என்னடி மாயாவி நீ: 28

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 28

ஆதிகா கருவுற்று சில மாதங்கள் கடந்திருந்தது. ஆதிகா, வீட்டில் உள்ளோரின் கவனிப்பிலும் அன்பிலும் தன்னவன் தன் மீது கொண்ட காதலிலும் அவள் பூரிப்பு அடைந்திருந்தாள். நடுராத்திரியில் எழுந்து பசிக்கிது என்றாலும் முகம் சுழிக்காமல் சமைத்து தருவான்.

அன்றும் அதுபோல தான் வர்ஷித் அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தான். ஆதிகா அவன் தேவையை எல்லாம் மெதுவாக பூர்த்தி செய்துகொண்டிருந்தாள். கடைசியில் அலுவலகத்திற்கு கிளம்பும்போது ஆதிகாவிடம் சொல்லிவிட்டு கீழே குனிந்து மேடிட்ட வயிறே தன் உலகம் என உயிர்வாழும் தன் சிசுவிடம் "மலர்மா அப்பா ஆபீஸ் கிளம்பிட்டேன் அம்மாவ பாத்துக்கோங்கடா, போயிட்டு வரட்டா எங்க பாய் சொல்லுங்க" என வயிற்றில் கை வைத்து சொன்னவன் எழ போகையில் சிசுக்கு முத்தமிட தான் வளர்ந்துவிட்டேன் என்பதை தெரிவிக்க வர்ஷித்தின் உயிர் ஆதிகாவின் வயிற்றுக்குள்ளிருந்து எங்கே அம்மாவுக்கு வலிக்குமோ என்ற பயத்தில் மெல்ல கை கால்களை அசைத்தது. அதனை உணர்ந்த இருவருக்கும் எல்லையில்லா ஆனந்தம். அந்த தருணத்தை மூளையில் பதியவைத்துக்கொண்டனர்.

அதன் பிறகு, வர்ஷித் மலர்மா என ஆரம்பித்தாலே குழந்தை தன் அசைவை காட்டும். இதை பார்வையாளராக பார்க்கும் ஆதிகா, "கண்டிப்பா உள்ள இருக்குறது மலர்மா தான்டா, உங்க அம்மாவே உன்ன பார்க்க திரும்பி வர போறாங்க' என சொல்லி அவனை அணைத்துக்கொள்வாள்.

ஒருநாள் அவசரமாக ஒரு மீட்டிங் காரணமாக வர்ஷிதே சென்னை போகும் நிலைமை வந்தது. ஆதிகா எவ்வளவு தடுத்தும் வர்ஷித் கிளம்பினான். அவளும் வர்ஷித்தை அரை மனதோடு அனுப்பி வைத்தாள். ஆதிகாவிற்கு ராகேஷை நினைத்து பயம் தொற்றிக்கொண்டது. வர்ஷித்தும் ஆதிகாவை பிரிய மனமில்லாமல் பிரிந்து பெற்றோர்களிடம் பத்திரமாக பார்த்து கொள்ளும்படி கூறி சென்றான்.

வர்ஷித்தின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க ஒரு வேலை செய்ய வேண்டும் என திட்டம் ஒன்று போட்டிருந்தாள். அதை அவன் இல்லாத மூன்று நாட்களில் செய்தாள். அவனும் அவளுடன் இல்லாத குறை ஒன்றுதான் குறையே தவிர மணிக்கொருமுறை இவனை நியாபகப்படுத்தும்படி ஒரு போன் கால் வர்ஷித்திடமிருந்து ஆதிகாவிற்கு வரும். இருவரும் தனது துணை இல்லாமல் தவித்து தான் போனார்கள்.

மூன்று நாள் கழித்து திரும்பி வரும்போது இரவாகியிருக்க, அவன் வந்து பார்த்தபோது அவளது நிலையை பார்த்தவனுக்கு கண்ணீர்தான் வந்தது. கண்ணை அழுந்த துடைத்துகொண்டு உள்ளே சென்றான். அங்கு அவன் சென்னை கிளம்பும்போது கழற்றி போட்ட வியர்வை பூத்த சட்டையை அவள் அணிந்து கொண்டு தூங்கி கொண்டிருந்தாள். சென்று அவளை அணைத்தவாறு படுத்துகொண்டான். ஆதிகா அவனின் அருகாமையை உணர்ந்து அவனது வருகையை அறிந்து கொண்டாள். "மாமா சாப்பிட்டீங்களா? " என கேட்க "நான் சாப்பிட்டேன்மா, நீ எப்படி முழிச்ச" என ஆச்சரியமாய் கேட்க அவளோ இதழில் புன்னகையை உதிர்த்து "உன்ன தெரியாத மாமா, உன்னோட வாசனையை வச்சித்தான் கண்டுபிடிச்சேன், சரி தூங்கு மலர்மா முழிச்சிடுவாங்க" என கூறி அவனது நெற்றியில் முத்தமிட்டு அணைத்து கொண்டு உறங்க முயல, வர்ஷித் அவளது இதழில் மென்முத்தமிட்டு சற்று மேடிட்ட இருந்த மணிவயிற்றை தடவி குழந்தையோடு மூன்று நாளை ஈடுகட்டும் விதமாக பேசி முத்தமிட்டு அவளை அணைத்துக்கொண்டு உறங்கினான்.

சில மாதங்கள் கரைய, அவளது வயிறு கொஞ்சம் மேடிட்டும் அவளின் அழகு தாய்மையின் பூரிப்பால் அதிகமாயிருந்தது. அவனும் அருகிலிருந்தே அவளை பார்த்து ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்ய அவள் தன்னவனை நினைத்து மேலும் மகிழ்ச்சியாக இருந்தாள். குழந்தையின் அசைவை இருவருமே கொண்டாடினர். இருவருமே குழந்தையிடம் பேசுவதை வழக்கமாக கொண்டனர். குழந்தைப்பேறு பற்றின அவளது பயத்தை பேசி பேசியே குறைத்திருந்தான். ஒன்பதாம் திங்களும் நெருங்க, ஆதிகாவின் வளைகாப்பிற்கு நாள் குறித்து எல்லா வேலையும் நடந்து கொண்டிருந்தது.

வளைகாப்பிற்கு எல்லாரையும் அழைத்திருந்தான். ஊரில் உள்ள மாமா, அக்கா தம்பி என அனைவரையும் வர சொல்லிருந்தான். வளைகாப்பு நாளும் நெருங்கி நாளை என வந்திருந்தது. வர்ஷிதே எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து செய்தான். இடையில் ஆதிகாவை கவனிப்பதையும் தவறவில்லை. ஆதிகாவிடம் "ஏன்டி நாளைக்கு போற நீயும் பாப்பாவும் போய்ட்டா என்னால இருக்கமுடியாதுடி" என கூற "மாமா உன்னாலதான் நான் ஏழு மாசத்துல வளைகாப்பு போடா எங்கப்பா கேட்டபோது வேணான்னு சொன்னேன். இப்பவும் இப்படி சொன்னா என்ன செய்றதுமாமா எனக்கும் ஆசையா இருக்குமாமா அம்மா வீட்டுக்கு போகணும்னு ப்ளீஸ் மாமா எப்போ எந்த நேரத்துல உனக்கு தோணாலும் அங்க வந்து என்ன பாத்துட்டுப்போ, இப்படி இருக்காத வருமாமா என்ன சந்தோசமா அனுப்பிவைமாமா" என பலவாறு கொஞ்சி சரி என ஒத்துக்க வைத்தாள். இது இன்று மட்டுமில்ல கிட்ட தட்ட கருவுற்ற நாளிலிருந்து நடக்கும் வழக்கம் தான் இது.

மாலைநேரத்தில் ஊரிலிருந்து வர்ஷித்தின் மாமா, அக்கா வனிதா, அருண், பிருந்தா குட்டி என அனைவரும் வருகை தந்தனர். அவர்கள் கூட வர்ஷித் சிறிதும் எதிர்பாக்காத வர்ஷித்தின் அப்பாவும் வந்திருந்தார். வர்ஷித்திற்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அவரது வருகை வர்ஷித்தை தவிர ஆதிகா சுப்பிரமணியன் வசந்தா என அனைவரும் அறிந்ததாகும். வர்ஷித் பெயருக்கு கூட அவனது அப்பாவை அழைக்கவில்லை. ஆனால் ஆதிகா வசந்தா சுப்பிரமணியன் மூவரும் இன்முகத்தோடு வரவேற்த்து உபசரித்தனர். ஆதிகா ஏதோ பழக்க பட்டவர் போல நன்றாக பேசினாள். அதை பார்த்து வர்ஷித் ஆச்சரியப்படுவதா அல்ல கோபம் கொள்வதா என அவனுக்கே குழப்பமாயிருந்தது. மேலும் சிறு பொறாமை உணர்வு கூட எழுந்தது.

அறைக்குள்ளே கோபமாக அமர்ந்திருந்தான். யார் இவரை அழைத்தது என பெரும் கேள்வி ஒன்று இருந்தது.ஆனால் அதுக்கு யார் என்று மட்டும் தெரிந்தால் கண்டிப்பாக வர்ஷித்தின் கோபம் அந்நபர் மீது பாயும் அதில் சந்தேகமில்லை.

அப்போது ஆதிகா மெதுவாக வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அரணாக ஒரு கையால் மென்மையாக வயிற்றை தழுவியபடி நடந்து அறைக்குள் நுழைந்தாள்.

மாமா என்றழைப்போடு உள்ளே வந்தவளை "பரவாலயே என்னையெல்லாம் உனக்கு நியாபகம் இருக்கா?" எனும் சிடுசிடுவென ஏறும் வர்ஷித்தின் கோப வார்த்தையே வரவேற்த்தது.

அவனருகில் அமர்ந்து "என்ன மாமா சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குற, நம்ம பாப்பாவோட சுபகாரியத்துக்கு வந்திருக்காங்க நாமதானே உபசரிக்கணும்" என கூறி சமாதானம் செய்தாள். "சரிடி ஏதோ பண்ணு என்னைய விட்டுடு" என கீழே செல்ல எழுந்தவனை கரம் பிடித்து தடுத்து "கொஞ்சம் நேரம் உட்காரு மாமா பிறகு போகலாம்" என கூறியும் கேட்க மறுத்தவனை அவளது கெஞ்சல் மொழி கேட்க வைத்தது.

அவனின் கரம் கோர்த்து தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், "மாமா ஒன்னு கேப்பேன் செய்வியா நீ?" என கேட்க அவனும் மெதுவாக தலை அசைத்தான். "மாமா உங்க அப்பாகிட்ட பேசி பாரேன்" என மெதுவாய் கூறியவளின் தலையை தன் தோளிலிருந்து விலக்கி சந்தேகமாய் ஓர் பார்வை பார்த்து "நீ தான் அவரை இங்க அழச்சியா? " என அடிக்குறல் சீற்றத்துடன் கேட்க "ஆமா மாமா" என்றாள் அவன் முகம் பார்க்க பயம் கொண்டு தலை கவிழ்த்து. யோசித்தவன் "அவர் நம்பர் கூட இங்க யாருகிட்டயும் இல்ல அப்பறம் எப்படி அழைச்ச? " என கேட்டான். அவள் பதில் சொல்ல பயந்து நின்றாள். சொல்லுடி எப்படி அழைச்ச என கேக்கும்போது வனிதாவும் அருணும் அவ்வறைக்குள் நுழைந்தனர். "அதுக்கு நான் பதில் சொல்றேன்" என வனிதா கூற வர்ஷித் சிலையாகி போனான். "நீ சென்னைக்கு போன மூணு நாளுல ஆதிகா நம்ம ஊருக்கு வந்தா,"என சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடையில் அக்காவை மறித்து "நான் உன்னை தடுத்திருக்கமாட்டேன், ஜஸ்ட் என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லிருக்கலாம்ல, நான்தான் பைத்தியக்காரன் மாதிரி ஒரு மணி நேரத்துக்கு ஒருக்க உனக்கு போன் பண்ணேன், ஆனால் நீ "என வெறுமையோடு நிறுத்தியவன் யாருடைய முகத்தையும் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான்.

ஆதிகா அழுகையுடன் மெத்தையில் அமர, வனிதா அவளுக்கு ஆறுதலாக பேசினாள். "விடுமா அவனுக்கு இந்த உறவு புதுசா இருக்கவும் என்ன பண்றதுனு தெரியாம பண்றான் அதான் கோபப்படுறான் சரியாகிடும்" என தோளோடு அணைத்து கொண்டாள். அவளுக்கும் தெரியுமே அவன் தன்மீது கொள்ளும் கோபம் கானல் நீர் போன்றதாகும் என்பது. ஆனால், கவலை எல்லாமே வர்ஷித்தையும் அவனது அப்பாவையும் எப்படி சேர்த்து வைப்பது என்பதே.

வர்ஷித் பின்னாடியே சென்ற அருண், அண்ணா என கூப்பாடு போட்டு கொண்டு ஓடி சில எட்டுக்களில் வர்ஷித்திடம் நெருங்கினான். அவனும் நின்றானே தவிர எதுவும் பேசவில்லை, ஒரே ஒரு பார்வையை வீசினான் அருண் மீது. அப்பார்வையில் உள்ள மொழியை அருண் படித்தான் 'என்னைய விட்டுட்டு எல்லாரும் அவர்கூட சேந்துட்டீங்களே' எனும் ஏக்கத்தை. "அண்ணா நான் சொல்றத மட்டும் கேளுங்க அண்ணா முடிவு உங்க கையில அண்ணா ஏன்னா... உங்க வாழ்க்கையில நீங்க நிறைய வலிய பாத்துருக்கீங்க" என கூற வர்ஷித் இயல்பாய் மாறினான். "அண்ணா உங்க மேல அப்பா நிறைய பாசம் வச்சிருக்காருண்ணா, நீ பாட்டி கேததுக்கு (இறந்ததுக்கு) ஊருக்கு வந்துட்டு போன அன்னைக்கு நைட் அவர் ரூம் வழியா நான் போனப்போ அவர் பேசிகிட்டு இருந்தார். ஜன்னல் வழியா பார்த்தேன் அப்போ அப்பா மலரம்மா போட்டோவை கையில வச்சிக்கிட்டு பேசிட்டு இருந்தார். கடைசி இரண்டு வாக்கியம் சொல்லும்போது அவரு அழுத்திட்டார் அண்ணா, என்ன சொன்னார்ணா என்ன மாதிரியே பையன் வேணும்னு சொல்லுவ அதே மாதிரி பெத்து கொடுத்துட்டு நீ போய் சேந்துட்ட, அவன் இப்போ என்ன மாதிரியே அதுவும் ஜோடியா வந்து நிக்கும்போது சந்தோசமா இருந்துச்சு, நீயும் இருந்திருந்தா அவளோ சந்தோச பட்டிருப்ப என சொல்லி அழுதாரு அப்பறம் அந்த போட்டோக்கு முத்தம் கொடுத்துட்டு உள்ளே வச்சிட்டு சாதாரணமா இருந்தார்" என அருண் கூறி முடிக்க வர்ஷித்தின் ஒரு மனம் தந்தையின் பாசத்திற்கு ஏங்கினாலும் இன்னொரு மனது 'ஆடு பகை, குட்டி உறவா. பாசம் இருந்தா முன்னாடியே வர வேண்டியதுதானே' என அவனை உசுப்பேத்தி விட்டது. அவனுக்கு எப்படி தெரியும் ஆதிகாவின் பிடிவாதத்தால் அவர் வந்திருக்கார் என்பது.

ஆம், ஆதிகா ஊருக்கு போனது முதல் அவரை வற்புறுத்தியாதே வேலை.வீட்டிற்கு வந்தது முதல் தினமும் போனில் அழைத்து பேசியே அவரை வரவைத்திருந்தாள். பாட்டி இறந்தபோது, ஊருக்கு போயிருந்த அன்று யாரும் அறியாமல் நடராஜனின் பாச பார்வை வர்ஷித் மீது வாஞ்சையை படிந்ததை ஆதிகா கவனித்திருந்தாள். வர்ஷித் ஆதிகாவிடம் அப்பா பாசம் வேண்டும் என கூறும்போதே முடிவுசெய்துவிட்டாள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என. தக்க சமயம் பார்த்து காத்திருந்தவள் இச்சமயத்தை பயன்படுத்தி பாதி முடிந்துவிட்டாள். மீதி விதியையே சார்ந்தது. அருணும் அவன் கண்ட காட்சியை வனிதாவிடம் கூறிய பிறகு இருவரும் அவர் மீது வெறுப்பை விட்டு நல்ல அபிப்ராயத்தை அவர்மீது வளர்த்துக்கொண்டனர்.

ஒரு மணி நேரம் அங்கும் இங்கும் அலைந்து பார்த்த வர்ஷித்தால் ஆதிகா மீதுள்ள கோபத்தை தாக்கு பிடிக்க இயலவில்லை. 'நாளை வரை மட்டும் நம்மிடம் இருப்பவளை கோபமாக ஏறிடுவதா? முடியவே முடியாது இப்பவே செல்கிறேன்' என ஆதிகாவை காண அறைக்கு விஜயம் ஆனான்.

ஆதிகாவின் அருகில் அமர்ந்துகொள்ள அவள் வேறு புறம் முகம் திருப்பி கொள்ள வர்ஷித் ஆதிகாவிடம் மன்னிக்க வேண்டினான். "உனக்கு என்மேல பாசமே இல்லடா போ இங்கிருந்து அதான் கோவிச்சுக்கிட்டுதான் உனக்கு போக தெரியுமே? போக வேண்டியதுதானே ஏன் இப்போது வந்த "என திட்டியவாறே தலையணையால் வர்ஷித்தை அடிக்க ஆரம்பித்தாள். போனாலும் தப்பு வந்தாலும் தப்பு என உள்ளுக்குள் புலம்பினான். ஏன் வெளியில் சொல்லி அடி வாங்குவதற்கா. "இதுல அம்மா வீட்டுக்கு போறேன்னு ஐயாவுக்கு சோககீதம் வேற என்ன ஏன்டா இப்படி கஷ்டப்படுத்துற" என கண்ணீர் சிந்தியவளை வழியற்று நின்றவன் அவள் இதழில் முத்தமிட்டு சமாதானம் செய்தான். இதற்கு மேலும் பெண்ணவள் வீம்பை பிடித்து வைத்திருக்க முடியுமா? அதற்கான வழி தான் உண்டா?

வர்ஷித்தின் மனம் அப்பாவை பற்றி இரு தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்த ஒரு முடிவுக்கு வராமல் இருந்தான். இதற்கிடையில் இரவு வந்தது.

அனைவரும் இரவுணவை முடித்து கொண்டு அறைக்குள் முடங்கினர். வர்ஷித் ஆதிகாவை அறைக்கு சென்றால் புழுக்கமாக இருக்கும் என மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். அங்கு சென்று சிறிது நேரம் இருவரும் கை கோர்த்து பேசி சிரித்த படி நடந்தனர். ஆதிகாவிற்கு 'இன்று இரவுக்குள் ஏதும் நடந்தால் தான்.இல்லை என்றால் இருவரும் பேசிக்கொள்ளமாட்டனர்' என வருத்தமும் தவிப்பும் இருந்தது. கொஞ்ச நேரத்தில் ஆதிகாவிற்கு கால் வலிக்க அங்குள்ள நாற்காலியில் அமர போனவளை தடுத்து வர்ஷித் தான் நாற்காலியில் அமர்ந்து அவளை மடியில் உட்கார வைத்துக்கொண்டான்.

ஒளி வீசும் நிலவு, கதை பேசும் தென்றல், காதல் கொஞ்சும் அவளது விழிகள் வேற என்ன வேண்டும் இவ்வுலகில் அவனுக்கு. ஒன்பது மாதம் ஆகிவிட்டது ஒரு சிசுவுக்கு அவள் தாய் ஆகி, ஆனால் அவனுக்கோ பல கோடி முறை தாய்மை அன்பை கொடுத்திருக்கிறாளே.

அவளின் மயில் கழுத்தில் முகம் புதைத்த படி, "உங்க ரெண்டு பேருகிட்டயும் பேசணும்டி" என முணுமுணுத்தான் அவளது காதில். "பேசுடா" என்றவுடன் அவள் வெற்று வயிற்றில் முகம் வைத்து குழந்தையுடன் பேச தொடர்ந்தான். அவளோ அவனது கேசத்தை கோதி கொண்டிருந்தாள். "மலர்மா" அதே அசைவு ஏற்பட்டது. அதை உணர்ந்து முத்தமிட்டபடி "தங்கம் பட்டுக்குடி என்ன பண்றீங்க, உங்கள எப்போடா பாப்போம் என இருக்கு, நாளைக்கு அம்மாச்சி வீட்டுக்கு போக போறிங்களா நீங்களும் அம்மாவும். அங்க போய்ட்டு நீங்கதான் அம்மாவ பாத்துக்கணும் சரியாடா" என ஆசையுடன் கைவைத்து தனது உயிரின் அசைவை மகிழ்ந்தபடி நிமிர்ந்தான். அவனையே காதலுடன் நோக்கிய ஆதிகாவிற்கு முத்தம் கொடுக்க, "போடா குழந்தையே பிறக்க போகுது இன்னும் இப்படி பண்ணிக்கிட்டு இருக்க" என உள்ளுக்குள் இச்செயலை ரசித்தாலும் வெளியில் கோபமாக இருப்பது போல இப்படி கேட்டாள். வர்ஷித், "நமக்கு குழந்தை என்ன, நமக்கு பேரன் பேத்தியே வந்தாக்கூட நான் இப்படித்தான் பண்ணுவேன் என் ஆதிமாவ கொஞ்சுறதுக்கு யார் தடை சொல்லுவா நான் அதையும் பாக்குறேன்" என வம்படியாக காதல் செய்பவனை என்ன சொல்வது என தெரியாமல் போனது ஆதிகாவிற்கு. ஆனால் வருங்கலத்தில் இதற்கு ஒரு ஜீவன் வரும் என்பதை அவன் எப்படி அறிவான்.

தீடிரென்று வர்ஷித் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு ஆதிகாவை நோக்கி, "ஆதிமா எனக்கு நீ முக்கியம், ரொம்ப முக்கியம் குழந்தையும் முக்கியம்தான் ஆனால் குழந்தையை விட நீ ரொம்ப முக்கியமடி, இந்த குழந்தை இல்லனா வேற குழந்தைணு நாம மனச தேத்திக்கலாம். ஆனால் நீ இல்லாத ஒரு நொடிகூட என்னால யோசிக்க முடியாதுடி, என்னோட உலகமே நீதான், எந்த ஒரு முடிவா இருந்தாலும் என்னைய யோசிச்சு எடு, எங்க அம்மா மாதிரி எந்த முடிவையும் எடுத்துறாதடி" என அவளது கையில் அழுத்தம் கொடுத்தவனின் கண்ணில் விழும் துளிகளை துடைத்து "நீ இப்படியெல்லாம் யோசிக்காத மாமா, நானும் மலர்மாவும் பத்திரமா உன்கைக்கு வந்திருவோம். சரியா என்ன வேலையா இருந்தாலும் நீ பிரசவத்திற்கு வரணும், உன் கையாலதான் நான் முதல் முறையா நம்ம குழந்தைய வாங்கணும், நீதான் என்ன குழந்தைணு என்கிட்டே சொல்லணும் சரியா" இதை கூறும்போது தானாவே ஆதிகாவின் விரல் வயிற்றை வருடியது.

"நான் இல்லாமலா? இல்லவே இல்ல கண்டிப்பா உன் ஆசையை நிறைவேத்துவேன்டி" என நம்பிக்கை கொடுத்தவனுக்கு யார் சொல்வது அந்நம்பிக்கை தூள் தூளாக நொறுங்க போகிறதென்று.

இவர்கள் பேசிக்கொண்டிருக்க ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க, வனிதாவின் சமாதான பேச்சும் காதில் விழ இருவரும் எழுந்தனர். குழந்தையை வாங்கிய வர்ஷித் கொஞ்சி கொண்டிருக்க, ஆதிகாவை உட்கார வைத்து வனிதா பேசிக்கொண்டிருந்தாள். அங்கு நடராஜன் மாடிக்கு வந்தார். ஆதிகா, " வாங்க மாமா" என அழைக்க அவரும் அருகில் கிடந்த பெஞ்சில் அமர்ந்தார். வனிதா ஆதிகா அருகிலே நின்றாள்.

வர்ஷித்திற்கு நடராஜன் வந்தது தெரியாததால் அவன் குழந்தையை கொஞ்சுவதில் கவனமாக இருந்தான். அங்குள்ள மூவரும் வர்ஷித்தையே பார்த்து கொண்டிருந்தனர். நடராஜன் வர்ஷித்தை முதன்முறையாக கையில் சுமந்த நாளை நினைத்து முறுவலித்து 'இப்ப இவனே அப்பா ஆக போறான் அவ்ளோ வளர்ந்துட்டியாடா நீ' என ஆயாசமாக பார்த்தார்.

ஏதோ உறுத்தலில் திரும்பி பார்க்க அங்கு அவர் இருக்க, விறுவிறுவென சென்று வனிதாவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு, அவ்விடம் விட்டு நகர போனவனை கைபிடித்து தடுத்து, "நான் இங்க இருக்குற வரை நீயும் இங்கதான் இருக்கனும் இது என்மேல ப்ரோமிஸ்" என கூறி பேசவந்தவனையும் தடுத்துவிட்டாள் ஆதிகா.

அவனை கீழே குமிய சொல்லி அவனின் காதுக்குள் "வருமாமா மாமாவ பாரேன் இந்த வயசுலயும் எப்படி இருக்காருனு" என சொல்ல வர்ஷித் வெறுப்புடன் திரும்பி அவரின் உடலை பார்த்தவன் ஆச்சரியமா பட்டான். 'இந்த வயதிலும் இவ்வளவு கட்டுக்கோப்பான உடலா? ' என வியந்தான். இதனை கண்டவள் அவன் காதில் இதற்கு காரணம் கூற இப்போது ஆர்வமாய் கேட்டான் "மலர் அத்தைக்கு மாமாகிட்ட பிடிச்சதே இதுதானாம் அதான் இந்த வயதுவரையும் இப்படி உடம்பு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்" என ஆதிகா கூற தன் தந்தையின் காதலை கண்டு மனதினுள் மெச்சிக்கொண்டான்.

நடராஜனுக்கும் தயக்கமாக இருக்க வர்ஷித்தோ பிடிவாதமாக நின்றான். ஆதிகா வனிதா இருவரும் மாறிமாறி வர்ஷித்திடம் பேச சொல்லி கெஞ்ச அவன் கோப குழம்பாக நடராஜனிடம் திரும்பினான்.

"இப்ப போதுமா உங்களுக்கு, நான் உங்களுக்கும் என்ன பண்ணேன், எல்லாரையும் எனக்கெதிரா திருப்பிவிட்டு வேடிக்கை பாக்குறீங்க, இப்போ சந்தோசமா இப்போ திருப்தியா ஏதோ என்மேல பாசமாமே பாசம் பொல்லாத பாசம், பாசம் இருக்குறவங்க சின்ன பிள்ளையிலிருந்து பாத்து இருக்கணும் இப்போ பேர பிள்ளை வந்த உடனே என்ன என்மேல கரிசனம். எனக்கு எதுமே தேவை இல்லை. பேர பிள்ளையை பாக்கணும்னா பாருங்க ஆனால் என்கிட்டே ஒட்டுற வேலை வச்சிக்காதிங்க" என அவன் கத்தி சற்று அடங்க 'இதுவரை தன் மகன் தன்னை திட்டவாவுது தன்னிடம் பேசுகிறானே' என பொறுமை பிடித்தவர் பேச ஆரம்பித்தார் "இல்லடா உன்ன அந்த வீட்டல சேக்காம இருந்ததுக்கு உனக்கு காரணம் தெரியாது, உன் நல்லதுக்குதான்" என தன்மையை பேசியவரிடம் "என்ன மண்ணாங்கட்டி காரணம், நீங்கதான் அம்மாவையே உங்க கூட சேத்துக்களையே அப்பறம் எப்படி என்ன சேத்துப்பிங்க உங்களுக்கு பொண்டாட்டி புள்ளைய வச்சி காப்பாத்துற துப்பு இல்ல" என தன் மன குமுறலை வார்த்தையால் உதிக்க எல்லாரும் அவன் கூறிய வார்த்தையில் உறைந்திருக்க அவன் முன் ருத்ர மூர்த்தியாக நின்ற குமாரசாமி பளார் என ஒரு அறை விட்டார்.

அவன் அதிர்ந்து நிற்க "இனிமேல் என் நண்பன பத்தி ஒரு வார்த்தை பேசின கொன்னேபுடுவேன் உன்ன. என்னடா வேணும் உனக்கு கேளு எல்லாத்துக்கும் நான் பதில் தரேன். போனா போகுதுனு பார்த்த ரொம்ப பேசுற" என கர்ஜித்தவர் "உங்க அப்பாவை பத்தி உனக்கு என்னடா தெரியும் உன்ன வளர்த்தது வேணா நானா இருக்கலாம் ஆனால் வளர்க்கவச்சவரு அவன் தான்டா, நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது உன்னைய கீழ விடமாட்டான்டா, என்ன விட நீதான் அவன் மேல பாசமா இருப்ப, ஆனால் உனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச உடனே அவனே உன்ன விட்டு ஒதுங்கிட்டான். ஒதுங்கி போனாலும் உன்னோட நிழலா அவன்தான் இருந்தான்டா, உன்னோட ஒவ்வொரு தேவையையும் என் மூலமா அவன் தாண்டா உனக்கு செஞ்சான், உன்ன சார்ந்த ஒரு சின்ன பொருள் கூட என்ன அவன் வாங்க விட்டதே இல்ல. உன்மேல உசுரா இருந்ததுனாலதான் உன்ன விட்டு விலகி இருந்தான். உன்ன ஹாஸ்டல சேர்க்க சொன்னதும் அவன்தான், அன்னைக்கு எப்படி கலங்கிபோனானு எனக்குதான்டா தெரியும். உனக்கு தெரியாம உன்ன பார்க்க இங்க எத்தனை முறை வந்திருப்பான் தெரியுமா? அப்பறம் விஷ்ணு வீட்ல நீ இருக்கிறேன்னு சொன்னப்போ கூட உனக்கு தெரியாம இங்க வந்து பேசிதான் சம்மதம் சொன்னான்". உடனே வர்ஷித் மாமாவை பார்க்க, "என்ன பார்க்குற இந்த விஷயம் வசந்தா சுப்பிரமணிக்கு தெரியும்" என கூறி அவனை மேலும் அதிர்ச்சியாக்கி தொடர்ந்தார். "ஏன் உனக்கு ஆதிகாவ பொண்ணு பாத்ததுகூட அவன்தான், கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு மனசுல அவ்ளோ ஆசை வச்சிக்கிட்டு, இங்க வந்தா உனக்கு புடிக்காதுனு வரமறுத்துட்டான்" என தனது மாமா பேச பேச தன் தந்தையையே பார்த்தான் கண்ணில் நீர் விழுவது கூட அறியாமல். "உன்ன ஜோடியா பாக்கணும்னு ரொம்பா ஆசைப்பட்டான். பாட்டி இறந்ததுக்கு எங்க நீ வராம போய்டுவியோன்னுதான் தான் உன்கிட்ட போன்ல நீ வரக்கூடாதுன்னு சொன்னான், அவனோட யூகிப்பு போல அவன் சொல்ல எதிர்த்து நீயும் அங்க வந்த. அன்னைக்கு அவ்ளோ சந்தோசமா இருந்தான், நீ அப்பா ஆகிட்டான்னு அவன்கிட்ட சொன்னப்போ ரொம்ப நாளுக்கு அப்பறம் ரொம்ப நிறைவா உணர்ந்தான். அப்பறம் ஆதிகா கூப்பிடப்ப கூட உனக்கு புடிக்காதுனு வரலனு சொன்னான் நாங்கதான் வற்புறுத்தி இங்க அழைச்சிட்டு வந்தோம், அம்மாவ பாத்துகாலனு சொன்னியே உன்னையும் மலரையும் ஏத்துக்காத அந்த வீட்ட இவன் ஒதுக்கி வச்சு, இத்தனை வருஷம் தனியாத்தான் இருந்தான்" என அவர் ஒரு வேகத்தில் கூறி முடிக்க வர்ஷித் ஓடிச்சென்று நடராஜன் முன் மண்டியிட்டு அவரது மடியில் முகம் புதைத்து கதறினான்.

முதல்முறையாக "அப்பா" என வர்ஷித் அழைக்க அவரது உயிரில் ஒரு மின்சாரம் பாய்ந்தது. அவனை நிமிர்த்தி முகம் முழுதும் முத்தமிட்டார்.'இந்த வார்த்தைய என் காலம் முடியிறதுக்குள்ள ஒரு தடவ கேக்க மாட்டோமான்னு எத்தனை முறை ஏங்கிருப்பேன்' என நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார். "என்ன மன்னிச்சிருங்கப்பா, இவ்வளவு தெரியாம உங்ககிட்ட வரம்பு மீறி பேசிட்டேன்ப்பா" என மன்னிப்பு கூற "இல்லையா நீ மன்னிப்பு கேக்காத உனக்கு தெரியாம இல்லை, நாங்கதான் தெரிய படுத்தாம பாத்துக்கிட்டோம்" என வருத்தம் நிறைந்த குரலில் கூறினார். அவனது முகத்தையே பார்த்தவர்கள் மேலும் பேசினார் "வருப்பா என்ன மனிச்சிருவில, என்னைய வெறுக்க மாட்டிலப்பா? " என குழந்தையாய் மாறி அவனிடத்தில் கெஞ்ச அவன் மறுப்பாக தலை அசைத்தான். "அப்பா உன்ன வெறுக்கல, உன்ன எப்படி வெறுப்பேன் நீ என்னோட காதலுக்கு கிடைத்த பரிசுடா, உங்க அம்மா ஆசை மாதிரியே என்ன போலவே உன்ன பெத்துட்டா, அவ பிடிவாதம் பிடிச்சா நீ என்ன மாதிரியே பிறக்கணும்னு அது மாதிரியே உன் அம்மா ஆசை போல அவளோட பிடிவாதத்தை அப்படியே உறிச்சி வச்சி எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் மலர நியாபகப்படுத்துற உன்ன எப்படிடா நான் வெறுப்பேன்" என உச்சி முகர்ந்தார். "உன் மேல உள்ள பாசம்தான் என்ன இப்படி செய்ய வச்சது. எந்த அப்பாவும் தான் பிள்ளைங்க சந்தோசமா இருக்க என்ன வேணாலும் செய்வாங்க. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தாங்குவாங்க புள்ளைங்க சிரிப்ப பார்க்க, நானும் அப்டிதான்ப்பா செய்தேன்" என அவர்கூற வர்ஷித் "அப்பா நான் உங்கமேல வெறுப்பு காமிக்கிற மாதிரி பண்ணிட்டீங்களே ஏன்ப்பா? " என மகனாய் கேள்வி கேக்க "நீ என்கூட இருந்தா என்னோட வீட்டுக்கு வரணும்னு கேப்ப, அங்க உன்ன வளர்ந்திருந்த உனக்குத்தான் கஷ்டம்ப்பா, அங்க யாரும் உன்ன பாசமா பாத்துக்கமாட்டாங்க, உன்ன தேவை இல்லாம திட்டுவாங்க, தேவை இல்லாமல் பேசுவாங்க ஏன் உன்ன கொல்ல கூட தயங்க மாட்டாங்க. எனக்குன்னு இருக்குற ஆறுதல் நீதான், அதான் நீ வளர நல்ல சூழல் வேணும்னுதான் உன்ன மாமா வீட்ல விட்டேன்.

ஒரு பிள்ளை வளர பாசமான, பாதுகாப்பான சூழல் கண்டிப்பா தேவை, நீ இப்போது நல்லா வளந்துருக்க, இவ்ளோ பொறுப்பா உன்ன சுத்தி உள்ளவங்கள அன்பா பாத்துக்குற இத விட எனக்கு என்ன வேணும், அப்போ இருந்த வாழ்க்கையில் என்னால இதுபோல ஒரு சூழல உனக்கு தர முடியல அதான் இப்படி செய்தேன். நீ ராஜாப்பா, ராஜா மாதிரி வளரத்தான் என் மனச நானே கல்லாக்கி அப்படி செய்தேன் உன்கிட்ட கடுமையாக பேசினேன்' என அவர்கூற அவரை கட்டிபிடுத்துக்கொண்டு அழ ஆரம்பித்து "அப்பா சாரிப்பா" என பிதற்ற தொடங்கினான். "

'நம்ம நிம்மதிக்காக கஷ்டப்படுற மனைவி எல்லாருக்கும் அமையாது உனக்கு அமைஞ்சிருக்கு ஆதிகாவ பத்திரமா பாத்துக்க" என அறிவுரை கூறினார். அதுவும் உண்மைதானே அவள் செய்யவில்லை என்றாள் இருவரும் சேர்ந்திருக்க்க மாட்டார்களே.

கொஞ்சம் நேரம் கழித்து வர்ஷித் இத்தனை வருடம் ஏங்கின தந்தையின் மடியில் படுத்துகொண்டான். அவரும் அவனது சிகையை கோதிவிட்டார். இங்கு ஆதிகா வனிதா இருவரும் கண்ணில் ஆனந்த பெருக்கை கண்ணீராய் தேக்கி வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். குமரசாமி திருப்தியாக பார்த்தார்.

மறு நாள் காலை பரபரப்பாக இருந்தது. சுப்பிரமணியனும் வசந்தாவும் வர்ஷித் தந்தை கூட சேர்ந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தனர்.

வர்ஷித் தன்மீது துயில் கொள்ளும் ஆதிகாவை பார்த்து ஒரு பக்கம் நிகழவிருக்கும் நிகழ்வின் மகிழ்ச்சி இருந்தாலும் தன்னை விட்டு பிரிய போவதை எண்ணி வருத்தம் கொண்டான். எழுந்தவன் ஆதிமாவிற்கும் மலர்மாவிற்கும் முத்தத்தை கொடுத்து காலை வணக்கத்தை தெரிவித்து குயிலறைக்குள் புகுந்து கொண்டான்.

சிறிது நேரம் கழித்து கிளம்பினாள் ஆதிகா. சிரித்த முகமாய் காலை வணக்கத்தை தெரிவிக்க, குழந்தை தன் அசைவை காட்ட இருவரும் அதனை உணர்ந்து மகிழ்ந்தனர். அவளை பல் துலக்க வைத்து டீ எடுத்து வந்து அவளை குடிக்க வைத்த பின்பே குளிக்க செல்ல சொன்னபோது, "அவள் சிறிது நேரம் பேசலாம்" என சொன்னவுடன் அவளின் ஆசையை நிறைவேற்றி குளிக்க அனுப்பினான். குளிக்க போகும்போதே வர்ஷித் வளைகாப்பிற்காக வாங்கின புடவையை கொண்டு வந்து கொடுத்தான். பிறகு கீழே சென்று அங்குள்ள வேலைகளை கவனித்தான்.

அப்போது ஆதிகாவின் அப்பா அம்மா வர, அவர்களை வரவேற்த்து உபசரிக்கும்போது அறையிலிருந்து ஆதிகாவிடமிருந்து "மாமா மாமா" என அழைப்பு ஓசை கேட்க வர்ஷித்தும் மேல போக எத்தனிக்கும்போது "மாப்பிள்ளை அவ நாளைக்கு ஒரு குழந்தைக்கு அம்மா ஆகப்போறா அவளுக்கு தேவையானத அவதான் செஞ்சுக்கணும் இன்னும் சின்னப்புள்ள மாதிரி உங்களையே கூப்பிடுறா" என கூறி அவனை தடுத்து ஆதிகாவின் அம்மாவே மேல செல்லும்போது வர்ஷித் செய்வதறியாது நிற்க, அவனின் பெற்றோரும் சிரிக்க, ஆதிகாவின் அப்பாவும் சிரித்தார். சிறிது நேரத்தில் மேல சண்டையிடும் சத்தம் வர "நான் மாமாவ தானே வர சொன்னேன் நீ ஏன் வந்த? " என ஆதிகாவின் குரல் பலமாக இருக்க ஆதிகாவின் அப்பா "மாப்பிள்ளை நீங்க போங்க அவளை அனுப்பிவச்சிட்டு ஆதிகாவ பாருங்க, ரெண்டும் ஒரே பிடிவாதம் அதே குணம் நாளைக்கு குழந்தைக்கும் வந்துர போகுது" என புலம்பினார்.

அவளது பிடிவாதம் தானே அவனுக்கு பிடித்த ஒன்று என நினைத்து சிரித்துக்கொண்டே மேல சென்று சண்டையை சரி செய்து அத்தையை அனுப்பிவைத்துவிட்டு, குழந்தை போல சண்டையிட்டு களையிழந்து கோபமாக அமர்ந்திருக்கும் மனைவியின் பின்னாலிருந்து அணைத்து சாரி கூறினான். அவள் மன்னிக்காததால், தங்கத்தில் ஜொலிக்கும் அட்டிகையையும் செயினையும் பின்னாலிருந்த வாறே போட்டுவிட்டான் அதை பார்த்து விழிவிரித்து "இது எப்போ வாங்குன மாமா? "என கேட்க, அவனோ "சென்னை போனபோது அங்க உன் நியாபகமாவே இருந்தது அதான் ஒன்று உனக்காக வாங்கி வைத்தேன்" என கூறி நெற்றியில் முத்தமிட்டு "இன்னைக்கு அழகா இருக்கடி" என கூறவும் அவளும் "நீ எப்போதுமே அழகுதானே மாமா" என கூறி அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து "வா கீழ போகலாம்" என அவளை கை தாங்கலக அழைத்து வந்தான்.

அங்கு நாற்காலியில் பட்டு போல மென்மையானவளுக்கு மஞ்சள் நிற பட்டுடுத்தி சில ஒப்பனை மட்டுமே செய்து தாய்மை தந்த களிப்பில் வயிற்றில் ஒரு கை வைத்தவாறு அழகின் பதுமையாக அமர்ந்தவளின் விரித்து விரித்து கதை பேசும் விழிகளும் அவளின் அழகையும் ஆதி முதல் அந்தம் வரை ரசித்து கொண்டிருந்தான். வளைகாப்பு விழாவும் ஆரம்பித்தது. எல்லாரும் அவளது கையில் வளையல் பூட்டி முகத்தில் மஞ்சள் சந்தனம் பூசி குங்குமம் இட்டு பூக்கள் தூவி ஆசிர்வதித்து சென்றனர். இதில் அனைவருக்கும் முதலில் அவளுக்கு இந்த சடங்கை செய்தது அவள் மனதை கொள்ளை கொண்ட வர்ஷித்தே. இவன் பூச அவள் சிவந்து போனதுதான் மிச்சம். பிறகு அவளுக்கு அருகிலே கொஞ்சம் தள்ளி நின்று அவளை பார்வையால் அளவெடுக்கும் வேலையை குறை இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் தம்பி வர்ஷித்தின் இச்செயலை பார்த்து ஓட்டி எடுத்துவிட்டான். எல்லாரும் செய்து முடித்தபின் அனைவரிடமும் ஆசி வாங்கினர். நாள் முழுதும் வர்ஷித் நடராஜனை விட்டு நகரவே இல்லை. ஆதிகாவிற்கு மனம் நிறைவாக இருந்தது.

வளைகாப்பு முடிந்து ஆதிகா பிறந்த வீட்டுக்கு கிளம்பும் போது வர்ஷித் உம்மென்று இருக்க காரணம் கேட்டாள் ஆதிகா. "உன்னையையும் மலர்மாவையும் மிஸ் பண்ணுவேன்டி"என சோகமாக கூற "எப்ப வேணா வீட்டுக்கு வா மாமா, அப்படி வர முடியலனா என்ன வீடியோ கால்ல பாரு" என தீர்வு கூற "அப்போ பாப்பாவ எப்படி பாக்குறது? "என கேட்டவனிடம் ஒரு போட்டோவை திணித்தாள். அதை பிரித்து பார்க்க, ஒரு சாந்தமான சிரிப்புடன் அழகு ஓவியமாய் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒரு உருவமிருக்க அதை பார்த்தவனது உடலில் மின்னல் தாக்கியது. உள்ளுணர்வு உந்த "மலர்மா" என அதனை வருடினான். முதன்முறை பார்த்தாலும் கண்டுபிடுத்துவிட்டான் தனது அம்மாவை. "பாப்பாவ பாக்கணும்னா இத பாத்துக்கோ மாமா" என்றாள் புன்னகையுடன். 'இது எப்படி உன்கிட்ட' என கேள்வியோடு பார்க்க அதை அறிந்து "ஊருக்கு போனபோது மாமாகிட்ட கெஞ்சி வாங்கிட்டு வந்தேன், அவரு கொடுக்கவே இல்லை, நீ பாக்கணும்னு சொன்ன உடனே கொடுத்துட்டாரு அவ்ளோ பாசம் உன்மேல" என கூறினாள். தன் மகிழ்ச்சிக்காக இத்தனை தூரம் செய்யும் ஆதிகாவை நினைத்து இவ்வன்பு எனக்கு கிடைத்த வரம் என்றே நினைத்தான் அவளின் காதல் அடிமை.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 28
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN