என்னடி மாயாவி நீ: 27

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 27

நாட்கள் மெல்ல நகர, கம்பெனியை நல்ல முறையில் வர்ஷித் நடத்தி கொண்டிருக்க ராகேஷ் இவன் மீது கொலை வெறியில் இருந்தான், 'என்ன செய்தாலும் எழுந்து கொள்கிறானே' என. அவனை வீழ்த்த பெரிய திட்டம் ஒன்று தீட்டி கொண்டிருந்தான். வர்ஷித்தும் எதற்கும் தாயாராக உள்ளேன் என்பதுபோல இருந்தான். ஏனெனில், ராகேஷ் ஏதாவுது இடையூறு செய்வான் என அவன் அறிந்தது தானே. அவனுக்கும் பாதுகாப்பு போட்டுகொண்டு வீட்டிலும் அனைவர்க்கும் பலத்த பாதுகாப்பை பல படுத்தி கொண்டான்.

அன்று காலை எழுந்ததும் முதல் ஆதிகா கொஞ்சம் சோர்வாக உணர்ந்தாள். அவன் கேட்டதிற்கு, "எல்லாம் உன்னால தான்டா, என்னைய எங்க நைட் முழுக்க தூங்க விடுற" என இல்லாத கோபத்தை பிடித்து வைத்து பொரிந்து தள்ளினாள். அவனோ அதை கண்டுபிடித்து போதும், "ஆதிமா இதுக்கு மேல கோப படுற மாதிரி நடிக்காத ரொம்ப கஷ்டப்டுற" என குறும்புடன் கூறி அவளிடமிருந்து அடி வாங்கி தப்பித்துக்கொண்டு குளியறைக்குள் புகுந்துகொண்டான்.

குளித்து முடித்து ஈர துவாலையுடனும் சொட்டும் நீரோடும் வந்தவன் படுக்கையை சரி செய்த ஆதிகாவை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான். பயந்து நிமிர்ந்தவள் தன்னவன் என தெரிந்தும் வாயால் திட்ட ஆரம்பிக்கும்போது அவள் கழுத்தில் முகம் புதைத்து வளைவில் முத்தங்களை கொட்டி அவள் வாயை அடைத்தான். "ராட்சசி மோசமான அழகா இருந்து என்ன படுத்துறியே" என அவளை வசை பாட அவனது சொல்லிலும் செயலிலும் வெட்கப்பட்டு சிகப்பை அப்பிக்கொண்டாள். கடினப்பட்டு தன்னிலை அடைந்தவன், "இப்படி வெட்கப்பட்டா நான் என்னடி பண்ணுவேன் இன்னைக்கு வேற முக்கியமான வேலை இருக்கு" என கூற ஆதிகா வெட்கத்தை மறைத்துக்கொள்ள படுக்கையை சரி செய்ய ஆரம்பித்தாள். "ஏய் இதெல்லாம் வேண்டாத வேலை உனக்கு, எப்படியும் நாளைக்கு இது கசங்கி தான போகும்" என சிரிப்புடன் கூற வெகுண்டெழுந்து "சீ... காலையிலே பொறுக்கி மாதிரி தப்பா பேசுற மாமா நீ' என கூறி அவனை அடிக்க, அவளது கையை ஈஸியா பிடித்தபடி "அப்போ விடிய விடிய ரொம்ப நல்லது பண்றமோ" என யோசிக்கும் தொனியில் கூற இதற்குமேல் இருந்தால் நமக்குத்தான் கஷ்டம் என குளியறைக்குள் தன்னை புகுத்திக்கொண்டாள்.

கிளம்பி கீழே வந்த வர்ஷித் ஆதிகாவை தேடி சமயலறைக்குள் சென்றான். அங்கும் பின்னாலிருந்து அணைத்த படி "இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமா, உன்ன பாக்கவே ஏதோ புதுசா தெரியுது, உன்கிட்ட சிரிப்பு, வெட்கம் எல்லாமே அழகா இருக்கு ஆதிமா" என கன்னத்தில் முத்தமிட்டு நகர்ந்தான். அந்த மகிழ்ச்சியிலே அவனும் வெளியில் சென்றுவிட, அவளும் முக்கிய நிகழ்வு ஒன்றிற்காக சில பொருட்களை வாங்க சென்றாள்.

மாலை நேரத்தில் ஆதிகா மிகவும் ஆனந்தமாக காணப்பட்டடாள். இன்று இரவு நடக்கப்போகும் நிகழ்வை பற்றி அத்தை மாமாவிடம் கூற "அவனுக்கு தெரிந்தால் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான், கோப பாடுவான்" என அவளுக்கு உதவ தயங்க ஆதிகா, " ப்ளீஸ் எனக்காக நீங்க இத செய்யணும், என் ஆசைக்காக, கோபப்பட்டா திட்டு நான் வாங்கிக்கிறேன்" என கூற அவர்களும் குழந்தை போல ஆசைப்படும் மருமகளுக்காக சரி என உதவி செய்தனர்.

இரவும் வர்ஷித் வர அவன் களைப்பாக இருப்பதால் சீக்கிரமாக சாப்பிட்டு ஆதிகாவிடம் "நான் அறைக்கு போறேன் நீ சீக்கிரமாக வா" என கூறிவிட்டு சென்றான். அறைக்கு சென்றவன் 'என்ன ஆதிகாக்கூட பேசவே முடில இப்போ பேசலாம்' என காத்திருந்தவனை கொஞ்ச நேரத்திலே தூங்கவைத்து அவர்களுக்கு விதியே உதவி செய்தது.

வர்ஷித் உறங்க அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது போனில். யாரென்று பார்க்க அது ஆதிகாவாக இருக்க அதனை உயிர்ப்பித்து "என்னமா என்ன ஆச்சு இன்னும் என்ன பண்ற?" என தூக்க கலக்கத்தோடு கேட்க "ஆமா மாமா கொஞ்சம் வேலை இருந்துச்சு இப்போதான் முடிச்சேன் கரண்ட் வேற இல்ல. அதனால கீழ வந்து கூட்டி போ மாமா" என பயத்துடன் கூற அவனோ அவளை திட்டிக்கொண்டே போனில் வெளிச்சத்தை மூட்டி மாடிப்படிகளில் இறங்கி நடுக்கூடத்தில் நின்று "ஆதிமா எங்க இருக்க" என அவனது குரல் கேட்டவுடன், அவள் வீட்டில் உள்ள மெயின் பாக்ஸில் சுவிட்ச் ஆன் செய்து வெளிச்சத்தை வர வைத்தாள்.

வெளிச்சம் பரவ பரவ அவனது கண்ணில் தென்பட்டது எல்லாம் வண்ண வண்ண பலூன்கள்தான். கண்களை சுழல விட, வண்ண அட்டைகளில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரு மாமா" என எழுத்துக்களால் அவனுக்கு வாழ்த்துக்கள் இருந்தது.

இத்தனை வருடம் அவன் வெறுத்த நாள் இது, அம்மாவை நானே பிறப்பால் கொன்றுவிட்டேனே என அவனது பிறந்த நாளை கொண்டாடாமல் அன்று முழுதும் வருத்தத்தை
சுமந்தே திரிவான்.

கொண்டாட ஏற்பாடு செய்தாலும் பங்குகொள்ள மாட்டான். கோபப்படுவான் திட்டுவான் என பல அவதாரம் அன்று அவனுக்குள்ளிருந்து வெளி வரும். ஆனால் இன்று அந்த வெறுப்பெல்லாம் மறைந்து இருந்தது. அதன் காரணத்தை யோசித்துக்கொண்டிருக்கையில் மகிழ்ச்சி பாதி, மனக்கசப்பு பாதி, தன்னவள் தன்னை மகிழ்ச்சி படுத்தும் திட்டம் என எல்லாமே உருமாறி கண்ணீரை கன்னத்தில் தடம் பதித்தது.

வர்ஷித்தை ஆதிகா அணைத்து கண்ணீரை துடைத்து முதல் வாழ்த்து தெரிவித்து, நெற்றியில் இதழ் பதித்து, அழைத்து சென்று கேக்கை வெட்ட வைத்தாள்.
அவனது செயல் அவனுக்கே புதுசாக இருந்தது, அவனது பெற்றோருக்கு சொல்லவே வேண்டாம் அவ்வளவு மகிழ்ச்சி அவர்களுக்கு, அவனுடைய இந்த மாற்றத்திற்கு ஆதிகாவே காரணம் என நினைத்தனர். ஆனால், அவனுடைய மாற்றத்திற்கு இன்னொரு காரணம் உண்டு அதுவே அவனை மாற்றியது. அந்த காரணத்தை தான் அவனும் தேடிக்கொண்டிருந்தான்.

கேக்கை வெட்டி முதல் துண்டை எடுத்து "டேய் விஷ்ணு வாய திறடா" என கேக் துண்டோடு திரும்பியவனின் அருகில் இல்லாமல் அங்குள்ள போட்டோவில் அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் அவனது ஆருயிர் தோழன். ஏக்கமாக போட்டோவை பார்த்தவனை ஆதிகாவே நடப்புக்கு கொண்டு வந்தாள். விஷ்ணு உலகிற்கு தான் இறந்து மடிந்துவிட்டானே தவிர வர்ஷித்தின் மனதில் நட்பெனும் இடத்தில் எப்பவுமே அவனுக்கு அழிவு என்பதே கிடையாது, அவனது சுகதுக்கங்களில் எப்போதும் வர்ஷித்திற்கு விஷ்ணு துணை இருப்பான் என அவன் நம்பினான். இவற்றை பார்த்த பெற்றோருக்கு வருத்தம் ஏற்பட்டாலும் அதை மறைத்துக்கொண்டனர்.

பிறகு எல்லாரும் அவனுக்கு கேக்கை ஊட்டிவிட்டு அவனும் எல்லாரும் ஊட்டிவிட பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கினர் ஆதிகாவும் வர்ஷித்தும். அப்பா அம்மா அறைக்குள் சென்றவுடன் ஆதிகாவின் அனுமதி இல்லாமலே அவளை அள்ளிக்கொண்டு அறைக்கு சென்றான்.

உள்ளே சென்று உட்கார வைத்தவன், " ரொம்ப பிளான் பண்ணிங்களோ? " என சாதாரணமாக கேட்க அவளும் ஆமென்று பதில் தந்தாள் எங்கே திட்டுவானோ பயத்துடன். வர்சஷித் அவளின் எண்ணங்களுக்கு மாறாக சிரித்துக்கொண்டு "தேங்க்ஸ்டி பொண்டாட்டி" என அவள் கன்னத்தில் முத்தமிட அவனது செய்கை அவளுக்கு புதிதாகவும் திருப்தியாகவும் இருந்தது. "சரி சரி என் பரிச கொடு" என சிறுபிள்ளை போல அடம்பிடிக்காத குறையாய் கேட்க "நீங்க கொண்டாட மாட்டீங்க, திட்டுவீங்கன்னு மாமா அத்தை சொன்னாங்க அதான் நான் எதுவுமே வாங்கல" என இன்ஸ்டண்டாக ஒரு பொய்யை உண்மை போல முகத்தில் கோடி அப்பாவி தனத்தை கொட்டி கொண்டு கூறினாள். "அவனும் சரி விடு, எனக்கான பரிசை நானே எடுத்துக்குறேன்" என கண்ணடித்து இரு பொருள் பட பேச, மங்கையவள் மன்னவனின் மன ஓட்டங்களை படித்து வெட்கத்தை சூடி கொண்டாள். அவன் மறுநொடி தீவிரமான முக பாவத்தோடு அவளின் கரத்தை பற்றி "இவ்ளோ வருஷம் இந்த நாள்ல எங்க அம்மாவ நானே கொன்னுடேன்னு ரொம்ப வருத்தப்படுவேன் காரணமே இல்லாம எல்லார் மேலயும் கோப படுவேன். ஆனால் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, அதுக்கு காரணம் என்னன்னுதான் புடிப்படவே இல்ல" என அவன் உணர்ச்சியின் பிடியில் கூற ஆதிகா "ஏன்னா உங்க அம்மாதான் வந்துட்டாங்களே" என மொழிந்த மறுநொடி அவனின் கரத்தை தன் வயிற்றில் புதைத்து "இதுதான் நான் உனக்கு கொடுக்குற பரிசு, நீ கேட்ட பரிசு, உங்க அம்மா, மலர்மா உன்னோட உயிர் மூலமா என்னோட வயித்துல வளர ஆரம்பிச்சிட்டாங்க, அதான் நீ சந்தோசமா இருக்க" என தன் மணிவயிற்றில் தன்னவனின் வாரிசு உதித்ததை கண்ணில் காதலுடனும் வெட்கத்துடனும் கூற அவனது உயிரே உறைந்ததுபோல ஆனது மகிழ்ச்சியில் அவனுக்கு. கண்ணில் ஆனந்த கண்ணீர் வடிய தனது மாற்றத்தின் காரணமும் தெரிய வந்தது. தன் உயிர் சுமப்பவளின் மதி முகத்தை ஏந்தி மென்மையாக முத்தமிட்டான். அவளோ வெட்கத்திலிருந்து தப்பிக்க அவனது மார்பில் மறைந்துகொண்டாள். ஆனந்த மிகுதியில் பேச கூட சொல் தெரியாமல் அவளை கை வளைவுக்குள் வைத்து மௌனத்தாலே காதலை ஆண்டனர். சிறிது நேரம் செல்ல அவன் சிறைக்குள் இருந்தவாரே "பரிசு புடிச்சிருக்கா மாமா" என கேட்க வர்ஷித், " பரிசை பிடிச்சிருக்கு அத விட பரிசு கொடுத்தவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப தேங்க்ஸ்டி" என கூறி அவள் முறைப்பதை கண்டுகொள்ளாமல் இதழ் நோக்கி குனிய அவள் பதறியடித்து "ஐயோ வேணாம் அம்மா இருக்காங்க" என தீவிரமாக சொல்ல அவனோ திடுக்கிட்டு திரு திருவென வாயிலை பார்த்து சுற்றி பார்த்துவிட்டு எங்கே யாருமே இல்லையே என வினாவி பார்க்க அவள் தன் வயிற்றை நோக்கி கைக்காட்டி "இங்கேயிருந்து பாப்பாங்கள" என கூறி வர்ஷித்தின் முக போக்கினை கண்டு சிரிப்பை அடக்க வழியின்றி உதட்டை கடித்தும் அடக்க அக்கள்வனோ அவள் செய்த வேலையை தனக்கு இடம் மாற்றி கொண்டான். சில நொடி கழித்து விடுவித்து அவளது வயிற்றில் முதல் முத்தத்தை பதித்து பேச ஆரம்பித்தான். அப்போது உடம்பு சிலிர்த்து அடங்கிப்போனது அவனுக்கு."மலர்மா அம்மாடி" என கூறும்போதே அவன் கண்ணிலிருந்து நீர் அருவியாய் கொட்ட, அவனது கண்ணீரை துடைத்து, "மாமா அம்மாவோ பொண்ணோ யாரா இருந்தாலும் தன்னோட பையன் அப்பா அழுதா தாங்க மாட்டாங்க. அதுனால அழுகாம பேசு" என கூற அவளை பார்த்து புன்னகைத்தவன் "நான் அழலடி, ஆனந்த கண்ணீர் சரி அழல" என கண்ணீரை அழுந்த துடைத்து பேச ஆரம்பித்தான்.

"அம்மாடி என்ன பார்க்க 27வருஷம் கழிச்சு வந்துருக்கீங்க, ரொம்ப சந்தோசமா இருக்கு, சீக்கிரமா வெளில வாங்க உங்கள பார்க்க அப்பாவும் ஆதிகா அம்மாவும் காத்துகிட்டு இருக்கோம், இப்போது அம்மா எப்படி உங்கள பாத்துக்குறாங்களோ அதுபோல நீங்களும் அம்மாவுக்கு வலி தராம பாத்துக்கணும் சரியா, அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்க கூடாது சரியாமா" என கூறி முத்தமிட்டு தாயையும் குழந்தையையும் அணைத்துக்கொண்டு படுத்தான்.

"என்ன மன்னிச்சிருடி அன்னைக்கு உன்கிட்ட என்னோட குழந்தை வேணும்ணு சொன்னேன்ல அது தப்புனு அப்பறம் தான்டி புரிஞ்சது" என மன்னிப்பு கேட்க, "லூசு மாமா நீயும் நானும் வேறு வேறா இருந்தாதான் இது தப்பு, நீயும் நானும் ஒண்ணுதான மாமா இதுல உன் குழந்தை என் குழந்தை எல்லாமே ஒண்ணுதான் மாமா இனிமேல் இத பத்தி பேசாத சரியா" என கூறியவளிடம் பேசாமல் தன்னை புரிந்துகொள்ளும் இப்படியொரு அற்புதமான காதலும் அதற்கான பரிசும் படைத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தான்.

ஆதிகா "மாமா மலர் அத்தை போட்டோ இருக்கா? " என கேட்க அவனோ "இல்லையேமா" என கூற விடாமல் "அத்தை எப்படி இருப்பாங்கணு சொல்லு கண்டுபிடிக்கிற மாதிரி அடையாளம் சொல்லு அப்பதான குழந்தை பிறக்கும்போது அடையாளம் காண முடியும்" என ஆர்வமாக சொல்ல அவனோ வருத்தமாக "இல்ல ஆதிமா நான் நேர்லயும் பாக்கல, போட்டோல பாத்ததும் இல்ல, ஒரே ஒரு போட்டோதான் அதுவும் அப்பா வீட்ல இருக்கறதுனால நான் பாத்ததில்லை, நானும் அப்பா ஜாடை அம்மா எப்படி இருப்பாங்கன்னு தெரிலமா" என வருத்தம் கொண்டு கூற அவளோ தன்னவனின் சோகத்தை மாற்ற "சரி விடுமாமா பத்து மாசத்துல கண்டிப்பா உங்க அம்மாவ பாக்கலாம்" என நம்பிக்கையை கண்ணில் மின்ன விட்ட படி கூறியவளிடம் காதல் சிரிப்பை உதிர்த்து அணைத்து படி உறங்கினான்.

மறுநாள் விடிந்ததும் வர்ஷித் ஆதிகா சுப்பிரமணியன் வசந்தாவிடம் தாங்கள் பெற்றோர் ஆகப்போவதை கூறி ஆசி வாங்கினர். வசந்தா இருவரது நெற்றியிலும் முத்தமிட்டு வர்ஷித்திடம் "சொன்ன மாதிரியே செஞ்சு அம்மா பிள்ளைன்னு காமிச்சிட்ட கண்ணா" என கூற வெட்கப்படுவது அவன் முறையாற்று. ஆதிகாவிடம் "உன்ன நான் என் மகளாத்தான் பாத்திருக்கேன், ஆனால் இப்போ நீயே அம்மாவாகிட்டான்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்குமா" என கூறிய அத்தையை கட்டிக்கொண்டாள்.

இருவரும் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்து புது வரவிற்காக நன்றி கூறினர் படைத்தவனிடம். பிறகு, மருத்துவமனைக்கு சென்று ஆதிகா கருத்தரித்து இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.

வீட்டிற்கு வந்த ஆதிகா பெற்றோருக்கு அழைத்து தகவல் கூறினாள். வர்ஷித்தும் ஊருக்கு போன் செய்து மாமா வனிதா அக்கா, அருண் மற்றும் ஆகாஷிடம் இதனை பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை வாங்கி மகிழ்ந்தான்.

இரு இல்லங்களிலும் ஆதிகாவை கையில் வைத்து தாங்கினார். வர்ஷித்தை சொல்லவே வேணாம், தன் இதய அரசியை உயிரில் வைத்து பார்த்துக்கொண்டான். குழந்தையுடன் பேசுவது தினமும் வர்ஷித்திற்கு வாடிக்கை ஆகிப்போனது. அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்தான். அவனே மாதம் மாதம் மருத்துவரை காண அழைத்துப்போவான். தெரியாததையும் தெரிந்துகொண்டு அவளுக்காக பார்த்து பார்த்து செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டான் ஆதிகாவின் மனம் வென்ற மன்னவன்.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 27
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN