உறவாக வேண்டுமடி நீயே 3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு – 3

துரைசிங்கம் சிவகங்கைப் பகுதில் பெரிய ஜமீன்தார் வம்சம். பல ராஜ வம்சங்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போனதை அபி பார்த்திருக்கிறான். அதே போல் தான் இந்த ஜமீன் வம்சம் என்ற அவன் எண்ணத்தை பொய்யாக்குவது போல் இன்றும் அந்த வம்சத்திற்காக விஸ்வாசம் என்ற பெயரில் உயிர் கொடுக்கவும் படை திரட்டவும் தோள் கொடுக்கவும் பலர் தயாராகத் தான் இருந்தார்கள். இன்றும் அந்த எல்லைக்கான அரசாங்க முடிவுகள் இவர்களைக் கேட்டு கலந்தாலோசித்துத் தான் எடுக்கப் படுகிறது.



அந்தக் காலத்துப் பொறியியல் பட்டதாரி. அவர் தந்தைக்கே பல ஆலோசனைகள் சொல்லி வியாபாரத்திலும் பல யுக்திகளைப் புகுத்தி வெற்றி கண்டவர். இப்பொழுதும் அவர்களின் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. பெரிய செல்வந்தர். ஊட்டி, கொடைக்கானல் மட்டுமில்லாமல் டார்ஜிலிங்கில் கூட பல டீ எஸ்டேட்கள் உண்டு. இதற்கெல்லாம் ஒரே வாரிசு மகள் யுகநந்திதா.



அவளுடைய சிறு வயதிலிருந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவள். மனிதவள மேம்பாட்டில் இளங்கலையும், M.B.Aவும் படித்தவள். படிப்பைத் தவிர்த்து சுற்றுப்புற சூழல் சீர்கேட்டிற்கும் தாழ்த்தப்பட்டோருக்கான அடக்குமுறைகளுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் குரல் கொடுத்து போர்க்கொடி தூக்கியவள். இதை வாசிக்கும் போது மட்டும் “ஓ… அதான் மேடம் ரொம்ப துள்ளுறாங்க போல” என்று நக்கலாக சொல்லிக் கொண்டான் அபி.



தந்தைக்குப் பிறகு தன்னைத் தொழிலில் புகுத்திக் கொண்டவள் இன்றைய துரை சம்பந்தப் பட்ட அனைத்து ஸ்தாபனத்திற்கும் அவர்கள் மூடி சூட்டிய சமஸ்தானத்திற்கும் பட்டத்து ராணியாகத் திகழ்பவள் யுகநந்திதா. தன்னுடைய பங்குக்கு save nature என்ற பெயரில் பல சமூக நல அமைப்புகளையும் school of nature என்ற பள்ளியையும் நடத்தி வருபவள்.



இதுவரை எந்த பிரச்சனையும் வந்தது இல்லை அவளுக்கு. பிரச்சனை கொடுக்கவும் யாருக்குத் தான் தைரியம் இருக்கிறது. இதற்கிடையில் மூன்று வருடத்திற்கு முன்பு பெண்கள் பயன்படுத்தும் அணை ஆடையை இயற்கை முறையில் வாழை நார் மூலமாக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து சந்தையில் விட்டு இருக்கிறாள். அதை சுத்தமாகத் துவைத்து மீண்டும் பயன்படுத்தவும் இயலும். சுலபமாக அதை எரிக்கவும் முடியும். அதனால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த சீர்கேடும் ஏற்படாது. (உண்மையாகவே நம் இந்திய I.I.T மாணவர்கள் இதைத் தயாரித்து சந்தையிலும் விற்கிறார்கள் தோழமைகளே) இதனால் உடலுக்கு எந்தவித பக்க விளைவுகளும் வராது. எல்லா தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் மலிவான விலையில் விற்பனை செய்து வந்தாள். இந்த பொருளுக்கான உரிமமும் யுகநந்திதா என்றே இருந்தது.



இந்த பொருளுக்கு வேறு யாராவது உரிமம் பெற்றிருந்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்த அபியின் எண்ணத்திற்கு அந்த வினாடியே மூடு விழா நடத்தப்பட்டது.



இன்னும் அவளது பேட்டி மற்றும் ஆர்ட்டிகிளையும் துருவன் கொடுத்திருந்தான். அபிரஞ்சன் தயாரிக்கும் அணை ஆடைகளில் வாசனைக்காகவும், உலர்வாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் பயன்படுத்தும் ரசாயனங்கள் எல்லாமே பெண்களுக்கு அதிக வீரியத்தைக் கொடுப்பதாக இருந்தது. அதிலும் ஒரு சில பெண்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாள் முழுக்க ஒரு அணை ஆடையே பயன்படுத்துவதால் பலருக்கு கருக்கலைப்பு முதல் தோல் வியாதி மற்றும் புற்றுநோய் வரை பல பிரச்சனைகளைச் சந்தித்து உள்ளதாக சொல்லியிருந்தாள் யுகநந்திதா. அது மட்டுமில்லாமல் அதை எரிக்கவும் இயலாது. அது மண்ணோடு மக்கவும் செய்யாது. இதனால் சுற்றுபுறச்சுழலில் ஏற்படும் மாசு வரை அவள் சொல்லியிருந்த அனைத்தையும் படித்தவன் உதட்டோர ஒரு ஏளன வளைவுடன் கூடவே சின்ன தோள் குலுக்கலுடன் கடந்து சென்றான் அபி.



“வெல்… அப்போ என் கையினாலேயே என் பொருளுக்கு மூடு விழா காண நினைக்கிறாள். அதான் என்னை விட என் பொருளைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்காளே! பிறகு இந்த கலெக்ஷன் எல்லாம் எதற்கு? ஆனா இந்த கிரேட் பிசினஸ் மேன் அபிரஞ்சன் அப்படி செய்ய விட்டுடுவேனா என்ன?!” ஒரு பெருமூச்சுடன் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலே நிமிர்ந்து அமர்ந்தவன் தன் கைகள் இரண்டையும் கோர்த்து தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்த படி “அப்போ நிச்சயம் சந்தித்தே ஆகணுமே!” வாய் விட்டே சொல்லிக் கொண்டான் அபி.



இவ்வளவு நேரம் அவளுடைய சமஸ்தானத்தைப் பற்றியும் தன் தயாரிப்பைப் பற்றியும் அவள் குறிப்பிட்டிருந்த நிஜங்களைப் பற்றியும் படித்தானே தவிர இவள் தான் அந்த இளவரசி என்ற அடையாளத்துடன் ஒரு புகைப்படத்தைக் கூட துருவன் அனுப்பி இருக்கவில்லை. ஒரு ஆர்வத்தில் சரி நாமே தேடுவோம் என்ற எண்ணத்தில் இவன் கூகுள் கடவுளிடம் தன் கோரிக்கையை வைக்க, அவரோ அவளுடைய ஆர்டிக்கள்ஸ் எல்லாம் கொடுத்தவரோ நானே அப்பெண்ணைப் பார்க்க வேண்டும் முடிந்தால் நீ என் கண்ணில் காட்டுப்பா என்ற கோரிக்கையை வைக்கவும்,



“ஓ... மேடம் முகம் காட்ட விரும்பாத புரட்சிப் பெண் போல!” என்று சொல்லிக் கொண்டவன் “அப்போது கண்டிப்பாக மீட் பண்ணிடுவோம்..” அவளைப் பார்த்து ‘நான் இப்படித் தான்! ஆம் என் பொருட்கள் எல்லாம் இப்படித் தான் தயாரிக்கிறேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்’ என்று முகமறியாத தன் எதிரியான யுகநந்திதாவை நேரில் சந்தித்து சொல்ல வேண்டும் என்பதற்காவே அவளைச் சந்திக்க சம்மதித்தான் அபிரஞ்சன்.



இவன் சந்திப்புக்கு சரி என்று சொல்லி ஒரு வாரம் கழித்தே யுகநந்திதாவிடமிருந்து அப்பாய்ட்மெண்ட் கிடைத்தது. அதை துருவன் சொல்லும்போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உள்வாங்கிக் கொண்டான் அபி.



அவர்கள் சந்திப்புக்கான நாளும் வர மனதிற்குள் அவள் மேல் ஆயிரம் வன்மத்தை வளர்த்திருந்தாலும் அழகான கரும் பச்சையில் சந்தன கோடிட்ட சட்டை அணிந்து அதே சந்தன நிற பேண்டில் ஃபார்மலாக வந்து நின்றவனை துரை கம்பெனியில் இன்முகத்துடன் மரியாதையாக வரவேற்றவர்கள் மேடம் ஒரு முக்கியமான வேலையில் இருப்பதாகச் சொல்லி வி.ஐ.பி அறையில் அவனை அமரச் சொல்லி குடிக்க அவனுக்குப் பிடித்த ஆப்ரிகாட் மில்க்க்ஷேக்கைத் தர கண்ணில் சுவாரசியத்துடன் வாங்கி அதை ஒரு மிடறு விழுங்கியவனோ அதன் சுவையில் தன்னை மறந்து மனதிற்குள் அவளின் உபச்சாரத்தை மெச்சிக் கொண்டான் அபி.



அதே நேரம் அவன் பின்புறம் ஒலித்த அழகான ஹாலிவுட் நடிகை போல் நுனி நாக்கு ஆங்கிலத்திலும் லாவகமான பேச்சிலும் கவரப்பட்டவனாக தன்னை மீறி எழுந்து நின்று இவன் திரும்பிப் பார்க்க,



அங்கு போனில் பேசிக் கொண்டு வந்தவளின் நடை உடை பாவனையே சொல்லாமல் சொல்லியது அந்த இருபத்தேழு வயதுப் பதுமை தான் யுகநந்திதா என்று! இப்பொழுது இவன் அவளை சற்று சுவாரசியத்துடன் ஆழ்ந்து பார்க்க, அடுத்த நொடியே அவன் கண்களோ திகைப்பில் விரிந்து உதடுகளோ “காட்டுப்பூச்சி!” என்று முணுமுணுத்தது. ‘அவளா இது? இங்கே எப்படி? அதுவும் இவ்வளவு பெரிய ஜமீன் குடும்பத்தில்? இல்லையென்றால் முக ஒற்றுமையில் இருக்கும் இவள் வேற யாரோவா?’ அபி மனதில் இவையனைத்தும் ஓடிக்கொண்டிருக்க, அவளோ இவனை வரவேற்கும் விதமாக ஒரு முறுவலுடன் அவன் முகம் பார்க்கவும் அடுத்த வினாடியே தன்னை சமன்படுத்திக் கொண்டவன் அவளை ஒரு வெற்றுப் பார்வை பார்க்க, தன் உரையாடலை முடித்துக் கொண்டு இவனிடம் வந்தவள் தன் மேனேஜர் நீட்டிய பூங்கொத்தை வாங்கி



“சாரி மிஸ்டர் அபிரஞ்சன்! கொஞ்சம் நேரம் உங்களைக் காத்திருக்க வைத்துவிட்டேன். வெல்கம் டு மை பிசினஸ் ரியல்ம்!” என்று அதே மேல்நாட்டு ஆங்கிலத்தில் உரையாடிய படி அந்த பூங்கொத்தை அவனிடம் கொடுக்கவும், அதை வாங்கியவன்



அறிமுகத்தின் அடுத்த படியான “ஹலோ” என்ற படி அவளுடன் கை கொடுக்க வர அவளோ அதைத் தவிர்த்து இரு கை கூப்பி



“வணக்கம்” என்று சொல்லவும் அவனுடைய முக தசைகள் இறுகியது. சிறு எரிச்சல் ஏற்படவும் ‘ச்சே.. நான் இவளை நோஸ் கட் செய்யனும் நினைத்தால் இவ ஆரம்பத்திலேயே என்னை நோஸ் கட் செய்யுறா! நான் நினைத்ததுக்கு மேலே திமிர் பிடித்தவளா இருப்பா போலிருக்கு’ என்று மனதுக்குள் புகைந்தபடி அவன் பல்லைக் கடிக்க



“ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்றவள் தானும் அவன் எதிர்புறம் கால் மேல் கால் போட்ட படி அமர, அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தான் அபி.



உச்சந்தலையில் கொஞ்சம் முடியை எடுத்துப் பப் வைத்திருந்தவள் மீதியை வாரி அழகாய் குதிரை வால் போட்டிருந்தாள். திருத்தமான புருவம், அதற்கு மத்தியில் சின்ன பொட்டு, மிதமான மேக்கப். அவள் காதில் அணிந்திருக்கும் வைரமே பல லட்சம் என்பதைப் பறைசாற்றியது. கழுத்தைச் சுற்றி படர்ந்த காலர் வைத்த ஜாக்கெட். அதனாலேயே அவள் கழுத்தில் என்ன அணிந்திருக்கிறாள் என்பது தெரியவில்லை.



ஜாக்கெட்டின் கை நீளம் முட்டி தாண்டி சிறிது நீண்டிருந்தது. வலது கையில் வைரக் கற்கள் பதித்த அழகான வேலைப்பாடுடன் கூடிய தங்க கடிகாரம். இடது கையில் பிளாட்டினத்தால் ஆன பிரேஸ்லெட்டில் மூன்று இடத்தில் மட்டும் அடுத்தடுத்து முன்னும் பின்னுமாக அழகிய நட்சத்திரம், நிலவு, நட்சத்திரம் என்று சங்கிலியில் தொங்கிக் கொண்டிருக்க, பேச்சின் இடையில் சில நேரத்தில் அவள் அந்த நட்சத்திர கைகளால் அவளின் நெற்றியில் மேல் வந்து புரளும் முடியை காதோரம் தள்ளும் போது பார்க்க பொன்னில் வார்த்தெடுத்த அழகிய சிற்பமாகவே அவன் கண்ணுக்குத் தெரிந்தாள் பாவையவள்.



அதிலும் அவள் கையிலிருக்கும் வைரங்களோடு அவளின் இடது புற மூக்கில் கடுகளவு வைரமாக இருக்கும் மூக்குத்தியோடு அது போட்டி போடும் போது ஏதோ வான்வெளியில் தான் இருப்பதாகவே பட்டது அவனுக்கு. தான் எதற்கு எந்த மனநிலையில் இங்கு வந்தோம் என்பதை மறந்து இப்பொழுது அவள் உடுத்தி இருக்கு புடவைக்கு அவன் பார்வை வர இவனைப் போலவே விலையுயர்ந்த சந்தன நிற ஜூட் புடவையில் கரும்பச்சையில் அங்கங்கே சில மயில்கள் தோகை விரித்து நிற்க அதுவும் காப்பி பொடி கலரில் தங்கத் துகள்களைக் கலந்தது போலிருக்கும் அவள் மேனி நிறத்திற்கு மேலும் அழகை கூட்டியது.



மொத்தத்தில் அவன் கண்ணுக்கு ரவிவர்மனின் ஓவியமாகத் தோன்றியவளைக் கண்கொட்டாமல் இவன் பார்க்க அவள் புடவை உடுத்திருந்த பாந்தத்திலும் நளினத்திலும் அவன் முன் சில கோப்புகளை எடுத்துப் போடும் ஸ்டைலையும் அப்படி ஒன்றும் இவள் இந்த மேல்தட்டு வாழ்க்கைக்குப் புதிதில்லை என்பதையும் கண்டு கொண்டவன் பதினெட்டு வயதுப் பையன் ஜொள்ளு விடாத கணக்காக அவன் அவளை சைட் அடித்துக் கொண்டிருக்க, அவன் மனதிலோ ‘இவள் எதற்காக இப்போது என் பிசினஸில் தலையிடுகிறாள்? இவள் நோக்கம் என்னவாக இருக்கும்?’ என்று யோசித்தவன் “கூடிய சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன்” என்பதை மட்டும் வாய் திறந்தே சொல்லி விட



அவன் முன் சில கோப்புகளைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தவள் அவனின் கேள்வியில் அவனுக்கு ஏதோ சந்தேகம் போல என்று நினைத்து “வாட்? பார்டன்..” என்று இவள் தீவிரமாகக் கேட்க



அவன் எங்கே அவள் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டான்? வந்ததிலிருந்து முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பார்வையில் எந்த விகல்பத்தையும் காட்டாமல் எதிரில் இருந்த தேவதையான அவளை தானே ரசித்துக் கொண்டிருந்தான்! அதனால் அவளின் தீவிரத்தில் உதட்டோரம் புன்னகையால் வளைய, “சரி தானே மிஸ் யுகநந்திதா?” என்று அவன் கேட்க அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் அதிர்ந்தவள் உடனே தன்னை சமாளித்துக் கொண்டு



“ஐ யம் நாட் மிஸ் யுகநந்திதா. ஐ யம் மிஸஸ். யுகநந்திதா!” என்று இவள் நிமிர்வுடன் சொல்லவும் இப்போது அதிர்வது இவனுடைய முறையானது. உடனே அவள் சொன்னதற்கான அடையாளத்தை அவளின் நெற்றியிலும் கால் விரலிலும் தேடியவன் அங்கு அப்படிப்பட்ட அடையாளம் எதுவும் இல்லை என்றதும் அடுத்து அவன் தேடல் கழுத்தில் தான் சென்றது. அங்கு அவள் காலர் வைத்த ரவிக்கையில் இருக்கவும் இவ்வளவு நேரமிருந்த மாய வலை அறுபட தான் வந்த வேலையை உணர்ந்து டென்ஷன் ஆனவன்



“ஓ... ஐ ஸீ.. மிஸஸ். யுகநந்திதாஆஆஆ...” என்றவன் அவள் பெயருக்குப் பின்னால் வரும் அவளின் கணவனின் பெயரைத் தெரிந்து கொள்ள ஒரு வித கேலியுடன் நீட்டி முழங்க



அவனைச் சுட்டெரிப்பது போல் முறைத்தவள் அவனுடைய குறிப்பை அலட்சியம் செய்த படி திரும்பி அங்கு பக்கத்தில் அமர்ந்திருந்த G.M ஐப் பார்த்து “திருமலை சார், நீங்க கிளம்புங்க. ஏதாவது முக்கியமான ஃபீட்பேக்னா நானே ஐபேட்டில் ஸ்டோர் செய்துக்கிறேன் நீங்க கிளம்புங்க” என்றவள் அவர் கிளம்பியதும் இவன் புறம் திரும்பி



“எனக்குத் திருமணம் ஆனதா, என் கணவர் பெயர், எத்தனை குழந்தைங்க இருக்கு.. இதுமாதிரி என்னைப் பற்றிய பர்சனல் தகவல்கள் உங்களுக்கு நான் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை. அதுபற்றி கேட்கவும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.. எதுக்கு வந்தீங்களோ அதுபற்றி மட்டுமே பேசுங்க. Now ஆர் யூ கிளியர் மிஸ்டர்?” என்று பொறுமையாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் அவன் கண்களைப் பார்த்து நிமிர்வுடன் இவள் சொல்லவும்



இதுவரை தன்னை யாரும் இந்தளவுக்கு அதிகாரத் தோரணையுடன் பேசாத நிலையில் இவள் பேசவும், அதைப் பொறுக்க இயலாமல் வெகுண்டவன் “ஏய்...” என்ற படி தன் முழு உயரத்திற்கு எழுந்து நின்றவன் “தெரியுது இல்ல? உங்களோட பர்சனல் விஷயங்களைக் கேட்டா உங்களுக்கு கோபம் வருகிறது இல்ல? அதேமாதிரி தான் எனக்கும். என் கம்பெனி புராடக்ட்ல நான் விஷத்தை கலக்குறேன் இல்லை ஆசிட் கலக்குறேன். உனக்கு என்ன டி இப்போ? என்னோட புராடக்ட் பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை ரைட்சும் இல்லை.. அப்படியே கேட்கணும்னு நினைத்தா கோர்ட்டில் கேஸ் போடு நான் பார்த்துக்கிறேன். அதைவிட்டுட்டு எனக்கு அட்வைஸ், பிரைன்வாஷ் செய்றது, டை அப், டேக் ஓவர்னு தேவையில்லாத விஷயத்தைப் பண்ணாதே. அப்படி நீ செய்யனும்னு நினைத்தா கூட அழித்துடுவான் இந்த ஏஆர்! யூ காட் இட்?”



அவன் குரலில் திமிர், பிடிவாதம், அகங்காரம் ஏன் ஒரு வித அசூசை கூட இருந்ததோ என்னவோ.. அதை உணர்ந்த அவனே ‘என் குரல் கூட நடுங்கின மாதிரி இருக்கே! ஏன் நான் இப்படி திடீர்னு ரியாக்ட் செய்றேன்? என்னை அழிக்க நினைத்தா இப்படித் தான் கோபம் வரும்!’ இப்படி எல்லாம் மனதிற்குள் அவனே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டவன் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை சமன்படுத்திய படி குனிந்து அவன் நந்திதாவைப் பார்க்க, அவளோ எந்த சலனமும் இல்லாமல் அரசவையில் அமர்ந்திருக்கும் மகாராணியின் தோரணையில் அமர்ந்திருந்தாள்.



‘இவள் எந்த சலனமும் இல்லாமலிருக்க நான் மட்டும் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன்?’ என்று யோசித்தவன் அவள் முன் எதுவும் நடக்காதது போல் கம்பீரமாக அமர, ‘என்ன ஆணவம்!’ என்று மனதுக்குள் கொதித்த நந்திதா “லுக் மிஸ்டர்.. சொற்கள் தான் நம் சிந்தனையின் ஆடைகள். அதை கிழிசல் இல்லாமல் அழகாக அணிய வேண்டியது மிக அவசியம். இனி இந்த ஏக வசனத்துல பேசுறது எல்லாம் வேணாம். மீறி பேசினா..”



‘என்ன டி செய்வ?’ என்பது போல் இவன் பார்க்க, அதை அவன் விழிகளின் வழியே படித்தவள் “உடம்பில் உயிர் இருக்காது!” இவள் தெள்ளத்தெளிவாய் நிறுத்தி நிதானமாய் சொல்ல,



“என்ன மிரட்டலா? என்ன பூச்சாண்டி காண்பிக்கிறீயோ?” அவன் அடங்குவதாய் இல்லை.



“இல்லை எச்சரிக்கை!” அவளிடம் அதே நிதானம். “ப்ச்சு.... இப்போ எதுக்கு இவ்வளவு பேச்சு? அபி...” அவள் முடிக்கவில்லை அதற்குள்



“சே மிஸ்டர் அபிரஞ்சன்!” என்று கர்ஜித்தான் அவன்.



அதற்கு ஒரு தோள் குலுக்களையே விடையாய் தந்தவள் “எனக்கும் உங்களுக்கும் எதுவுமே இல்லாத போது நான் ஏன் உங்களை அசிங்கப் படுத்தணும், பழிவாங்கணும்? மார்க்கெட்டில் இருக்கிற மற்ற புராடக்ட்ஸ் விட உங்களோடது ரொம்ப ஹார்ம்ஃபுல். இதை நான் டெஸ்ட் செய்து பார்த்து விட்டுத்தான் சொல்றேன். அண்ட் மோர் ஓவர் இதுமாதிரி களையெடுக்கிற வேலை எல்லாம் எனக்கு ஒன்றும் புதிது இல்லை. இதெல்லாம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமையென்று நினைப்பவள் நான். அதனால் தான் உங்களை நேரில் பார்த்து சில விஷயங்கள் பகிர்ந்துக்க நினைத்தேன். நீங்க செய்வது ஒரு கொலை இல்லை பல லட்சம் கொலைகள். அது தெரிந்தும் என்ன ஆணவம் உங்களுக்கு..” அவள் சொல்லி நிறுத்த அவனோ மேற்கொண்டு சொல்லி முடி என்பது போல் பார்க்க,



“நான் நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். எனக்கு வேண்டியது எல்லாம் இதற்கு மேல் உங்கள் பொருட்கள் தயாரிக்காமல் ஸ்டாப் பண்ணனும். இதுவரை தயாரித்த விற்பனைக்கு வராத பொருட்களை அழிக்கணும். அப்படியே விற்பனைக்கு இருப்பவற்றையும் தடை செய்யணும்...”



“ஸ்டாப் இட் நான்சென்ஸ்!”அவன் கத்தின கத்தலில் அந்த இடமே நடுங்கியது. “எவ்வளவு திமிர் இருந்தா என் பொருளுக்கு என் கையாலேயே குழி தோண்ட சொல்லுவ?”



“கூல் மிஸ்டர். அபிரஞ்சன்! உங்க புராடக்ட்ஸ் எல்லாம் அழிந்தாலும் நாம தான் டை அப் செய்துக்கப் போறோமே! என் புராடக்ட நீங்க மார்க்கெட்டிங் செய்யுங்கள். வேண்டுமென்றால் 90% ஷேர்ஸ் உங்களுக்கு நான் தருகிறேன்”



“என்ன பிச்சை போடுறியா? அந்த நிலைமையில் நான் இல்லை. நாம் ஆரம்பித்த தொழிலை நாமே அழிக்கறது நாம் பெற்ற பிள்ளைகளுக்கு நாமே நம் கையால் கள்ளிப் பால் கொடுத்து சாகடிப்பதற்கு சமமென்று எனக்குத் தெரியும். ஹௌ டேர் யூ டு ஸ்டாப் மீ? ”



“ஆனா அந்தப் பிள்ளை தறிகெட்டவனாக இருந்தால் வேறு வழியில்லை. இப்படி தான் செய்தாகணும். இதனால் இந்த நாட்டுப் பெண்களுக்கு நல்லது இருக்கு என்பதால் தான் செய்யச் சொல்கிறேன். உங்களுக்கு ஏற்படப் போகும் இழப்புக்கும் பெரும்பங்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்” நந்திதாவிடம் உண்மை இருந்தது



“என்னை அழிப்பதோ பழிவாங்குவதோ உன் நோக்கம் இல்லையென்றால் இதை நீ நேரடியாக என் கம்பெனி சார்பாக வந்து பேசிய என் தம்பியிடமே சொல்லிருக்கலாமே? என்னை இங்கு என்னை வரவழைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இதில் ஏதோ இருக்கு.. அதையும் கண்டுபிடிக்கிறேன். ஓகே லீவ் இட். இப்போது முன்பு பேசின விஷயத்திற்கு வருவோம். நீ சொன்ன எதற்கும் நான் சம்மதிக்கவில்லை என்றால்?”



“உங்களுடன் டை அப்புக்கு நான் உடன் பட மட்டேன். பிறகு உங்கள் சரிவுக்கும்...”



“ஹா... ஹா... ஹா... மகாராணியாரின் சமஸ்தானத்துடன் இணைந்து இங்கு யாரும் கொஞ்சி விளையாட சித்தமாய் இல்லை” என்று நக்கல் அடித்தவன் நான் கட்டி ஆண்டு கொண்டிருக்கும் என் சாம்ராஜ்ஜிய கோட்டையிலிருந்து உன்னால் ஒரு செங்கல்லைக் கூட அசைக்க முடியாது”



“ஒரு செங்கல் என்ன? உங்கள் கோட்டையையே தூள்தூளாகத் தகர்த்துவிட்டால்?” இவ்வளவு நேரம் இல்லாத நிமிர்வுடன் இவள் சொல்ல



“ஓ... சவாலா? இப்படிப் பட்ட பொருளை நான் விற்கிறேன் என்றால் அதற்குப் பின்னால் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நீ யோசிக்கவில்லை. இப்பொழுதும் நீ சொன்ன குற்றச்சாட்டை எல்லாம் நான் மறுக்கவில்லை ஒத்துக்கொள்கிறேன். பட் உன்னால் என்ன செய்ய முடியும் என்று தான் கேட்கிறேன். பல ஓநாய்களுக்கு ரத்த ருசி காட்டியும், அடக்க முடியாத பல மதம் கொண்ட யானைகளை பணம் என்னும் அங்குசத்தால் அடக்கியும் நான் தான் ராஜா எனும் மமதையில் திரிந்த சிங்கத்துக்குப் பதவி மோகத்தை இன்னும் இன்னும் ஊட்டி இன்று நான் சொல்வதையெல்லாம் கேட்கும் சர்க்கஸ் சிங்கமாகவும் மாற்றி என்னுடைய இந்த சாம்ராஜ்ஜியத்தை அமைதத்தவன் நான். அவ்வளவு சீக்கிரம் என் கோட்டையை அழிக்க விட்டுவிடுவேனா?



ஆனால் நீ தான் இப்போது சவால் விடுகிறாயே.. அப்போது நானும் பதில் சவால் விடவில்லையென்றால் எப்படி?” தன் முழு உயரத்திற்கும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு எழுந்து நின்றவன் “இங்கு வருகிற வரை உன் தொழிலை அழிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் எண்ணமாக இருந்தது. ஆனால் இப்போது சொல்கிறேன்.. டை அப்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என் தொழிலை அழிப்பேன் என்று சொன்னாய் அல்லவா? ஆனால் நான் உன் தொழிலை அழிக்க மாட்டேன். ஏனென்றால் அது என்னிடம் வரப் போகும் தொழிலாயிற்றே!” அவள் புரியாமல் பார்க்கவும்



“உன்னால் இந்த தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத அளவுக்குப் பல பிரச்சனைகளை நான் கொடுக்க, அதைத் தாங்க முடியாமல் உன் கம்பெனியை டேக் ஓவர் செய்யச் சொல்லி நீயே என்னிடம் வந்து நிற்பாய்! நோ.. நோ.. அப்படி சொல்லக் கூடாது.. கெஞ்சுவாய்! அப்படி செய்ய வைப்பான் இந்த அபிரஞ்சன்!” அவன் முடிப்பதற்குள் தானும் எழுந்து நின்றவள்



“ஐயோடா! என்ன ஒரு ஓவர் கான்ஃபிடன்ஸ்! நெவர்.. ஒருபோதும் நடக்காது. ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன்.. சூரியன் உதிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது மிஸ்டர். அபிரஞ்சன்!”



“ஹா... ஹா... இஸ் இட்? மேடம்! நீ சொல்வது பேச்சு வழக்கு. டு யூ நோ சயின்ஸ்? அது தெரியாமல் பேசுகிறாயே! மேடம்.. சூரியன் என்றைக்கு உதித்திருக்கு, அஸ்தமனம் ஆகியிருக்கு? அது ஒரே இடத்தில் தான் இருக்கு. பூமி தான் தன் சுற்றலை நிறுத்தாம சுற்றிட்டு இருக்கு. அதுக்காக சூரியனுக்கு எல்லாம் இப்படி பில்ட் அப் கொடுக்கலாமா? நீ சொல்கிற மாதிரி அது உதிக்காமல் இருப்பதற்காக இந்த பூமியைச் சுற்றாமல் நிறுத்தவும் தயங்க மாட்டான் இந்த அபிரஞ்சன்!” அவன் குரலில் அப்படி ஒரு மமதை!



விழிகள் விரிய அவனைப் பார்த்தவள் ‘அப்போது என்னைக் கொலை பண்ணக் கூடத் தயங்க மாட்டேன் என்று சொல்கிறானா?’ என்று அவள் மனதிற்குள் கேட்ட கேள்விக்கு ‘ஏன்? நீயும் தான் அவனை இங்கிருந்து உயிரோட போக மாட்டாய் என்று மிரட்டின’ என அவள் மனசாட்சி எடுத்துச் சொல்ல



“வெல்.. ஆல் தி பெஸ்ட் மிஸ்டர். அபிரஞ்சன்! பார்ப்போம்.. யாருடைய சுழற்சியை யார் நிறுத்துகிறார்கள் என்று பார்ப்போம்!” என்று சொல்லி இவளும் இந்த சவாலை ஏற்க



“குட்.. வெரி குட்..” என்று சொல்லி ஒரு மந்தகாசப் புன்னகையைச் சிந்தியவன் “பெஸ்ட் ஆப் லக்! இனிமே லக் எங்கே இருக்கப் போகிறது? ஏன்னா உன்னுடைய லக் இனி என் கையில் தானே இருக்கப் போகிறது மிஸஸ் யுகநந்திதா....” இப்பொழுதும் காரியத்திலே கண்ணாக அவள் கணவன் பெயரைத் தெரிந்து கொள்ள அவன் நீட்டி முழக்கவும்




முன்பு போல் அதைத் தவிர்க்க முடியாமல் “உங்களுக்கு மிஸஸ் யுகநந்திதாவே போதும்” என்று மிடுக்காகச் சொல்லியவள், “ஈயாளு திகன்ன பிராந்தன்..” (இந்த ஆள் சரியான பைத்தியம்) என்பதை மட்டும் தன் வாய்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். அவனுக்குள் ஏதோ புரிவது போல் இருக்க அவள் வார்த்தைகளை உள்வாங்கியவன் ஒரு தோள் குலுக்கலுடன் விலகிச் சென்றான் அபி. அவன் சென்றதும் ஏதோ காட்டு மிருகத்திடமிருந்து தப்பித்தது போல் சோர்வில் தொப்பன ஸோஃபாவில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள் அந்த ஜமீன் ராணி.


உறவாக வேண்டுமடி நீயே... 2
 

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN