என்னை தீண்டிவிட்டாய் 10

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மனமோ உன் மனம் அறிந்திட
நீயோ உன் மனதினை
மறைத்து
என் மனதை
வதைக்கிறாய்...

டிக்கெட்டினை வாங்கிவிட்டு ஷாகர் திரும்பும் போது ஆதிரா அமர்ந்திருந்த இடத்தை சிலர் மறைத்தபடி நிற்பதை கண்டவன் முதலில் பெரிதுபடுத்தாமல் விட பின் ஏதோ சரியில்லையென்று தோன்ற ஊன்றி கவனித்தவனது உள்ளம் பதறியது..

அவளை நான்கு முரடர்கள் ஆக்கிரமித்து அவளை இழுத்துசெல்ல முயல அவளோ அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு போராடிக்கொண்டிருந்தாள்.. அந்த நான்கு முடர்களில் ஒருவன் ஆதிராவின் கைகளை பின்புறமாய் வளைத்து பிடித்திருக்க, ஆதிராவால் அவன் பிடியில் இருந்து தன் கைகளை மீட்க முடியவில்லை... அப்போது ஷாகர்

“டேய் யார்டா நீங்க..” என்று அவளை நோக்கி ஓடிவந்தபடி சப்தமிட, அவன் சத்தத்தில் சற்று திடம்பெற்ற ஆதிரா

“சார்... சார்... ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க....” என்று அவனை நோக்கி சப்தமிட்டாள்..

வேகமாய் ஆதிராவை நெருங்கிய ஷாகர் அவளை சூழ்ந்திருந்த முரடர்களை தாக்கத்தொடங்கினான்.. அவன் மனதில் எவ்வாறேனும் ஆதிராவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க இருக்குமிடத்தை பொருட்படுத்தாது தன் தாக்குதலை தொடர்ந்தான்...இரவு நேரமென்பதால் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்க ஷாகருக்கு துணையென்று எவரும் இல்லை... தனித்து நின்று நால்வரையும் தாக்கியவன் ஆதிராவை அழைத்துக்கொண்டு செல்ல முயல யாரோ அவன் பின் மண்டையில் தாக்கிட அது அவன் சுயநினைவை இழக்கச்செய்தது... பின் தலையை பிடித்தபடி மடங்கி அமர்ந்தவனை கண்டு பதறிய ஆதிரா அவனுக்கு உதவ செல்ல அவளை ஒரு முரடன் தன் பிடியில் வைத்திருந்தான்...

ஆதிராவோ ஷாகரை விடச்சொல்லி கெஞ்ச மற்றொரு முரடன் தன் கையிலிருந்த கட்டையால் ஷாகரை தாக்கத்தொடங்கினான்... ஷாகரோ தன் சுயநினைவு கொஞ்ச கொஞ்சமாய் இழந்துகொண்டிருந்த போதிலும் ஆதிராவின் கதறல் அதற்கு தடையாய் இருந்தது... அவனது மனமோ எழுந்து சென்று அவளை காப்பாற்று என்று அவனை உந்த உடலோ நகர மறுத்தது... இவ்வாறு ஷாகர் முற்றாய் சுயநினைவை இழக்க ஆதிராவோ கதறியபடியிருந்தாள்.

அப்போது அங்கு வந்த ஆதிராவின் மாமா அவளை சரமாரியாக அடிக்க அவனை பின்தொடர்ந்து வந்த ஆதிராவால் பொறுக்கியென்று விழிக்கப்படும் சுப்பிரமணியும் அவள் முடியை கொத்தாக பிடித்து தன் ஆத்திரம் தீரும் மட்டும் அவளை அடித்தான்.... ஏற்கனவே பயத்தில் பலவீனமாயிருந்தவளை இவர்கள் தங்கள் முழுப்பலம் கொண்டு அடிக்க அவளும் சுயநினைவு இழந்தாள்...

இருவரையும் தூக்கிக்கொண்டு வந்து தன் குடோனில் அடைத்த சுப்பிரமணி அவனது அடியாட்களிடம்

“டேய் இதுங்க இரண்டு பேரையும் பத்திரமாக பார்த்துக்கோ...நாளைக்கு காலையில இரண்டு பேரையும் பஞ்சாயத்துல நிறுத்தனும்... பஞ்சாயத்துல இதுங்க இரண்டுக்கும் நான் ஒரு முடிவு கட்டுறேன்... இரண்டு பேரும் கண்ணையும் கட்டிடுங்கடா...இரண்டு பேரும் ஒன்னா இருக்கது தெரிஞ்சா தப்பிச்சு போக முயற்சி பண்ணுங்க... நான் சொல்லுறது புரியிதா???” என்று தன் அடியாட்களுக்கு ஆணையிட்டவன் தன் வீட்டிற்கு கிளம்பினான்...

குடோனிலுள்ளே இருந்த ஆதிரா சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தாள்.. கண்விழுத்தவளுக்கு எதுவும் புலப்படாமல் இருக்க முதலில் குழம்பியவள் பின் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு என்ன நடந்தது என்று கண்மூடி யோசித்தவளுக்கு அனைத்தும் நினைவில் வந்தது... அந்த கணம் அவள் மனதில் எவ்வாறேனும் தப்பித்துவிட வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே மேலோங்க எழு முயன்றவளுக்கு அவளது உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை..கைகளும், காலும்,கண்களும் கட்டப்படடிருக்க ஆதிராவிற்கு எப்படி தப்பிப்பதென்று தெரியவில்லை....

என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு அப்போது தான் ஷாகரின் நினைவு வந்தது... சார் சாரென்று அழைத்து பார்த்தவளுக்கு பதிலெதுவும் கிடைக்காமல் போக தன் கட்டுக்களை அவிழ்க்க முயற்சி செய்தாள் ஆதிரா. கண்கள் கட்டியிருந்ததால் அவளால் வேறு எதையும் முயற்சி செய்ய தோன்றவில்லை... சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவளுக்கு சட்டென ஒரு யோசனை தோன்ற அதை நடைமுறைப்படுத்த முயன்றாள்....

மெதுவாக தன் கட்டப்பட்டிருந்த கையினதும் கால்களினதும் உதவியால் விந்தி விந்தி தான் இடத்திலிருந்து நகர்ந்தவள் கைகாலில் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று ஆராயத்தொடங்கினாள். பின்னால் கட்டப்பட்டிருந்த கையால் ஏதேனும் கூர்மையான பொருள் கையில் தட்டுப்படுகிறதா என்று கைகளால் தடவிப்பார்த்தவளுக்கு கையில் ஏதோ உடைந்த கண்ணாடித்துண்டொன்று கீறிய கையை உதறியவள் மெதுவாய் அந்த கண்ணாடித்துண்டை கையில் எடுத்துக்கொண்டவள் அதை கொண்டு தன் கைகளின் கட்டை அவிழ்விக்க முயன்றாள்..

ஆனால் அது அவளுக்கு முழுதாய் கைகொடுக்கவில்லை.. கயிற்றில் சிறுபகுதிமட்டுமே அறுபட்டிருக்க அதை சற்று அசைத்து பார்த்தவளுக்கு அந்த கயிறு கையிலிருந்து வழுக்குவது தெரிய குறுக்காக இருந்த கைகளிரண்டையும் அருகருகாக கொண்டு வந்தவள் லாவகமாக அந்த கயிற்றிலிருந்து தன் கைகளை விடுவித்துக்கொண்டாள்...
விடுவித்த கைகள் உடனடியாக கண்கட்டை அவிழ்த்தது.... இரு கண்களையும் சற்று கசக்கியவிட்டவள் சுற்றும் முற்றும் பார்க்க எதிரே ஷாகர் அவளை போன்றே கட்டப்பட்டு மயக்கத்தில் இருப்பது தெரிந்தது...

தாமதிக்காது தன் கால் கட்டையும் விடுவித்தவள் விரைந்து ஷாகரருகே சென்று அவன் கைகட்டையும் கண்கட்டையும் அவிழ்த்துவிட்டாள்... பின் அவனை எழுப்ப முயல அவனோ எழவில்லை... அவன் மார்பின் மீது காதினை வைத்து இதயத்துடிப்பினை கேட்டவளுக்கு அதன் சந்தம் சரியாக கேட்டிட சற்று ஆசுவாசமடைந்தவள் அவன் உடைகளை தளர்த்திவிட்டவள் அருகில் அவன் மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தாள்..

அது குடோன் என்பதால் தண்ணீர் எதுவும் கிடைக்காமலிருக்க என்ன செய்வது என்று யோசித்தவள் குடோனுக்கு வெளியே எட்டிப்பார்த்தாள்.. வெளியே சுப்பிரமணியின் அடியாட்கள் காவலுக்கு இருக்க அவளால் அங்கிருந்து வெளியேறமுடியவில்லை... என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு மழை கைகொடுத்தது.....

தண்ணீர் பிடித்து கொள்வதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தவளுக்கு எதுவும் தட்டுபடாமல் போக தன் கையே தனக்குதவி என்று முடிவெடுத்தவள் அந்த குடேனின் ஒரு புறமாயிருந்த ஜன்னலை மெதுவாக திறந்து தன் முந்தானையை வெளியே நீட்டி மழை நீரில் நன்றாக நனைத்துக்கொண்டாள்...... நன்றாக நனைந்துவிட்டது என்று உறுதி செய்து கொண்டவள், ஷாகரை தூக்கி தன் மடியிலில் வைத்துக்கொண்டு அவன் முகம் முழுதும் ஈரத்துணியால் ஒற்றி எடுத்தாள்.... ஈரத்துணி முகத்தில் பட்டதும் மெதுவாய் ஷாகரின் கருவிழிகள் அசைய மீண்டும் ஆதிரா ஈரத்துணியால் அவன் முகம் முழுதும் ஒற்றி எடுத்தாள்..

அதன் விளைவாக ஷாகர் கண்விழிக்க ஆதிராவிற்கு அப்போது தான் உயிரே வந்தது போல் இருந்தது... அவனை மெதுவாக எழுந்த அமரச்செய்தாள் ஆதிரா..
ஷாகரோ தன் பின்னந்தலையை பிடித்தபடி எழுந்து அமர அதை கண்ட ஆதிரா

“சார்... தலை வலிக்கிதா...காட்டுங்க பார்ப்போம்..” என்றவள் அவன் பின்னந்தலையை பார்க்க அதில் இரத்தம் உறைந்திருந்தது...

“சார் இரத்தம் உறைஞ்சிருக்கு.. இருங்க நான் கட்டு போட்டு விடுறேன்...” என்றவள் தன் முந்தானையை நான்காக கிழித்து அதில் ஒரு துண்டை மழை நீரில் ஈரப்படுத்தி எடுத்துவந்தவள் அவன் பின்னந்தலையில் உறைந்திருந்த இரத்தத்தை சுத்தப்படுத்தினாள்.. மற்றைய துண்டால் அடிப்பட்ட இடத்திற்கு கட்டுப்போட்டவள் தனது திருப்திக்காக இன்னொரு கட்டையும் இட்டும்..மீதமிருந்த துணியை நனைத்து வந்தவள் ஷாகரிடம்

“சார்.. இங்க தண்ணி இல்லை...அதான் துணியை மழைத்தண்ணியல நல்லா நனைச்சிட்டு வந்திருக்கேன்.. நான் இந்த துணியை பிழியிறேன்.....நீங்க தொண்டை ஈரமாகுற அளவுக்கு தண்ணியை குடிங்க... இப்போ நமக்கு இதை தவிர வேற வழி இல்ல சார்..” என்று ஆதிரா கூற அதை ஏற்றவன் அவள் சொன்னபடி நீரை அருந்தினான்...

நீரை அருந்தியதும் சற்று தெம்படைந்தவன்

“ஆதிரா.. நாம எங்க இருக்கோம்..?”

“சார் நம்மை அந்த பொறுக்கி அவனோட குடோன்ல அடைச்சி வச்சிருக்கான்...காவலுக்கு ஆளும் போட்டிருக்கான்..இப்போ எப்படி சார் நாம தப்பிக்கிறது??” என்று கேட்க அப்போது தான் ஷாகருக்கு நடந்தது அனைத்தும் நினைவில் வர இதற்கு வேறு விதமாய் முடிவு கட்டவேண்டுமென எண்ணியவன் ஆதிராவிடம்

“இங்க பாரு ஆதிரா... பிரச்சினை இதோட முடியிற மாதிரி எனக்கு தெரியலை....” என்று ஷாகர் ஆதிராவோ

“சார் அப்போ...” என்று கலங்கியவளிடம்

“இங்க பாரு.... பிரச்சினை இதோடு முடியிற மாதிரி இல்லைனு தான் சொன்னேன்... முடிவே இல்லைனு சொல்லலை...இப்போ நாம முதல்ல இங்கயிருந்து தப்பிக்கிறதுக்கான வழியை தேடனும்....இங்கயிருந்து தப்பிச்சதும் நேரா நாம பிரசிடன்ட் அங்கிள் வீட்டுக்கு போறோம்... அங்க நான் என்ன சொன்னாலும் மறுக்காமல் ஆமானு தலையாட்டனும்.. எது சொன்னாலும்... புரியிதா... ஏதாவது மாத்தி சொன்னா என்னால உன்னை காப்பாத்தமுடியாது.... இன்னொரு விஷயம் நான் செய்றது எல்லாமே உனக்காக தான்.... உன்னை பத்திரமா இங்க இருந்து கூட்டிட்டு போகனுங்கிறதுக்காக தான்.... அதனால என்ன நடந்தாலும் என்னை தப்பாவோ சந்தேகமோ படத..புரியிதா???” என்று ஷாகர் கேட்க ஆதிராவும் எதுவும் கூறாது சரியென்றாள்.....

பின் இருவரும் சேர்ந்து தப்பிப்பதற்கு இடம் தேட எந்த வழியும் கிட்டவில்லை... இருவரும் என்ன செய்வதென்று புரியாது நிலத்தில் அமர்ந்துவிட்டனர்...
அப்போது ஷாகர் தன் சட்டையில் ஈரத்தை உணர்ந்தவன் தலையுயர்த்தி மேலே பார்க்க அங்கே கூரையிலிருந்து நீர் வழிந்துக்கொண்டிருந்தது....
சட்டென்று ஏதோ யோசனை தோன்ற எழுந்தவன் அங்கு ஓரமாயிருந்த ஒரு நாற்காலியையும்,அதற்கு மேல் ஒரு ஸ்டூலையும் வைத்து, அதை ஆதிராவிடம் பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு அதன் மேலே ஏறியவன் கூரையை ஆராய்ந்தான்....

அது வெறும் ஓடுகளால் வேயப்பட்டிருக்க அதை தட்டி பார்த்தவனுக்கு அந்த ஓடுகள் அவர்களுக்கான பாதையை உருவாக்குமென அறிந்தவன் மெதுவாத ஒவ்வொரு ஓடாக பிடித்து வெளி புறமாக தள்ளினான்..

வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்ததால் அடியாட்கள் மழைக்கு ஒதுங்கியிருக்க அவர்கள் கூரையினூடாக வெளியேறுவது அவர்களுக்கு தெரியவில்லை....
தாங்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக வழி உருவாக்கிய ஷாகர் கீழே இறங்கி ஆதிராவை மேலே ஏற்றிவிட்டான்... அவளும் லாவகமாக ஏறிய கூரைக்கு வெளியே வந்தவள் ஷாகர் வெளியேறுவதற்கு உதவினாள்..

இருவரும் அங்கிருந்து வெளியேறி ஆதிராவின் வழிகாட்டுதலில் பிரசிடண்டின் வீட்டினை அடைந்தனர்.. ஷாகர் வீட்டுக்கதவினை தட்ட ஞானபண்டிதரே வந்து கதவல திறந்தார்...

ஷாகரை பார்த்த ஞானப்பண்டிதர்

“என்ன தம்பி இந்த நேரத்துல கொட்டுற மழையில இங்க வந்திருக்கீங்க..உள்ள வாங்க..” என்றவர் அப்போது தான் ஷாகரின் முதுகிற்கு பின்னாலிருந்து வெளியே வந்த ஆதிராவை பார்த்தவர்

“நீ .. நந்தராசுட்டு அக்கா மக தானே..??” என்று கேட்க ஆதிராவும் கலக்கத்துடன் தலையாட்டினாள்..

“சரி...முதல்ல இரண்டு பேரும் உள்ள வாங்க..” என்றவர் தன் மனையாளை அழைத்து அவர்களுக்கு துண்டு கொடுக்க சொன்னார்..

பின் ஷாகரிடம்

“தம்பி என்ன பிரச்சினை.. நீங்க எதுக்கு இந்த பிள்ளையை இந்த நேரத்துல கூட்டிட்டு வந்தீங்க.. அதுக்கு நாளைக்கு அந்த சுப்பிரமணியத்துக்கூட கல்யாணம்னு சொன்னாங்களே.... பரிசம் போட்ட பொண்ணு இப்படி வெளியில வரக்கூடாது...”

“அங்கிள்.. அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை... “

“என்ன தம்பி சொல்லுறீங்க..?? ஏம்புள்ள இந்த தம்பி சொல்லுறது நெசமா??” என்று கேட்க ஆதிராவும் தலையாட்ட சற்று யோசனையானார் ஞானபண்டிதர்..

“அது சரி தம்பி.. இந்த புள்ளையை நீங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க... உங்களுக்கு என்ன தலையில அடிபட்டிருக்கு??” என்று கேட்க ஷாகரோ

“நானும் ஆதிராவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் அங்கிள்.. அவ அம்மாவுக்கும் நாங்க விரும்புறது தெரியும்.. ஆனா இவளோட மாமா பணத்துக்கு ஆசைபட்டு இவளை அந்த சுப்பிரமணியத்தை கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் கொடுத்திருக்காரு.. ஆதிராவையும் அவ அம்மாவையும் ரூமுக்குள்ள அடைச்சிருக்காங்க.. இவ எப்படியோ தப்பிச்சி என்கிட்ட வந்துட்டா.. நானும் இவளை காப்பாத்த முயற்சி செய்தப்போ அந்த சுப்பிரமணியும் அவன் ஆளுங்களும் எங்க இரண்டு பேரையும் அடிச்சி அவனோட குடோன்ல அடைச்சிவச்சிட்டாங்க.. எப்படியோ அங்க இருந்து தப்பிச்சி உங்க கிட்ட வந்துட்டோம்.. நீங்க தான் அங்கிள் எங்களுக்கு உதவி செய்யனும்.. எனக்கு இந்த ஊருல உங்களை தவிர வேறு யாரையும் தெரியாது.... என்னையும் ஆதிராவையும் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வச்சாலே போதும் அங்கிள்... இது தான் நீங்க எங்களுக்கு செய்யக்கூடிய பெரிய உதவி....” என்று ஷாகர் கூற ஆதிராவோ அவன் சொன்னவற்றை கேட்டு ஆடிப்போயிருந்தான்.... அவன் வேறு ஏதாவது கூறி தன்னை காப்பாற்றுவான் என்று இவள் எண்ணியிருக்க அவனோ காதல் என்று ஒற்றை வார்த்தையில் கதைக்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டான்...

இருவரையும் சந்தேகத்தோடு ஞானப்பண்டிதர் பார்க்க ஷாகரோ அவரை நம்ப வைப்பதற்காக ஆதிராவின் கையை இறுக்கப்பிடித்தபடி அவர் காலில் விழ முயல அவர்களை தடுத்த ஞானப்பண்டிதர்

“என்ன தம்பி பண்ணுறீங்க.... எழுந்திரீங்க.. “ என்று சொல்ல இருவரும் எழுந்து நின்றனர்..
“நீங்க சொல்லுறதெல்லாம் சரி.. ஆனா..”

“அங்கிள்.. ப்ளீஸ் அங்கிள்.. எங்களை சேர்த்து வைங்க... நான் ஆதிராவை கூப்பிட்டுகிட்டு என்னோட ஊருக்கு போயிர்றேன்.. அதுக்கு மட்டும் உதவி பண்ணுங்க...”

“இங்க பாருங்க தம்பி.. உங்க நிலைமை புரியிது.. அந்த சுப்பிரமணி இந்த விஷயத்தை சும்மா விடமாட்டான்.. சும்மாவே ஆடுவான்.. இப்போ அவனுக்கு ஆட மேடையே கிடைச்சிருக்கு...இனி சும்மா இருக்கமாட்டான்.. அதோடு இந்த பொண்ணு எங்க ஊருப்பொண்ணு... இப்படி ஊருக்கு சொல்லாமல் கொள்ளாமல் வேளியே போனா அவளோட நடத்தையை ஊர்மக்கள தப்பா பேசுவாங்க.... அதனால நாளைக்கு காலையில பஞ்சாயத்துல வச்சி எல்லார் முன்னுக்கும் அறிவிச்சிட்டு நீங்க அவளை இங்கேயிருந்து அழைச்சிட்டு போங்க.. அப்போ தான் சுப்பிரமணியால எந்த பிரச்சினையும் வராது.. அதோடு அந்த பொண்ணுக்கும் எந்த அவமரியாதையும் வராது.. நான் சொல்லுறது புரியிதா தம்பி..??”

“புரியிது அங்கிள்... நாங்க நாளைக்கு காலையில பஞ்சாயத்துக்கு வந்து எல்லா பிரச்சினையும் சுமூகமாக முடிச்சிட்டு ஊருக்கு கிளம்புறோம்..”

“நல்லது தம்பி.. நீங்க போயிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்க தம்பி..” என்றவர் தன் மனையாளிடம் அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக அனைத்தையும் செய்துகொடுக்கச்சொன்னார்..

இரவு மறைந்து விடியல் பிறக்க அனைவரும் பஞ்சாயத்து கூட்டத்தில் கூடி நின்றனர்..

ஒருபுறம் ஆதிராவும் ஷாகரும் இருக்க மறுபுறம் சுப்பிரமணியும் ஆதிராவின் தாய்மாமனும் நின்றிருந்தனர்......
பஞ்சாயத்து தலைவர் என்னவென்று விசாரிக்க ஷாகர் ஞானப்பண்டிதரிடம் கூறியதனைத்தையும் மீண்டும் ஒருமுறை ஊர்மக்கள் முன் ஒப்புவித்தான்..
ஆனால் ஆதிராவின் தாய்மாமனோ இதை ஒப்புகொள்ளவில்லை...

“ஐயா இந்த டவுனுக்காரன் எங்க வீட்டு பொண்ணை பத்தி புரளி பேசுறான்... என் அக்கா பொண்ணு தங்கம்ங்க... இந்த டவுனுக்கார பய தான் கண்டதையும் சொல்லி எங்க பொண்ணு மனச மாத்தி அது வீட்டாளுங்க உதறித்தள்ளிட்டு வர்றமாதிரி பண்ணியிருக்கான்..” என்று கூற பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லும் குழுவிலிருந்த ஒருவர்

“எலேய் ராசு.. நீ பேசுறது கிறுக்குத்தனம்னு உனக்கு புரியலை..?? உன் அக்கா பொண்ணு என்ன உலகம் தெரியாத பொண்ணா...?? புதுசா வந்தவன் ஏதாவது சொன்னா அவன் கூட போறதுக்கு... சாக்கு சொல்லனும் எதையாவது உளறாத.. ஏம்மா அந்த டவுனு தம்பி சொல்லுறது உண்மையா??” என்று அந்த பெரியவர் ஆதிராவிடம் கேட்க ஆதிராவோ குனிந்திருந்த தன் தலையை உயர்த்தி கூட்டத்தை ஒருமுறை பார்த்தவள் எதிரிலிருந்த தன் மாமனிலேயே அவள் பார்வை நிலைக்குத்தி நின்றது... அவளது பார்வையில் ஏதோ கள்ளத்தனம் இருப்பதை கண்டுகொண்ட ஆதிராவின் மாமா

“பார்த்தீங்களா ஐயா.. புள்ள பயத்துல என்ன சொல்லுறதுனு தெரியாமல் நிற்குது.. இதுலயே புரியலை.. இவன் தான் எங்க வீட்டு பொண்ணை ஏமாத்தி கூட்டிட்டு போக பார்த்திருக்கான்..” என்று மீண்டும் ஷாகர் மீது குற்றம் சுமத்த ஷாகரோ ஆதிராவை முறைத்தான்.. ஆனால் அவளது பார்வை வேறு யாரையோ தேடுவதை கண்டவனுக்கு மனதில் ஒரு விஷயம் தோன்ற

“ஐயா.. நாங்க இரண்டு பேரும் விரும்புனது ஆதிராவோட அம்மாவுக்கு தெரியும்.. வேணும்னா நீங்க அவங்களை கூப்பிட்டு விசாரிச்சு பாருங்க..” என்று ஷாகர் சொல்ல ஆதிரா கண்களாலே ஆதிராவுக்கு நன்றி சொன்னாள்..

பஞ்சாயத்து தலைவரும் ஆதிராவின் அன்னையை பஞ்சாயத்துக்கு அழைத்து வருமாறு ஆதிராவின் மாமாவிடம் கூற அவனோ

“இல்லை.. ஐயா.. அது.. அக்காவுக்கு உடம்பு சரியில்ல.. அதால இங்க வரமுடியாது...” என்று கூற அந்த கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி

“ஐயா குறுக்கே பேசுறதுக்கு மன்னிக்கனும் தெய்வநாயகி அக்கா நல்லா தான் இருக்கு... அவக வீட்டுல தான் அவங்களை அடச்சி வச்சிருக்காங்க...” என்று அப்பெண்மணி கூற பஞ்சாயத்து தலைவரோ

“என்னலே ராசு... இந்த புள்ள வேற ஏதோ சொல்லுது... உண்மையை சொல்லுலே... இல்லை உன்னை ஊரைவிட்டு விலக்கி வைக்கனும்னு தீர்ப்பு சொல்லிருவேன்..” என்று சொல்ல அதில் பதறிய ஆதிராவின் மாமா ஆதிராவின் அன்னையை அழைத்துவருவதாக கூறி அங்கிருந்து சென்றார்....

சில நிமிடங்களின் தன் அக்காவை கைத்தாங்கலாய் அழைத்து வந்தார் ஆதிராவின் மாமா...
நடக்குமுடியாமல் நடந்து வந்தவரின் கன்னமிரண்டும் கைத்தடம் பதித்திருக்க நெற்றியில் துணியால் கட்டுபோடப்பட்டிருந்தது... மிகச் சிரமப்பட்டு நடந்து வந்த தன் அன்னையை பார்த்த ஆதிரா அம்மா என்றபடி அவருகே சென்றவளுக்கு கண்களில் நீர் நிற்கவில்லை....

அவர் கன்னத்தை கைகளால் தாங்கியவள் அழுதபடி

“அம்மா என்னாச்சுமா... யாரு உங்களை என்ன பண்ணாமா??? ஏன்மா உடம்பெல்லாம் இவ்வளவு காயமாக இருக்கு???” என்று கேட்டபடி அழுதவள் தன் மாமனிடமிருந்து தன் அன்னையை தாங்கிக்கொண்டாள்...

ஆதிராவின் அன்னையின் நிலையை பார்த்த ஊர்மக்களுக்கும் பஞ்சாயத்து குழுவினருக்கும் இப்போது ஷாகர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் விலகியது...
ஆதிராவின் அம்மா அமருவதற்கு கதிரை எடுத்துப்போட சொன்ன பஞ்சாயத்து தலைவர் அவர் அமர்ந்ததும்

“அம்மாடி தெய்வநாயகி.. ஏன்மா உடம்பெல்லாம் இப்படி ரணமாகியிருக்கு?? யாரு உன்னை என்ன பண்ணா??” என்று கேட்க தன் தம்பியை ஒரு பார்வை பார்த்த

தெய்வநாயகி பஞ்சாயத்து குழுவிடம்

“இந்தா இருக்கானே... என் கூட பிறந்தவன்.. அவனோட பணத்தாசைக்காக என் பொண்ணோட வாழ்க்கையை அடமானம் வைக்க பார்த்தான்... நான் முடியாதுனு மறுத்ததுக்கு... எ...என்னை...கூடப்பிறந்தவனு கூட .... பார்க்காம அடிச்சிட்டான்...” என்று அவர் தன் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழ அனைவரும் ஆதிராவின் மாமாவை முறைத்தனர்...

“எலேய் ராசு... கூட பிறந்த அக்காவயே கைநீட்டுற அளவுக்கு உன்னை பணத்தாசை பிடிச்சி ஆட்டுதோ.... அடிச்ச கையை இன்னும் உடைச்சி அப்பவே விறகுக்கு
போட்டிருக்கனும்..”

“ஐயா.. அப்போவும் இவன் திருந்த மாட்டான்... ஐயா... எப்படியாவது இவன்கிட்ட இருந்து என் பொண்ணை காப்பாத்துங்க....”

“அதுக்கு தான் உன்னை நாங்க இங்க வரவழைச்சோம்... உன் பொண்ணும் அந்த நிற்குறாரே அந்த தம்பியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறதாதவும் அது உனக்கு தெரியும்னு அந்த தம்பி சொல்லுச்சு... அந்த தம்பி சொல்றது உண்மையா தெய்வநாயகி..??” என்று பஞ்சாயத்து தலைவர் கேட்க தன் மகளை பார்த்தார் தெய்வநாயகி..

அவள் கண்களோ எதையோ சொல்ல அதை புரிந்துக்கொள்வதற்காக ஷாகரை பார்த்தார் தெய்வநாயகி.. அவனது கண்களில் தெரிந்த உறுதியே இவர் தன் மகளை நன்றாக பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை தெய்வநாயகிக்கு உண்டாகியது...

ஷாகரும் கண்களை மூடித்திறந்து அனைத்தையும் தான் பார்த்துக்கொள்வதாக சைகை செய்திட அதை சரியாக புரிந்துகொண்ட தெய்வநாயகி, பஞ்சாயத்து தலைவரிடம்

“ஐயா அந்த தம்பியும் என் பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க... அவரு என்கிட்ட வந்து பேசுனாரு... நான் வீட்டு ஆளுங்களோடு வந்து நிச்சயம் பண்ணிக்கோங்கனு சொன்னேன்..” என்று தெய்வநாயகியும் ஷாகரின் கூற்றை ஒப்புக்கொள்ள ஆதிராவின் தாய்மாமனும் முழிபிதுங்கி நின்றனர்..

ஆதிராவின் மாமா ஆத்திரத்துடன் தன் அக்காவிடம்

“ஏய் புத்திகெட்டவளே புரிஞ்சி தான் பேசுறியா?? ஆத்தாளும் மகளும் அந்த பட்டணத்துக்காரனுடம் சேர்ந்துக்கிட்டு நாடகமா போடுறீங்க.. உங்களை...” என்றபடி தன் தெய்வநாயகியின் கழுத்தை பிடித்து இறுக்கினான் ராசு..

சுற்றியிருந்தவர்கள் கஷ்டப்பட்டு தெய்வநாயகியை அவனிடமிருந்து காப்பாற்ற பஞ்சாயத்து தலைவரோ

“எலேய் ராசு.. உன் யோக்கிதம் இப்போ புரிஞ்சி போச்சுடா.. இத்தனை பேரு இருக்கும் போதே அந்த புள்ளை இப்படி கொடுமை பண்ணுறியே... வீட்டுல என்னென்ன அட்டூழியம் பண்ணியிருப்ப?? அம்மாடி தெய்வநாயகி.. இப்போ என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு.. அந்த தம்பி நம்ம பிள்ளையை தன்னோட ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லுது... புள்ளையை அவக கூட அனுப்புறதுல உனக்கு சம்மதமா??” என்று பஞ்சாயத்து தலைவர் கேட்க தெய்வநாயகியோ

“என் பொண்ணை அந்த தம்பி கூடவே அனுப்பிருங்க.. இனிமே அவ இந்த நரகத்துல இருக்க வேண்டாம்... அவ சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்..” என்று தெய்வநாயகியும் கூறிவிட பஞ்சாயத்து தலைவரும்

“தம்பி பெத்தவளே சம்மதம் சொல்லிட்டா.. நீங்க எங்க பொண்ணை உங்க கூட அழைச்சிட்டு போகலாம்..” என்று கூற அப்போதும் அடங்காத ராசு

“தலைவரே... இவனை எப்படி நம்புறது... இவன் எந்த ஊரு எந்த ஜாதினு கூட தெரியாது... புள்ளையை கூட்டிட்டு போயிட்டு ஏதாவது பண்ணிட்டானா என்ன பண்ணுரது??? எந்த நம்பிக்கையில பொண்ணை இந்த பட்டணத்துக்காரன் கூட அனுப்புறது??” என்று கேட்க அப்போது வாய் திறந்தார் ஊர் பிரசிடன்ட் ஞானபண்டிதர்.

“ஐயா இந்த தம்பி எனக்கு தெரிஞ்சவங்க தான்.. நல்ல பையன்... பையன் குடும்பம் அவங்க ஊரிலயே ரொம்ப வசதியான குடும்பம்... குடும்பத்தாளுங்களும் நல்லவங்க தான்.. அதனால நம்ம பொண்ண பயப்படாமல் இந்த தம்பி கூட அனுப்பலாம்...” என்று கூற பஞ்சாயத்து தலைவரோ

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.. ஆனா இந்த ராசு பய கூறுகெட்டவனா இருந்தா கூட அவன் சொன்ன விஷயத்துல ஒரு நியாயம் இருக்கு.. நம்ம பொண்ணொட பாதுகாப்பு நமக்கு முக்கியமில்லையா??? அதனால நம்ம ஊரு அகிலாண்ட நாயகி ஆத்தா சன்னதியில இந்த தம்பி நம்ம பொண்ணு கழுத்துல தாலிகட்டி தன்னோட மனைவியா ஊருக்கு அழைச்சிட்டு போகட்டும்.. என்ன நான் சொல்லுறது..” என்று பஞ்சாயத்து தலைவர் பெரிதாய் ஒரு குண்டை போட ஆதிராவும் ஷாகரும் திருதிருத்தபடி நின்றனர்..

எவ்வாறாயினும் இதை தடுக்க வேண்டுமென எண்ணிய ஷாகர்

“ஐயா சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... நான் எங்க வீட்டுக்கு ஒரு ஆண் வாரிசு...என்னோட அம்மா அப்பாவோட சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கனும்னு ஆசைப்படுறேன்.... அதோட எங்க அம்மா அவங்க முறைப்படி தான் என்னோட கல்யாணம் நடக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க... அதனால நான் ஆதிராவை அங்க கூட்டிட்டு போயிட்டு அவங்க சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கனும்னு இரண்டு பேரும் ஆசைப்படுறோம்...”

“தாராளமா பண்ணுங்க தம்பி... ஆனா இப்போ நீங்க எங்க பொண்ணை உங்ககூட கூட்டிட்டு போகனும்னா உங்க பொஞ்சாதியாக தான் கூட்டிட்டு போகமுடியும்.. இல்லைனா எங்க பொண்ணை உங்ககூட அனுப்ப முடியாது..” என்று அவர் கூற ஷாகருக்கு உள்ளுக்குள்ளே உதறல் எடுத்தது..

தான் ஏதோ செய்யப்போய் அது இப்படியொரு நெருக்கடியை உண்டாக்கிவிட்டதே என்று கலங்கியவன் அறிவோ இன்னும் மறுத்தால் ஆதிராவை காக்கமுடியாது என்று உணர்த்த, இனி தயங்குவதில் பலனில்லை என்று உணர்ந்தவன் தான் தாலிகட்டுவதாக முன்வந்தான்...

இங்கு ஆதிராவோ பயத்தில் வெளிறிப்போயிருந்தாள்... எவ்வாறேனும் இந்த ஊரிலிருந்து வெளியேறிவிட்டால் போதும் என்பதற்காக இத்தனை நேரமாய் ஷாகர் கூறியதற்கு ஒத்து ஊதியவளுக்கு இந்த திருமணத்தை ஏற்கமுடியவில்லை.... இதை தடுக்க முயன்ற ஷாகரே இதற்கு ஒத்துக்கொண்டபின் தன்னால் எதுவும் செய்யமுடியாத நிலைக்கு ஆளானாள் ஆதிரா...

இருவரையும் கோவிலுக்கு அழைத்து சென்ற ஊர்பெரியவர்கள் அன்னையின் சூலாயுதத்திலிருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து அதில் தாலியை கோர்த்லு அன்னையை வேண்டிக்கொண்டு ஷாகரின் கையில் கொடுக்க அவன் ஆதிராவையும் அந்த தாலிகயிற்றையும் பார்த்தவன் மனதினுள் அன்னையிடம்

“அம்மா அகிலாண்ட நாயகி... எதுனால இப்படியொரு நிலைமையை உருவாக்குனனு தெரியலை.... ஆனா எல்லாம் நல்லதுக்குனு நம்புறேன்...... நான் விரும்புன பொண்ணு தான் ஆதிரா.. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையால அவ விருப்பம் இல்லாமலே அவ கழுத்துல இந்த தாலியை கட்டுற நிலைமை வந்திருச்சு... ஆனா அவள் விரும்பாத பந்தத்துல அவளை சிக்க வைக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை.... அவளை காப்பாத்தி இங்கயிருந்து கூட்டிட்டு போகனும்னு தான் இந்த மஞ்சள் கயிற்றை கட்டுறேன்..... இனிமே எது நடந்தாலும் நீ தான் துணையாக இருக்கனும்..” என்று வேண்டியவன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்...

ஆதிராவிற்கு நடப்பதனைத்தும் கனவு போலவே இருந்தது.... ஒரே இரவில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது என்று எண்ணியவளுக்கு மலைப்பாய் இருந்தது.... தன் கழுத்தில் தொங்கிய தாலிக்கயிற்றை பார்த்தவளுக்கு இது தற்காலிகமா இல்லை நிரந்தரமா என்று கூட தெரியவில்லை... இத்தனை நாட்கள் தன் வாழ்வில் விளையாடிய விதியே இதற்கு வழிகாட்டும் என்று முடிவெடுத்தவள் நடப்பவற்றை வெறும் பார்வையாளராய் இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள்....

திருமணம் முடிந்ததும் தங்கள் உடமைகளுடன் ஊருக்கு கிளம்பினர் ஷாகரும் ஆதிராவும்... ட்ரெயினில் ஏறி அமர்ந்ததும் தத்தமது சிந்தனைகளில் ஆழ்ந்தவர்களுக்கு அப்போதைக்கு ஓய்வு தேவையாயிருக்க சற்று நேரம் கண்ணயர்ந்தனர் இருவரும்...

ட்ரெயின் ஒரு ஸ்டேஷனில் நிற்க கண்விழித்த ஷாகர் இருவருக்கும் உண்பதற்கு ஸ்நாக்ஸ்சும் வாட்டர் பாட்டிலும் வாங்கி வந்தான்.. ஆதிராவை வற்புறுத்தி உண்ண வைத்தான்..

அவள் உண்டு முடித்ததும்

“இங்கபாரு ஆதிரா... உன்கிட்ட சில விஷயம் நான் தெளிவுபடுத்தனும்... உன்னை எந்த பந்தத்திலும் சிக்க வைக்க நான் அப்படி பண்ணலை... ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால அப்படி நடந்திருச்சு.... எங்க நான் மறுத்த நாம சொன்ன பொய்யை ஊர்காரங்க கண்டுபிடிச்சிருவாங்களோனு பயந்து தான் இந்த மேரேஜிக்கு நான் ஒத்துக்கிட்டேன்... மத்தபடி எனக்குள்ள எந்த எண்ணமும் இல்லை... நீயும் இதை வாழ்க்கை அது இதுனு நினைக்காமல் அந்த கயிற்றை தூக்கி எறிஞ்சிட்டு உன் வாழ்க்கையை பாரு... ஒரு கயிறு உன்னோட வாழ்க்கையை டிசைட் பண்ண முடியாது.. இந்த கயிற்றை கட்டும் போது சாமிகிட்ட மன்னிப்பு கேட்டு தான் உன் கழுத்துல கட்டுனேன்.... அப்போ என் மனசுல இருந்த ஒரே விஷயம்... உன்னை பத்திரமாக இங்க இருந்து கூட்டிட்டுபோகனும்... அது மட்டும் தான்.. அதனால தான் அப்படி பண்ணேன்.. என்னை மன்னிச்சிரு...... இனி உன்னோட லைப்பை பத்தி கவலைப்படாத.. உன்னோட லைப்புக்கு நான் கியாரென்டி.... நீ தங்குறதுக்கு லேடிஸ் ஹாஸ்டல் அரேன்ஜ் பண்ணியிருக்கேன்... உனக்கு வேலையும் எங்க கம்பனியிலேயே அரேன்ஜ் பண்ணுறேன்... ஏதும் படிக்கனும்னா சொல்லு... அதுக்கு நான் ஹெல்ப் பண்ணுரேன்... இனி உன்னோட லைப்பை நீ சந்தோஷமாக வாழு... கொஞ்ச நாள்ல உங்க அம்மாவையும இங்க கூப்பிட்டுக்கலாம் சரியா??” என்று ஷாகர் கூறியதை ஏற்றவள் அவன் கூறியபடியே அவள் வாழ்க்கையை தொடங்கியிருந்தாள்..

ஆனால் சொல்லியவற்றில் அவள் மறுத்த ஒரு விடயம் அவன் கட்டிய தாலி மட்டும் தான்... ஏனோ அதை கழட்ட அவள் மனம் இடம்கொடுக்கவில்லை.... அதனால் பிறர் கண்ணுக்கு அது தெரியாதவாறு பார்த்துக்கொண்டாள்....

அந்த தாலி செயினை தான் ஷாகர் பார்த்து ஆதிராவின் உள்ளத்தை அறிந்துகொண்டான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN