ஐந்து மாதம் ஆகி விட்டது. “இவ்வளவு நாள் ஏன்டி இதை வளர விட்டனு?” கேட்ட தாய்க்கு



“இது குழந்தைனு எனக்குத் தெரியவர்றதுக்குள்ளே மூனு மாசம் ஆகிடுச்சி. எப்போதுமே நான் பழகுற பையன்க எல்லாம் சேஃப்பா தான் இருப்பானுங்க இதுல எவன் இப்படி ஏமாத்துவானு எனக்கு என்ன தெரியும்னு?” அவள் தாயிடம் வாதிட, உடல் கூசிப் போனது பவித்ரா தாய்க்கு.



ஆனாலும் மகளை இப்படியே விட்டு விட முடியாது, தான் எடுத்த முடிவு பிரகாரம் தேவ்வின் தலையில் அவளைக் கட்ட நினைத்தவர் அதன்படி தன் கணவனுக்கு வழி சொல்ல அதையே அவரும் பிடித்துக் கொண்டார்.



தேவ்வின் தாத்தா ஆஸ்பிட்டலில் இருந்து வந்து விட அந்தப் பையன் யார் எவர்னு கேட்டு அவனுக்கே கட்டிவைக்கச் சொல்ல இதுதான் சாக்குனு அவர் காலில் விழுந்து போலியாகக் கண்ணீர் விட்டார் பவித்ராவின் தாய். எங்கள் மகளால் உங்கள் குடும்ப மானம் போய் விட்டதாகக் கூறி தந்தை யார் என்றே தெரியாத குழந்தையைச் சுமந்திருக்கும் அவளுக்குத் தேவ்வையே வாழ்வு கொடுத்து அந்த குழந்தைக்குத் தகப்பனாக்கச் சொல்லிக் கெஞ்ச, அவர் ஒத்துக் கொள்ளவேயில்லை.



அந்தக் குழந்தையை அவர் கலைக்கச் சொல்ல அது பவித்ராவின் உயிருக்கே ஆபத்துனு சொல்லி கல்யாணத்திலே பிடிவாதமாக இருக்க, தன் பேரனின் வாழ்வு கெட்டுப் போக விரும்பாத அவர் பவித்ரா செத்தாலும் பரவாயில்லைனு சொல்லி விட பின் இவரிடம் வேலைக்கு ஆகாதுனு தெரிந்து கொண்டவள் வேறொரு திட்டம் போட்டாள்.



தன் கணவனை உசுப்பி விட்டு விசாலத்திடன் பேசச் சொல்ல அவரோ நாம் பிறந்த குடும்பத்தின் மானம் இனி உங்கள் இருவரின் கையில் தான் இருக்கிறது எப்படியாவது தேவ்வை பவித்ராவுக்கு கட்டி வைங்கனு சொல்லி அழுதவர் தன் தங்கை மச்சான் காலில் விழுந்து கெஞ்சினார்.



விசாலமோ ‘பிள்ளையின் பிறந்த நாளைக் கொண்டாட வந்த இடத்தில் இதென்ன சோதனைனு!’ கலங்கியவர். அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் குடிப்பார்கள், ஊதாரித்தனமாக இருப்பார்கள். ஆனால் முறை தவறி பெண்கள் விஷயத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படிப் பட்ட குடும்பத்தில் வந்த பெண் இப்படி ஒரு அவப்பெயரைக் கொடுத்து விட்டாள். அதுவும் அவளுக்கே தெரியாமல் இப்படி ஏதாவது நடந்து விட்டாலோ இல்லை என்றால் யாரோ ஒருவனைக் காதலித்து ஏமாந்து போய் இருந்தாலோ தன் அண்ணன் கேட்ட உடனே சரினு சொல்லி இருப்பார் விசாலம். ஆனால் இப்படி திமிர் எடுத்துப் போய் வந்ததும் இல்லாமல் அதைப் பற்றி கொஞ்சமும் தவறுனு நினைக்காமல் இருக்கும் பவித்ராவை எப்படி தன் மகனுக்குக் கட்டி வைப்பதுனு நினைத்தவர் முடியாதுனு மறுத்து விட



தன் மகளின் செயலில் மனம் ஒடிந்து இருந்தவர் விசாலமும் கைவிரிக்க வேறு வழியில்லாமல் விஷம் குடித்து விட்டார் பவித்ராவின் அப்பா. அது தெரிந்து போய் அவரைக் காப்பாற்ற நினைக்க, அதற்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்காமல் போக அதைப் பார்த்த பவித்ரா அம்மா



“ச்சீய்.. நீ எல்லாம் ஒரு தங்கச்சியா? இப்படி உன் அண்ணன் உயிருக்குப் போராடிட்டு இருக்கார், பிறந்த குடும்பத்தின் மானம் மரியாதை எல்லாம் போனாலும் உன் அண்ணனோட உயிரே போனாலும் நீ உன் பிடிவாத்தில இருந்து மாற மாட்ட இல்ல? பார்க்கறன், உன் மகன் எப்படி வாழ்ந்தற்றானு பார்க்கறன்! அவன் நல்லாவே இருக்க மாட்டான்னு!” பவித்ரா அம்மா அந்த நேரத்திலும் சாபம் இட, தன் தந்தையின் கவுரவத்திற்காகவும் தமையனுக்காகவும் தங்கள் குடும்ப மானத்திற்காகவும் அந்த முடிவை எடுத்தார் விசாலம்.



தன் கைப்பையில் எதையோ தேடி வெளியே எடுத்ததில் மஞ்சள் கிழங்குடன் தாலி கயிறு மஞ்சள் குங்குமம் டப்பா சகிதம் இருந்தது. தேவ்வுக்கு திருமணம் செய்ய எண்ணி குடும்ப ஜோதிடரைப் பார்த்ததில் பிறந்த நாளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை அன்று சில சாங்கியத்தை தேவ் கையாலேயே செய்யச் சொல்லியிருந்தார். அதை அமெரிக்காவில் உள்ள கோவிலிலேயே தேவ் கையால் செய்ய வைக்கலாம்னு நினைத்து விசாலம் ஊரிலேயே மஞ்சள் குங்குமம் தாலி கயிறு என அனைத்தும் வாங்கி வந்திருந்தார். நாளை இங்குள்ள கோவிலில் தேவ் கையால் செய்ய வைக்கலாம் என எண்ணியிருக்க. ஆனால் அதற்கு நேர் மாறாக எல்லாம் நடக்கிறதேனு கண்கள் கலங்கியவர். நேரம் காலம் பார்க்காமல் அந்த நேரத்திலே அந்த வினாடியே மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் முடித்து அதை தேவ்விடம் கொடுத்து பவித்ராவின் கழுத்தில் கட்டச் சொல்ல.



தாய் பேச்சைத் தட்டாமல் எந்த மறுப்பும் சொல்லாமல் பவித்ராவின் கழுத்தில் தாலி கட்டினான் தேவ். பின் பவித்ராவின் தந்தையை ஆஸ்பிட்டலில் சேர்த்து அவர் உயிர் பிழைத்து விட, ‘தன் மகனுக்கு இப்படி ஓர் வாழ்வு அமைந்து விட்டதேனு!’ நினைத்து நினைத்து வருந்திய தேவ்வின் தந்தைக்கு அன்று இரவே தூக்கத்தில் மாரடைப்பு வந்து அன்றே அவர் உயிர் பிரிந்து விட்டது.



பவித்ராவுக்கும் அவள் தந்தைக்கும் துணையாக அவள் தாயை அங்கேயே விட்டு விட்டு கூட துணைக்குத் தனக்குத் தெரிந்தவர்களைப் பார்த்துக்கச் சொல்லி தன் தாய் தாத்தாவுடன் தந்தையின் உடலை எடுத்துக் கொண்டு இந்தியா வந்து விட்டான் தேவ்.



பவித்ராவுக்கும் தேவ்வுக்கும் நடந்த திருமணத்தில் பவித்ராவின் தாய் தந்தையர் சந்தோஷப்பட்டார்கள் என்றால் ‘தேவ்வின் வாழ்வு இப்படி ஆனது மட்டும் இல்லாமல் தன் மகளின் வாழ்வு அழிந்து போயிடுச்சேனு!’ நினைத்து வருந்திய விசாலத்தின் தந்தையும் அந்த வினாடியே படுக்கையில் விழுந்து விட குடும்பமே நிலையில்லாமல் போய் விட்டது.



பிறகு தேவ் அமெரிக்க செல்ல, அங்கிருந்த பவித்ராவின் தாய் தந்தையர் இருவரும் தேவ்விடம் பவித்ராவை ஒப்படைத்து விட்டு ஊர் வந்து சேர்ந்தனர். அவனால் தனியாக அவளைப் பார்த்துக்கொள்ள முடியாமல் போக அவளும் குடிக்கு அடிமையாகி இருந்ததால் அவளை சகல வித செலவுகளும் செய்து ஆஸ்பிட்டலில் சேர்த்து பார்த்துக் கொண்டான் தேவ்.



குழந்தை பிறக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் அங்கிருந்தவள் குழந்தை பிறந்தவுடன் முன்பு தன்னுடன் பழகிய ஒருவன் இங்கு வேலை செய்வதை ரொம்ப நாளாகப் பார்த்தவள் அவனிடம் கெஞ்சி எப்படியோ சம்மதிக்க வைத்து அவன் உதவியுடன் அந்த இடத்தை விட்டே தப்பி ஓடி விட்டாள் பவித்ரா.



அன்று தான் தேவ் அவளைக் கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு பவித்ரா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த செய்தியைப் பவித்ரா வீட்டிற்கும் பின் தன் தாய்க்கும் தெரியப்படுத்த இப்படி கைக்குழந்தையுடன் தன் மகன் வாழ்வு தன்னால் தான் இப்படி அழிந்து விட்டதை நினைத்து அதிர்ச்சியில் பேச்சிழந்து கைகால் வராமல் அவரும் படுக்கையில் படுத்து விட இன்று வரை அவர் உடல் தேறவில்லை.



அதே மாதிரி ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டுத் தன் பேத்தி இப்படி எங்கோ ஓடி விட்டதை அறிந்த படுக்கையிலிருந்த விசாலத்தின் தந்தையும் இறந்து விட



தேவ்தான் கலங்கிப் போனான். பவித்ராவைக் காணவில்லை, தாயோ படுத்த படுக்கையாக இருக்க, தாத்தாவும் இறந்து விட கைக் குழந்தையுடன் அவன் தான் தவித்துப் போனான்.



குழந்தையைப் பவித்ரா குடும்பத்தில் மாதா மாதம் பணம் தருவதாகச் சொல்லிப் பார்த்துக்கச் சொல்ல அதற்கும் முடியாதுனு சொல்லி விட்டார்கள். தேவ்வுக்கும் பவித்ராவுக்கும் திருமணம் நடந்தது இங்கு இந்தியாவில் யாருக்கும் தெரியாது. திருமணம் நடந்த அன்றே தேவ்வின் தந்தை இறந்து விட்டதால் அவருடைய முதல் வருட காரியம் முடிந்த உடனே பவித்ராவை அழைத்து வந்து எல்லோரிடமும் சொல்லலாம்னு நினைத்திருக்க இதற்குள் குழந்தை பிறந்த உடன் பவித்ரா காணாமல் போய் விட அமெரிக்காவில் இருந்து அவன் கைக் குழந்தையுடன் வரும் போதே அவன் மனைவிக்கும் அவனுக்கும் கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்து விட்டதாகவே எல்லோரும் நினைத்தனர். அது அவன் தாய் மாமன் மகள் என்பதே யாருக்கும் தெரியாது. பவித்ரா வீட்டிலும் இதை யாரும் வெளியே சொல்லவில்லை. குழந்தை கொஞ்சம் வளர்ந்து குழந்தையின் தாய் பெயர் என்னனு ஸ்கூலில் சேர்க்கும் போது தான் பவித்ரா என்பதே அரசல் புரசலாக வெளியே தெரிந்தது.



இப்படியாக அவரவர் வாழ்க்கை போய்க் கொண்டிருக்க, பிரபுவின் குடும்பத்தார் ஒரு பெரிய இடத்தை விற்க முனைந்த போது தான் ஆரம்பித்தது பிரச்சனை. பிரபுவின் தாத்தா அனைத்து சொத்தையும் தன் அனைத்து பிள்ளைகளுக்கும் சரி சம பங்காகக் கொடுத்தவர் பிரபுவும் அவன் அப்பாவும் அவர்கள் பெயரில் இருந்ததை எல்லாம் விற்று விட அதனால் அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. தாத்தா சொத்தில் பேரனுக்கு உரிமை உண்டு என்ற முறையில் அவன் பின்னாளில் வழக்கு தொடுப்பான்னு தெரிந்தே அதை முறியடிக்கும் விதத்திலேயே வக்கீலிடம் ஆலோசித்து அதன் படியே உயில் எழுதி வைத்தார்.



பவித்ராவின் பங்கை மட்டும் பிறக்கப் போகும் பவித்ராவின் குழந்தைக்கு எழுதி வைத்தவர் கார்டியனாக தேவ்வைப் போட்டு விட்டார். முதலில் அவர் தேவ் பெயரில் தான் எழுத இருந்தார். ஆனால் விசாலம் தான் மறுத்து விட எவ்வளவோ பிடிவாதமாக இருந்தும் அவர், அவர் பிடியிலேயே இருக்க கடைசியில் குழந்தை பெயருக்குனு ஆனது. இது தேவ் தாய்க்கும் அவன் தாத்தாவுக்கும் மட்டும் தான் தெரியும்.



இது தெரியாமல் பிரபு அந்த இடத்தை விற்க போக, அப்போது தான் தங்களுக்கு மட்டும் எதுவும் எழுதி வைக்காமல் சொத்து முழுவதையும் சம பங்காக அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தது மட்டும் இல்லாமல் மேற்கொண்டு அவன் வழக்கு தொடர்ந்து அவன் பங்கைப் பெற முடியாது என்பதையும் அறிந்தவன் உடனே ருத்ரா பெயரில் உள்ள சொத்தை அடைய ஆசைப்பட்டான்.



அதனால் கோயம்புத்தூர் கோர்ட்டில் ருத்ரா, தன் தங்கைக்கும் தேவ்வுக்கும் பிறந்த குழந்தை இல்லைனு அது வேறு யாருக்கோ பிறந்த குழந்தை என்பதால் தேவ்வைக் கார்டியனில் இருந்து விலக்கி அங்கு தன்னை கார்டியனாகப் போடச் சொல்லியும் ருத்ராவைத் தன்னிடம் கொடுக்க சொல்லியும் கேட்டு வழக்கு தொடுத்தான் பிரபு. ஆனால் இந்த விஷயம் வெளியில் தெரியாமல் தன் பணபலத்தாலும் ஆள் பலத்தாலும் ருத்ராவைத் தன் குழந்தை தான்னு நிரூபித்துத் தன்னிடமே இருக்கும் படி தீர்பை எழுத வைத்து விட்டான் தேவ்.



அப்போதும் பிரபுவும் அவன் மாமா மார்த்தாண்டமும் விடாமல் திரும்பவும் சென்னை ஐ கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த முறை பிரபுவுக்குத் தெரிந்த அதே சமயம் தேவ்வுக்கு எதிரான ஒருவர் நீதிபதியாக இருந்ததால் பிரபுவுக்குச் சாதகமாக தீர்ப்பு வர இருந்ததைத் தான் தேவ் தன் யுக்தியால் தடுத்து நிறுத்தினான்.



ஆனால் இது திரும்பத் திரும்ப தொடரும் என்பதால் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தவன், பவித்ரா இப்போது இல்லாததால் பவித்ராவுக்குப் பதில் அங்கு தேவ் மனைவி என்ற முறையில் வேறு ஒரு பெண்ணை தகுந்த சாட்சியங்களுடன் அனைத்தையும் கோர்ட்டில் சமர்ப்பித்தால் தான் பார்த்துக்கொள்வதாக அவன் தந்தையின் நண்பர் சொல்லி விட



‘உண்மையாகவே அந்த இடத்தில் ஒரு பெண்ண நிறுத்திக் காமிக்கணுமா? வெறும் பேப்பர்ஸ் சப்மிட் பண்ணக் கூடாதா? அத ஏத்துக்க மாட்டாங்களானு?’ தேவ் கேட்க ‘இல்ல, கண்டிப்பா கோர்ட்டில் அந்த பெண்ண ஆஜர் ஆக சொல்லுவாங்க. அப்படி இல்லனாலும் போட்டோவாது வேணும். அதில் தெரியாத பொண்ணோட போட்டோ வைக்கறது ரிஸ்க். அதனால உங்களுக்குத் தெரிஞ்ச பெண் இருந்தா சேஃப்’ என்று சொல்லி விட அந்த நேரத்தில் தான் தேவ் மித்ராவைப் பார்த்தது.



இதற்கு இடையில் பவித்ராவைத் தேடச் சொல்லிய இடத்திலிருந்து அவளைப் பற்றிய தகவல் வந்தது. அதுவும் மித்ரா தான் தேவ் மனைவி, ருத்ராவோட தாய் என்பதை எல்லாம் கோர்ட்டில் வைத்து அந்த கேசை ஒண்ணும் இல்லாமல் முடித்த பிறகுதான் தெரிய வந்தது.





அதுவும் சாதாரண நிலையில் கிடைக்கவில்லை. பவித்ரா அமெரிக்காவிலிருந்து தன் நண்பனுடன் ஆஸ்திரேலியா போனவள் முழுக்க முழுக்க குடி மட்டும் இல்லாமல் போதை மருந்துக்கும் அடிமையாகி அதிலேயே ஊறிப் போய் மயக்கத்தில் இருப்பது வழக்கமாகிப் போனது.



அப்படி மயக்கத்தில் இருந்த அவளை ஒருநாள் நான்கு பேர் சேர்ந்து வீணாக்கி விட தனக்கு நடந்ததைக் கூட அறியாமலே அவள் சுயநினைவை இழந்து படுத்தப் படுக்கையாகி விட்டாள். பின் அவளைத் திரும்ப அமெரிக்கா அனுப்ப நினைத்ஶ்ரீஶ்ரீது அங்குள்ள தேவ்வின் நண்பருக்குத் தெரியப்படுத்த அவர் தேவ்விடம் விவரம் சொல்லவும் உடனே அவளை லண்டன் அனுப்பச் சொல்லி தனக்குத் தெரிந்த டாக்டர் நண்பர் மூலம் அவளைப் பரிசோதித்துத் தினம் தினம் அவள் சம்மந்தப் பட்டதைச் தனக்கு சொல்லச் சொன்னான் தேவ்.



பவித்ரா தேவ் கட்டுப்பாட்டில் வந்து அதிக பட்சம் இரண்டு மாதம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. அவள் உடல் நிலை மிகவும் பலவீனம் ஆகி இறுதியில் ஒரு நாள் இறந்தே போய் விட்டாள்.



யாரோ ஒருவரிடம் சொல்லி அவளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யச் சொல்ல தேவ் விரும்பவில்லை. ஏன் என்றால் இப்போது மித்ரா அவன் வாழ்வில் வந்து விட்டாள் என்னும் போது அவனே கூட இருந்து அனைத்தையும் முடித்து அவள் தன் வாழ்வில் வந்ததற்கான அடையாளமே இல்லாமல் அழிக்க நினைத்ததால் அவனே சென்று அனைத்தும் முடித்துவிட்டு வந்தான் தேவ்.



இது தான் தேவ்வின் வாழ்வில் நடந்தது. இவை எல்லாவற்றையும் மித்ராவிடம் சொல்லி முடித்தவன் “இது தான் ஹாசினி என் வாழ்க்கையில் நடந்தது. இதை உன் கிட்ட மறைக்கணும்னோ இல்ல உன்னை ஏமாத்தணும்னோ நான் நினைக்கல. இப்போது இல்லனாலும் நிச்சயம் ஒரு நாள் நான் இதை எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லி இருப்பன். ஆனா மாமா மூலமா இன்னைக்கே எல்லாமே இப்படி ஒரு சூழ்நிலைல உனக்கு தெரிய வரும்னு நான் நினைக்கல.



இடையில ஒரு வாரம் நான் அமெரிக்க போய் இருந்தன் இல்ல? அது பவித்ரா விஷயமா தான் லண்டன் போய் இருந்தன். அவ சம்மந்தப் பட்டது எல்லாம் முடிச்சி நான் தனி மனிதனா ஆன பிறகு தான்டி உன் கழுத்துல நான் தாலியே கட்டினன்” என்றான் தேவ். வாய் திறந்து எதுவும் பேசாமல் வெறிக்க வெறிக்க அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.



“அதே மாதிரி அந்த பிரபுவையும் மார்த்தாண்டத்தையும் கொன்று போட்டு இந்த கேஸ ஒண்ணும் இல்லாமல் செய்ய எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனா என் அம்மாவுக்காக தான் நான் அதைச் செய்யல.



என் கிட்டையும் என் அப்பா கிட்டையும் ஒரு வார்த்தை கூட கேட்காம அவங்க அண்ணன் உயிர காப்பாற்றவும் தான் பிறந்த வீட்டின் மானத்த காப்பாற்றவும் அவங்களுக்கு உயிருக்கு உயிரான மகனான என் வாழ்வையே பணையம் வெச்சாங்க என் அம்மா. அப்படி இருக்கும் போது நான் எப்படி அவன கொல்ல முடியும்?



ஆனா அப்படி பணையம் வைத்து எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்தும் என்ன பிரோஜனம்? பவித்ரா இப்படி மறுபடியும் போய்டுவானு தெரிஞ்சிருந்தா நிச்சயம் என் மகனுக்கு திருமணம் செய்து இருக்க மாட்டனே என்பது தான் என் தாய் படுக்கையில் படுக்கக் காரணம். பவித்ராவோட குழந்தை என்ற எண்ணத்திலாவது ருத்ராவைப் பார்த்துக் கொள்வார்கள்னு நான் நினைத்திருக்க, அந்தக் குழந்தையைத் தொட்டுப் பார்க்கக் கூட அவங்க யாரும் விரும்பல.



இப்போது மாதிரி அப்போது எனக்கு பக்குவப்பட்ட வயதும் அனுபவமும் இல்ல. படித்து முடிச்ச உடனே என் வாழ்வில் அடுத்தடுத்து இந்த மாதிரி எல்லாம் நடந்து விட, நானும் என்னுடைய கஷ்டங்களுக்கு வடிகாலா அந்த குழந்தையுடனே ஒரு தந்தையாவே என் வாழ்வை கடந்துட்டன். அந்த வினாடிலயிருந்து இந்த வினாடி வரையுமே நான் ருத்ராவ என் குழந்தை இல்லைனு நினைச்சது இல்ல. எங்கனா ஒரு ஹோம்ல விடணும் கூட எனக்குத் தோனினது இல்ல ஹாசினி.





என் அப்பா தாத்தா இறப்பு என் அம்மா படுத்த படுக்கையா போனது பவித்ரா என் வாழ்வில் வந்ததுனு இப்படி எல்லா வகையிலும் தடுமாறி இருந்தப்ப அந்த குழந்தையோட முகத்த பார்த்து தான் நான் எல்லாத்தையும் மறந்து மாறுனன்.



ருத்ரா கேஸ்ல நான் ஜெயிச்சிட்டனு தெரிஞ்சவுடனே நேரம் பார்த்து உன்ன அவன் கொல்லப் பார்த்தான். அப்பவும் அவன ஆயுள் கைதியா ஜெயில்ல உட்கார வைக்கணும்னு நினைச்சேனே தவிர அவனை சாகடிக்கவோ இல்லை உணர்வு இல்லாமல் படுக்க வைக்கவோ நினைக்கல” - தேவ்



இப்போதும் மித்ரா எதுவும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க



“என்ன ஆச்சிடி? எதாவது வாயத் திறந்து பேசு ஹாசினி” - தேவ்



“அப்….. போ…. அப்போ…. உங்களுக்கு நிஜமாவே கல்யாணம் ஆகலையானு?” மித்ரா திக்கித் திணறிக் கேட்க



அவள் கேட்ட விதமே அவனுக்குள் அபாய மணியை ஒலிக்க வைக்க அவள் முகத்தையே ஊடுருவிப் பார்த்தவன் “ஆமாம்” என்றான் ஒற்றைச் சொல்லாக.



“அப்போ உங்க கல்யாணம் என் கூட தானா? நான் தான் உங்க முதல் மனைவியா? அப்…. போ…. என் கூட தா…ன் உங்க வாழ்க்கையையே நீங்க ஆரம்பிக்கப் போறீங்களா?” கண்களில் கண்ணீர் குளமாகத் தேங்கி விட உயிரே உருகும் குரலில் அவள் அவனைக் கேட்க



அவள் கண்களையே ஊடுருவிப் பார்த்தவன் பின் தன் கண்களை ஒரு நிமிடம் மூடித் திறந்து “ஆமாம்” என்றான் மீண்டும் ஒற்றைச் சொல்லாக.



“ஏன் தேவ் இப்படி பண்ணிங்க? ஏன் இப்படி என்கிட்ட மறச்சி செய்திங்கனு?” அவள் குமுற.



“நான் இப்போ என்னடி செய்துட்டன்?” - தேவ்



“என்னை ஏன் கல்யாணம் பண்ணிங்க? உங்களுக்குக் கல்யாணம் ஆகி நீங்க ஒரு குழந்தைக்குத் தகப்பனு இல்ல நினைச்சன்?!” - மித்ரா



“ஏன், அப்படி செய்ததால என்ன? இப்போ அப்படி என்ன நடந்து போச்சி? என்னை மாதிரி வாழ்க்கையைத் தொடங்காதவங்க யாரும் உன்ன மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணக் கூடாதா?…..” பிறகு ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்திக் கொண்டு சும்மா சும்மா என்னப் பேச வைக்காத. உன் பைத்தியக்காரத் தனம் தெரிஞ்சி தான் அவ்வளவு அவசர அவசரமா நம்ம கல்யாணத்த பண்ணேன்.



அவன் அப்படி. சொன்ன வார்த்தையில் ஏதோ ஒன்றை அறிந்தவள் “அப்ப நம்ம திருமணத்திற்கு முன்பே என்னப் பற்றி தெரியுமா? அதிலும் எனக்கு நடந்தது எல்லாமே தெரியுமா உங்களுக்குனு?!” மித்ரா மனதில் மூண்ட ஒரு கலவரத்துடனே கேட்க



“…….” தேவ் அமைதியாக இருக்க



“சொல்லுங்க அத்தான், எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும்னு!” மித்ரா பிடிவாதத்திலே நிற்க



“தெரியும்….” என்றான் தன் கண்களால் அவள் கண்களுக்குள் எதையோ உணர்த்திக் கொண்டே தேவ் ஒற்றை வார்த்தையாக



“அப்போ ருத்ரா உயிருக்கு ஆபத்துனு பொய் சொல்லி என்ன துடிக்க வச்சிங்க இல்ல?” என்றாள் ஓர் வெற்றுக் குரலில்



“இல்ல ஹாசினி, இல்ல! அன்னைக்கு நிஜமாவே குழந்த மாடிப்படியில இருந்து விழுந்து கஷ்டப் பட்டுச்சி. ஆனா நீ வர்றதுக்குள்ள காப்பாற்றிட்டோம். அப்போ அதை உன்கிட்ட மறைச்சது மட்டும் தான் தப்பு!” - தேவ்



“அப்போ எனக்கு வாழ்க்கை கொடுக்கறிங்களா?” - மித்ரா



“போடி பைத்தியக்காரி! யாருக்கு யார் வாழ்க்கை கொடுக்கறது? உன்ன விரும்பி மனசார என் மனைவியா உன்ன ஏத்துக்கிட்ட பிறகு தான் உன் கடந்த காலத்தைப் பற்றியே தெரிய வந்தது. அதனால தான் எல்லாத்தையும் மறைச்சி உன்னக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணன். நான் செய்த தப்பு அது மட்டும் தான்! அதை செய்ததுனால உன் கண்ணுக்கு நான் கெட்டவனாகவோ இல்ல வில்லனாகவோ தெரிஞ்சா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. என்னைக்கு நீ என்ன புரிஞ்சிப்பனு தெரியல?! போதும்டி! உன் கிட்ட பேசிப் பேசி என்னப் புரியவச்சி புரியவச்சி நானும் தோத்து போய்ட்டன்!” என்று விரக்தியில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தவன் அதே கோபத்துடனே எழுந்து வெளியே சென்று விட்டான் தேவ்.



பின்னே, என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்பவளிடம் என்ன பேச முடியும்?



அப்படி போனவன் இரவு தாமதமாகத் தான் வீடு வந்தான். அன்று மட்டும் இல்லாமல் பிறகு வந்த நாட்களிலும் காலையில் சீக்கிரமாக வெளியே போனவன் இரவு தாமதமாகத் தான் வீட்டுக்கு வந்தான். மதியத்திலும் வீட்டுக்கு வருவது இல்லை. இருவரும் பேசிக் கொள்ளவில்லை.



‘தன்னைப் புரிந்து கொண்டு அவளாகவே வந்து பேசட்டும்னு’ தேவ் இருக்க, மித்ராவோ வேறு ஒரு யோசனையில் இருந்தாள். ‘என்ன தான் தாம்பத்ய வாழ்வு வேண்டாம்னு தேவ் சொன்னாலும் அப்படி ஒரு வாழ்வு இல்லாமல் என் தேவ் வாழலாமா? அதுக்கு நானே காரணமாகலாமா?



அன்று தீபக் சொன்ன வார்த்தைக்கு ஏன் எனக்கும் கவுரவமான வாழ்வு கிடைக்காதானு நான் கேட்டு கண்ணீர் விட்டதற்கு இன்று கவுரவமும் காதலும் நல்லவர் ஒருவரிடம் இருந்து கிடைத்த போதும் அதை ஏற்க முடியாமல் போன தனது நிலையை எண்ணி எத்தனையோ முறை மனம் நொந்தவள், இந்த வீட்டில் இருப்பதால் தானே தேவ் கண்ணிலும் கருத்திலும் நாம் பதிந்து போனோம்? நாம் விலகி விட்டால் நிச்சயம் என்னை மறந்து வேறு ஒரு வாழ்வை அவர் தேடிக் கொள்வார்! தேடிக் கொள்ளத் தான் வேண்டும்!’ என்று நினைத்தவள்.



வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து



‘எனக்கு வாழ் நாள் முழுக்க ருத்ரா மட்டும் போதும். வேற யாரும் எனக்கு வேண்டாம். இனி நான் உங்க வாழ்வில் திரும்ப வர மாட்டேன். வீண் முயற்சி செய்து என்னைத் தேட வேண்டாம்!

இப்படிக்கு உங்கள் மனைவி

மித்ரஹாசினி’



என்று தேவ்வுக்கு ஓர் கடிதம் எழுதி அவன் வந்தவுடனே பார்க்கக் கூடிய இடத்தில் வைத்தவள் மானசீகமாக தன் தாத்தாவிடம் மன்னிப்பு கேட்டு தனக்கும் ருத்ராவுக்கும் தேவையானதை எடுத்துக் கொண்டு கை செலவுக்குக் கொஞ்சம் அதிகமாகவே பணத்தையும் எடுத்துக் கொண்டு ருத்ராவுடன் வீட்டை விட்டுப் போய் விட்டாள் மித்ரா.



அவள் போன பிறகு சற்று நேரத்திற்கு எல்லாம் ஏதோ ஒரு ஃபைலை எடுக்க வீட்டுக்கு வந்த தேவ் அந்த கடிதத்தைப் பார்த்து விட அதை எடுத்துப் படித்தவனோ



கண்ணில் ரௌத்திரம் மின்ன, “போடி போ! எப்போ என்ன வேணான்னு போய்ட்டியோ இனி நான் உன்னத் தேடி வர மாட்டன், கூப்பிடவும் மாட்டன்! அதற்கான முயற்சியும் செய்ய மாட்டன்! எத்தனை வருஷம் ஆனாலும் நீயா திரும்ப வர்ற வரை உன் பக்கமே திரும்ப மாட்டான்டி இந்த தேவ்!” என்றவன் தன் கையிலிருந்த கடிதத்தைக் கசக்கித் துர எறிந்து விட்டுத் தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.

 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 30
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Wow Amazing story really suberb entha mathiri story ethu barai padithathe ella

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சிஸ்....
தொடர் உங்க ஆதரவை தாங்க சிஸ் heart beat heart beat heart beat
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN