என்னை தீண்டிவிட்டாய் 11

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எத்தனை
காதலை சுமந்திருந்த போதிலும்
உன் மனம்
என் நினைவை
விலக்க
காரணம் என்னவோ....

ஷாகர் நடந்ததனைத்தும் கூறி முடித்தவன்

“நான் ஆதிரா விரும்பினதால தான் அவ கழுத்துல தாலி கட்டுனேன்... ஆனா அவளோட விருப்பம் இல்லாமல் அவகிட்ட என்னோட உரிமையை நிலைநாட்ட விரும்பலை... சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்து ஒரு விஷயத்துக்கு அவளை பொறுப்பாளியாக்க நான் விரும்பலை... அதோடு நான் உரிமையாக அவளோட படிப்புக்கு செலவு செய்ததை கூட அவ உதவியாக நினைத்து அதுக்கான பணத்தை தன்னோட சம்பளத்துல இருந்து எடுத்துக்க சொல்லிட்டா... இப்படி அவ என்னை வேற்றாளாக நினைச்சி நடந்ததை பார்த்ததும் அவ இந்த திருமணத்தை ஒரு உதவியாக தான் நினைச்சானு நானும் அதை அப்படியே விட்டுட்டேன்... ஆனா எப்படியாவது என்னோட மனசை அவளுக்கு புரிய வச்சு உங்க சம்மதத்தோட அவளை என்னோட மனைவியாக இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு தான் நினைச்சேன்.. ஆனா எப்போ அவ கழுத்துல நான் கட்டுன தாலி இந்த நொடிவரை இருக்குனு தெரிந்தததோ அப்பவே இவ மட்டும் தான் என் மனைவினு முடிவுபண்ணிட்டேன்.. அதனால அவ மனசு மாறும் மட்டும் வெயிட் பண்ணலாம்னு முடிவு பண்ணேன்....ஆனா...ம்ஹூ.. அவளுக்கு நான் தான் அவ புருஷன்னு சொல்லுறதுல இஷ்டமில்லை... இப்படி விருப்பமில்லாதவங்களை வற்புறுத்தி வாழ்றதுல எனக்கும் விருப்பம் இல்லை......” என்று ஷாகர் கூற ஆதிராவோ தன் அழுகையை நிறுத்தவில்லை...

அப்போது பிரகஸ்பதி பலமாக கைதட்ட அனைவரும் அவரை திருப்பிப்பார்த்தனர்

“சபாஷ்.....பார்த்தியா வசு நம்ம மகன் எவ்வளவு பெரிய ஆளாகிட்டானு... காப்பாத்துறதா தாலி கட்டுவாராம்... இப்போ பிடிக்கலைனு அத்து விடுவாறாம்..ம்ம்...ரொம்ப நல்ல விஷயம் ஷாகர்.... இவ்வளவு விஷயம் பண்ணிட்டு அதையெல்லாம் இத்தனை நாள் மறைச்சது மட்டுமில்லாமல் இப்போ வேணாம்னு எவ்வளவு சாதாரணமா சொல்லுற??”

“அப்பா...”

“போதும் ஷாகர்... போதும்... இதுக்கு மேல எதுவும் பேசாத... ரொம்ப பெருமைபடுத்திட்ட... சத்தியமா நான் இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை... நல்ல மரியாதை செய்துட்ட...” என்ற பிரகஸ்பதி கூற ஷாகரோ தலைகுனிந்து நின்றான்..

அவன் அவ்வாறிருப்பதை பொறுக்காத அவனது அத்தைகள் அவனுக்காக பரிந்து பேச வந்தனர்..

“என்ன அண்ணா நீங்க... நம்ம பையன் ஏதோ அந்த பொண்ணு ஆபத்துல இருந்ததால காப்பாத்த அப்படி பண்ணியிருக்கான்.. எங்க வீட்டுல சொன்ன தப்பா நினைப்பாங்களோனு மறைச்சிட்டான்... இதை ஏதோ கொலைகுற்றம் மாதிரி சொல்லுறீங்க.. நாம பெரியவங்க தான் பார்த்து இந்த பிரச்சினையை முடிச்சி வைக்கனும்.. அதைவிட்டுட்டு தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை நிற்க வச்சி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க..” என்று ரம்யா கூற ராகினியும்

“அதான் அண்ணா.. அதான் நம்ம பையன் இப்போ தெளிவா சொல்லிட்டானே.. அதோட அந்த பொண்ணுக்கும் விருப்பம் இல்லைனு தான் தெரியிது.. பிறகு என்ன அண்ணா.... பிரச்சனையை இதோடு முடிங்க..” என்று கூற பிரகஸ்பதியோ

“இங்க பாருங்கமா... என்ன ஏதுனாலும் அவன் பண்ணது தப்பு தான்... அவன் எடுத்த பொறுப்பை சரியாக செய்யாமல் நழுவுறது எந்த ஒரு ஆண்மகனுக்கும் தலைகுனிவு தான்.....” என்று கூற வாகினியோ

“அண்ணா நீங்க பேசுறதுல எந்த நியாயமும் இல்லை... தாலி கட்டுனா அந்த பொண்ணோட பொறுப்பு இவனுக்கு வந்திடுச்சுனு அர்த்தமா?? அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லாதபட்சத்துல இதை நாம வற்புறுத்துறது தப்புனா..”

“நீங்க என்ன சொன்னாலும் அவன் பண்ணது தப்புனா... அவன் பொறுப்பு தட்டிக்கழிக்கிறது தப்பு... அப்படி தான் இருப்பேன்னு சொன்னா அவன் இதுக்கு மேல இந்த வீட்டுல இருக்க முடியாது...” என்று பிரகஸ்பதி கூற வசுமதியோ

“என்னங்க... அவன் தான் புரியாமல் பேசுறான்னா நீங்களும் இப்படி பேசுறீங்க...”

“வசு.. தப்பு பண்ணா தண்டனையை அனுபவிச்சு தான் ஆகனும்.. அவன் ஒன்னும் குழந்தை இல்ல.. நாம சொல்லிக்கொடுத்து அதை செய்றதுக்கு...”என்றவர் ஷாகரிடம்

“ஷாகர் இப்போ நீ ஆதிராவோட வாழப்போறியா இல்லையா???”

“அப்பா என்னோட பதில் ஒன்று தான்...அவளுக்கு நான் வேண்டாம்னு செயல்ல காட்டிட்டா... அதுக்கு பிறகும் அவளை கட்டாயப்படுத்தி வாழ்றதுல எனக்கு விருப்பமில்லை..”

“அப்போ நீ இந்த வீட்டுல இருக்கூடாது..” என்று பிரகஸ்பதி உறுதியாய் கூறிட அதை ஏற்ற ஷாகர் வெளியேற அனைவரும் அவனை தடுக்க முயல ஆதிராவோ

“ஷாகர் ஒரு நிமிஷம்..” என்று கூற அவளை அனைவரும் திரும்பி பார்த்தனர்..
தன் கண்களை துடைத்துக்கொண்டவள் பிரகஸ்பதியின் முன் சென்று நின்றவள்

“சார்.... என்னை மன்னிச்சிடுங்க... என்னால தான் உங்களுக்குள்ள இவ்வளவு பிரச்சினை... என்னை காப்பாற்றுவதற்காக தான் அவர் என் கழுத்துல கட்டுனாரு... நான் இதை உடனே கழட்டியிருந்தா இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது.... இதை செய்யாதது என்னோட தப்பு தான்.... ரொம்ப இக்கட்டான நிலையிலிருந்து மீட்டவருக்கு என்னால எந்த பிரச்சினையும் வரக்கூடாது... அவர் மீது எனக்கு எந்தவித உரியையும் இல்லாத பட்சத்துல எனக்காக அவர் தன்னோட குடும்பத்தை பிரியிறதுல எனக்கு விருப்பம் இல்லை... இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என் கழுத்துல அவர் கட்டுன தாலி தானே... உங்க முன்னாடியே அதை கழட்டி கொடுத்துட்டு உங்க யாரு கண்ணுலயும் படாம எங்கயாவது போயிடுறேன்... ப்ளீஸ் தயவு செய்து எனக்காக உங்க மகனை வெளியில அனுப்பிடாதீங்க.. ஏற்கனவே எந்த ஜென்மத்துல செய்த பாவமோ நிறையவே அனுபவிச்சிட்டேன்..ஒரு குடும்பத்தை பிரிச்ச பாவமும் எனக்கு வேண்டாம்..” என்றவள் தன் கழுத்தில் தொங்கியிருந்த தாலியை இரு கைகளாலும் தூக்கியவள் கண்களில் நீருடன் கழற்ற கைகளை உயர்த்தியபோது அவளை தடுத்தான் ஷாகர்...

ஆதிராவினை விருட்டென தன் புறம் திருப்பியவன் அவள் கன்னத்தில் அறைந்தான்..

அப்போது வசு

“ ஷாகர் என்ன காரியம் பண்ணுற?? இப்படி தான் ஒரு பொண்ணை கைநீட்டி அடிப்பியா??”

“தப்பு தான் மா... ஆனா இவ பண்ண இருந்த காரியம் மட்டும் சரியா??? எவ்வளவு தைரியம் இருந்தா நான் கட்டுன தாலியை என்முன்னாடியே கழுட்டுவா??” என்ற ஷாகர் ஆதிராவிடம்

“என்ன மனசுல பெரிய தியாகினு நினைப்பா உனக்கு?? உன்னை இவ்வளவு நாள் விட்டு வச்சது தப்பா போச்சு... நீ பிடிக்கலைனு சொல்லியிருந்தா கூட நான் விட்டுருப்பேன்... ஆனா என் மேல உனக்கு உரிமை இல்லைனு சொன்ன பாரு.. அதை தான் என்னால தாங்கமுடியல... எந்த விஷயத்துலடி நான் உனக்கு உரிமை கொடுக்கல... நான் எதை கொடுத்தாலும் நீ தானே வேண்டாம்னு சொன்ன?? நானும் நீ சுயமரியாதை முக்கியம்னு நினைச்சு தான் அப்படி பண்ணுறனு பேசாமல் இருந்தா ஆனா நீ... இவ்வளவு நேரம் உன் விருப்பம் இல்லாமல் எதுவும் வேண்டாம்னு நினைச்சிருந்தேன்..... இப்போ சொல்றேன்....வாழ்வோ சாவோ நீ என்கூட தான் வாழ்ந்தாகனும்... நான் தான் உனக்கு அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் புருஷன்.... கிளம்புடி..” என்றவன் யாரும் எதிர்பாராத வேலையில் ஆதிராவை இழுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான்..

அனைவரும் பேச்சின்றி நடந்ததை கிரகிக்க முயன்றபடி நிற்க பிரகஸ்பதியோ

“அதான் எல்லாம் முடிஞ்சே... எல்லாரும் உங்கங்க வேலைய பாருங்க..” என்று கூற அங்கொரு கனத்த அமைதி நிலவியது...

அப்போது வாகினி

“அண்ணா நீங்க பண்ணது..”

“இங்க பாரு வாகினி... இப்பவும் சொல்லுறேன்.. அவன் பண்ணது தப்பு தான்.. அதுக்கான தண்டைனை அவனும் ஏத்துக்கிட்டான்... அவ்வளவு தான்.. இதோட இதை விடுங்க.. இது அவன் வாழ்க்கை. கஷ்டமோ நஷ்டமோ இனி அவன் தான் பார்த்துக்கனும்.” என்றவர் கிளம்பி தன்னறைக்கு சென்றுவிட அவரின் தங்கைகள் ஐவரும் வசுமதியை தேற்றினர்....

திடீரென நடந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவருக்குமே கவலையுண்டாக வேறுவழியின்றி அனைவரும் தம்மில்லம் திரும்பினர்....வசுமதியோ தன் கணவனின் கோபம் இப்படி தன் மகனை பிரிய சதி செய்துவிட்டதே என்று எண்ணி வெம்பி அழுகையிலேயே கரைந்தவர் தன் கணவனிடம் முகம் கொடுக்காமல் தன் கோபத்தை வெளிக்காட்டினார்..

ஆதிராவை இழுத்துக்கொண்டு வீதிக்கு சென்ற ஷாகர் வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி அவளை உள்ளே தள்ளிவிட்டு அவனும் ஏறிக்கொண்டான்...
அவனது ஆத்திரத்தில் நடுங்கியபடியிருந்தவளுக்கு எதுவுமே புரியவில்லை... நடப்பதனைத்தையும் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது....

அப்போது ஆட்டோ டிரைவர் எங்க செல்வது என்று கேட்க சற்று நிதானித்த ஷாகர்

“நீங்க போங்க நான் சொல்றேன்...” என்றவன் தன் மொபைலை எடுத்து யாரிடமோ பேசிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் அவன் செல்ல வேண்டிய இடத்தை சொன்னான்...
அவரும் அவன் சொன்ன இடத்தில் இறக்கிவிட பணத்தை கொடுத்துவிட்டு கீழே இறங்கியவன் ஆட்டோவிலேயே செயலற்று அமர்ந்திருந்தவளிடம்

“எறங்கு..” என்று கூற அவளும் கீ கொடுத்த பொம்மை போல் அவனையே பின்தொடர்ந்தாள்...

அது ஒரு தனி வீடு... அருகில் வீடுகளிருந்த போதிலும் அவற்றுக்கிடையில் கணிசமான அளவு இடைவெளி இருந்தது... வீட்டின் வாசல் கேட் பூட்டியிருக்க ஆதிரா ஷாகரை கேள்வியாக பார்த்தாள்.... அவனோ அதை கண்டுகொள்ளாமல் தெருவை பார்த்தபடியிருக்க அப்போது அங்கொரு பைக் வந்து நின்றது...
அதிலிருந்து இறங்கிய நபர் ஷாகர் கையில் சாவியையும் ஒரு பொதியையும் கொடுத்து

“மச்சான்.. இந்தாடா வீட்டோட சாவி... நீ சொன்னபடி ஹோட்டல்ல சாப்பாடும் வாங்கிட்டு வந்திருக்கேன்... வீட்டுல தேவையான எல்லா பொருளும் இருக்கு..... எதுவும் தேவையான சொல்லு....”

“தேங்க்ஸ்டா..”

“இதுல என்னடா இருக்கு... சரி நான் கிளம்புறேன்டா...”என்று அந்த நபரும் கிளம்பிட ஷாகர் சாவியை கொண்டு அந்த வீட்டை திறந்துகொண்டு உள்ளே சென்றவன் அங்கிருந்த அறையொன்றில் சென்று முடங்கிக்கொண்டான்...

ஆதிராவோ கேட்பாரின்றி நின்றவள், வீட்டினுள் வந்து கதவை அடைத்துக்கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டவளுக்கு இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை மீண்டும் பீறிட்டு வெளியே வந்தது...

எதனால் தன் வாழ்வில் இத்தனை சோதனை....???? தன்னால் அனைவரும் கஷ்டப்படுகிறார்களே... என்னை பெற்ற பாவத்திற்காக என் அன்னை கஷ்டப்பட்டார்... இப்போது தன்னை காப்பாற்றிய பாவத்திற்காக ஷாகர் கஷ்டப்படுகின்றான்... எதற்காக நான் அனைவருக்கும் பாரமாய் இருக்க வேண்டும்??? இப்படி மற்றவர்களுக்கு பாரமாய் இருப்பதைவிட செத்தொழிவதே மேல் என்று எண்ணியவள் அதற்கு மேல் அங்கு இல்லை...

அறையினுள் சென்று முடங்கிய ஷாகருக்கு ஆத்திரம் அடங்கவில்லை... தன் மேல் அத்தனை காதலிருந்த போதிலும் எதற்காக தன்னை விலக்கு நிறுத்துகிறாள்.... கடைசியில் இத்தனை நாளாய் மறைத்து பாதுகாத்த தான் கட்டிய அந்த தாலிக்கயிற்றை கூட அவள் கழற்ற துணிந்துவிட்டாளே.... எதற்காக தன்னைத்தானே இத்தனை வருத்துக்கொள்கிறாள்.... எதனால் உயிருக்குயிராய் நேசித்த என்னையே இழக்க முன்வந்தாள்... இவ்வாறு யோசித்தவனுக்கு அப்போது தான் ஆதிராவின் நினைவு வர அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தவன் ஆதிராவை தேட அவள் அங்கில்லை...வெளிக்கதவும் கேட்டும் திறந்திருக்க ஷாகருக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது...

உடனே ஆதிராவை அழைத்தபடி வீட்டிற்கு வெளியே சென்று தேடத்தொடங்கினான்.. தேடியபடி வீதிக்கு வந்தவன் கண்ட காட்சியில் அவனுக்கு குலையே நடுங்கிவிட்டது..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN